3/31/2023

முட்டாள்கள் நாள்

 

அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக  பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவர்களின் நாளென்றும் கடைபிடிக்கப்படுகின்றது. அதன்நிமித்தம் அறியாதவாறு முதுகுப்புறத்தில் காகிதமீன்களை ஒட்டிவிட்டுச் சிரிப்பதும் வாடிக்கையானது; நம் ஊரில் முதுகுப்புறத்தில் பேனா மை அடித்துச் சிரிப்பதைப் போலே!

குதூகலத்திற்குச் செய்யும் சிறுசிறு விளையாட்டுகள் அந்தந்தத் தருணத்தை இலகுவாக்கக் கூடியவை; மச்சினியின் மீது ஊற்றப்படும் மஞ்சநீரைப் போலே! சடையின் பின்னால் ஒட்டப்படும் ஒட்டுப்புல்லைப் போலே!!

எட்றா வண்டிய... எங்கடா அந்த ஒட்டுப்புல்லு?!



3/29/2023

அறியாமை

தம்பி ஒருவர் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்வது வழக்கம். அண்மைக்காலமாக நிலைமை அப்படி இல்லை. எப்போதாவது இணைந்து கொள்கின்றார். நான்கரை மைல்கள் நடந்து வந்தோம். நடையின் துவக்கத்திலே சொல்லிக் கொண்டேன், ’அறியாமையில் இருந்தால் நல்லது; அறிந்து கொள்தல் கூடக்கூட, வருத்தங்களும் ஏமாற்றங்களும்தான் மிகுகின்றது’ என்றேன். தொடர்ந்து அவர், ‘நீடித்த உண்ணாநிலையால் கவனச்சிதறலின்றி கூர்மையுடன் இருக்க முடியும்’ என்றார்.

வினை இப்படித்தான் துவங்குகின்றது. உடல்நலப்பித்து, இணையப்பித்து முதலானவற்றால் ஏதோவொன்றைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதில் அவர்கள் முன்னேற்றத்தை அடைய அடைய பித்துநிலையின் எழுச்சியும் மேலோங்கி விடுகின்றது. யுஃபோரியா(yoo-FOR-ee-uh) என ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. EUPHORIA is a feeling of well-being or elation. புளகாங்கிதம்!  இது தற்காலிகமானது. இவர் என்ன காலாகாலத்துக்கும் உண்ணாநிலையில் இருக்கப் போகின்றாரா? உண்ணாநிலையில் இருக்கும் போதும், அடுத்த சிலநாட்களும் அப்படியான உணர்வில் இருப்பார், இருக்கும் போது உள்ளெழுச்சியுடன் போற்றிக் கொண்டிருப்பார். அதைப் பலர் கேட்க, அவர்களும் மேற்கொண்டிருக்கப் போகின்றனர். இப்படியாக ஆங்காங்கே குற்றலைகள் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டேதான் இருக்கும். அவை தற்காலிகமானது, மங்கிவிடப் போகின்றவை.

சீரான உணவு, உடற்பயிற்சி, அவ்வப்போதைய குறுகியகால உண்ணாநிலை என்பன, நல்ல கவனக்கூர்மை, ஊக்கம் முதலானவற்றை எல்லாருக்கும் எப்போதும் கொடுக்கவல்லன. நீடித்த விளைவை அவைதான் தோற்றுவிக்கும்.

அடுத்து, எடைக்குறைப்பு, அதன்நிமித்தம் ஏற்படுகின்ற யுஃபோரியா குறித்துப் பேச்சு திரும்பியது. பத்து கிலோ குறைத்து விட்டேன், பதினைந்து கிலோ குறைத்து விட்டேன், நல்ல தோற்றம், பொலிவு என்றெல்லாம் புளகாங்கிதம் கொள்வதை எங்கும் காணலாம். ஆனால், என்னால் இப்போது நிற்காமல் மூன்று மைல்கள் ஓடமுடிகின்றது, ஒருமணி நேரம் ஓய்வின்றி நீச்சல் அடிக்க முடிகின்றது, சென்ற ஆண்டைக்காட்டிலும் நாற்பது பவுண்டு எடை கூடுதலாகத் தூக்க முடிகின்றது என்றெல்லாம் சொல்வதை அரிதாகவே காணமுடியும். இஃகிஃகி, இந்த வேறுபாட்டில் இருக்கின்றது வினயம்.

உடலில் 60% நீர். மனிதனின் உடம்பில் இருக்கும் கொழுப்பின் சராசரி அளவு 30 - 40%. தசைநார்களின் அளவு 25%. எடுத்துக்காட்டாக, ஒருவர் 20 கிலோ எடைக்குறைப்பு எனப் புளகாங்கிதம் கொள்கின்றாரென வைத்துக் கொள்வோம். 12கிலோ எடை நீரின் அளவு என்றாகின்றது. எஞ்சிய 8 கிலோவில் கொழுப்பின் அளவு 3.5  கிலோ.  தசைநார்களின் அளவு 2.5 கிலோ. கட்டமைப்புத்தசை உள்ளிட்ட உறுப்புச்சிறுத்தல்கள் 2 கிலோ எனத் தோராயமாக இருக்கலாம்.

30 வயதுக்குப் பின்னர், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஐந்திலிருந்து பத்து விழுக்காடுகள் வரையிலும் தசைநார்ச் சிதைவு ஏற்படுமென்பதும் அறிவியற்கூற்று. தசைநார்களின் சிதைவு என்பது ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டே போகும். வளர்த்தெடுப்பது மிகவும் கடினம். தக்கவைத்துக் கொள்வதற்கேவும் முறையான உணவு, உடற்பயிற்சி என இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, கண்டதையும் மேற்கொண்டு ஒருவர் எதற்காக தசைநார்ச்சிதைவுக்கு ஆட்பட வேண்டும்? தசைநாரில்தான் உடலின் நகர்வுக் கட்டுமானமே இருக்கின்றது.

ஆக எடைக்குறைப்பில் புளகாங்கிதம் என்பதில் அவ்வளவு பொருண்மியம் இல்லை. மாறாகக் கொழுப்பைக் குறைத்து உடல் வலுவைக் கூட்டி இருக்கின்றேனென ஒருவர் சொன்னால் அது புளகாங்கிதப்பட்டுக் கொள்ள வேண்டியதே. கவனித்துப் பாருங்கள், அளவில் சிறிய தோற்றத்தை எட்டி இருப்பார்கள். முகம் சிறுத்திருக்கும். கைகால்கள் சூம்பிப் போயிருக்கும். தொப்பையின் அளவு சற்றுக் குறைந்திருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று விகிதாச்சாரம் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும். பெரிய பயனில்லை. மாறாக உருவின் தோற்றம் சிறுத்து, அதே வேளையில் எடை குறையாமலோ, கூட்டியோ இருப்பாரெனில், வலுவும் ஆற்றலும் கூடி இருக்கின்றதெனப் பொருள்.

வலுப்பெருக்குடன் ஒரு பவுண்டு எடை கூட்டுவதென்பது அவ்வளவு கடினமான வேலை. முறையான உணவும், உடற்பயிற்சியும் உடலின் இன்னபிற இயக்குநீர் சுரப்பு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அது செயலாக்கம் பெறும். அப்படியான நிலையில், இருக்கும் தசைநார்களை இழப்பதென்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலை. சரி, கொழுப்பை மட்டுமே குறைக்க முடியுமா? முடியும். மருத்துவக் கண்காணிப்பு, புரதம், கொழுப்பு, நார்ச்சத்துகளுடன் கூடிய உணவுடன் போதுமான உடற்பயிற்சியும் நிதானத்துடன் கடைபிடித்துவருங்கால் படிப்படியாக உடற்கட்டின் தன்மை மாறிவரும். 

