6/08/2026

சால்ஸ்டனில் மூன்று நாள்கள்







தென்கரோலினா மாநிலத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரமான சார்லஸ்டனுக்குமேற்கொண்ட மூன்று நாள் பயண அனுபவங்கள். அமெரிக்காவின் தென்பகுதிக் கலாச்சாரம், அட்லாண்டிக் பெருங்கடலின் எழில் கொஞ்சும் கடற்கரைகள் , பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடக் கலைக்குச் சான்றாகத் திகழும் நகரம் சார்லஸ்டன். மூன்று நாள்கள் கொண்ட இப்பயணத்தில் வரலாற்றுத் தளங்கள், கண்கவர் வீதிகள், சுவையான உணவு விடுதிகள் என ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.

1. முதல் நாள்: அமைதியான மாலைப்பொழுதும் சுவையான விருந்தும் (Friday)

𝐖𝐡𝐢𝐭𝐞 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧
சார்லஸ்டன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒயிட் பாயிண்ட் கார்டன் பூங்காவிற்குச் சென்றதோடு எங்களது பயணம் இனிதே தொடங்கியது. அட்லாண்டிக் கடலும் ஆஷ்லி, கூப்பர் ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. பழமையான ஓக் மரங்களின் நிழலிலும், கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றிலும் உலா வருவது மனதிற்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தின் வரலாற்றுச் சின்னங்களான பீரங்கிகளும், நினைவுச் சின்னங்களும் இங்கு வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலையில் சூரியன் மறையும் அழகைக் கரையில் அமர்ந்து ரசிப்பதற்கு இது மிக உகந்த இடமாகும். கதிரவன் காட்சி மறைந்ததும் இந்நேரமும் இருந்தவன் காணமல்போனதான ஓர் உணர்வு நெஞ்சைத் தைத்தது.

𝐃𝐢𝐧𝐧𝐞𝐫: 𝐌𝐚𝐭𝐚𝐝𝐨𝐫
மாலையில் உலாவி முடித்த பின், இரவு உணவிற்காக 'மடடோர்' உணவகத்திற்குச் சென்றோம். மெக்சிகன்பாணி உணவுகளுக்குப் புகழ்பெற்ற இந்த உணவகத்தின் உட்புறக் கட்டமைப்பு , விளக்கு அலங்காரங்கள் தனித்துவமான சூழலை உருவாக்கின. அங்கு பரிமாறப்பட்ட சுவையான டேகோஸ், மெக்சிகன் பாரம்பரிய உணவுகள் முதல் நாளின் பயணக் களைப்பை நீக்கி, நாவிற்குச் சிறந்த விருந்தாக அமைந்தன.

2. இரண்டாம் நாள்: வரலாற்று வீதிகளும் கடற்கரை உலாவும் (Saturday)

𝐏𝐚𝐫𝐤 𝐚𝐭 𝐌𝐚𝐣𝐞𝐬𝐭𝐢𝐜 𝐒𝐪𝐮𝐚𝐫𝐞 𝐃𝐞𝐜𝐤 & 𝐌𝐢𝐥𝐥𝐞𝐫𝐬 𝐀𝐥𝐥 𝐃𝐚𝐲
இரண்டாம் நாள் நகரின் மையப் பகுதியைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டோம். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 'மெஜஸ்டிக் ஸ்கொயர் டெக்' கட்டண வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு, 'மில்லர்ஸ் ஆல் டே' உணவகத்தில் காலை உணவை முடித்தோம். அங்குள்ள பாரம்பரியத் தென்பகுதி பிஸ்கட்டுகள் , காபி எங்களை அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்ல உற்சாகப்படுத்தின.

𝐑𝐚𝐢𝐧𝐛𝐨𝐰 𝐑𝐨𝐰 & 𝐍𝐚𝐭𝐡𝐚𝐧𝐢𝐞𝐥 𝐑𝐮𝐬𝐬𝐞𝐥𝐥 𝐇𝐨𝐮𝐬𝐞
அங்கிருந்து சார்லஸ்டனின் உலகப் புகழ்பெற்ற அடையாளமான 'ரெயின்போ ரோ' பகுதிக்குச் சென்றோம். 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரிசையாக அமைந்த 13 ஜார்ஜியன் பாணி வீடுகள் வெவ்வேறு வண்ணங்களில் (வானவில் போல) பூசப்பட்டு பார்ப்போரைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. புகைப்படங்கள் எடுக்க இது ஒரு அருமையான இடம். அதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சின்னமான 'நதானியேல் ரஸ்ஸல் ஹவுஸ்' (Nathaniel Russell House) மாளிகையைப் பார்வையிட்டோம். 1808-இல் கட்டப்பட்ட இந்த மாளிகையின் உள்ளே இருக்கும் மூன்று அடுக்கு சுழல் படிக்கட்டுகளின் கட்டிடக் கலை வியக்கத்தக்கது.

𝐂𝐡𝐚𝐫𝐥𝐞𝐬𝐭𝐨𝐧 𝐂𝐢𝐭𝐲 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭 & 𝐁𝐥𝐢𝐧𝐝 𝐓𝐢𝐠𝐞𝐫
அடுத்து, 1790-களில் இருந்து இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'சார்லஸ்டன் சிட்டி மார்க்கெட்' சந்தைக்குச் சென்றோம். அங்கு உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் தனித்துவமான புல்க்கூடைகள் (Sweetgrass Baskets), நினைவுப் பொருட்கள் , உடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சந்தையைச் சுற்றிப் பார்த்து, சில பல கொள்வனவு செய்யப்பட்ட பின், மதிய உணவிற்காக 1803-ஆம் ஆண்டின் பழமையான பின்னணியைக் கொண்ட Blind Tiger Pub உணவகத்திற்குச் சென்றோம். அதன் அழகான திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து மதிய உணவை அருந்தியது ஒரு நல்ல அனுபவம்.

𝐁𝐫𝐚𝐧𝐝𝐲 𝐌𝐞𝐥𝐯𝐢𝐥𝐥𝐞
நாங்கள் சார்லஸ்டனின் முதன்மையான வணிக வீதியான கிங் ஸ்ட்ரீட்டில் உலா வந்தபோது, அங்குள்ள புகழ்பெற்ற ஆடை அங்காடியான 'பிராண்டி மெல்வில்' (Brandy Melville) குடோனுக்கும் சென்றிருந்தோம். இளம் பெண்களுக்கான நவீன, அழகிய எளிய உடைகளுக்கு (Casual wear) இந்தப் பன்னாட்டு பிராண்ட் மிகவும் பெயர் பெற்றது. தூய்மையான வெள்ளை, மென்மையான வெளிர் வண்ணங்களில் (Aesthetic pastel colors) அமைந்த ஆடைகள், எளிய வடிவமைப்பு கொண்ட டி-சர்ட்டுகள், விதவிதமான ஆடை அணிகலன்கள் என அனைத்தும் அங்கு மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மகளார் வாங்கித் தள்ளினர். சார்ல்ஸ்டன் வந்ததே அதற்குத்தானே? ஒரு கட்டம் வரைக்குத்தான் கணக்கு வழக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போனால், அது சாணென்ன மொழமென்ன?? சார்லஸ்டன் நகரின் பாரம்பரியக் கட்டிடக் கலைப் பின்னணியோடு, இந்த நவீனக் கடையின் உட்புற அமைப்பும் சூழலும் இணைந்து எங்களை மிகவும் கவர்ந்தது. கிங் ஸ்ட்ரீட் பயணத்தில் இளமையின் துடிப்பையும் தற்கால ஃபேஷன் உலகையும் பிரதிபலிக்கும் ஒரு சுவாரசியமான இடமாக இந்த அங்காடி அமைந்தது. எங்கு பார்த்திடினும் இளம் பெண்கள்!

𝐊𝐢𝐧𝐠 𝐒𝐭𝐫𝐞𝐞𝐭 & 𝐒𝐮𝐥𝐥𝐢𝐯𝐚𝐧'𝐬 𝐈𝐬𝐥𝐚𝐧𝐝
மதிய உணவிற்குப் பிறகு, சார்லஸ்டனின் முதன்மையான வணிக வீதியான 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் மீண்டும் உலா வந்தோம். அங்குள்ள பிபுகழ்பெற்ற கடைகளையும், நவீனக் கடைகளையும் வேடிக்கை பார்த்தபடி நடந்தோம். பின்னர், மாலையில் கடலோரக் காற்றை ரசிப்பதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு 'சல்லிவன் தீவு' (Sullivan's Island) கடற்கரைக்கு விரைந்தோம். அகலமான மணற்பரப்பும், மிதமான அலைகளும் கொண்ட இந்த அமைதியான கடற்கரை, நகரின் பரபரப்பிலிருந்து தற்காலிக ஓய்வைத் தந்தது.

𝐃𝐢𝐧𝐧𝐞𝐫 𝐓𝐢𝐦𝐞
தீவிலேயே இரவு உணவை முடிக்கத் திட்டமிட்டோம். அங்கு எழுத்தாளர் எட்கர் ஆலன் போ-வின் நினைவாக வடிவமைக்கப்பட்ட 'போஸ் டாவர்ன்' (Poe's Tavern) அல்லது புகழ்பெற்ற இத்தாலிய பாணி உணவுகளை வழங்கும் 'தி ஆப்ஸ்டினேட் டாட்டர்' (The Obstinate Daughter) ஆகிய சிறந்த உணவகங்கள் உள்ளன. அன்றைய இரவை, நிறைவான கடல் உணவு , பீட்சாவுடன் The Obstinate Daughterஇல் சுவையாகக் கழித்தோம்.

3. மூன்றாம் நாள்: வரலாற்றுத் தோட்டமும் மவுண்ட் பிளசன்ட்டும் (Sunday)

𝐕𝐢𝐜𝐢𝐨𝐮𝐬 𝐁𝐢𝐬𝐜𝐮𝐢𝐭 & 𝐁𝐨𝐨𝐧𝐞 𝐇𝐚𝐥𝐥 𝐏𝐥𝐚𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧
மூன்றாம் நாள் காலையில் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள 'விஷியஸ் பிஸ்கட்' (Vicious Biscuit) உணவகத்தில் பிரம்மாண்டமான , புதுமையான காலை உணவு வகைகளை ருசித்தோம். தொடர்ந்து, அமெரிக்காவின் பழமையான விவசாயப் பண்ணைகளில் ஒன்றான 'பூன் ஹால் பிளான்டேஷன்' (Boone Hall Plantation) பகுதிக்குச் சென்றோம். இதன் நுழைவாயிலில் இருபுறமும் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் நூற்றாண்டு பழமையான ஓக் மரங்களின் வரிசை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்குள்ள வரலாற்று மாளிகை, அடிமைமுறை காலத்து வீடுகள் , Gullah கலாச்சாரக் கதைகளைக் கேட்டு இப்பகுதியின் கடந்த கால வரலாற்றை ஆழமாகத் தெரிந்துகொண்டோம்.

𝐌𝐨𝐮𝐧𝐭 𝐏𝐥𝐞𝐚𝐬𝐚𝐧𝐭 𝐌𝐞𝐦𝐨𝐫𝐢𝐚𝐥 𝐖𝐚𝐭𝐞𝐫𝐟𝐫𝐨𝐧𝐭 𝐏𝐚𝐫𝐤

சார்லஸ்டன், மவுண்ட் பிளசண்ட் நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற Arthur Ravenel Jr. Bridge இது ஆகும். கூப்பர் ஆற்றின் குறுக்கே கம்பீரமாக அமைந்துள்ள இந்த கேபிள் பாலம் , வட அமெரிக்காவின் மிக நீளமான கேபிள் பாலங்களில் ஒன்றாகும். கப்பல் வடிவிலான இரண்டு பிரம்மாண்டமான வைர வடிவ கோபுரங்களும், அதிலிருந்து பிரியும் வெள்ளை நிற கேபிள்களும் இந்தப் பாலத்திற்கு தனித்துவமான அழகைத் தருகின்றன. 2005-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பாலம், இப்பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமாகவும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் ஒரு முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. பாலத்தின் அடியில் இருக்கும் பூங்கா, இதன் அழகிய பின்னணியில், கடலின் குளிர்ந்த காற்றை ரசித்தபடி புகைப்படம் எடுக்க இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.

𝐌𝐭 𝐏𝐥𝐞𝐚𝐬𝐚𝐧𝐭 𝐏𝐢𝐜𝐧𝐢𝐜
பயணத்தின் இறுதிப் பகுதியாக, Mt Pleasant நகரின் எழில் கொஞ்சும் வீதிகளையும், கடலோரப் பூங்காக்களையும் சுற்றிப் பார்த்தோம். நவீன வசதிகளும், பழமையின் அழகும் ஒருங்கே அமைந்த இப்பகுதி எங்களது மூன்று நாள் சார்லஸ்டன் பயணத்திற்கு ஒரு முத்தாய்ப்பான நிறைவாக அமைந்தது. நான்கு மணி வாக்கில் தாவளம் நோக்கிப் புறப்பட்டு மாலை ஏழு மணிக்கும் சற்றுப் பின்னால் வந்து சேர்ந்தோம்.

சார்லஸ்டன் நகரின் கட்டிடக் கலை, கடலோர எழில் , சுவையான உணவுகள் என இந்த மூன்று நாள் பயணம் என்றும் மறக்க முடியாத இனிய நினைவுகளை நெஞ்சில் ஏந்தித் தந்தது. மீண்டும் ஒருமுறை செல்லத்தூண்டும் வரலாற்று அமைதி இந்நகரத்தின் தனிச்சிறப்பு. கோடைகாலத்தின் தொடக்கத்தில் நாங்கள் அங்கு சென்றிருந்ததால், கிங் ஸ்ட்ரீட் வீதி முழுவதுமே பருவகாலத்திற்குரிய துடிப்புடனும் பொலிவுடனும் காணப்பட்டது. எங்குத் திரும்பிப் பார்த்தாலும் இளம் பெண்கள் தங்களின் இலகுவான, மெல்லிய கோடைகால ஆடைகளுடன் மகிழ்ச்சியோடு உலா வந்து கொண்டிருந்தனர். பிராண்டி மெல்வில் போன்ற புகழ்பெற்ற கடைகளில் இருந்து வாங்கிய நவீன ஆடைகளை அணிந்து, கைகளில் குளிர்பானங்களுடன் அவர்கள் குழுக்களாக நடந்து சென்றது அந்த வரலாற்று வீதிக்கு ஒரு புதிய இளமைத் துடிப்பைத் தந்தது. சார்லஸ்டனின் இதமான வெயிலும், கடலோரக் காற்றும், வண்ணமயமான அந்த உடுப்புகளும் இணைந்து ஒட்டுமொத்தப் பகுதியையுமே ஒரு அழகான கோடைகாலக் திருவிழா போல மாற்றித் தந்தது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

-பழமைபேசி.

5/31/2026

அரவணைப்புக் கடமை (duty of care)

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்நிமித்தம், இலாபநோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கான சான்றிதழ்ப் படிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நானும் ஒரு வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்றேன். அதில் ஒரு பாடம்தான் அரவணைப்புக் கடமை. பேரவையில் இப்பொறுப்பானது கடைபிடிக்கப்பட வேண்டுமென்பதற்காக, இடம் பெற்ற ஒரு நிகழ்வினைச் சுட்டிக்காட்டினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும்.

ரிக் ரெஸ்கோர்லா, Morgan Stanley Dean Witter என்ற பெரிய நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். அவருடைய அலுவலகம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் இருந்தது. வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ அதிகாரியான ரிக், பாதுகாப்பை வெறும் ஒரு மேஜை பணியாகப் பார்க்கவில்லை. தன் பொறுப்பில் இருந்த 2,700 ஊழியர்களின் பாதுகாப்பைத் தன் சொந்தப் பொறுப்பாகக் கருதினார். 1993-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குத் பிறகு, இந்தக் கட்டடங்கள் மீண்டும் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ரிக் தீர்க்கமாக நம்பினார். அங்கிருந்து அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அவர் நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். ஆனால் நிறுவனம் அங்கேயே இருக்க முடிவு செய்தபோது, ரிக் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்: "அவர்களை இந்த இடத்தை விட்டு மாற்ற முடியாவிட்டால் என்ன, ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!"

ரிக் ஒரு கடுமையான அவசரக்கால வெளியேற்றத் திட்டத்தை அமல்படுத்தினார். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களின் வேலைகளை நிறுத்தச் செய்து கட்டாயப் பயிற்சி அளித்தார். இருண்ட, குறுகலான அவசரக்காலப் படிக்கட்டுகளில் அவர்களைக் கீழே இறங்கி நடக்க வைத்தார். Stopwatch மூலம் அவர்கள் இறங்கும் நேரத்தைக் கணித்தார். ஒரு ஒலிபெருக்கி மூலம் கட்டளைகளைக் கூவி, பதற்றமின்றி எப்படி வெளியேற வேண்டும் என்று பயிற்சி அளித்தார்.

பல ஊழியர்கள் இதைப் பார்த்து சலிப்படைந்தனர். தங்களின் விலைமதிப்பற்ற வேலை நேரம் வீணாவதாகக் கூறினர். "இந்த ராணுவக்காரருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது" என்று கேலி செய்தனர். ஆனால் ரிக் யாரிடமும் நல்ல பெயர் வாங்க விரும்பவில்லை; அவர்களின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே விரும்பினார்.

செப்டம்பர் 11 காலை, ஒரு விமானம் வடக்கே இருந்த முதல் கோபுரத்தைத் தாக்கியது. உடனே, ரிக் இருந்த தெற்கு கோபுரத்தின் பொது அறிவிப்பு அமைப்பில், "இந்தக் கட்டடம் பாதுகாப்பாக உள்ளது, ஊழியர்கள் யாரும் வெளியேற வேண்டாம், தத்தமது இருக்கைகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நெருப்பையும் புகையையும் பார்த்த ரிக், அந்த அரசு அறிவிப்பை முற்றிலும் புறக்கணித்தார். அவருடைய பொறுப்பு அந்தக் கட்டடத்தின் நிர்வாகத்திற்கு அல்ல, அங்கு பணிபுரியும் மனிதர்களுக்கு மட்டுமே! உடனே தன் மெகாஃபோனை கையில் எடுத்து உரத்த குரலில் கட்டளையிட்டார்: "உடனே அனைவரும் வெளியேறுங்கள்!"

ரிக் கொடுத்த இடைவிடாத பயிற்சிகளின் காரணமாக, அந்த 2,700 ஊழியர்களும் எவ்வித பதற்றமும் இன்றி, வரிசையாக அவசரக்காலப் படிக்கட்டுகளில் கீழே இறங்கத் தொடங்கினர்.

அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது விமானம் அவர்கள் இருந்த தெற்கு கோபுரத்தின் மேல் பகுதியில் பயங்கரமாக மோதியது. கட்டடமே பலத்த சத்தத்துடன் அதிர்ந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எங்கும் பயமும் மரண ஓலமும் சூழத் தொடங்கியது. அந்த இக்கட்டான நொடியில் ரிக் முன்னால் நின்றார். தன் மெகாஃபோன் மூலம் வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல், மக்களின் பயத்தைப் போக்கத் தொடங்கினார். அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, தன் சிறுவயதில் கற்ற நாட்டுப்புறப் பாடல்களையும், அமெரிக்க தேசியப் பாடல்களையும் அந்தப் புகையார்ந்த படிக்கட்டுகளில் உரக்கப் பாடத் தொடங்கினார்.

"கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக..." என்று அவருடைய கம்பீரமான குரல் அந்தப் படிக்கட்டுகளில் எதிரொலித்தது.

அவருடைய தைரியமான குரலைக் கேட்ட ஊழியர்கள், தங்களுக்குள் ஒரு பாதுகாப்பை உணர்ந்ததாகப் பின்னாளில் கண்ணீருடன் கூறினர். அது அவர்களுக்குப் பயமின்றி முன்னோக்கி நடக்கும் சக்தியைக் கொடுத்தது.

ரிக், தன் நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,700 ஊழியர்களையும் பாதுகாப்பாகக் கட்டடத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால், அவருடைய கடமை அத்துடன் முடிந்துவிடவில்லை. மேல் தளங்களில் யாராவது காயமடைந்து அல்லது வழியறியாமல் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த ரிக், மீண்டும் கட்டடத்திற்குள் செல்லத் திரும்பினார். அவருடைய சக ஊழியர் ஒருவர், "ரிக், எல்லோரும் வெளியே வந்துவிட்டார்கள், நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்.

அதற்கு ரிக் அமைதியாகப் பதிலளித்தார்: "கடைசி மனிதனும் வெளியேறிவிட்டான் என்பதை நான் உறுதி செய்யும் வரை என்னால் வர முடியாது." புகை சூழ்ந்த அந்தத் தெற்கு கோபுரத்தின் படிக்கட்டுகளில், எஞ்சியவர்களைத் தேடி மேலே நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரிக் ரெஸ்கோர்லாவைத்தான் அங்கிருந்தவர்கள் கடைசியாகப் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கோபுரம் மொத்தமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்தப் பேரழிவின் நாளில், மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், பாதுகாப்புப் படையினர் உட்பட வெறும் 13 ஊழியர்களை மட்டுமே இழந்தது. 2,680-க்கும் மேற்பட்ட மனிதர்கள் அன்று மாலை பாதுகாப்பாகத் தங்கள் குடும்பத்தாரிடம் சென்று சேர்ந்தனர் என்றால், அதற்கு ஒரே ஒரு மனிதனின் "பாதுகாப்புப் பொறுப்புணர்வும் கடமையும்தான்" காரணம். வீடு வந்து சேராத ரிக், நமக்குப் பாடமாகி சாகாவரம் பெற்று, இன்றும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!

-பழமைபேசி.

5/30/2026

பேரவையும், மில்லியன் டாலர் நிதியும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கென்று உடன்பயணிக்கும் தன்னார்வலர்கள் நிறைய உண்டு. கூட்டங்களுக்கு வராமல் இருக்கலாம், விழாக்களுக்கு வராமல் இருக்கலாம், ஆனால் பேரவையில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர்; பேரவை ஆர்வலர்களுடன் தொடர்பில் இருப்பர். பேரவையின் மீதான பற்று என்றால் பற்று. போதை என்றால் போதை. அது விவாதத்துக்கு உட்பட்டது.

பேரவையிடம் இருக்கும் தரவுகளைக் காட்டிலும், தன்னார்வலர்கள் சிலரிடம் இருக்கும் தரவுகள் நிரம்ப. பேரவையின் செயற்குழுவுக்கு வருவர் போவர். ஆனால் இந்தத் தன்னார்வலர்கள் எப்போதும் போல இருந்து கொண்டே இருப்பர். வரும் செயற்குழு, ஆவணங்களைப் பேணுவதில் அவ்வளவு நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்; காரணம், அவர்கள் தற்காலிகர்கள். மேற்கூறப்பட்ட தன்னார்வலர்கள் நிலையானவர்கள்.

மில்லியன் டாலருக்கான அத்தனை நிகழ்தேதிகள், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உண்டு. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், 2024 தேர்தலில் மில்லியன் டாலர் காலவரிசைப்படம் உருவாக்கப்பட்டு, பரப்புரைக்காகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய செயற்குழுக்களின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மையில், ஆவணப்படுத்துதலில் பெரும் ஓட்டை. அதை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டோம். தேர்தலில் ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்றது வரலாறு.

பேரவையின் தன்னார்வலர் ஒருவர் பேரவைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமெனச் செய்த செயற்பாடுதான் அது. எவரும் மாற்றுக்கருத்துக் கொள்ளவே முடியாது. இல்லையானால், அப்பணத்தைப் பெற்று அப்படியே தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்து விளம்பரங்களைப் பெற்றிருந்திருக்கலாம் வெகுசுலபமாக. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம் பேரவையின் மீதான அக்கறை.

கொடைப்பணம், ”கோவிட் தொற்றுநிதி” எனும் சிட்டைப்பெயருடன் கையளிக்கப்பட்ட பணம். அப்படியான சிட்டைப் பெயர் கொண்டிருப்பதால், அதற்கு மட்டுமேதான் செலவிடப்பட்டாக வேண்டுமாயென்றால் இல்லை. அதற்காகச் செலவிடப்பட்டு, எஞ்சியதை எந்தவொரு இலாபநோக்கற்ற நிறுவனமும் பிறிதொரு அறச்செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம் அதனை அனுமதிக்கின்றது. இவர்களின் நோக்கம், கொஞ்சத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைப் பேரவைப் பணிகளுக்கு என்பதாக இருந்திருக்கின்றது. அதற்கான ஒப்புதல்மடலும் பெறப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டுப் பணத்தை நீங்கள் எப்படிக் கைக்கொள்ளலாமென்பதான விமர்சனம். தவறில்லை. அதிலும் ஒரு தர்க்கம் இருக்கின்றது. முறைப்படி மறுமொழியலாம். அல்லது, தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிடலாம். அதற்கு யார் பொறுப்பு? அடுத்து வந்த செயற்குழுதான் பொறுப்பு. விடுத்து, பணத்தைப் பெற்றுக் கொடுத்தவரைத் தொடர்ந்து கிண்டிக்கொண்டிருப்பது அநீதி.

பெற்றுக்கொடுத்தவர் குறித்து நாங்கள் செய்யாத கிண்டலில்லை. கேலியில்லை. பேசாத பேச்சில்லை. காரணம், அமைந்த செயற்பாடுகள். “எங்களுக்கு ஒரு ஃபோன் செய்திருந்தால் போதும், கொண்டாடப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்போம். சேர்க்கை சரியில்லை போல. தவறாக வழிநடத்தப்படுகின்றார்” என, கேலி கிண்டல் விமர்சனம் செய்த அளவுக்கு நிகராக, அக்கறையின்பாற்பட்டும் பேசியிருக்கின்றோம். பரிவும் கொண்டிருந்திருக்கின்றோம்.

காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். ஒரு பெரும்பணத்தை ஈட்டியும் கொடுத்துவிட்டு, சமூகத்திடம் நொம்பலமும் பெற்றுக் கொள்வதெல்லாம் முதிர்ந்த சமூகத்தின் அழகாக இருக்க முடியாது. எனக்கு அவருக்குமான உறவென்பது இதுதான். இதை நான் தமிழின்மீது ஆணையிட்டு என் பிள்ளைகளின்மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன். 15 விநாடிகள். 2025 விழாவில் பேசியதுதான் முதன்முறை. தொழில்முனைவோர் மாநாட்டு நாள் அது. “என்ன கோட் சூட் போடலையா?” “வணக்கங்க. வர்ற அவசரத்துல ஒரு சூட்கேசையே தவறவிட்டுட்டு வந்துட்டன்”. சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான், இந்த மணித்துளி வரையிலும் எங்களுக்குள்ளான உறவென்பது தொடர்பென்பது இவ்வளவுதான்!

பேரவையின் வசம் இருக்கும் அந்த வைப்புநிதிக்கு, அவர் பெயரை வைக்க வேண்டும். அல்லது அவர் பரிந்துரைக்கும் பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும். தற்போது அவர் செயற்குழுவிலும் இருக்கின்றார். விரைவில் பொறுப்புக்காலம் முடிவுக்கு வரவிருக்கின்றது. சிறப்புகள் செய்யப்பட்ட விடைபெறலாக அது அமைந்தால் அது நமக்குப் பெருமை!

𝐀 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐫𝐚𝐢𝐬𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 𝐜𝐚𝐧 𝐞𝐜𝐡𝐨 𝐟𝐚𝐫𝐭𝐡𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝 𝐰𝐡𝐢𝐬𝐩𝐞𝐫𝐬 𝐨𝐟 𝐚𝐠𝐫𝐞𝐞𝐦𝐞𝐧𝐭.

-பழமைபேசி.

5/26/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐝𝐮𝐜𝐢𝐚𝐫𝐲 𝐃𝐮𝐭𝐢𝐞𝐬

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற ஒரு முக்கிய இலாப நோக்கற்ற அமைப்பின் இயக்குநராகவோ  அல்லது பொறுப்பாளராகவோ செயல்படும்போது, சட்டப்பூர்வ, அறநெறி சார்ந்த கடமைகள் மிக அதிகம். இதனை ஆங்கிலத்தில் Fiduciary Duties (நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகள்) என்று அழைப்போம். இந்தக் கடமைகளின்படி, ஒரு இயக்குநர் (Board Member) முக்கியமாக என்ன செய்யக்கூடாது என்பதை மூன்று முதன்மைக் கோட்பாடுகளின் கீழ் பின்வருமாறு பிரிக்கலாம்:

தன்முனைப்பு, தன்விளம்பரமின்மை

அமைப்பின் நலனைத் தவிர்த்து, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகச் செயல்படக் கூடாது. தன்னல முரண்பாடுகளை (Conflicts of Interest) மறைக்கக் கூடாது: உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ நிதி ரீதியாகவோ அல்லது தகுதி ரீதியாகவோ நன்மைதரும் எந்தவொரு ஒப்பந்தம், வாக்கெடுப்பு  தேர்விலும் நீங்கள் தலையிடவோ அல்லது அதை மறைக்கவோ கூடாது. (எகா: தன் சங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, பொறுப்பளித்தல் போன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது)

தன்-வணிகம் செய்யக்கூடாது. உங்கள் பொறுப்பினைப் பயன்படுத்தி முறையற்ற பயணப் படிகள், கட்டணத் திருப்பிச் செலுத்தல்கள் அல்லது அமைப்பின் வளங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தக் கூடாது. (எகா: பேரவையின் மின்னஞ்சல்களைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது குற்றம்)

அமைப்பின் இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், வர்த்தக முத்திரைகள், துணைக்குழுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த அமைப்புக்குச் சொந்தமானவை. அதை ஒரு தனிநபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட அணியினரோ தங்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை உடையது எனக் கோரக் கூடாது. (எகா: வாட்சாப் குழுக்கள் அமைப்பின் வசம் ஒப்படைக்காமல் இருப்பது, TamilER முதலானவற்றை தம் அணிக்கு மட்டும் ஏதுவாகப் பயன்படுத்துதல் முதலானவை குற்றம்)

பொறுப்புக் கண்காணிப்பு

அமைப்பின் செயல்பாடுகளைக் கவனத்துடனும், விழிப்புடனும் கண்காணிக்க வேண்டும். அதில் கவனக்குறைவு இருத்தல் கூடாது. கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது, நிதிநிலை அறிக்கைகளை முறையாகப் படித்துப் பார்க்காமல் இருப்பது, அல்லது பெரிய திட்டங்களுக்குக் கண்மூடித்தனமாக "ஆம்" என்று வாக்களிப்பது கடமைத் தவறுதலாகும். அலட்சியமாக இருப்பதும் சட்டப்படி குற்றமே. (எகா: கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே, கூட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குற்றம்)

அமைப்பின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமலோ, கணக்குகளில் குளறுபடிகளோ, அல்லது நிர்வாகத்தில் சர்வாதிகாரப் போக்கோ தெரிந்தால், அதைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காக்கக் கூடாது. (எகா: தான் செயலாற்றும் குழு தாக்கல் செய்திருக்கும் வருமான வடிப் படிவத்தில் என்ன இருக்கின்றதெனக் கூட தெரியாத நிலையில் இருப்பது குற்றம்)

அமைப்பின் நிதியைத் தனிப்பட்ட கணக்குகளுடன் இணைப்பதோ அல்லது பெரிய செலவுகளுக்கு இருவர் கையொப்பமிட வேண்டும், வழங்குநர், வணிகர் தகவலைப் பகிர்தல் போன்ற உள்முகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதோ பெரும் தவறாகும். (எகா: வெண்டர் தகவலைப் பகிராமல் இருப்பது குற்றம்)

சட்ட விதிமுறைப் பாதுகாப்பு

அமைப்பின் நோக்கங்களுக்கும், அதன் சட்ட விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள், உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் (Grievance procedures) ஆகியவை விருப்பத்தின் பேரில் பின்பற்றுபவை அல்ல; அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை. தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற விதிகளையும் நடைமுறைகளையும் மாற்றுவதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. (எகா: திட்டமிட்டே விண்ணப்பத்தைக் கிரீவன்சு கமிட்டிக்குக் கடைசி நாளான 15ஆம் நாளில் அனுப்பி இருந்தால் அது குற்றம்)

ஒரு குறிப்பிட்ட மாநாட்டிற்காகவோ (Convention) அல்லது கலைத் திட்டத்திற்காகவோ திரட்டப்பட்ட நிதியை, முறையான வெளிப்படையான ஒப்புதல், மறுசீரமைப்பு இல்லாமல் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. (எகா: மாநாட்டுச் செலவினைப் பொதுக்கணக்கில் எழுதுவது குற்றம்)

501(c)(3) வரிவிலக்கு பெற்ற ஓர் அமைப்பு, அதன் பண்பாட்டு, கல்வி நோக்கங்களிலிருந்து விலகி, ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ அல்லது விளம்பரம், பரப்புரையில் ஈடுபடுவதோ கூடாது. (எகா: அரசியல், திரைப்பட வணிகம் முதலானவற்றுக்கு அமைப்பினர் அமைப்பினைப் பயன்படுத்துவது குற்றம்)

ஒரு நிர்வாகி எப்போது வெளிப்படைத்தன்மையைக் குறைத்து, பொதுவான உறுப்பினர்களின் குரலை நசுக்கி, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அப்போதே அவர் தனது நம்பிக்கைப் பொறுப்புக் கடமையிலிருந்து தவறிவிடுகிறார். (எகா: கடைசி நேரத்தில் நிர்வாகிகள் அஜண்டாவைத் தனதாக்கிக் கொள்வது மாபெரும் குற்றம்)

அமைப்பு நாளுக்கு நாள் வளர்கின்றது, விரிவடைகின்றது. பேரவை என்பது மட்டுமன்று; தமிழ்ச்சங்கங்களும்தான். ஆகவே, அமெரிக்காவில் அமெரிக்கராக வாழ்வது காலத்தின் கட்டாயம். செயற்குழுவில் பங்கேற்கு முன், விழிப்புணர்வு கொள்ள வேண்டும். புகழ்போதைக்கும் தன்விளம்பரத்துக்கும் ஆசைப்பட்டு, வணிக சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சோரம் போதல் கூடாது. உறக்கத்தினூடே எழுப்பிக் கேட்டாலும், சட்டவிதிமுறைகளைச்(bylaws) சரியாகச் சொல்லும்படியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.


-பழமைபேசி, 05/26/2026.

5/10/2026

அன்னையர் நாள்

அன்னையர் நாளைக் கொண்டாடுவது அல்லது அன்னையரைப் போற்றுவது என்பது வெறும் ஒரு நாள் சடங்கு மட்டுமன்று; அது நம் வாழ்வின் வேரான அன்பிற்கும் ஈகத்திற்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.  கருவிலே உருவானது முதல், அதை வளர்த்து ஆளாக்கி, தான் உள்ளவரையிலும் அன்னை செய்யும் உழைப்புடன் கூடிய உணர்வுப்புல ஈகங்கள் ஈடு இணையற்றவை. தன் நலனை விடக் குழந்தையின் நலனே பெரிதென வாழும் அந்தப் பேரன்பிற்கு நன்றி செலுத்தி, அவர்களின் இருப்பை உளப்பூர்வமாக உணர்ந்து செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய நாள், அன்னையர் நாள்!

குடும்பம் என்னும் அமைப்பை வலுவாக வைத்திருப்பதில் தாயின் பங்கு மிக முக்கியமானது. ஒரு வளமான சமுதாயம் உருவாக அடித்தளமாக இருக்கும் அன்னையர்களின் உழைப்பையும், சமூகப் பங்களிப்பையும் உணர்ந்து சிறப்பிக்க வேண்டியது கட்டாயம்.

இன்றைய வேகமான இயந்திர விரைவு உலகில், நாம் பல நேரங்களில் நெருக்கமான உறவுகளுக்கு நேரம் ஒதுக்கத் தவறிவிடுகிறோம். இது போன்ற ஒரு குறிப்பிட்ட நாள், நம் தாயுடன் நேரத்தைச் செலவிட, நம் அன்பை வெளிப்படுத்த, அவர்களின் உளநலம், உடல்நலம் பேணயென பல்வேறு விழுமியங்களுக்கான விழிப்புணர்வுத் தூண்டுதலாக அமைகிறது அன்னையார் நாள்.

நம் தமிழ்மரபில் அன்னைக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற வள்ளுவரின் வாக்கு, ஒரு தாய் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அடையும் மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பண்டைய சங்க இலக்கியங்கள் துவக்கம், பாரதியாரின் கவிதைகள் வரை, தாயைப் போற்றுதலென்பது அறமாகவும் பண்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

உலக அளவில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரால் தன் தாயின் நினைவாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. நாம் செய்ய வேண்டியது என்ன? விலையுயர்ந்த பரிசுகளை விட, அவர்களுடன் செலவிடும் நேரம், அவர்கள் மீது காட்டும் பரிவும் கவனமும், அவர்களின் உழைப்பைப் பாராட்டிச் சொல்லும் சில அன்பான வார்த்தைகள், அவர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து கொள்வது, நாட்டம் கொண்டு எதிர்வரும் காலத்தினைத் திட்டமிடுவது போன்றவை பயனளிக்கக் கூடியவை.

அன்னையரைப் போற்றுவது என்பது ஒரு நாளைக்குரியது மட்டுமன்று, அது வாழ்நாள் முழுவதும் நம் செயல்களில் வெளிப்பட வேண்டியவொன்று. அன்னையென்பவள், குழந்தைப் பேறு முதல் எதிர்கொள்ளும் உடல்ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டவள். அதே கூறுகள், அத்தை, சின்னம்மா, பெரியம்மா, மனைவி, உடன்பிறந்தாள், தோழியென அனைத்து மகளிருக்கும் பொருந்தும்.

அண்மைக்காலமாக, எனக்கு அடிக்கடி மனத்துள் தோன்றுவதெல்லாம் இதுதான். அம்மா இருக்கின்றார். அம்மாவுடன் பிறந்தவர்கள் அம்மாவையும் சேர்த்து எட்டுப் பேர். அம்மாவின் தந்தையார், தாயாருடன் பிறந்தவர்களுக்குப் பிறந்த், அம்மாவின் இரண்டாம் நிலைச் சகோதரங்கள் 22 பேர், ஆக 30 பேரின் குழந்தைகள், எம் தலைமுறையினர் 71 பேர். இந்த 71 பேருக்குமான பிணைப்பை இன்றளவும் தன்னகத்தே கொண்டிருப்பவர் அம்மா. பேராலமரமாக மனக்கண்களில் உருக்கொள்கின்றார்.

அன்றாடமும் அழைத்துப் பேசுவது வாடிக்கை. சற்றுமுன்பும் அழைத்திருந்தேன். காளியம்மன் கோவில் முன்பு கும்மியாட்டம், நான் அங்கிருக்கின்றேனெனச் சொல்லிச் சற்றுப் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி, சாப்பிட்டாயா? “சாப்பிட்டாயா?”, அந்த ஒற்றைவினாவில் அடங்கி இருக்கின்றது எல்லாமும். இதற்கு மேல், அன்னையர் நாளில், அன்னையர் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை.

𝐋𝐢𝐟𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐜𝐨𝐦𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐚𝐧𝐮𝐚𝐥; 𝐢𝐭 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫.


5/08/2026

இன்றைய இளையோர் இயக்கங்களும் தோல்விகளும்

தலைமுறை இடைவெளிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியும் கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கும் முன்னெடுப்புகள், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிகின்றனயென்பதை உலகெங்கும் பார்த்து வருகின்றோம்.

முந்தைய கால போராட்டங்களில் ஒரு வலுவான கட்டமைப்புடன் இடம் பெறும். ஆனால், Gen-Z இயக்கங்கள் பெரும்பாலும் முறைசார் இயக்கமும் முறையான தலைமையும் அற்ற முறையில் நடக்கின்றன, அல்லது ஒரு தனிமனிதரின் பிம்பத்தின்மீது இடம் பெறுகின்றன. இது துவக்கத்தில் ஜனநாயகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால திட்டங்களை வகுக்கவும் தொலைநோக்குக் கொள்கைகள் இல்லாமல் போகும்போதும், திசைமாறிச் சிதறிவிடுகிறது. 2020இல் அமெரிக்காவில் நடந்த 'Black Lives Matter' முன்னெடுப்புகள் உலகையே உலுக்கின. ஆனால், தெளிவான தலைமை இல்லாததால், நிதி கையாளுதல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அதன் தாக்கம் குறைந்தது.

இன்றைய புரட்சிகள் பெரும்பாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் தொடங்குகின்றன. இணையத்தில் ஒரு பதிவினைப் பகிரும்போது கிடைக்கும் ஒருவித "போலி மனநிறைவு", களத்தில் இறங்கி உழைக்கும் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சமூக ஊடகங்கள் ஒரு முன்னெடுப்பினை விரைவாகப் பிரபலப்படுத்தினாலும், அதே வேகத்தில் மக்கள் அடுத்த ட்ரெண்டிற்கு மாறிவிடுகிறார்கள். இதனால் இயக்கத்தின் ஆழம் நீர்த்துப்போகிறது.

டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்த தலைமுறை என்பதால், எல்லாவற்றிலும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஒரு புரட்சி என்பது பல ஆண்டுகள் நீடிக்க வேண்டிய ஒரு நீண்ட பயணம். ஆனால், சில வாரங்களிலேயே மாற்றம் நிகழவில்லை என்றால், இளைஞர்கள் சோர்வடைந்து பின்வாங்குகின்றனர். இந்த பொறுமையின்மையை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் 'Aragalaya' போராட்டம். அதிபரை விரட்டியடித்த வேகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அரசியல் மாற்றுத் திட்டம்  இல்லாததால், மீண்டும் பழைய அரசியல் சக்திகளிடமே அதிகாரம் சென்றடைந்தது.

பல Gen-Z இயக்கங்கள் "எதை எதிர்க்கிறோம்" என்பதில் தெளிவாக இருக்கின்றன, ஆனால் "எதை உருவாக்கப் போகிறோம்" என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. வெறும் எதிர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு நிலையான ஆட்சியை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமீபத்திய வங்கதேச மாணவர்கள் போராட்டம். ஷேக் ஹசீனாவை பதவியிறக்கம் செய்வதில் வெற்றி கண்டாலும், அதற்குப் பின் வந்த வன்முறைகள் மற்றும் மதவாத ஊடுருவல்கள் அந்தப் புரட்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கின.

இளைஞர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடினாலும், பிலிப்பைன்ஸ் அரசியல் இன்றும்  'ஆளுமை வழிபாடு' என்பதிலேயே சுழல்கிறது. ஜனநாயக விழுமியங்களை விட, "ஆராதிக்கும் இவரால்தான் நாடு முன்னேறும்" என்ற பழைய காலத்து எண்ணம் இளைஞர்களிட, ஆழமாக இருப்பதால் அவர்களது முன்னெடுப்புகள் தேக்கநிலையையே கண்டன.

Gen-Z இயக்கங்கள் தோல்வியடையக் காரணம் அவர்களின் நோக்கத்தில் இருக்கும் பிழையல்ல, மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு  இல்லாததே ஆகும். உணர்ச்சிகரமான போராட்டங்களுடன், அறிவுப்பூர்வமான அரசியல் திட்டமிடலும் இணையும்போது மட்டுமே எதிர்காலப் புரட்சிகள் வெற்றியைத் தழுவும். 

தமிழ்நாட்டின் அடுத்தடுத்த காட்சிகள், இன்றைய இளையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா அல்லது உலகின் ஏனைய நிகழ்வுகளைப் போலவே அமையுமா? முடிவு, காலத்தின் கைகளில்!


-பழமைபேசி.

5/05/2026

தேர்தலில் பங்களிப்பு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
— கணியன் பூங்குன்றனார்

உலக நாகரிகத்தின் தொட்டிலென்று போற்றப்படும் தமிழும், அதன் மக்களும் உலக வரலாற்றின் மிகத் தொன்மையான அடையாளங்கள். காலங்காலமாகக் கடல் கடந்து வாழும் ஆற்றல் கொண்ட தமிழர்கள், இன்று உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தங்களின் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளனர். அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அவர்களின் பண்பாட்டு முகமாகவும் விளங்குவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். இப்பேரவையின் தரத்தையும், நயத்தையும், மாண்பினையும் காத்து மேம்படுத்துவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழ்மொழி வெறும் பேச்சல்ல; அது ஒரு பண்பாடு, வாழ்வியல் நெறி. உலகின் மிக மூத்தகுடியான தமிழ் மக்கள், தங்களின் உழைப்பாலும் அறிவுத்திறனாலும் அமெரிக்கா போன்ற உலகின் முதன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பம் மிக்க நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பரவிவாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் பாலமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு முற்போக்கு நாட்டில், தமிழர்களின் உயரிய விழுமியங்களைப் போற்றப்பணித்திருக்கும் பேரவை எப்போதும் தன் தரத்திலும் மாண்பிலும் விட்டுக்கொடுத்தல் செய்து கொள்ளக் கூடாது. உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமானால், பேரவையின் செயல்பாடுகள் மிக உன்னதமானவையாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் பேரவையைத் தம்வீடாக எண்ணி, இதன் வளர்ச்சிக்கும் நெறிமுறை சார்ந்த செயல்பாட்டிற்கும் தமக்கும் பங்குண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாபெரும் அமைப்பு இன்னும் உயரங்களை எட்ட வேண்டுமானால், அதற்குள் இருக்கும் தேக்க நிலைகளையும், எதிர்மறையான காரணிகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். பேரவை முழுமையான மாண்பை அடைய நாம் பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும்:

குறுங்குழுச் சார்பு 

அமைப்புகளுக்குள் உருவாகும் சிறிய குழுக்களின் ஆதிக்கம், ஒட்டுமொத்தப் பேரவையின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை முன்வைக்க வேண்டும்.

 சாதி, சமயச்சார்பு 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" — திருவள்ளுவர்.  தமிழ் என்பது சாதி, சமயங்களைக் கடந்து எல்லோரையும் பிணைக்கும் ஒரு சக்தி. பேரவைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதிய, சமயரீதியிலான பாகுபாடுகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ இடம் தரக் கூடாது. தமிழன் என்ற ஒற்றை அடையாளமே முதன்மையானதாகவும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். 

பிற்போக்குத்தனம்

பழமைவாதக் கருத்துக்களையும், மாற்றங்களை ஏற்கமறுக்கும் பிடிவாதத்தையும் கைவிட்டு, காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனைகளுடனும் அறிவியல் பார்வையுடனும் பேரவை நகர வேண்டும்.

பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பரந்த மனப்பான்மை கொண்ட தகுதியான தனிமனிதர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பார்வையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். தன்முனைப்போ, புகழோ விரும்பாமல், அறநெறி, நேர்மையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். தமிழ்மொழியின் மரபினைப் பேணுவதோடு, புதுமை உலகிற்குத் தக்கவாறு வழிநடத்தும் சிந்தனை கொண்டிருக்க வேண்டும். தகுதியுடைய ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பேரவையின் முக்கியப் பொறுப்புகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்வதே பேரவையின் தரத்தை உயர்த்தும் வழியாகும்.

பிளவுவாதம். பிற்போக்குத்தனம், தன்முனைப்பு, புகழ்வெளிச்ச ஆசை, பகைமை பாராட்டுதல், வாசிப்பற்ற மொண்ணைத்தனம் முதலானவை சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருப்பன. பேரவைக்களமும் இவற்றில் விதிவிலக்கல்ல. அவை எங்குமிருக்கும். ஆனால், தன்னார்வத் தொண்டு என்பது மற்றவருக்கான சேவையில் தம்மைக் கரைத்துக் கொள்ளக் கூடிய மெழுகுவர்த்தியைப் போன்றதாகும். பல மணி நேரங்கள் உழைத்திட வேண்டும். மக்களின்பால் பரிவு இருந்திடல் வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கும் மேட்டிமைக்கும் ஆனதல்ல இப்பணிகள்.

தன்கருத்து எதுவானாலும் திடமாகச் சொல்லும் மனப்பாங்கு இருந்திடல் வேண்டும். குறுங்குழுவாதத்துக்குள் இருந்துகொண்டு கொந்தளிப்புகளோடு இருப்பதற்கான இடமல்ல பேரவை. ஒவ்வொருவரும் தன் ஆன்மாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தக் கொள்கை, இந்தக் கொள்கை என்பதெல்லாம் வேலைக்காகாது, குறுங்குவாத பகைமை பாராட்டும் சமன்பாடற்ற இடத்திற்கே இட்டுச்செல்லக் கூடியன அவை. உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை! 

Have the courage to exercise your rights.

-பழமைபேசி.