1/21/2023

விற்பனைநுட்ப நிறுவனங்களும் சீனாவும்

சீனா தன் பொருளாதாரத்தை 1978ஆம் ஆண்டு, பன்னாட்டுப் பொருளாதாரமயமாக்கலுக்கு உட்படுத்துவதாக அறிவித்துக் கொண்டு அதற்கேற்ப தம் நாட்டு பொருளாதாரக் கொள்கைகளைச் சீரமைத்துக் கொண்டது. இருப்பினும், 1995ஆம் ஆண்டு வரையிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை அதனால் எட்டமுடியவில்லை. 1978ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்களில் துவங்கி, 1995 ஆம் ஆண்டு வெறும் 600 பில்லியன் டாலர்கள் என்பதாக இருந்ததைக் கண்டு ஏமாற்றம் கொண்டது சீனா. அதன்பொருட்டு, கடந்த 15+ ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கங்களை மீளாவு செய்து கொள்ளத்தலைப்பட்டது.

கொள்கை அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, சட்டதிட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டது. அதன்படி டெக் கம்பெனிகளைக் கூடுமானவறை முடக்கிக் கொள்வதென்பதாகி விட்டது. இங்கே டெக் கம்பெனிகள் என்றால், எல்லாத் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது மென்பொருள்/கணினி சார்ந்த நிறுவனங்கள் எனப் பொருள் கொள்ளலாகாது. குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். அவை எத்தகைய நிறுவனங்கள்?

பொருட்களின் விற்பனையை நாட்டுமக்களிடம் சூதனமாகத் திணிக்கும் நிறுவனங்களெல்லாமும் இத்தகு நிறுவனங்களெனக் கருதியது சீனா. எடுத்துக்காட்டாக, அலிபாபா, Google, Facebook, Tencent, DiDi, Meituan போன்றவை. என்ன காரணம்?

உற்பத்தித்திறன், தரம், உலகளாவிய விற்பனை போன்றவற்றுக்கான கவனம் என்பது, உள்நாட்டு விற்பனை, பணம், இலாபம் என்பதான அடிப்படையில் சொந்தநாட்டு மக்களையே சுரண்டுவதும் ஒருசாரார் மட்டுமே இலாபம் அடைவதுமாகக் கொண்டு, மற்ற மற்ற துறைகள் எல்லாம் முடங்கிப் போகும் என்பதுதான் காரணம். மென்பொருள், மறைபொருளாக விளங்குகின்ற அல்கோரிதங்கள், விளம்பர யுக்திகள், சோசியல் மீடியா போன்ற கன்சூமரிசத்தைப் பெருக்குகின்ற கருவிகள் போன்றவற்றுக்கு கடுமையான நெறிமுறைகள்(ரெகுலேசன்) வகுக்கப்பட்டு செயற்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவை பொருந்தக் கூடியதாக இருந்தன. ஆகவே, தொழில்முனைவோர் எல்லாம் தளபாட உற்பத்திக்குத் தள்ளப்பட்டார்கள். கணினிக்குத் தேவையான மின்னணுக் கருவிகள், மருத்துவக்கூட நவீனக் கருவிகள், மற்ற மற்ற மின்னணு சாதனங்கள் இப்படியாக.

விளைவு, நாட்டின் உற்பத்தித்திறன் வேகமெடுத்தது. 1995ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்கள் என இருந்த உற்பத்தித்திறன் 2022ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 8250 பில்லியன் டாலர்கள் என்பதாக இருக்கின்றது. இப்படியான டெக்நிறுவனங்களுக்கு எதிரான கிடுக்கிப் பிடிகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கடுமையாக்கிக் கொண்டது சீனா. அதனால் பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டன. அவை தற்காலிகமானவை; தொலைநோக்குப் பார்வையில் கடந்த இருபதாண்டு கால வளர்ச்சியைப் போலவே இதுவும் மேம்பாட்டையே தருமென்பது அரசின் கொள்கையாக இருக்கின்றது. விளம்பர யுக்திகள் எனும் போது, பொய், புரட்டு, மிகைபடக் கூறல், குன்றக்கூறல், மறைத்துக்கூறல், புனவுபடக் கூறல், செயற்கையாக அழகூட்டிக் கூறல் என எல்லாமும் உள்ளடக்கம்தானே? அவற்றுக்குக் கடிவாளம் இட்டுக் கொள்கின்றது. மேலும், தம் குடிமக்களின் தகவலைத் தனியார் நிறுவனங்கள் கொண்டிருப்பது தம் மக்களுக்கு எதிரானதென்றும் கருதுகின்றது சீனா.

சோசியல் மீடியாவில் வெகுமுனைப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலமும் உண்டு. 2017ஆம் ஆண்டு வாக்கில் குறைத்துக் கொண்டேன். காரணம், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக எவரோ வழிநடத்திச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுதான் காரணம். அத்தகு கட்டமைப்புகள் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றன. அதனைப் பயன்படுத்தி வணிகம் வளர்த்துக் கொள்ள தனிமனித விற்பன்னர்கள். இவர்களின் இலக்கு சாமான்யர்களான நுகர்வோர். எது சரி, தவறு என்பதையெல்லாம் சிந்தித்தறியாதபடிக்கு உள்வாங்குதிறன் கூட்டப்பட்டுவிடுகின்றது. ஆள்பிடிக்கும் களமாக உருவெடுத்திருக்கின்றன இவை. விளைவு, விழுமியம், அறம் போன்றவற்றில் தொய்வு.

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட பங்குகளைப் பெருமைப்படுத்திப் பேசி சாமான்யர்கள் பெருத்த பொருள் இழப்புக்கு ஆட்பட்டதாகச் சொல்லி, நடவடிக்கை மேற்கொண்டதாகப் பல செய்திகள். SEC Charges Eight Social Media Influencers in $100 Million Stock Manipulation Scheme Promoted on Discord and Twitter. Cary man pitched real estate deals to defraud people in the Indian community, prosecutors say. இப்படியெல்லாம் செய்திகள் காணக்கிடைக்கின்றன. இந்த நேரத்தில்தாம் நம் கடந்தகால அனுபவங்களைத் திரும்பப் பார்க்கின்றோம்.

சகமனிதர்கள், ஒத்த விருப்பங்கள், ஒத்த கலை இலக்கியம் போன்றவற்றுக்காக மக்கள் தாமாக வந்து அமைப்புகளிலே குழுமினார்கள். தற்போதெல்லாம் இலவச உணவு, விருதுகள், பரிசுகள், அது, இது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகின்றது. எதற்காக? விருந்தோம்பல் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் விளம்பரப்படுத்துவது எதற்காக?  தனிமனிதர்களுக்கும் விளம்பரங்கள் இடம் பெறுகின்றன. விளம்பரம் என்று வந்து விட்டாலே, அங்கு பொய்யும் புரட்டும் நூதனமான திணிப்பும் இடம் பெறத்தானே செய்யும்? சீனாவின் கொள்கையில் இருக்கும் தத்துவார்த்த உண்மை ஏதோவொன்றை நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றதுதானே?

References:

How China Destroying Its Tech Companies is Actually a Smart Move https://youtu.be/-lW1M8lLZbo

Cary man pitched real estate deals to defraud people https://www.bizjournals.com/triangle/news/2023/01/17/ponzi-scheme-cary-town-of-chapel-hill-employee.html

SEC Charges Eight Social Media Influencers https://www.sec.gov/news/press-release/2022-221


No comments: