2/23/2026

அறையில் அடைபட்ட 13 ஆண்டுகள்

ஜினி 1957இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தார். அவருக்குச் சுமார் 20 மாதங்கள் இருக்கும்போதே, அவரது தந்தை அவரை ஒரு சிறிய இருண்ட அறைக்குள் வைத்துப் பூட்டினார். அடுத்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஜினி வெளி உலகத்தையே பார்க்கவில்லை. ஒரு சிறிய நாற்காலியில் (Potty chair) அவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். யாரிடமும் பேசவோ, சத்தம் போடவோ அவருக்கு அனுமதி இல்லை. ஜினி சத்தம் போட்டால் அவரது தந்தை அவரை ஒரு நாயைப் போல உறுமிப் பயமுறுத்துவார் அல்லது கடுமையாகத் தண்டிப்பார். இதனால் ஜினி சத்தமே இல்லாமல் வளரக் பழகிக்கொண்டார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜினியின் தாயார் தனது கணவரிடமிருந்து தப்பித்து, 13 வயதான ஜினியை அழைத்துக்கொண்டு அரசு அலுவலகத்திற்கு உதவி கேட்டுச் சென்றார். அங்குள்ள அதிகாரிகள் ஜினியைப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். 13 வயதான அவர், பார்க்க 6 வயதுச் சிறுமி போல மெலிந்து காணப்பட்டார். அவருக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை, யாரையும் நேராகப் பார்க்கவில்லை, மேலும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியவில்லை. உடனடியாக அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவரது தந்தை கைது செய்யப்பட்டார். ஆனால், வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஜினியின் நிலை தெரிந்தவுடன், உலகின் சிறந்த மொழியியலாளர்களும் உளவியலாளர்களும் அவரைப் பற்றி ஆராய முன்வந்தனர். "ஒரு குழந்தை தனது வளரிளம் பருவத்திற்குள் (Puberty) மொழியைக் கற்கவில்லை என்றால், அதன் பிறகு ஒரு மொழியை முழுமையாகக் கற்க முடியுமா?" என்ற பெரிய கேள்விக்கு விடை தேட ஜினி ஒரு முக்கிய ஆதாரமாக மாறினார். அவருக்குப் பல ஆண்டுகள் தீவிரப் பயிற்சியும் அன்பும் வழங்கப்பட்டது. அவர் மெதுவாகச் சில ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டார், மற்றவர்களுடன் சைகை மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஆராய்ச்சியின் முடிவில் ஒரு கசப்பான உண்மை தெரிந்தது. ஜினியால் தனித்தனி வார்த்தைகளைச் சொல்ல முடிந்ததே தவிர, ஒரு மொழிக்கே உரிய இலக்கணத்தோடு (Grammar) வாக்கியங்களை அமைக்க முடியவில்லை. உதாரணமாக, "Appple me eat" (ஆப்பிள் நான் சாப்பிடு) என்பது போன்ற உடைந்த வாக்கியங்களையே அவர் பேசினார். மனித மூளையில் மொழி வளர்ச்சிக்கான ஒரு 'குறிப்பிட்ட காலம்' (Critical Period) கடந்துவிட்டதால், அவரால் ஒரு தாய்மொழியைப் போல சரளமாகப் பேசும் திறனைப் பெற முடியவில்லை என்பது உறுதியானது.

கவலைக்குரியவிதமாக, ஜினிக்கான அரசு நிதி உதவி ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அவர் பல்வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தமும், மோசமான கவனிப்பும் அவர் கற்றுக்கொண்ட அரைகுறை மொழித் திறனையும் மறக்கச் செய்தது. அவர் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றார். தற்போது 60 வயதைக் கடந்த ஜினி, கலிபோர்னியாவில் ஒரு ரகசியமான அரசுக் காப்பகத்தில் வசித்து வருகிறார். ஜினியின் கதை, மனித வளர்ச்சிக்குத் 'தொடர்பு' (Communication), 'அன்பு' எவ்வளவு அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு துயரமான பாடமாகும். அந்தப் பாடத்தின் முக்கியமான கூறு, துவக்கநாள்களில் ஊட்டப்படும் தாய்மொழியின் விதைப்பே அவ்வுயிருக்கான ஊட்டம். அத்தகு ஊட்டமில்லையேல் எதுவுமேயில்லை!

𝐘𝐨𝐮𝐫 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐭𝐨𝐧𝐠𝐮𝐞 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐡𝐞𝐚𝐫𝐭𝐛𝐞𝐚𝐭, 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐢𝐭.

-பழமைபேசி.

2/17/2026

2026: அமெரிக்கச் சமூகத்தின் புதிய மாற்றங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2025, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்தைக் கடந்து, தற்போது மக்கள் அதிக விலைவாசி, அதீத தொழில்நுட்பம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுடன் கூடிய ஒரு "புதிய இயல்பினை” ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களின் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த முக்கிய மாற்றங்கள் , நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவையெவை?

"பெருவரவுசெலவு"க் கலாச்சாரம், முன்பெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தற்போது சிக்கனமாக இருப்பது அவமானத்திற்குரியது அல்ல. சிக்கனவரவுசெலவு பிரபலமாகி வருகிறது. அதாவது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் செலவு வைக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கும்போது, "மன்னிக்கவும், இது என் திட்டத்தில் இல்லை" என்று வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல் மறுப்பதும் தற்போது இயல்பாகிவிட்டது. மற்றவர்களை திருப்திப்படுத்த செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது உறவை பாதிக்காது; மாறாக மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறைப்பு , வயதான தோற்றத்தை மறைப்பது போன்றவை பழைய வாடிக்கையாக ஆகிவிட்டன. தற்போது, அனைவரது கவனமும் மனநலத்தின் மீது திரும்பியுள்ளது. இளைஞர்கள் மத்தியிலும் கூட, அறிவாற்றல் திறன், கவனக்குவிப்புத் திறன் குறைவது குறித்த கவலை அதிகரித்துள்ளது. எனவே, உடல் அழகை விட, நல்ல தூக்கம் , மனத் தெளிவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அன்றாடம், 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, அது ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை உணர வேண்டும். வெறும் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்காமல், சதுரங்கம் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது, நூல் வாசிப்பது போன்ற மூளைக்கு வேலை தரும் பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம் நம் வாழ்வின் எல்லா இடங்களிலும் இருந்தாலும், மக்கள் தற்போது அதிலிருந்து சிறிது விலகி இருக்க விரும்புகிறார்கள். தொடுதிரையில் மூழ்கிக்கிடப்பதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களில் சாதாரண போன்களைப் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தற்போது "ஆஃப்லைன்" அனுபவங்களை அதிகம் தேடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது சில மணிநேரங்கள் போனை அணைத்துவிட்டு, குடும்பத்தினருடன், இயற்கையோடு நேரத்தைச் செலவிட வேண்டும். தொழில்நுட்பம் நம்மை ஆள விடாமல், நம் வேலைகளை எளிதாக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்து 10 நாட்களில் 10 இடங்களைப் பார்க்கும் சுற்றுலா முறை மாறிவிட்டது. "Slowcation" எனப்படும் நிதானமான பயண முறை பிரபலமாகி வருகிறது. அதாவது, விடுமுறையில் ஒரே இடத்தில் தங்கி, அந்த இடத்தின் கலாச்சாரத்தை ரசித்து, மன அமைதியுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். மேலும், கிளப்கள் , பார்ட்டிகளை விட, பூங்காக்கள், நூலகங்கள் போன்ற அமைதியான பொது இடங்களில் கூடுவதை மக்கள் விரும்புகிறார்கள். பயணங்களின் போது நிறைய இடங்களைப் பார்ப்பதை விட, மன அமைதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழுவாகச் சேர்ந்து நடைப்பயிற்சி செல்வது, விளையாடுவது போன்ற எளிய சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

வளைந்து கொடுக்கும் தொழில் வாழ்க்கை (Non-Linear Career), "ஒரே கம்பெனியில் வாழ்நாள் முழுவதும் வேலை" என்ற கோட்பாடு மறைந்து வருகிறது. மக்கள் தற்போது வருவாயைவிட விட, மனநலனுக்கும், சமச்சீர் வாழ்வுக்கும் (Work Life Balance) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல திறன்களை வளர்த்துக்கொள்வதும், தேவைக்கேற்ப வேலைகளை மாற்றிக்கொள்வதும், பகுதிநேர வேலைகளாகப் பலவற்றைச் செய்வதும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த அண்மைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். "ஆடம்பரத்தை விட அமைதி முக்கியம்; வேகத்தை விட விவேகம் முக்கியம்." பணத்தை மிச்சப்படுத்துவதிலும், தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருப்பதிலும், உடல்நலத்தைப் பேணுவதிலும் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

புயல் வீசும்போது மரங்கள் வளையும், ஆனால் வேர்கள் உறுதியாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களை ஏற்கும் அதே வேளையில், நம் உறுதி, வலு, விழுமியங்களைப் பேணுவதே மெய்யான விழிப்புணர்வு.

பழமைபேசி, 02/17/2026.

2/12/2026

சிறுகோட்டுப் பெரும்பழம்

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு சார்பாக அடுத்து இடம் பெறவிருக்கும் கூட்டத்தின் தலைப்பு, சிறுகோட்டுப் பெரும்பழம் . இந்தத் தலைப்பில் ஏராளமான கதை, கவிதைகள், கட்டுரைகள் காலங்காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு, குறுந்தொகையின் இச்சொல்லாடல் புகழ்வாய்ந்தது. சிறுகோடு போலுள்ள காம்பானது  பெரும்பழத்தையும் தாங்குவது போல, காம்பு போன்ற மெல்லுயிரானது பலாப்பழம் போன்ற காதல்பாரத்தையும் சுமக்கின்றதெனும் உவமைதாம் இது.

இன்றைக்கு ரீல்சு எனப்படும் மீச்சிறுகுறும்படங்களில் இடம்பெறும் தலைவன் தலைவி க்கிடையேயான ஊடல்ப் பகடிகளில் பெரும்பாலானவற்றின் வேர், தமிழ்ச்சங்க இலக்கியங்களென்றால் வியப்படைவீர்கள். அத்தனையும், தமிழின் அகத்திணையில் அடக்கம்.

தும்மல் அக்கப்போர்

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள இந்தத் துணுக்கு மிகவும் பிரபலம்: " வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று." (திருக்குறள்: 1317 ). நான் தும்மியபோது "நூறாண்டு வாழ்க" என்று வாழ்த்தினாள். ஆனால், அடுத்த கணமே "யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு அழுது பிணங்கி அக்கப்போர் செய்தாள்.

கனவிலும் ஊடல்

"நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர் காணப் பவர்." (திருக்குறள்: 1219). கனவிலாவது என் காதலரைக் காண முடிந்ததே என்று மகிழாமல், கனவில் வந்தவரிடமும் ஏன் நேரில் வரவில்லை என்று ஊடல் கொள்கிறாள். கனவைக் கலைத்து நினைவாவதன் வாயிலாக, மீண்டும் பிரிவில் என்னை ஆழ்த்தும் விளையாட்டாயெனவும் சிணுங்கி அக்கப்போர் புரிகிறாள்.

மகனைத் தூதுவிடுதல்

தலைவன் பரத்தையிடம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, தலைவியின் கோபத்தைத் தணிக்க மகனைப் பயன்படுத்துவதை ஐங்குறுநூறு விவரிக்கிறது. " நின்னினும் சிறந்தோன் புதல்வன் இவனைக் கொண்டுபுகல் கின்றீயால் ஐய! தன்பார்ப்புக் கற்பின் மலிந்த கண்ணினள்..." (ஐங்குறுநூறு: 401) . "ஐயனே! உன்னைவிடச் சிறந்தவனான உன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறாயே? உன் மகனைக் கண்டதும் அவனது தாய் (தலைவி) தன் கோபம் மறந்து மகிழும் போது சேர்ந்து கொள்ளலாமென்பதுதானே உம் கோளாறு?" என, தோழி கலாய்க்கிறாள்.

கண்ணின் பிம்பம்

" கண்ணுள்ளின் நின்றார் எவராகொல்? பண்ணை எம்மேல் கடுத்தார் பெரிது." (திருக்குறள்: 1313) .  உம் கண்ணுக்குள் யாரோ ஒரு பெண் தெரிகின்றாள்? யார் அவளெனக் கேட்டு அக்கப்போர், அவனது கண்களில் தெரிவது தம் உருவம்தான் என்பதையும் கடந்து.

இயற்கை தந்த சாட்சி

“ தினைத்தாள் அன்ன கால செங்கால் நாரை நல்அலகு பார்க்கும் ஊரன் எம்மை நீயென்றோனே." (குறுந்தொகை: 25) ”. காட்டில் வைத்து அவன் அவளிடம் உறுதி கூறிய போது, தினைத்தாள் போன்ற கால்களை உடைய ஒரு நாரை மட்டும் மீனுக்காகக் காத்திருந்தது (அதுவும் மீன் பிடிப்பதில்தான் கவனமாக இருந்தது). அதாவது, காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கும் அந்த நாரையைப் போல நீயுமன்றோ எனச் சொல்லாமல் சொல்லி ஊடல் புரிகின்றாள்.

பல்லி சொல்லுதல்

" கல்லென் கானத்துத் தேன்மீக் கொள்பவர்... பல்லிப் பாங்கில் சொல்லும்..." (நற்றிணை: 169) . தலைவன் வருவதைத் தெரிவிக்கும் விதமாகப் பல்லி சத்தம் போடுகிறது (நற்சொல்). "பல்லியே! நீ சொல்வது உண்மையானால் என் காதலன் இப்போதே வருவான்" என்று தலைவி பல்லியிடம் உரையாடும் அளவுக்குப் பிரிவு அவளை வாட்டுகிறது. இதுவே பின்னாளில், கெளளி கத்தினால் நல்லூழ் எனும் வழக்காறாக மாறிப் போனதாகவும் இருக்கலாம்.

காதல் நோய்

காதல் நோய்க்கு ஒரு விசித்திரமான தன்மை உண்டு. மற்ற நோய்களுக்கு மருந்து வேறு எங்காவது கிடைக்கும். ஆனால் காதல் நோயைத் தந்தவனே அதற்கு மருந்தாகவும் இருப்பான். " நோய் தந்தவர் மருந்தாகார் எனின்..." (கலித்தொகை) . தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை, கனவென்னைக் கொத்தி தின்றால் பரவாயில்லை, காதல் பிசாசே காதல் பிசாசே!

ஆதலினால் காதல் புரிவீர்! ❤️❤️‍🔥

-பழமைபேசி. 02/12/2026.


12/27/2025

பண்புத்தமிழ்

 


பண்புத்தமிழ்

பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு.

1. சொற்களில் கண்ணியம்

தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது.

2. இலக்கியங்களில் பண்பாடு

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

3. விருந்தோம்பல்

தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன.

4. பணிவும் அன்பும்

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி.

1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர். 

நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும்.

hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று.

மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு.

வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?!

சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும்.

சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர்-அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி.

𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰.

-பழமைபேசி.

 

12/24/2025

நத்தார் நாளும் இலக்கியமும்

நூற்று அறுபதுக்கும் மேலான நாடுகளில், பல நூறு கோடி மக்களால் கடைபிடிக்கப்பட்டும், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டும் கொண்டாடப்படுகின்ற நாள் டிசம்பர் 25. 

சமூகத்தில் பண்டிகைகள் வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், மனித வாழ்வின் மிக முக்கியமான தேவைகளை ஈட்டிக் கொடுப்பனவாகவும் இருக்கின்றன. அவை அப்படியாக அமைந்திருக்கின்றன?

உழைப்பின்பாற்பட்டும் நியதியின்பாற்பட்டும் முசுவாக இருக்குமிந்த உலகில், மனிதர்கள் தனித்தனியாகப் பிரிந்து இருக்கின்றனர். பண்டிகைகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களை ஒன்று சேர்க்கின்றன. ஒன்றாக அமர்ந்து உண்ணும் விருந்து, பரிமாறப்படும் அன்பளிப்புகள் மனிதர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்துகின்றன.

பண்டிகைகள் ஒரு சமூகத்தின் வரலாறு, வழக்காறுகள், மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகம் எதை மதிக்கிறது, எதைப் போற்றுகிறது என்பதை அந்தச் சமூகத்தின் பண்டிகைகள் வெளிப்படுத்துகின்றன.

தொடர்ச்சியான வேலை, அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து ஒரு தற்காலிக விடுதலையைப் பண்டிகைகள் வழங்குகின்றன. வண்ணமயமான விளக்குகள், பாடல்கள், பண்டங்கள், உண்டாட்டுகள் என்பன மனத்திற்கு நேர்மறையானதும் புத்தாக்கமானதுமான ஆற்றலை உண்டாக்குகின்றன. பண்டிகைகள் "ஈகை" அல்லது "கொடுத்தல்" என்பதை வலியுறுத்துகின்றன. வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு பாலமாக இவை அமைகின்றன.

பண்டிகைகள் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கின்றன. புத்தாடைகள், பரிசுகள், உணவுப் பொருட்கள், பயணங்கள் மூலம் வணிகம் பெருகுகிறது. இது பலரின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக அமைகிறது.

இப்படியாகப்பட்ட நத்தார் நாளின் போது பார்க்கப்படுகின்றதும் அமெரிக்கச் செவ்வியல்த் திரைப்படமாகவும் It's a Wonderful Life (1946) இருக்கின்றதென்பதைப் பார்த்தோம்.  https://shorturl.at/Wed3c அதே பாங்கில், நத்தார் நாள் விடுப்பில் எல்லோராலும் வாசிக்கப்படுகின்ற செவ்வியல்ச் சிறுகதைகளும் உள்ளன. அவற்றுள் தலையாயக் கதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

The Gift of the Magi by O. Henry

டெல்லா மற்றும் ஜிம் என்ற இளம் தம்பதியினர் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தனர். அவர்களிடம் இரண்டு பொக்கிஷங்கள் இருந்தன: ஜிம்மிடம் அவனது தந்தை வழி வந்த தங்கக் கடிகாரம் இருந்தது; டெல்லாவிடம் முழங்கால் வரை நீளும் மிக அழகான நீண்ட கூந்தல் இருந்தது.

நத்தார் நாள்நெருங்கிய வேளையில், ஜிம்மிற்கு ஒரு விலையுயர்ந்த பரிசு வாங்க டெல்லாவிடம் வெறும் $1.87 மட்டுமே இருந்தது. தன் கணவன் மீது கொண்ட அளவற்ற அன்பால், அவள் ஒரு முடிவெடுத்தாள். ஒரு முடி திருத்தும் கடைக்குச் சென்று, தன் அழகான கூந்தலை 20 டாலருக்கு விற்றுவிட்டாள். அந்தப் பணத்தைக் கொண்டு, ஜிம்மின் தங்கக் கடிகாரத்திற்குப் பொருத்தமான ஒரு பிளாட்டினம் சங்கிலியை வாங்கினாள்.

அன்று இரவு ஜிம் வீட்டிற்கு வந்தபோது, மொட்டையடிக்கப்பட்ட நிலையில் இருந்த டெல்லாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். கோபத்தினால் அல்ல, அவன் கொண்டு வந்த பரிசினால். அவன் டெல்லாவிற்காக, அவள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட, விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட அழகான சீப்புகளை  பரிசாகக் கொண்டு வந்திருந்தான். அந்தச் சீப்புகளை வாங்குவதற்குத் தேவையான பணத்திற்காக, ஜிம் தன் மிக உயரிய பொக்கிஷமான தங்கக் கடிகாரத்தையே விற்றுவிட்டான்.

இப்போது டெல்லாவிடம் சீப்பு இருக்கிறது, ஆனால் முடி இல்லை. ஜிம்மிடம் சங்கிலி இருக்கிறது, ஆனால் கடிகாரம் இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் வாங்கிய பரிசுகள் அந்த நேரத்தில் பயன்படாமல் போனாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும் தியாகமுமே உலகிலேயே மிகச்சிறந்த பரிசாகக் கருதப்படுகிறது.

The Elves and the Shoemaker by Jacob Grimm and Wilhelm Grimm

ஒரு நேர்மையான காலணி தைப்பவர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அவரிடம் கடைசியாக ஒரே ஒரு ஜோடி காலணி தைப்பதற்கான தோல் மட்டுமே எஞ்சியிருந்தது. அன்று இரவு அந்தத் தோலை வெட்டி மேசை மீது வைத்துவிட்டு, "நாளை தைக்கலாம்" என்று உறங்கச் சென்றார்.

மறுநாள் காலை அவர் வேலைக்கு வந்தபோது, மேசை மீது தைக்கப்படாத தோலுக்குப் பதில், மிக நேர்த்தியாகத் தைக்கப்பட்ட ஒரு ஜோடி காலணிகள் இருப்பதைக் கண்டு வியந்தார். அந்த காலணிகள் அவ்வளவு அழகாக இருந்ததால், ஒரு வாடிக்கையாளர் அதை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார். அந்தப் பணத்தில் அவர் இரண்டு ஜோடி தோல்களை வாங்கினார். அடுத்தடுத்த நாட்களிலும் இதுவே தொடர்ந்தது. அவர் இரவில் வெட்டி வைக்கும் தோல்கள் அனைத்தும் மறுநாள் காலையில் அற்புதமான காலணிகளாக மாறின. விரைவில் அவர் பெரும் செல்வந்தரானார்.

உதவியாளர்கள் யார்? ஒருநாள் நத்தார் நாள் சமயத்தில், அந்த உதவியாளர்கள் யார் என்று கண்டறிய அவரும் அவர் மனைவியும் நள்ளிரவில் ஒளிந்திருந்து பார்த்தனர். அப்போது ஆடையின்றி இருந்த இரண்டு சிறிய குள்ள மனிதர்கள் அங்கு வந்து, மின்னல் வேகத்தில் காலணிகளைத் தைத்து முடித்துவிட்டு மறைந்தனர்.

அந்தக் குள்ள மனிதர்கள் குளிரில் ஆடையின்றி இருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்ட மனைவி, அவர்களுக்காகச் சிறிய சட்டைகளையும் டிரவுசர்களையும் தைத்தார். கணவர் சிறிய காலணிகளைச் செய்தார். அன்று இரவு தோலுக்குப் பதில் இந்த உடைகளை வைத்துவிட்டு அவர்கள் மறைந்து பார்த்தனர். உடைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்த குள்ள மனிதர்கள், அவற்றை அணிந்துகொண்டு ஆடிக்கொண்டே வெளியே சென்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் வரவில்லை, ஆனால் காலணி தைப்பவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

இப்படியாகக் கதைகள் வாயிலாக, ஒருவருக்கொருவர், இருப்பவர், வாய்ப்புக்கிடைத்தவர் முதலானோர் மற்றவர்களின்பால் அக்கறை கொள்வதையே சொல்லிச் சொல்கின்றன. அக்கறை கொள்வோம்; அன்பு செலுத்துவோம். நத்தார் நாள் வாழ்த்துகள்!

-பழமைபேசி.

12/20/2025

எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழிலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பிரபஞ்சன் (1945–Dec 21, 2018), புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் ஆவார். இவருடைய இயற்பெயர் எஸ். வைத்தியலிங்கம். மனித உறவுகளின் சிக்கல்கள், வரலாற்றுப் பின்னணிகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்துள்ளார்.

இவரது படைப்புகளில் மிக முக்கியமானது 'வானம் வசப்படும்' எனும் வரலாற்று நாவல். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்காக, 1995-ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை (1709–1761) என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பதிவாளர்.. இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநர் டூப்ளெக்ஸின் மிக நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றினார்.

பெண்களின் உணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த புரிதலுடனும் மரியாதையுடனும் தனது கதைகளில் கையாண்டவர் பிரபஞ்சன். மிகக் கடினமான தத்துவங்களைக் கூட பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய  அழகான தமிழ் நடையில் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'பெண்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2004ஆம் ஆண்டுத் தமிழ்விழாவுக்காக அமெரிக்கா வருகை புரிந்துள்ளார். பேரவை மாநாட்டில், மாந்தநேயமும் நுண்ணுணர்வும் நகையுணர்வும் கூடிய கதைகளைச் சொல்லி சிறப்பானதோர் உரையை வழங்கியதன் வாயிலாக, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றார்.

எழுத்தாளர் பயிற்சிப்பட்டறை, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாக்கூட்டமெனப் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார். https://shorturl.at/3xdl2 ஊருக்குச் சென்றான பின், அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துப் பேசியிருக்கின்றார்.

”நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது. நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்”. 21 ஆண்டுகளுக்கும் முன்னர்.

இந்தப் பின்னணியில், இன்று இடம் பெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கிய அமர்வு, https://shorturl.at/4719d நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாந்தநேய, வாழ்வியல்க்கதைகள், மானுடவியல் நுண்ணுணர்வுகள் ஏன் நமக்கு முக்கியமென்பதை பிரபஞ்சன் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.

அண்மையில் நாம் நேரடியாகப் பெற்ற அனுபவம். Holistic review in MD admissions is a mission-aligned selection process that evaluates applicants based on a balanced combination of Experiences, Attributes, and Academic Metrics (E-A-M). Rather than relying solely on test scores and GPAs, admissions committees assess how an individual’s unique journey and qualities will contribute to the medical school’s learning environment and the future physician workforce. 

நிறைமதிப்பீடுகள். ஆனால் கிடைக்குமா கிடைக்காதாயெனக் காத்துக் கிடக்கின்றனர். காத்துக் கிடப்பதென்பது பெரும் வாதை. அவ்வளவாக மதிப்பீடுகள் இல்லாத நிலையிலும் சிலருக்கு இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன. என்ன காரணம்? அவர்களின் மாந்தநேய அடிப்படையிலான அணுகுமுறையும் தன்னார்வப்பணிகளும்.

ஒருவருக்கு இத்தகைய மனப்பான்மை மனத்துள் தரிக்கப் பெற்றிருந்தால் சிறப்பு. சரி, ஒருவருக்கு அது எப்படி வாய்க்கப்பெறும்? இளம்வயதிலேயே வாழ்வியல்க் கதைகளைப் பெருமளவில் நுகர்ந்திருந்தால் மனப்பண்பாடு அமையப் பெற்று, சமூகத்துக்கான தொண்டு மனப்பான்மை உருப்பெறும்.

எழுத்தாளுமை பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள், காலமெல்லாம் நின்று வாழும்!

-பழமைபேசி.