5/08/2026

இன்றைய இளையோர் இயக்கங்களும் தோல்விகளும்

தலைமுறை இடைவெளிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியும் கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கும் முன்னெடுப்புகள், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிகின்றனயென்பதை உலகெங்கும் பார்த்து வருகின்றோம்.

முந்தைய கால போராட்டங்களில் ஒரு வலுவான கட்டமைப்புடன் இடம் பெறும். ஆனால், Gen-Z இயக்கங்கள் பெரும்பாலும் முறைசார் இயக்கமும் முறையான தலைமையும் அற்ற முறையில் நடக்கின்றன, அல்லது ஒரு தனிமனிதரின் பிம்பத்தின்மீது இடம் பெறுகின்றன. இது துவக்கத்தில் ஜனநாயகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால திட்டங்களை வகுக்கவும் தொலைநோக்குக் கொள்கைகள் இல்லாமல் போகும்போதும், திசைமாறிச் சிதறிவிடுகிறது. 2020இல் அமெரிக்காவில் நடந்த 'Black Lives Matter' முன்னெடுப்புகள் உலகையே உலுக்கின. ஆனால், தெளிவான தலைமை இல்லாததால், நிதி கையாளுதல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அதன் தாக்கம் குறைந்தது.

இன்றைய புரட்சிகள் பெரும்பாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் தொடங்குகின்றன. இணையத்தில் ஒரு பதிவினைப் பகிரும்போது கிடைக்கும் ஒருவித "போலி மனநிறைவு", களத்தில் இறங்கி உழைக்கும் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சமூக ஊடகங்கள் ஒரு முன்னெடுப்பினை விரைவாகப் பிரபலப்படுத்தினாலும், அதே வேகத்தில் மக்கள் அடுத்த ட்ரெண்டிற்கு மாறிவிடுகிறார்கள். இதனால் இயக்கத்தின் ஆழம் நீர்த்துப்போகிறது.

டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்த தலைமுறை என்பதால், எல்லாவற்றிலும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஒரு புரட்சி என்பது பல ஆண்டுகள் நீடிக்க வேண்டிய ஒரு நீண்ட பயணம். ஆனால், சில வாரங்களிலேயே மாற்றம் நிகழவில்லை என்றால், இளைஞர்கள் சோர்வடைந்து பின்வாங்குகின்றனர். இந்த பொறுமையின்மையை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் 'Aragalaya' போராட்டம். அதிபரை விரட்டியடித்த வேகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அரசியல் மாற்றுத் திட்டம்  இல்லாததால், மீண்டும் பழைய அரசியல் சக்திகளிடமே அதிகாரம் சென்றடைந்தது.

பல Gen-Z இயக்கங்கள் "எதை எதிர்க்கிறோம்" என்பதில் தெளிவாக இருக்கின்றன, ஆனால் "எதை உருவாக்கப் போகிறோம்" என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. வெறும் எதிர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு நிலையான ஆட்சியை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமீபத்திய வங்கதேச மாணவர்கள் போராட்டம். ஷேக் ஹசீனாவை பதவியிறக்கம் செய்வதில் வெற்றி கண்டாலும், அதற்குப் பின் வந்த வன்முறைகள் மற்றும் மதவாத ஊடுருவல்கள் அந்தப் புரட்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கின.

இளைஞர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடினாலும், பிலிப்பைன்ஸ் அரசியல் இன்றும்  'ஆளுமை வழிபாடு' என்பதிலேயே சுழல்கிறது. ஜனநாயக விழுமியங்களை விட, "ஆராதிக்கும் இவரால்தான் நாடு முன்னேறும்" என்ற பழைய காலத்து எண்ணம் இளைஞர்களிட, ஆழமாக இருப்பதால் அவர்களது முன்னெடுப்புகள் தேக்கநிலையையே கண்டன.

Gen-Z இயக்கங்கள் தோல்வியடையக் காரணம் அவர்களின் நோக்கத்தில் இருக்கும் பிழையல்ல, மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு  இல்லாததே ஆகும். உணர்ச்சிகரமான போராட்டங்களுடன், அறிவுப்பூர்வமான அரசியல் திட்டமிடலும் இணையும்போது மட்டுமே எதிர்காலப் புரட்சிகள் வெற்றியைத் தழுவும். 

தமிழ்நாட்டின் அடுத்தடுத்த காட்சிகள், இன்றைய இளையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா அல்லது உலகின் ஏனைய நிகழ்வுகளைப் போலவே அமையுமா? முடிவு, காலத்தின் கைகளில்!


-பழமைபேசி.

5/05/2026

தேர்தலில் பங்களிப்பு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
— கணியன் பூங்குன்றனார்

உலக நாகரிகத்தின் தொட்டிலென்று போற்றப்படும் தமிழும், அதன் மக்களும் உலக வரலாற்றின் மிகத் தொன்மையான அடையாளங்கள். காலங்காலமாகக் கடல் கடந்து வாழும் ஆற்றல் கொண்ட தமிழர்கள், இன்று உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தங்களின் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளனர். அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அவர்களின் பண்பாட்டு முகமாகவும் விளங்குவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். இப்பேரவையின் தரத்தையும், நயத்தையும், மாண்பினையும் காத்து மேம்படுத்துவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழ்மொழி வெறும் பேச்சல்ல; அது ஒரு பண்பாடு, வாழ்வியல் நெறி. உலகின் மிக மூத்தகுடியான தமிழ் மக்கள், தங்களின் உழைப்பாலும் அறிவுத்திறனாலும் அமெரிக்கா போன்ற உலகின் முதன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பம் மிக்க நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பரவிவாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் பாலமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு முற்போக்கு நாட்டில், தமிழர்களின் உயரிய விழுமியங்களைப் போற்றப்பணித்திருக்கும் பேரவை எப்போதும் தன் தரத்திலும் மாண்பிலும் விட்டுக்கொடுத்தல் செய்து கொள்ளக் கூடாது. உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமானால், பேரவையின் செயல்பாடுகள் மிக உன்னதமானவையாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் பேரவையைத் தம்வீடாக எண்ணி, இதன் வளர்ச்சிக்கும் நெறிமுறை சார்ந்த செயல்பாட்டிற்கும் தமக்கும் பங்குண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாபெரும் அமைப்பு இன்னும் உயரங்களை எட்ட வேண்டுமானால், அதற்குள் இருக்கும் தேக்க நிலைகளையும், எதிர்மறையான காரணிகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். பேரவை முழுமையான மாண்பை அடைய நாம் பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும்:

குறுங்குழுச் சார்பு 

அமைப்புகளுக்குள் உருவாகும் சிறிய குழுக்களின் ஆதிக்கம், ஒட்டுமொத்தப் பேரவையின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை முன்வைக்க வேண்டும்.

 சாதி, சமயச்சார்பு 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" — திருவள்ளுவர்.  தமிழ் என்பது சாதி, சமயங்களைக் கடந்து எல்லோரையும் பிணைக்கும் ஒரு சக்தி. பேரவைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதிய, சமயரீதியிலான பாகுபாடுகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ இடம் தரக் கூடாது. தமிழன் என்ற ஒற்றை அடையாளமே முதன்மையானதாகவும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். 

பிற்போக்குத்தனம்

பழமைவாதக் கருத்துக்களையும், மாற்றங்களை ஏற்கமறுக்கும் பிடிவாதத்தையும் கைவிட்டு, காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனைகளுடனும் அறிவியல் பார்வையுடனும் பேரவை நகர வேண்டும்.

பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பரந்த மனப்பான்மை கொண்ட தகுதியான தனிமனிதர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பார்வையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். தன்முனைப்போ, புகழோ விரும்பாமல், அறநெறி, நேர்மையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். தமிழ்மொழியின் மரபினைப் பேணுவதோடு, புதுமை உலகிற்குத் தக்கவாறு வழிநடத்தும் சிந்தனை கொண்டிருக்க வேண்டும். தகுதியுடைய ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பேரவையின் முக்கியப் பொறுப்புகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்வதே பேரவையின் தரத்தை உயர்த்தும் வழியாகும்.

பிளவுவாதம். பிற்போக்குத்தனம், தன்முனைப்பு, புகழ்வெளிச்ச ஆசை, பகைமை பாராட்டுதல், வாசிப்பற்ற மொண்ணைத்தனம் முதலானவை சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருப்பன. பேரவைக்களமும் இவற்றில் விதிவிலக்கல்ல. அவை எங்குமிருக்கும். ஆனால், தன்னார்வத் தொண்டு என்பது மற்றவருக்கான சேவையில் தம்மைக் கரைத்துக் கொள்ளக் கூடிய மெழுகுவர்த்தியைப் போன்றதாகும். பல மணி நேரங்கள் உழைத்திட வேண்டும். மக்களின்பால் பரிவு இருந்திடல் வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கும் மேட்டிமைக்கும் ஆனதல்ல இப்பணிகள்.

தன்கருத்து எதுவானாலும் திடமாகச் சொல்லும் மனப்பாங்கு இருந்திடல் வேண்டும். குறுங்குழுவாதத்துக்குள் இருந்துகொண்டு கொந்தளிப்புகளோடு இருப்பதற்கான இடமல்ல பேரவை. ஒவ்வொருவரும் தன் ஆன்மாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தக் கொள்கை, இந்தக் கொள்கை என்பதெல்லாம் வேலைக்காகாது, குறுங்குவாத பகைமை பாராட்டும் சமன்பாடற்ற இடத்திற்கே இட்டுச்செல்லக் கூடியன அவை. உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை! 

Have the courage to exercise your rights.

-பழமைபேசி.

4/25/2026

கொடுஞ்சுழற்சி

வாழ்வியலில் ஒரு தீயவிளைவு மற்றொன்றற்குக் காரணமாகி, அது மீண்டும் தொடக்கத்திலிருந்த சிக்கலையே இன்னும் வலுப்படுத்துவதை 'கொடுஞ்சுழற்சி' என்கிறோம். இது ஒரு நச்சுச்சுழல் போன்றது. ஒரு சிக்கலில் இருந்து வெளிவர முயலும்போது, அதுவே மற்றொரு சிக்கலை உருவாக்கி, மீண்டும் நம்மைத் தொடக்கப் புள்ளிக்கே கொண்டு வந்து நிறுத்தும் ஒரு முடிவிலித் தொடர்நிகழ்வாக இது அமைகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் ஒரு பெரும்கொடுஞ்சுழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும். பெரும்பாலும் பொதுநலன் கருதி இயங்கும் இவ்வமைப்புகளில், அதிகாரப் பகிர்வு அல்லது கருத்து மோதல்கள் ஏற்படும்போது அது பலவாறாகச் சுழன்று சுழன்று, சுழலுக்குள் எல்லாரையும் இழுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது.

இரு நபர்களுக்கிடையே ஏற்படும் விருப்பு வெறுப்புகளின்பாற்பட்ட சிறு கருத்து வேறுபாடு, முறையான தகவல் தொடர்பின்மை, வெளிப்படைத் தன்மையின்மை, நெறிமுறைகளின்மை முதலானவற்றால், நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கும். அதுவே, அன்றாடப் பணிகளில் எதிரொலித்து, திட்டங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றது. அதனால் பின்னடைவு நேரும் போது, ஒருவருக்கொருவர் சுட்டிக் கொள்வர். இது மீண்டும் பகையை ஆழமாக்கி, புதிய பிணக்குகளுக்கு வழிவகுக்கிறது. இறுதியில், நிறுவனத்தின் உயரிய நோக்கங்கள் சிதைந்து, உறுப்பினர்களின் வெளியேற்றத்திற்கும் இது காரணமாகிறது.

கொடுஞ்சுழற்சியை உடைப்பது என்பது அச்சுழலின் ஏதேனும் ஒரு கண்ணியைத் தகர்ப்பதில்தான் உள்ளது. குறிப்பாகத் தொண்டு நிறுவனங்களில் ஏற்படும் பிணக்குகளை உடைக்க, வெளிப்படையான உரையாடலும், நடுநிலையான ஒருவரின் தலையீடும் தேவையாகின்றது. 

ஒரு சிக்கலான சுழலில் இருந்து விடுபட, அச்சுழலுக்கு நேர்மாறான ஒரு நற்சுழற்சியை உருவாக்க வேண்டும். 

விழிப்புணர்வுடன் கூடிய திட்டமிடலும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் மட்டுமே, அமைப்பினை இக்கொடுஞ்சுழற்சியில் இருந்து விடுவித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

குற்றம் குறைகளைச் சொல்லிப் பொறுப்புக்கு வந்தபின், அதுசார்ந்த தனிமனிதர்கள் மீது பாய்ந்து குதறிக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக, தம் செயற்பாட்டில் அவை நிகழாமல் பார்த்துக் கொள்வதோடு, மேன்மை நோக்கிய புதிய பணிகள் பல செய்தாக வேண்டும்.

செயற்குழுவில் இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே லைக்குகள் இட்டுக் கொள்வதெல்லாம் பத்தாம் பசலித்தனம். கொடுஞ்சுழலில் சிக்குண்டு போனவர்கள், அறிவை இழக்கிறார்கள். நிதானத்தை இழக்கிறார்கள். குழுக்களுக்கிடையே சமர்புரிந்து கொள்வதை எவரும் தன்னார்வத் தொண்டு எனச் சொல்லப் போவதில்லை. இல்லவே இல்லை.

𝐁𝐫𝐞𝐚𝐤 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞, 𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞 𝐛𝐫𝐞𝐚𝐤𝐬 𝐲𝐨𝐮.

-பழமைபேசி.

4/12/2026

தமிழ்நாடு: தேர்தல் 2026

தமிழ்நாடு தேர்தல் அரசியலில், மூன்றாம் தரப்பு ஒன்று 15% வாக்கு வங்கியை எட்டுவது அல்லது எட்டுவதற்கான வாய்ப்புகள் ஏன் ஒரு "அரசியல் புயலாகக்" கருதப்படுகிறது?

"வெற்றி இலக்கு" குறைதல்

பொதுவாக திமுக+ - அதிமுக+ என இருமுனைப் போட்டி நிலவும்போது, ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45% முதல் 50% வரை வாக்குகள் தேவைப்படும். ஆனால், ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளைப் பிரிக்கும்போது, வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்சத் தேவை 35% ஆகக் குறைகிறது. இதனால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த 15% வாக்குகள் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான இடைவெளியை விட அதிகம் என்பதால், அது பிரதான கட்சிகளின் கோட்டைகளைச் சரிக்கும் வல்லமை கொண்டது.

"வீணாகும் வாக்குகள்" என்ற பிம்பம் உடைதல்

பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்கு வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே வலுவான இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஒரு புதிய கட்சி 15% வாக்குகளைப் பெறும்போது, அது ஒரு "வெல்லக்கூடிய மாற்று" என்ற இடத்தைப் பெறுகிறது. இந்த உளவியல் மாற்றம், அடுத்தடுத்த தேர்தல்களில் நடுநிலை வாக்காளர்களையும் இளைஞர்களையும் அந்த மூன்றாம் தரப்பை நோக்கிப் பெருமளவில் ஈர்க்கும். இதனால் இருமுனை அரசியல் என்பது முக்கோணப் போட்டியாக மாறி, வாக்குகள் சிதறுவது உறுதி செய்யப்படுகிறது.

