3/10/2026

தனித்தமிழின் அவசியம்: ஒரு பார்வை

தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட சீரிளமைத் திறம் வாய்ந்தது. ஒருகாலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழின் தனித்தன்மையின் மீது தாக்கம் கொண்டபோது, மறைமலை அடிகள், பாவாணர் போன்றோரின் பங்களிப்பால்  'தனித்தமிழ் இயக்கம்' உருவானது. நாம் ஏன் தனித்தமிழைக் கடைபிடிக்க வேண்டுமென்பதற்குப் பல அழுத்தமான காரணங்கள் உள்ளன.

ஒரு மொழியின் தனித்துவம் என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகைபடக் கலக்கும்போது, அந்த மொழியின் வேர்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து போகின்றன. இதனால் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும் சிதைந்து, ஒரு காலகட்டத்தில் அந்த மொழியே சிதைந்த நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ் சிதையாமல் அதன் ஆதி வடிவில் நிலைத்திருக்க, தனித்தமிழ்ப் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

அடுத்து, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையிலான வேர்ச்சொற்களைக் கொண்டது. புதிய கண்டுபிடிப்புகள் , புதுத் தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. நாம் பிற மொழிச் சொற்களை அப்படியே இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தும்போது, நம்முடைய சிந்தனைத் திறனும் புதிய சொற்களை உருவாக்கும் படைப்பாற்றலும் மங்கிப்போகின்றன. தமிழைத் தூய வடிவில் பயன்படுத்தும்போதுதான், அது காலத்திற்கேற்பப் பரிணாம வளர்ச்சி அடைய முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் மொழியியல் சார்ந்த பற்றியம் மட்டுமன்று; அது நம் பண்பாட்டைக் காக்கும் அரண். ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அதன் மொழியில்தான் பொதிந்துள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை நாம் தடையின்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தமிழின் வேர்களை நாம் சிதைக்காமல் காக்க வேண்டும். பிறமொழிச் சொற்களின் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் நற்பணியாகும்.

சுருக்கமாகச் சொன்னால், தனித்தமிழ் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதன்று; மாறாக, தன் மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்து அதனை அழியாமல் காப்பதாகும். அன்றாடப் பேச்சுவழக்கில், ஆங்கிலம் , பிறமொழிச் சொற்களைக் குறைத்து, எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதனால் நாம் நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமன்று; அது தமிழின் தனித்துவமான இலக்கண மரபுகளை, தொன்மையான வழக்காறுகளையும் போற்றிப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா, அதன் மரபு சார்ந்த நடையில்தான் வாழ்கிறது. ஆனால், இன்று நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் வடமொழி, ஆங்கில மொழிகளின் இலக்கணத் தாக்கமும், சிந்தனை முறையும் ஊடுருவித் தமிழின் இயல்பான அழகைச் சிதைத்து வருகின்றன. இது ஒரு மொழிச் சிதைவு மட்டுமன்று, ஒரு பண்பாட்டு அடையாளத்தின் சிதைவுமாகும்.

பிறமொழி மரபுகளின் ஊடுருவலைக் களைவது மிக அவசியம். தமிழில் இல்லாதபிறமொழி எழுத்துகளையும், தத்திதச் சொற்களையும் பயன்படுத்துவதால் தமிழின் ஒலியியல் அமைப்பு மாறுகிறது. பழந்தமிழ் வழக்காறுகளைப் புறக்கணிப்பதும் தமிழின் செழுமையைக் குறைக்கிறது. தமிழ்ச்சொற்களிலேயே உயர்ந்த பொருளும் ஆழமான தத்துவமும் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற மரபுகளைக் கொண்டாடுவது நம் மொழியின் தற்சார்புத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது.

தற்காலத்தில் ஆங்கில மொழி மரபுகளின் ஆதிக்கம் தமிழை 'ஆங்கிலத் தமிழ்' வடிவாக மாற்றி வருகிறது. ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றித் தமிழில் எழுதுவது, தேவையற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்களைத் திணிப்பது போன்ற போக்குகள் பெருகியுள்ளன. கணினி, இணையம் போன்ற தற்காலத்துறைகளில், தமிழின் கலைச்சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவது, காலப்போக்கில் தமிழை ஒரு 'அடையாள மொழியாக' மட்டுமே சுருக்கிவிடும். ஆங்கில மரபுகளைக் களைந்து, தமிழின் தனித்துவமான வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது, தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகவும் நம்முள் குடிகொள்ளும்.

தனித்தமிழ் காப்பது என்பது ஒரு தற்காப்பு முன்னெடுப்பு மட்டுமன்று; அது நம் மொழியின் உரிமையை நிலைநாட்டும் போராட்டமாகும். "தமிழ் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்ற வரிகளுக்கு இணங்க, நம்முடைய இலக்கணக் கோட்பாடுகளையும், முன்னோர் வகுத்த மொழிமரபுகளையும் சிதையாமல் காக்க வேண்டும். பிறமொழி மரபுகள் நம் சிந்தனையைக் கட்டிப்போடாமல் தற்காத்துக் கொள்வதும், தூய தமிழ் வழக்காறுகளை அன்றாட வாழ்வில் மீண்டும் உயிர்ப்பிப்பதும் இன்றைய இளைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.

தமிழ்த்தாலிபான்கள், தமிழ்த்தீவிரவாதிகள், பிற்போக்காளர்கள்’ போன்ற சொல்லாட்சிக்கு ஆட்பட நேரிடும்தான். ஆனாலும் நாம்தான் ஒரு வேள்வியாகக் கருதிச் செயற்பட்டாக வேண்டும். அதுவே, தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் அவர்களின் நூற்றைம்பதாவது ஆண்டினைக் கொண்டாடுவதற்குப் பொருண்மியத்தை ஊட்டும்!

கூடுதலாக, “பிழை திருத்துபவரின் மனைவி” எனும் இச்சிறுகதையும் வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. https://shorturl.at/opVNd

-பழமைபேசி.

3/07/2026

பேரவையில் தேர்தல்

𝐓𝐡𝐢𝐧𝐤 𝐠𝐨𝐨𝐝, 𝐝𝐨 𝐠𝐨𝐨𝐝, 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐠𝐨𝐨𝐝.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு (House of Representatives) ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், ஒரு பிரதிநிதி பதவியேற்ற அடுத்த ஓராண்டிற்குள்ளேயே அடுத்த தேர்தலுக்கான நிதி திரட்டலிலும், பரப்புரையிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதையே அரசியல் ஆய்வாளர்கள் "நிரந்தர தேர்தல் பரப்புரை" (Permanent Campaign) என்று அழைக்கிறார்கள். மேலும், செனட் சபையின் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தாலும், மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடப்பதால், நாடு எப்போதும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கிறது.

முக்கியமான அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் "உட்கட்சித் தேர்தல்கள்" (Primaries and Caucuses) மற்றொரு நீண்ட நெடிய செயல்முறையாகும். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக இந்தத் தேர்தல்கள் நடைபெறும். இதில் கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள். இது தவிர, மாநில அளவில் ஆளுநர்கள், அரசு வழக்கறிஞர்கள் , உள்ளூர் அளவில் பள்ளி வாரிய உறுப்பினர்கள், நகர மேயர்கள், வீட்டு உரிமையாளர் சங்கங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பொறுப்புகளுக்குத் தனித்தனியான கால அட்டவணையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இறுதியாக, அமெரிக்காவில் "நேரடி மக்கட்பங்களிப்பு" ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் சட்ட திருத்தங்கள் அல்லது புதிய வரிகள் குறித்து மக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்கும் "வாக்கெடுப்பு முன்முயற்சிகள்" (Ballot Initiatives) தேர்தல் சமயங்களில் இடம்பெறும். இவ்வளவு நிலைகளில் தேர்தல்கள் நடப்பதால்தான், அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு அல்லது பரப்புரை எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு தேர்தல்நாடு.

நேற்றைக்கு, 03/06/2026, மகளார் வயலினிசை வாசிக்கும் காணொலியைப் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்தவர்கள் அழைத்துப் பாராட்டிப் பேசியதோடு, அவர்களில் சிலர், என்ன பழமை, மார்ச் வந்துவிட்டதெனச் சொல்லித் துருவினார்கள். இஃகிஃகி.

தேர்தல்நாட்டில் இருந்து கொண்டு, தேர்தலே இடம்பெறாத சூழல் பேரவையில் நிலவி வந்தது. 2016ஆம் ஆண்டு, நண்பர் சிவானந்தம் அவர்கள் போட்டியிட்டார். பேசினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைநோக்குப் பார்வையில் அவர் சொன்னது, ’தோற்பது, வெல்வது முக்கியமில்லை பழமை; உறுப்பினராட்சியைக் கட்டமைப்பது நம் நோக்கம். ஆக்கிரமிப்புகள் அகலவேண்டும். அதுதான் மேன்மைக்கு வழிவகுக்கும்’. தேர்தலில் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை; ஆனாலும், தொடர்ந்து முறையான தேர்தல், இப்படியிப்படி நடத்துதல் அமைப்புக்குச் சிறப்புச் சேர்க்குமெனச் சொல்லி வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்தார். நாங்களும் உடன் நின்றோம். அதன்விளைவு, நண்பர் கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் பங்களிப்பில் இணையவழித் தேர்தலுக்கான கட்டமைப்பு வேலைகள் இடம் பெற்று, வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுதான் முழுமையான தேர்தலுக்கான விதை.

இணையவழியில், 2018, 2020, 2022 என அடுத்தடுத்துத் தேர்தல்கள். “நான் இன்னிக்கி நிக்கிறன். இதைப் பார்த்திட்டு, நாளைக்கு இன்னும் சிலர் வருவாங்கல்ல?”. அதுதான் தொலைநோக்குப் பார்வை. நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் புதியவர்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தோம். 2024, தேர்தல். பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல். ஒட்டுமொத்த எல்லா இடங்களுக்குமான இணையவழித் தேர்தல். இதற்கான முதற்புள்ளி, 2016ஆம் ஆண்டுத் தேர்தல்.

அனுபவசாலிகளுடன் புதிய தலைமுறையினர் தேர்தலில் போட்டியிடுவதும் வாக்களிப்பதும், கொள்கை முடிவுகளில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது. பொறுப்புகளில் ஏற்கனவே இருந்தவர்கள், இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சிந்திக்கும் வேளையில், புதியவர்கள் புலப்பட்டிராத அன்றாடத் தேவைகளைத் துணிச்சலுடன் முன்வைக்கிறார்கள். சமூக சேவையாகக் கருதி வரும் புதிய ரத்தம், தேய்வழக்குகளில் இருந்து விடுபட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஒரு வாக்கு, உங்கள் வேட்புமனு என்பது ஒரு தனிநபரின் முயற்சி மட்டுமன்று, அது வரும் சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச்செல்லும் ஒரு சிறந்த மக்களாட்சிப் பரிசாகும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கத் தமிழரின் முகம். மேம்பாட்டுப் பணிகள், திட்டங்களை முன்வைத்து வெளிப்படையானதொரு போக்குடன், எவரும் தேர்தலை எதிர்கொள்ளலாம். ஏனென்றால் இது ஒரு தேர்தல்நாடு. சாதி, சமயம், அரசியல், தன்விளம்பரமோகம், சார்புச்செயற்பாடு  முதலானவற்றை ஒதுக்கிவிட்டு, மேம்பாட்டுக்கானதொரு வேள்வியாக,  பலரும் களம் காண வேண்டுமென்பதே நம் அவா! 𝐘𝐨𝐮𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬. 𝐇𝐞𝐥𝐩 𝐬𝐡𝐚𝐩𝐞 𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞!!

-பழமைபேசி, 03/07/2026.

2/23/2026

அறையில் அடைபட்ட 13 ஆண்டுகள்

ஜினி 1957இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தார். அவருக்குச் சுமார் 20 மாதங்கள் இருக்கும்போதே, அவரது தந்தை அவரை ஒரு சிறிய இருண்ட அறைக்குள் வைத்துப் பூட்டினார். அடுத்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஜினி வெளி உலகத்தையே பார்க்கவில்லை. ஒரு சிறிய நாற்காலியில் (Potty chair) அவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். யாரிடமும் பேசவோ, சத்தம் போடவோ அவருக்கு அனுமதி இல்லை. ஜினி சத்தம் போட்டால் அவரது தந்தை அவரை ஒரு நாயைப் போல உறுமிப் பயமுறுத்துவார் அல்லது கடுமையாகத் தண்டிப்பார். இதனால் ஜினி சத்தமே இல்லாமல் வளரக் பழகிக்கொண்டார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜினியின் தாயார் தனது கணவரிடமிருந்து தப்பித்து, 13 வயதான ஜினியை அழைத்துக்கொண்டு அரசு அலுவலகத்திற்கு உதவி கேட்டுச் சென்றார். அங்குள்ள அதிகாரிகள் ஜினியைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். 13 வயதான அவர், பார்க்க 6 வயதுச் சிறுமி போல மெலிந்து காணப்பட்டார். அவருக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை, யாரையும் நேராகப் பார்க்கவில்லை, மேலும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியவில்லை. உடனடியாக அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவரது தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜினியின் நிலை தெரிந்தவுடன், உலகின் சிறந்த மொழியியலாளர்களும் உளவியலாளர்களும் அவரைப் பற்றி ஆராய முன்வந்தனர். "ஒரு குழந்தை தனது வளரிளம் பருவத்திற்குள் (Puberty) மொழியைக் கற்கவில்லை என்றால், அதன் பிறகு ஒரு மொழியை முழுமையாகக் கற்க முடியுமா?" என்ற பெரிய கேள்விக்கு விடை தேட ஜினி ஒரு முக்கிய ஆதாரமாக மாறினார். அவருக்குப் பல ஆண்டுகள் தீவிரப் பயிற்சியும் அன்பும் வழங்கப்பட்டது. அவர் மெதுவாகச் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டார், மற்றவர்களுடன் சைகை மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஆராய்ச்சியின் முடிவில் ஒரு கசப்பான உண்மை தெரிந்தது. ஜினியால் தனித்தனி வார்த்தைகளைச் சொல்ல முடிந்ததே தவிர, ஒரு மொழிக்கே உரிய இலக்கணத்தோடு (Grammar) வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. உதாரணமாக, "Appple me eat" (ஆப்பிள் நான் சாப்பிடு) என்பது போன்ற உடைந்த வாக்கியங்களையே அவர் பேசினார். மனித மூளையில் மொழி வளர்ச்சிக்கான ஒரு 'குறிப்பிட்ட காலம்' (Critical Period) கடந்துவிட்டதால், அவரால் ஒரு தாய்மொழியைப் போல சரளமாகப் பேசும் திறனைப் பெற முடியவில்லை என்பது உறுதியானது.

கவலைக்குரியவிதமாக, ஜினிக்கான அரசு நிதி உதவி ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அவர் பல்வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தமும், மோசமான கவனிப்பும் அவர் கற்றுக்கொண்ட அரைகுறை மொழித் திறனையும் மறக்கச் செய்தது. அவர் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றார். தற்போது 60 வயதைக் கடந்த ஜினி, கலிபோர்னியாவில் ஒரு ரகசியமான அரசுக் காப்பகத்தில் வசித்து வருகிறார். ஜினியின் கதை, மனித வளர்ச்சிக்குத் 'தொடர்பு' (Communication), 'அன்பு' எவ்வளவு அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு துயரமான பாடமாகும். அந்தப் பாடத்தின் முக்கியமான கூறு, துவக்கநாள்களில் ஊட்டப்படும் தாய்மொழியின் விதைப்பே அவ்வுயிருக்கான ஊட்டம். அத்தகு ஊட்டமில்லையேல் எதுவுமேயில்லை!

𝐘𝐨𝐮𝐫 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐨𝐧𝐠𝐮𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐡𝐞𝐚𝐫𝐭𝐛𝐞𝐚𝐭, 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐢𝐭.

-பழமைபேசி.

2/17/2026

2026: அமெரிக்கச் சமூகத்தின் புதிய மாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2025, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தைக் கடந்து, தற்போது மக்கள் அதிக விலைவாசி, அதீத தொழில்நுட்பம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுடன் கூடிய ஒரு "புதிய இயல்பினை” ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களின் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த முக்கிய மாற்றங்கள் , நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவையெவை?

"பெருவரவுசெலவு"க் கலாச்சாரம், முன்பெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தற்போது சிக்கனமாக இருப்பது அவமானத்திற்குரியது அல்ல. சிக்கனவரவுசெலவு பிரபலமாகி வருகிறது. அதாவது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் செலவு வைக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கும்போது, "மன்னிக்கவும், இது என் திட்டத்தில் இல்லை" என்று வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல் மறுப்பதும் தற்போது இயல்பாகிவிட்டது. மற்றவர்களை திருப்திப்படுத்த செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது உறவை பாதிக்காது; மாறாக மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறைப்பு , வயதான தோற்றத்தை மறைப்பது போன்றவை பழைய வாடிக்கையாக ஆகிவிட்டன. தற்போது, அனைவரது கவனமும் மனநலத்தின் மீது திரும்பியுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் கூட, அறிவாற்றல் திறன், கவனக்குவிப்புத் திறன் குறைவது குறித்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, உடல் அழகை விட, நல்ல தூக்கம் , மனத் தெளிவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அன்றாடம், 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை உணர வேண்டும். வெறும் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்காமல், சதுரங்கம் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது, நூல் வாசிப்பது போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம் நம் வாழ்வின் எல்லா இடங்களிலும் இருந்தாலும், மக்கள் தற்போது அதிலிருந்து சிறிது விலகி இருக்க விரும்புகிறார்கள். தொடுதிரையில் மூழ்கிக்கிடப்பதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களில் சாதாரண போன்களைப் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தற்போது "ஆஃப்லைன்" அனுபவங்களை அதிகம் தேடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது சில மணிநேரங்கள் போனை அணைத்துவிட்டு, குடும்பத்தினருடன், இயற்கையோடு நேரத்தைச் செலவிட வேண்டும். தொழில்நுட்பம் நம்மை ஆள விடாமல், நம் வேலைகளை எளிதாக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்து 10 நாட்களில் 10 இடங்களைப் பார்க்கும் சுற்றுலா முறை மாறிவிட்டது. "Slowcation" எனப்படும் நிதானமான பயண முறை பிரபலமாகி வருகிறது. அதாவது, விடுமுறையில் ஒரே இடத்தில் தங்கி, அந்த இடத்தின் கலாச்சாரத்தை ரசித்து, மன அமைதியுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். மேலும், கிளப்கள் , பார்ட்டிகளை விட, பூங்காக்கள், நூலகங்கள் போன்ற அமைதியான பொது இடங்களில் கூடுவதை மக்கள் விரும்புகிறார்கள். பயணங்களின் போது நிறைய இடங்களைப் பார்ப்பதை விட, மன அமைதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழுவாகச் சேர்ந்து நடைப்பயிற்சி செல்வது, விளையாடுவது போன்ற எளிய சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

வளைந்து கொடுக்கும் தொழில் வாழ்க்கை (Non-Linear Career), "ஒரே கம்பெனியில் வாழ்நாள் முழுவதும் வேலை" என்ற கோட்பாடு மறைந்து வருகிறது. மக்கள் தற்போது வருவாயைவிட விட, மனநலனுக்கும், சமச்சீர் வாழ்வுக்கும் (Work Life Balance) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல திறன்களை வளர்த்துக்கொள்வதும், தேவைக்கேற்ப வேலைகளை மாற்றிக்கொள்வதும், பகுதிநேர வேலைகளாகப் பலவற்றைச் செய்வதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த அண்மைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். "ஆடம்பரத்தை விட அமைதி முக்கியம்; வேகத்தை விட விவேகம் முக்கியம்." பணத்தை மிச்சப்படுத்துவதிலும், தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருப்பதிலும், உடல்நலத்தைப் பேணுவதிலும் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

புயல் வீசும்போது மரங்கள் வளையும், ஆனால் வேர்கள் உறுதியாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களை ஏற்கும் அதே வேளையில், நம் உறுதி, வலு, விழுமியங்களைப் பேணுவதே மெய்யான விழிப்புணர்வு.

பழமைபேசி, 02/17/2026.

2/12/2026

சிறுகோட்டுப் பெரும்பழம்

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு சார்பாக அடுத்து இடம் பெறவிருக்கும் கூட்டத்தின் தலைப்பு, சிறுகோட்டுப் பெரும்பழம் . இந்தத் தலைப்பில் ஏராளமான கதை, கவிதைகள், கட்டுரைகள் காலங்காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு, குறுந்தொகையின் இச்சொல்லாடல் புகழ்வாய்ந்தது. சிறுகோடு போலுள்ள காம்பானது  பெரும்பழத்தையும் தாங்குவது போல, காம்பு போன்ற மெல்லுயிரானது பலாப்பழம் போன்ற காதல்பாரத்தையும் சுமக்கின்றதெனும் உவமைதாம் இது.

இன்றைக்கு ரீல்சு எனப்படும் மீச்சிறுகுறும்படங்களில் இடம்பெறும் தலைவன் தலைவி க்கிடையேயான ஊடல்ப் பகடிகளில் பெரும்பாலானவற்றின் வேர், தமிழ்ச்சங்க இலக்கியங்களென்றால் வியப்படைவீர்கள். அத்தனையும், தமிழின் அகத்திணையில் அடக்கம்.

தும்மல் அக்கப்போர்

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இந்தத் துணுக்கு மிகவும் பிரபலம்: " வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." (திருக்குறள்: 1317 ). நான் தும்மியபோது "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள். ஆனால், அடுத்த கணமே "யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு அழுது பிணங்கி அக்கப்போர் செய்தாள்.

கனவிலும் ஊடல்

"நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர் காணப் பவர்." (திருக்குறள்: 1219). கனவிலாவது என் காதலரைக் காண முடிந்ததே என்று மகிழாமல், கனவில் வந்தவரிடமும் ஏன் நேரில் வரவில்லை என்று ஊடல் கொள்கிறாள். கனவைக் கலைத்து நினைவாவதன் வாயிலாக, மீண்டும் பிரிவில் என்னை ஆழ்த்தும் விளையாட்டாயெனவும் சிணுங்கி அக்கப்போர் புரிகிறாள்.

மகனைத் தூதுவிடுதல்

தலைவன் பரத்தையிடம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, தலைவியின் கோபத்தைத் தணிக்க மகனைப் பயன்படுத்துவதை ஐங்குறுநூறு விவரிக்கிறது. " நின்னினும் சிறந்தோன் புதல்வன் இவனைக் கொண்டுபுகல் கின்றீயால் ஐய! தன்பார்ப்புக் கற்பின் மலிந்த கண்ணினள்..." (ஐங்குறுநூறு: 401) . "ஐயனே! உன்னைவிடச் சிறந்தவனான உன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாயே? உன் மகனைக் கண்டதும் அவனது தாய் (தலைவி) தன் கோபம் மறந்து மகிழும் போது சேர்ந்து கொள்ளலாமென்பதுதானே உம் கோளாறு?" என, தோழி கலாய்க்கிறாள்.

கண்ணின் பிம்பம்

" கண்ணுள்ளின் நின்றார் எவராகொல்? பண்ணை எம்மேல் கடுத்தார் பெரிது." (திருக்குறள்: 1313) .  உம் கண்ணுக்குள் யாரோ ஒரு பெண் தெரிகின்றாள்? யார் அவளெனக் கேட்டு அக்கப்போர், அவனது கண்களில் தெரிவது தம் உருவம்தான் என்பதையும் கடந்து.

இயற்கை தந்த சாட்சி

“ தினைத்தாள் அன்ன கால செங்கால் நாரை நல்அலகு பார்க்கும் ஊரன் எம்மை நீயென்றோனே." (குறுந்தொகை: 25) ”. காட்டில் வைத்து அவன் அவளிடம் உறுதி கூறிய போது, தினைத்தாள் போன்ற கால்களை உடைய ஒரு நாரை மட்டும் மீனுக்காகக் காத்திருந்தது (அதுவும் மீன் பிடிப்பதில்தான் கவனமாக இருந்தது). அதாவது, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும் அந்த நாரையைப் போல நீயுமன்றோ எனச் சொல்லாமல் சொல்லி ஊடல் புரிகின்றாள்.

பல்லி சொல்லுதல்

" கல்லென் கானத்துத் தேன்மீக் கொள்பவர்... பல்லிப் பாங்கில் சொல்லும்..." (நற்றிணை: 169) . தலைவன் வருவதைத் தெரிவிக்கும் விதமாகப் பல்லி சத்தம் போடுகிறது (நற்சொல்). "பல்லியே! நீ சொல்வது உண்மையானால் என் காதலன் இப்போதே வருவான்" என்று தலைவி பல்லியிடம் உரையாடும் அளவுக்குப் பிரிவு அவளை வாட்டுகிறது. இதுவே பின்னாளில், கெளளி கத்தினால் நல்லூழ் எனும் வழக்காறாக மாறிப் போனதாகவும் இருக்கலாம்.

காதல் நோய்

காதல் நோய்க்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. மற்ற நோய்களுக்கு மருந்து வேறு எங்காவது கிடைக்கும். ஆனால் காதல் நோயைத் தந்தவனே அதற்கு மருந்தாகவும் இருப்பான். " நோய் தந்தவர் மருந்தாகார் எனின்..." (கலித்தொகை) . தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை, கனவென்னைக் கொத்தி தின்றால் பரவாயில்லை, காதல் பிசாசே காதல் பிசாசே!

ஆதலினால் காதல் புரிவீர்! ❤️❤️‍🔥

-பழமைபேசி. 02/12/2026.


12/27/2025

பண்புத்தமிழ்

 


பண்புத்தமிழ்

பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு.

1. சொற்களில் கண்ணியம்

தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது.

2. இலக்கியங்களில் பண்பாடு

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

3. விருந்தோம்பல்

தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன.

4. பணிவும் அன்பும்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி.

1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர். 

நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும்.

hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று.

மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு.

வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?!

சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும்.

சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர்-அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி.

𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰.

-பழமைபேசி.