5/30/2026

பேரவையும், மில்லியன் டாலர் நிதியும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கென்று உடன்பயணிக்கும் தன்னார்வலர்கள் நிறைய உண்டு. கூட்டங்களுக்கு வராமல் இருக்கலாம், விழாக்களுக்கு வராமல் இருக்கலாம், ஆனால் பேரவையில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர்; பேரவை ஆர்வலர்களுடன் தொடர்பில் இருப்பர். பேரவையின் மீதான பற்று என்றால் பற்று. போதை என்றால் போதை. அது விவாதத்துக்கு உட்பட்டது.

பேரவையிடம் இருக்கும் தரவுகளைக் காட்டிலும், தன்னார்வலர்கள் சிலரிடம் இருக்கும் தரவுகள் நிரம்ப. பேரவையின் செயற்குழுவுக்கு வருவர் போவர். ஆனால் இந்தத் தன்னார்வலர்கள் எப்போதும் போல இருந்து கொண்டே இருப்பர். வரும் செயற்குழு, ஆவணங்களைப் பேணுவதில் அவ்வளவு நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்; காரணம், அவர்கள் தற்காலிகர்கள். மேற்கூறப்பட்ட தன்னார்வலர்கள் நிலையானவர்கள்.

மில்லியன் டாலருக்கான அத்தனை நிகழ்தேதிகள், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உண்டு. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், 2024 தேர்தலில் மில்லியன் டாலர் காலவரிசைப்படம் உருவாக்கப்பட்டு, பரப்புரைக்காகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய செயற்குழுக்களின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மையில், ஆவணப்படுத்துதலில் பெரும் ஓட்டை. அதை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டோம். தேர்தலில் ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்றது வரலாறு.

பேரவையின் தன்னார்வலர் ஒருவர் பேரவைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமெனச் செய்த செயற்பாடுதான் அது. எவரும் மாற்றுக்கருத்துக் கொள்ளவே முடியாது. இல்லையானால், அப்பணத்தைப் பெற்று அப்படியே தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்து விளம்பரங்களைப் பெற்றிருந்திருக்கலாம் வெகுசுலபமாக. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம் பேரவையின் மீதான அக்கறை.

கொடைப்பணம், ”கோவிட் தொற்றுநிதி” எனும் சிட்டைப்பெயருடன் கையளிக்கப்பட்ட பணம். அப்படியான சிட்டைப் பெயர் கொண்டிருப்பதால், அதற்கு மட்டுமேதான் செலவிடப்பட்டாக வேண்டுமாயென்றால் இல்லை. அதற்காகச் செலவிடப்பட்டு, எஞ்சியதை எந்தவொரு இலாபநோக்கற்ற நிறுவனமும் பிறிதொரு அறச்செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம் அதனை அனுமதிக்கின்றது. இவர்களின் நோக்கம், கொஞ்சத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைப் பேரவைப் பணிகளுக்கு என்பதாக இருந்திருக்கின்றது. அதற்கான ஒப்புதல்மடலும் பெறப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டுப் பணத்தை நீங்கள் எப்படிக் கைக்கொள்ளலாமென்பதான விமர்சனம். தவறில்லை. அதிலும் ஒரு தர்க்கம் இருக்கின்றது. முறைப்படி மறுமொழியலாம். அல்லது, தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிடலாம். அதற்கு யார் பொறுப்பு? அடுத்து வந்த செயற்குழுதான் பொறுப்பு. விடுத்து, பணத்தைப் பெற்றுக் கொடுத்தவரைத் தொடர்ந்து கிண்டிக்கொண்டிருப்பது அநீதி.

பெற்றுக்கொடுத்தவர் குறித்து நாங்கள் செய்யாத கிண்டலில்லை. கேலியில்லை. பேசாத பேச்சில்லை. காரணம், அமைந்த செயற்பாடுகள். “எங்களுக்கு ஒரு ஃபோன் செய்திருந்தால் போதும், கொண்டாடப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்போம். சேர்க்கை சரியில்லை போல. தவறாக வழிநடத்தப்படுகின்றார்” என, கேலி கிண்டல் விமர்சனம் செய்த அளவுக்கு நிகராக, அக்கறையின்பாற்பட்டும் பேசியிருக்கின்றோம். பரிவும் கொண்டிருந்திருக்கின்றோம்.

காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். ஒரு பெரும்பணத்தை ஈட்டியும் கொடுத்துவிட்டு, சமூகத்திடம் நொம்பலமும் பெற்றுக் கொள்வதெல்லாம் முதிர்ந்த சமூகத்தின் அழகாக இருக்க முடியாது. எனக்கு அவருக்குமான உறவென்பது இதுதான். இதை நான் தமிழின்மீது ஆணையிட்டு என் பிள்ளைகளின்மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன். 15 விநாடிகள். 2025 விழாவில் பேசியதுதான் முதன்முறை. தொழில்முனைவோர் மாநாட்டு நாள் அது. “என்ன கோட் சூட் போடலையா?” “வணக்கங்க. வர்ற அவசரத்துல ஒரு சூட்கேசையே தவறவிட்டுட்டு வந்துட்டன்”. சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான், இந்த மணித்துளி வரையிலும் எங்களுக்குள்ளான உறவென்பது தொடர்பென்பது இவ்வளவுதான்!

பேரவையின் வசம் இருக்கும் அந்த வைப்புநிதிக்கு, அவர் பெயரை வைக்க வேண்டும். அல்லது அவர் பரிந்துரைக்கும் பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும். தற்போது அவர் செயற்குழுவிலும் இருக்கின்றார். விரைவில் பொறுப்புக்காலம் முடிவுக்கு வரவிருக்கின்றது. சிறப்புகள் செய்யப்பட்ட விடைபெறலாக அது அமைந்தால் அது நமக்குப் பெருமை!

𝐀 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐫𝐚𝐢𝐬𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 𝐜𝐚𝐧 𝐞𝐜𝐡𝐨 𝐟𝐚𝐫𝐭𝐡𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝 𝐰𝐡𝐢𝐬𝐩𝐞𝐫𝐬 𝐨𝐟 𝐚𝐠𝐫𝐞𝐞𝐦𝐞𝐧𝐭.

-பழமைபேசி.

5/26/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐝𝐮𝐜𝐢𝐚𝐫𝐲 𝐃𝐮𝐭𝐢𝐞𝐬

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற ஒரு முக்கிய இலாப நோக்கற்ற அமைப்பின் இயக்குநராகவோ  அல்லது பொறுப்பாளராகவோ செயல்படும்போது, சட்டப்பூர்வ, அறநெறி சார்ந்த கடமைகள் மிக அதிகம். இதனை ஆங்கிலத்தில் Fiduciary Duties (நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகள்) என்று அழைப்போம். இந்தக் கடமைகளின்படி, ஒரு இயக்குநர் (Board Member) முக்கியமாக என்ன செய்யக்கூடாது என்பதை மூன்று முதன்மைக் கோட்பாடுகளின் கீழ் பின்வருமாறு பிரிக்கலாம்:

தன்முனைப்பு, தன்விளம்பரமின்மை

அமைப்பின் நலனைத் தவிர்த்து, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகச் செயல்படக் கூடாது. தன்னல முரண்பாடுகளை (Conflicts of Interest) மறைக்கக் கூடாது: உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ நிதி ரீதியாகவோ அல்லது தகுதி ரீதியாகவோ நன்மைதரும் எந்தவொரு ஒப்பந்தம், வாக்கெடுப்பு  தேர்விலும் நீங்கள் தலையிடவோ அல்லது அதை மறைக்கவோ கூடாது. (எகா: தன் சங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, பொறுப்பளித்தல் போன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது)

தன்-வணிகம் செய்யக்கூடாது. உங்கள் பொறுப்பினைப் பயன்படுத்தி முறையற்ற பயணப் படிகள், கட்டணத் திருப்பிச் செலுத்தல்கள் அல்லது அமைப்பின் வளங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தக் கூடாது. (எகா: பேரவையின் மின்னஞ்சல்களைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது குற்றம்)

அமைப்பின் இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், வர்த்தக முத்திரைகள், துணைக்குழுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த அமைப்புக்குச் சொந்தமானவை. அதை ஒரு தனிநபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட அணியினரோ தங்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை உடையது எனக் கோரக் கூடாது. (எகா: வாட்சாப் குழுக்கள் அமைப்பின் வசம் ஒப்படைக்காமல் இருப்பது, TamilER முதலானவற்றை தம் அணிக்கு மட்டும் ஏதுவாகப் பயன்படுத்துதல் முதலானவை குற்றம்)

பொறுப்புக் கண்காணிப்பு

அமைப்பின் செயல்பாடுகளைக் கவனத்துடனும், விழிப்புடனும் கண்காணிக்க வேண்டும். அதில் கவனக்குறைவு இருத்தல் கூடாது. கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது, நிதிநிலை அறிக்கைகளை முறையாகப் படித்துப் பார்க்காமல் இருப்பது, அல்லது பெரிய திட்டங்களுக்குக் கண்மூடித்தனமாக "ஆம்" என்று வாக்களிப்பது கடமைத் தவறுதலாகும். அலட்சியமாக இருப்பதும் சட்டப்படி குற்றமே. (எகா: கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே, கூட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குற்றம்)

அமைப்பின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமலோ, கணக்குகளில் குளறுபடிகளோ, அல்லது நிர்வாகத்தில் சர்வாதிகாரப் போக்கோ தெரிந்தால், அதைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காக்கக் கூடாது. (எகா: தான் செயலாற்றும் குழு தாக்கல் செய்திருக்கும் வருமான வடிப் படிவத்தில் என்ன இருக்கின்றதெனக் கூட தெரியாத நிலையில் இருப்பது குற்றம்)

அமைப்பின் நிதியைத் தனிப்பட்ட கணக்குகளுடன் இணைப்பதோ அல்லது பெரிய செலவுகளுக்கு இருவர் கையொப்பமிட வேண்டும், வழங்குநர், வணிகர் தகவலைப் பகிர்தல் போன்ற உள்முகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதோ பெரும் தவறாகும். (எகா: வெண்டர் தகவலைப் பகிராமல் இருப்பது குற்றம்)

சட்ட விதிமுறைப் பாதுகாப்பு

அமைப்பின் நோக்கங்களுக்கும், அதன் சட்ட விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள், உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் (Grievance procedures) ஆகியவை விருப்பத்தின் பேரில் பின்பற்றுபவை அல்ல; அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை. தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற விதிகளையும் நடைமுறைகளையும் மாற்றுவதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. (எகா: திட்டமிட்டே விண்ணப்பத்தைக் கிரீவன்சு கமிட்டிக்குக் கடைசி நாளான 15ஆம் நாளில் அனுப்பி இருந்தால் அது குற்றம்)

ஒரு குறிப்பிட்ட மாநாட்டிற்காகவோ (Convention) அல்லது கலைத் திட்டத்திற்காகவோ திரட்டப்பட்ட நிதியை, முறையான வெளிப்படையான ஒப்புதல், மறுசீரமைப்பு இல்லாமல் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. (எகா: மாநாட்டுச் செலவினைப் பொதுக்கணக்கில் எழுதுவது குற்றம்)

501(c)(3) வரிவிலக்கு பெற்ற ஓர் அமைப்பு, அதன் பண்பாட்டு, கல்வி நோக்கங்களிலிருந்து விலகி, ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ அல்லது விளம்பரம், பரப்புரையில் ஈடுபடுவதோ கூடாது. (எகா: அரசியல், திரைப்பட வணிகம் முதலானவற்றுக்கு அமைப்பினர் அமைப்பினைப் பயன்படுத்துவது குற்றம்)

ஒரு நிர்வாகி எப்போது வெளிப்படைத்தன்மையைக் குறைத்து, பொதுவான உறுப்பினர்களின் குரலை நசுக்கி, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அப்போதே அவர் தனது நம்பிக்கைப் பொறுப்புக் கடமையிலிருந்து தவறிவிடுகிறார். (எகா: கடைசி நேரத்தில் நிர்வாகிகள் அஜண்டாவைத் தனதாக்கிக் கொள்வது மாபெரும் குற்றம்)

அமைப்பு நாளுக்கு நாள் வளர்கின்றது, விரிவடைகின்றது. பேரவை என்பது மட்டுமன்று; தமிழ்ச்சங்கங்களும்தான். ஆகவே, அமெரிக்காவில் அமெரிக்கராக வாழ்வது காலத்தின் கட்டாயம். செயற்குழுவில் பங்கேற்கு முன், விழிப்புணர்வு கொள்ள வேண்டும். புகழ்போதைக்கும் தன்விளம்பரத்துக்கும் ஆசைப்பட்டு, வணிக சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சோரம் போதல் கூடாது. உறக்கத்தினூடே எழுப்பிக் கேட்டாலும், சட்டவிதிமுறைகளைச்(bylaws) சரியாகச் சொல்லும்படியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.


-பழமைபேசி, 05/26/2026.

5/10/2026

அன்னையர் நாள்

அன்னையர் நாளைக் கொண்டாடுவது அல்லது அன்னையரைப் போற்றுவது என்பது வெறும் ஒரு நாள் சடங்கு மட்டுமன்று; அது நம் வாழ்வின் வேரான அன்பிற்கும் ஈகத்திற்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.  கருவிலே உருவானது முதல், அதை வளர்த்து ஆளாக்கி, தான் உள்ளவரையிலும் அன்னை செய்யும் உழைப்புடன் கூடிய உணர்வுப்புல ஈகங்கள் ஈடு இணையற்றவை. தன் நலனை விடக் குழந்தையின் நலனே பெரிதென வாழும் அந்தப் பேரன்பிற்கு நன்றி செலுத்தி, அவர்களின் இருப்பை உளப்பூர்வமாக உணர்ந்து செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய நாள், அன்னையர் நாள்!

குடும்பம் என்னும் அமைப்பை வலுவாக வைத்திருப்பதில் தாயின் பங்கு மிக முக்கியமானது. ஒரு வளமான சமுதாயம் உருவாக அடித்தளமாக இருக்கும் அன்னையர்களின் உழைப்பையும், சமூகப் பங்களிப்பையும் உணர்ந்து சிறப்பிக்க வேண்டியது கட்டாயம்.

இன்றைய வேகமான இயந்திர விரைவு உலகில், நாம் பல நேரங்களில் நெருக்கமான உறவுகளுக்கு நேரம் ஒதுக்கத் தவறிவிடுகிறோம். இது போன்ற ஒரு குறிப்பிட்ட நாள், நம் தாயுடன் நேரத்தைச் செலவிட, நம் அன்பை வெளிப்படுத்த, அவர்களின் உளநலம், உடல்நலம் பேணயென பல்வேறு விழுமியங்களுக்கான விழிப்புணர்வுத் தூண்டுதலாக அமைகிறது அன்னையார் நாள்.

நம் தமிழ்மரபில் அன்னைக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற வள்ளுவரின் வாக்கு, ஒரு தாய் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அடையும் மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பண்டைய சங்க இலக்கியங்கள் துவக்கம், பாரதியாரின் கவிதைகள் வரை, தாயைப் போற்றுதலென்பது அறமாகவும் பண்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

உலக அளவில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரால் தன் தாயின் நினைவாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. நாம் செய்ய வேண்டியது என்ன? விலையுயர்ந்த பரிசுகளை விட, அவர்களுடன் செலவிடும் நேரம், அவர்கள் மீது காட்டும் பரிவும் கவனமும், அவர்களின் உழைப்பைப் பாராட்டிச் சொல்லும் சில அன்பான வார்த்தைகள், அவர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து கொள்வது, நாட்டம் கொண்டு எதிர்வரும் காலத்தினைத் திட்டமிடுவது போன்றவை பயனளிக்கக் கூடியவை.

அன்னையரைப் போற்றுவது என்பது ஒரு நாளைக்குரியது மட்டுமன்று, அது வாழ்நாள் முழுவதும் நம் செயல்களில் வெளிப்பட வேண்டியவொன்று. அன்னையென்பவள், குழந்தைப் பேறு முதல் எதிர்கொள்ளும் உடல்ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டவள். அதே கூறுகள், அத்தை, சின்னம்மா, பெரியம்மா, மனைவி, உடன்பிறந்தாள், தோழியென அனைத்து மகளிருக்கும் பொருந்தும்.

அண்மைக்காலமாக, எனக்கு அடிக்கடி மனத்துள் தோன்றுவதெல்லாம் இதுதான். அம்மா இருக்கின்றார். அம்மாவுடன் பிறந்தவர்கள் அம்மாவையும் சேர்த்து எட்டுப் பேர். அம்மாவின் தந்தையார், தாயாருடன் பிறந்தவர்களுக்குப் பிறந்த், அம்மாவின் இரண்டாம் நிலைச் சகோதரங்கள் 22 பேர், ஆக 30 பேரின் குழந்தைகள், எம் தலைமுறையினர் 71 பேர். இந்த 71 பேருக்குமான பிணைப்பை இன்றளவும் தன்னகத்தே கொண்டிருப்பவர் அம்மா. பேராலமரமாக மனக்கண்களில் உருக்கொள்கின்றார்.

அன்றாடமும் அழைத்துப் பேசுவது வாடிக்கை. சற்றுமுன்பும் அழைத்திருந்தேன். காளியம்மன் கோவில் முன்பு கும்மியாட்டம், நான் அங்கிருக்கின்றேனெனச் சொல்லிச் சற்றுப் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி, சாப்பிட்டாயா? “சாப்பிட்டாயா?”, அந்த ஒற்றைவினாவில் அடங்கி இருக்கின்றது எல்லாமும். இதற்கு மேல், அன்னையர் நாளில், அன்னையர் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை.

𝐋𝐢𝐟𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐜𝐨𝐦𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐚𝐧𝐮𝐚𝐥; 𝐢𝐭 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫.


5/08/2026

இன்றைய இளையோர் இயக்கங்களும் தோல்விகளும்

தலைமுறை இடைவெளிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியும் கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கும் முன்னெடுப்புகள், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிகின்றனயென்பதை உலகெங்கும் பார்த்து வருகின்றோம்.

முந்தைய கால போராட்டங்களில் ஒரு வலுவான கட்டமைப்புடன் இடம் பெறும். ஆனால், Gen-Z இயக்கங்கள் பெரும்பாலும் முறைசார் இயக்கமும் முறையான தலைமையும் அற்ற முறையில் நடக்கின்றன, அல்லது ஒரு தனிமனிதரின் பிம்பத்தின்மீது இடம் பெறுகின்றன. இது துவக்கத்தில் ஜனநாயகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால திட்டங்களை வகுக்கவும் தொலைநோக்குக் கொள்கைகள் இல்லாமல் போகும்போதும், திசைமாறிச் சிதறிவிடுகிறது. 2020இல் அமெரிக்காவில் நடந்த 'Black Lives Matter' முன்னெடுப்புகள் உலகையே உலுக்கின. ஆனால், தெளிவான தலைமை இல்லாததால், நிதி கையாளுதல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அதன் தாக்கம் குறைந்தது.

இன்றைய புரட்சிகள் பெரும்பாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் தொடங்குகின்றன. இணையத்தில் ஒரு பதிவினைப் பகிரும்போது கிடைக்கும் ஒருவித "போலி மனநிறைவு", களத்தில் இறங்கி உழைக்கும் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சமூக ஊடகங்கள் ஒரு முன்னெடுப்பினை விரைவாகப் பிரபலப்படுத்தினாலும், அதே வேகத்தில் மக்கள் அடுத்த ட்ரெண்டிற்கு மாறிவிடுகிறார்கள். இதனால் இயக்கத்தின் ஆழம் நீர்த்துப்போகிறது.

டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்த தலைமுறை என்பதால், எல்லாவற்றிலும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஒரு புரட்சி என்பது பல ஆண்டுகள் நீடிக்க வேண்டிய ஒரு நீண்ட பயணம். ஆனால், சில வாரங்களிலேயே மாற்றம் நிகழவில்லை என்றால், இளைஞர்கள் சோர்வடைந்து பின்வாங்குகின்றனர். இந்த பொறுமையின்மையை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் 'Aragalaya' போராட்டம். அதிபரை விரட்டியடித்த வேகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அரசியல் மாற்றுத் திட்டம்  இல்லாததால், மீண்டும் பழைய அரசியல் சக்திகளிடமே அதிகாரம் சென்றடைந்தது.

பல Gen-Z இயக்கங்கள் "எதை எதிர்க்கிறோம்" என்பதில் தெளிவாக இருக்கின்றன, ஆனால் "எதை உருவாக்கப் போகிறோம்" என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. வெறும் எதிர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு நிலையான ஆட்சியை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமீபத்திய வங்கதேச மாணவர்கள் போராட்டம். ஷேக் ஹசீனாவை பதவியிறக்கம் செய்வதில் வெற்றி கண்டாலும், அதற்குப் பின் வந்த வன்முறைகள் மற்றும் மதவாத ஊடுருவல்கள் அந்தப் புரட்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கின.

இளைஞர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடினாலும், பிலிப்பைன்ஸ் அரசியல் இன்றும்  'ஆளுமை வழிபாடு' என்பதிலேயே சுழல்கிறது. ஜனநாயக விழுமியங்களை விட, "ஆராதிக்கும் இவரால்தான் நாடு முன்னேறும்" என்ற பழைய காலத்து எண்ணம் இளைஞர்களிட, ஆழமாக இருப்பதால் அவர்களது முன்னெடுப்புகள் தேக்கநிலையையே கண்டன.

Gen-Z இயக்கங்கள் தோல்வியடையக் காரணம் அவர்களின் நோக்கத்தில் இருக்கும் பிழையல்ல, மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு  இல்லாததே ஆகும். உணர்ச்சிகரமான போராட்டங்களுடன், அறிவுப்பூர்வமான அரசியல் திட்டமிடலும் இணையும்போது மட்டுமே எதிர்காலப் புரட்சிகள் வெற்றியைத் தழுவும். 

தமிழ்நாட்டின் அடுத்தடுத்த காட்சிகள், இன்றைய இளையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா அல்லது உலகின் ஏனைய நிகழ்வுகளைப் போலவே அமையுமா? முடிவு, காலத்தின் கைகளில்!


-பழமைபேசி.

5/05/2026

தேர்தலில் பங்களிப்பு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
— கணியன் பூங்குன்றனார்

உலக நாகரிகத்தின் தொட்டிலென்று போற்றப்படும் தமிழும், அதன் மக்களும் உலக வரலாற்றின் மிகத் தொன்மையான அடையாளங்கள். காலங்காலமாகக் கடல் கடந்து வாழும் ஆற்றல் கொண்ட தமிழர்கள், இன்று உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தங்களின் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளனர். அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அவர்களின் பண்பாட்டு முகமாகவும் விளங்குவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். இப்பேரவையின் தரத்தையும், நயத்தையும், மாண்பினையும் காத்து மேம்படுத்துவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழ்மொழி வெறும் பேச்சல்ல; அது ஒரு பண்பாடு, வாழ்வியல் நெறி. உலகின் மிக மூத்தகுடியான தமிழ் மக்கள், தங்களின் உழைப்பாலும் அறிவுத்திறனாலும் அமெரிக்கா போன்ற உலகின் முதன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பம் மிக்க நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பரவிவாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் பாலமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு முற்போக்கு நாட்டில், தமிழர்களின் உயரிய விழுமியங்களைப் போற்றப்பணித்திருக்கும் பேரவை எப்போதும் தன் தரத்திலும் மாண்பிலும் விட்டுக்கொடுத்தல் செய்து கொள்ளக் கூடாது. உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமானால், பேரவையின் செயல்பாடுகள் மிக உன்னதமானவையாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் பேரவையைத் தம்வீடாக எண்ணி, இதன் வளர்ச்சிக்கும் நெறிமுறை சார்ந்த செயல்பாட்டிற்கும் தமக்கும் பங்குண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாபெரும் அமைப்பு இன்னும் உயரங்களை எட்ட வேண்டுமானால், அதற்குள் இருக்கும் தேக்க நிலைகளையும், எதிர்மறையான காரணிகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். பேரவை முழுமையான மாண்பை அடைய நாம் பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும்:

குறுங்குழுச் சார்பு 

அமைப்புகளுக்குள் உருவாகும் சிறிய குழுக்களின் ஆதிக்கம், ஒட்டுமொத்தப் பேரவையின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை முன்வைக்க வேண்டும்.

 சாதி, சமயச்சார்பு 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" — திருவள்ளுவர்.  தமிழ் என்பது சாதி, சமயங்களைக் கடந்து எல்லோரையும் பிணைக்கும் ஒரு சக்தி. பேரவைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதிய, சமயரீதியிலான பாகுபாடுகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ இடம் தரக் கூடாது. தமிழன் என்ற ஒற்றை அடையாளமே முதன்மையானதாகவும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். 

பிற்போக்குத்தனம்

பழமைவாதக் கருத்துக்களையும், மாற்றங்களை ஏற்கமறுக்கும் பிடிவாதத்தையும் கைவிட்டு, காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனைகளுடனும் அறிவியல் பார்வையுடனும் பேரவை நகர வேண்டும்.

பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பரந்த மனப்பான்மை கொண்ட தகுதியான தனிமனிதர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பார்வையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். தன்முனைப்போ, புகழோ விரும்பாமல், அறநெறி, நேர்மையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். தமிழ்மொழியின் மரபினைப் பேணுவதோடு, புதுமை உலகிற்குத் தக்கவாறு வழிநடத்தும் சிந்தனை கொண்டிருக்க வேண்டும். தகுதியுடைய ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பேரவையின் முக்கியப் பொறுப்புகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்வதே பேரவையின் தரத்தை உயர்த்தும் வழியாகும்.

பிளவுவாதம். பிற்போக்குத்தனம், தன்முனைப்பு, புகழ்வெளிச்ச ஆசை, பகைமை பாராட்டுதல், வாசிப்பற்ற மொண்ணைத்தனம் முதலானவை சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருப்பன. பேரவைக்களமும் இவற்றில் விதிவிலக்கல்ல. அவை எங்குமிருக்கும். ஆனால், தன்னார்வத் தொண்டு என்பது மற்றவருக்கான சேவையில் தம்மைக் கரைத்துக் கொள்ளக் கூடிய மெழுகுவர்த்தியைப் போன்றதாகும். பல மணி நேரங்கள் உழைத்திட வேண்டும். மக்களின்பால் பரிவு இருந்திடல் வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கும் மேட்டிமைக்கும் ஆனதல்ல இப்பணிகள்.

தன்கருத்து எதுவானாலும் திடமாகச் சொல்லும் மனப்பாங்கு இருந்திடல் வேண்டும். குறுங்குழுவாதத்துக்குள் இருந்துகொண்டு கொந்தளிப்புகளோடு இருப்பதற்கான இடமல்ல பேரவை. ஒவ்வொருவரும் தன் ஆன்மாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தக் கொள்கை, இந்தக் கொள்கை என்பதெல்லாம் வேலைக்காகாது, குறுங்குவாத பகைமை பாராட்டும் சமன்பாடற்ற இடத்திற்கே இட்டுச்செல்லக் கூடியன அவை. உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை! 

Have the courage to exercise your rights.

-பழமைபேசி.

4/25/2026

கொடுஞ்சுழற்சி

வாழ்வியலில் ஒரு தீயவிளைவு மற்றொன்றற்குக் காரணமாகி, அது மீண்டும் தொடக்கத்திலிருந்த சிக்கலையே இன்னும் வலுப்படுத்துவதை 'கொடுஞ்சுழற்சி' என்கிறோம். இது ஒரு நச்சுச்சுழல் போன்றது. ஒரு சிக்கலில் இருந்து வெளிவர முயலும்போது, அதுவே மற்றொரு சிக்கலை உருவாக்கி, மீண்டும் நம்மைத் தொடக்கப் புள்ளிக்கே கொண்டு வந்து நிறுத்தும் ஒரு முடிவிலித் தொடர்நிகழ்வாக இது அமைகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் ஒரு பெரும்கொடுஞ்சுழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும். பெரும்பாலும் பொதுநலன் கருதி இயங்கும் இவ்வமைப்புகளில், அதிகாரப் பகிர்வு அல்லது கருத்து மோதல்கள் ஏற்படும்போது அது பலவாறாகச் சுழன்று சுழன்று, சுழலுக்குள் எல்லாரையும் இழுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது.

இரு நபர்களுக்கிடையே ஏற்படும் விருப்பு வெறுப்புகளின்பாற்பட்ட சிறு கருத்து வேறுபாடு, முறையான தகவல் தொடர்பின்மை, வெளிப்படைத் தன்மையின்மை, நெறிமுறைகளின்மை முதலானவற்றால், நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கும். அதுவே, அன்றாடப் பணிகளில் எதிரொலித்து, திட்டங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றது. அதனால் பின்னடைவு நேரும் போது, ஒருவருக்கொருவர் சுட்டிக் கொள்வர். இது மீண்டும் பகையை ஆழமாக்கி, புதிய பிணக்குகளுக்கு வழிவகுக்கிறது. இறுதியில், நிறுவனத்தின் உயரிய நோக்கங்கள் சிதைந்து, உறுப்பினர்களின் வெளியேற்றத்திற்கும் இது காரணமாகிறது.

கொடுஞ்சுழற்சியை உடைப்பது என்பது அச்சுழலின் ஏதேனும் ஒரு கண்ணியைத் தகர்ப்பதில்தான் உள்ளது. குறிப்பாகத் தொண்டு நிறுவனங்களில் ஏற்படும் பிணக்குகளை உடைக்க, வெளிப்படையான உரையாடலும், நடுநிலையான ஒருவரின் தலையீடும் தேவையாகின்றது. 

ஒரு சிக்கலான சுழலில் இருந்து விடுபட, அச்சுழலுக்கு நேர்மாறான ஒரு நற்சுழற்சியை உருவாக்க வேண்டும். 

விழிப்புணர்வுடன் கூடிய திட்டமிடலும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் மட்டுமே, அமைப்பினை இக்கொடுஞ்சுழற்சியில் இருந்து விடுவித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

குற்றம் குறைகளைச் சொல்லிப் பொறுப்புக்கு வந்தபின், அதுசார்ந்த தனிமனிதர்கள் மீது பாய்ந்து குதறிக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக, தம் செயற்பாட்டில் அவை நிகழாமல் பார்த்துக் கொள்வதோடு, மேன்மை நோக்கிய புதிய பணிகள் பல செய்தாக வேண்டும்.

செயற்குழுவில் இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே லைக்குகள் இட்டுக் கொள்வதெல்லாம் பத்தாம் பசலித்தனம். கொடுஞ்சுழலில் சிக்குண்டு போனவர்கள், அறிவை இழக்கிறார்கள். நிதானத்தை இழக்கிறார்கள். குழுக்களுக்கிடையே சமர்புரிந்து கொள்வதை எவரும் தன்னார்வத் தொண்டு எனச் சொல்லப் போவதில்லை. இல்லவே இல்லை.

𝐁𝐫𝐞𝐚𝐤 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞, 𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞 𝐛𝐫𝐞𝐚𝐤𝐬 𝐲𝐨𝐮.

-பழமைபேசி.

4/12/2026

தமிழ்நாடு: தேர்தல் 2026

தமிழ்நாடு தேர்தல் அரசியலில், மூன்றாம் தரப்பு ஒன்று 15% வாக்கு வங்கியை எட்டுவது அல்லது எட்டுவதற்கான வாய்ப்புகள் ஏன் ஒரு "அரசியல் புயலாகக்" கருதப்படுகிறது?

"வெற்றி இலக்கு" குறைதல்

பொதுவாக திமுக+ - அதிமுக+ என இருமுனைப் போட்டி நிலவும்போது, ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45% முதல் 50% வரை வாக்குகள் தேவைப்படும். ஆனால், ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளைப் பிரிக்கும்போது, வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்சத் தேவை 35% ஆகக் குறைகிறது. இதனால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த 15% வாக்குகள் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான இடைவெளியை விட அதிகம் என்பதால், அது பிரதான கட்சிகளின் கோட்டைகளைச் சரிக்கும் வல்லமை கொண்டது.

"வீணாகும் வாக்குகள்" என்ற பிம்பம் உடைதல்

பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்கு வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே வலுவான இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஒரு புதிய கட்சி 15% வாக்குகளைப் பெறும்போது, அது ஒரு "வெல்லக்கூடிய மாற்று" என்ற இடத்தைப் பெறுகிறது. இந்த உளவியல் மாற்றம், அடுத்தடுத்த தேர்தல்களில் நடுநிலை வாக்காளர்களையும் இளைஞர்களையும் அந்த மூன்றாம் தரப்பை நோக்கிப் பெருமளவில் ஈர்க்கும். இதனால் இருமுனை அரசியல் என்பது முக்கோணப் போட்டியாக மாறி, வாக்குகள் சிதறுவது உறுதி செய்யப்படுகிறது.

"கிங் மேக்கர்" தகுதி

தமிழக சட்டசபையின் மொத்த இடங்கள் 234. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை. ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளை மாநிலம் தழுவிப் பெற்றால், அது குறைந்தது 20 முதல் 40 தொகுதிகளில் நேரடியாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை திமுக அல்லது அதிமுக கூட்டணிகளால் தனித்துப் பெரும்பான்மையான 118 இடங்களைப் பிடிக்க முடியாவிட்டால், இந்த 20-40 இடங்களை வைத்திருக்கும் மூன்றாம் தரப்பே "யார் முதல்வர்?" என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.

கூட்டணி மாற்றங்களும் புதிய அரசியலும்

இந்த 15% வாக்கு வலிமை என்பது பெரிய கட்சிகளைப் பணிய வைக்கும் ஒரு கருவியாகும். ஒரு கட்சி இவ்வளவு வாக்குகளைத் தனித்து வைத்திருந்தால், அதுவரை பெரிய கட்சிகளுடன் இருந்த சிறிய கட்சிகள் (சாதிய மற்றும் சிறிய அமைப்புகள்) தங்கள் லாபத்திற்காக மூன்றாம் தரப்புடன் இணையத் தொடங்கும். இது திராவிடக் கட்சிகளின் பாரம்பரியக் கூட்டணி கட்டமைப்பை உடைத்து, ஒரு புதிய அரசியல் அணிசேர்க்கைக்கு வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொன்னால்: 15% வாக்கு என்பது வெறும் எண்கள் அல்ல; அது தமிழகத்தின் 50 ஆண்டுகால இருமுனை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆட்சியில் பங்கு கேட்கும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் அதிகார மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். இதனடிப்படையில்தாம் 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் தரப்புக்கூட்டணி அமையப் பெற்றது. ஆனால், மூன்றாம் தரப்பினால் 15% வாக்குகளோ, அல்லது 20 இடங்களோ அடைய முடியவில்லை.

ஆளும்கட்சிக் கூட்டணியை எதிர்த்து நான்கு வலிமையான கூட்டணிகள் தனித்தனியேப் போட்டியிடும் போது, அது ஒரு "பலமுனைப் போட்டி"  சூழலை உருவாக்குகிறது. அதைத்தான் நாம் 2026 தேர்தலில் காண்கின்றோம். அதன் தாக்கம் எவ்வாறெல்லாம் அமையக் கூடும்?

வாக்குகள் சிதறுதல் 

ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள்  நான்கு வெவ்வேறு கூட்டணிகளிடையேப் பிரிந்துவிடும். இதனால் ஆளும்கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி 60% இருந்தாலும், அந்த 60% வாக்குகள் நான்கு கூட்டணிகளுள் அதிகபட்சமாக ஒரு கட்சிக்கு 40%க்கும் குறைவாக இருக்கும்படிப் பிரிந்தால், வெறும் 40% வாக்குகளைப் பெற்றிருக்கும் ஆளும்கட்சி எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

வெற்றிக்கான இலக்கு குறைதல்

இருமுனைப் போட்டியில் வெற்றி பெற 45% முதல் 50% வாக்குகள் தேவைப்படும். ஆனால் ஐந்து கூட்டணிகள் மோதும்போது, வெறும் 30% முதல் 35% வாக்குகள் பெறும் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியும். இது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்  முடிவுகளை மாற்றும். ஆனால் மாற்றுத் தரப்பில் ஏதோவொரு தரப்பு ஆளும்கட்சிக்கும் மிக அருகில் வந்தாக வேண்டும். கணிசமான தொகுதிகளில் இத்தகு வாய்ப்புக்கு இடம் உள்ளது.

"யார் இரண்டாவது இடம்?" என்ற போட்டி

நான்கு எதிர்க்கட்சிக் கூட்டணிகளில் எது "உண்மையான மாற்று" என்ற போட்டி உருவாகும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் கூட்டணி, அடுத்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு நேரடி சவாலாக மாறும். மற்ற மூன்று கூட்டணிகள் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கும்.

உள்ளூர் செல்வாக்கிற்கு முக்கியத்துவம்

கட்சிக் கொள்கைகளை விட, அந்தந்தத் தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட வேட்பாளர்கள்  வெற்றி பெற அதிக வாய்ப்பு கிடைக்கும். ஐந்து முனைப் போட்டியில் கட்சிச் சின்னத்தை விட, வேட்பாளரின் முகம் முக்கியப் பங்கு வகிக்கும்.

தேர்தல் வியூக மாற்றம்

இத்தகைய சூழலில் கட்சிகள் "மாநிலம் தழுவிய அலை" என்பதை விட, "ஒவ்வொரு தொகுதியையும்" தனித்தனியாகக் கவனித்து வியூகம் அமைப்பார்கள். குறிப்பிட்ட சாதி, சமய, இனக்குழு, மொழிசார் வாக்குகளைக் குறிவைத்து பிரிக்கும் உத்திகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

முடிவாக, தமிழ்நாட்டின் 2026 தேர்தலென்பது, வழக்கத்துக்கு மாறாக, மாநிலம் தழுவிய அளவிலான தேர்தலாக அல்லாமல், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இடம்பெறுகின்ற தேர்தலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. அந்தத் தொகுதியில், தொகுதிக்கேற்ற கூட்டணிகளின் உத்தி, வியூகம், களப்பணி முதலானவையே முடிவினைத் தீர்மானிக்கும். அப்படியாக, அதிகத் தொகுதிகளை வெல்வதன் வாயிலாக யார் ஆட்சி என்பது தீர்மானிக்கப்படலாம். அல்லது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவதால், ஆளும்கட்சிக்கான அலையாகவும் அமையலாம்.

When the counting ends, the story begins.


-பழமைபேசி.