4/03/2024

திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?

 திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?


the number of girls born per 1,000 boys in Tamil Nadu are 932 in 2017 to 933 in 2018.


source: https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-slow-in-bridging-gender-gap-at-birth/articleshow/77215998.cms


1. ஆக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவு.


2. இந்த பற்றாக்குறையைச் சரிக்கட்ட, வயதிற்குறைந்த பெண்களைத் திருமணம் செய்வது ஈடுகட்டி வந்தது. எடுத்துக்காட்டாக, 29 வயது ஆடவன் 20+ வ்யதுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் என்பது, கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெண்களுக்கும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அப்போதுதான் நாட்டின் உற்பத்தித்திறன் கூடும். எனவே 29 வயதுள்ள ஆடவனுக்கு 25 வ்யதுக்குக் கீழுள்ள பெண் கிடைப்பது அரிதினும் அரிது.


3. 25+ வயதில் கல்வி + வேலையுடன் திருமணத்திற்கான இடத்தை அடைகின்ற பெண்ணுக்கு இன்னும் லீடர்ஷிப் வேலை என்பதான ஆசை வரக்கூடும். இப்படியாகப் பெண் காலம் தாழ்த்தத் தாழ்த்த ஆணுக்கான வாய்ப்பு அரிதாகிப் போகின்றது.


4. இதுதான் திருமண வாய்ப்புகள் காலத்தாழ்ச்சியாவதற்கான காரணங்கள். அதை விடுத்து, பெண்கள் நிபந்தனை, அப்படி இப்படி என்பதெல்லாம் விரக்தியின்பால், அச்சத்தின்பால் ஏற்படுவதே. 


5. சீரின்மை


ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. நிப்பாட்டிக் கொள்வார்கள்.

ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. மீண்டும் ஓர் ஆண்மகவுக்காக இரண்டாவது குழந்தை.


இத்தகைய போக்கு சீரின்மையை ஏற்படுத்தி விடுகின்றது.


6. பொருள்முதல்வாதம்: நல்லவீடு, கடைச்சாப்பாடு, நாளொரு உடுப்பு, வீட்டிலேயே சினிமா தியேட்டர், நவீனங்கள், நீச்சற்குளம் இப்படியான கன்சூமரிசம் பெருகப் பெருக பெண்ணின் வருமானம் இன்றியமையாததாகின்றது. கூடவே அவளின் இன்செக்யூரிட்டி ஃபீலிங்கும் கூடி விடுகின்றது. இதற்காக நாம் அந்தப் பெண்ணைக் குறை கூறலாகாது. இது அவளின் குற்றம் அன்று. சமூகத்தின் குற்றம். தன்னைச் சுற்றிலும் நான்கு பேர் அப்படியாக இருக்கும் போது, இயல்பாகவே அவளுக்குள்ளும் ஆசை பிறக்கத்தானே செய்யும்?


7. அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்குமான சமச்சீரின்மை. பொருளாதாரமயமாக்கலின் பொருட்டு நிலங்களின் விலை பன்மடங்கு கூடிவிட்டது. வணிகவாய்ப்புகள் பெருகி விட்டன. இதன் நிமித்தம் சொத்துமதிப்பு கூடிவிட்டது. பர்ச்சேஸ் பவர், வாங்குதிறன் கூடிவிட்டது. இதன் விளைவாக மதிப்பீடுகள் புறவயப்பட்டுப் போய் விட்டன.  அக விழுமியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏற்படும் முரண்கள் திருமண ஆசையைச் சிதைத்து விடுகின்றன. 


8. பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்படும் இன்செக்யூரிட்டி ஃபீலிங். நம்மை யார் கவனிப்பார்கள் என்பதான கவலை. மகனோ, மகளோ, அவர்களை நம்பி இருத்தல் சரி வராது. உலகமயமாக்கலின் விளைவு இது. அவரவர் இருத்தலுக்கு அவரவரே பொறுப்பு. பெற்ற பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க உழைப்பதைக் காட்டிலும் முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். நம்மை நம் வழியில் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். மேலைநாட்டுப் பழக்கவழக்கம் அப்படித்தான்.


9. Individualism. தன்னுமை. சட்டத்துக்குட்பட்டு வாழ எந்த ஒருவருக்கும் முழு உரிமை உண்டு. அவரவருக்கு அவரவர் ஆசை, விருப்பங்கள். அதனில் தலையிடுவதற்கு எந்த அப்பா, அம்மாவுக்கும் உரிமை இல்லை. வேண்டுமானால் ஆலோசனை கூறலாம். அவர்களின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் உறுதுணையாக இருக்கலாம். உலகமயமாக்கலின் விளைவுகளுள் இதுவுமொன்று. முன்பெல்லாம் பெற்றோரின் பொருளாதார உதவி கடைசிக்காலம் வரையிலும் தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. 25 வயதில் மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது, பெண்களுக்கும். புரிந்து நடந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. தத்தம் ஆசையை பிள்ளைகளிடத்திலே, பிள்ளைகளின் குடும்பத்திலே திணிக்க முயல்வது குற்றம். செண்ட்டிமெண்ட்டுக்கெல்லாம் இடமில்லை.


10. ஆணாதிக்கம் என்பது எளிய சொற்களிலே இருக்கின்றது. உண்ணுகின்ற உணவிலே இருக்கின்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது.  அத்தகைய ஸ்டீரியோ டைப்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். (எடுத்துக் காட்டு:)நடிகர் மங்கிகாந்த், நடிகை மங்கம்மா என்கின்றோம். ஏன் நடிகன் மங்கிகாந்த் எனச் சொல்லக் கூடாது? நடிகை, நடிகன். பொதுப்பால் நடிகர். இப்படியான முரண்பாடுகள், Generation-Z (born after 1995) தலைமுறையினரிடம் சினத்தைக் கிளறிவிட வல்லது. ஆகவே, சமூகம் மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தெளிதல் வேண்டும். உலகமயமாக்கல் மேம்பாடு வேண்டும், ஆனால் மேலைநாட்டுப் பழக்கவழக்கம் கூடாதெனக் கொடி பிடித்தல் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதற்கு ஈடானது.


-பழமைபேசி.

1/17/2024

யாரிந்த ஓலையக்காள்?

 

பொங்கற்திருவிழா என்பது ஏராளமான விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தவொன்றுதான் ‘பூ நோன்பு’ என்பதாகும். மார்கழி மாதம் முழுதும் பாவையைத் தொழுவதும், அதன் நிமித்தம் ஆண்டாளின் திருப்பாவை படிப்பதும் இடம் பெறுகின்றது.

விடியற்காலையில் கதிரவன் எழுச்சிக்கும் முன்பாகவே துயில் கலைந்து குளித்து வாசல் தெளித்து வளித்துக் கோலமிட்டு அக்கோலத்தின் நடுவே சாணப்புள்ளையார் அல்லது மஞ்சள்ப்பிள்ளையாரை நிறுவி, அதன் உச்சியில் பூசணிப்பூ சூடி திருப்பாவையின் அன்றைய பாடலைப் பாடி இறைவணக்கம் செலுத்துவது இளம்பெண்டிரின் மரபு.

நாள்தோறும் வீட்டு வாசலில் நிறுவப்படுகின்ற சாணம்/மண்/மஞ்சள்ப் பாவைகளை (பிள்ளையார்களை) பூமியின் குறியீடாகக் கருதுகின்றார் நாட்டார்வழக்காற்று ஆய்வாளர் வானமாமலை அவர்கள்.  அன்றாடமும் புதுப் பாவையை வாசலில் நிறுவுகின்ற போது முந்தைய பாவைகளை எல்லாம் சேகரம் செய்து வைத்துக் கொள்வர்.

பொங்கல் விழா முடிந்த மறுநாள், சேகரம் செய்யப்பட்ட பாவைகளுக்கு வழியனுப்புச் செய்யும் பொருட்டு, பூக்கள் கொய்து அவற்றைப் பாவைக்குப் படைத்த பின்னர், சேகரம் செய்து வைத்துக் கொண்ட முப்பது பாவைகளையும் சாடுகளில் ஏகிக்கொண்டு ஊரில் இருக்கும் பெண்களெல்லாம் ஊர்க்கிணறு, குளக்கரை, கண்மாய்க்கரை நோக்கிச் சென்று அங்கே அவற்றை நீரிலிட்டு வழியனுப்பி வைப்பர். இப்படியான நாளை, பூப்பொங்கல், பூநோன்பு, பூப்பறிக்கிற நோம்பி எனப் பலவாகக் குறிப்பிடுவது வழக்கம்.

பிற்பகலில் வீட்டில் இருந்து கிளம்பி கூட்டம் சேர்ந்து சேர்ந்து ஊர்ப்பெரியவர் வீட்டு வாசலுக்குச் செல்வர். செல்லும் போதேவும் பாடலும் கும்மிகளுமாகவே செல்வர். அங்கே ஊர்ப்பெரியவர் வீட்டுச் சீர்வரிசை(பொங்கல், தின்னப்பலகாரங்கள், மோர், நீர் இப்படியாகப் பலவும்) பெற்றுக் கொண்டு,  தெருத்தெருவாகச் சென்று ஊர்வழிகளிலே தோட்டங்காடுகளிலே இட்டேரிகளிலே இருக்கின்ற ஆவாரம்பூ, பொன்னரளி, ஊணான்கொடி மலர்களென பூக்கள் பறித்துச் சேர்ப்பர். இடைக்கிடையே பாட்டும் கும்மியடியும் நடக்கும். இப்படியான வைபோகத்தில் இடம் பெறும் பிரபலமான பாடல்தான் “ஓலையக்கா கொண்டையிலே ஒருசாடு தாழம்பூ..”.

2010ஆம் ஆண்டு வாக்கில் இணையதளத்தின், கொங்குநாட்டின் ஓலையக்கா பாடலை எவராவது தந்தால் நான் பணம் கூடத் தயாராக இருக்கின்றேனெனச் சொன்னார் எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள். எனக்கு அந்தப் பாடல் பரிச்சியமானவொன்று. அதே நேரத்தில் இடதுசாரித் தோழர்களும் அதே பாடலை இசைக்கோப்பாக வைத்திருந்தனர். அதன் வடிவத்தை எழுத்தாக்கிப் பகிர்ந்தேன். அதே காலகட்டத்தில், நண்பர் வேளராசி அவர்கள் கோவைக்கிழாரின் ‘எங்கள் நாட்டுப்புறம்’ எனும் நூலின் படியை பேரூர் கலைக்கல்லூரியில் இருந்து பெற்றுத் தந்தார். அந்நூலில் பாடலின் வேறொரு வடிவம் கிடைக்கப்பெற்றேன். ஊருக்குச் சென்றிருந்த போது சேவல்களின் இரகங்களைப் பற்றி ஆய்வதற்காக வெள்ளக்கிணறுப் பகுதிகளுக்குச் சென்றிருந்த போது அதன் பிறிதொரு வடிவம் கிடைக்கப் பெற்றேன். ஆய்வாளர் வானமாமலை, கவிஞர் சிற்பி, எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் இப்பாடல் குறித்து எழுதி இருக்கின்றனர் சிற்சிறு மாற்றங்களுடன். அவற்றையும் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பொங்கலன்றும் நாம் இந்தப் பாடலைத் தொடர்ந்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://maniyinpakkam.blogspot.com/2011/12/blog-post_22.htmlஇந்த ஆண்டும் அவ்வண்ணமே பாடலைப் பாடிப் பகிர்ந்திருந்தோம். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், யார் இந்த ஓலையக்கா என வினவினார். அதன் பொருட்டே இக்கட்டுரை அமைகின்றது.

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய ஊர்களின் வரிசைக்கும், சத்தியமங்கலம், கொடிவேரி, நம்பியூர், அவிநாசி ஆகிய ஊர்களின் வரிசைக்கும் இடையில் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியில் ஓலையக்கா, மாலையக்கா ஆகிய இரு உடன்பிறப்புகளையும் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றளவும் உண்டு. ஆற்றைக்கடந்து வர முற்படுகையில், திடீர் மேல்வெள்ளம் ஏற்பட்டுச் சகோதரிகள் மறுகரையிலேயே இருந்து விடுகின்றனர். உற்றார் உறவினரெல்லாம் இக்கரையில். தத்தளிக்கின்றனர். கடைசியில், எதிரிகளிடம் அகப்பட்டு விடக் கூடாதென்பதற்காக தீமூட்டித் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர் இருவரும். அவர்கள் அக்கூட்டத்தினரைக் காத்துவருவதான வழக்காறு நிலவுகின்றது. ஆண்டுக்கொருமுறை பனையோலைகளால் ஓலையக்கா, மாலையக்கா கட்டமைக்கப்பட்டு அவர்களுக்கான நினைவேந்தல் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றதென, ‘ஓலையக்காள் வெறும் பாடலல்ல, வரலாறு” எனும் நூலில் பதிவு செய்கின்றார் கி.பத்மநாபன். அதன்நிமித்தம் செய்திக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. https://m.dinamalar.com/detail.php?id=3387894 பாடலின் தழுவல்கள் / மருவல்கள், அவரவர் இடம் பொருள் ஏவலுக்கொப்பப் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது நம் புரிதல்.

பூப்பறிப்பு நோன்பில் கலந்து கொள்ளவிருக்கும் ஓலையக்கா எனும் பாங்கில் இடம் பெற்றிருக்கும் பாடல்.  “ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே......'"என்று கூறுவார்கள்.


ஓலேயக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலைகு றைச்சலென்று
மயங்குறானாம் ஓலையக்கா(ஓலேய்)

சேலை.அ ரைப்பணமாம்
சித்தாடை கால்பணமாம்
சேலைகுறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா(ஒ.லே)

தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா (ஓலேய்)

மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனுட்டு ஒலையக்கா
மேற்கே குடிபோருள்(ஒ.லே)

நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஒலையக்கா(ஓலேய்)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போருள் ஒலையக்கா(ஓலேய்)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
போறாளாம் ஓலையக்கா(ஓலேய்)

ஒலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)


விளிம்புநிலைப் பெண் தன் வறுமையை வெளிப்படுத்துமுகமாக அமைந்த பாடலின் வடிவம்:

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்

சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை


-பழமைபேசி, pazamaipesi@gmail.com