7/07/2010

ஃபிரான்சிசு கோத்!


தென்கிழக்கு அமெரிக்காவின் முக்கிய நிதி கேந்திரமாக விளங்கும் பெருநகரம்தான் சார்லட். அந்நகரின் தென்பகுதியில், வழி நெடுகிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் சூழ மணிமாடமாய் இருக்கிறது நடுவண் அரசின் எல்லையோரக் காவல் அலுவலகம்.

”காலை மணி ஒன்பது இருபது ஆகிறது; இன்னும் இவர் வந்த பாடில்லையே? நேற்றைக்கே அந்த கோப்பைச் சரிபார்த்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தேன். பத்து மணிக்குள்ளாக கோப்பில் கையொப்பமிட்டு, தலைநகரில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு மின்பிரதி அனுப்பியாக வேண்டுமே? இவர் ஏன் இன்னும் வரவில்லை?” என்று சக அலுவலரும், சக தமிழருமான ஃபிரான்சிசு கோத் என்பாரை உள்ளூரக் கடிந்து கொண்டிருந்தார் முக்கிய அதிகாரியான கொங்குநாதன்.

”hello! Mr. Kongu Naathaan?”

”Yes, Speaking!!”

“Yeah sir, we need to verify about Mr. Francis Goth!”

“Yes, he is my subordinate... And I need him right now!!”

“Sure sir! There is little confusion and would request him to come to you; and apologize for the inconvenience that happened!!”

“That’s fine; thank you!!”

வெகுநேரம் காத்திருக்க வேண்டியதில்லாமல், ஓரிரு மணித்துளிகளிலேயே வந்தடைந்தார் ஃபிரான்சிசு கோத்!

“வாங்க ஃபிரான்சிசு! என்னங்க ஆச்சு? ஏன் தாமதம்??”

”வணக்கம் ஐயா! முதல்ல இந்த கோப்பைச் சரிபார்த்து கையொப்பம் இடுங்க. பிறகு பேசலாம்!”

கொங்குநாதனும் பிரான்சிசு சொல்வது சரியென நினைக்கவே, இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போனார்கள். அனுப்ப வேண்டிய மின்பிரதியைக் குறித்த நேரத்திற்கு அனுப்பி வைத்து, அதையொட்டிய கலந்துரையாடலுக்கான பல்வழி அழைப்பில் பங்கேற்றுவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பிய வழியில் ஃபிரான்சிசும் எதிர்ப்பட்டார்.

“வாங்க ஃபிரான்சிசு, என்னோட அறைக்குப் போலாம் வாங்க!”

“ஆமாங்க ஐயா; நானே வரலாம்னுதான் இருந்தேன்!”

”சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை? காலையில ஏன் வர்றதுக்குத் தாமதம்??”

”ஐயா, இந்தப் பிரச்சினை அடிக்கடி எனக்கு வருதுங்க ஐயா! என்மேல இனவேறுபாட்டைக் காண்பிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்!”

“என்ன ஃபிரான்சிசு? என்ன சொல்றீங்க??”, ஃபிரான்சிசு சொல்வதைக் கேட்டு அதிர்ந்து உணர்ச்சி வயப்படலானார் கொங்குநாதன்.

“ஆமாங்க ஐயா! நான் இங்க வரும்போதும் சரி, வாசிங்டன்ல இருக்குற தலைமை அலுவலகத்துக்கு மாதாமாதம் போகும் போதும் சரி, வாயில்ல இருக்குற காவல் அதிகாரிகள் என்னை மாத்திரம் மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்துறாங்க! எனக்கு இது பெரும் மன உளைச்சலைக் கொடுக்குதுங்க ஐயா!”

“அஃகஃகா! இதுதானா பிரச்சினை? கொஞ்சம் நீங்க, உங்களை ஆசுவாசப்படுத்திகுங்க!!”


“என்ன ஐயா சொல்ல வர்றீங்க!”

”ஆமாங்க பிரான்சிசு! அவங்க, தன்னோட கடமையச் செய்யுறாங்க. அதுல என்ன தவறு இருக்க முடியும்? யாரும், தான் தானாக இருக்கிற வரையிலும் எந்த பிரச்சினையும் வர்றதில்லை. தன்னுடைய மரபு, பண்பாடு, அங்கம், இருப்பிடம், பின்புல அடையாளங்கள்னு எதோ ஒன்னுல இருந்து பிறழும் போது, தெரிந்தோ தெரியாமலோ, எதேச்சையா இந்த மாதிரி அசெளகரியங்கள் நடக்கத்தான செய்யும்? என்ன நாஞ்சொல்றது சரிதானே??”

