9/16/2022

இருள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம். அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்ளவும். பேசித்தான் தீர வேண்டியுள்ளது. அமைப்புகளில் தேர்தல் இடம் பெறுகின்றது. இயல்பாகவே இரு அணிகளோ அல்லது அதற்கும் மேற்பட்ட அணிகளோ தோன்றிவிடும். அதற்காக, மாற்று அணிகளெல்லாம் அமைப்புக்கு எதிரானவர் என்றாகி விடாது.

பேரவை விழா நடைபெற்றது ஜூலை 4ஆம் நாள். ஏப்ரல்/மே மாதத்தில் செயற்குழுவுக்கு, ஒப்புரவு ஒழுகு எனும் தலைப்பில் மடல் எழுதினேன். அதில் 2010ஆம் ஆண்டுக்கான விளம்பரநறுக்கினையும் இணைத்து, தற்போது இருக்கும் நறுக்குகள் சிறப்புச் சேர்க்காதென்றும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு அக்னாலெட்ஜ்மெண்ட் கூட இல்லை. விழாவுக்கு இருவாரங்களே(ஜூன்) உள்ளநிலையில் தமிழ்ச்சங்கத் தலைவர்கள் கூட்டமெனச் சொல்லிக் கூட்டி, அதில் ஃபிளையர் எப்படி வடிவமைக்கலாமென மயிர்பிளக்கும் விவாதம் நடத்தினர். சிறுகதைப் போட்டி தெரிவுகளென்றனர். ஒருவிநாடி கூடத் தாமதிக்காமல் உடனே வேலையை ஒப்புக்கொண்டு, 100+ மணிநேர உழைப்பை ஈட்டினேன். ஆனாலும், என் ஆக்கப்பூர்வமான மடல்களுக்கு இவர்கள் பதில் உரைப்பதேயில்லை. அதை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதும் இல்லை. விழாக்கள் தோற்பது பற்றிக் கவலையுமில்லை. எதிர்க்குரல்கள் பாராமுகம் கொள்ளும் போது, தமிழ் அறிவியல் எனும் பெயரால், சாக்கடைகள் ஊற்றெடுப்பதுதான் நடக்கும்.

தற்போது புதுக்கலாச்சாரம் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோன்றி இருக்கின்றது. மேலே சொன்னப்படி தேர்தல் இடம் பெறுகின்றது. மாற்று அணியினரைத் தீண்டத்தகாதவராகக் கட்டமைப்பது. செயற்குழுவுக்கு 9 இடங்களெனக் கொள்வோம். அவர்கள் தனித்தனி பொறுப்பாளர்கள். ஆனால் இரு அணிகளாகத் தேர்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஒரு அணி சார்பாக மூன்று பேர் செல்கின்றனர். நிர்வாகக் குழுவில் நாங்கள் மெஜாரிட்டி என்பதற்காக அந்த மூவரை ஒதுக்கி வைத்தும், கூட்டங்களில் இருந்து விலக்கி வைத்தும் தீர்மானம் போடுகின்றனர்(எ:கா: தமிழ்மன்றம்). இதற்கும் மக்கள் வாளாதிருப்பின்(எப்போதும் போல), நீக்கவும் கூடச் செய்வார்கள். இதுதான் ஜனநாயகமா? அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கழிசடைத்தனம் அல்லவா?? பொதுக்குழு உறுப்பினர்களே உணர்வு கொள்ளுங்கள், பொறுப்புணர்வு கொள்ளுங்கள். உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.


No comments: