3/21/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲 𝐫𝐮𝐥𝐞

பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம் சுவடுகள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். அவற்றுக்கு எவரும் அணை போட்டு விட முடியாது.

”மேன்மை அணி வரலாற்று வெற்றி கொள்கின்றது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பெருந்திரளாகத் தன்னார்வலர்கள் முனைந்து வருகின்றனர். குழுக்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளிப்படையாகப் பொதுவெளியில் பகிரப்படுகின்றது. கூட்ட அறிக்கைகள் பகிரப்படுகின்றன. விழாக்கள் வெற்றிகரமாக நிகழ்கின்றன. குழுக்கள் இயங்குகின்றன. தரவு சேமிப்பு. முதன்முதலாக மாவீரர்நாள் கடைபிடிப்பு. தகவல் தொடர்பில் முனைப்பு”, இப்படியாக ஒரு தோற்றம்.

“ஒருமித்த வெற்றி. வாட்சாப் குழுவில் நீக்கம். ஆயுள் உறுப்பினர் நீக்கம்.  சலசலப்பு. விழாவில் சலசலப்பு. சிலர் தத்தம் பணிகளில் இருந்து ஒதுங்கல். முதலாம் ஆண்டைப் போல, இரண்டாம் ஆண்டில் குழுக்கள் இயங்காமை. எழுத்தாளர் அழைப்பு குறித்த சர்ச்சை. இலக்கியக்குழு சலசலப்பு. பழைய அருவி, மலர்கள் காணக்கிடைக்காமை. பேரவையின் அறிவுசார் சொத்துகள் தனிக்கடைகளாக இருப்பது, உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை”, இப்படியாக ஒரு தோற்றம்.

முதலாவது தோற்றத்தின்கண் இருப்பவருக்கு, இரண்டாவது தோற்றம் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டாவது மனத்தோற்றம் கொண்டிருப்பவருக்கு, முதலாவது தோற்றம் தோன்றுவதில்லை. ஏன்? முன்பிருந்த திறந்தவெளி உரையாடல் தற்போது கொல்லப்பட்டுவிட்டதுதான் காரணம்.  இது யாருக்கான தோல்வி?

தேர்தல் மாண்பின் விதையான நண்பர் சிவானந்தம், சென்றமுறை செயற்குழுவினரிடம் அழகாகச் சொன்னார், “தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதியானோர் என்பதனைப் பேரவையே தேர்தல் அறிவிப்பின் ஒருபகுதியாக வெளியிட வேண்டும். அல்லாவிடில், எல்லோரும் தகுதியானவர்களேயென அறிவித்து, எல்லோரையும் போட்டிக்குள் கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும்”. விழுமியமார்ந்து இருப்பதுதான் ஒரு மனிதனுக்கான வெற்றியென்பதுதான் அடிப்படை.

𝐇𝐢𝐞𝐫𝐚𝐫𝐜𝐡𝐲 𝐨𝐟 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐚 𝐧𝐨𝐧𝐩𝐫𝐨𝐟𝐢𝐭:

  1. Federal Law/Tax Law (e.g., IRS regulations)
  2. State Statute/Law (e.g., State Nonprofit Corporation Act)
  3. Articles of Incorporation (Charter)
  4. Bylaws
  5. Board Policies/Procedures (e.g., Robert's Rules of Order)

தணிக்கைக்குழு அமைக்கப்படுகின்றது. வரிசையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள அமைப்பின் சட்டக்கோப்பில் உள்ள ஒரு சரத்தினை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவு. அந்த முடிவினைச் சான்றாகக் கொண்டு, செயற்குழுவில் ஒரு கதையாடல். அந்தக் கதையாடலின் தீர்வாக, நான்கு பேர் வரிசைப்படுத்தப்படுகின்றனர். அந்தக் கதையாடல் கோப்பு உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவர்கள் இன்னபிறருக்கு அனுப்பி வைப்பர். சமூகத்தில், அந்த நான்கு பேரின் மீதான அளவளாவல். ஒழுங்கைக் கட்டமைக்கிறோமெனும் பேரில், ஒழுங்கு தவறுவது சரியா?

இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, இலாபநோக்கற்ற அமைப்புகளில் வேலை செய்யும் தன்னார்வலருக்கான சட்டப்பாதுகாப்பினை அந்தந்த அமைப்புகள் உறுதி செய்யும் பொருட்டு, சட்டக்கோப்பு விதியை வைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு, பேரவையின் சட்டக்கோப்பில் ஈட்டுறுதிக்கான சரத்தும் உள்ளது. “Board Member of the Federation shall be indemnified by the Federation, பணிகளைச் செய்யும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு, சம்மேளனம் அந்த உறுப்பினருக்கு இழப்பீடு வழங்கும்” என்பதனை, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கைதான் சட்டக்கோப்பு. இதனைச் சற்றும் கருத்தும் கொள்ளாமல் செயற்படுவது, நீண்டகாலப் பார்வையில் பெரும் தீங்காகவே அமையும். “shall be" எனும் பதத்தின் தன்மையானது, கட்டாயத்தன்மையை வலியுறுத்துவதாகும்.

தங்களுக்குள் மட்டும் ஓங்கிய ஒற்றுமையை வைத்துக்கொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை, ’பழங்குடி மனப்பான்மை’ என உளவியலாளர்கள் குறிப்பிடுவர். அது உள்ளார்ந்த, ஒருங்கமைந்த சமூகவிழுமியத்தை ஒருபோதும் ஈட்டித்தராது. எல்லோரையும் இயங்கவிட்டு, அதிலிருந்து சிறப்பினை கடைந்தெடுப்பதுதான், பேரின்ப வெற்றியாக ஒருவருக்கான சுவடு(legacy) அமைய வேண்டுமேவொழிய, அதிகாரத்தின் குரலில் அமைவதாக இருக்கலாகாது; அது காலத்தின் பிற்பகுதியில் ஏசும்!

நெறிமுறைப் பிறழ்வுகள் (procedural violations) இனம்காணப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மாறாக, ’திருத்துகிறேன்’ என்ற போர்வையில் ஒழுங்குப் பிறழ்வுகள்(wilful violations) இடம்பெற்றுவிடக் கூடாது. முதலில் திருத்தப்பட வேண்டியது அமைப்பின் சட்டக்கோப்புதான்!

𝐑𝐞𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬; 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐞𝐫𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞𝐦!

-பழமைபேசி.




3/19/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫

ஃபிலிபஸ்டர் என்பது ஒரு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் முறையைத் தாமதப்படுத்த அல்லது முழுமையாகத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். ஒரு குறிப்பிட்ட சட்ட முன்வடிவு மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்க, ஒரு உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் குழு சபையில் மிக நீண்ட நேரம் உரையாற்றுவதே இதன் அடிப்படைச் செயல்பாடாகும். இதன் மூலம் விவாத நேரத்தை நீட்டித்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இந்த நடைமுறை அமெரிக்க செனட் சபையில் மிகவும் பிரபலம். அங்குள்ள விதிகளின்படி, ஒரு விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர 'குளோட்சர்' எனப்படும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு 100 உறுப்பினர்களில் 60 பேரின் ஆதரவு தேவை. ஒருவேளை ஆளுங்கட்சியிடம் இந்த அறுதிப் பெரும்பான்மை இல்லையெனில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஃபிலிபஸ்டர் முறையில் இடைவிடாது உரையாற்றுவர்; பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும்.

ஃபிலிபஸ்டர் செய்யும் உறுப்பினர்கள் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்பதால், அவர்கள் பேசுவதற்குத் தலைப்புச் சார்ந்த தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அமெரிக்க வரலாற்றில் சில செனட்டர்கள் சமையல் புத்தகங்கள், தொலைபேசி டைரக்டரிகள் , ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசித்து நேரத்தைக் கடத்தியுள்ளனர். 1957இல் சிவில் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக ஸ்ட்ரோம் தார்மண்ட் என்பவர் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி சாதனை படைத்தது இன்றும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் தனிச்சிறப்பே அதன் அரசியல் சாசனம்தான். ’ஒவ்வொரு மூலை முடுக்கில் இருப்போர், சமூகத்தில் ஒரு தனியாள் இருந்தாலும் அவரின் குரல்’ என ஒருங்கமைந்த சமூகமாக, எல்லாத் தரப்பையும் உள்ளடக்கிய சமூகமாக நாடு திகழ வேண்டுமெனப் பார்த்துப் பார்த்து முன்னோர்களால் செதுக்கப்பட்டிருப்பதன் ஒரு விழுமியச்சான்றுதான் இது, 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫.

பேரவையின் செயற்பாடுகளில் சிலவற்றை முன்வைத்து, முன்னாள் தமிழ்ச்சங்கத் தலைவர் ஒருவர் இத்தகு ஃபிலிபஸ்டரைக் கையிலெடுத்திருக்கின்றார். வாராவாரம் மின்னஞ்சல்கள் வருகின்றன. நமக்கு நமது பெட்டி நிறையக் கூடாது. மேலும், ’வாய்சுநோட்’ என்பதெல்லாம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் எவ்வளவு சொன்னாலும் சமூகம் கேட்பதில்லை. இஃகிஃகி. பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதுதான் அமெரிக்கமுறை.

𝐄𝐧𝐝𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐨𝐟𝐭𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐮𝐝𝐞𝐬𝐭 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 𝐬𝐢𝐥𝐞𝐧𝐭 𝐩𝐫𝐨𝐭𝐞𝐬𝐭.

-பழமைபேசி, 03/19/2026.

3/10/2026

தனித்தமிழின் தேவை: ஒரு பார்வை

தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட சீரிளமைத் திறம் வாய்ந்தது. ஒருகாலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழின் தனித்தன்மையின் மீது தாக்கம் கொண்டபோது, மறைமலை அடிகள், பாவாணர் போன்றோரின் பங்களிப்பால்  'தனித்தமிழ் இயக்கம்' உருவானது. நாம் ஏன் தனித்தமிழைக் கடைபிடிக்க வேண்டுமென்பதற்குப் பல அழுத்தமான காரணங்கள் உள்ளன.

ஒரு மொழியின் தனித்துவம் என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகைபடக் கலக்கும்போது, அந்த மொழியின் வேர்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து போகின்றன. இதனால் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும் சிதைந்து, ஒரு காலகட்டத்தில் அந்த மொழியே சிதைந்த நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ் சிதையாமல் அதன் ஆதி வடிவில் நிலைத்திருக்க, தனித்தமிழ்ப் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

அடுத்து, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையிலான வேர்ச்சொற்களைக் கொண்டது. புதிய கண்டுபிடிப்புகள் , புதுத் தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. நாம் பிற மொழிச் சொற்களை அப்படியே இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தும்போது, நம்முடைய சிந்தனைத் திறனும் புதிய சொற்களை உருவாக்கும் படைப்பாற்றலும் மங்கிப்போகின்றன. தமிழைத் தூய வடிவில் பயன்படுத்தும்போதுதான், அது காலத்திற்கேற்பத் தொடர் வளர்ச்சி அடைய முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் மொழியியல் சார்ந்த பற்றியம் மட்டுமன்று; அது நம் பண்பாட்டைக் காக்கும் அரண். ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அதன் மொழியில்தான் பொதிந்துள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை நாம் தடையின்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தமிழின் வேர்களை நாம் சிதைக்காமல் காக்க வேண்டும். பிறமொழிச் சொற்களின் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் நற்பணியாகும்.

சுருக்கமாகச் சொன்னால், தனித்தமிழ் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதன்று; மாறாக, தன் மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்து அதனை அழியாமல் காப்பதாகும். அன்றாடப் பேச்சுவழக்கில், ஆங்கிலம் , பிறமொழிச் சொற்களைக் குறைத்து, எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதனால் நாம் நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமன்று; அது தமிழின் தனித்துவமான இலக்கண மரபுகளை, தொன்மையான வழக்காறுகளையும் போற்றிப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா, அதன் மரபு சார்ந்த நடையில்தான் வாழ்கிறது. ஆனால், இன்று நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் வடமொழி, ஆங்கில மொழிகளின் இலக்கணத் தாக்கமும், சிந்தனை முறையும் ஊடுருவித் தமிழின் இயல்பான அழகைச் சிதைத்து வருகின்றன. இது ஒரு மொழிச் சிதைவு மட்டுமன்று, ஒரு பண்பாட்டு அடையாளத்தின் சிதைவுமாகும்.

பிறமொழி மரபுகளின் ஊடுருவலைக் களைவது இன்றியமையாதது. தமிழில் இல்லாதபிறமொழி எழுத்துகளையும், தத்திதச் சொற்களையும் பயன்படுத்துவதால் தமிழின் ஒலியியல் அமைப்பு மாறுகிறது. பழந்தமிழ் வழக்காறுகளைப் புறக்கணிப்பதும் தமிழின் செழுமையைக் குறைக்கிறது. தமிழ்ச்சொற்களிலேயே உயர்ந்த பொருளும் ஆழமான தத்துவமும் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற மரபுகளைக் கொண்டாடுவது நம் மொழியின் தற்சார்புத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது.

தற்காலத்தில் ஆங்கில மொழி மரபுகளின் ஆதிக்கம் தமிழை 'ஆங்கிலத் தமிழ்' வடிவாக மாற்றி வருகிறது. ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றித் தமிழில் எழுதுவது, தேவையற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்களைத் திணிப்பது போன்ற போக்குகள் பெருகியுள்ளன. கணினி, இணையம் போன்ற தற்காலத்துறைகளில், தமிழின் கலைச்சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவது, காலப்போக்கில் தமிழை ஒரு 'அடையாள மொழியாக' மட்டுமே சுருக்கிவிடும். ஆங்கில மரபுகளைக் களைந்து, தமிழின் தனித்துவமான வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது, தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகவும் நம்முள் குடிகொள்ளும்.

தமிழ்த்தாலிபான்கள், தமிழ்த்தீவிரவாதிகள், பிற்போக்காளர்கள்’ போன்ற சொல்லாட்சிக்கு ஆட்பட நேரிடும்தான். ஆனாலும் நாம்தான் ஒரு வேள்வியாகக் கருதிச் செயற்பட்டாக வேண்டும். அதுவே, தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் அவர்களின் நூற்றைம்பதாவது ஆண்டினைக் கொண்டாடுவதற்குப் பொருண்மியத்தை ஊட்டும்!

கூடுதலாக, “பிழை திருத்துபவரின் மனைவி” எனும் இச்சிறுகதையும் வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. https://shorturl.at/opVNd

-பழமைபேசி.

3/07/2026

பேரவையில் தேர்தல்

𝐓𝐡𝐢𝐧𝐤 𝐠𝐨𝐨𝐝, 𝐝𝐨 𝐠𝐨𝐨𝐝, 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐠𝐨𝐨𝐝.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு (House of Representatives) ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால், ஒரு பிரதிநிதி பதவியேற்ற அடுத்த ஓராண்டிற்குள்ளேயே அடுத்த தேர்தலுக்கான நிதி திரட்டலிலும், பரப்புரையிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதையே அரசியல் ஆய்வாளர்கள் "நிரந்தர தேர்தல் பரப்புரை" (Permanent Campaign) என்று அழைக்கிறார்கள். மேலும், செனட் சபையின் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தாலும், மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடப்பதால், நாடு எப்போதும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கிறது.

முக்கியமான அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் "உட்கட்சித் தேர்தல்கள்" (Primaries and Caucuses) மற்றொரு நீண்ட நெடிய செயல்முறையாகும். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக இந்தத் தேர்தல்கள் நடைபெறும். இதில் கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள். இது தவிர, மாநில அளவில் ஆளுநர்கள், அரசு வழக்கறிஞர்கள் , உள்ளூர் அளவில் பள்ளி வாரிய உறுப்பினர்கள், நகர மேயர்கள், வீட்டு உரிமையாளர் சங்கங்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பொறுப்புகளுக்குத் தனித்தனியான கால அட்டவணையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இறுதியாக, அமெரிக்காவில் "நேரடி மக்கட்பங்களிப்பு" ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல மாநிலங்களில் சட்ட திருத்தங்கள் அல்லது புதிய வரிகள் குறித்து மக்களிடம் நேரடியாகக் கருத்து கேட்கும் "வாக்கெடுப்பு முன்முயற்சிகள்" (Ballot Initiatives) தேர்தல் சமயங்களில் இடம்பெறும். இவ்வளவு நிலைகளில் தேர்தல்கள் நடப்பதால்தான், அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு தேர்தலுக்கான வாக்குப்பதிவு அல்லது பரப்புரை எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு தேர்தல்நாடு.

நேற்றைக்கு, 03/06/2026, மகளார் வயலினிசை வாசிக்கும் காணொலியைப் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்தவர்கள் அழைத்துப் பாராட்டிப் பேசியதோடு, அவர்களில் சிலர், என்ன பழமை, மார்ச் வந்துவிட்டதெனச் சொல்லித் துருவினார்கள். இஃகிஃகி.

தேர்தல்நாட்டில் இருந்து கொண்டு, தேர்தலே இடம்பெறாத சூழல் பேரவையில் நிலவி வந்தது. 2016ஆம் ஆண்டு, நண்பர் சிவானந்தம் அவர்கள் போட்டியிட்டார். பேசினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைநோக்குப் பார்வையில் அவர் சொன்னது, ’தோற்பது, வெல்வது முக்கியமில்லை பழமை; உறுப்பினராட்சியைக் கட்டமைப்பது நம் நோக்கம். ஆக்கிரமிப்புகள் அகலவேண்டும். அதுதான் மேன்மைக்கு வழிவகுக்கும்’. தேர்தலில் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை; ஆனாலும், தொடர்ந்து முறையான தேர்தல், இப்படியிப்படி நடத்துதல் அமைப்புக்குச் சிறப்புச் சேர்க்குமெனச் சொல்லி வலியுறுத்தி, அழுத்தம் கொடுத்து வந்தார். நாங்களும் உடன் நின்றோம். அதன்விளைவு, நண்பர் கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் பங்களிப்பில் இணையவழித் தேர்தலுக்கான கட்டமைப்பு வேலைகள் இடம் பெற்று, வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுதான் முழுமையான தேர்தலுக்கான விதை.

இணையவழியில், 2018, 2020, 2022 என அடுத்தடுத்துத் தேர்தல்கள். “நான் இன்னிக்கி நிக்கிறன். இதைப் பார்த்திட்டு, நாளைக்கு இன்னும் சிலர் வருவாங்கல்ல?”. அதுதான் தொலைநோக்குப் பார்வை. நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் புதியவர்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தோம். 2024, தேர்தல். பேரவையின் வரலாற்றில் ஒரு மைல்கல். ஒட்டுமொத்த எல்லா இடங்களுக்குமான இணையவழித் தேர்தல். இதற்கான முதற்புள்ளி, 2016ஆம் ஆண்டுத் தேர்தல்.

அனுபவசாலிகளுடன் புதிய தலைமுறையினர் தேர்தலில் போட்டியிடுவதும் வாக்களிப்பதும், கொள்கை முடிவுகளில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது. பொறுப்புகளில் ஏற்கனவே இருந்தவர்கள், இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சிந்திக்கும் வேளையில், புதியவர்கள் புலப்பட்டிராத அன்றாடத் தேவைகளைத் துணிச்சலுடன் முன்வைக்கிறார்கள். சமூக சேவையாகக் கருதி வரும் புதிய ரத்தம், தேய்வழக்குகளில் இருந்து விடுபட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஒரு வாக்கு, உங்கள் வேட்புமனு என்பது ஒரு தனிநபரின் முயற்சி மட்டுமன்று, அது வரும் சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச்செல்லும் ஒரு சிறந்த மக்களாட்சிப் பரிசாகும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கத் தமிழரின் முகம். மேம்பாட்டுப் பணிகள், திட்டங்களை முன்வைத்து வெளிப்படையானதொரு போக்குடன், எவரும் தேர்தலை எதிர்கொள்ளலாம். ஏனென்றால் இது ஒரு தேர்தல்நாடு. சாதி, சமயம், அரசியல், தன்விளம்பரமோகம், சார்புச்செயற்பாடு  முதலானவற்றை ஒதுக்கிவிட்டு, மேம்பாட்டுக்கானதொரு வேள்வியாக,  பலரும் களம் காண வேண்டுமென்பதே நம் அவா! 𝐘𝐨𝐮𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬. 𝐇𝐞𝐥𝐩 𝐬𝐡𝐚𝐩𝐞 𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞!!

-பழமைபேசி, 03/07/2026.

2/23/2026

அறையில் அடைபட்ட 13 ஆண்டுகள்

ஜினி 1957இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தார். அவருக்குச் சுமார் 20 மாதங்கள் இருக்கும்போதே, அவரது தந்தை அவரை ஒரு சிறிய இருண்ட அறைக்குள் வைத்துப் பூட்டினார். அடுத்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஜினி வெளி உலகத்தையே பார்க்கவில்லை. ஒரு சிறிய நாற்காலியில் (Potty chair) அவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். யாரிடமும் பேசவோ, சத்தம் போடவோ அவருக்கு அனுமதி இல்லை. ஜினி சத்தம் போட்டால் அவரது தந்தை அவரை ஒரு நாயைப் போல உறுமிப் பயமுறுத்துவார் அல்லது கடுமையாகத் தண்டிப்பார். இதனால் ஜினி சத்தமே இல்லாமல் வளரக் பழகிக்கொண்டார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜினியின் தாயார் தனது கணவரிடமிருந்து தப்பித்து, 13 வயதான ஜினியை அழைத்துக்கொண்டு அரசு அலுவலகத்திற்கு உதவி கேட்டுச் சென்றார். அங்குள்ள அதிகாரிகள் ஜினியைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். 13 வயதான அவர், பார்க்க 6 வயதுச் சிறுமி போல மெலிந்து காணப்பட்டார். அவருக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை, யாரையும் நேராகப் பார்க்கவில்லை, மேலும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியவில்லை. உடனடியாக அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவரது தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜினியின் நிலை தெரிந்தவுடன், உலகின் சிறந்த மொழியியலாளர்களும் உளவியலாளர்களும் அவரைப் பற்றி ஆராய முன்வந்தனர். "ஒரு குழந்தை தனது வளரிளம் பருவத்திற்குள் (Puberty) மொழியைக் கற்கவில்லை என்றால், அதன் பிறகு ஒரு மொழியை முழுமையாகக் கற்க முடியுமா?" என்ற பெரிய கேள்விக்கு விடை தேட ஜினி ஒரு முக்கிய ஆதாரமாக மாறினார். அவருக்குப் பல ஆண்டுகள் தீவிரப் பயிற்சியும் அன்பும் வழங்கப்பட்டது. அவர் மெதுவாகச் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டார், மற்றவர்களுடன் சைகை மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஆராய்ச்சியின் முடிவில் ஒரு கசப்பான உண்மை தெரிந்தது. ஜினியால் தனித்தனி வார்த்தைகளைச் சொல்ல முடிந்ததே தவிர, ஒரு மொழிக்கே உரிய இலக்கணத்தோடு (Grammar) வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. உதாரணமாக, "Appple me eat" (ஆப்பிள் நான் சாப்பிடு) என்பது போன்ற உடைந்த வாக்கியங்களையே அவர் பேசினார். மனித மூளையில் மொழி வளர்ச்சிக்கான ஒரு 'குறிப்பிட்ட காலம்' (Critical Period) கடந்துவிட்டதால், அவரால் ஒரு தாய்மொழியைப் போல சரளமாகப் பேசும் திறனைப் பெற முடியவில்லை என்பது உறுதியானது.

கவலைக்குரியவிதமாக, ஜினிக்கான அரசு நிதி உதவி ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அவர் பல்வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தமும், மோசமான கவனிப்பும் அவர் கற்றுக்கொண்ட அரைகுறை மொழித் திறனையும் மறக்கச் செய்தது. அவர் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றார். தற்போது 60 வயதைக் கடந்த ஜினி, கலிபோர்னியாவில் ஒரு ரகசியமான அரசுக் காப்பகத்தில் வசித்து வருகிறார். ஜினியின் கதை, மனித வளர்ச்சிக்குத் 'தொடர்பு' (Communication), 'அன்பு' எவ்வளவு அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு துயரமான பாடமாகும். அந்தப் பாடத்தின் முக்கியமான கூறு, துவக்கநாள்களில் ஊட்டப்படும் தாய்மொழியின் விதைப்பே அவ்வுயிருக்கான ஊட்டம். அத்தகு ஊட்டமில்லையேல் எதுவுமேயில்லை!

𝐘𝐨𝐮𝐫 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐨𝐧𝐠𝐮𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐡𝐞𝐚𝐫𝐭𝐛𝐞𝐚𝐭, 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐢𝐭.

-பழமைபேசி.

2/17/2026

2026: அமெரிக்கச் சமூகத்தின் புதிய மாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2025, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தைக் கடந்து, தற்போது மக்கள் அதிக விலைவாசி, அதீத தொழில்நுட்பம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுடன் கூடிய ஒரு "புதிய இயல்பினை” ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களின் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த முக்கிய மாற்றங்கள் , நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவையெவை?

"பெருவரவுசெலவு"க் கலாச்சாரம், முன்பெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தற்போது சிக்கனமாக இருப்பது அவமானத்திற்குரியது அல்ல. சிக்கனவரவுசெலவு பிரபலமாகி வருகிறது. அதாவது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் செலவு வைக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கும்போது, "மன்னிக்கவும், இது என் திட்டத்தில் இல்லை" என்று வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல் மறுப்பதும் தற்போது இயல்பாகிவிட்டது. மற்றவர்களை திருப்திப்படுத்த செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது உறவை பாதிக்காது; மாறாக மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறைப்பு , வயதான தோற்றத்தை மறைப்பது போன்றவை பழைய வாடிக்கையாக ஆகிவிட்டன. தற்போது, அனைவரது கவனமும் மனநலத்தின் மீது திரும்பியுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் கூட, அறிவாற்றல் திறன், கவனக்குவிப்புத் திறன் குறைவது குறித்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, உடல் அழகை விட, நல்ல தூக்கம் , மனத் தெளிவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அன்றாடம், 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை உணர வேண்டும். வெறும் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்காமல், சதுரங்கம் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது, நூல் வாசிப்பது போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம் நம் வாழ்வின் எல்லா இடங்களிலும் இருந்தாலும், மக்கள் தற்போது அதிலிருந்து சிறிது விலகி இருக்க விரும்புகிறார்கள். தொடுதிரையில் மூழ்கிக்கிடப்பதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களில் சாதாரண போன்களைப் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தற்போது "ஆஃப்லைன்" அனுபவங்களை அதிகம் தேடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது சில மணிநேரங்கள் போனை அணைத்துவிட்டு, குடும்பத்தினருடன், இயற்கையோடு நேரத்தைச் செலவிட வேண்டும். தொழில்நுட்பம் நம்மை ஆள விடாமல், நம் வேலைகளை எளிதாக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்து 10 நாட்களில் 10 இடங்களைப் பார்க்கும் சுற்றுலா முறை மாறிவிட்டது. "Slowcation" எனப்படும் நிதானமான பயண முறை பிரபலமாகி வருகிறது. அதாவது, விடுமுறையில் ஒரே இடத்தில் தங்கி, அந்த இடத்தின் கலாச்சாரத்தை ரசித்து, மன அமைதியுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். மேலும், கிளப்கள் , பார்ட்டிகளை விட, பூங்காக்கள், நூலகங்கள் போன்ற அமைதியான பொது இடங்களில் கூடுவதை மக்கள் விரும்புகிறார்கள். பயணங்களின் போது நிறைய இடங்களைப் பார்ப்பதை விட, மன அமைதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழுவாகச் சேர்ந்து நடைப்பயிற்சி செல்வது, விளையாடுவது போன்ற எளிய சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

வளைந்து கொடுக்கும் தொழில் வாழ்க்கை (Non-Linear Career), "ஒரே கம்பெனியில் வாழ்நாள் முழுவதும் வேலை" என்ற கோட்பாடு மறைந்து வருகிறது. மக்கள் தற்போது வருவாயைவிட விட, மனநலனுக்கும், சமச்சீர் வாழ்வுக்கும் (Work Life Balance) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல திறன்களை வளர்த்துக்கொள்வதும், தேவைக்கேற்ப வேலைகளை மாற்றிக்கொள்வதும், பகுதிநேர வேலைகளாகப் பலவற்றைச் செய்வதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த அண்மைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். "ஆடம்பரத்தை விட அமைதி முக்கியம்; வேகத்தை விட விவேகம் முக்கியம்." பணத்தை மிச்சப்படுத்துவதிலும், தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருப்பதிலும், உடல்நலத்தைப் பேணுவதிலும் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

புயல் வீசும்போது மரங்கள் வளையும், ஆனால் வேர்கள் உறுதியாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களை ஏற்கும் அதே வேளையில், நம் உறுதி, வலு, விழுமியங்களைப் பேணுவதே மெய்யான விழிப்புணர்வு.

பழமைபேசி, 02/17/2026.