1/28/2022

நிமலன்

குடும்பம் வறுமையில் ஆட்பட்டிருந்த காலம்.  35 வீடுகளே இருக்கும் ஒரு மிகவும் எளிய சிற்றூரில் குடியிருந்தேன். எதற்கும் சிலபல மைல்கள் நடந்துதான் செல்ல வேண்டும். ஊரில் ஒரு கடை கூடக் கிடையாது. அவசரத்துக்கு ஏதாகிலும் வேண்டுமென்றாலும் கூட, அடுத்தவரிடம்தான் யாசகம் பெற வேண்டும்; கையில் பணமிருந்தாலும் கூட. காலை ஏழு மணிக்கு வகுப்பு. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து என் அண்ணா சமைத்து டிஃபன் பாக்சில் போட்டுக் கொடுப்பார். தூக்கமும் கலக்கமுமாக நடந்து மெயின்ரோட்டுக்கு வந்து, பஸ் பிடித்து ஆறே முக்கால் மணிக்குக் கல்லூரியின் முன் வந்திறங்க வேண்டும். ஒவ்வொருநாளும் சவாலான நாள்தான். பெரும்பாலும், ஒரு டம்ளர் வரக்காப்பியுடன்தான் வகுப்புக்கு வருவோம். கிராமத்து மாணவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். வறிய தோற்றத்துடன், அதே உடுப்புகளை அடுத்தடுத்த நாட்களில் என்பதாக.  வகுப்பில் நான் மற்றவர்களுடன் பேசியது மிக மிகக் குறைவு. 

தாழ்வுமனப்பான்மை ஒருபுறம். வறுமை ஒருபுறம். கல்லூரியின் ஆங்கிலவழிக்கல்வி, நகரப்பண்பாடு இதெல்லாம் தமிழ்மீடிய ஊர்ப்புற மாணவர்களுக்கு முற்றிலும் புதியது. வயது 15. மனமெல்லாம் பயம். யாராவது அதட்டிப் பேசினால்கூட அழுதுவிடும் மனநிலையில்தான் முதலிரண்டு ஆண்டுகளும் கழிந்தன. அப்படியான காலகட்டத்தில்தான் இவனைப் பார்த்து அதிசயத்தோம். சக கிராமப்புற மாணவன். ஆனால் துடுக்கோடு திரிவான். அவனைப் போல நம்மால் இருக்க முடியாதாயென்கின்ற ஏக்கம், அவ்வப்போது வந்து போகும். முதலாம் ஆண்டு, ஒரு சில மாதங்கள் கழிந்தநிலை, மார்கழிமாதம், நல்லகுளிர், காலையில் எழுந்து வருவது சிரமமான காரியம். இவன் பத்து நிமிடங்கள் லேட். ஆசிரியர் ராவ் அடிக்கப் பாய்ந்தார். இவனது டிஃபன் பாக்ஸ் நழுவிக் கீழே விழுந்து விட்டதும், அதில் இருந்த ’பட்டண ரவை உப்புமா’ மட்டும் வட்டவடிவில் பிரிந்து தனியாக உருண்டோடிப் போய் வெளித்திண்ணையிலிருந்து கீழே விழுந்து விட்டது. டிஃபன் பாக்ஸ் அங்கே கிடக்கின்றது. வகுப்பே சிரித்தது. கண்ணாடி போட்டிருக்கும் இவன் மலங்க மலங்க முழிப்பில். ஆசிரியர் பணம் கொடுத்து, சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்.

மனத்துக்கு ஏழு அடுக்குகள் உள்ளன. The seven-levels of mind have been explained by Upanishads by comparing them with the ‘Seven Horses of the Sun‘. Conscious Mind, Subconscious Mind, Unconscious Mind, Super Conscious Mind, Collective Conscious Mind,  Spontaneous Mind, Ultimate Mind என்பதாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள், அந்தந்த அடுக்குகளின் வீரியம், திறன் என்பது ஆளுக்காள் மாறுபடும். அதைப் பொறுத்து ஒவ்வொருவருடைய பண்பு, செய்கை, நடத்தை என்பது மாறுபட்டு இருக்கும். இவனுக்கோ உடனடி எண்ணம், ஸ்பாண்ட்டேனியஸ் என்பதன் தாக்கம் அதிகம். இப்படியான தன்மை உடையவர்களை நீங்கள் அவ்வப்போது எங்கும் காணலாம். 

இளம்பிராயத்து பிருந்தாவனத்துக் கண்ணன் கூட அத்தகைய தன்மை உடையவர்தான். வெண்ணெய்ச் சட்டிகளை உடைப்பான். குறும்புகளைச் செய்வான். காரணம், அந்தத் தருணத்து வேடிக்கைகளில் ஆழ்ந்து போகக் கூடிய தன்மை உடையவர்கள் இவர்கள். பின் விளைவுகளை யோசிக்க மாட்டார்கள். ஆனால் அடிப்படையில் நல்லவர்கள். காலஞ்சென்ற எழுத்தாளர் க.சீ.சிவகுமார் எல்லாம் இந்த வகைக்கு உட்பட்டவர்தாம். இப்படியானவர்களிடம், கலை, படைப்பாற்றல், நகைச்சுவை தூக்கலாக இருக்கும். இது அவர்களின் பலம்.  கால்குலேட்டிவ் மைண்ட் என்பது கான்சியஸ் மைண்ட் இருப்பவர்களுக்கானது. இவர்களுக்கு ஸ்பாண்ட்டேனியஸ் அதீதமாகப் போய்விடுவதால் கால்குலேட்டிவ் அளவு குறைவாகி, முனைப்பில்லாமல் மேம்போக்காக, பெரும்படியாக இருப்பதென்பது பலவீனமாகி விடும். காலப்போக்கில் சிலர் சமநிலையை அடைந்துவிடுவர்; சிலர் கடைசி வரையிலும் எதார்த்தமிகு பெரும்படியாகவே இருந்துவிடுவர்.

இப்படியானவர்களை ஊர்களிலே நீங்கள் பார்க்கலாம். அவரவர் பொழுதுபோக்கிற்காக, வேடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்வர். வேளை வந்ததும், அவரவர் போக்கில் சென்றுவிடுவர். அப்படியான பின்னணியில்தான், நானும் அவரின் வேடிக்கை, துடுக்குத்தனம் போன்றவற்றுக்கு பயனாளியாகிவிட்டேன். மற்றவர்கள் அவரை இன்ன சொல் என்றில்லை, அப்படியான சொற்களாலே பகடி செய்வர். இவரும் பதிலுக்கு அதேவண்ணம் செய்வார். சுற்றி இருப்பவர்கள் சிரிப்போம். எல்லாமும் சரி, எதையும் தனிப்பட்ட முறையில் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாத வரையிலும். The true secret of happiness lies in taking a genuine interest in all the details of daily life.

யாரும் யாரையும் துன்புறுத்த நினைப்பதில்லை. கூட்டமாகக் கூடும் போது, கூட்டத்தில் இருக்கும் எளியவர்மீது வேடிக்கைகள் பாய்வதும் பகடிகள் நிகழ்வதும் இயல்பு. ஆனால் சில தருணங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிடும். At times, such behavior is repeated and habitual. நீங்களும் நாளைக்கே கூட இப்படியான மனிதர்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் மீது கூடுதல் அன்பு செலுத்துவோம்; முற்றிலும் வேடிக்கைப் பொருளாக மட்டுமே ஆக்கிவிடல் தகுமா?

Never perfect, always genuine.



No comments: