11/01/2023

அமெரிக்காவின் அச்சாணி

அமெரிக்காவின் வலு என்பது அதன் இராணுவபலமோ பொருளாதாரமோ அல்ல. அதன் அரசியலமைப்புதான் அதன் அச்சாணி, வலு. பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டிருப்பது அது.

அதில் ஏதாவது திருத்தம் கொண்டு வர வேண்டுமானால், ஒன்றியத்தில் இரு அவைகளிலோ அல்லது மாகாணத்தின் இரு அவைகளிலுமோ மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் பெற்று முன்மொழியப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட திருத்தமானது, ஒவ்வொரு மாகாணத்தின் அவைகளிலும் நான்கில் மூன்று பங்கு(75%) ஓட்டுகள் பெற்று வழிமொழியப்பட வேண்டும். ஏன் அப்படி? போகின்ற போக்கில் எளிதான செயன்முறை கொண்டு, அமைப்பின் அடிப்படை சிதைந்து விடக் கூடாது என்பதற்காக. தனிமனிதர்களின்பால் அல்லாது, நாட்டின் இறையாண்மையின்பாற்பட்டதாக இருக்க வேண்டுமென்பதற்காக!

கூட்டாட்சி, பரவலாட்சி ஆகிய இரண்டையும் ஒவ்வொரு நிலையிலும் கடைபிடிக்கும்படியாக விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. எப்படி? எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்.

ஒன்றிய மாகாண அவையில், மாகாணத்துக்கு இருவரென மொத்தம் 100 பேர். ஏதோவொரு மீச்சிறு மாகாணம். அதன் உறுப்பினர்களுள் ஒருவர், ஒரு தரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார். தனியாள் அவர். மொத்தமே 30 ஆயிரம் பேர் கொண்ட மக்கள்தாம் அவர்கள். பரந்துபட்ட நாட்டில் அவர்களுக்கான கவனிப்பு கிடைக்கவில்லை. மீச்சிறு தொகை என்பதால் கவனிப்புக் கிட்டாமல் போக வாய்ப்புகளுண்டு. என்ன செய்யலாம்?

அந்த உறுப்பினர் அவையில் முட்டுக்கட்டளை(filibuster)யைக் கையிலெடுக்கலாம். முக்கியமான சட்டவரைவு நிறைவேற்றும் வேளையில், பேச வாய்ப்புக் கோருகின்றார். அல்லது அந்த முன்னெடுப்புக்கு ஆதரவுப் பேச்சு அல்லது எதிர்ப்புப் பேச்சு என்கின்ற வகையில் பேசத் துவங்குகின்றார். பேசிக் கொண்டே இருக்கின்றார். தலைவர் பேச்சை முடிக்கக் கோருகின்றார். தாம் முட்டுக்கட்டளையைக் கையிலெடுத்திருப்பதாய்ச் சொல்கின்றார். அதாவது, நெட்டுரைஞராக 30 மணி நேரம் வரையிலும் பேசிக் கொண்டிருப்பார். தலைவர் அனுமதித்தாக வேண்டும். வேறு வழியில்லை, அவருடன் பேசி, தீர்வு கண்டுதான் முட்டுக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அல்லது 60% உறுப்பினர்களுக்கும் மேல் கூடி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இது அரசியல் சாசனத்தின் ஒரு கூறு. ஏன் அப்படி? நாட்டில் இருக்கிற ஒவ்வொரு தரப்பும் கவனிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் அடிப்படை.

இப்படியாகப்பட்ட விழுமியம் பொருந்திய நாட்டில் இருந்து கொண்டு, 25 பொதுக்குழு உறுப்பினர்கள், 80+ உறுப்பினர்கள் எனச் சேர்ந்து முன்னெடுக்கும் முன்னெடுப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. எதேச்சதிகாரமன்றி வேறென்ன? அயர்ச்சியாக இருக்கின்றது. நல்ல கல்வியுடன் புலம் பெயர்ந்திருக்கின்றோம். நம்மைச் சாவு எப்போது தழுவுமெனத் தெரியாது. வந்திருக்கும் இடத்திலும் அம்மண்ணின் விழுமியத்தைப் பாழாக்கத்தான் வேண்டுமா? நாம் மரிப்பினும் நம் சுவடுகள் இருந்து கொண்டே இருக்கும்; எப்படி வாழ்ந்தோம் என்பதைச் சொல்லிக் கொண்டு!