7/29/2022

ஜீவன்

ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன்.  அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.  https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html

இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க.

தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்?

மனிதன், நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதில்லை. மாறாக, சாலைகளில் விரைந்து செல்வதால் துல்லியத்தை அடைந்து விடலாமென நினைக்கின்றான். வேகத்தைக் கூட்டுகின்றான். அதனாலும் மனக்கண்களில் வேறெங்கோ உலாவிக் கொண்டிருப்பதாலும் சாலையின் மீதான கவனத்தை இழக்கின்றான். எதிர்ப்படும் நாயொடு மோதுகின்றான். விபத்து ஏற்படுகின்றது. அந்த விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெல்மெட்டும் பெரும்பாலான நேரங்களில் அணிந்து கொள்வதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும், கச்சைகளை ஒழுங்காகப் பூட்டி இருக்கமாட்டான். இதற்கும் மேற்பட்டு, சக ஜீவராசிகளெல்லாம் இவன் விருப்பத்துக்கு அடங்கி, ஒடுங்கி ஒத்துழைத்து வாழ வேண்டுமென நினைப்பான். அவற்றின் உயிரியல், மனவியல் அறிந்து கொள்ளவும் அவனுக்கு நேரமில்லை. இதுதான் பெரும்பாலான நாய் விபத்துகளுக்குக் காரணம்.

பார்வை, விழிகளைப் பற்றிப் பேசுவது நலம் பயக்குமென நினைக்கின்றேன். மனிதனுக்கு விழிகள் இரண்டு. ஒவ்வொரு விழிக்கும் விழித்திரை, திரைக்குப் பின்னால் விழிமுன்னறை, விழிபின்னறை, இவற்றுக்கிடையே கண், கண்ணுக்குள்ளே கதிராளி, கண்மணி, வில்லை முதலானவை உள்ளன. காணப்பெறுகின்ற ஒளியானது கதிராளிக்குள்ளே(லென்ஸ்) ஊடுருவிச் சென்று மூன்று விதமான, சிவப்பு, பச்சை, நீல வண்ணப்புரிதற்ச் செல்களுக்கு சென்று சேரும். பெறப்படுகின்ற ஒளியின் அலைநீளம், தன்மையை இந்த மூன்றுவிதமான வண்ணப்பெறுகைச் செல்களும் வெவ்வேறு அளவிலாகப் பெறுகின்ற போது மனிதனுக்கு வெவ்வேறு வண்ணங்கள் புலப்படுகின்றன. இந்த மூன்றில் யாதொரு செல் பழுதடைந்தாலும், நிறக்குருடு, கலர்பிளைண்டஸ் ஏற்பட்டு விடும். குறைபாடுகள் மேலோங்கும் போது மாலையில் ஒளியின் தாக்கம் குறையக் குறைய பார்வைத் திறன் குன்றலுக்குள்ளாகும். இதற்கப்பாற்பட்டு மனக்குருடும் ஏற்பட்டு விடுகின்றது. அதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் காரணம். அதாவது எல்லா சக ஜீவராசிகளும் தமக்கு அடங்கியொடுங்கி ஒத்துழைத்து இருக்க வேண்டுமென்கின்ற மனக்குருடு. அப்படியா?

நாய்களுக்கும் விழிகள் மனிதனைப் போலவே இருக்கின்றனதான். ஆனால் மனிதனுக்கு இருப்பதைப் போல அவற்றின் கண்களில் மூன்று கோன்கள்(நிறப்பெறுகைகள்) இல்லை. மாறாக, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கோன்கள்தாம் உள்ளன. நீலம், மஞ்சள் ஆகிய இரு பெறுகைகளே உள்ளன. ஆகவே மனிதன் பார்க்கும் வண்ணங்களையெல்லாம் அவை காண்பதில்லை. சிலபல நேரங்களில் சில பல வண்ணங்கள் அவற்றின் பார்வைக்குப் புலப்படாது. அதன் முதல் புலனறி உறுப்பு என்பது மோப்பசக்திதாம். அதைக் கொண்டுதாம் அது போய்க் கொண்டு இருக்கும். நாம் செல்லும் போது, குறிப்பிட்ட சில வண்ணங்கள் அவற்றுக்கு புலப்பட வாய்ப்பில்லையென்பதால் அது அதன்பாட்டில் மோப்பசக்தி, முகர்தலுக்கு ஏற்பவும் காணப்பெறுகின்ற வண்ணத்துக்கு ஏற்பவும்தான் சென்று கொண்டிருக்கும். இந்தப்புரிதல் மாந்தனுக்கு இருத்தல் வேண்டும்.

நாயைப் பார்க்கின்றான். அவற்றின் செயற்பாடுகள் தமக்கு ஏதுவாக இல்லை. எதையாவது கொண்டு அடிக்கின்றான். அடிபடும். துன்பத்தை அனுபவிக்கும். தற்காத்துக் கொள்ள கடிக்க வரும் அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு அஞ்சி ஓடும். ஆனால் அவற்றுக்கு ’தவறு என்ன ஏது’ என்பது ஒன்றும் புரியாது. அவை நுண்ணிய உணர்வுகள் கொண்டவை. மனிதனுக்கு வண்டி வண்டியாகப் புத்தகங்கள் படிப்பதாலும், போதனைகள் கேட்பதாலும் ஏற்படும் நுண்ணுணர்வுகளைக் காட்டிலும் அவற்றுக்கான நுண்ணுணர்வுகள் அதிகமானது. எப்போதும் குட்மார்னிங் சொல்பவர், அன்று சொல்லாமற்போனால் அதற்கு அதன் மனம் நோகும். தன்னைத் தானே வருத்திக் கொண்டு அழும். அந்த அளவுக்கு சென்சிடிவ் ஆனவை. அவற்றுக்கான மொழியுண்டு. சமிக்கைகள் உண்டு.

இயல்புக்கு மாறாக, சரியல்லாதவொன்று, என்ன செய்யும்? கண்களால் பேசும், பார்க்கும். நாவால் சுருட்டி சுருட்டிக் காண்பிக்கும், உதடுகளைச் சுழித்துக் காண்பிக்கும்.  குழைதல், அரற்றல், ஒடுங்குதல், பரபரத்தலென வாலால் பேசும். உள்க்குரலால் முனகும். தொண்டையிலிருந்து செருமும். அதற்கும் புரிந்து கொள்ளப்படாவிடில், மென்மையாகக் குரைக்கும். சினமெனில் முன்னுதடுகளை விலக்கிப் பற்களை இளித்துக் காட்டும். இந்த சமிக்கைகள் எதற்கும் மறுவினை இல்லாத போதுதான் அவை அத்துமீறும், கட்டுப்பாடிழந்து செயற்படும். இப்படியான சமிக்கைகள் எல்லாம் சில பல விநாடிகள்தாம் இடம்பெறும். அவற்றைக் கவனிக்க மனிதனுக்கு நேரமில்லை அல்லது மனமில்லை. அதைத்தான் மனக்குருடு என்பது.

நாய்களின் மொழி, உடலியல், தன்மை, பண்பு இவற்றை அறிந்து செயற்பட வேண்டியது மனிதயினம்தான். ஜீவராசிகளிடம் இல்லாதவொன்றை, செயற்படுத்த முடியாதவொன்றை அவற்றிடம் இருந்து எதிர்பார்ப்பதில் ஒரு பயனுமில்லை. நுண்ணுணர்வுகளின் சக்ரவர்த்திகள் நாய்கள்! அன்பின் தூதர்கள்!!

No comments: