Showing posts with label கவி காளமேகத்தின் தாக்கம். Show all posts
Showing posts with label கவி காளமேகத்தின் தாக்கம். Show all posts

11/05/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 10

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு வாரமா நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்'ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல, நாம அடுத்து பாக்கப் போறது சுழிகுளம். சுழிகுளம்ங்றது ஒரு பாட்டை, வரிக்கு எட்டெழுத்தா நாலு வரி எழுதி, மேல இருந்து கீழ படிச்சாலும், கீழ இருந்து மேல படிச்சாலும் அதே அர்த்தத்துல வர்ற பாட்டு.

வழமையா, என்னோட மகளை வெச்சு பாட்டு எழுதுவேன். ஆனா, இன்னைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவமான நாள். அதாவது அடிமை இனமாய் இருந்து, தளைகளை ஒடச்சு எறிஞ்சு வல்லரசையே ஆட்சி புரியுற அளவுக்கு மனித நேயம் வளர்ந்த நாள். கடைக்கோடி மனுசனுக்கு மகனாப் பொறந்து, ஆதவனா ஒசந்து இருக்குற ஒபாமாவுக்கான பாட்டுதான் இன்றைய சுழிகுளப் பாட்டு.

காலமறி செயல்நீ
நேயமது கொள்நர்
முயல்வ துறுநர்
திருவழி ந்துமாயா!

பொருள்: காலமறிந்து செயல்பட்டு, மனித நேயம் கொண்டு, முயற்சிதனை உற்று, மாந்தனைய மக்களால் வழிமொழியப் பெற்று, ஆக்கம் கொண்டனையே!

9/02/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 8

ஓரெழுத்து நடையில் ஓரங்க நாடகம். . . . . . . . . . .

"மீ"

"வா"

"பை"

"வை"

"ஊ"

"து"

"சீ"


"போ"

வணக்கம்! நாம கவி காளமேகத்தின் தாக்கங்ற தலைப்புல, சித்ரகவி வகைகள்ல பல தரப்பட்ட கவிதைகள் எழுதுற முயற்சி தொடர்ந்துட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைன்னா, அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா மேலும் சௌகரியமா இருக்குங்றது, எம்மோட தாழ்மையான எண்ணம். தினமும் பாட்டுகளையே பாத்துட்டு வந்தா சலிப்பா இருக்கும்னு இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா, ஓரெழுத்து ஓரங்கநாடகம்.

ஆமாங்க. அந்தக் காலத்துல எல்லாம், தமிழ்ப் புலவருங்க சத்திரம், கோயில், அரசவை இந்த மாதிரி பொது இடங்கள்ள ஒன்னு கூடும் போது, அவங்களுக்குள்ள பலவிதமான இலக்கியப் போட்டி வெச்சி, போட்டி போடுவாங்களாம். அந்த வகைல இதுவும் ஒரு வகை. ஒருத்தர் ஓரெழுத்து நாடகம், ஓரெழுத்துப் பாட்டு இப்படி சொல்ல, அடுத்தவர் அதுக்கு உண்டான அர்த்தத்தை சொல்லணும். சுவராசியமா இருக்குமாம். அது மட்டும் இல்லைங்க, கூடி இருக்குற மத்தவங்களும் ஆர்வமா கலந்துக்குற அளவுக்கு இலக்கிய ஞானம் இருந்ததுன்னும் சொல்லுறாங்க.

சங்ககாலத்துல, தமிழ் மொழி பேசுறவங்க எண்ணிக்கை வெறும் பதினஞ்சுல இருந்து இருவது இலட்சம்னு ஒரு யூகததுல சொல்லுறாங்க. அப்பவே செந்தமிழைப் பின்னு பின்னுனு பின்னி இருக்குறாங்க பாருங்க. சரிங்க, இப்ப மேல சொன்ன ஓரங்க நாடகத்தோட உரையப் பாக்கலாங்க:

மீ: மேன்மையானவரே, உம்மைக் காண ஓடோடி வந்தேன். (மீ: மேன்மை)

வா: வாருங்கள், உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(வா: வாருங்கள்)

பை: இதோ "பை". இதில் உங்களுக்குப் பொன்னும் பொருளும் அரசர் கொடுத்து அனுப்பி உள்ளார்.

வை: அங்கு வையுங்கள். மிகவும் உவகை கொள்கிறேன்.

ஊ: பசியாற, ஊண் உளதா? (ஊ: ஊண், உணவு)

து: உண்ணுங்கள். உமக்கு உபசரிப்பது எம் பாக்கியம்.(து: உண்டல்)

சீ: நித்திரை வருகிறது! உண்டதால் நித்திரை கொள்ள இருப்பிடம் செல்ல வேண்டும். (சீ: நித்திரை)

போ: தாராளமாகப் போகலாம். உங்கள் சித்தம், என் சித்தம்.

ஒரு எழுத்துல இவ்வளவு அர்த்தம் இருக்கானு யோசிக்கக் கூடாது. அங்க அசைவு(body language)களோட, அந்த ஒரு எழுத்துக்கான பொருளையும் சேத்துப் பாக்கணும். அப்படிப் பாக்குறப்ப, இந்த ஓரங்க நாடகம் முழுமையா இருக்கும், குடுத்து இருக்குற உரைநடையும் பொருந்தும்.

(.........இன்னும் வரும்........)

8/30/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 7

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல நாம அடுத்து பாக்கப் போறது மாலை மாற்று! "ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி!". அதாவது கடைசி எழுத்துல இருந்து திரும்பி படிச்சாலும் அதே பாட்டு வரணும். அதாவது மணி மாலையை இட வலமாப் போட்டாலும், வல இடமா மாத்திப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கு இல்லீங்களா? அது மாதிரிதான் இதுவும். இட-வலம், வல-இடம்னு எப்படிப் படிச்சாலும் ஒரே பாட்டு வரும். வழக்கம் போல எம்மோட செல்ல மகளை மனசுல இருத்தி, மாலை மாற்று அடிப்படைல எழுதினதுதான், மேல சொன்ன பாட்டு.

பொழிப்புரை:
வா - வருவாய்
பாடு - பாடு
பா - பாட்டு
மா - சிறப்பு
ஆயா - காப்பவள்
நீ - நீயே
நீ - நீ
யாம் - யாங்கள்
மா - மேன் நிலை
பாடு - பாடு
பா - அழகு
வா - வருவாய்

கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!

இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க

(.........இன்னும் வரும்........)

8/28/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 6

பா      வா      மை      வை,
நீ       மீ          ஊ         ஈ,
வீ      மோ      கோ      போ,
தீ      தா        ஐ       ஓ!

வணக்கம்! மேல நான் எழுதினது பாட்டுங்க!! "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல பல தரப்பட்ட வகையிலான பாட்டு எழுதிட்டு வர்றோம். நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைனா அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா வசதியா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். மேல சொன்னது ஓரெழுத்துப் பாட்டுங்க. இதுவும் சித்திரக்கவி வகையச் சேந்ததுதாங்க. வழக்கம் போல, செல்ல மகளை மனசுல இருத்தி எழுதினதுதாங்க இதுவும்.

பொழிப்புரை:
பா : அழகே
வா : வா
மை : கண்மை அல்லது பொட்டு
வை : இட்டுக் கொள்
நீ : நீ
மீ : உயர்
: அன்னம் அல்லது உணவு
: கொடு /தானம்
வீ : மலர்
மோ: முகர்தல்
கோ : இறைவன்
போ : செல்
தீ : இனிமை
தா : கொடு
: அச்சம்
: ஒழி அல்லது தவிர்

கருத்துரை: அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக!

பொருள் தர வல்ல ஓரெழுத்துகள் நிறைய உள்ளன. பின் வரும் காலங்களில் அவை பற்றி விபரமாக அலசுவோமாக!


8/27/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 5

"சிலேடை நயம் இல்லாம, கவி காளமேகத்தோட தாக்கம் இவனுக்கு எப்படி வரும்?". இப்படிக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்கையா, கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்படியான பொறகு, நாம சிலேடைல பாட்டு எழுதித்தான ஆகணும். சரி, அந்த வகைல எளிதான சொல்லுகளை வெச்சு எழுதின, இரட்டுற மொழிதல் (சிலேடை) பாட்டு ஒன்னைப் பாக்கலாங்க.

சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி
மேனித் தளிர்
மான் மகவு மேஅது!

முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!

இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!

(இனியும் வரும்....)

8/25/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 4

கவி காளமேகம் எல்லா விதமான கவிதைகளையும் எழுதுவதில வல்லவர். அவருடைய தாக்கம் நம்மளையும் இந்த முயற்சிக்கு தள்ளி விட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய மூணு பதிவுகளைப் படிச்சுட்டு இந்த பதிவைப் படிச்சீங்கன்னா மேலும் பயனுள்ளதா இருக்கும். சித்திரக் கவியில மெல்லினப் பாடல், இடையினப் பாடல், வல்லினப் பாடல், நீரோட்டகம், ஒட்டியம் பாத்தாச்சு. அந்த வகைல இப்ப பாக்கப் போறது கோமூத்திரி (ஆநீர் நடை). பாட்டுல முதல் அடிய மேலயும், அடுத்த அடிய கீழயும் எழுதிட்டு, ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து மேலடியிலயும் கீழடியிலயும் படிக்கும் போது அதே அடி வரணும். இப்ப நீங்க மேலயும் கீழயும் ஒரு எழுத்து விட்டு எழுத்துப் படிக்கிறது ஒரு ஆ(மாடு) நடக்கும் போது சிறுநீர் கழிச்சுட்டுப் போனா, தரையில எப்படி இருக்குமோ அந்த சாயல்ல இருக்கும். சிரிக்கப் படாது, சரசுவதி கண்ணைக் குத்தீரும்! ஆம்மா... சொல்லிட்டேன்!! அதனால தான் இந்த வகைக்குப் பேரு கோமூத்திரி (கோ + மூத்திரம்). வழக்கம் போல என்னோட செல்ல மகளை மையமா வெச்சு ஆநீர் நடையில ஒரு கவிதை.

புகழும் வாக்கும்
பெற்று விடு!
நிகழும் போக்கும்
உற்று விடு!!

வீடு வாழ
நல்லது செய்து விடு!
நாடு வாழ
வல்லது உய்து விடு!!

வீட்டைக் காக்கப்
பூட்டைப் போடு!
நாட்டைக் காக்கப்
பாட்டைப் பாடு!!


பொருளுரை: செல்ல மகளே, புகழையும் உண்மை பேசும் வாக்கையும் கொண்டு, பின் இப்போது இருப்பது போலவே நல்லதொரு நிலையை எப்போதும் அடைந்து விடு. வீட்டார் நல்லபடியாக இருக்க நல்ல காரியங்களைச் செய்தும். நாடு நல்லபடியாக இருக்க வலிமை பெற்றும் இருப்பாயாக!. மேலும் வீட்டைப் பாதுகாக்க நல்லதொரு பூட்டைப் பூட்டுவது போல் நாட்டைப் பாதுகாக்க எழுச்சி மிக்க பாட்டைப் பாடு.

(இனியும் வரும்....)

8/24/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 3

வணக்கம்! நீங்க இதுக்கு முந்தைய பதிவான "கவி காளமேகத்தின் தாக்கம் - 2 "ங்ற பதிவைப் படிச்சுட்டு வந்தா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். ஏற்கனவே அதை படிச்சிட்டீங்கன்னா, மேல படியுங்க! சித்திரக் கவி வகைல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம். அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக மட்டும் தனியாவோ கூட்டெழுத்தாவோ சொல்லுல வர்ற மாதிரிப் பாடினா, உதடு ஒட்டியோ குவிஞ்சோ வரும்ங்க. இப்ப வழக்கம் போல, என்னோட மகளை மையமா வெச்சி எழுதின ஒரு ஒட்டியப் பாட்டு:

துறுதுறு சுறுசுறு பொம்மி குறுபொம்மு!
கொடும் ஊழ், ஊறு வடுவும் மவ்வும் பேரும்!!
மதுவும் சூதும் சுடுசுடு சூடு; ஒவ்வாது!
பாகுமுறுவும் ஊணும் உடுப்பும் உறு!
தொழு ஒரு பொழுது, பெறு ஓதும் பேறு!


பொருளுரை: "துறு துறு" என இருக்கும் சுறு சுறுப்பான, அழகான என் மகளே! கொடுமையானது என்பது மனத்தில் தீங்கு நினைப்பதும், அதனால் பெயர் கெடுவதும். மதுப் பழக்கமும் சூதாடும் பழக்கமும் மிகவும் கொடியது. தீயைப்போல் சுட்டுவிடும், அவை உனக்கு ஆகாது. கரும்புப்பாகுவைப் போன்ற இனிமைப் புன்முறுவல், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியனவற்றை நீ எப்போதும் உடையவளாவாயாக! மேலும் தினமும் ஒரு முறையாவது இறைவனைத் தொழும் பாக்கியம் நீ பெறுவாயாக!

(இனியும் வரும்....)

கவி காளமேகத்தின் தாக்கம் - 2

கொஞ்ச நாளைக்கு முன்னாடி "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல இடையினம், மெல்லினம், வல்லினம் தனித்தனியா அமைஞ்ச மாதிரி பாடல் எழுதி பதிய வெச்சு இருந்தேன். நல்ல வரவேற்பு! அதன் தொடர்ச்சியா இப்ப இந்தப் பதிவு. கவிதைகள்ல ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவின்னு நாலு வகை இருக்குங்க. புத்தம் புதுசா, யாருமே இது வரைக்கும் பாடாத ஒரு பொருள்ல, பாடச் சொன்ன உடனே பாடினா அது ஆசுகவி. இசை, இனிமை, உவமை, உவமேயம்னு பலதும் கொண்டு பாடினா அது மதுரகவி. ஒரு சித்திரத்துல எப்படி ஒன்னு ஒன்னையும், பாத்து பாத்து, எது எது, எங்க வருமோ அது மாதிரி ஒரு ஒழுங்குல சொற்களை வெச்சுப் பாடினா அது சித்திர கவி. பலதும் கொண்டு பல வடிவங்கள்ல சொற்களை அமைச்சுப் பாடினா அது வித்தார கவி. இதுல உட்பிரிவுகளும் இருக்கு. சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு. அதுல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம்.

இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:

அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!


பொருளுரை: அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன்.


மேலதிகத் தகவல்: பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம். சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.

(இனியும் வரும்....)

8/21/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 1

...ச்சும்மா, எல்லாப் புலவர்களும் வல்லினம்(க,ச,ட,த,ப,ற), இடையினம்(ய,ர,ல,வ,ழ,ள), மெல்லினம்(ங, ஞ, ந, ண, ம, ன)னு பல விதமா போட்டுத் தாக்கி இருக்காங்களே.... நாமளும் பொழுது போகாத இந்த நேரத்துல அதை மையமா வெச்சி, எதனாச்சும் கிறுக்குவோமே?! ன்னு நினைச்சேன். அப்ப பாருங்க, பெத்த பொண்ணு தூங்கி எழுந்து "அப்பா"ன்ட்டு ஓடி வந்தா. அப்புறம் என்ன, அவளை வெச்சே எதோ எழுதி இருக்கேன்.

மெல்லினத்துல மெதுவா மென்மையா ஆரம்பிச்சு, அப்புறம் இடைப்பட்ட வாக்குல வாழ்த்துற மாதிரி வாழ்த்தி, கடைசியா வல்லினத்துல வலுவா புத்திமதி சொல்லுற மாதிரி எழுதி, இல்ல இல்ல, கிறுக்கி இருக்கேன்.

மௌனமணி யாம்! நன்னி யாம்!!
நின்நன்மனம் யாம்! நின்நும்மே யாம்!!
எம்மனம்நீ! ஞானம்நீ!! நாணம் நீ!!!
மினன்மின்னி மானம்நீ! மாமணி மா!! (மெல்லின வெண்பா)

வாயார ரருளுரை யுரைய வல்லவரும்
வாழுரை யுரைய வேல்விழியா ளைவெல்ல
வருவார் யாரோ? வரவுவழிய விழியொளிர்
வாழ்வு வாழிய, வாழிய வாழியவே! (இடையின வெண்பா)

கடுகடு தடு கிடக்குது பாடு,
பகடற கசடற தோடக் கேடு!
சிறுபாதை தேடா, தப்புச் செப்பா,
தசபதி துதி தீதது சாடாது!!
(வல்லின வெண்பா)


பொருளுரை:
மௌனசாமியின் மைந்தன் மணியாகிய யாம் உம்மைப் பெற்றதில் இறைவனுக்கு நன்றிக் கடன்பட்டோம். உமது அன்பைப் பெற்றவனும், உமது நன்மை ஒன்றையே நோக்குக்கிறவனுமே யாம். எம்மனதில் குடி கொண்டு உள்ளவளும், அறிவும், வெட்கிப் புன்முறுவல் பூக்கும் அழகுடையவளும், குலம் போற்ற வந்தவளும் நீ. நீ மாமணி போல் வாழ்வாய்.

அன்பாய் நீயிருக்க, வாழ்ந்த வல்லமையுடைய பெரியோர் உன்னை வாழ்த்த, அழகிய கண் கொண்ட உன்னைத் துன்புறுத்த யாரும் வரார். வளம் பொங்க, ஒளி மயமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

எத்தகைய கடுமையான இடர் வந்தாலும் உண்டாகும் கோபத்தை தணித்துக் கொள்; வீண் பெருமைக்காகவும் தவறானதுக்காகவும் செய்கிற செயல்களை விட்டொழி; எந்தவித துன்பமும் உன்னை அண்டாது ஓடிவிடும். மேலும் குறுக்கு வழியில் பொருள் தேடாமலும் தவறாக எதையும் பேசாமலும் இருந்து, பத்து அவதாரங்கள் கொண்ட திருமாலை வணங்கி வருகிறபட்சத்தில் தீங்கெதுவும் உன்னை அண்டாது.

(.....இல்ல, இவனுக்குக் கொஞ்சம் முத்தித்தான் போச்சோ?!.....)