அரசியல் களத்தில் ஒரு கட்சியின் வெற்றியையும், தேர்தல் நடைபெறும் முறையையும் தீர்மானிப்பதில் பல கணித விதிகளும் சட்டங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் குறிப்பாக கியூப் விதி, துவெர்ஜரின் விதி , ஷை டோரி காரணி ஆகியன தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யப் பெரிதும் உதவுகின்றன.
கியூப் விதி (Cube Law): வெற்றித்தரப்பின் ஊக்கப்புள்ளிகள்
கியூப் விதி என்பது தேர்தல் முறையில் ஒரு கட்சி பெறும் வாக்கு சதவீதத்தை வைத்து, அக்கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்பதைக் கணிக்கும் ஒரு நுட்பமான விதியாகும். குறிப்பாக, நேரடித் தேர்தல் முறை நிலவும் நாடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியின்படி, இரு முக்கிய கட்சிகளுக்கு இடையிலான வாக்குகளின் விகிதம் A:B என்றால், அவை வெல்லும் தொகுதிகளின் விகிதம் A^3:B^3 என்ற அளவில் இருக்கும்.இதன் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு கட்சி சிறிய அளவு கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்றாலும், அது இடங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வைத் தரும். உதாரணமாக, ஒரு கட்சி 5% கூடுதல் வாக்குகள் பெற்றால், அது "வெற்றியாளருக்கான போனஸ்" என்ற அடிப்படையில் பல மடங்கு அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வழிவகுக்கும். இது தேர்தல் கூட்டணிகளின் அவசியத்தையும், ஒவ்வொரு வாக்கு சதவீதமும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது.
எடுத்துக்காட்டாக,
வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 35% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 35*35*35, 91125:42,875, 729 : 343, சற்றேறக்குறைய திமுக+ 67% இடங்களும், அதிமுக+ 33% இடங்களும் பெறும்.
வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 40% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 40*40*40, 91125:64000, 729 : 512, சற்றேறக்குறைய திமுக+ 60% இடங்களும், அதிமுக+ 40% இடங்களும் பெறும்.
வாக்குச்சதவீதத்தில் திமுக+ 43%, அதிமுக+ 42% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 43*43*43 : 42*42*42, 79507:74088, சற்றேறக்குறைய திமுக+ 52% இடங்களும், அதிமுக+ 48% இடங்களும் பெறும்.
2021 தேர்தல்
திமுக+ வாக்குசதவீதம் 45.38%, 159 இடங்கள்; அதிமுக+ வாக்குசதவீதம் 39.71%, 75 இடங்கள்; கியூப் விதிப்படி: 45.38^3:39.71^3 - 93453:62618 - 60%:40% , ஆனால் திமுக+ 67% இடங்களும் அதிமுக+ 33% இடங்களும் பெற்றன.
துவெர்ஜரின் விதி (Duverger’s Law): கூட்டணி முறையின் உருவாக்கம்
பிரெஞ்சு சமூகவியலாளர் மாரிஸ் துவெர்ஜர் என்பவரால் முன்மொழியப்பட்ட இந்த விதி, ஒரு நாட்டின் தேர்தல் முறை எப்படி அந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறது. "யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி" என்ற ஒற்றை உறுப்பினர் தொகுதி முறை நிலவும் இடங்களில், காலப்போக்கில் பலமுனைப் போட்டிகள் மறைந்து, இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகச் சுருங்கும் என்று இந்த விதி கூறுகிறது.
இதற்குக் காரணம் " வீணாகும் வாக்குகள் " பற்றிய பயம் ஆகும். சிறிய கட்சிகளுக்கு வாக்களித்தால் அவை வெற்றி பெறாது என்று கருதும் வாக்காளர்கள், தங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான அல்லது வெற்றி வாய்ப்புள்ள கூட்டணிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குவார்கள். இது இறுதியில் ஒரு வலுவான கூட்டணி முறையை உருவாக்கி, சிறிய அல்லது மூன்றாம் தரப்புக் கட்சிகள் இல்லாமல் போவதினின்று காக்கின்றது.
பென்ஃபோர்ட் விதி
பென்ஃபோர்ட் விதி என்பது ஒரு பெரிய தரவுத் தொகுப்பில் உள்ள எண்களின் முதல் இலக்கம் எப்படி அமையும் என்பதைக் கூறும் ஒரு கணித விதியாகும். பொதுவாக 1 முதல் 9 வரையிலான எண்கள் முதல் இலக்கமாக வருவதற்குச் சமமான வாய்ப்பு (அதாவது தலா 11.1%) இருப்பதாக நாம் நினைப்போம். ஆனால், இயற்கையான தரவுகளில் '1' என்ற எண் முதல் இலக்கமாக வர 30.1% வாய்ப்புள்ளது என்றும், எண்களின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த வாய்ப்பு குறைந்து, '9' என்ற எண் முதல் இலக்கமாக வர வெறும் 4.6% மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் இந்த விதி நிரூபிக்கிறது.
தேர்தல் ஆய்வியலில் ( Psephology ), வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய இந்த விதி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நேர்மையான தேர்தலில் பதிவான வாக்குகள் பென்ஃபோர்ட் வரிசையைப் பின்பற்றும். ஆனால், யாராவது திட்டமிட்டுத் தரவுகளை மாற்றியமைத்தாலோ அல்லது போலி எண்களை உருவாக்கினாலோ, அந்த எண்கள் இந்த விதியிலிருந்து விலகிச் செல்லும். இதன் மூலம் எண்களின் பரவலைக் கொண்டே ஒரு தேர்தலில் அல்லது கணக்குத் தணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதை *அறிவியல்பூர்வமாகச்* சந்தேகிக்க முடியும்.
ஷை டோரி காரணி (Shy Tory Factor)
ஷை டோரி காரணி என்பது தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஏன் சில நேரங்களில் தோல்வியடைகின்றன என்பதை விளக்கும் ஒரு உளவியல் , அரசியல் கோட்பாடாகும். சில வாக்காளர்கள் சமூக ரீதியாக விமர்சிக்கப்படும் அல்லது "அன்பாப்புலர்" என்று கருதப்படும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பார்கள்; ஆனால், கருத்துக்கணிப்பாளர்கள் கேட்கும்போது தங்களின் உண்மையான விருப்பத்தை வெளியே சொல்லத் தயங்கி, மௌனம் காப்பார்கள் அல்லது நடுநிலையாகப் பேசுவார்கள்.இது வாக்காளர்களின் மனத்தயக்கம் காரணமாக ஏற்படுகிறது, அதாவது தங்களின் அரசியல் தேர்வு பிறரால் கேலிக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்கப்படுமோயென நினைத்து, அவர்கள் உண்மையை மறைப்பதே இதன் சாராம்சம்.
வாக்களிப்பது செயல், அதை வாசிப்பது ஒரு கலை.
-பழமைபேசி.
