9/15/2022

தமிழ் வளர்க்கிறன், தவிடு தூற்றுகிறேன்’

'தமிழ் வளர்க்கிறன், தவிடு தூற்றுகிறேன்’ எனும் எழுச்சிக் குரல்களை ஓரங்கட்டி விட்டு, அமெரிக்கப் பண்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உணர்வூட்டி விபூதி அடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் பெருகி, தற்போது அதே அமெரிக்கத் தமிழ்ப்பண்பாடு என்பதாக நாடு முழுமைக்கும் ஆகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே சொன்னதுதான். எங்கே ’நெகடிவ் பேசாதே, முடிந்தால் தொண்டு செய்’ என்கின்ற பாசாங்குடன் அடக்குமுறை மேலெழுகின்றதோ, அங்கே குறைந்தபட்ச அறம் கூடக் கொன்றழிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

வினை விதைத்தவர் வினை அறுப்பார்; தினை விதைத்தவர் தினை அறுப்பார். இப்படியான பழக்கங்களை விதைப்பதற்குத் துணைபோவது நாமாக இருக்கலாம். நாளைய நம் தலைமுறை அதற்கான விளைவுகளை அறுவடை செய்வர்.

இன்று செப்டம்பர் 15 ஆம் நாள். நாடளாவிய தமிழ் அமைப்பு, கோரத்துடன் கூடிய பொதுக்குழுவைக் கூட்டுவதினின்று பிறழ்ந்து இருக்கின்றது. ஏன்? எதை மறைப்பதற்காக??

o0o0o0o0o0o

When you come across something ambiguous (meaning that there's more than one way to reasonably interpret something), then the question remains to be answered by your organization by a majority vote at a meeting.  -Robert's Rules: Interpreting Bylaws

இங்கு செப்டபர் 15 கெடுநாள், கோரம் என்பதற்கான வரையறை தெளிவு. சரி, புரிதலில் மாற்றுக்கருத்து என்றே வைத்துக் கொள்வோம். சட்டம் என்ன சொல்கின்றது? பொதுக்குழுவைக் கூட்டி ஓட்டெடுப்புக்குச் செல் என்கின்றது. எப்படிப் பார்த்தாலும் செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கூட்ட மறுக்கின்றனர்.

1. இவர்கள் சொல்லி நாம் என்ன கூட்டத்தைக் கூட்டுவது என்பதாக இருக்கலாம்.

2. எதையோ மறைப்பதற்காக இருக்கலாம்.

இவற்றுள் அது எதுவாக இருந்தாலும், செயலாளர் தோற்று விட்டார். அடிப்படை அறம் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கின்றது. இப்படியான வாழ்வியல் அறத்தைக் கொலை செய்து விட்டு, அதற்கு மேல் என்ன தமிழ் வளர வேண்டி இருக்கின்றது. சிந்திப்பீர்!

o0o0o0o0o0o

தமிழ், தமிழ்னு ஜல்லி அடிப்பதில் துவங்குகின்றது விபூதியடிப்புகள். தாய்மொழியான தமிழில், அமெரிக்கப் பண்பாடு புகட்டுவதினின்று துவங்க வேண்டும் அமெரிக்கத் தமிழனின் வாழ்க்கை. கடல் கடந்து வந்து, கிடைத்திருக்கும் அருமையானதொரு வாழ்வை நாமே பாழாக்கிக் கொள்ளலாமா? நண்பர்களே, அக்கம்பக்கம் இருக்கும் தமிழர்களிடம் வாய்விட்டுப் பேசுங்கள். நடந்து கொண்டிருப்பது மாபெரும் தமிழ்க்கேடு. Please!

o0o0o0o0o0o

விழா மலர்

வெள்ளிவிழா என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொடுகின்றது. ஆசிரியர் குழுவில் மொத்தம் 9 பேர். பெரும்பாலும் அந்த ஒருவர் கூட்டங்களுக்கே வரமாட்டார். வாரா வாரம் கூட்டம் நிகழும். கட்டுரைகள் கூடுமானவரை அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்டவையாக இருக்க வேண்டுமென்பது குழுவினரின் ஆசை. அதேநேரத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாண்பும் பெருமையும் போற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஏராளமான படைப்புகள் வந்து சேர்கின்றன. 

மலரின் பக்கங்கள் இவ்வளவுதான் என்பது, கட்டணமின்றி மலர் அச்சடித்துக் கொடுக்கும் புரவலரின் கட்டுப்பாடு. ஆகவே ஆக்கங்களின் எண்ணிக்கை 32 என்பதுதான். குறிப்பிடத்தகுந்த கட்டுரை தெரிவாகவில்லை. நல்ல கட்டுரைதாம். ஆனால் சாதியின் பெயர் அந்தத் தமிழ்ச்சான்றோரின் பெயரில் இருப்பதாலும் அவரின் பெயர் கட்டுரை நெடுக இருப்பதாலும், கட்டுரையின் உட்கிடை அக்குறிப்பிட்ட சாதியை வியந்தோதல் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டு விடுமோயென்கின்ற தயக்கம் குழுவினருக்கு. தெரிவாகவில்லை. மலரில் இட்டாக வேண்டுமென நெருக்கடி. குழுவுக்கும் பொறுப்பாளர்களில் சிலருக்கும் கருத்து மோதல் உருவெடுக்கின்றது. வழிகாட்டுதல் குழுவிலும் காரசாரம், முட்டல் மோதல். சாதிப்பெயர் நீக்கி, எடிட் செய்து போட்டுக் கொள்ளுங்கள் என்பதாக இணக்கம் செய்ய விழைகின்றனர். அதற்கும் குழு ஒப்புக் கொள்ளவில்லை. அப்படியானால் தெரிவாகாத கட்டுரைகளுக்கும் அச்சலுகை வழங்கப்பட்டாக வேண்டுமே? #equality

பொறுப்பாளர்களின் நிலைமையும் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏனென்றால் அது விழாவின் முக்கியமான புரவலர் ஒருவரால் எழுதப்பட்ட கட்டுரை அது. குழுவுக்கு வெளியே இருப்பவர்கள் சாதிப்பெயர் நீக்கி, கட்டுரையின் அளவைக் குறைத்துச் செம்மையாக்கி மறுபடைப்பாகக் கொடுக்கப்பட, சிக்கல் முடிவுக்கு வருகின்றது. இஃகிஃகி. விழா மலர் மட்டுமன்று, விழாமலரும்தான்! வெள்ளிவிழா மலர் ஆசிரியர் வேறு யாருமல்ல, நான்தான்!!

அறம் செய விரும்பு!

#டேபிளைத்திருப்பு
#அமெரிக்கப்பண்பாடு
#individualism
#ethics



No comments: