தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட சீரிளமைத் திறம் வாய்ந்தது. ஒருகாலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழின் தனித்தன்மையின் மீது தாக்கம் கொண்டபோது, மறைமலை அடிகள், பாவாணர் போன்றோரின் பங்களிப்பால் 'தனித்தமிழ் இயக்கம்' உருவானது. நாம் ஏன் தனித்தமிழைக் கடைபிடிக்க வேண்டுமென்பதற்குப் பல அழுத்தமான காரணங்கள் உள்ளன.
ஒரு மொழியின் தனித்துவம் என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகைபடக் கலக்கும்போது, அந்த மொழியின் வேர்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து போகின்றன. இதனால் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும் சிதைந்து, ஒரு காலகட்டத்தில் அந்த மொழியே சிதைந்த நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ் சிதையாமல் அதன் ஆதி வடிவில் நிலைத்திருக்க, தனித்தமிழ்ப் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.
அடுத்து, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையிலான வேர்ச்சொற்களைக் கொண்டது. புதிய கண்டுபிடிப்புகள் , புதுத் தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. நாம் பிற மொழிச் சொற்களை அப்படியே இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தும்போது, நம்முடைய சிந்தனைத் திறனும் புதிய சொற்களை உருவாக்கும் படைப்பாற்றலும் மங்கிப்போகின்றன. தமிழைத் தூய வடிவில் பயன்படுத்தும்போதுதான், அது காலத்திற்கேற்பப் பரிணாம வளர்ச்சி அடைய முடியும்.
தனித்தமிழ் என்பது வெறும் மொழியியல் சார்ந்த பற்றியம் மட்டுமன்று; அது நம் பண்பாட்டைக் காக்கும் அரண். ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அதன் மொழியில்தான் பொதிந்துள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை நாம் தடையின்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தமிழின் வேர்களை நாம் சிதைக்காமல் காக்க வேண்டும். பிறமொழிச் சொற்களின் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் நற்பணியாகும்.
சுருக்கமாகச் சொன்னால், தனித்தமிழ் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதன்று; மாறாக, தன் மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்து அதனை அழியாமல் காப்பதாகும். அன்றாடப் பேச்சுவழக்கில், ஆங்கிலம் , பிறமொழிச் சொற்களைக் குறைத்து, எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதனால் நாம் நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க முடியும்.
தனித்தமிழ் என்பது வெறும் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமன்று; அது தமிழின் தனித்துவமான இலக்கண மரபுகளை, தொன்மையான வழக்காறுகளையும் போற்றிப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா, அதன் மரபு சார்ந்த நடையில்தான் வாழ்கிறது. ஆனால், இன்று நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் வடமொழி, ஆங்கில மொழிகளின் இலக்கணத் தாக்கமும், சிந்தனை முறையும் ஊடுருவித் தமிழின் இயல்பான அழகைச் சிதைத்து வருகின்றன. இது ஒரு மொழிச் சிதைவு மட்டுமன்று, ஒரு பண்பாட்டு அடையாளத்தின் சிதைவுமாகும்.
பிறமொழி மரபுகளின் ஊடுருவலைக் களைவது மிக அவசியம். தமிழில் இல்லாதபிறமொழி எழுத்துகளையும், தத்திதச் சொற்களையும் பயன்படுத்துவதால் தமிழின் ஒலியியல் அமைப்பு மாறுகிறது. பழந்தமிழ் வழக்காறுகளைப் புறக்கணிப்பதும் தமிழின் செழுமையைக் குறைக்கிறது. தமிழ்ச்சொற்களிலேயே உயர்ந்த பொருளும் ஆழமான தத்துவமும் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற மரபுகளைக் கொண்டாடுவது நம் மொழியின் தற்சார்புத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது.
தற்காலத்தில் ஆங்கில மொழி மரபுகளின் ஆதிக்கம் தமிழை 'ஆங்கிலத் தமிழ்' வடிவாக மாற்றி வருகிறது. ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றித் தமிழில் எழுதுவது, தேவையற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்களைத் திணிப்பது போன்ற போக்குகள் பெருகியுள்ளன. கணினி, இணையம் போன்ற தற்காலத்துறைகளில், தமிழின் கலைச்சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவது, காலப்போக்கில் தமிழை ஒரு 'அடையாள மொழியாக' மட்டுமே சுருக்கிவிடும். ஆங்கில மரபுகளைக் களைந்து, தமிழின் தனித்துவமான வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது, தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகவும் நம்முள் குடிகொள்ளும்.
தனித்தமிழ் காப்பது என்பது ஒரு தற்காப்பு முன்னெடுப்பு மட்டுமன்று; அது நம் மொழியின் உரிமையை நிலைநாட்டும் போராட்டமாகும். "தமிழ் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்ற வரிகளுக்கு இணங்க, நம்முடைய இலக்கணக் கோட்பாடுகளையும், முன்னோர் வகுத்த மொழிமரபுகளையும் சிதையாமல் காக்க வேண்டும். பிறமொழி மரபுகள் நம் சிந்தனையைக் கட்டிப்போடாமல் தற்காத்துக் கொள்வதும், தூய தமிழ் வழக்காறுகளை அன்றாட வாழ்வில் மீண்டும் உயிர்ப்பிப்பதும் இன்றைய இளைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.
‘தமிழ்த்தாலிபான்கள், தமிழ்த்தீவிரவாதிகள், பிற்போக்காளர்கள்’ போன்ற சொல்லாட்சிக்கு ஆட்பட நேரிடும்தான். ஆனாலும் நாம்தான் ஒரு வேள்வியாகக் கருதிச் செயற்பட்டாக வேண்டும். அதுவே, தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் அவர்களின் நூற்றைம்பதாவது ஆண்டினைக் கொண்டாடுவதற்குப் பொருண்மியத்தை ஊட்டும்!
கூடுதலாக, “பிழை திருத்துபவரின் மனைவி” எனும் இச்சிறுகதையும் வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. https://shorturl.at/opVNd
-பழமைபேசி.


