9/16/2023

வானமே எல்லை, இல்லை, வானத்துக்கு அப்பாலும்


சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார்.

அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள், வானத்தைப் பார்த்தது. கழுகொன்று சாய்ந்து சாய்ந்து சாகசம் செய்து கொண்டிருந்தது. இது நினைத்துக் கொண்டது, “நானும் கழுகாகப் பிறந்திருந்தால்”.

நாம் எல்லாருமே அப்படித்தான். நாமும் ஒரு கழுகாய், புலியாய், சிங்கமாய்த்தான் பிறந்திருக்கின்றோம். ஆனால் நாம் யார் என்பதே அறிந்திராமல் மனத்தடையுடன் வாழ்கின்றோம். அடுத்தவரைப் பார்த்துப் பார்த்து வாழ்கின்றோம். நாம் யார்? நாம் நாமாக வாழ்வதில்லை. 

வானத்துக் கழுகைப் பார்த்துக் கொண்டேவும் இது மெல்ல தன் இறக்கைகளை அடித்துப் பார்த்தது. என்ன அதிசயம்? தம்மாலும் மேல்நோக்கிச் செல்ல முடிந்தது. ஆனால் களைப்பு மேலிடவே தாழவந்து தரையிறங்கிக் கொண்டது. வயோதிகம் காரணம். காலங்கடந்த அறிதல். இளமையிலேயே இது தெரிய வந்திருந்தால்? ஆகவே, இளமையிலேயே உங்கள் ஆற்றலை உணர்ந்து செயற்படுங்கள் என்பதாக மாணவர்களுக்கான எழுச்சி உரைகள் மேற்கொள்ளப்படுவதை எங்கும் காணலாம்.

சரிதான். ஆனால் வானமென்ன, வானத்துக்கு அப்பால் செல்லவும் வயது ஒரு தடை அல்லவே அல்ல. 90 வயது முதியவர் ஒருவர், தன்னந்தனியாக ஓர் அறையில் வாழ்ந்து வருபவர். தட்டுத்தடுமாறி, ஓரிரு சொற்றொடர்களாகத் தம் வாழ்க்கையில் கொண்ட பட்டறிவுகளைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வர பெருங்கூட்டமே அவரைப் பின்தொடரத் துவங்குகின்றது. பின்னாளில், பல்கலைக்கழகங்களுக்குப் பகுதிநேர ஆசிரியராக அழைக்கப்படலானார். தம் 90ஆவது வயதில், Joyce DeFauw என்பார், வடபகுதி இல்லினாய் பல்கலைக்கழகத்தில் படித்து தம் பட்டத்தைப் பெறுகின்றார். தம் 96ஆவது வயதில், Nola Ochs (née Hill) என்பார் கன்சாசு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, கின்னசு சாதனையையும் தமக்கானதாக ஆக்கி,  105 வயது வரை வாழ்ந்து  2016ஆம் ஆண்டில் தம் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கின்றார். இவர்களெல்லாம் பட்டம் பெற்றதனால் என்ன பயனென வினவலாம். ’வானமேகிட வயது தடையேயல்ல’ என்பதனை நிறுவி இருக்கின்றார்கள்தானே?

“I don't dwell on my age. It might limit what I can do. As long as I have my mind and health, it's just a number.” -Nola Ochs

9/05/2023

மாணவர்களுக்கான ஓட்டுநர் உரிமம்

ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்.

அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் தனிப்பட்ட கருத்து. இதற்காக வாங்காத அடிகள் இல்லை, வசவுகள் இல்லை. நிற்க, பேசுபொருளுக்குள் சென்று விடுவோம்.

வட கரொலைனா மாகாணத்தைப் பொறுத்தமட்டிலும், ஓட்டுநர் உரிமத்துக்கான பயணமென்பது பிள்ளையின் பதினான்கு+ வயதிலிருந்தே துவங்குகின்றது. ஆமாம், பிள்ளையின் ஒன்பதாவது வகுப்பின் போது, பள்ளியிலேயே அரசு உதவியுடன் மலிவுக்கட்டணத்தில் ”ஓட்டுநர் பயிற்றுத்தேர்ச்சி வகுப்பு” நடத்தப்படுகின்றது. இதற்கான கட்டணம் $65. இதையே ஒருவர் பள்ளிக்கு வெளியே எடுக்கத் தலைப்பட்டால் கட்டணம் $450 - $700.

இப்படியான தேர்ச்சிச் சான்றிதழுடன் தம் 16ஆவது வயதில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ”தற்காலிக உரிமம்” பெற்றுக் கொள்ளலாம். சில இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு ஓட்டிச் செல்லும் போது, உரிமம் இருக்கக் கூடிய பெரியோர் உடனிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன். இப்படியான ஒன்பது மாத அனுபவத்திற்குப் பிறகு, கட்டுப்பாடுகளற்ற உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் 18ஆவது வயதுத் துவக்கத்தின் போது முழு உரிமம் பெற்றுக் கொள்வர்.

15 - 18ஆவது வயது வரையிலும் இவர்கள் பெற்றோரின் ஓட்டுநர் காப்பீட்டில் பங்கு வகிப்பர். காப்பீட்டுடன் கூடிய தற்காலிக உரிமம்(provisional license) துவங்கிய நாளிலிருந்தேவும் இவர்களது அனுபவக் கணக்கும் துவங்கி விடுகின்றது. இவர்கள் பலகலைக்கழகம் செல்லும் போது, தனி வண்டித் தேவைக்காக காப்பீடு வாங்கும் போது, இவர்களின் காப்பீட்டுத் தொகை மற்றவரை விடக் குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், 3 ஆண்டு அனுபவத்தின் பொருட்டு சலுகை, அனுபவமற்றோருக்கான மேல்வரியின்மை(No Inexperienced Driver Surcharge) என்பனவெல்லாம் காரணம்.

இந்த வழிமுறையில் பங்கு பெறாமல், 17/18ஆவது வயதில் ஓட்டுநர் உரிமம் பெறத் தலைப்படும் போது, பெற்றோரின் காப்பீட்டில் பங்கு பெறாமல், தனிக்காப்பீடு(Inexperienced Driver Surcharge, increased premium, no discount) பெற்றுத்தான் வண்டி ஓட்டியாக வேண்டும். அதன்பொருட்டுக் கூடுதல் பணமும் செலவளிக்கத்தான் வேண்டும். https://www.ncdot.gov/dmv/license-id/driver-licenses/new-drivers/Pages/graduated-licensing.aspx

-பழமைபேசி. 09/05/2023.

9/02/2023

நீ என்னை நினைவுகொள்வது

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் நான் என்னவாக
உனக்கு நான் யார்
என்பதையெல்லாம்
ஏந்திச் செல்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் என்னால் ஏற்பட்ட சுவடு
யாராக நீ இருக்கின்றாயோ அந்த உன்னில் 
நான் வந்துபோன தருணம்
என்பதையெல்லாம்
சுமந்து கொண்டிருக்கின்றாயென்பதுதான்

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
மாமாங்கம் பல
ஆண்டுகள் பல
மைல்கள் பலப்பல
நமக்குள்ளே இடைவெளி ஏற்பட்டிருப்பினும்
உன்னால் என்னைத் திரும்பவும்
அழைத்துக் கொள்ள முடிகின்றதென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நீயும் நானும் மீண்டும்
எதிர்கொள்வோமேயானால்
அடையாளம் கண்டுகொள்ளப்பட
உன்னில் நானாகவே
புகுவேனென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் மரணமே அடைந்திருந்தாலும்
என் முகம்
என் பேச்சு
என் குரல்
என் எழுத்து
உன்னில் மேலிட
என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் என்னை
எப்படியாகவோ
எதற்காகவேனும்
முற்றுமுழுதுமாய்
இழந்திருக்கவில்லையென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் சோர்ந்துசோர்ந்து
என்னில் நானே
தொலைந்து கொண்டிருக்கையில்
உன்னில் நானென்பது
என்னை மீட்டெடுத்துவிடுகின்றதென்பதுதான்!

ஒருவேளை நீ
என்னை மறந்துவிடுவாயெனில்,
நான் என்பதில் கொஞ்சம்
நான் என்பதில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
மரித்தே போகின்றது!
எல்லாரும் மறந்துவிடுகின்ற நாளில்
செத்தே போகின்றேன் நான்!!

-பழமைபேசி

(தாக்கம்: Whistling in the Dark, Frederick Buechner)