2/12/2026
சிறுகோட்டுப் பெரும்பழம்
12/27/2025
பண்புத்தமிழ்
பண்புத்தமிழ்
பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு.
1. சொற்களில் கண்ணியம்
தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது.
2. இலக்கியங்களில் பண்பாடு
சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
3. விருந்தோம்பல்
தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன.
4. பணிவும் அன்பும்
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி.
1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர்.
நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும்.
hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று.
மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு.
’வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?!
சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும்.
சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர்-அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி.
𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰.
-பழமைபேசி.
12/24/2025
நத்தார் நாளும் இலக்கியமும்
12/20/2025
எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன்
தமிழிலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பிரபஞ்சன் (1945–Dec 21, 2018), புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் ஆவார். இவருடைய இயற்பெயர் எஸ். வைத்தியலிங்கம். மனித உறவுகளின் சிக்கல்கள், வரலாற்றுப் பின்னணிகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்துள்ளார்.
இவரது படைப்புகளில் மிக முக்கியமானது 'வானம் வசப்படும்' எனும் வரலாற்று நாவல். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்காக, 1995-ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை (1709–1761) என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பதிவாளர்.. இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநர் டூப்ளெக்ஸின் மிக நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றினார்.
பெண்களின் உணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த புரிதலுடனும் மரியாதையுடனும் தனது கதைகளில் கையாண்டவர் பிரபஞ்சன். மிகக் கடினமான தத்துவங்களைக் கூட பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய அழகான தமிழ் நடையில் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'பெண்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2004ஆம் ஆண்டுத் தமிழ்விழாவுக்காக அமெரிக்கா வருகை புரிந்துள்ளார். பேரவை மாநாட்டில், மாந்தநேயமும் நுண்ணுணர்வும் நகையுணர்வும் கூடிய கதைகளைச் சொல்லி சிறப்பானதோர் உரையை வழங்கியதன் வாயிலாக, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றார்.
எழுத்தாளர் பயிற்சிப்பட்டறை, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாக்கூட்டமெனப் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார். https://shorturl.at/3xdl2 ஊருக்குச் சென்றான பின், அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துப் பேசியிருக்கின்றார்.
”நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது. நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்”. 21 ஆண்டுகளுக்கும் முன்னர்.
இந்தப் பின்னணியில், இன்று இடம் பெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கிய அமர்வு, https://shorturl.at/4719d நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாந்தநேய, வாழ்வியல்க்கதைகள், மானுடவியல் நுண்ணுணர்வுகள் ஏன் நமக்கு முக்கியமென்பதை பிரபஞ்சன் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.
அண்மையில் நாம் நேரடியாகப் பெற்ற அனுபவம். Holistic review in MD admissions is a mission-aligned selection process that evaluates applicants based on a balanced combination of Experiences, Attributes, and Academic Metrics (E-A-M). Rather than relying solely on test scores and GPAs, admissions committees assess how an individual’s unique journey and qualities will contribute to the medical school’s learning environment and the future physician workforce.
நிறைமதிப்பீடுகள். ஆனால் கிடைக்குமா கிடைக்காதாயெனக் காத்துக் கிடக்கின்றனர். காத்துக் கிடப்பதென்பது பெரும் வாதை. அவ்வளவாக மதிப்பீடுகள் இல்லாத நிலையிலும் சிலருக்கு இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன. என்ன காரணம்? அவர்களின் மாந்தநேய அடிப்படையிலான அணுகுமுறையும் தன்னார்வப்பணிகளும்.
ஒருவருக்கு இத்தகைய மனப்பான்மை மனத்துள் தரிக்கப் பெற்றிருந்தால் சிறப்பு. சரி, ஒருவருக்கு அது எப்படி வாய்க்கப்பெறும்? இளம்வயதிலேயே வாழ்வியல்க் கதைகளைப் பெருமளவில் நுகர்ந்திருந்தால் மனப்பண்பாடு அமையப் பெற்று, சமூகத்துக்கான தொண்டு மனப்பான்மை உருப்பெறும்.
எழுத்தாளுமை பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள், காலமெல்லாம் நின்று வாழும்!
-பழமைபேசி.
12/17/2025
2025 பேரவைத் திருவிழா - பன்மைத்துவப் பெருவிழா
பண்பாட்டு மாநாடுகளில் சமநிலையைப் பேணுவதற்கான பல முக்கியமான பற்றியங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு விழாக்களில் பன்மைத்துவம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உயிர்ப்பாகும். பலதரப்பு மக்களுக்கும் உரிய கவனத்தைக் கொடுத்து, பங்களிப்புக்கான இடத்தைக் கொடுத்து, சமநிலையோடு நன்றி பாராட்டி ஒன்றிணைந்து கொண்டாடும் போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு தழைக்கின்றது. நம் பிள்ளைகள் இத்தகைய மாநாடுகளைப் பார்க்கும்போது, உலகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதென்பதை இயல்பாகவே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களையும் நம்மையும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றது.
🎭 உள்ளடக்கம், பல்சார்புப்பங்களிப்பு
பல்வேறு விழுமியங்கள், கோட்பாடுகளின் வெளிப்பாடுகள்; மாநாட்டில் விவாதிக்கப்படும், காட்சிப்படுத்தப்படும் விழுமியங்கள், சிந்தனைகள் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், பரந்துபட்ட, வட்டார, சகல தரப்புப் பண்பாடுகளையும் விருப்பங்களையும் சமமாக வெளிப்படுத்தவும் உட்பட்டதாயும் இருத்தல் வேண்டும்.
பல்வேறு கருப்பொருள்கள்: கலை, இலக்கியம், மொழி, வரலாறு, உணவு, இசை, உடை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பண்புகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூறு ஓங்கலான ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழமை, புதுமை: பாரம்பரிய, பழமையான பண்பாட்டு வடிவங்களுடன், சமகால பண்பாட்டுப் போக்குகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.
🎤 பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், அரங்குகள்
இணையான வாய்ப்பு: மாநாட்டுப் பேச்சாளர்கள், குழு விவாத அறிஞர்கள், வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலினச் சமநிலை, பல்வேறு வயதுக் குழுக்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மாறுபட்ட சிந்தனைகள்: கல்விசார் அறிஞர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
சிறுபான்மைக்குரல்: மாநாட்டில் குரல் குறைவாக ஒலிக்கக்கூடிய சிறுபான்மை, ஒதுங்குநிலைச் சமூகங்களின் பண்பாடுகளுக்கும் அவர்களின் தரப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
📝 நடைமுறை ஏற்பாடுகள்
மொழி அணுகல்த்தன்மை: பேச்சுகள், நிகழ்வுகள், ஆவணங்களைச் சீரான முறையிலும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காத வகையிலும் தொடர்ந்து இடம் பெறச்செய்தல் வேண்டும்.
வெளிப்படையான கொள்கைகள்: பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரையறைகள், கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
🧘 உரையாடல் அணுகுமுறை
திறந்தமனப்பாடு: விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், கருத்தாடல்கள் எல்லாத் தரப்பினருக்கும் இடமளிக்கக் கூடிய வகையிலும், பண்பட்ட முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை: எந்த ஒரு கூற்றினையும் தரப்பினையும் மதிப்புக் குறைவாக வெளிப்படுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், வியந்தோதலின் வீச்சு எல்லைமீறப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மறுமொழிகள்: மாநாடு முடிந்த பிறகு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெற்று, அடுத்த மாநாட்டில் சமநிலையை மேலும் மேம்படுத்த முயன்றாக வேண்டும்.
இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மாநாடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதைக்குரிய, பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு தளமாக அமைந்து விடுகின்றது. சிற்சிறு நகர்வுகளையும் நன்கு திட்டமிட்டு, அன்பையும் அக்கறையையும் சேர்த்துச் சேர்த்து, குருவி கூடு கட்டுவதைப் போல, ஒவ்வோர் இணுக்கு இணுக்காகக் கொணர்ந்து கொணர்ந்து, பின்னிப்பின்னிக் கட்டமைப்பதற்கான உழைப்பினை, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செய்கின்றபடியால்தான் இப்படியான மாநாடு நமக்கு வாய்க்கப் பெறுகின்றது. அத்தகைய கூட்டுப்பணிக்கு இடைஞ்சலாக, திட்டமிட்டுக் குறுக்கீடுகள் நிகழும்போது எவனொருவனும் அறச்சீற்றம் கொண்டாக வேண்டும். 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐬𝐞𝐞𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐨𝐟 𝐬𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐬𝐭𝐬.
ஜூலை 6, 2025. இலக்கியக் கூட்டத்தில் பேசிய ஆளுமைகள் எல்லோராலும் சொல்லப்பட்டு அன்று, வலியுறுத்திச் சொல்லப்பட்ட கருத்துதான் இது. ”பன்மைத்துவம் ஓங்கிய பெருவிழா, இந்தக்கால கட்டத்தில் இது போன்ற விழாக்களைத் தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத விழா”. குறிப்பாக, இலக்கிய ஆளுமைகள் சு.வேணுகோபால் அவர்களும், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ‘பெருமாள் முருகன் வரக்கூடாது; அண்ணாமலை வரக்கூடாது; ஸ்டாலின் ராஜாங்கம் வரக்கூடாது; செந்தலை கவுதமன் வரக்கூடாது”, இது போன்ற வரக்கூடாதுகள் பிற்போக்கானவை. எல்லாத் தரப்புகளும் வர வேண்டும். நமக்குள் பண்பட்ட உரையாடல்கள் நிகழவேண்டும். நமக்குள் இணக்கம் மேலோங்க வேண்டும். அழைக்கப்படுகின்ற விருந்திநர் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் சமநிலை தவறாமல், சீர்த்தன்மைப் பிறழ்வின்றிச் சகலகூறுகளும் இடம் பெற வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைப் பாரமாக்கி, மேட்டிமைகளைத் தூக்கித் திரிந்து கொண்டிருத்தல் என்றென்றும் ஆகாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
ஐயா மணியரசன் அவர்கள், தாமாகவே நம்மை அழைத்து, ’நீங்கள் யார்?, பல இடங்களில் உங்களைப் பார்க்கின்றேன், மங்காத தமிழென்று சங்கே முழங்கு என நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்கின்றேன்’ என்றெல்லாம் சொல்லி, பாவேந்தர் பாரதிதாசன் குறித்துத் தம் நினைவுகளைப் பகிர்ந்து ஊக்கமூட்டிப் பேசினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டு விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் செம்மாந்த விருந்தோம்பல்ப் பெருவிழா, பன்மைத்துவம் போற்றியதன் உச்சகட்டம். அதில் நாமும் பங்காற்றினோமென்பதில், தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்ப் பெருமை உண்டு. வாழிய நற்றமிழ்!
𝐌𝐞𝐠𝐚 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐨𝐩𝐭𝐢𝐦𝐢𝐬𝐦, 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐞𝐫𝐚𝐧𝐜𝐞 𝐣𝐨𝐢𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐬.
-பழமைபேசி.
#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#Inclusiveness
12/16/2025
பேரவை விழா 2025 - மாநாட்டு மேடை நிரல் மேலாண்மை
- பங்களிப்பாளர்கள், பேச்சாளர்கள், வீடியோ இடைவேளைகள், மேடை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அட்டவணையையும் இறுதி செய்தல்.
- அனைத்துப் பேச்சாளர்கள், பங்களிப்பாளர்களிடம் அவர்களின் ஸ்லைடுகள், வீடியோக்கள், இசைக் குறிப்புகளை முன்கூட்டியே சேகரித்தல்.
- ஒளி, ஒலி, வீடியோ தொடக்கம், பேச்சாளர் நுழைவு போன்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் குறிப்பையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிப் பட்டியல் ஆவணத்தை எழுதுதல்.
- உள்ளடக்கம் மற்றும் பேச்சாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு (மைக், மானிட்டர்கள், லைட்டிங்) வழிகாட்டியை வழங்குதல்.
- பேச்சாளர்கள், கலைஞர்கள் மற்றும் குழுவினர் வந்து செல்லும் பாதைகள் தெளிவாக இருக்க, மேடைக்குப் பின்னால் உள்ள பகுதிகளை வடிவமைத்தல்.
- அடுத்த பேச்சாளர் சரியான நேரத்தில், மைக்கைப் பொருத்திக்கொண்டு, மேடைக்குத் தயாராகக் காத்திருப்பதை உறுதி செய்தல்.
- நிகழ்ச்சிப் பட்டியலின் நேரத்தையும், நிகழ்நேர நேரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல். ஒரு பேச்சாளர் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சியின் நேர அட்டவணையைக் காக்க, அடுத்த பகுதியின் நேரத்தைக் குறைக்க தயாரிப்பாளருடன் ஒருங்கிணைத்தல்.
- விருதுவழங்கல், பாராட்டுரைகள், சிற்றுரைகள், நெறியுரைகள் முதலானவற்றை நேரத்துக்குத் தக்கபடி செயல்படுத்துதல்.
- ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாகக் குழுவினருக்குத் தீர்வை விரைவாகத் தெரிவித்து, பார்வையாளர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் பார்த்துக் கொள்வது.




.jpeg)

