1/19/2023

இளம்பிராயம்

அடிக்கடி எதிர்கொள்ளும் வினா இது. எப்படி சிற்சிறு நுண்ணியமான பற்றியங்களையெல்லாம் நினைவில் வைத்திருந்து சொல்ல முடிகின்றது? நேரிடையாக இதுதான் விடையென ஒன்றைச் சொல்லிவிட முடியாது. பரந்த பார்வையில்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. கூடவே அறிவியற்பூர்வமான அணுகுமுறையும்.

In people, for example, researchers have found that having a greater density of dopamine receptors in the hippocampus results in better episodic memory. The Genetics of Why Some People Remember Events Better than Others as They Age: https://www.cogneurosociety.org/memorygenetics_papenberg/

நினைவேக்க அணுக்களின் அடர்த்தி காரணமென்கின்றது அறிவியற்கட்டுரை. சரி, அத்தகைய நினைவேக்க அணுக்களை எப்படிப் பெருக்கிக் கொள்வது?

சமூகமும் பெற்றோர்களும்தான் உயிர்ப்புள்ள சூழலைக் குழந்தைகளுக்கு அமைத்துத்தர வேண்டும். எடுத்துக்காட்டாக, நாங்கலெல்லாம் ஊராரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அம்மா, அப்பா வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தவர்கள் அல்லர். பாட்டி, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, பக்கத்து வீட்டு அக்கா, ஹவுஸ் ஓனர், வேலைக்காக வருபவர்கள் இப்படிப் பல தரப்பின் மேற்பார்வையில். அப்படியான பலரும் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வர். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே பண்பாடு என்பதில்லை. குழந்தைகளுக்கு பன்மைத்துவம் அமைகின்றது. ஒப்பீட்டளவில் உள்வாங்குவதன் அளவு அதிகம்.

பாட்டி ஊரில் ஒரு விநாயகர் கோயில். அதையொட்டியே ஒரு பிறவடை. அந்தப் பிறவடைக்கு அப்பாலே ஒரு சேந்து கிணறு(பொதுக்கிணறு). மாலை வேளையில் எஞ்சோட்டுப் பையன்களெல்லாம் கூடிக் குலாவிக் கொண்டிருப்பர். கோயிலுக்குள்ளேயே ஒரு வேம்புமரம். அந்த மரத்துக்கடியில் ஒரு மடப்பள்ளி. மடப்பள்ளிக்கு ஒரு மரக்கதவு. அதைத் திறந்தவுடனே அந்த இடத்துக்கேவுரிய மணம்; கற்பூரமும் பச்சரிசியும் கலந்ததொரு மணம். கதவடிக்கு வந்ததுமே வேம்புமரத்தின் வாடை. மரநிழலைக் கடந்தவுடன் சுண்ணாம்பு வாடை. ஒரு அடி கோவிலுக்குள் வைத்தவுடன், பிசுபிசுத்துப் போன அந்த எண்ணெய் வாசம். அய்யோ அவன் வந்துருவானேயென ஓடுகையில், பிறவடையெங்கும் முளைத்துக் கிடக்கின்ற தும்பைச்செடியின்(பட்டாம்பூச்சிச் செடி) வாசம். கிணற்றடி வந்து விடும். ஈரத்தில் நனைந்து கிடக்கும் அந்த சேந்து கயிற்றின் வாசம். கைப்பிடிச் சுவருக்கு மேலே எத்தனித்துக் குனிகையில், கைப்பிடிச் சுவரில் ஆங்காங்கே இருக்கும் சிட்டுக்குருவிகளின் பீ மணம். ஆழப்பார்க்கையில் நீரின்வாசம். இவையெல்லாமுமே அந்தச் சிறுவனின் மூளையில் பதிகின்றது. இப்படியாக, ஒரு பிள்ளை வெவ்வேறான புலனனுபவங்களை பெற்றுக் கொண்டே இருக்கும் போது, அந்த மூளைபூமி வளம் பெற்றதாய் ஆகிவிடுகின்றது. களிப்பூட்டு அணுக்களின் அடர்த்தியும் செறிவடைகின்றது.

மாறாக இப்படி எண்ணிப் பாருங்கள். ஆறு மணிக்கு எழுந்த குழந்தை துரித கதியில் புறப்பட்டு, வண்டியேறி பள்ளிக்குப் போய், மீண்டும் வீட்டுக்கு வந்து, வீட்டுப்பாடங்கள் செய்து, மனப்பாடம், மனப்பாடம், மனப்பாடம் செய்து, டிவியிலோ செல்போனிலோ கொஞ்ச நேரம் மூளையைக் கசக்கி விட்டுத் தூங்கி எழுந்து, மீண்டும் துரிதகதியில் புறப்பட்டு. விடுமுறை வருகின்றது; பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஆண்ட்டிக்கும் ஒரு ஹாய் சொல்லியான பின்னர், சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, சிறப்புப்பாடங்களை உள்வாங்கி, பணம் பெண்ணுவது எப்படி?, தலைவன் ஆவது எப்படி? பாசறைகளுக்குச் சென்று, பெரியவனாகி, இஃகிஃகி.

Let's give him/her a life!

No comments: