10/28/2022

பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-3

21. 85 பேர் ஈடுபட்டுக் கொடுத்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டக் கோரிக்கை விண்ணப்பம் ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை? பெண் துணைத்தலைவர் ஒருவர் இருந்தாரே அவரை நியமித்திருக்கலாம்தானே? ஏன் பொதுக்குழுக் கூட்டம் தனிக்குழுக் கூட்டம் போல நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது? செயற்குழுவினரைக் கூட காண முடியவில்லையே? இந்த வினாக்கள் விடுக்கப்பட்டன.

22. விண்ணப்பத்தில் இருந்தவர்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கடப்பாடுகள் எட்டப்படும்படி இல்லை என்பதாகச் செயலாளர் விடையளித்தார். பின்னர் தலைவரும் இதுகுறித்துக் கூடுதல் பணிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

23. தாம் முன்னாள்தலைவரைத் தொடர்பு கொண்டு, பெண் துணைத்தலைவரை அந்த இடத்துக்கு நியமிக்கலாம்தானேயெனக் கேட்டதாகவும், அதற்கு அவர் தொடர்பு கொள்ள முயன்று, 10, 15 நாட்கள் ஆகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் துணைத்தலைவரைக் கண்ட போது, மலையேற்றம் தொடர்பாகச் சென்றிருப்பதாகச் சொல்ல, முன்னாள் தலைவர் சொன்னது சரிதான் என்பதாக நினைத்துக் கொண்டதாகத் தலைவர் தெரிவித்தார். [இங்குதான் உண்மை அம்பலம் ஏறும் சம்பவம், இஃகிஃகி]

24. மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக, துணைத்தலைவர் அவர்கள் பேச விழைந்தார். ‘ஆமாம், அழைத்தார். என்னுடைய இடத்தில் இருந்து பணியாற்ற விருப்பமா என்று கேட்டார். நான் அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னேன். ஆனால் திடீரென விழாவில் புதிய செயற்குழுவை அறிவிக்கும் போது மாற்றுப் பெயரை அறிவித்தார். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.’. [மொத்தக் கூட்டமும் ஞே... ]

25. விழாக்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள் இடம் பெற அனுமதிக்கலாமா என்பது கேள்வி. அது அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதாகத் தலைவர் பதில் அளித்தார்.

கடைசியாகக் கூர்நோக்கர்கள் என்பதாக இருவர் தத்தம் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அவை வழக்கம் போல, பொறுப்புச் சக்திக்கு ஏதுவான டெம்ப்ளேட் கருத்துகள். இஃகிஃகி. நாம் நம் கருத்துகளைச் சொல்லிக் கொள்வோமாக!

1. வினா விடை நேரத்தில் செயற்குழுவில் இருக்கும் மற்றவர்கள் பேசவே இல்லை. தலைவர், செயலர் மட்டும்தான் செயற்குழுவா? அல்லது, மற்றவர்கள் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனரா?

2. சகலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும், ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது அளவளாவ வேண்டும், அல்லது அனைவரும் பொதுத்தளத்தில் இருக்க வேண்டும். ரோல் கால் இடம் பெற வேண்டும். ராபர்ட் விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

3.கொடுக்கப்படும் வினாக்களை அப்படியப்படியே வாசிப்பதால் காலவிரயம். மேலாகப் பார்த்து புரிந்து கொண்டு, வினாவைத் தம் மொழியில் விடுக்க வேண்டும். இளையோர் நிகழ்வின் நெறியாளர் செய்தமையைப் போலே!

4.வினா விடை நேரத்தை செயற்குழுவுக்கு வெளியே இருக்கும்  பக்கச்சார்பற்றவர் நெறிப்படுத்த வேண்டும். ஆர்வலர்கள் எவராயினும் தங்கு தடையின்றிப் பார்வையாளராக இருக்கும்படி இருத்தல் வேண்டும்.

5. எவ்வளவு நேரமானாலும் உறுப்பினர்களின் வினாக்களை முடித்துத்தான் ஆக வேண்டும். கவுண்ட்டியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களையே அப்படித்தான் எதிர்கொள்கின்றனர்.

6. கடைசி வரைக்கும் அந்த மீட்டிங் மினிட்ஸ், பணம் திரும்பக் கணக்குக்கு வந்த தேதி உள்ளிட்ட சில முக்கியமான வினாக்களுக்கு சரியான விடை கொடுக்கப்படவே இல்லை. திசைதிருப்பு முகமாகத் தனிமனிதத் தாக்குதல் என்கின்ற அறதப்பழைய டெக்னிக்கையே கையாண்டார் முன்னாள் தலைவர். அல்லது, இந்நாள் தலைவரின் பொத்தாம் பொதுவான சமாளிப்புகளே இடம் பெற்றன.

(முற்றும்)







No comments: