11/02/2008

"கூமட்டை"ன்னா என்ன?

அன்பர்களே, வணக்கம்! நாம நேத்தைக்கு கூமட்டை, கோதாரி, இந்தாவுள, வெலக்காரி, வெள்ளனமே, கெழமெராவுங்ற தமிழ் வார்த்தைகளைச் சொல்லி, அதுக்கு வாசகர்களோட கருத்துக்களைக் கேட்டு இருந்தோம். அதன்படி கருத்துக்களைப் பதிவு செய்த அ. நம்பி ஐயா, நண்பர்கள் மோகன் கந்தசாமி, மகேசு, நசரேயன், வசந்தன், தூய தமிழன் எல்லார்த்துக்கும் நன்றி!

கூமுட்டை/கூமட்டை:

நான் கேள்விப்பட்டதுல ஒன்னு அ.நம்பி, மோகன் கந்தசாமி அவிங்க கூட ஒத்துப் போகுது. அது என்னன்னா, கூழ்முட்டை, கூழைமுட்டை என்பன ஒருபொருள் தரும் சொற்கள். அழுகிய முட்டை, கெட்டுப்போன முட்டை என்று பொருள்படும். `கூமுட்டை’ என்பது இச்சொற்களின் திரிபு; அழுகிய முட்டை எதற்கும் பயன்படாது; ஆகவே `கூழ்முட்டை போன்றவன்’ என்று `திட்ட’ இச்சொல் பயன்படுகிறது. அறிவில்லாதவன் என்பது பொதுப்பொருள்.

ரெண்டாவது, நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கேட்டது. பொள்ளாச்சி வட்டத்துல இருக்குற‌ குண்டலப்பட்டி எல்லைக்கும், லட்சுமாபுர எல்லைக்குமா இருக்குற தென்னந் தோப்பு எங்கம்மாவிங்களோட பாட்டனார் வெண்குடை சுப்பையாவிங்களோட தோப்புதான். இப்ப நாங்கெல்லாம் ஊரைவிட்டு வெளியேறினதுககு அப்புறம், அது பல கை மாறிடுச்சு, அது வேற விசயம். நாம அங்கதான் பொழுதன்னைக்கும் கெடப்போம். மாசம் ஒரு வாட்டி தேங்காயெல்லாம் விழுத்தி, உரிச்சி வண்டியில போட்டு நல்லாம்பள்ளி சுங்கம், பொள்ளாச்சி சந்தைன்னு கொண்டுபோய் வித்துட்டு வருவாங்க.

அப்ப பாருங்க, வேலன் கடப்பாரைய தலைகீழா நட்டு மணிக்கு ஐநூறு காயெல்லாம் லாவகமா உரிச்சுருவாரு. டக் டக்னு மட்டைகளை உரிப்பாரு, ஒரு கை உரிக்கும், அடுத்த கை உரிச்ச காய வண்டில போடும். அப்பப்ப, ஒரு காய கீழ தூக்கி வீசுவாரு. என்ன வேலு, மட்டைய உரிச்சிட்டு, காய வீசுறியேன்னு கேட்டேன். அவர் சொன்னாரு அது கூமட்டைத் தேங்காய்ன்னு. நாம, அப்படின்னா என்ன? அது உனக்கெப்படித் தெரியும்ன்னு கேட்டோம். அவர் சொன்னதிலிருந்து நாம தெரிஞ்சிகிட்டது,

உரிச்சப்புறம் தேங்காய் கன‌மா இல்லைன்னா, அது கூகைங்ற பறவை காய் இளசா இருக்கும் போதே அதுல இருக்குற தண்ணிய உறிஞ்சிட்டதால, மிஞ்சி இருக்குற தண்ணிக்கு மட்டும் உள்சோறு வளந்த தேங்காய், கூமட்டைத் தேங்காய்ன்னு. அவரு ஒடச்சும் காமிச்சாரு, பாத்தா உள்புறம் கொஞ்சமா வெள்ளையாவும், மிச்சம் வெறும் ஓடுமாத்தான் தெரிஞ்சது. ஆக, அரை குறையா இருக்குற கூ(கை)மட்டைத் தேங்காய் போல இருக்குறவன கூமட்டைன்னு சொல்லுவம்ன்னும் சொன்னாரு குண்டலப்பட்டி வேலன்.


கோதாரி:

கோதாரிங்றது ஒருவிதமான நோய்தாங்க. அதனோட தன்மைகள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரியாவும், அந்தக்கால (குசும்புப் பதிவர்களே, அது எந்தக் காலம்ன்னு எல்லாம் கேட்டு இம்சைதரக் கூடாது, சொல்லிட்டேன். அப்புறம் நான் அழுதுருவேன்!) மருத்துவர்களுக்கு, ஒரு புரியாத புதிராவும் இருந்துச்சாம்ங்க. அதனால, புரியாத விளங்கிக்க முடியாததை, கோதாரி கூட‌ ஒப்பிட்டு பேச ஆரம்பிச்சாங்க. அந்தக் கோதாரி தெரீலீங்கோ.... அந்தக் கோதாரி விளங்க மாட்டீங்துங்க... இப்படியெல்லாம் பேசுறது வழக்கம் ஆச்சு.

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், தமிழ் நாட்டுல இப்ப இதனோட புழக்கம் கொறைவுதான். ஈழத் தமிழர்கள் நிறையப் பொழங்குறாங்க... ஆனா, அதுல கொஞ்சம் பேர்கிட்ட இது பிறழ்ந்து போச்சு. இந்த சொல்லை இழிவுக்கும், கெட்ட வார்த்தையாகவும் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. (உ-ம்) கோதாரி அவன் வாறானில்ல. இந்த இடத்துல, புரிந்த கொள்ள முடியாத அவன் வரத் தயங்குறான்னு பொருள் படப் பேசியிருந்தா அது சரி. அதுவே, இழிவான அவன் வர மாட்டேனுங்றான்னு பொருள் கொண்டா அது பிறழ்ந்ததுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். காரணம், எனக்குப் பெருசுக சொன்னது சரியாப் படுது. ஆக‌வே உங்க‌ளை யாராவ‌து கோதாரின்னா, சொல்லுற‌வ‌ர் எந்த‌ அர்த்தத்துல‌ சொல்லுறார்னு பாருங்க‌. ஏன்னா, சொல்லுற‌வரே இந்த சொல்ல வெளங்காத‌ கோதாரியா இருக்க‌லாம்.
மகா ச‌ன‌ங்க‌ளே, என்ன‌க் கோதாரின்னு சொல்ல‌ ஆர‌ம்பிச்சு இருப்பீங்ளே?! இதுதான், த‌ன‌க்குத் தானே ஆப்புங்ற‌தா??

இந்தாவுள:

இந்தா புள்ளைங்ற‌து மாறி, இந்தாவுளன்னு பேச்சு வ‌ழ‌க்குல‌ ஆயிடுச்சு. அதுவே பின்னாடி, பெய‌ர்ச் சொல்லாவும் உருவெடுத்துச்சு. (உ-ம்): அந்த‌ இந்தாவுள‌ இன்னைக்கு வ‌ர‌லை.

வெலக்காரி:

விலைக்காரி என்னும் சொல்லின் திரிபு `வெலக்காரி’. கூடையில காய்கறி, சாமான்களை வெச்சு யாவரம் செய்யுற கூடைக்காரி.

வெள்ளனமே

வெள்ளமென வர்றதுதாங்க மருவி, வெள்ளன ஆயிடுச்சு. ஆமா, அந்தக் காலத்துல வெள்ளம் கண்ணிமைக்கும் நேரத்துல விரைவா வந்துச்சு. இப்ப, அப்படி வருதா? ஆக, சீக்கிரத்துலங்றது இங்க அர்த்தம். (உ-ம்): வெள்ளனப் போயிப் படு.

அடுத்த விளக்கம், வெள்ளனமே என்பது வெள்ளி (முளைக்கும்) கணமே அதாவது அதிகாலை மருவி, வெள்ளன ஆயிடுச்சு. ஆக, விடியற் காலைலயேங்றது இங்க அர்த்தம். (உ-ம்): வெள்ளனப் புறப்பட்டு வந்திரு! (நன்றி: மன்மதக்குஞ்சு)

கெழமைராவு:

அந்தக் காலத்துல சாமி கும்புடுறதுக்கோ ஊர் ஞாயம் பேசுறதுக்கோ, எதுக்கோ ஒரு விசயத்துக்காக வியாழக் கெழமை இராத்திரியில கூடுறத வழக்கமா வெச்சு இருந்தாங்க பெரியவங்க. நாளடைவுல வியாழக் கெழமை இரவுங்றதே மருவி, கெழமைராவு ஆயிப்போச்சுங்க. (உ-ம்): கெழமைராவு அன்னைக்கு, பாப்பாத்திக்கு சீரு கொண்டு போகோனும்.

கழுத்துப் பிடி குடுத்தாலும், எழுத்துப் பிடி குடுக்காதே!
ஆனா, நான் குடுத்துட்டனே?

வாக்கு அளியுங்க மக்களே!

22 comments:

வெண்பூ said...

அருமையான விளக்கம்.. நன்றி...

Anonymous said...

எல்லாம் சரிதான். ஆனால்`அ. நம்பி'யாகிய என்னை `அறிவுடை நம்பி'யாக்கிவிட்டீர்களே, இது நியாயமா?

இந்த முறை அறிவுடை நம்பி; அடுத்த முறை அழகிய நம்பி. பிறகு...?

வேண்டா ஐயா, எப்பெயரும் வேண்டா. பெயருக்கு முன்னால் வெறும் `அ' போதும்.

பழமைபேசி said...

//வெண்பூ said...
அருமையான விளக்கம்.. நன்றி...
//

நன்றி.நன்றி.நன்றி.

பழமைபேசி said...

//அ. நம்பி said...
எல்லாம் சரிதான். ஆனால்`அ. நம்பி'யாகிய என்னை `அறிவுடை நம்பி'யாக்கிவிட்டீர்களே, இது நியாயமா?

இந்த முறை அறிவுடை நம்பி; அடுத்த முறை அழகிய நம்பி. பிறகு...?

வேண்டா ஐயா, எப்பெயரும் வேண்டா. பெயருக்கு முன்னால் வெறும் `அ' போதும்.
//

ஐயா, வணக்கம். விழுப்புரம் அறிவுடை நம்பி ஐயா அப்பப்ப நம்ப பக்கத்துக்கு வருவது உண்டு. இவரு, அவரோன்னு நினைச்சுட்டேன்.... மன்னிக்கணும்! சரி செய்துட்டேனுங்க இப்ப.

//இந்த முறை அறிவுடை நம்பி; அடுத்த முறை அழகிய நம்பி. பிறகு...?//

:-o))

மத்தபடி அடிகடி வந்து போங்க....

Anonymous said...

//...மன்னிக்கணும்!//

இது எதற்கு எந்தத் தேவையுமே இல்லாமல்?

வேடிக்கையாகச் சொன்னால்கூட அதற்கு மறுமொழியாக ஒரு `மன்னிக்கணும்' சொல்லியாக வேண்டுமா?

//மத்தபடி அடிகடி வந்து போங்க....//

வருவேன்.

நசரேயன் said...

நல்ல அருமையான விளக்கமுங்கோ

Mahesh said...

இதெல்லாம் என்னய மாதிரி கூமுட்டைக்கு இப்பதான் புரியுது :))

பழமைபேசி said...

//Mahesh said...
இதெல்லாம் என்னய மாதிரி கூமுட்டைக்கு இப்பதான் புரியுது :))
//

நாங்க நம்பிட்டோம்ங்க... :-o)

பழமைபேசி said...

//Mahesh said...
இதெல்லாம் என்னய மாதிரி கூமுட்டைக்கு இப்பதான் புரியுது :))
//

அந்த ஓட்டு?

மன்மதக்குஞ்சு said...

//வெள்ளனமேவெள்ளமென வர்றதுதாங்க மருவி, வெள்ளன ஆயிடுச்சு. ஆமா, அந்தக் காலத்துல வெள்ளம் கண்ணிமைக்கும் நேரத்துல விரைவா வந்துச்சு. இப்ப, அப்படி வருதா?//

என்னை என் பால்ய காலத்து கிராமத்துக்கே இட்டுச் சென்ற மாதிரி இருந்தது. வெள்ளனமே என்பது வெள்ளி (முளைக்கும்) கணமே அதாவது அதிகாலை மருவி, வெள்ளன ஆயிடுச்சு என்பது என் எண்ணம். தங்களின் பல்வேறு பதிவுகளை விருப்பத்துடன் படித்து வருகிறேன். தொடரட்டும் தங்கள் பணி.

பழமைபேசி said...

// மன்மதக்குஞ்சு said...
என்னை என் பால்ய காலத்து கிராமத்துக்கே இட்டுச் சென்ற மாதிரி இருந்தது. வெள்ளனமே என்பது வெள்ளி (முளைக்கும்) கணமே அதாவது அதிகாலை மருவி, வெள்ளன ஆயிடுச்சு என்பது என் எண்ணம். தங்களின் பல்வேறு பதிவுகளை விருப்பத்துடன் படித்து வருகிறேன். தொடரட்டும் தங்கள் பணி.//

வாங்க மன்மதக்குஞ்சு. நீங்க சொல்லுறதும் சரி. இப்பத்தான் செங்கொடகவுண்டன் புதூர் ஆத்தா சொல்லுறது ஞாபகத்துக்கு வருது. கந்தசாமி வெள்ளன்ன எந்திரிச்சு, பால் கறக்கத் தோட்டம் போயிருக்குறான். இது ஒரு அர்த்தம், அதாவ‌து விடிய‌ற்காலையில‌.....


நொம்ப நன்றிங்க.... இதையும் பதிவுல சேத்துக்கிடுறேன்!

கிரி said...

:-)))

குடுகுடுப்பை said...

கூமட்டை, எங்க ஊர்ல ஒள்ளிதேங்காய்னு சொல்வோம்.

மத்தபடி என்ன யாரும் கூமட்டைனு கூப்பிடறது இல்ல.:)

கூமுட்டைனா கெட்டு போன முட்டை இல்லயா?

பழமைபேசி said...

//கூமுட்டைனா கெட்டு போன முட்டை இல்லயா?//

அழுகின முட்டையையும் அப்பிடி(கூ(ழ்)முட்டை) சொல்வாங்க...

//கூமட்டை, எங்க ஊர்ல ஒள்ளிதேங்காய்னு சொல்வோம்.//

ஒல்லித்தேங்காய்! :-o)

பழமைபேசி said...

//கிரி said...
:-)))

November 2, 2008 12:09 PM
//

அடிக்கடி வந்து போங்க கிரி!

ராஜ நடராஜன் said...

எனக்கு ரெண்டு மார்க் நானே போட்டுக்கிறேன் கூமட்டைக்கும்,இந்தவுள

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
எனக்கு ரெண்டு மார்க் நானே போட்டுக்கிறேன் கூமட்டைக்கும்,இந்தவுள
//

வாங்க, தாராளமாப் போட்டுக்குங்க.... :-o)

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல அருமையான விளக்கமுங்கோ
//

வணக்கமுங்கோ!!!

ஆட்காட்டி said...

வெள்ளனமே என்றால் சீக்கிரம்(வன்னிப் பகுதியில்) என்றும் பொருள் படும். அதிகாலை என்றும் வரும்.

கோதாரி என்பது, கோதாவரியாக இருக்கலாம். அந்த ஆற்றின் குண இயல்புகளுடன் இணைத்து மக்களின் பிரச்சினைகளையும் ஒப்பிட்டுப் பேசுவது. எங்கேயோ படித்த ஞாபகம். இதென்ன கோதரி என்றால்- ஏன் இப்படி பிரச்சினை வருகுது என்று வரும்? (எங்க ஊர்ப் பழக்கம்)

பழமைபேசி said...

வாங்க ஆட்காட்டி!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//வெள்ளனமே என்றால் சீக்கிரம்(வன்னிப் பகுதியில்) என்றும் பொருள் படும். அதிகாலை என்றும் வரும்.//

நொம்பச் சரி!

Anonymous said...

Good One...

Anonymous said...

அருமையான விளக்கங்கள். இதுபோன்ற சொற்களை நான் அடிக்கடி ஆராய்ந்து பார்ப்பேன் தாங்கள் கூறியது பொருத்திப் பார்க்கும் பொழுது இன்னும் மகிழ்ச்சி