10/28/2022

பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-2


11. 'கேள்வி கேட்கலாமா? ஒரு மில்லியன் டாலர் குடுத்திட்டுத்தான் கேக்கணுமா??’ எனும் முன்னொட்டுக் கேள்வியோடு ஒரு பொதுக்குழு உறுப்பினர் தமக்கான நேரத்துக்குள் நுழைந்தார்.  இன்றைய பொதுக்குழுவின் ஆகச்சிறந்த வினாவாக நான் இதைக் கருதுகின்றேன்.  அமெரிக்க நாட்டின் விடுதலைப் பிரகடன வாசகம் என்ன தெரியுமா?  ”all men are created equal”. முன்னாள் தலைவரின் அடிமுட்டாள்த்தனமான, பேரவையின் மாண்புக்கே வேட்டு வைக்கக் கூடிய ஈனச்செயல்தான் இந்த வினாவுக்கான தேவையை விதைத்திருக்கின்றது. 

12. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமானால் இன்னமும் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. எலக்ட்ரானிக் ஃபார்ம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

13. முன்னாள் தலைவர், என் இடத்துக்கு இவர்தாம் என்பதை செயற்குழு உறுப்பினர்களிடத்தில் உறுதி வாங்கிக் கொண்டபிறகுதாம் விலகிக் கொண்டார் என்பது சரியாகப்படவில்லை எனத் தன் கருத்தாகப் பதிவு செய்து கொண்டார் உறுப்பினர்.

14. முன்னாள் தலைவர் எனும் இடத்தில் துணைத்தலைவராக இருந்தவர்களிலும் ஒரு பெண்மணி இருந்தாரே, அவரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம்தானே என வினவப்பட்டது.

15. இளையோரைச் செயற்குழுவில் சேர்க்கப்பட்டது சிறப்பு. இன்னும் பத்தாண்டுகளில், வட அமெரிக்காவில் பிறந்தவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது. [அது ஈடேற வேண்டுமானால், சுயவிளம்பரத்தன்மை இல்லாமல் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்].

16. சங்கங்களின் உழைப்பு, பணத்தைக் கொண்டு விபரீத முதலீட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் தனிமனிதர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனும் கருத்து பதிவு செய்யப்பட்டது. முன்னாள் தலைவரின் ஏகபோகப் பேச்சு, தனிமனிதத் தாக்குதல் போன்றவை முறையிடப்பட்டது.  தமக்கு அப்படியான எண்ணம் எதுவுமில்லையென முன்னாள் தலைவர் தன் கருத்தாகப் பதிவு செய்தார்.

17. பணத்தை முன்னிறுத்தாமல், தன்னார்வலர்களின் உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தண்மை போற்றப்பட வேண்டும். ஏகபோகப் பேச்சுக்கு கண்டனம் என்பதாகப் பதிவு செய்து, செயற்குழுவில் இருக்கும் இளையோர் நடத்தைக்குப் பங்கம் நேராத வகையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது.

18. தமிழ்ச்சங்கங்களைப் புறந்தள்ளி விட்டு, பேரவையே பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போக்கு கைவிடப்பட வேண்டும். தமிழ்ச்சங்கங்களுக்கு பைலா அமைத்துக் கொடுப்பது முறைப்படுத்த வேண்டும். ஃபெட்னா மேடையில் தலைவரே ஏகபோகமாக நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பன பதிவு செய்யப்பட்டது.

19. நியூயார்க் விழாவில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் தலைவர், தாமதமாக வந்ததாகவும் பேரவை முன்னோடிகளை அவமதித்ததாகவும் தகாத உடல்மொழியுடன் செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது 1 மில்லியன் டாலர் கொடுத்த கொடையாளரைப் பற்றிச் சொல்ல முடியாத நிலை இருந்ததாகவும் அதற்கான காரணத்தையும் தலைவர் பதிவு செய்தார்.

20.வாழ்நாள் உறுப்பினர்தாம் சட்டப்பணிகளுக்கு அமைப்பை இட்டுச் சென்றிருக்கின்றார் என்பது தவறு. முதன்முதலில், செயற்குழுதாம் சட்ட வல்லுநரின் கருத்துரைப்படி என்பதாக எல்லாப் பேராளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியது என்பது பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)


No comments: