1/17/2023

பூ நோம்பி

பொங்கலோ பொங்கல்! தை பிறந்த முதல் நாள் பெரும்பொங்கல். அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல். தை பிறந்தால் இப்படிக் கிராமங்களிலே ஒரே பொங்கல் மயமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்!  மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள், ஆண்களெல்லோரும் மாலை கோவிலுக்குப் போய்விடுவார்கள்.  ஆண்களெல்லாம் மாலை கோவில் சென்ற பிறகு ஊரிலே சிறுமிகளும் பருவமடைந்த மங்கையரும் பூப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள். 

ஊனான் கொடி என்று ஒருவகையான கொடி மைதானத்திலே நீண்டு வளைந்து வளைந்து கரும்பச்சைப் பூப் பொங்கல் புதராகப் படர்ந்திருக்கும்; வெண்சிவப்பான பூக்கள் கொத்துக் கொத்தாக அதிலே பூத்துக் குலுங்கும். அவற்றை மாட்டுப் பொங்கலன்றே பறித்து வந்து சிறுமிகள் தங்கள் பூக்கூடைகளில் நிரப்பிக் கொள்ளுவார்கள். பூப் பொங்கலன்று அவர்கள் அனைவரும் பூக்கூடைகளுடனும் பலகாரக் கூடைகளுடனும் விநாயகர் கோயிலில் கூடிக் கும்மியடிப் பார்கள். எத்தனை வகையான வண்ணப் பாட்டுகள் அவர்கள் வாயிலே!  பாட்டைத் தொடங்குவாள் ஒருத்தி. அவளைத் தொடர்ந்து அனைவரும் பின்னால் பாடிக்கொண்டு கும்மியடிப்பார்கள். எங்கள் ஊரான லெட்சுமாபுரத்தைப் பொறுத்த மட்டிலும் சம்பங்கியக்காதான் டீம்லீட். இதோ அந்த அக்காவின் ஒரு பாட்டைப் பாருங்கள். 

ஒரு மிளகு கணபதியே
ஒண்ணா லாயிரம் சரவிளக்கு
சரவிளக்கு நிறுத்தி வச்சு
சாமியென்று கையெடுத்து
பொழுது போர கங்கையிலே
பொண்டுக ளெல்லாம்
நீராடி நீராடி நீர் தெளிச்சு
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டுடுத்திப் பணிபூண்டு
பாலேரம்மன் தேரோட
தேருக்கிட்டே போகலாமா
தெய்வமுகங் காண்கலாமா?

பாட்டுக்களெல்லாம் பள்ளிக்கூடத்திலே படித்தவை அல்ல; நாடோடிப் பாடல்கள். எந்தக் காலத்திலிருந்தோ தெரியாது. அவை கிராமங்களிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தக் கும்மி, அன்று ஊரெல்லாம் நடைபெறும். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துவிட்டுச் சிறுமிகள் ஆற்றங் கரைக்கும் குளக்கரைக்கும் புறப்படுவார்கள்.  கூடையிலே பட்சணங்கள் இருக்கும். மார்கழி மாதத்திலே நாள்தோறும் வாசலிலே வைத்த பிள்ளையார்கள் இருக்கும். பலவகையான பூக்களும் நிறைந்திருக்கும்.  பிள்ளையார்களை ஆற்றிலோ குளத்திலோ போட்டுத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான் சிறுமிகள் புறப்படுகிறார்கள்.  அவர்கள் 'ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே....." என்று கூறுவார்கள். 

ஓலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு
(ஓலே)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலை குறைச்சலென்று
மயங்குறாளாம் ஓலையக்கா
(ஓலே)

சேலை அரைப்பணமாம்
சித்தாடை கால் பணமாம்
சேலைக்குறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

பூப் பொங்கல்
தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா
(ஓ...லே)


மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனாட்டு ஓலையக்கா
மேற்கே குடிபோறா
(ஓ..லே)


நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போறாள் ஓலையக்கா
(ஓலே)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
(ஓ...லே)

போறாளாம் ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையிலே
ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாட
தலைநிறைய முக்காடு
(ஓ...லே)

ஊர்நத்தம், மந்தைவெளி, காடுகரைகளுக்குச் சென்ற பிறகு மறுபடியும் ஆவாரம்பூ, துளசி, பொன்னரளி போன்ற பூப் பறிப்பார்கள். பெண்களுக்குப் பூவென்றால் ஒரே ஆசை. எத்தனை பூக் கிடைத்தாலும் ஆசை அடங்காது. இறைவனுக்குப் பூப் பறிப்பதிலே ஒரு தனி ஆர்வம் அவர்களுக்கு உண்டு. 

ஆத்துக்குள்ளே அந்திமல்லி
அற்புதமாய்ப் பூ மலரும்
அழகறிந்து பூ வெடுப்பாய்
ஆறுமுக வேலவர்க்கு 
சேத்துக்குள்ளே செண்பகப்பூ
திங்களொரு பூ மலரும்
திட்டங்கண்டு பூ வெடுப்பாய்
தென்பழநி வேலவர்க்கு

இப்படிப் பாடிக்கொண்டு பூப்பறிக்கும்போது ஆடவர்களும் அந்த இன்பப் பணியிலே உதவி செய்ய வருவார்கள். அவர்களும் விளையாட்டாகப் பாடுவதாகப் பல பாடல்கள் வரும். 

பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக் கொடுத்தால் ஆகாதா?
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூச்சொரிந்தால் ஆகாதா?
பறித்த பூவையும் பெட்டியிலிட்டுத்
தொடுத்த மாலையும் தோளிலிட்டும்
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக்கொடுத்தால் ஆகாதா?

இந்தக் கேள்விக்குப் பெண்கள் பதில் சொல்லுவார்கள்.

பூப் பறிப்பதும் இன்னிக்குத்தான்
பெட்டியிலிடுவதும் இன்னிக்குத்தான்
அதிசயமான இந்த ஊரிலே
அள்ளி இறைப்பதும் இன்னிக்குத்தான்
நெல்லுவிளையுது நீலகிரி
(பூவோ... பூவு)

நெய்க்கும்பம் சாயுது அத்திக்கோடு
பாக்கு விளையுதாம் பாலக்காடு
பஞ்சம் தெளியுதாம் இந்தஊரில்
(பூவோ... பூவு)

பிறகு பலவகையான பழங்களைப் பறிக்கத் தொடங்கு வார்கள். அங்கேயும் பாட்டுத்தான்.  கடைசியாக ஊரெல்லாம் சென்று அங்கங்கே பூக்கூடைகளை நடுவிலே வைத்துக் கும்மியடிப்பார்கள். அதிகாலை மணி நான்கு ஆகிவிடும். சின்னப்பாப்பக்கா குரல் கொடுப்பார். ‘வெடிஞ்சிருமாட்ட இருக்கு. ம்ம், வாங்க போலாம்’. எல்லாரும் மந்தைத்தோட்டத்து பொதுக்கிணற்றுக்குச் சென்று, மார்கழி முப்பதும், வாசலில் நாளொரு புள்ளையாராக, வைத்து அழகு பார்த்த புள்ளையார்களையெல்லாம் வழி அனுப்புவார்கள்.

போறாயோ போறாயோ
போறாயோ புள்ளாரே?
வாராயோ வாராயோ
வருவாயோ புள்ளாரே?
போறாயோ புள்ளாரே
போறாயோ புள்ளாரே?
வாராயோ புள்ளாரே
வருவாயோ புள்ளாரே?
சிந்தாமல் சிதராமல்
வளர்த்தினேன் புள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே
சிந்துகிறேன் புள்ளாரே(போ)

வாடாமல் வதங்காமல்
வளர்த்தினேன் புள்ளாரே
வாய்க்காலுத் தண்ணியிலே
விட்டேனே புள்ளாரே(போ)

பூவோடு போறாயோ
போயிட்டு வாராயோ
பூவோடு வாராயோ
பெண்களைப் பாராயோ (போ)

பிள்ளையாரை வழியனுப்பிவிட்டு அவரவர் வீதிகளுக்குள்ளே பலவாகப் பிரிந்து செல்லும் போது, களிப்பெல்லாம் தீர்ந்துவிட்டதேயெனும் அங்கலாய்ப்பு மனமெல்லாம் பாரமாகிப் போக, துளிர்க்கும் கண்ணீர்த்துளிகளுடன் ஆடிப்பாடிய களைப்பில் உறங்கிப் போவர். நவீனத் திரைப்படப் பாடல் ஒன்று இப்படியாக,

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
அட ஏங்க?….?
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அப்படி போடுங்க…

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

காரமடை கன்னிப்பொன்னுதாங்க
ஐயா காரமடை கன்னிப்பொன்னுதாங்க
எங்க கண்ணீர் பட்டா காரம் தூரம்தாங்க
அரேரேரேஏஏஏஏ

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
சேத்து வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா……ஆமா..
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா…

பூப்பறிக்க்கோனும் தினம் தினம் பூப்பற்க்கோனும்
பூத்திருக்கிற மனசுக்குள்ள நானிருக்கோனும்
அப்படியொரு எண்ணம் இல்ல போஙக
நாங்க ஆக்க வந்தா சொல்லியனுப்புறேன் வாங்க

ஹொய்… ஹொய்ய்ய்ய்ய்ய்

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. வாங்க
ஐயா வாங்க…..வாங்க
அண்ணே வாங்க.. வாஆஆங்க…
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அட போங்க…

https://youtu.be/KNpVVikRZb4

பூநோம்பி வாழ்த்துகள்!


No comments: