Showing posts with label தமிழ்விழா(Fetna). Show all posts
Showing posts with label தமிழ்விழா(Fetna). Show all posts

3/03/2013

நிறைகுடம்


செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

“பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

7/04/2012

தமிழ் மேகம் சூழ்ந்த பால்டிமோர்


காலை ஏழுக்குத் தேவை
இன்னும் பத்து மணித்துளிகள்
ரெசிடன்சு இன்
பதினானகாம் மாடம்
திரைச்சீலை ஒதுக்கிக் காண்கிறேன்
படகுத்துறை புன்னகைக்கிறது
ஆகாயக் கப்பல் அசைந்தாடுகிறது
கடைக்கோடியில் புள்ளீயாய்ப் படகொன்று
விண்முட்டும் கோபுரமதில் பளபளக்கும் 
மினுமினு நீல விண்மீன் கொடியொன்று
விடுதலைநாளில் மிடுக்காய்ப் பறக்கிறது
பொடிக்குருவிகளிரண்டின் உச்சக்களியாட்டம்
மயில் இருந்தால் அகவும்
குயில் இருந்தால் கூவும்
சுட்டெரிக்கும் வெயில் இல்லை
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
பால்டிமோர் மாநகரில் 
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
இதமாய்த் தண்காற்று சில்லிடுகிறது
அதோ அங்கொரு மேப்பில் மரம்
இலையால் வெண்சாமாரம் வீசுகிறது
வெயில் சுட்டெரிக்கவில்லை
உயரப் பார்க்கிறேன்
அடடா... சூழுகின்றன சூழுகின்றன
முகில்கள் முகில்கள் முகில்கள்
அவையெல்லாம் தமிழ் முகில்களடா!!
சூழத்துவங்கிருப்பது தமிழ் முகில்களடா!!

7/01/2012

FeTNA: இட்லி வடை பொங்கல் கிடைக்குமா?



பேரவை வெள்ளி விழா தேன்துளிகள்
வாழும் வரலாறு தோழர் நல்லகண்ணு
மலேசியத் துணை முதல்வர் பினாங்கு இராமசாமி
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
கவனகர் முனைவர் கலை.செழியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
கல்வியாளர் பொன்னவைக்கோ
ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி
தமிழிசை கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன்
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
உடுக்கையடி ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக்
பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி
நடிகர் பரத்
நடிகர் அமலா பால்
கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன்
பகடிக்கலைஞர் மதுரைமுத்து
கட்டியக்கலைஞர் பிரியதர்ஷினி
பாடகர் தாமரைத்திரு சின்னக்குயில் சித்ரா
பாடகர் முகேஷ்
பாடகர் அனிதா கிருஷ்ணன்
இணைப்பாடகர் வித்யா வந்தனா சகோதரிகள்
தமிழன் - தமிழச்சி ($1000 பரிசுக்கான போட்டி)
இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சி (multi-media program)
கவியரங்கம்
விவாதமேடை
பட்டிமன்றம்
தமிழ்ப் பன்முகத் திறன் போட்டி (Jeopardy, multi-media program)
தமிழிசை நிகழ்ச்சி
ஐங்கரன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி
யோகா பட்டறை
திருமண தகவல் மையம்
இளையோர் நிகழ்ச்சி
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
வலைஞர் கூடல்
மருத்துவத் தொடர்கல்வி
தொழில்முனைவர் கருத்தரங்கம்
கணினிப் பொறியாளர் கருத்தரங்கம்
தமிழ்மணம் வலைப்பதிவு பயிற்சிப் பாசரங்கம்
பல்கலைக்கழக மேனாள் மாணவர் கலந்துரையாடல்
அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளுடன், தமிழ்த்திருவிழாச் சந்தை
முத்தான படைப்புகளுடன் வெள்ளி விழா மலர்
இவற்றுடன் தமிழ்ச்சங்கங்களின் அருமையான இயல், இசை, நாடக, நாட்டியங்கள்


களிப்பூட்டித்   தமிழ்  போற்றி வாழ்வைச் செம்மையாக்கும்  உங்கள்  விழா!
அமெரிக்க  தமிழ்த்  திருவிழா  2012!!
Try to register early before it gets full. It happened in FeTNA 2009!
Just few seats left, hurry up!! www.fetna.org

6/26/2012

அமெரிக்க தமிழ்த் திருவிழா - கவிவணக்கம்


எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!

பால்ட்டிமோர் நகரில்
தமிழாலே நினை
ஆராதிப்பதெங்கனம்
என்பதெங்கள் எண்ணம்!

தமிழாலே
இணைந்திடுவோம்
செயலாலே
வென்றிடுவோம்
என்பதெங்கள் சொல்!

உனக்கான திருவமுது
வெள்ளிவிழா மலராக
தமிழ்த்தேனீ போட்டியாக
நயம்மிகு கவியரங்காக
பலவும் படைப்பது
என்பதெங்கள் செயல்!

எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!!


6/23/2012

FeTNA வெள்ளி விழா - பழமைபேசி பேசுகிறேன்

என் நீண்ட நாள் ஆசை.... நல்லகண்ணு அய்யா அவர்களுடன் ஒரு பொழுதாவது இருக்க வேண்டுமென! ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது. பேரவை வெள்ளி விழாவுக்கு அணி சேர்க்கும் அய்யா அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்!!

திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார்.
போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.
சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒளி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
பேரவை கொண்டாடவிருக்கிற நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள்.
தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர்.
தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் வருகை, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினுடைய மணிமகுடத்தின் மாணிக்கக்கல்!!

6/10/2012

அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா

இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
ஐங்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு 
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்



Register early before it gets full. It happened in FeTNA 2009!  Register Now!!

6/04/2012

FeTNA: அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012

தமிழ்த் திருவிழா

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) என்பதாகும். வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழாவாக வெகுப் பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும் விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்ற ஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளி விழாவானது முனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

”தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.

வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை.செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலா பால் மேடை நிகழ்ச்சி, திரைப்பட நடிகையும் சின்ன திரைக் கலைஞருமான பிரியதர்ஷினி நாட்டியம், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டா பெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.


இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.

விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதள முகவரி: www.fetna.org

பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள் பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370.

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. பொற்செழியன் 314 249 0706 
நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் இடம் பெறும் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி 443 254 4775
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர், திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன். ’இதயங்கள் இயங்கட்டும்’ எனும் தலைப்பிலான கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்பு கொள்ள: 860 212 2398

‘விஜய் டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக் கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா. மனோகரன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 267-421-2891

கூடுதல் தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, 843-814-7581  திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளி விழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

6/03/2012

திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர் பிரியதர்ஷினி


தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.

Register today for such a great Tamil Event. www.fetna.org

12/12/2011

திரைப்பட விநாடி வினா - பல்லூடக நிகழ்ச்சி

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்ச்சிகளிலும் பல்வேறு பல்லூடக நிகழ்ச்சிகள் இடம் பெறுவது உண்டு. அதில் முதன்மையானது, உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் தயாரித்து வழங்கும் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தபடியாக, நண்பர் பொற்செழியன் குழுவினரின் தேனீ எனும் தலைப்பில் இடம் பெறும் சிறார்களுக்கான பல்லூடகப் புதிர்ப் போட்டியும் இடம் பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தினர் அண்மையில் நடத்திய தமிழ்விழா ஒன்றில், களிப்பூட்டும் பல்லூடகத் திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் அண்ணன் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள்.

இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சித் தயாரிப்பில் அவர் ஈடுப்பட்ட தருணத்தில் அவருடன் அளவளாவும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிட்டியது உண்டு. இரவு பகல் என்று பாராது, விடிய விடிய சங்ககாலத்து நூல்களைப் படித்து, வெகு முயற்சிக்கிடையே வினாக்களைத் தெரிவு செய்வார். வினாவைத் தெரிவு செய்த பின்னர், அதனை நயம்படவும் சுவைபடவும் திரையில் விடுப்பது பற்றிப் பல ஆய்வுகள் நடத்தி திறம்பட வடித்தெடுப்பார் அவர். நகர்ச்சில் ஒன்றுக்கு இருபது மணி நேரம் முதல் நாற்பது மணி நேரம் வரையிலும் செலவாகும் என்பார்.

தானே தேவையான தொழில்நுட்பக் கூறுகளைப் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைத் தமிழின்பால் ஈர்ப்பது எப்படி எனச் சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதன் விளைவுதான், இப்புதுமையான பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சியாகும்.

அந்த வகையில், அண்மையில் இடம் பெற்ற திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியில் இடம் பெற்ற வினாக்கள் நாற்பத்து ஐந்தாகும். இந்த 45 வினாக்களில் உங்களால் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இதோ, இக்காணொளிகளைக் கண்டு களித்து உங்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.



தயாரிப்பு: உயர்திரு.நாஞ்சில் பீற்றர்
உதவி: தமிழ்மணம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை

காணொளியின் மூலக்கோப்புகள் (multimedia files such as .ppt, audio files, video files, images etc, etc) வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழால் இணைந்தோம்!

7/11/2011

பேரவைத் திருவிழா - கூடுதல் படங்கள்











சுட்டிகளைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் பாருங்கள்!!

படங்கள் உதவி

திரு.கண்ணன் அவர்கள், பனைநில தமிழ்ச்சங்கம், தென்கரோலைனா.

7/07/2011

FeTNA 2011: இலக்கிய விநாடி வினா காணொலிகள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவானது, மேலைப்பெருமழை புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக கடந்த சூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென்கரோலைனா மாகாணம், சார்ல்சுடனில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே!

திருவிழாவில், தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு போற்றும் விதமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அவற்றுள் தனித்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக, ஆண்டு தோறும் இஅடம் பெற்று வருகிற இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இது ஒரு பல்லூடக(multimedia) நிகழ்ச்சியாகும். இந்த அருமையான நிகழ்ச்சி, இனப்படுகொலைக்கு உள்ளான ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு உணர்வுப் பெருக்குடன் அர்ப்பணிக்கப்பட்டது.

ஆசான் உயர்திரு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள், கடும் உழைப்பைக் கொடுத்து இந்நிகழ்ச்சியை வடிவமைத்துத் தொகுத்தளித்தார். ஆசான் உயர்திரு கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பயிற்சியாளராக இருந்து உதவிகள் செய்தார். இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெற்றன.
  • பதினெண்கீழ்க் கணக்கும், தமிழர் வாழ்வும்
  • கீழ்க்கண்ட நூல்களில், தெரிவு செய்யப்பட்ட பகுதிகள்
    • திருக்குறள்
    • புறநானூறு
    • குறுந்தொகை
    • நாலடியார்
  • முந்தைய ஆண்டு விழா மலரில், தெரிவு செய்யப்பட்ட பாடங்கள்
    • 2007 மலர், பாமரர் வளர்த்த தமிழ்
    • 2008 மலர், இலக்கியத்தில் சுற்றுலாவும், சுற்றுலாத் தலங்களும்
    • 2009 மலர், பண்பாடு கெட்டால்...
    • 2010 மலர், பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்
  • தமிழ் எழுத்துகளில் கிரந்தம்
  • தமிழ்த் திரைப்படங்களும், தமிழர் பண்பாடும்
  • தமிழிசையும் நாட்டுப்புறக் கலைகளும்
  • ஐம்பெருங் காப்பியங்களுள் குறிப்பிடப்பட்ட பகுதிகள்
  •  நவீன இலக்கியம்
பெருஞ்சித்திரனார் அணிக்கு முனைவர் இரமாமணி செயபாலன் அவர்களும், முனைவர் இரா.திருமுருகனார் அணிக்கு பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். போட்டியின் நடுவர்களாக முனைவர் மு.இளங்கோவன், முனைவர் சொர்ணம் சங்கர் மற்றும் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்போட்டியானது, சகலதரப்பட்ட தமிழரும் நுகர்ந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்விதமாக, போட்டியில் எட்டு வயது முதல் எண்பது வயதானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ப்ங்கேற்ற எட்டு வயது சிறுமியான ஸ்ரீநிதி மணிவாசகம், எண்பது வயதுக்கும் மேற்பட்ட ஐயா உயர்திரு அமிர்தலிங்கம் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர்.

நகர்ச்சில்லுகளைக் காணொலியாக்கி, இணையத்தில் தரவேற்றுவதற்கே இரண்டு மணி நேரம் செல்வாகும் போது, அனைத்துப் பாடங்களையும் படித்து, அதில் சுவையான வினாக்களைத் தெரிவு செய்து, பாடல்களையும் காணொலிகளையும் தக்காரிட நிகழ்ச்சியின் நெறியாளர் ஆசான் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களுக்கு எத்தனை மணி நேரங்கள் ஆனதோ?! யூகிக்கவே முடியவில்லை. கடும் உழைப்பை நல்கி இருக்கிறார் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி.

இதோ, நிகழ்ச்சியின் காணொலிகளைக் கண்டு பயனுறுங்கள். இந்நிகழ்ச்சிக்கு பலவழிகளிலும் உதவிகள் செய்து உறுதுணையாய் இருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர், தமிழ்மணம் குழுவினர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த லதா கண்ணன் அவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர்க்கும் எமது பணிவன்புடன் கூடிய நன்றி! நன்றி!! நன்றி!!!




தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!

7/06/2011

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் திருவிழா - விமர்சனம்

பெரும்பாலான அமெரிக்க வாழ் தமிழர்கள் Upper Middle Class எனப்படும் உயர் மத்திய தர வர்க்கம் என்று சொல்லலாம். அவர்கள் உழைக்கிறார்கள் - உயர்கிறார்கள் ஆனால் வாழ்வது என்னவோ ‘இயந்திர’ வாழ்க்கை என்பது ஒரு பொதுவான மதிப்பீடாக இருக்கிறது

இந்த monotony எனப்படும் உளத் தனிமையிலிருந்து விடுபட கிடைக்கும் ஓய்வுகளின் போதெல்லாம் உல்லாசங்களின் ஈடுபட விரும்புகிறார்கள் அவற்றுள் ஒன்று ஆண்டுதோறும் அவர்கள் கொண்டாடி மகிழும் FeTNA திருவிழா. இதற்குக் கவர்ச்சி சேர்ப்பதற்காகவும் மக்களை ஈர்ப்பதற்காகவும் பெரும் பொருட்செலவில் தென்னக சினிமா நட்சத்திரங்களை வரவழைக்கிறார்கள் என்பதுதான் சிலரால் எனக்குத் தரப்பட்ட சித்திரம்.

ஆனால் தமிழ் அறிஞர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் - இசை வல்லுநர்கள் - நடன மணிகள் - பல்வேறு திறமைகள் கொண்டவர்கள் என்று இவர்கள் வரவழைத்தவர்கள் பட்டியல் சினிமா நட்சத்திரங்களை விட மிக, மிக நீளமானது என்பது அங்கு அழைப்பின் பேரில் நேரில் சென்றபோதுதான் தெரிந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் - வருபவர்களுக்கான வசதிகள் -உணவு உபசரிப்பு- அதை இன்முகத்தோட்டு ஓடி ஓடி கவனிக்கும் உற்சாகமிகு தொண்டர்கள் - கண் துஞ்சாது மெய் வருத்தம் பாராது அயராது பாடுபடும் இதன் தளபதிகள் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோருக்கு மிக நல்ல முன்மாதிரிகள். இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது,

வந்திருந்த தமிழ் அறிஞர்கள் பயனுள்ள உரைகளை வழங்கினார்கள். இவர்களில் பேராசிரியை புனிதா ஏகாம்பரம், புதுவை பேராசிரியர் இளங்கோவன் உள்ளூர் அறிஞரைப் பொறுத்தவரை பேரா: “கபிலர்’ பாசுகரன் ஆகியோரை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சிலம்பம் முதலிய பாரம்பரியக் கலைகளுக்கு தரப்பட்ட முக்கியத்வம் - “பறை”யை பல்லாயிரம் பொருட் செலவில் தென்னகத்திலிருந்து வரவழைத்து முழங்கச் செய்தது - அவ்வாறே கரக ஆட்டத்தின் பெருமையையும் கூடி இருந்த மக்களுக்கு உணர்த்தியது ஆகிய அனைத்து வியந்து பாராட்டுவதற்கு உரியன - பாராட்டுவோம்.

நடிகர் நாசர் நல்லதோர் உரையாற்றினார். அது அவருடைய இலக்கிய அறிவையும் ரசனையையும் வெகுவாகப் புரிந்து கொள்ள உதவியது. அந்த இனிமை - எளிமை - யதார்த்தம் சொக்க வைத்தது. அவரை நடிகர் என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்கி விட நினைப்பது பாவம்.

நடிகர் சார்லி வெறும் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. M.Phil பட்டம் வரை கையில் வைத்திருக்கும் ஓர் அறிவு ஜீவி. அவரும் அவரது இரு நண்பர்களித்த அந்த நகைச்சுவை விருந்து அதிலும் அந்த பசுவின் கதை எளிதில் மறக்கக் கூடியதல்ல. விலா நோகச் சிரிப்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

நாடகம் : அவர்கள் ஆர்வத்தைப் பாராட்டலாம். திறமையைப் பாராட்ட வேண்டுமானால் அவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதே சமயம், இன்னும் சின்னப் பெண் போலவே இருக்கும் ‘கோடை மழை’ வித்யாவின் “சிவகாமியின் சபதம் “ நாடகத்தில் அவரது அனுபவ முத்திரை தெரிந்த்தது.

அதுபோல உள்ளூர் நடன மணிகள் - அதாவது அமெரிக்க வாழ் இளம் குருத்துக்கள் - அளித்த நடன நிகழ்ச்சிகள் அற்புதம். என்ன வேகம் - என்ன அழகு - என்ன நேர்த்தி - ‘கோரியோ-கிராஃபி’ எனப்படும் நடன அமைப்பு உத்தியை இவர்கள் நங்கு புரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள் என்பது இதன் பொருள். இவற்றோடு ஒப்பிட்டால் ‘மானாட..மயிலாட’ மற்றும் ‘ஜோடி நம்பர் ஒன்” ஆகியவை வெறும் குரங்காட்டங்கள் - குப்பைகள்.....!!!!!!!!!!

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செய்யது உட்பட குழுவினர் நடத்திய நிகழ்ச்சி யார் யாரிடமெல்லாமோ எதிர்பாரா வகையில் என்னென்ன ஏராளமான திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு, இவர்களை தேடிப்பிடித்து திறமை வெளிப்பட உதவிய FeTNA வின் சேவை இதுபோல் என்றும் தொடர வேண்டும்.

திருபுவனம் ஆத்மநாதனின் கச்சேரியில் பல இனிமையான பழைய பாடல்கள் ஒலித்தன. நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது அமைந்து போனதால் பலர் இந்த நல்ல இசை நிகழ்ச்சியை தவற விட்டு விட்டார்கள்.

உள்ளூர் இளைஞர் - யுவதிகள் கலந்து கொண்ட திரைப்படப் பாடல் இசை நிகழ்ச்சிக்குத்தான் அத்தனை நிகழ்ச்சியை விட ஏராளமான கூட்டம். ஏற்பாடுகளைச் செய்ய அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு நேயர்களின் பொறுமையை சோதித்தது அநியாயம். தொகுத்து வழங்கிய யுவதிக்கு மேடை ஆளுமை நிறையவே இருக்கிறது. அது போலவே ஆர்வக் கோளாறும் அதிகம். இவ்வளவு அலட்டல் வேண்டாம். இன்னும் கொஞ்சம் DIGNIFIED-ஆகக் கையாளலாம். பாடியவர்கள் அனைவரும் நன்றாகப் பாடினார்கள். ஆனால் பாடல் தேர்வுகள் சுகமாக அமையவில்லை. பாடல்கள் ஒன்றையொன்று இயல்பாக இனிமையாகத் தொடர வேண்டும் இப்படி கொப்புக்கு கொப்பு தாவக் கூடாது. இன்னொன்று நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களை இளையராஜா என்றும் SPB என்றும் நினைத்துக் கொண்டு சுயத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்பதே இவர்கள் இளமையின் தலை வாசலில் நிற்பதால் ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் என்னுடைய அன்பான - பணிவான அறிவுரை - வேண்டுகோள்.

அந்த வகையில் கனடா நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் உறுப்பினரான ராதிகா சிட்சபை ஈசன் (சிட்சபேசன் அல்ல - அவரே சொன்னது) அணுகு முறை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஓர் அழகான - எளிமையான - இனிமையான - பாசாங்குகள் ஏதுமில்லாத உரை ஒன்றை ஆற்றினார். அந்த ஆளுமை - தன்னம்பிக்கை எனக்கு இந்திரா காந்தியை நினைவு படுத்தியது. அதை அவரிடம் சொல்லவும் செய்தேன், “நான் ராதிகாவாகவே இருப்பதில் யாருக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும். நான் இறுதிவரை ராதிகாவாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.அது..அது தலைமத்துவப் பண்பு.. அது அவரிடம் நிறையவே இருக்கிறது. அரசியலில் இன்னும் வளர்வார் என்கிற நம்பிக்கையை நம்மிடம் நிறையவே ஏற்படுத்துகிறார்.

இதே விழாவில் எழுச்சி உரையாற்றிய ‘ நாடுகடந்த திமிழ் ஈழ அரசாங்கத்தின் (Transnational Govt. of Tamil Eelam’ பிரதமர் விஸ்வநாதன் உருத்திர குமார் உதிர்த்த கருத்துக்கள் அவரது எதிரிகளையும் அவர் பால் ஈர்த்து கட்டிப் போடக் கூடியவை. வெறும் வார்த்தை அலங்காரமாக இல்லாமல் நிறைய தகவல்கள் - புள்ளி விவரங்கள் என்று தன் வாதங்களை முன் வைத்தார். வழக்கறிஞராகப் பணி புரியும் அவரது வழக்கு வாதங்களை சம்பந்தப்பட்ட நீதிபதி ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ தெரியாது.அன்று கூடியிருந்த பெரும் திரளாவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொண்டாட்டமும் கோலாகலமுமாக நடைபெற்ற இந்த விழாவில் அருகருகே வேறு பல தனி அரங்குகளும் நடைபெற்றன. பேச்சுப் போட்டி - திருக்குறள் போட்டி. அமெரிக்க ஈழத் தமிழருக்கான நடவடிக்கைக் குழு - பதிவர் கூட்டம் - மருத்துவர்கள் கருத்தரங்கு - இலக்கிய கருத்தரங்கு முதலிய SERIOUS-ஆன விஷயங்களும் இந்த விழாவுக்கு பெருமை சேர்த்தன.

இவற்றுக்கெல்லாம் சிகரம் அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் தமிழை காப்பதற்கும் - வளர்ப்பதற்கும் - அரசு ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கும் செய்து வரும் முயற்சிகள் இவைமெய் சிலிர்க்க வைக்கின்றன. அந்த விஷயத்தில் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கும் நாம் நம் அரிய சொத்துக்கள் பறிபோவது தெரியாமல் உறங்கிக் கிடக்கிறோம் அதனால் தமிழகத் தமிழர்கள் தலை குனியத்தான் வேண்டும். அமெரிக்காவில் வாழும் அந்தத் தமிழர்களும்தமிழகத் தமிழர்கள்தானே என்கிற பம்மாத்து வேண்டாம். அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள்..! அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது பேரா: புனிதா ஏகாம்பரம் சொன்னது போல் நான்காம் தமிழ்ச் சங்கம்....!!!

இதை 24 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கும், தியாக உள்ளத்தோடு அயராது உழைக்கும் தொண்டர்கள். இவர்களுக்கு தலைமை ஏற்கும் தன்னலமில்லாத தலைவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க உலகெங்கும் வாழ் தமிழ்ச் சமுகம் கடைப் பட்டிருக்கிறது.

இங்குள்ள திறமை வாய்ந்த கலைஞர்களுக்கும் ‘கலைமாமணி’ விருதும், இங்கு அரும் பணியாற்றும் தலைமைத்வ பண்புள்ள பெரியவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளையும் வழங்க மைய அரசு முன்வரவேண்டும் என் பது என்னுடையது மட்டுமல்ல தமிழார்வம் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களின் அவா - ஆசை- ஆதங்கம் வேண்டுகோள் எல்லாம். வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை ! நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு..!!

எழுதியவர்: அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

7/05/2011

பேரவையின் தமிழ்த்திருவிழா இரண்டாம் நாள்


முதல்நாள் நிகழ்ச்சியின் போழ்து கண்ட தமிழ்க் கலை நிகழ்ச்சிகளின் தாக்கம், அனைவரையும் ஊக்கமூட்டி சரியான நேரத்துக்கு தமிழ் உறவுகள் அனைவரையும் அரங்குக்குக் கூட்டி வர, விழா நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு, காலை 8.30 மணிக்குத் துவங்கியது.

முதலில், திருக்குறள் மறைமொழி ஓதல் இடம் பெற்றது. பிறகு, அன்பர் யுவராஜ் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டது.

அடுத்து, அரங்கத்தில் இருப்போரைப் பரவசப்படுத்தும் விதமாய் இருந்தது கிரீன்வில் தமிழ்ச்சங்கத்தாரின் நாட்டிய நிகழ்ச்சி. முழுத்திறனும் ஒருங்கே வெளிப்பட்டது. மெய்சிலிர்த்துப் பார்த்திருந்தேன்.

முனைவர் பிரான்சிசு முத்து அவர்கள், தமிழர் பண்பாட்டு ஆய்விதழ் எனும் தலைப்பில் தெளிதமிழில் உரையாற்றினார்.

வட அமெரிக்க தமிழ்ச்சிறார்கள் பங்கேற்ற தமிழ்த்தேனீ நிகழ்ச்சியின் ஒரு பங்காக, பன்முகத்திறன் போட்டியை பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்கள் அட்டகாசமாய், சுவைக்கூட்டி நடத்திச் சென்றார். நண்பர் பொற்செழியன் ஒருங்கிணைத்திருந்தார்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தின், இசையும் நளினமும் சந்திக்கின்றன நடன நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அடுத்து, கெழுமைமிகு நண்பர் அட்லாண்டா இராசா அவர்கள் தமிழ்த்தேனீ போட்டியின் பரிசு வழங்கலைத் தொகுத்தளித்தார். முனைவர் அரசு செல்லையா, முனைவர்.மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர். செல்வன் பவுர்னிகா அவர்கள், மூன்று போட்டிகளில் வென்று வாகைசூடி எனும் பட்டத்தை வென்றார். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களது கட்டுரை வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது மேடையில். பன்முகத்திறனில் செல்வி மாதவி சங்கரும் செல்வன் நம்பி பொற்செழியன் சிறப்பிக்கப்பட்டனர்.

அடுத்து வந்தது, நாஞ்சில் பீற்றர் அய்யா மற்றும் ஆசான் கொழந்தைவேல் ஆகியோர் இணைந்து அளித்த இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி. மிக மிக இலக்கியச் செறிவோடு, பதினென்கீழ்க் கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும், முனைவர் இரமா ஜெயபாலன் அவர்களும் அணித்தலைவர்களாகச் செயல்பட்டனர். எட்டிலிருந்து எண்பது வரை எனக்குறிப்பிட்டு, எண்பது வயது நிரம்பிய பெருமதிப்புமிகு அமிர்தலிங்கம் அண்ணாதுரை அவர்களும் எட்டு வயது நிரம்பிய செல்வி ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தினரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதற்குப் பின்னாலான கடும் உழைப்பினைப் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. அடுத்து கரோலைனா தமிழ்ச்சங்கதினர் வழங்கிய, காவடி ஆட்டம் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் சங்கே முழங்கு நிகழ்ச்சி, விவரிக்க சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பியா, தென்கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் நடனக் கோர்வை நிகழ்ச்சி இடம் பெற்றது. பிறகு, பாரியின் கதை எனும் நாடகம், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கதினரால் இடம் பெற்றது. ஒப்பனைகள் வெகு பிரமாதம்.

வானொலி அறிவிப்பாளர் திரு.அப்துல ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து நடத்திய பட்டிமண்டபம், தமிழைச் சிதையாமல் காப்பது பொதுமக்களா அல்லது ஊடகங்களா எனும் தலைப்பில் இடம் பெற்றது. அணித் தலைவர்களாக, பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்களும், நண்பர் திரு.ஜான் பெனடிக் அவர்களும் பேசினர். சிறப்பாக இருந்தது.

தமிழின் இன்றைய நிலை எனும் தலைப்பில் முனைவர் சு.பழனியப்பன் பேசினார். கருத்துச் செறிவோடும், ஆதாரப்பூர்வமாகவும் பேசியமை குறிப்பிடத்தக்கது. வெள்ளுடையில் அரங்கத்தைக் கலக்க வந்தார்கள், கரோலைனா தமிழ்ச்சங்கத்தினர். அவர்களது ஒயிலாட்டம், வெகுசிறப்பாக இருந்தது. சீட்டி ஒலி விண்ணைப் பிளந்தது. அடுத்து, தென்கரோலைனா சங்கத்தினரின் சிறப்பு நாடகத்தின் ஒரு பகுதியான நடனம் இடம் பெற்றது. எழிலார்ந்த காட்சியது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை வரலாற்றிலேயே இடம் பெறாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. வயதில் மூத்தவர்கள், சுகாதாரத்தில் நாங்கள் இன்னமும் இளையோரே எனப் பறைசாற்றக் களமிறங்கினர், மிசெளரி தமிழ்ச்சங்கப் பெரியோர். என்னே கண்கொள்ளாக் காட்சியது?!

புதுகை பூபாளம் குழுவினரும், நடிகர் சார்லியும் இணைந்து நடத்திய நாடகம் அனைவரையும் விலா எலும்பு முறியுமளவிற்குச் சிரிப்பைக் கூட்டியது.

மனித உரிமை வழக்கறிஞர் கெரன் பார்க்கர், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றினர். அழுத்தத்திருத்தமாக பேசினர். தமிழர் அனைவரும், அவர்களது பேச்சினை அவசியம் காணொலியில் காண வேண்டிய உரையது. இந்நிகழ்ச்சியைப் பேரவைத் தமிழர் முனைவர் பழனி சுந்தரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சி இது என்று உறுதியாகச் சொல்ல முடியும். அரங்கம் அதிர்ந்து, தமிழர் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் நீந்தினர். ஆம. திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம் மற்றும் தமிழ்க்கலைகள் பல சுற்றுகளாக இடம் பெற்றன. சகோதரி சந்திரா அவர்களைக் கண்கள் பனிக்க பாராட்டி மகிழ்ந்தேன்.

இரவு உணவு இடைவேளையில், முனைவர் மு.இளங்கோவன் மற்றும் முனைவர் சு.பழனியப்பன் அவர்க்ள் சிறப்பாளர்களாய் இருக்க, முனைவர் சொர்ணம் சங்கரும் பதிவர் பழமைபேசியும், தமிழ்மணம் பட்டறை மற்றும் பதிவர் சந்திப்பினை இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில், சிறப்பான கருத்துகள் பல அலசப்பட்டன.

இளந்தமிழர்களின் சாதனைகளும், சவால்களும் எனும் தலைப்பில் இடம் பெற்ற நிகழ்ச்சி, பெற்றோருக்கும் வளர்ந்து வரும் இளந்தமிழருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது. பயனுள்ள இந்நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்.

பேரவை சிறப்பு விருந்தினர் சிறப்பிக்கப்பட்டார்கள். தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். நிறைவாக, அட்லாண்டா சகானா டிரீம்சு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர் கூட்டம், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திளைத்துப் போய் தத்தம் உறைவிடம் நோக்கித் திரும்பும்போது நடுநிசியைத் தாண்டிய நேரமது. அட்லாண்டிக்கடல் கானப் பறவையொன்று, கானம் பாடி அவர்களைக் வழியனுப்பிக் கொண்டிருந்தது அரங்க வாயிலில்!!

தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!

7/02/2011

2011 FeTNA தமிழ்த் திருவிழா முதல் நாள் நிறைவு! ஒரு கண்ணோட்டம்!!

சூலை 2, 2011, சனிக்கிழமை காலை 8 மணிகெலாம் விழா அரங்கத்திற்குச் சென்றடைந்து விட்டேன். சென்றவனுக்கு, அளப்பரிய மகிழ்ச்சியும் பரவசமும் பெருவியப்பும். சங்ககால்த்துற்குள்ளாகவே காலடி எடுத்து வைத்தாற் போன்றதொரு மனநிலை.

சங்ககாலப் படங்கள், தமிழன்னை உருவப்படம், திருவள்ளுவர் படம், பண்பாட்டுப் பதாகைகள், நல்வண்ணக் கோலங்கள், அழகு வேலைப்பாடுகள் என அரங்கம் மிக எழிலோடும், பொழிலோடும் காட்சியளித்தது.

மாபெரும் அரங்க வளாகம். வாகனத்தரிப்பு இடங்கள், வணிகக்கடைகள் பரப்பிடம், விசாலமானதொரு உணவுக்கூடம். வசதிக்குறைவில்லாதொரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் விழாக் குழுவினர்.

மங்கள் இசையுடன் விழா துவங்கியது காலை 8.30 மணிக்கு. உள்ளூர்ச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கப் பாடலும் இசைத்தனர். அரங்கம் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.

வாழ்த்துப்பா இசைத்தலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் நீலவண்ண தமிழ்ச் சீருடை அணிந்த பெண்டிர் புடைசூழ குத்துவிளக்கேற்றினார்கள். சிறுகச் சிறுக மக்கள் கூட்டம் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தலைவர் முனைவர்.பழனிசுந்தரம் அவர்கள் உண்ர்வுமிகு தலைமையுரை ஆற்றினார்கள். இனமாண்பு போற்றுவது மட்டுமே பேரவையின் வேலை, தம்கடமையில் அரசியலைக் கலப்பதே இல்லை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

கவிஞர் சேரன் அவர்களின் பாடலுக்கு, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்துச் சிறார்களின் நடனம் இடம் பெற்றது. பூமியின் அழகே, பரிதியின் சுடரே எனுமந்தப் பாடல் அரங்கத்தைக் கட்டிப் போட்டது. நடனமும் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து, அன்பர் பொற்செழியன் இராமசாமி அவர்கள் அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அறிமுகத்தைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் குத்துவரிசை இடம் பெற்றது.

அமெரிக்காவில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளில் எல்லாம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினைக் கொண்டு வருமுகமாக அமையப் பெற்றதுதான் அமெரிக்க தமிழ் கல்விக்கழகம். அதனை அறிமுகப்படுத்தியும், அதன் கட்டமைப்புப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் முனைவர் அரசு செல்லையா அவர்கள். அட்லாண்டாவில், தமிழ்ப் பாடம் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விரிவாக எடுத்துரைத்து நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டினார் அட்லாண்டா மாநகர் தமிழ் சங்கத் தலைவர் முனைவர். திரு. ரவி பழனியப்பன் அவர்கள்.

அமெரிக்க தமிழ் கல்விக்கழகத்தின் கட்டமைப்புக்கு வலு சேர்த்த அன்பர்கள் திரு.செளந்திர பாண்டியன், முனைவர் சொர்ணம் சங்கர் முதலானோர்க்கு சிறப்புச் செய்யப்பட்டது.

பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் சொல்வீச்சாலும் நகைச்சுவையாலும் அரங்கத்தினைக் கவர்ந்தார். இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இலதா கண்ணன் அவர்களது தெளிதமிழும் உச்சரிப்பும், அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இதுவல்லவோ தமிழ் என உணர்ந்து சிலாகிக்கத் தூண்டியது.

சார்ல்சுடன் மாநகர உறுப்பினர் திருமதி காத்லீன் வில்சன் என்பார் வாழ்த்துரை வழங்கினார்கள். டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தாரின், அமெரிக்க மருமகள் ஆண்டிபட்டி மாமியார் எனும் நாடகத்தின் மூலம் சிரிப்பொலி மூலம் அரங்கத்தை அதிர வைத்தார்கள்.

அதற்குப் பின் உணவு இடைவேளை கிட்டத்தட்ட 12.15 மணியளவில் துவங்கியது. காலை ஒன்பது மணி முதலே இணை அரங்குகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் இணையமர்வுகளாக இடம் பெற்றன.

உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பசு நகரத் தமிழ்ச்சங்கத்தினரின் நடனம் இடம் பெற்றது. வெகு அருமையாக இருந்தது. மிகுந்து இரசித்துப் பாராட்டப்பட்டது. தனித்தமிழே நனிச்சிறப்பு எனும் தலைப்பில், நண்பர் துரைக்கண்ணனின் தந்தையாரும் தமிழறிஞருமான திரு.துரை எழில்விழியன் அவர்களின் சொல்வீச்சு இடம் பெற்றது. சிந்தனைகளைக் கிளறுவிதமாக இருந்தது அவரது பேச்சு.

அடுத்து, கவிஞர் நா.முத்துகுமார் அவர்களது தலைமையில் கவியரங்கம் இடம் பெற்றது. அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்பில் இடம் பெற்றது கவியரங்கம். உணர்வுப்பூர்வமாக இருந்தன கவிதைகள். கவிநயம் சில இடங்களில் மிகவும் தூக்கலாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுகளை அள்ளி வழங்கினர் பார்வையாளர்கள்.

அரசி நகரத்து அருங்கலைகள் எனும் தலைப்பில், சார்லட் நகர தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய வில்லுப்பாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மிப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம் முதலானவை அடங்கிய கதம்பம் அனைவரையும் கவர்ந்து, நாட்டுப்புறத்துக்கே இட்டுச் சென்றது. மிகவும் அருமை!!

அட்லாண்டா நகரத்தினர் வழங்கிய வீணை இசை, தெவீகக்களையோடும் இனிமையோடும் சிறப்புற அமைந்தது.

புதுகை பூபாளம் குழுவினர் வழங்கிய நிகழ்ச்சியில் மொத்த வருகையாளர்கள் ஒருங்கே அமர்ந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நகையுணர்வுக்கு ஆட்பட்டமையால், ஏராளமானோர்க்கு விலா எலும்பு வலிக்கத்துவங்கின என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து சர வெடிகளை வெடித்துக் கொண்டே இருந்தனர் பிரகதீசுவரனும் செந்திலும்.

இடையில், தமிழிசைப்பேழை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நடிகர் சார்லியின் மேடை நிகழ்ச்சியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர் தனது அனுபவ நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் வினாவுக்கு விடையளித்தல் நிகழ்ச்சியும் சுவாரசியமாக நடத்தப்பட்டது.

கோடைமழை வித்யா அவர்களது சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. உணவு இடைவேளை சிறிது தள்ளிப் போகவே, முனைவர் சுந்தரவடிவேலுவும் பதிவர் பழமைபேசியும் இணைந்து தமிழ் மொழி குறித்தான கலந்துரையாடலை நடத்தினர். கூடியிருந்தோர் வெகுவாக அதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன். விழா மலர் வெளியீடு, முக்கிய விருந்தினரைச் சிறப்பித்தல் ஆகியன்வற்றைத் தொடர்ந்து, முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அழகான பாடலை, இசையறிவோடு தோய்த்துப் பாடினார் முனைவர். அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. தொடர்ந்து, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் குறித்தான தமிழ்ப் பேச்சால் அரங்கத்தைக் கட்டிப்போட்டார் என்றே சொல்ல வேண்டும். சக பதிவர் என்கிற முறையிலே, நமது பாராட்டுகள் அவருக்கு உரித்தாகட்டும்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து, கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் தான் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் தன் அனுபவத்தைப் பகர்ந்தார். அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுற அமைந்தது அவரது பேச்சு.

தொடர்ந்து பண்பட்ட மனதுக்குச் சொந்தக்காரர், கலையாற்றலும் நயமும் மிகுந்த நடிகர் நாசர் அவர்கள் திரைப்படம் குறித்தான் கருத்துகளை மிகச் செறிவாக எடுத்துரைத்தார். மிக, மிகப் பணிவோடும் பண்போடும் ஆற்றிய உரை என்றே கூறுவேன்.

நிறைவு நிகழ்ச்சியாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசை இடம் பெற்றது. இன்னிசையில் நனைந்த தமிழ் நரம்புகள் காதில் தேனைக் கொண்டு செவியுணர்வாகப் பாய்ச்சியது. மொத்தத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது, மிகுந்த செறிவோடும் நல்லதொரு ஒழுங்கோடும் அமைந்திருந்தது. ஒளிப்பதிவுகளை இங்கே சென்று கண்டு களித்திடுவீராக.


படங்களுக்கு இங்கு சுட்டிடுவீர்!!

நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க முற்படும் வரையிலும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது,

--சார்ல்சுடன் இஃகயாத் விடுதியில் இருந்து உங்கள் பழமைபேசி.