The only difference between being uninformed and misinformed is that one is your choice and the other is theirs.



3/28/2023

தன்னெரிமம்

ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation.

நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்லை.

ஐம்பொன் போன்ற சத்துக்கற்களால், கோடானு கோடிக் கற்களால் (அணுக்களால்) கட்டப்பட்டிருக்கின்றது நம் உடல். இயக்கத்திற்குப் போதுமான தனிச்சத்துகள், உணவாக உட்கொள்ளப்படாத போது, இப்படியான கற்களில் சிலவற்றைச் சிதைத்து அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைக் கொண்டேவும் இயங்கத் தலைப்படும். 

ஒருவர் உண்ணாநிலை மேற்கொள்கின்றார். இயக்கத்திற்காக குருதியிலும் உடலிலும் இருக்கும் எரிபொருள் எரிக்கப்படும். ஏறக்குறைய எட்டுமணி நேரத்துக்குப் பின் கல்லீரலின் தற்காலிகச் சேமிப்பில் இருப்பதை எரிபொருளாகப் பயன்படுத்தும். அடுத்த எட்டுமணி நேரத்தில், அது தீர்ந்து போனதும், உடலின் கட்டுமானத்தில் இருக்கும் அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் எல்லாவற்றையும் சிதைத்து அதன்வழி கிடைக்கும் சத்துகளை அதனதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தும். இதுதான் தன்னெரிமம் எனப்படுகின்றது. இப்படியான தன்னெரிப்புப் பணி முடிந்ததும், உடலில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு, எரிபொருளாக மாற்றப்பட்டு இயக்க ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படும். நிற்க!

தன்னெரிமத்தால், அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் சிதைக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதால் உடல் பொலிவுறுகின்றது. புற்று, வீக்கம், வீண் அணுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.  ஆக, ஆயுள் நீடிக்க வழிவகுக்கும் தன்னெரிமச் செயற்பாட்டுக்கு, 48 மணி நேரம் வரையிலான உண்ணாநிலை சிறந்தது; 16 மணி நேர உண்ணாநிலைக்குப் பிற்பாடு தன்னெரிமம் துவங்கும். 

இத்தகவலை விழுமுதலாகக் கொண்டு, தேடலையும் நாடலையும் மேற்கொள்கின்றோம். தன்னெரிமம் குறித்தான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. மெய்யெனும் வேதிச்சாலையில் பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. அவற்றுக்கு உள்ளீடு பல்வேறு சத்துகள். சில சத்துகள் சேமிப்புக்குள்ளாகின்றன. சில சத்துகள் அன்றாடமும் நாம் உட்கொண்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, சில உயிர்ச்சத்துகள்(vitamins) நீரில் கரையக் கூடியன. பயன்பாட்டுக்கு உரியது போக எஞ்சியது கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். இப்படியான தனிச்சத்துகளில் எதற்குப் போதாமை ஏற்படும் போதும், மெய்யெனும் வேதிசாலையானது எங்காவது எதையாவது மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியுமாயெனப் பார்த்து, அதனைச் சிதைத்து, அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இப்படியும் தன்னெரிமம் நிகழ்கின்றது. ஆக, தன்னெரிமத்துக்குப் பதினாறு மணி நேரம் உண்ணாநிலை மேற்கொண்டேயாக வேண்டுமென்பதில்லை என்றுமாகின்றது.

மேற்கூறிய கூற்றுகளில் எது சரி? இரண்டுமே சரிதான். எப்படி? தொடர்ந்து மூன்று வேளை உணவு, கூடுதலாக அவ்வப்போது சிறுதீன்கள், பழங்கள், காய்கள், குடிநீர்களென எதையாவது உட்செலுத்திக் கொண்டே இருப்பவருக்குச் சத்துப் போதாமை என்பதே கிடையாது. மாறாக செரிமானப்பளுவும் சேமிப்புச்சுமையுமென ஆகிவிடுகின்றது. அப்படியான ஒருவர் நீடித்த உண்ணாநிலை மேற்கொள்ளும் போது தன்னெரிமம் வாய்க்கின்றது.

உடற்பயிற்சியோ அல்லது உடலுழைப்போ கொண்டு உணவுக்கட்டுப்பாடும் தரித்திருக்கும் ஒருவர், உண்ணுவதில் சற்றுக் காலம் தாழ்த்தும் போதேவும் அவருக்குத் தன்னெரிமம் வாய்த்து விடுகின்றது. இப்படியானவர், நீண்ட ஆயுளுக்கும் பொலிவுக்குமென நீடித்த உண்ணாநிலைக்கு ஆட்படத் தேவையில்லை.

தேடலும் நாடலுமற்ற உடலுழைப்புக் கொண்ட ஒருவர், ஏதோவொரு காணொலியோ கட்டுரையையோ அடிப்படையாகக் கொண்டு நீடித்த உண்ணாநிலை மேற்கொண்டால் என்னவாகும்?  மறுசுழற்சிக்கான  ஒவ்வா, அரைகுறை, புற்று, உபரி அணுக்கள் இல்லாத போது, தன்னெரிமச் செயற்பாடென்பது திடமாய் இருக்கும் தசைநார்கள், இன்னபிற கட்டுமானத்தையும் எரிக்கத் துவங்கும். இது தேவைதானா? சொந்த செலவில் சூனியமல்லவா?? உடல்நலம் எனக்கருதிக் கொண்டு பித்துப்பிடித்து அலைபவர்கள், சொல்வதைத் தின்று கேட்பதைச் செய்து மனநோய்க்கு ஆட்பட்டு விடுகின்றனர். 

தேடலும் நாடலும் உடையவர் ஆழ்நிலைக் கற்றலுக்கு ஆட்படுவார். மற்றவர் மேல்நிலைப் பரப்புரைகளுக்குச் சோரம் போவார்!!



3/23/2023

அமெரிக்கத் தமிழ்ச்சூழல்

ஊடகத்தில் பணியாற்றக் கூடியவர்கள், அதே துறையில் பணியாற்றக் கூடியவர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்படியான கலந்துரையாடல்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், காட்சிகள் எல்லாமும் அவர்களின் கவனத்துக்குட்படாமல் திரட்டப்பட்டிருக்க, பின்னொருநாளில் அவை வெளியாகின்றன. அந்தரங்கமான தகவல்கள் பொதுவெளியில் பகிரங்கமாகும் போது, தொடர்புடையவர்களுக்கு நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அவர்களின் பேரிலான நன்மதிப்பும் குறையத்தான் செய்யும்.

இப்படியானவற்றில் சிக்குண்ட ஒருவர் மன்னிப்புக் கோரி ஒரு காணொலியை வெளியிடுகின்றார். பார்ப்போர் மனம் கலங்குகின்றனர். இதெல்லாம் நாடகம் என்பதாக விமர்சிப்பவர்களும் விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில்தாம், அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளில் இடம் பெறுகின்ற போக்கும் நினைவுக்கு வருகின்றது.

தமிழ்மொழி, தமிழ்ச்சமூகம், தமிழ்க்கல்வி முதலானவற்றின் பேரில்தான் முக்காலே மூன்று வீசம் பேரும் தன்னார்வத் தொண்டு புரிய வருகின்றனர். குடும்பத்துக்கான, குழந்தைகளுக்கான, தனக்கான நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கித்தான் வருகின்றனர். ஏதோ சிலர் வேண்டுமானால், வணிகநோக்குடன் வருபவர்களாக இருக்கலாம். இப்படி வந்தவர்களுள், சாதி, சமயம், அரசியல், விருப்புவெறுப்பு ரீதியாக அணி சேர்ந்து கொண்டு அக்கப்போர் செய்வது ஒரு பாதி. வணிகநோக்கர்களின் சூட்சுமத்துக்கு இரையாவது தெரியாமலே சோரம் போய்க் கொண்டிருப்பது மறுபாதி. இவற்றுக்கிடையேதான் நற்செயல்களும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.

மேற்கூறிய மன்னிப்புக் கோரல் காணொலிக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சூழலுக்கும் என்ன தொடர்பு? இருக்கின்றது. அணி என்பதற்காகவே சார்புடன் செயற்படுவதும், குழுவாதத்துடன் செயற்படுவதுமாகப் பெரும்பாலான தன்னார்வலர்கள் இருக்கின்றனர். தன்னாட்சி, தன்பொறுப்பு, தன்னுமை என்பன அடிபட்டுப் போகின்றன. எடுத்துக் கொண்ட தமிழ்ப்பணியைக் காட்டிலும், எதிர்-உளவியலில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். கூட்டுக் குறுங்குழுவாதத்தின் பொருட்டு ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பேரிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவையெல்லாம் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்த நினைவில்லாமலேவும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அணிகள் மாறலாம். இணைந்து இருப்போருக்குள்ளும் முரண்பாடுகள் எழலாம். அப்போது இப்படியான தனிப்பட்ட உரையாடல்களின் பதிவுகள் வெளியாகக் கூடும்; வெளியாவதும் வழமை. இப்படித்தான் தமிழ்ச்சூழல் என்பது, நச்சுச்சூழலாக(toxic) மாறிப் போகின்றது. அவர்களுக்குத் தாம் அகப்பட்டுக் கொண்டிருப்பது புலப்படாது. புலப்பட்டிருக்குமாயின், ’அப்படியான எதிர் மனோநிலையே முதன்மை’ என இருக்கமாட்டார்கள்தானே? என்னதான் தீர்வு?

அறம்சார் அமைப்பில், அறமும் சகமனிதனின் பேரிலான அக்கறையுமே முன்னுரிமை கொண்டதாக இருத்தல் வேண்டும். குழுவில் பெரும்பான்மையெனும் தோற்றத்தில் கூட்டுணர்வு ஊக்கம் கொண்டு செயற்படும் போது, தவறானவற்றில் அது நம்மை ஆழ்த்திவிடும். பின்னாளில் பூசல்கள் மேலிடுகின்ற போது, உடனிருந்தவர்களே மோதுகின்ற சூழலும் ஏற்படும். அப்போது அவர்கள் முந்தைய அந்தரங்கத் தகவல்களை பகிரங்கப்படுத்தக் கூடும். சார்புத்தன்மை தவிர்த்து, தம் கொள்கை, கோட்பாடு, அமைப்பின்நலமென இருந்து விட்டால் என்றும் நலம். தலைநிமிர்ந்து காலகாலத்துக்கும் பீடுநடை இடலாம். Volunteerism isn't beautiful and easy, or a bunch of people getting together and working; it's a lot more than that. Why do I say this? "Writing is also a form of activism". -Angie Thomas

நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை [தேவாரம்]

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை!!

o0o0o0o0o

//படிக்கச் கூட கசக்கும்.//

மிகவும் நேரிடையானதும் உண்மையானதுமான கருத்து. மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

எதிர்மறையானவற்றைப் பேசுவது ஆகாதவொன்று. புறம்பானவொன்று. பின்னடைவைத் தரக்கூடிய ஒன்று என்கின்ற அருவருப்பு(stigma) தமிழ்ப்பண்பாட்டில் உண்டு. குறிப்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புகளில்.

பேசினால், அது பாராட்டாக, புகழக்கூடியதாக, வாழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும்.  அல்லாவிடில், பேசாமாலே இருந்து விட வேண்டும். ஆனால், மூத்தகுடி, தொன்மை, தொடர்ச்சி என்றெல்லாம் சொல்லி நெஞ்சை நக்கிக் கொள்கின்றோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (ஒளவை)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (குறள்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள்)

ஒளவையாரும் திருவள்ளுவரும் சொல்வதென்ன? எண்ணுவதும் எழுத்தைப் (வாசிப்பது, எழுதுவது) போற்றுவதும் கண்களெனச் சொல்கின்றனர். இந்தக் குழுமத்திலேயே கூட முன்பொருமுறை சொல்லப்பட்டது. நேர்மறையான கருத்துகளையே பகிர்வோமென. கசப்பு என்பதற்காக, மருந்தினை உட்கொள்ளாமல் இருக்க முடியுமா?  எழுத்தில் உண்மையும் அறமும் இருக்கின்றதா என்பதுதான் பார்க்கப்பட வேண்டியது.

தத்துவஞானி சாக்ரடீஸ், உரையாடல் என்பது மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்றார். ஆனால், உரையாடத் தயக்கம், தடை, அச்சம் என்பதான போக்குடையவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். என்ன காரணம்? நம்முடைய கருத்தினால், மற்றவரின் ஒவ்வாமைக்கு நாம் ஆளாக நேரிடுமோ என்கின்ற அச்சம் அல்லது தன் புகழ், பொறுப்பு போன்ற தன்னலம். இப்படியானவர்களின் தன்னார்வத் தொண்டினால் ஒரு பயனுமில்லை. கூடிக் கலைவதற்கும் களிப்புக் கொள்வதற்கும்தான் பயன்படுமேவொழிய, மேன்மையை ஈட்டித் தராது.

3/12/2023

எண்ணங்கள்

“தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல். மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள். ‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.” இதை எழுதியவர், சுகா என்னும் சுரேஷ் கண்ணன், திரைப்பட இணை இயக்குநரும் எழுத்தாளரும் நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகனும் ஆவார். 

தற்போது இதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? நண்பர் அழைத்திருந்தார். ”கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றாய். என்ன பயன்? எதிர்மனோநிலைக்காரன் எனும் அருவருப்பு(stigma)தானே ஏற்படும்?”. “இருக்கலாம். அதற்காகத் தன் தரப்புக் கருத்துகளை மாற்றிச் சொல்வதும், சொல்லாமலே இருப்பதும் ஏமாற்றிக் கொள்தல்(தன்னைத்தானே) அல்லவா?” என்றேன். மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. எண்ணிக்கையில் இல்லை வெற்றி. தரத்தில் இருக்கின்றது வெற்றி. It's quality that matters over quantity. நூறு பேராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துலகில் கோலோச்சிய ஜெயகாந்தன் என்பது அல்லாமற்போய் விடுமாயென்ன?

இது அமெரிக்கா. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். முழுமையான தன்னுமைக்கு(லிபர்ட்டி) உரித்தானவர்கள். அழகானதும் அருமையானதுமான வாழ்வுக்கு ஆட்பட்டவர்கள். பொய், புரட்டு, திரிபு, முலாம்பூசப்பட்ட பேச்சுகள் போன்றவற்றுக்குச் சோரம் போகத் தேவையில்லை. சமூகத்தில் பொதுமைப்படுத்தல்களின்வழி உழைப்புச் சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”, “ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்”, ”one bad apple ruining the entire bunch” என்பனவெல்லாம் அமெரிக்காவுக்கு, அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரான தேய்வழக்குகள். ஏனென்றால், இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையான தனித்துவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடு. குழந்தைகள் எதிர்க்கேள்வி கேட்பார்கள். அல்லது, குடிவரவாக வந்திறங்கிய பெற்றோரின் ஆதிக்கத்துக்குப் பணிந்து அகநகைப்போடு கடந்து செல்பவர்களாக இருப்பர்.

அந்த ஒரு துளிதான், அந்த ஒரு பானைதான், அந்த ஒரு கூடைதான்! அதனை வைத்து எல்லாமுமே அப்படித்தானென்பதான போக்கில், நல்லது, தீயது எனப் பேசுவதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய மகளிர்நாள் கூட்டங்களை, தமிழ்ச்சூழலில் கேட்க முடிந்தது. விழிப்புணர்வுமிக்க நல்ல பல தகவல்கள். மகிழ்ச்சி. ஆனால் அவற்றினூடே, போகின்ற போக்கில், பொதுமைப்படுத்தல்களையும் பார்க்க முடிந்தது. ’அமாவாசையில் பிறந்தவன் திருடன்’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏதோவொரு திருடன் அமாவாசையில் பிறந்திருக்கலாம். அதற்காக? 


3/10/2023

டைரி - அருள்மொழி

இலக்கியப் படைப்பின் அடிப்படை என்ன? பேசாப் பொருளைப் பேசுவதும், பொதுப்பார்வைக்குப் புலப்படாதவற்றை பொதுவுக்குக் கொண்டு செல்வதும்தான் அடிப்படை. அதுதான் விழுமியமார்ந்த ஓர் எழுத்தாளரின் செயலாக இருக்க முடியும்.

பொதுவாக, வணிகமய உலகில், வெற்றிக்கான வழிகளென அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டு, அதற்காக ஓட்டத்தில் ஈடுபட்டுப் பொருள் தேடிக் கொள்வது வாடிக்கை. அதில் இலக்கியம் விதிவிலக்கன்று. நிறைய வாசகர்களைச் சென்று சேர வேண்டும், புகழெய்த வேண்டும், பாராட்டுகள் பெற வேண்டும், ஒளிவட்டத்தில் நிற்க வேண்டும், இப்படியான பல ஆசைகளின்பாற்பட்டு, நாங்களும் எழுதுகின்றோமென வரிசை கட்டி நிற்போர் ஏராளம். அதில் சிறுகதை எழுத்தாளர்களும் அடக்கம்.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காக, சொல்லிக் கொண்டே போய் திருப்பமென்கின்ற வகையில் களிப்பூட்டுவதற்காகயெனக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கு இலக்கிய மதிப்பீடு என்பது எதுவுமில்லை.

’டைரி’ எனும் நூலின் ஆசிரியர் இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டவராகத் தெரிகின்றார். அவரது கதைகள் வழமையான பாதையில் பயணித்திருக்கவில்லை. புனைவுக்கதைகளெனக் கருதினாலும்கூட, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் காட்சிகளை அடுக்கிக் கொண்டே போய் விசுக்கென எதிர்பாராத ஒன்றைச் சொல்லிப் பரவசம் ஊட்டுவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட கதைகள் போல இல்லை இவை. சமூகத்தில், சொல்லப்படாத திசையிலிருந்து சொல்லப்படுகின்ற கோணங்களும் உணர்வுகளுமாகப் பயணிக்கின்றன இந்தப் பதினான்கு கதைகளும்.

கடைசியில் முடிச்சவிழ்த்துத் திகில் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கவில்லை இந்தக் கதைகள். நம்மில், நம் வீட்டில் நிகழ்கின்றவற்றை, ஆரவாரமும் கொந்தளிப்பும் கூச்சலுமுமில்லாமல், கடைமடையில் பயணிக்கின்ற ஆற்றைப் போல, தணிந்த குரலில் படர்ந்து கடலினூடே கலப்பதைப் போல மனத்துள் கலந்து போகின்றன கதைகள்; எண்ணற்ற சிந்தனைப் புடைப்புகளோடு. 

புடைத்திருப்பது காளானாகவும் அமையலாம். பெருமரமாகவும் ஓங்கி வளரலாம். அது அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது. காளான்களாக, புடைத்த மறுகணமே இருக்குமிடமில்லாமற்போகுமேயானால், வாசகருக்காக உழைக்க வேண்டியது இன்னமும் இருக்கின்றதெனப் பொருள். மாறாகச் சிந்தனைத் தாக்கம் எழுந்திருக்கின்றதென்றால், படைப்பின் நோக்கம் கைகூடி இருக்கின்றதெனக் கொள்ளலாம். அப்படியான கதைகள்தாம் இவை.

“எதையும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. அவள் கை, தானாக இரசத்துக்குப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது”.

இப்படித்தான் நூலின் கடைசி வரி அமைந்திருக்கின்றது. பிரச்சார நெடியற்ற கதைகள். மெல்லிய கதைகள். விளம்பரத்துக்காய் அலைமோதும் பரபரப்பான உலகில், பரபரப்பற்றதும் சக மனிதரின்பாற்பட்ட மனிதமார்ந்த பொழுதுகளாகவும் இருக்க வேண்டிய பண்பாட்டுக்காகப் பூத்திருக்கும் கதைகள்!


3/08/2023

பெண்கள் நாள்

1909ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள், நியூயார்க் நகரில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னெடுப்பாக ஒரு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதனின்று கிளைத்ததுதான் இன்றைய மார்ச் 8, பன்னாட்டுப் பெண்கள் நாள் என்பது. அதற்குப் பிறகு, ஓட்டுரிமை, கல்வி, தொழில் எனப் பல தளங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டு எண்ணிமத்தளத்தில், அதாவது மின்னணுவியலை அடிப்படையாகக் கொண்ட கணினி, தொழில்நுட்பத்தளத்தில் சமத்துவத்துக்கான வழிமுறைகளைக் கட்டமைக்க அறைகூவல் விடுத்திருக்கின்றது ஐக்கியநாடுகள் சபை.

பொதுவாக, இப்படியான நாட்கள் கொண்டாட்டமாக இடம் பிடிக்கின்றன. கொண்டாட்டத்தின் பொருட்டு வணிகக்கடைகளும் விரிக்கப்படுகின்றன. அது சரியா, தவறா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய பற்றியம்.

நம்மைப் பொறுத்த மட்டிலும், 1909ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அந்த நாளை அடிப்படையாகக் கொண்டு சிறு மாற்றத்தையாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதுதான். பொதுவாழ்வில், தொழிலில் பெரும்வெற்றி பெற்ற ஒரு பெண். கொண்டாடடப்படுவது சரியே. இணையர் தன் காலுறையைக் கொணரச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். மேற்தளத்தில் இருக்கும் அவர் வந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்கின்றார். இப்படியான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். இருவருமே தோற்றிருக்கின்றனர். அவரைக் கொண்டாடுவதால் என்ன பயன்?

பண்பாட்டில், வீட்டு அடுக்களையில் இருந்து துவக்கப்பட வேண்டிய பயணம் இது. காய்கறி நறுக்குவது என்பதாகக்கூட வைத்துக் கொள்ளலாம். அப்படி நிகழும் போது, இவருக்கும் தாம் ஏவலாள், குற்றாள் எனும் எண்ணம் அடிபட்டுப் போகின்றது. அவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு உடல்நலமும் மேம்படும். அண்மையில் கூட, சக ஆண்களைப் பொதுநிகழ்வில் அண்ணா, அண்ணாயெனக் குழைந்து குழைந்து விளிப்பதைச் சாடி எழுதினோம். காரணம், இது, தொடர்புடைய தனிமனிதர்களின் நட்பு குறித்தானது அன்று. பொதுநிகழ்வு என்பதாலே, இது ஒட்டுமொத்த பெண் இனத்தின் மாண்பு குறித்தானது. ஆகவே, பெண்கள் நாளில், டிஜிட்டல் உலகில் இடம் பெறும் இப்படியான சறுக்கல்கள் குறித்து உரையாடுவோம்.

No one can make you feel inferior without your consent. –Eleanor Roosevelt