5/15/2023

தெரிவுகள்

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

வாழ்க்கை என்பது தெரிவு. எப்படி? அன்றாடமும் வாழ்வு என்பது ஒவ்வொன்றுக்குமென எண்ணற்ற தெரிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் எந்தத் தெரிவை மேற்கொள்கின்றீர்களோ அதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் அடுத்த கணம், அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்பன எல்லாமும் அமையும். இப்படியாக வாழ்வின் முடிவுப் புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது, உங்களின் பயணம் உங்கள் தெரிவுகளால் ஆனதான பயணமாக இருக்கும்.

இனிய நண்பர் அவர். உடனே தொடர்பு கொண்டார். சந்திக்கும் ஆவல். "என்ன திருப்பி...." என்பதற்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டே இடைமறித்தேன், "ஏங்க, இது நம்ப கோயமுத்தூருங்க. எத்தினிவாட்டி வேணுமின்னாலும் வரலாம் போகலாம்", கலாய்த்தேன். 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.

புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொருமுறை தாயகம் வரும் போதும் இக்குறிப்பிட்ட வினாவை எதிர்கொண்டு பழகிப் போய் விட்டது. ஆம், அவர் கேட்க வந்தது, "இப்போதுதானே வந்து போனாய், மீண்டும் இவ்வளவு சீக்கிரமே வந்திருக்கின்றாயே? எல்லாம் சுபம்தானே?" 

இவ்வினாவின் தோற்றுவாய் என்பது இருவிதமான அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது மேற்கூறிய காரணம். இரண்டாவது, வெளிநாடு என்றாலே அடிக்கடி வந்து போக இயலாது. நான்கு, ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறைதான் என்பதான பொதுப்பழக்கமும் பொதுப்புத்தியும்.

இரண்டாவது அடிப்படை நிமித்தம்தான் நாம் "தெரிவுகள்(சாய்ஸஸ்)" என்பது பற்றிப் பேச வேண்டியதாகின்றது. ஆண்டுதோறும் வருவாயுடன் கூடிய விடுப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் உண்டு. தாயகம் வந்து செல்ல, சராசரியாக தனிநபருக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

பிறகு ஏன் அப்படியான பொதுப்பழக்கம் உண்டாகிற்று? விடுப்பு எடுப்பதால் பொறுப்பு உயர்வுகள், வணிக விரிவாக்கம், கல்வி மேம்பாடு, சேமிப்பு முதலானவை மந்தமாகும். ஆகவே ஆண்டுதோறும் வந்து செல்ல இயலாது. இயலாது என்பதன்று. ஏற்புடையதாக இருக்காது. ஆனால் இது அவர் அவருடைய தெரிவு என்பதுதான் அடிப்படை.

பயணங்களைக் கட்டுப்படுத்தி அதன் வழியாக வளர்ச்சிகளைக் கொண்டோரும் இருக்கின்றனர். அது அவர்களுடைய தெரிவு. இயன்றமட்டிலும் பயணங்களை மேற்கொண்டு, பெற்றோர், உற்றார் உறவினரோடு பொழுதுகளைப் பகிர்ந்தவரும் இருக்கலாம். அந்த அனுபவத் தேவை என்பது அவர்களின் தெரிவு.

இடைப்பட்ட இந்த 11 மாதங்களில் விடைபெற்றதில் நெருக்கமானோர் 10 பேருக்கும் மேல். கடந்தமுறை வந்திருந்த போது நாரகிரி எனும் ஊரில் 2 நாட்கள் தாங்கி இருந்தோம். ஆருயிர் நண்பன் இன்று விடைபெற்றவனாகிப் போனான். நண்பர் அலெக்ஸ் அவர்களைக் கண்டு உறவாடினோம். மரணப் படுக்கையிலும் எமக்காக அகல விரிந்த அந்தக் கண்கள், பார்வை இம்முறை எம‌க்கில்லை. ஒருவேளை நான் சென்றமுறை வராமல் இருந்திருந்தால்? எல்லாம் அவரவர் சாய்ஸ். உங்கள் வாழ்க்கை உங்கள் மனத்தில், உங்கள் மனத்தில் மட்டுமே!

