10/13/2023

செயன்முறை(process)

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர்.

ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர்.

மனிதனின் மனம் என்பது விநோதமானது. எதை நினைவில் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ அது மறந்து போகும். மறக்க வேண்டுமென நினைப்பது நினைவில் வந்து வந்து எண்ண அலைகளைக் கிளப்பி விட்டுச் செல்லும். இப்படி எழுதி வைப்பதால் மனம் அமைதி கொண்டு விடுகின்றது.

கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததினால், அதுவே ஒரு தொடர் இயக்கமாக, ஒழுங்காகச் செயன்முறை வடிவம் பெற்று விட்டது. மனம் அந்த செயன்முறையின் மீது நம்பிக்கை கொள்ள விழைந்தது. நிறுவனத்தின்பாற்பட்ட நல்லது, கெட்டது எல்லாமுமே அந்தச் செயன்முறை பார்த்துக் கொள்கின்றது என்பதான நிலைப்பாடு மனத்தில் குடிகொண்டு விட்டதினாலே, வீட்டுக்குச் செல்லும் நிர்வாகிகளின் மனப்பதற்றம், கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, புத்துணர்வுடன் மேலும் செயலூக்கம் கொண்டவர்களாக மாறினர்.

நம் தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் நம் மனத்தை நிர்வகிக்க(மேனேஜ்)த் தலைப்பட்டவர்களே. இருக்கும் கவலைகள், பிரச்சினைகள், சவால்கள், திட்டங்கள், பணிகள் முதலானவற்றை வாரத்துக்கு ஒருமுறையாவது எழுதப் பழக வேண்டும். எழுதினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும். பிற்பாடு அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டடையலாம். ஒழுங்கின் மீது நம்பிக்கை பிறக்கும். கவனமின்மை, கவலைகள், பலவாக்கில் யோசித்துக் கிடப்பதெல்லாம் படிப்படியாக மங்கும். மனதில் உறுதி பிறக்கும். காலத்தை முழுமையாக அனுபவிக்கத் தலைப்படுவோம்!

A problem well stated is a problem half-solved.-Charles Kettering

-பழமைபேசி.