12/30/2011

மனுஷ்யபுத்திரனே, தொடர்க!!




அண்மையில், கமலஹாசனின் வணிக இதழ்ச் செவ்விகளை நூலாக்கி இருக்கிறார்கள் என விமர்சனம் எழுந்தது. அதுவும், அந்த விமர்சனம் கடுமையாகவும் இருந்தது. சமூகக் கருத்துகளைத் தெளிக்கும் கலைஞனுடைய சொற்களை நூலாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்? இருபதாண்டுப் பழைய கல்கி, குமுதம் கிடைத்தால் ஒருவித ஆவலுடன் படிப்பதில்லையா நாம்? விமர்சனம் செய்தோர்க்கு இக்காணொலியை காணப் பணிக்கிறேன். இன்னுஞ்சொல்லப் போனால், இது போன்ற பேச்சுகளையும் மனுஷ்யபுத்திரன் நூலாக்க முன் வர வேண்டும்.

பகுத்தறிவாளன் மற்றவர்கள் பொட்டை அழித்த்துத்தான் பகுத்தறிவை நிறுவ வேண்டியதில்லை. மற்றவர்களை அன்போடு பார்த்துத் தம் கொள்கைக்கு வரவேற்க வேண்டும்!!

12/29/2011

இலகான் புயல்

இலகான் புயல்
இன்னுஞ்சிறிது நேரத்தில்
வங்கங்கடற்கரையில்
புறப்பட்டு
பாரசீகவளைகுடா
கருங்கடல்
செங்கடல்
கடந்து
அட்லாண்டிக் பெருங்கடலைக்
கடக்க இன்னும்
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு
குறைவாகவே உள!!

12/28/2011

பிரச்சினை

"ஏங்க... எனக்குப் பிரச்சினையாக் கெடக்கு... பிரச்சினையக் கொஞ்சம் இல்லாமப் பண்ணியுடுங்களேன்?”

“யோவ்... என்னையா பிரச்சினை உனக்கு?”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“என்னயா சொல்றே? ஒரு பிரச்சினையும் இல்லையா... நெம்ப நல்லது... நிம்மதியா இரு அப்ப”

”பிரச்சினை இல்லேங்குறதுதான் பிரச்சினையே எனக்கு”

“செரி அப்ப... அந்த பிரச்சினைய வெச்சி மல்லுக்கட்டு பின்ன?”

“என்னங்க நீங்க... பார்த்தா பெரிய மனுசனாட்ட இருக்கீங்க? எனக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னா இப்படிச் சொல்றீங்களே? அதான் பிரச்சினையே இல்லைன்னு சொல்றேனில்ல? என்னதான் படிச்சுப் பட்டம் வாங்குனீங்களோ? விளங்கலையா உங்களுக்கு??”

“குழப்புறடா நீ! என்ன பிரச்சினை ஒனக்கு??”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“அதான் சொன்னனேடா! பிரச்சினை இல்லத்தானே? நிம்மதியா இரு அப்ப”

“யோவ்... நானே பிரச்சினை எதுவும் இல்லாமப் பிரச்சினையாக் கெடக்குங்றேன்... எழவு, நீயெல்லாம் என்ன படிச்ச நீ?”

“சதக்... சதக்”

12/24/2011

புளிமரக்காடு


நத்தார் நாள் விடுப்பையொட்டி வலையில் தமிழை நுகர்ந்து கொண்டிருந்தேன். நுகர்ந்தவாக்கில் எம்மண்ணில் இருப்பதாய் உணர்ந்ததும், கண்டு கொண்டிருந்த காணொலியை ஆய்வு செய்திடப் பார்த்தால், எம்மண்ணின் சொந்தக்காரன் மா.பிரகாசு. உயிரோடு மண்ணையும் கலந்து சுவாசித்துக் கொண்டிருப்பவன். தமிழுக்காக, தமிழருக்காக ஈகங்களைச் செய்தவன்; செய்கிறவன். கொண்ட கொள்கைக்காய் வாழ்கிறானவன்!!

அழைத்துப் பேசினேன். மனதாரப் பாராட்டினேன். நான் தொலைத்த மண்ணை இலாகவமாய்ப் படம் பிடித்திருக்கிறான். கூடவே, அறமோங்க நறுந்தேன்த் தமிழால் ஊர்ப் பெரியவரைப் பாராட்டவும் செய்திருக்கிறான் அவன். நானும் அவனும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். பிரகாசு, அண்ணனால் செய்ய வேண்டியதை இளவல் நீ செய்கிறாய். நீ வாழ்க! நின் தொண்டு வளர்க!!


12/23/2011

கலக்கமா இருக்கு!

கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

துணிகெல்லாம் துவச்சி
மடிச்சும் வெச்சிருக்கேன்
சமையலறை கழுவி
துடைச்சிம் வெச்சிருக்கேன்
குளியல்தொட்டி ரெண்டும்
கழுவிப் பளபளன்னு ஆக்கியிருக்கேன்
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஊர்தி ரெண்டும் பழுதுபார்த்து
கீலெண்ணெய்யும் போட்டு வெச்சிருக்கு
பாப்பாவோட பள்ளிக்கூடத்து ஆட்களுக்கு
பரிசு நல்லாக் கொடுத்தும் வெச்சிருக்கு
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஆமா; அந்த ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இப்பத்தான் சித்த முன்னாடி பார்த்தேன்
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
ஏது சொல்வாளோ?
என்னென்னு வைவாளோ??
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

12/22/2011

ஓலையக்கா கொண்டையிலே....

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

பாடலைக் கேட்க....

12/20/2011

மயிரணி

”தொந்தி சரிய மயிரே வெளிர நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி” எனத் துவங்குகிறது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் அறுபத்தி எட்டாவது பாடல். மயிர் வெளிற இருப்பவனே என மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்வதை நாம் காண்கிறோம். தற்காலத்தில் நாம் மயிர் என ஒலிக்கவே தயங்குகிறோம். எடுத்துக் காட்டாக, குந்தள மயிரணியை உரித்த அழகு மிகுந்த நல்ல உமாதேவியாரோடு என்பதானது, ”சந்தமலி குந்தள நன்மாதினொடு” என தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியாக, மயிரை அணிப்படுத்துவதையும் அதற்குகந்த சொற்களைச் சுட்டுவதையுமே இப்படைப்பானது நமக்குக் காட்சிப்படுத்துகிறது. 
அரும்பம் (soft sprouting hair)

அளகம்(highlighted hair)

குதறம் (loose and spread)


குந்தளம் ( hair crinkles)

குழலி(folded back into a roll)
குழற்சிகா (folded back into a roll with curly)
கூழாமணி ( who has peacock's tail)
கொண்டை ( rolled knot in a style)


அலரி(form of a cluster-bean)

கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)


கொப்பு (as a whole with a knot)

பூங்கோதை (decorated with flower)

சடாதரவல்லி(who has long roll with a weave)

சிகண்டம்(arranged like peacock tail)

சுருளம்(curly hair)

சுளகுவல்லி (loose and wide plaiting of the hair)

துஞ்சுகுழல்(with multiple roll)

பம்பை(rough and dense hair)


பின்னைமாட்டி(weaving decorated hair)

மிஞ்சுகா (long roll hair) 


பூஞ்சுகா (lock of hair adorned with flower)

பொறுப்பி-1: படங்கள் உதவி கூகுள்

12/19/2011

உதயசூரியன்

தெருமுனையில் வைத்தே பசையை நன்கு தோய்த்துக் கொண்டான். மேற்பக்கத்து இருமுனைகளையும் கைக்கு ஒரு முனையாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படிப் பற்றிக் கொண்டு போவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது என அடிக்கடி சொல்வான் ரொட்டிக்கடை சுப்பு. பற்றிக் கொண்டு இருக்கும் இரு கைகளும் அகலத்தைத் துல்லியமாகக் கடைபிடிக்க வேண்டும். அகலம் நீளுமானால் பசையுள்ள தாள் கிழிந்து விடும். அகலம் குறுகிப் போகும் தருவாயில் மடிப்பு உண்டாகி தாளில் சுருக்கம் விழுந்து போகும். அப்படி விழுந்து விட்டால் கதவில் சரிவர ஒட்டுப்படாது. மிகக் கவனமாக வாசலில் காலை வைத்தான். இலாகவமாய் வேலு வீசிய கருப்பட்டித் துண்டில் சரணாகதி அடைந்தது முன்வாசலில் இருந்த நாய்.

வாசற்படியேறி மேல்பக்கத்து இருமுனைகளையும் கதவில் வாகாய்ப் பதிய, ஒரு அடிக்கு ஒன்னரை அடி நீளமுள்ள மொத்தத் தாளும் கதவோடு அப்பிக் கொண்டது. வலது உள்ளங்கையை தன் வலது குண்டியின் மீது தோய்த்து பசை ஈரமெதுவும் இல்லையெனச் சரிபார்த்த பின்னர் மென்மையாக ஒட்டிய தாளை நேர்த்தியாய் தடவி விட்டுக் கொண்டான். மஞ்சள்தாளில் கருப்பு அலைகளினூடாக செங்கதிரோன் பளபளத்துக் காட்சி அளித்தது. “அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன்!” கத்திக் கூப்பாடு போட வேண்டும் போல இருந்தது. மனம் அவனின்று பிய்த்துக் கொண்டு ஓடி அருகே உள்ள குப்பைமேட்டின் மீது நின்று கூவ முயன்றது. அந்நேரம் பார்த்துச் சட்டையின் பின்புறத்தை இழுக்காமல் இழுத்தான் வேலு.

இன்னும் வேலை நிறைய எஞ்சி இருக்கிறது என உணர்ந்தவன், அவனைப் பின்தொடர்ந்து போனான். வெல்லக்கட்டியைத் தின்று தீர்த்த நாயானது இவர்களைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. கால் பாதங்கள் தரையைத் தொடாதபடிக்கு மெதுவாக நடந்து போயினர். கிளுவ மரத்தில் இருந்த குருட்டாந்தை ஒன்று அலறியது. அந்த அலறல் ஒலியைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டு தெருமுனைக்கு ஓடிப் போயினர் இருவரும்.

“தடிமுண்டமே இங்கெதுக்குடா நிக்கற? வேலி மறப்புக்குள்ளார போலாம் வா”

“செரி மூடீட்ட்ப்போ”

செடிபீடி ஒன்றை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து நன்கு உருட்டிக் கொண்டான். அப்படி உருட்டிக்கொள்வதில் ஏற்படும் சூட்டில் பீடியின் நதநதப்புப் போய் கதகதப்பாக்குள்ளாக்கும் வாடிக்கையது. அந்த பீடியை வாயில் வைத்தபடித் தன் கால்ச்செராயில் இருக்கும் தீப்பெட்டியை எடுக்க முற்படுகையில், அதற்கெனவே தயாராக இருந்த மற்றவன் தனது தீப்பெட்டியால் தீ மூட்டி அவன் வாயருகே கொண்டு போனான்.

“கேனப்பொச்சு, காத்துல அவியுறதுக்குள்ள இழுத்துத் தொலை!”

பீடியை உறிஞ்சி நன்கு உள்ளிழுத்ததில் பீடிமுனை நன்கு கனன்று, பழுத்த ஊசிமுனையாய் மிளிர்ந்தது. தீமூட்டிய கைகளைப் பின்வாங்கலாம் என வேலன் நினைத்த மாத்திரத்திலேயே, புகையைப் பற்றவைத்தவன் முகத்தில் குறும்புச் சிரிப்போடு ஊதினான் சுந்தர்.

“இந்த ஏத்தமசுறுதான ஆகாதுங்றது. எனக்கொரு பீடியக் குடுறா!”

வேலனும் தன் பங்குக்கு ஒரு பீடியை வாங்கிக் கைகளால் உருட்டித் தன்வாயில் வைத்துக் கொண்டு பீடிக்கு நெருப்பு வாங்கத் திரும்பினான். பீடி இழுப்பில் இலயித்து இருந்ததில், இவன் தன்னருகே வருவதை கவனித்திருக்கவில்லை.

“யாரு, உங்கப்பனா வந்து பீடிக்குத் தீ குடுப்பான்?”

வெறுக்கென இவன் பக்கந்திரும்பிய சுந்தர், தன் பீடியை இவனுக்குக் கொடுக்க பீடியும் பீடியும் முத்தமிட்டுக் கொண்டன.

“டே.. இந்த கீகாத்துல பீடி அவிஞ்சி போயிரும். முட்ட வெச்சா மட்டும் பத்தாது. நல்லா வெரசலா இழுக்கோணுமாக்கூ”

“அல்லாந்தெரியுமடி… நீ மூடு”, வேகவேகமாக இழுத்துப் புகையை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவனது பீடியை அவனிடமே கொடுத்தான் வேலு.

கீழ்க்காற்று சிலுசிலுவென மெலிதான தண்மையோடு அடித்துக் கொண்டிருந்தது. ஊருக்கு மேற்கே ஓடும் உப்பாற்றுப் பள்ளத்தின் நீரோடைச் சத்தம் ஒரு சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மாறி மாறி செடிபீடியை இழுத்துக் கொண்டிருந்தனர். கும்மிருட்டாக இருந்தது. இருட்டில் இருந்து அவ்வப்போது மின்னாம்பூச்சிகள் கிளம்புவதும் ஒளி மறைவதுமாக இருந்தது.

“ஊருக்குள்ள கொஞ்சமாச்சி வெளிச்சம் இருக்குதா பாரு. தொப்பித்தலையன் ஒழியணுமடா. அப்பதான் நாட்டுக்கு நாலு நல்லது நடக்கும்!”

“மூடு வாய. என்ற அப்பனைப் பேசிப் போட்டாண்டா அந்த அரணாசலம். அவனைப் பழி வாங்கோணும். அவனூட்டுச் செவுத்தல அவனுக்காகாத உதயசூரியனை வரைஞ்சி, அவம்மூஞ்சீல எச்சியத் துப்புனாப்புல செய்யோணும். அவ்வளவுதேன். தலைவரைப் பத்தி எதனாச்சிம் பேசினாப் பார்த்துக்கோ!”

“செர்றா… வா, வேலையப் பாக்குலாம்”

திண்ணைக்குக்கீழே வைத்திருந்த நுவாக்கிரான் தகரப் பொட்டியில் கரித்தூளைக் கொட்டினான் சுந்தர். பருத்திக்காட்டுக்கு வாங்கிய மருந்துக் கொள்கலம் அது. ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் கால்வாசியளவுக்கு கரித்தூளைக் கொட்டி, ஐந்து லிட்டர் சிம்புசு மருந்து நெகிழிக்கலத்தில் இருந்த நீரைத் தேவையான அளவுக்கு ஊற்றிக் கொண்டான். “டே, அந்த பைக்குள்ள இருக்குற மொன்னை புருசை எடுறா!”. பாவித்துச் சிதைந்த தூரிகை கைக்குக் கிடைத்ததும் நன்கு கலக்கிய கரியநிறக் குழம்பு தயாரானது.

“நெம்ப கெட்டியா இருக்கான்னு பாரு சித்த”

“இல்ல.. கருப்பட்டிப் பாகாட்ட நல்ல பகுனமாத்தான் இருக்குது!”

“செங்காவியுங் கலக்கீட்டுப் போயிர்லாமா? அல்லன்னா, கருப்பு அடிச்சிப்போட்டு வந்து செங்காவி கலக்கி எடுத்துட்டுப் போலாமா?”

“ஒன்னொன்னாச் செய்யலாம். நான் டப்பாவைப் புடிச்சிக்கிறன். நீ புருசுல தொட்டு நல்லாப் பெருசா வரஞ்சுடு. என்ன நாஞ்சொல்றது நல்ல ஓசனைதான?”

“ஆமா, அதுஞ்செரிதான்! வா போலாம்!! புருசையுமு அந்த கருப்பட்டித்துண்டுல ஒன்னையுமு கையிலயே வெச்சிக்கோ. அவனூடு வந்ததீமு வாங்கிக்கிறேன்”

வெந்தயக்கார முனியப்பன் வீட்டுப் புதரில் இருந்து மெதுவாகப் புறப்பட்டு, வெண்ணக்கார கந்தசாமி வீட்டின் பிறவடையில் வந்து நின்று நோட்டம் விட்டுக் கொண்டார்கள். மீண்டும் மெதுவாகச் சென்று, கிளைச் செயலாளர் அருணாசலம் வீட்டுக் கிளுவை மரத்திற்கடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டனர் இருவரும்.

“டே வேலு. நீ மொதல்ல போ. போயி அந்த கருப்பட்டித் துண்டை நாயிக்குப் போட்டு அதோட வாயக்கட்டு. நான் அதுக்குள்ள, இந்த ஊமாத்தாந் தழைய இதுக்குள்ள புழிஞ்சு உட்டுர்றன், அப்பத்தான் காய்ஞ்சவிட்டு அழிச்சாலும் அழியாது”

பதுங்கிப் பதுங்கி சென்ற வேலுவுக்கு காதுகள் இரண்டும் விர்றெனப் புடைத்தது. நெஞ்சு திக்திக்கென அடித்துக் கொள்வது அவனுக்குப் புலப்பட்டது. உடலெங்கும் பின்தங்கி இருக்க ஒருபாதி முகம் மட்டும் பக்கச்சுவர் கடந்து ஒரு கண்ணால் அருணாசலக் கவுண்டர் வீட்டு வாசலைப் பார்த்தான். நாய் மட்டும், வெளிப்புறச்சிவரில் இருந்து ஈரடி தொலைவிலேயே படுத்திருந்தது. மெதுவாக கருப்பட்டி உருண்டைய உருளவிட்டான். கருப்பட்டி மணங்கொண்ட நாய் வாயுதிர்த்து, புணர்ந்து வீழ்ந்த பொதிக்கழுதையாகிப் போனது.

திரும்பவும் சுந்தரிடமே வந்தான். “அந்த அரணாசலம் குப்புறப்படுத்துத் தூங்கறாம் போல இருக்கு. ஆரையுங்காணம் அங்க”

“நல்லதாப் போச்சு. இந்தாபுடி இந்த டப்பாவை”

சுந்தர் இங்கேயே டப்பாவுக்குள் தூரிகையை ஒரு முக்கு முக்கிக் கொண்டான். “டே மாங்காமடையன்டா நீயி. அங்கெங்க போற?”

“வாசலுக்குத்தான்!”

“இங்க வீதிச் செவுத்துல வரஞ்சாத்தானொ அல்லாரும் பார்த்து அவம் பொச்சுல சிரிப்பாங்கோ? இங்கியே நில்லு!”

சுந்தர் ஓவியத்தில் படுகெட்டி. எந்தப் படத்தையும் பார்த்த மாத்திரத்தில் வரையக்கூடியவன். தூரிகையால் நாலே நாலு முக்குத்தான் முக்கியிருப்பான். கடல் அலைகள் எழுவதைப் போலப் பெரிய அளவில், அலையின் இரு எழுச்சியை அடியிலிருந்து உச்சிவரை நெளிவு சுழிவோடு வரைந்திருந்தான்.

“ஏன்டா ரெண்டு கரட்டுக்கும் நடுவாப்புல சூரியன் உதிக்கிற மாதரதானொ வரோணும்? நீ என்னொ ரெண்டு கத்தாழை நிக்கிறாப்புல எதையோ வரைஞ்சு உட்டுருக்குற?”

“அடக் கோமாளி, நீ சொல்றாப்புல வரைஞ்சா அது மறையுற சூரியனாய்டும்டா. பாரு, நம்மூருக்கு மேக்க அல்லாம் மலைகதான இருக்குதூ?”

“ஆமா. அதுக்கு கத்தாழைகளை வரைஞ்சா செரியாப் போயுறுமாக்கூ?”

”இல்லடா. அது கடல்ல எழும்புற அலைகடா.. அலைகளுக்கு நடுவாப்புல உதிக்கிற மாதர இந்த ரெண்டு உச்சிக்கு நடுவுல காவித்தண்ணியில வரைஞ்சு உட்டா செரியாப் போயிரும்”, இருவரும் மாறி மாறி கிசுகிசுத்துக் கொண்டே கருவண்ண வேலைகளை முடித்து விட்டு வெந்தயக்கார முனியப்பன்வீட்டுப் புதருக்குத் திரும்பினார்கள்.

”அருணாசலம் பொண்டாட்டி காலையில வாசல் தொளிக்குறதுக்கு வந்து பாக்கப் போறா. பாத்து என்னென்ன சொல்லி வையிவாளோ?”, இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

”அந்த டப்பாவுலயே போட்டுக் கலக்குனா செரிவராது. கருப்படிச்சிரும். இந்தா, இந்தப் பழைய வாணா சட்டியில காவித்தூளைப் போட்டுத் தண்ணிய ஊத்து. நான் அந்த புருசை மாத்திரம் கழுவிக்கிறன்.”

காவிக்குழம்பும் தயார் செய்யப்பட்டு, ஊமத்தையைக் கரைத்து விட்டார்கள். பதுங்கிப் பதுங்கித் திண்ணையைக் கடந்து கவுண்டர் வீட்டுச் சுவருக்கருகே போனார்கள். நாய் வாலை ஆட்டிக் கொண்டு வந்து அருகே நின்று கொண்டது.

சுந்தர், தூரிகையைப் பட்டையாகச் சுவற்றில் அரைவட்டத்தினை வரைந்து, அதினின்று கிளம்பும் ஐந்து கதிர்களை ஒளிர விட்டான். வேலுவுக்கு எழுச்சி மனத்துள் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து சுந்தர் தூரிகையை காவிக்குழம்புக்குள் முழுதுமாக முக்கி எடுக்காமல், ஒற்றி எடுத்து வேலைப்பாட்டினைச் செம்மையுறச் செய்து கொண்டிருந்தான். உதயசூரியன் மிடுக்காய் ஒளிர்ந்தது. தொடர்ந்து அதன் கீழே, “எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே” என எழுதிவிட்டு, வியப்புக் குறியிடலாம் என எண்ணினான். அதன்பொருட்டுத் தூரிகையில் இருக்கும் மிகுதியான கரைசலை வடித்தெடுக்க, வேலு பிடித்துக் கொண்டிருக்கும் கொள்கலத்தின் விளிம்பின் மீது அழுத்தினான்.

“டமால்’ என அந்தப் பழைய வாணா சட்டியானது கீழேயிருந்த கருங்கற் கூளங்களின் மீது விழுந்து மோதியது. அவ்வளவுதான், முதலில் வேலு கிழக்குப் புறமாகத் தாவினான். அவனைத் தொடர்ந்து சுந்தரும் அதே திசையில் ஓடினான். இருவருக்கும் அடிவயிறு சுண்டி இழுத்தது. டில்லி முற்களுக்குள் புகுந்து ஏரிக்காட்டு இட்டேரியில் ஓடி, வெள்ளக்கோயில் தேவராயன் புழுதிக்காட்டில் வந்து நின்றார்கள். இருவராலும் நிற்க முடியவில்லை. சுருண்டு கீழே விழுந்தவர்கள், மெலிதாகச் சிரிப்பதும் அடங்குவதுமாய் இருந்தனர். அவர்களது மூச்சிறைப்பு நிற்க வெகுநேரம் பிடித்தது.

புழுதிக்காட்டில் ஒருக்களித்துப் படுத்திருந்தவர்களுள், முதலில் கண்ணைத் திறந்து பார்த்தவன் வேலு. காரிருளில் யாரோ வெண்மையைக் கலப்படம் செய்தாற் போன்றதொரு பிரமை. வெகுதூரத்தில் ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் இருந்து பறவைகளின் ஒலி சிறிது சிறிதாய்க் கூடி வருவது போன்ற உணர்வு. “என்றா சுந்தரு இது?”. “அட ஆமாண்டா. கிழக்க ஒதயமாகுதுறா சூரியன்!”

12/14/2011

தோற்றது யார்?

அவையில் நுழைந்தேன்
பணிவாய் அமர்ந்தேன்
வீட்டின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
ஒதுக்கில் இருக்கும் காலணி போல
எனக்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில்!
விட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவேனும்
எனக்கும் முறைவைத்து
வாய்ப்பொன்று கொடுத்தார்கள்
கூற நினைத்ததைக் கூறினேன்
ஏகடியமும் எக்காளமும்
நையாண்டியும் எள்ளலுமாய்
அவை துள்ளியது
தோற்கடிக்கப்பட்ட தொனியோடு!
புன்முறுவல் கொண்டு வெளியேறினேன்
காற்று கட்டித்தழுவியது
நீலவானம் வாழ்த்தியது
வெயிலோன் ஒளி பொருத்தி மகிழ்ந்தான்
தோற்றது யார்?!!

செய்தோற்பு தெரிந்திருந்தும் வைக்கப்படும் வாதங்கள் வீணானது அல்ல! அவை வரலாற்றுப் பதிவுகள்!!

12/12/2011

திரைப்பட விநாடி வினா - பல்லூடக நிகழ்ச்சி

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்ச்சிகளிலும் பல்வேறு பல்லூடக நிகழ்ச்சிகள் இடம் பெறுவது உண்டு. அதில் முதன்மையானது, உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் தயாரித்து வழங்கும் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியாகும். அதற்கு அடுத்தபடியாக, நண்பர் பொற்செழியன் குழுவினரின் தேனீ எனும் தலைப்பில் இடம் பெறும் சிறார்களுக்கான பல்லூடகப் புதிர்ப் போட்டியும் இடம் பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தினர் அண்மையில் நடத்திய தமிழ்விழா ஒன்றில், களிப்பூட்டும் பல்லூடகத் திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் அண்ணன் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள்.

இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சித் தயாரிப்பில் அவர் ஈடுப்பட்ட தருணத்தில் அவருடன் அளவளாவும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிட்டியது உண்டு. இரவு பகல் என்று பாராது, விடிய விடிய சங்ககாலத்து நூல்களைப் படித்து, வெகு முயற்சிக்கிடையே வினாக்களைத் தெரிவு செய்வார். வினாவைத் தெரிவு செய்த பின்னர், அதனை நயம்படவும் சுவைபடவும் திரையில் விடுப்பது பற்றிப் பல ஆய்வுகள் நடத்தி திறம்பட வடித்தெடுப்பார் அவர். நகர்ச்சில் ஒன்றுக்கு இருபது மணி நேரம் முதல் நாற்பது மணி நேரம் வரையிலும் செலவாகும் என்பார்.

தானே தேவையான தொழில்நுட்பக் கூறுகளைப் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைத் தமிழின்பால் ஈர்ப்பது எப்படி எனச் சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதன் விளைவுதான், இப்புதுமையான பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சியாகும்.

அந்த வகையில், அண்மையில் இடம் பெற்ற திரைப்பட விநாடி வினா நிகழ்ச்சியில் இடம் பெற்ற வினாக்கள் நாற்பத்து ஐந்தாகும். இந்த 45 வினாக்களில் உங்களால் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இதோ, இக்காணொளிகளைக் கண்டு களித்து உங்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.



தயாரிப்பு: உயர்திரு.நாஞ்சில் பீற்றர்
உதவி: தமிழ்மணம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை

காணொளியின் மூலக்கோப்புகள் (multimedia files such as .ppt, audio files, video files, images etc, etc) வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழால் இணைந்தோம்!

12/11/2011

சுவர்க்கோழி


உறக்கம் கலைந்தேன்
அடுக்களையில் எதையாவது
உருட்டிக்கொண்டிருக்கும் மனையாள்

இருப்பது அனைத்தும் அறிந்து
பிறர் அறியாததை அறியவைக்க
சதா எதையாவது
மாய்ந்து மாய்ந்து
படித்துக்கொண்டிருக்கும் மூத்தவள்

கைக்கணினி கேட்டு
அழுது அடம்பிடித்து
அழுதுகொண்டிருக்கும் அடுத்தவளென
யாருமில்லா வீட்டின்
சுவர்களை வெறித்துப்பார்க்க
எக்காளமாய்ச் சிரிக்கிறது சுவர்க்கோழி!

12/09/2011

குவளப்பழம் (Apple)

இந்தக்குளிர்ல தோடம்பழம், முலாம்பழம், குவளப்பழம்னு தின்னுகிட்டு இருந்தா சீதளம் பிடிக்காதான்னு கேட்டு ஒரு நிலைக்குறிப்பு பதிஞ்சிருந்தேன். பயபுள்ளைக, அறுபது எழுபது வயதுள்ள பெரியவர்னு என்னை நினைச்சதும் அல்லாத, இவை எல்லாம் நாடோடிச் சொற்கள்(colloquial)னு வேற சொல்லிட்டாய்ங்க. தமிங்கலமற்ற தமிழ்ல பேசினாலே வயசு ஏறிப் போகுது?! இஃகி இஃகி!! இந்த பழமைபேசிங்ற பேரை வேற தவறுதலா புரிஞ்சிகிடுறாய்ங்க?!

தமிழுக்கு நேர்ந்த சோதனையப்பா, சோதனை! தமிழில் இருக்கிற இடுகுறிப் பெயர்கள் அனைத்தும் கிராமத்தான் கண்டெடுத்த முத்துகளே!! சரி விடுங்க. நாட்டு நடப்பு அப்படி. நண்பர்களைக் குறை சொல்லித் தப்பில்லை!!

அரத்திப்பழம்/குவளப்பழம்
Apple

சருக்கரை பாதாமி
Apricot

வெண்ணைப்பழம்
Avocado

வாழைப்பழம்
Banana
பஞ்சலிப்பழம்
Bell Fruit
அவுரிநெல்லி
Bilberry

கருநெல்லி
Blackberry
கத்தரிநெல்லி
Blueberry
கெச்சி
Bitter melon
File:Bittermelloncloseup.jpg
மஞ்சள் முலாம்பழம்
Cantaloupe
முந்திரிப்பழம்
Cashewfruit
சேலாப்பழம்
Cherry
சீமையிலுப்பை
Chickoo 

கடாரநாரத்தை
Citron
நாரத்தை
Citrus aurantifolia
கிச்சிலிப்பழம்
Citrus aurantium
மஞ்சநாரத்தை
Citrus medica
தோடம்ப்ழம்
Citrus reticulata
File:Mandarina.jpg

சாத்துக்கொடி
Citrus sinensis
Fil:Citrus sinensis.jpg
குருதிநெல்லி
Cranberry
கெச்சி
Cucumus trigonus

சீத்தாப்பழம்
Custard apple

பேயத்தி
Devil fig

நெல்லிக்காய்
Gooseberry

கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Grape

பம்பரமாசு
Grapefruit


கொய்யாப்பழம்
Guava

பலாப்பழம்
Jackfruit

நாவல்பழம்
Jambu fruit
நாகப்பழம்
Jamun fruit

பசலிப்பழம்
Kiwi

விளச்சிப்பழம்
Lichee

மாம்பழம்
Mango fruit

முசுக்கட்டைப்பழம்
Mulberry

அரபுக் கொடிமுந்திரி
Muscat grape

நரந்தம்பழம்
Orange

பப்பாளி
Papaya

குழிப்பேரி
Peach

ஆல்பக்கோடா
Plum

உலர்த்துப்பழம்
Prune
புற்றுப்பழம்
Raspberry

செம்புற்றுப்பழம்
Strawberry

தேனரந்தம்பழம்
Tangerine

குமட்டிப்பழம், தர்பூசணி
Watermelon
File:Watermelons.jpg

விளாம்பழம்
Wood apple

வெள்ளரிப்பழம்
Melon