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

‍பழமைபேசி, கோவை.

5/07/2023

சித்ரா பெளர்ணமி

தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை.

கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார்.

நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பர் அருகிலிருந்தவர்களை அழைத்து என் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கச் சொன்னார். அப்போதுதான் அறிய நேரிட்டது, அது நான் வாழ்ந்த ஊரல்ல. வேறொரு ஊர். ஆனால் அந்த ஊரையும் நான் நன்கறிவேன். அவருக்கு அருகில் இருந்தவர்களும் பரிச்சியமானவர்களே.

அருகில் இருந்த எல்லாருக்குமே மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. திடீரென அங்கே கோயிற்திடலில் இருந்த ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதையொத்த சிறுவனிடம் என்னைக் காண்பித்து, இது யார் தெரியுமாவெனக் கேட்டனர். “இது, பழமைபேசிதானே?” என்றார் அந்த இளம்பிள்ளை.

அடுத்த கூட்டத்துக்கு நேரமாகிவிடுமேயென எண்ணி அழைப்பை முடித்துக் கொண்டேன். ஆனால் என்னால் அடுத்த அழைப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. மனம் சமநிலையில் இருந்திருக்கவில்லை. கூட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைக்க வேண்டினேன்.

நான் பார்த்திராத ஒரு சிறுவன். என் பேச்சுகள், எழுத்துகள்வழி அறிமுகமாகி இருந்திருக்க வேண்டும். எவ்விதத்திலும் என் பேச்சும் எழுத்தும் நடவடிக்கைகளும் அப்படியானவர்களைப் பாதித்து விடக் கூடாதுதானே? யோசிக்கலானேன். அறிஞர் ஆல்பர் ஐன்ஸ்டினின் கூற்று நினைவுக்கு வந்தது. வெற்றி கொள்வதில் இல்லை வாழ்வு, மதிப்புக் கொள்வதில் இருக்கின்றது.  “Try not to become a man of success, but rather try to become a man of value” ― Albert Einstein


5/04/2023

தனிமையெனும் கொள்ளைநோய்

சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”.

மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general

நிகழ்ந்த இருவேறு பற்றியங்களைக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்சாப் குரூப். கிட்டத்தட்ட 110 பேர் வரையிலும் அதில் இருந்தனர். எல்லா வாட்சாப் குரூப்களைப் போலவே, இதிலேயும் ஃபார்வர்டுகளாகப் பகிர்வர். குட்மார்னிங் செய்திகள். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கான வாழ்த்துகள். பொது உரையாடலாக எது குறித்தும் பேச மாட்டார்கள். அப்படியே பேசுவது என்றாலும், பகிர்கின்ற பதிவுகளுக்கு, சூப்பர், அருமை போன்றன இடுவார்கள். ஒருகட்டத்தில், இரு குரூப்களாக ஆகிவிட்டது. முதலாவதில், இன்னமும் அதே போக்குத்தான். அடுத்ததில், நண்பர்களுக்குள் பேசிக்கொள்வது, கிண்டல் கேலி, பகிரும் செய்திகளைக் கேள்விக்குள்ளாக்குவதென உயிர்ப்புடன். இதேநிலைதான் சமூகத்திலும்.

உறவினர்களுக்கென ஒரு வாட்சாப் குரூப். நாற்பது, ஐம்பது பேர் இருக்கின்றனர். உரையாடல் என்பது எதுவும் இராது. வாழ்த்துச் செய்திகள் மட்டும் இடம் பெறும். இதேநிலைதாம் குடும்பங்களிலும். சாப்பிட்டாயா, சாப்பிட்டேன். கடைக்குப் போனாயா, போய்வந்தேன். பில் கட்டியாச்சா, கட்டியாச்சு. அவ்வளவுதான். சின்னஞ்சிறு கதைகள் பேசி, தூக்கிவிடக் கரம் நீட்டிக் களிப்புக் கொள்வதெல்லாம் பகற்கனாவாகி விட்டது.

வாழ்வென்பது ஒரு பயணம். பயணத்தில், காணும் காட்சிகளும் பேச்சுகளுமென ஐம்புலன்களினூடாகப் பெறுகின்ற அனைத்தும் நமக்கு வாழ்வின் பயனை, அனுபவத்தை ஈட்டித் தருகின்றன. இந்த ஐம்புலன்களின் பாவனையென்பது ஒன்றுக்கொன்று மிகாமலும் குறையாமலும் சீரோடு இருந்துவிட்டால் நலம். மேம்பட்டதாக இருக்கும். 

மருத்துவத்துறைத் தலைவர் சொல்கின்றார், “People now use social media as a replacement for in-person relationships, and this often meant lower-quality connections". இதில் இருவிதமான பின்னடைவுகளைக் காணமுடிகின்றது. முதலாவது, மனிதனோடு மனிதன் பேசுகின்றது(பலுக்கல்) இல்லாமற்போய் விடுகின்றது அல்லது குறைந்து போய் விடுகின்றது. அடுத்தது, சார்புத்தன்மை கொண்ட முன்பின் தெரிந்திராத அனாமதேயர்களுடனான நேரவிரயம் கோலோச்சுகின்றது. இப்படியாகக் கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் தனித்தனி ஆட்களாக இருக்க நேரிடுகின்றது. ஆறுதலும் ஊக்கமும் தேவையாக இருக்கின்ற நேரத்திலே ஈடு செய்ய ஆளில்லை.

நேரடியாகப் பாதிக்கப்படுவது ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். மருத்துவத்துறை அறிக்கை சொல்கின்றது, ”physical consequences of poor connection can be devastating, including a 29% increased risk of heart disease; a 32% increased risk of stroke; and a 50% increased risk of developing dementia for older adults”. எப்படி? தனிமையின் காரணம் ஊக்கமிராது. ஊக்கமில்லாவிடில் உடற்பயிற்சி உள்ளிட்ட உடலுக்கான நகர்வுகள் இராது. போதிய உணவுப்பழக்கம் இராது.

In response, the advisory outlines the framework for a new national strategy. It is based on six foundational pillars, which are:

1. Strengthening social infrastructure, which includes things like parks and libraries as well as public programs.

2. Enacting pro-connection public policies at every level of government, including things like accessible public transportation or paid family leave.

3. Mobilizing the health sector to address the medical needs that stem from loneliness.

4. Reforming digital environments to "critically evaluate our relationship with technology."

5. Deepening our knowledge through more robust research into the issue.

6. Cultivating a culture of connection.

முதல் ஐந்தும் அரசுக்கானவை, அமைப்புகளுக்கானவை. தனிமனிதனாக நாம் என்ன செய்ய வேண்டும்? நேரிலும் சரி, தொழில்நுட்பக் கருவிகளூடாகவும் சரி, மனிதன் சகமனிதனிடம் பேச வேண்டும். அலுவல் அல்லாத வாட்சாப் குரூப்களை, நண்பர்கள் உறவினர்களுக்கான வாட்சாப் குரூப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். எந்திரத்தனமாக அவற்றுள் கிடந்து தனிமையெனும் கொள்ளைநோய்க்கு நெய் வார்க்கக் கூடாது. சமூகவலைதளங்களின் பயன்பாட்டைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general


4/28/2023

எப்படிணே?



இளவல் ஒருவர் அழைத்திருந்தார். “அண்ணா”. “சொல்லுங் தம்பி”. “எப்படினா எப்பயுமே மகிழ்வா, துள்ளலா இருக்கீங்க?”

“அப்படியெல்லா ஒன்னுமில்லீங் தம்பி. எனக்கும் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், சினம்னு வருவதும் போவதுமாத்தான் இருக்கும்”

பேச்சு அதனைக் கடந்து சென்று விட்டது. ஆனால் சிந்தித்துப் பார்க்குங்கால், மகிழ்ச்சி, உவப்பு, இன்பம், களிப்பு முதலானவை எல்லாம் வேறு வேறானவை. ஒவ்வொரு மனிதனும் முக்காலே மூணுவீச நேரமும் இன்புற்றிருக்கவே ஆட்பட்டவர்கள். எப்படி?

மகிழ்ச்சி: மகிழ்தல் என்றால் பொங்கி வருதல். மனம், இருக்கும் நிலையில் இருந்து குதூகலநிலைக்கு மாறிய ஓர் உணர்வு. அது தற்காலிகமானது.

உவப்பு: ஏதோவொரு செயலின் ஈடு(result) மனநிறைவைக் கொடுத்தல். உவப்பும் கசப்பும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை.

களிப்பு: கேளிக்கை நிமித்தம் மனம் மற்றெதனின்றும் ஒன்றியிராமல் ஏதோவொன்றின்பால் மட்டும் பற்றியிருக்கும் போது ஏற்படும் விடு உணர்வு.

இன்பம்: வலியற்று இருக்கும் நிலை.

நடப்பில் நாம் இவை அத்தனையையும் மகிழ்ச்சி என்றே கருதிக் கொள்கின்றோம். நுண்ணிய வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இங்கே இளவல் அவர்களின் வினாயென்பது இன்பம் குறித்தானதே. ஆகவே நாம் இன்பம் என்பதை எப்படிக் கட்டமைத்துக் கொள்வது, தக்கவைத்துக் கொள்வது என்பதைப் பார்த்தாக வேண்டும்.

இன்பம் என்பது எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டது அன்று. காக்கை குருவிகளும் குழந்தைகளும் வலியுடனேவா இருக்கின்றன? எண்ணிப்பாருங்கள். இளவயதில் மனம் கொப்பளிக்கக் கொப்பளிக்க இருந்திருப்பீர்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த நிலை அருகி வந்திருக்கக் கூடும். ஏன்? நாம் நம்மை நிபந்தனைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டதுதான். இது கிடைத்தால் வெற்றி, அல்லாவிடில் தோல்வி. தோற்று விட்டோமோயென்கின்ற வலி. அது அடைய உழைக்க வேண்டும். தோற்றுவிடுமோயென்கின்ற அச்சம், வலி. புது கார், அந்தா அவர் வைத்திருப்பதை நாமும் பெற்றுவிட்டால் இன்பம், அல்லாவிடில் அதனை அடையும் வரை வலி. ஆக, அப்படியான நிபந்தனைகளுக்கு மசியாமல் இருந்தால் வலியும் இல்லை. அதற்காக அதனை அடைய வேண்டுமெனும் குறிக்கோள் கொண்டிருக்கக் கூடாதென்பதுமில்லை. Consciously break free from such conditions.

இன்பம் என்பது அவரவர் தெரிவு. ஏமாற்றங்களும், தோல்விகளும், இழப்புகளும் வரும்தான். அழலாம். அடுத்தவருடன் பேசலாம். தனிமையில் இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம் கவனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு சிந்தனையும் இல்லாமல் மனத்தை வெறுமைக்குப் பறிகொடுக்கும் போதுதான் அதிலிருந்து மீள முடியாமற்போய் விடுகின்றோம். சமூகத்தில் கேள்வி கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும். அது இல்லாத இடத்தில், தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் பழக்கமும் அருகிப் போய் விடும். அதனாலே இன்பத்தைப் பறிகொடுப்பதும் நேர்ந்து விடுகின்றது.

தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அறிதலும் பழகுதலுமாக. நம்முள் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களே தொடர்ந்து மனத்தைப் புத்துணர்வுடன் இருக்க வழிவகுக்கும். நடப்பில் நிகழ்வனவற்றுக்கொப்ப தகவமைத்துக் கொள்வதும் மாற்றம்தானே? நம்முள் மாற்றங்களே நிகழ்ந்திராத போது, உயிர்த்திருத்தலுக்கு ஒரு பொருளுமில்லை. வலிதான் மிஞ்சும். ஆகவே நிபந்தனைகளுக்கு ஆட்படாமல் இருப்பதும், தெரிந்து செயற்படுவதும் இன்புற்றிருத்தலுக்கே இட்டுச் செல்லும்.

Happiness depends upon ourselves. -Aristotle



4/25/2023

எப்படியாக உயிர் வாழணும்?

எதுக்காக உயிர் வாழணும்?’ என்பது குறித்து இருவேறு குழுக்களில் பேசத் தலைப்பட்டேன்.  பெரிதாக ஆதரவு கிட்டவில்லை. எனினும் நாம் நினைத்தவற்றைப் பதிவாக எழுதி வெளியிட்டோம். அன்பு காசி அண்ணன் அவர்கள் தம் காலவரிசையில் பகிர்ந்திருப்பதாய்த் தெரிவித்தார். மகிழ்வாக இருந்தது. 

அதற்குக் கிட்டிய மறுமொழியையும் தெரியப்படுத்தி இருந்தார். இனி அது குறித்துப் பார்ப்போம்.

1.”அந்த பயோ தான் கொஞ்சம் நெருடல்.”

வலைப்பதிவு துவங்கிய காலத்தில், முகப்பு மொழியாக, “எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!” எனும் சொலவடையைப் பகிர்ந்து, அது இன்னமும் அப்படியே இருக்கின்றது. இதே சொலவடையை இப்படியும் சொல்வார்கள், “இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட”.

இனம் என்பதைச் சாதி, ரேசிசம் எனப்படுகின்ற இனவாதம், மொழிவாதம் முதலானவற்றின்பேரில் வியந்தோதப்படுவதாகக் கருதும் போது நெருடல் கொடுக்கக் கூடியதுதான். ஆகவே அப்படியான மறுமொழிக்கு முகாந்திரம் உண்டு. அதே வேளையில், முகப்புமொழி இடம்பெற்ற வரலாறு, இடம், பொருள், ஏவலைக் கொண்டும் கொஞ்சம் மொழிப்புலமை கொண்டும் பார்க்கின் அந்நெருடலுக்கு வாய்ப்பிராது. எப்படி?

இணையம், வலைப்பதிவுகள் தோன்றிய காலம். திறன்பேசிகளோ(smart phone), மேம்பட்ட அலைக்கற்றைகளோ இல்லாததொரு காலம். 2006ஆம் ஆண்டு. தாய்த்தமிழ் நாட்டிலிருந்து பத்தாண்டுகளாகப் பெயர்ந்து  பூமிப்பந்தின் மறுகோடியில் வாழும் ஊரகத்தான் ஒருவன், சகதமிழரோடு புழங்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். சக தமிழர் என்பதையுங்கடந்து, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒவ்வாமை கொள்ளாமல் இயைந்து உரையாடக் கூடிய அளவில் ஒரு கூட்டத்தோடு சேருகின்றாமெனும் நினைப்பில் முகப்பு மொழி சிறப்புச் சேர்க்கின்றது. அமெரிக்காவில் இருந்தாலும், தனக்கான ஒரு கூட்டம் என்பது தேவையாக இருக்கின்றது. திருக்குறளும் அதையேதான் சொல்கின்றது.


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

சுற்றம், கூட்டம், சமூகம், குழுமம், திரள் ஆகிய பொருட்களில்தாம் ‘இனம்’ எனும் சொல் திருக்குறளில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றது.  இனம் எனும் சொல்லின் வேர், ‘இன்’ என்பது. அதாவது ”இந்த” காலம், இடம், பொருள் என்பதுதான் வேர். இந்தக் காலத்தில், அதாவது நடப்பில் அண்டி இருக்கும் மக்கட்கூட்டம் இனம். சொலவடையின் பிறப்பிடமும் அதுவே. அண்ணன் அவர்கள் மிக அருமையாகச் சொல்லி இருக்கின்றார். “ஆடு மாடுகள் பல நிலப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்று வந்தாலும் இரவில் அவை தனக்கான கொட்டிலில் தன் தோழமைகளோடு அடைந்து கொள்வது என்பதைக் கண்ட ஊர்ப்புறத்தார் சொல்லாடல் இது. இனம் என்பதற்கு இறுக்கமான பொருள் கொள்ளத் தேவையில்லை. ”

2.IMO, 4th point is is very weak. First three are good enough. YMMV.

இந்த மறுமொழியும் பொருளார்ந்த மறுமொழிதான்.  ஏன் வாழ வேண்டும் என்பது தலைப்பாக இருந்தாலும், சுருங்கச் சொல்லும் போது, ஏன், எதற்கு, எப்படி என்பனவற்றையும் உட்கொண்டாக வேண்டுமென்பதே அது இடம் பெற்றதற்கான காரணம்.  தம் மறைவுகாலத்துக்குப் பிறகு வருபவருக்கும் தீங்காய் இல்லாதபடிக்குச் சுவடுகள் இருக்கும்படியாக வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வாழ்தல் இனிது.

https://maniyinpakkam.blogspot.com/2023/04/blog-post_25.html


எதுக்காக உயிர் வாழணும்?

1. உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஆக, புதுப் புது அனுபவங்களைக் கற்று இன்புற்றிருக்க வாழ்தல் இனிது. (Learning)

2. அண்டி இருப்போருக்கு நம் உழைப்பும் அக்கறையும் தேவையாக இருக்கின்றது. அதற்காக வாழ்தல் இனிது. (Supporting)

3. விரும்பிய வண்ணம் தன் செயல்களை வடிவமைத்துக் கொள்தலும் கட்டமைத்துக் கொள்தலுமாகப் பலவற்றையும் செய்து பார்க்க வாழ்தல் இனிது (experiencing)

4.மறைவுக்குப் பின்னரும் வாழ்ந்தமையின் பயனாக விட்டுச் செல்வதற்காகச் சுவடுகளைக் கட்டமைக்க வாழ்தல் இனிது(legacying)

It is not length of life, but depth of life.


4/13/2023

வெயில்


 ஒருநாள் அந்தவழியாக நடந்து கொண்டிருந்தேன். சரசரவெனும் ஓசை. திரும்பிப் பார்த்தேன். அல்லையில் இருக்கும் காட்டில் முளைத்திருக்கும் சோளப்பயிர்களின் தோகைகள் எல்லாம் வளைந்து நெளிந்து இளம்பச்சையில் அலையலையாய் அலையடித்துக் கொண்டிருக்க அந்த பசுங்கடலின்மீதாகப் பொழிந்தபடிக்கு மழை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நான் ஓடிச்செல்ல முற்பட்டேன். எதிர்த்திசையின் ஓரத்தில் கொங்காடையுடன் முத்துலட்சுமி தன்னுடைய ஆடுகளின் மீதான பார்வையைத் தொலைத்து விட்டு என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் எனக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும் மழையையும் பார்த்திருக்க வேண்டும். ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ என்றபடிக்குப் பாட்டுப் பாடலானாள். சங்கிப் போயிருந்த நான் அந்தப் பாட்டில் திடுக்கிட்டு நின்றுவிட்டேன். ஆமாம். கிழக்கில் இருந்து வந்த மழை என்னை நனைத்து விட்டிருந்தது. அதே சக வேளையில் மேற்கில் இருந்து வரும் வெயில் என்னை உலர்த்திக் கொண்டிருந்தது. சிறுகுருவிகள் அங்கும் இங்குமாகப் பறந்து நுரைநாட்டியம் ஆடின. 

முத்துலட்சுமி மீண்டும் பாடினாள், ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ அன்றைக்குப் பிறகு நிறைய முறை பலரும் இந்தமாரியான காட்சியில் இந்தப் பாட்டைப் பாடக் கேட்டிருக்கின்றேன். நானும் பாடியிருக்கின்றேன். நரிக்கும் கழுதைக்கும் கல்யாணம் நடந்ததா? அவர்களுக்கு குழந்தைகள் ஏதேனும் பிறந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு எனக்குத் தெரிந்து, பலருக்குக் கல்யாணம் ஆகி, அதாவது குரங்குகளோடு கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து, பெயரன் பெயர்த்திகளைக் கூட கண்டிருக்கின்றனர். இப்படித்தான் எனக்கும் வெயிலுக்குமான அறிமுகம் உண்டாகிற்று.

வாகைத்தொழுவு வேலூரில் வக்கீல்நாயக்கர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். காலையில் எழுந்ததும் அம்மாவென அடுக்களைக்குச் செல்வது வழக்கம். ஓட்டுக்கூரையில் இருந்து சிறுகீற்றுப் பிறந்து கண்ணாடிக்குழல்கள் போல ஆங்காங்கே வெயில்க்குழாய்கள் ஊடுருவித் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நீள்வட்டங்களாக. அம்மாவை மறந்து அந்த வெயில்க்குழாய்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அந்தக் குழாய்களின் நடுவே துகள்கள், கோடானுகோடித் துகள் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து ஆகாசவித்தைகள் காண்பித்துக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்தில் அந்தத் துகள்கள் எல்லாம் காணாமற்போய் வெறும் வெயில்க்குழாய்கள் மட்டும் தன்நீட்டத்தைக் குறைத்து விட்டிருக்கும். பள்ளிக்கூடம் புறப்படும் போது வந்து பார்த்தால் அவை காணாமற்போயிருக்கும். இதன் அந்தரங்கம் பிடிபடுவதற்குப் பலகாலம் ஆகிற்று.

பத்தாம்வகுப்புத் தேர்வு எழுதி விடுமுறையில் இருக்கும் போது பள்ளியில் இருந்து ஓர் அழைப்பு. பள்ளியின் அறங்காவலர் எல்.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியார், ஜிடி நாயுடுவின் மகளார் சரோஜினி அம்மாள் அவர்கள் அளித்த கொடையின் பேரில் ஒவ்வோர் வகுப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு 12 நாட்கள் கல்விச்சுற்றுலா, நீயும் தெரிவாகி இருக்கின்றாயென்றார்கள். டி.கல்லுப்பட்டி எனும் ஊரில் இருக்கும் காந்திநிகேதன் ஆசிரமத்தில்  தங்கிக் கொண்டு, அவ்வளாகத்தில் இருக்கும் எல்லா கைவினை ஆலைகள், அருகில் இருக்கும் சில பல இடங்களெனப் போய்வருவதாக ஏற்பாடுகள். விடுதியில் ஒருநாள் மாலையில் ஏதோ பொருள்வாங்கி வரச் சொல்லி, “வெயிலூட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்க” என்றார் உள்ளூர் ஆசிரியர்.

வா.வேலூரில் எங்கள் பக்கத்து வீட்டின் பெயர் கரியூடு. வீட்டுச் சுவர் முழுதும் சுண்ணாம்புக்கு மாற்றாய் கரிபூசப்பட்டு இருந்திருக்க வேண்டும். கரியூட்டு வேணுநாயக்கர் என்றார்கள். அப்படியானால் வேறென்ன வேணுநாயக்கர்கள் இருக்கின்றனர் என எதிர்க்கேள்வி கேட்டேன். சிந்தாமணி வேணுநாயக்கர், கொட்டாரத்துவீட்டு வேணுநாயக்கர் என்று அடுக்கினார்கள். நான் திகைத்துப் போனேன். சில ஆண்டுகளில் பக்கத்து ஊரான சலவநாயக்கன்பட்டிப் புதூருக்குக் குடிமாறிச் சென்றோம். அங்கே சென்றால் மச்சுவீட்டுக் கிருஷ்ணசாமி என்றார்கள். அப்படியென்றால் வேறென்ன கிருஷ்ணசாமி இருக்கின்றனர் எனக் கேட்டேன். பெரியவீட்டுக் கிருஷ்ணசாமி, செந்தோட்டத்துக் கிருஷ்ணசாமி என்று அடுக்கினர். இந்தப் பின்புலத்தில், கரியூடு, மச்சுவீடு, பெரியவீடு பார்த்துவிட்டோம். இதென்னடா வெயிலூடு என்ற வினா என் மண்டையைக் குடைந்தது. 

‘சார், நானும் கூடப் போய்ட்டு வர்றன்’ என்றேன். ‘நீ எங்கடா போற? பேசாம உக்கார்றா’ என்றார் இராமசாமி வாத்தி. உள்ளூர் ஆசிரியர் குறுக்கிட்டு, ‘வுடுங்க சார். பய்யன் ஆசப்படுதான்’. நெல்லை மொழியில்  நம் மனத்தில் பாலைவார்த்தார். இராமசாமி வாத்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும். உடன்போய், சக்கரை, பொட்டுக்கடலை எல்லாம் வாங்கி ஆகிற்று. ‘அண்ணா, கடை இங்க இருக்கு. அந்த வெயிலூடு எங்கங்ணா?’ என்று நான் என் கடையை விரித்தேன். ‘அங்கனா பார்றா. அதுதானாக்கும் வெயிலூடு’ என்று நாஞ்சில் மொழியில் ஓர் இழுவையைப் போட்டார் அந்த சமையற்கார அண்ணன். இஃகிஃகி. கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஓடுகளும் வெள்ளை வெளேரென இருந்தன. இளமஞ்சள் மின்னொளியில் அந்த வீடு தகத்தகவென பாலொளியில் பப்பரப்பேவேன இருந்தது. ஓ, இதுதான் அந்த வெயிலு? வெயிலூடாவென வந்து சேர்ந்தேன்.

காலைவெயில் கழுதைக்கு நல்லது. மாலைவெயில் மனிதனுக்கு நல்லது. இப்படியாக எவரோ என்றோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பிற்பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடையிலான நான்குமணி. சரியெனச் சொல்லி வீட்டின் முன்பாகப் போய் வெயிலில் உட்கார்ந்து கொண்டென். சுகமாக இருந்தது. நினைவுகள் பெருக்கெடுத்து ஓடின.

வெயிலில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் நம் உடற்தோலில் பட்டு ஊடுருவும் போது, தோலில் இருக்கும் கொழுப்புப்பசையை வைட்டமின்-டி ஆக மாற்றுகின்றது. அந்த வைட்டமின் டி, உடற்கொழுப்பில் சேமிப்புக்கிடமாகி எத்தனை காலத்துக்கும் நம்முள் இருந்து, தேவைக்கேற்ப பயன்பாட்டுக்குள்ளாகும். பற்றாக்குறை ஏற்படும் போது, நாம் உண்ணும் உணவில் கிடைக்கப்பெறும் உயிர்ச்சத்து-டி பயன்படுத்தப்படும். ஆனால் இத்தகைய கொள்மானம் மிகக்குறைவுதான். எனவேதான், வெயிற்புசிப்பு இல்லாத இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்க நேரிடுகின்றது. அதற்காக வைட்டமின் டி சத்துமாத்திரைகள் உட்கொண்டால், அவற்றின் பக்கவிளைவுகள் தோன்றலாம். ஆனால் வெயிலால் கிடைக்கப் பெறும் உயிர்ச்சத்துக்குப் பக்க விளைவுகள் இல்லையாம். ஆகவே வெயில் தரிசனம் நன்று. வெயிலில் குளித்த இவனுக்கு, மழையில் குளித்த வெயிலின் நினைவுகள்!