"கிங் மேக்கர்" தகுதி

தமிழக சட்டசபையின் மொத்த இடங்கள் 234. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை. ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளை மாநிலம் தழுவிப் பெற்றால், அது குறைந்தது 20 முதல் 40 தொகுதிகளில் நேரடியாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை திமுக அல்லது அதிமுக கூட்டணிகளால் தனித்துப் பெரும்பான்மையான 118 இடங்களைப் பிடிக்க முடியாவிட்டால், இந்த 20-40 இடங்களை வைத்திருக்கும் மூன்றாம் தரப்பே "யார் முதல்வர்?" என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.

கூட்டணி மாற்றங்களும் புதிய அரசியலும்

இந்த 15% வாக்கு வலிமை என்பது பெரிய கட்சிகளைப் பணிய வைக்கும் ஒரு கருவியாகும். ஒரு கட்சி இவ்வளவு வாக்குகளைத் தனித்து வைத்திருந்தால், அதுவரை பெரிய கட்சிகளுடன் இருந்த சிறிய கட்சிகள் (சாதிய மற்றும் சிறிய அமைப்புகள்) தங்கள் லாபத்திற்காக மூன்றாம் தரப்புடன் இணையத் தொடங்கும். இது திராவிடக் கட்சிகளின் பாரம்பரியக் கூட்டணி கட்டமைப்பை உடைத்து, ஒரு புதிய அரசியல் அணிசேர்க்கைக்கு வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொன்னால்: 15% வாக்கு என்பது வெறும் எண்கள் அல்ல; அது தமிழகத்தின் 50 ஆண்டுகால இருமுனை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆட்சியில் பங்கு கேட்கும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் அதிகார மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். இதனடிப்படையில்தாம் 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் தரப்புக்கூட்டணி அமையப் பெற்றது. ஆனால், மூன்றாம் தரப்பினால் 15% வாக்குகளோ, அல்லது 20 இடங்களோ அடைய முடியவில்லை.

ஆளும்கட்சிக் கூட்டணியை எதிர்த்து நான்கு வலிமையான கூட்டணிகள் தனித்தனியேப் போட்டியிடும் போது, அது ஒரு "பலமுனைப் போட்டி"  சூழலை உருவாக்குகிறது. அதைத்தான் நாம் 2026 தேர்தலில் காண்கின்றோம். அதன் தாக்கம் எவ்வாறெல்லாம் அமையக் கூடும்?

வாக்குகள் சிதறுதல் 

ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள்  நான்கு வெவ்வேறு கூட்டணிகளிடையேப் பிரிந்துவிடும். இதனால் ஆளும்கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி 60% இருந்தாலும், அந்த 60% வாக்குகள் நான்கு கூட்டணிகளுள் அதிகபட்சமாக ஒரு கட்சிக்கு 40%க்கும் குறைவாக இருக்கும்படிப் பிரிந்தால், வெறும் 40% வாக்குகளைப் பெற்றிருக்கும் ஆளும்கட்சி எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

வெற்றிக்கான இலக்கு குறைதல்

இருமுனைப் போட்டியில் வெற்றி பெற 45% முதல் 50% வாக்குகள் தேவைப்படும். ஆனால் ஐந்து கூட்டணிகள் மோதும்போது, வெறும் 30% முதல் 35% வாக்குகள் பெறும் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியும். இது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்  முடிவுகளை மாற்றும். ஆனால் மாற்றுத் தரப்பில் ஏதோவொரு தரப்பு ஆளும்கட்சிக்கும் மிக அருகில் வந்தாக வேண்டும். கணிசமான தொகுதிகளில் இத்தகு வாய்ப்புக்கு இடம் உள்ளது.

"யார் இரண்டாவது இடம்?" என்ற போட்டி

நான்கு எதிர்க்கட்சிக் கூட்டணிகளில் எது "உண்மையான மாற்று" என்ற போட்டி உருவாகும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் கூட்டணி, அடுத்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு நேரடி சவாலாக மாறும். மற்ற மூன்று கூட்டணிகள் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கும்.

உள்ளூர் செல்வாக்கிற்கு முக்கியத்துவம்

கட்சிக் கொள்கைகளை விட, அந்தந்தத் தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட வேட்பாளர்கள்  வெற்றி பெற அதிக வாய்ப்பு கிடைக்கும். ஐந்து முனைப் போட்டியில் கட்சிச் சின்னத்தை விட, வேட்பாளரின் முகம் முக்கியப் பங்கு வகிக்கும்.

தேர்தல் வியூக மாற்றம்

இத்தகைய சூழலில் கட்சிகள் "மாநிலம் தழுவிய அலை" என்பதை விட, "ஒவ்வொரு தொகுதியையும்" தனித்தனியாகக் கவனித்து வியூகம் அமைப்பார்கள். குறிப்பிட்ட சாதி, சமய, இனக்குழு, மொழிசார் வாக்குகளைக் குறிவைத்து பிரிக்கும் உத்திகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

முடிவாக, தமிழ்நாட்டின் 2026 தேர்தலென்பது, வழக்கத்துக்கு மாறாக, மாநிலம் தழுவிய அளவிலான தேர்தலாக அல்லாமல், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இடம்பெறுகின்ற தேர்தலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. அந்தத் தொகுதியில், தொகுதிக்கேற்ற கூட்டணிகளின் உத்தி, வியூகம், களப்பணி முதலானவையே முடிவினைத் தீர்மானிக்கும். அப்படியாக, அதிகத் தொகுதிகளை வெல்வதன் வாயிலாக யார் ஆட்சி என்பது தீர்மானிக்கப்படலாம். அல்லது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவதால், ஆளும்கட்சிக்கான அலையாகவும் அமையலாம்.

When the counting ends, the story begins.


-பழமைபேசி.

4/11/2026

தேர்தல்கணிதமும் நடைமுறை விதிகளும்

அரசியல் களத்தில் ஒரு கட்சியின் வெற்றியையும், தேர்தல் நடைபெறும் முறையையும் தீர்மானிப்பதில் பல கணித விதிகளும் சட்டங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் குறிப்பாக கியூப் விதி, துவெர்ஜரின் விதி , ஷை டோரி காரணி ஆகியன தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யப் பெரிதும் உதவுகின்றன.

கியூப் விதி (Cube Law): வெற்றித்தரப்பின் ஊக்கப்புள்ளிகள்

கியூப் விதி என்பது தேர்தல் முறையில் ஒரு கட்சி பெறும் வாக்கு சதவீதத்தை வைத்து, அக்கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்பதைக் கணிக்கும் ஒரு நுட்பமான விதியாகும். குறிப்பாக, நேரடித் தேர்தல் முறை  நிலவும் நாடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியின்படி, இரு முக்கிய கட்சிகளுக்கு இடையிலான வாக்குகளின் விகிதம் A:B என்றால், அவை வெல்லும் தொகுதிகளின் விகிதம் A^3:B^3 என்ற அளவில் இருக்கும்.இதன் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு கட்சி சிறிய அளவு கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்றாலும், அது இடங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வைத் தரும். உதாரணமாக, ஒரு கட்சி 5% கூடுதல் வாக்குகள் பெற்றால், அது "வெற்றியாளருக்கான போனஸ்" என்ற அடிப்படையில் பல மடங்கு அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வழிவகுக்கும். இது தேர்தல் கூட்டணிகளின் அவசியத்தையும், ஒவ்வொரு வாக்கு சதவீதமும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது. 

எடுத்துக்காட்டாக, 

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 35% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 35*35*35, 91125:42,875, 729 : 343, சற்றேறக்குறைய திமுக+ 67% இடங்களும், அதிமுக+ 33% இடங்களும் பெறும்.

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 40% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 40*40*40, 91125:64000, 729 : 512, சற்றேறக்குறைய திமுக+ 60%  இடங்களும், அதிமுக+ 40%  இடங்களும் பெறும்.

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 43%, அதிமுக+ 42% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 43*43*43 : 42*42*42, 79507:74088, சற்றேறக்குறைய திமுக+ 52%  இடங்களும், அதிமுக+ 48%  இடங்களும் பெறும்.

2021 தேர்தல்

திமுக+ வாக்குசதவீதம் 45.38%, 159 இடங்கள்; அதிமுக+ வாக்குசதவீதம் 39.71%, 75 இடங்கள்; கியூப் விதிப்படி: 45.38^3:39.71^3 - 93453:62618 - 60%:40% , ஆனால் திமுக+ 67% இடங்களும் அதிமுக+ 33% இடங்களும் பெற்றன.

துவெர்ஜரின் விதி (Duverger’s Law): கூட்டணி முறையின் உருவாக்கம்

பிரெஞ்சு சமூகவியலாளர் மாரிஸ் துவெர்ஜர் என்பவரால் முன்மொழியப்பட்ட இந்த விதி, ஒரு நாட்டின் தேர்தல் முறை எப்படி அந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறது. "யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி" என்ற ஒற்றை உறுப்பினர் தொகுதி முறை நிலவும் இடங்களில், காலப்போக்கில் பலமுனைப் போட்டிகள் மறைந்து, இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகச் சுருங்கும் என்று இந்த விதி கூறுகிறது.

இதற்குக் காரணம் " வீணாகும் வாக்குகள் "  பற்றிய பயம் ஆகும். சிறிய கட்சிகளுக்கு வாக்களித்தால் அவை வெற்றி பெறாது என்று கருதும் வாக்காளர்கள், தங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான அல்லது வெற்றி வாய்ப்புள்ள கூட்டணிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குவார்கள். இது இறுதியில் ஒரு வலுவான கூட்டணி முறையை உருவாக்கி, சிறிய அல்லது மூன்றாம் தரப்புக் கட்சிகள் இல்லாமல் போவதினின்று காக்கின்றது.

பென்ஃபோர்ட் விதி 

பென்ஃபோர்ட் விதி என்பது ஒரு பெரிய தரவுத் தொகுப்பில் உள்ள எண்களின் முதல் இலக்கம்  எப்படி அமையும் என்பதைக் கூறும் ஒரு கணித விதியாகும். பொதுவாக 1 முதல் 9 வரையிலான எண்கள் முதல் இலக்கமாக வருவதற்குச் சமமான வாய்ப்பு (அதாவது தலா 11.1%) இருப்பதாக நாம் நினைப்போம். ஆனால், இயற்கையான தரவுகளில் '1' என்ற எண் முதல் இலக்கமாக வர 30.1% வாய்ப்புள்ளது என்றும், எண்களின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த வாய்ப்பு குறைந்து, '9' என்ற எண் முதல் இலக்கமாக வர வெறும் 4.6% மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் இந்த விதி நிரூபிக்கிறது.

தேர்தல் ஆய்வியலில் ( Psephology ), வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய இந்த விதி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நேர்மையான தேர்தலில் பதிவான வாக்குகள் பென்ஃபோர்ட் வரிசையைப் பின்பற்றும். ஆனால், யாராவது திட்டமிட்டுத் தரவுகளை மாற்றியமைத்தாலோ அல்லது போலி எண்களை உருவாக்கினாலோ, அந்த எண்கள் இந்த விதியிலிருந்து விலகிச் செல்லும். இதன் மூலம் எண்களின் பரவலைக் கொண்டே ஒரு தேர்தலில் அல்லது கணக்குத் தணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதை *அறிவியல்பூர்வமாகச்* சந்தேகிக்க முடியும்.

ஷை டோரி காரணி (Shy Tory Factor)

ஷை டோரி காரணி என்பது தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஏன் சில நேரங்களில் தோல்வியடைகின்றன என்பதை விளக்கும் ஒரு உளவியல் , அரசியல் கோட்பாடாகும். சில வாக்காளர்கள் சமூக ரீதியாக விமர்சிக்கப்படும் அல்லது "அன்பாப்புலர்"  என்று கருதப்படும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பார்கள்; ஆனால், கருத்துக்கணிப்பாளர்கள் கேட்கும்போது தங்களின் உண்மையான விருப்பத்தை வெளியே சொல்லத் தயங்கி, மௌனம் காப்பார்கள் அல்லது நடுநிலையாகப் பேசுவார்கள்.இது வாக்காளர்களின் மனத்தயக்கம் காரணமாக ஏற்படுகிறது, அதாவது தங்களின் அரசியல் தேர்வு பிறரால் கேலிக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்கப்படுமோயென நினைத்து, அவர்கள் உண்மையை மறைப்பதே இதன் சாராம்சம்.

வாக்களிப்பது செயல், அதை வாசிப்பது ஒரு கலை.

-பழமைபேசி.

4/07/2026

கொண்டாட்டம்

 கொண்டாட்டம்

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேகாலகட்டம். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பத்து பதினைந்து மணித்துளிகள் கடந்திருக்கும். அழைப்பில் கலந்து கொண்டேன். நிறையப் பேர் அழைப்பில் இருந்தனர். வெற்றிக் களிப்புடன் நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் சொன்னோம், “அன்புகூர்ந்து நாம் இதை ஒரு வெற்றியாகக் கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுகள் நம் பணிகள் நிறைவடைந்த பின் கொண்டாடுவதே சரியாக இருக்கும்!”.

நமக்கான வாய்ப்புக்கு ஆதரவளிக்காதவரின் மனத்தையும், தணிந்த மனத்தோடு வென்றெடுத்து முடிப்பதுதான் வெற்றியாக இருக்க முடியுமென்பது நம் கணக்கு. கணக்குப் பிழைத்து விட்டது.  தோல்வி அடைந்து விட்டதாக, நான் என்னளவில் தோற்றுவிட்டதாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் உணர்கின்றேன்.

நேரிடையாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆறு மணி நேரப் பயணம், வீடு வந்து சேரவே காலத்தாழ்ச்சி ஆகியிருந்தது. குடும்பத்தார் ஊரில். அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது முக்கால்வாசிக் கூட்டம் முடிந்திருந்தது. பிற்பாடு, கூட்டத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுக் கேட்டு முடித்தேன்.

2022 தேர்தலில் வெளியிட்ட காணொலியில் சொல்லி இருப்பேன், மேலாதிக்கமும் மேட்டிமைத்தனமும் களையப்பட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்களென. குழுவில், பெரும்பான்மை வலு இருந்துவிட்டால், எதுவும் செய்து கொள்ளலாமென்பதுதான் பெரும்பான்மைவாதம், மேட்டிமைத்தனம், மேலாதிக்கமென்பதாகும்.

காலமெல்லாம் எதிர்க்குரலாக இருந்து, இருந்து, சமர்புரிவதே எழுத்தாளனின் அறமாக இருக்கின்றது. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

முன்னாள் தலைவர் அவர்கள், 2012ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு பிணக்கினைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்கள். அதில் நானும் தொடர்புடையவன். 2012-2014 செயற்குழுவில் இடம் பெற்றிருந்தேன். எங்கள் செயற்குழு பொறுப்பேற்கு முன்பேவும், இணையதளத்தில், ”Beware of இன்னார்” எனும் தலைப்பில் ஒரு சுற்றறிக்கை இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை எதிர்த்து, தமக்கு அது மானபங்கத்தை ஏற்படுத்துகின்றதெனச் சொல்லி, ஒட்டுமொத்த செயற்குழுவின் மீதும் 100 மில்லியன் டாலர்கள் ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி, எங்கள் பெயர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. எண்ணிப்பாருங்கள், தன்னார்வத் தொண்டு புரிய வந்த நாங்கள் மன உளைச்சலை எதிர்கொண்டதோடு, பணமும் செலவு செய்து கொள்ள வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை. இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இடம் பெற்ற சுற்றறிக்கையென்பது, பழங்குடி ஃபட்வாதான். அப்படிச் செய்வது அமெரிக்க வாழ்வியலன்று!

சிறப்புக்கூட்டத்துக்கான அடிப்படை குறித்து ஏற்கனவே நாம் பேசிவிட்டோம். கூட்டம் நடத்தப்பட்ட விதத்தைத்தான் நாம் தற்போது பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நிரலில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதென்பதற்காக, 45 மணித்துளிகள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு, இப்படியானவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனும் பாணியில் பேசிவிட்டு, ஆவணங்களைப் பகிர்வதற்கென  முன்கூட்டியே சொல்லவில்லையென்பதல்லாம் கொடூர நகைச்சுவை. கேள்வி/பதில் நேரமென்பது கூட நிரலில் இல்லைதாம். ஆனால் கேள்வி பதில் நேரம் கடைபிடிக்கப்படுகின்றது. உறுப்பினர் பேசுவது தொடரும் போது, சட்டக்கோப்பில் இல்லையெனச் சொல்லப்படுகின்றது. பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமெனும் போக்கு மிகவும் ஆபத்தானது.

கூட்டம் நடத்தப்பட்ட விதமென்பது மிகவும் வருத்தத்தையும் கவலையையும் அளிக்கக் கூடியதாகும். தீர்மானமெனும் சொல்லே, பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கு அளித்தபின்புதான் உச்சரிக்கப்படவே வேண்டும். செயற்குழுவில் நிறைவேறி இருந்தால், செயற்குழுக் கூட்டக்குறிப்பில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டும். பொதுக்குழுத் தீர்மானமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இப்படி, ஒவ்வொன்றைப் பற்றியும் பேச முற்படுவோமேயானால், அன்பும் அறமும் பெருந்தோல்வி அடைந்திருக்கின்றது. ஒழுங்கில் பெருவீழ்ச்சியென்பதே காலத்தின் கணங்களில் இடம் பெறும் நம் பதிவாக இருக்க முடியும்.

எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்!



4/05/2026

இலக்கிய மாண்பு

ஓர் இலக்கியவாதியின் மறைவுக்குப்பின் எழுதப்படும் வணக்கக்கட்டுரை என்பது, வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், அந்தப் படைப்பாளி உலாவிய கற்பனை உலகையும் அவர் விதைத்த சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில், அந்த ஆளுமையின் மறைவு இலக்கியச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர் மறைந்த செய்தியை மட்டும் கூறாமல், ஒரு வாழ்வு அல்லது ஒரு தனித்துவமான குரல் ஓய்ந்துவிட்டதை வாசகர்கள் உணரும் வகையில் முன்னுரை அமைய வேண்டும்.

அடுத்ததாக, அவரது படைப்புலகம் குறித்த ஆழமான பார்வையை முன்வைக்க வேண்டும். அவர் கையாண்ட கருப்பொருள், அவரது மொழிநடை, சமூகத்தில் அவரது எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் முதலானவற்றை விவரிக்க வேண்டும். அவர் எந்த இலக்கிய இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லது எந்தப் புதிய பாணியைத் தொடங்கி வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். வெறும் புத்தகப் பட்டியலாக இல்லாமல், அந்தப் புத்தகங்கள் வாசக மனங்களில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கின என்பதை ஆய்வு ரீதியாக அணுக வேண்டும்.

தொடர்ந்து, அந்த இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமை, கொள்கைகளைப் பற்றி எழுதலாம். அவருடன் பழகிய தருணங்கள் அல்லது அவருடைய நேர்காணல்கள் வழி வெளிப்பட்ட அவரது வாழ்க்கைச் சிந்தனைகளை இங்கே பகிரலாம். அவர் சந்தித்த விமர்சனங்கள், அவருக்கு இருந்த இலக்கியப் பிடிவாதம் அல்லது எளிமை போன்ற பண்புநலன்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது, அந்த ஆளுமையை ஒரு முழுமைக் காட்சியாக வாசகர் கண்முன் நிறுத்தும்.

நிறைவாக, அவர் விட்டுச் சென்ற இலக்கிய வாரிசுகள், அவரது படைப்புகள் எதிர்காலத் தலைமுறைக்கு எவ்விதம் வழிகாட்டும் என்பதை வலியுறுத்தி முடிக்க வேண்டும். உடல் மறைந்தாலும் ஒரு கலைஞன் தனது சொற்களின் வழியாக என்றென்றும் வாழ்வான் என்ற உண்மையை உரக்கச் சொல்லி, அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் விதமாக இறுதியுரை அமைய வேண்டும். அஞ்சலிக் கட்டுரை என்பது ஒருவருக்கு நாம் செய்யும் இறுதிப் புகழஞ்சலி மட்டுமல்ல, அது ஒரு படைப்பாளியின் வாழ்வை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சான்றும் கூட.

ஊடகங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு தனியிடத்தைப் பெற்று வந்த பொருண்மியம் அது. சமூகம் கொந்தளிப்போடும் சினத்தோடும் இருந்தது. ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். உடல் அடக்கத்தின் போது, அவரது தாயின் பிரிவாற்றாமையைக் கண்டு அந்தப் பகுதி மக்களெல்லாம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் அந்தத் தருணங்கள் எப்படிப்பட்டதாக இருந்ததென்பதையும் இதழ்கள் படம் பிடித்துக் காண்பித்தன. அதைக் கண்டு, சினம் தணிந்த தமிழ்நாட்டுச் சமூகம் கலங்கியது. காரணம், சக மனிதனின் துக்கம், அவர்களது துயர் கண்டு மனம் நோவதென்பது மாந்தநேயத்தின் குறியீடு. சமூக அமைதிக்கு அது இன்றியமையாதது.

2005 - 2012ஆம் ஆண்டு வரையிலும், தனித்துவமான தமிழ் இணையவுலகமென ஒன்று இருந்தது. தமிழ்மணத்தின் பங்கு அதில் முதன்மையாகும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள், தம் எழுத்துகளால் பிணைந்திருந்தார்கள். அப்படியான உலகில், பதிவர் டோண்டு என்பவர் நன்கறியப்பட்டவராக இருந்தார். காரணம், அவரது அதிதீவிர வலதுசாரித்தன எழுத்தும், விமர்சனப்பாங்கும். கடுமையான எதிர்ப்புக்கு ஆட்பட்டவராக இருந்தார். அவர் மறைந்து விட்டாரெனும் செய்தியறிந்து, ஒட்டுமொத்த தமிழ்ப்பதிவுலகும் இழப்பின் தாக்கத்தில் சிக்குண்டு போய், செய்வதறியாமல், சொல்வதறியாமல் கனத்த மெளனத்தைக் கடைபிடித்தது. அதை உணர்ந்த இதழ்கள், அத்தகு நிலையைக் குறிப்பிட்டு அவருக்கான இரங்கல் செய்திகளை வெளியிட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் போழ்து, காலமெல்லாம் தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சித்த, எதிர்த்துவந்த இதழ்களெல்லாம், நினைவு இதழ்களைத் தத்தம் சொந்த செலவில் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தத்தம் ஆழ்ந்த இழப்பினையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டன.

ஞானபீடவிருதுச் சிறப்புக் கொண்ட ஜெயகாந்தன் மறைவின் போது, அவர் யாரையெல்லாம் காலமெல்லாம் விமர்சித்து வந்தாரோ அவர்களெல்லாம் வந்திருந்து மலர்வணக்கம் செலுத்தியது; அரசு இயந்திரமோ மேல்தட்டு வர்க்கமோ கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டதென்கின்ற அகங்கலாய்ப்புகள் இணையமெங்கும் இடம் பெற்றதென்பதையும் கண்டோம். https://daily.navinavirutcham.in/?p=23653 காரணம், மாந்தநேய மாண்பு.

இத்தகு சூழலில்தாம், தற்போது,  30 ஆண்டுகாலம் தமிழ் எழுத்துக்காகப் பங்காற்றிய ஒருவர், எம்மைப் போன்றவர்களையெல்லாம் அணுகி, எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்களென ஊக்கப்படுத்திய ஒருவர் மறைந்து விடுகின்றார். ஒவ்வொருவரின் சாவுக்கான பயணமும் பிறக்கும் போதேவும் துவங்கி விடுகின்றதெனச் சொன்னார் கவியரசர். நாம் எல்லாருமே சாவுக்கான பயணத்தில்தாம் இருக்கின்றோம். அவரவருக்கான நேரம் வந்ததும் பயணம் முடிவுக்கு வருகின்றது. அப்படியான இலக்கியப் பங்களிப்பின் முடிவுக்கு அபத்தமான ஓர் அஞ்சலிக்குறிப்பு. இலக்கிய உலகம் நொந்து கொள்கின்றது. 

நியூயார்க், இலண்டன், ரொறண்ரோக்களில் தமிழ்விழாக்கள் நடந்தால் மட்டும் போதுமா? இலக்கிய மாண்பென்பது, இலக்கியவாதியிடமிருந்தே பிறக்க வேண்டும்.