”போங்க ஐயா! நீங்க சொல்றது சுத்தமா ஒன்னும் புரியலை!”

”அப்படிங்களா? ஆமா, நீங்க யார்??”

“என்னங்க ஐயா, இப்படிக் கேட்டுட்டீங்க? நாம நல்ல நண்பர்கள்; சக தமிழர்கள் அல்லங்களா?”

“ம்ம்... இப்படி வாங்க வழிக்கு! உங்களோட அடையாள அட்டையையும் என்னோட அடையாள அட்டையையும் ஒருசேரக் கொண்டு போய் அந்த அதிகாரிகிட்டக் கொடுத்தா, இதை அவர்னால உறுதிப்படுத்த முடியுமா?”

ஆழ்ந்த யோசனையினூடாகக் குழப்பத்தில் இருந்த பிரான்சிசைக் கண்டு, தானே உரையாடலைத் தொடர்ந்தார் கொங்குநாதன்.

“ஃபிரான்சிசு, காவல் அதிகாரிகள் உங்க அடையாள அட்டையையும், உங்களையும் மாறி மாறிப் பார்த்து இருப்பாங்க. நீங்களோ, செந்தமிழனாக் காட்சி அளிக்கிறீங்க. உங்க அடையாள அட்டையில இருக்கிற உங்க நாமகரணமோ வேற மாதிரிக் காட்சி அளிக்குது. அந்த மாறுபாடானது, அவருக்குள்ள ஒரு ஐயப்பாட்டைத் தோற்றுவிச்சி இருக்குமாய் இருக்கும்!”


“ஓ, அப்படிங்களா?”

“ஆமா; அவங்களும் மேலதிகமா உங்களைப் பற்றின தகவலை உறுதிப்படுத்தறதன் மூலம் தன் கடமையச் செய்ய முற்பட்டு இருக்கலாம் ஃபிரான்சிசு!”

“ஐயா, இதைத்தான் நாம நாமளா இருக்கிற வரையிலும் எந்த பிரச்சினையும் வராதுன்னு சொன்னீங்களா?”

”ஆமாங்க ஃபிரான்சிசு! சரி, நான் நாளைக்கு ஊருக்குப் போறேன் தெரியுமல்ல?”

“ஆமாங்க; மூணு வாரம் நீங்க இல்லாம நான் எப்படி இருக்கப் போறேனோ தெரியலை?”


”அதெல்லாம் நீங்க சமாளிச்சுடுவீங்க...”

“சரிங்க ஐயா! நிறையத் தமிழ்ப் புத்தங்கங்கள் வாங்கிட்டு வாங்க!”

“நிச்சயமா ஃபிரான்சிசு!”
மறுநாள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கே சென்ற கொங்குநாதனுக்கோ மகிழ்ச்சி காத்திருந்த்து. ஆம், தம்மை வழியனுப்ப வந்திருந்த ஃபிரான்சிசு மற்றும் அவர்தம் குடும்பத்தினரைக் கண்ட்தில் பெருமகிழ்ச்சி அவருக்கு.

சார்லட்டில் இருந்து லுப்தான்சா விமானம் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து தொடர் வண்டி மூலம் கோயம்பத்தூரைச் சென்றடைந்தார் கொங்குநாதன். நகரின் மேம்பட்ட சாலைகளும், நவீன வசதிகளும் அவரைப் பெருமகிழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனாலும், நகரில் இருக்க மனம் கொள்ளாது தன் கிராமத்தைச் சென்றடைந்தார் கொங்குநாதன். அங்கு அவருக்கு நல்லதொரு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

கிராமத்தில் இருக்கும் அவருக்கு, தினமும் ஊர்ப் பிள்ளைகளுடன் நேரத்தைச் செல்வழிப்பதில் நாட்கள் நகர்வதே தெரியவில்லை. மேலும் இவரது தமிழார்வம் அந்தக் குழந்தைகளை இவரின்பால் கவர்ந்து, ஈர்ப்புக்கு உள்ளாக்கியது. இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த சிறுவன் மாடசாமியும் தன்பங்குக்கு வினவலானான்,

“சித்தப்பா, நீங்க ஏன் நம்ம ஊர் ஆலமரத்தை மட்டும் மறுபடியும், மறுபடியும் படம் எடுத்துட்டே இருக்கீங்க?”

“ஓ, அதுவா? ஆலமரம்ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்டா. அங்கதான் நான் உங்கள மாதிரி இருக்கும் போது எப்பவும் இருப்பேன். தனியா உக்காந்து மரத்தோட பேசிட்டுக்கூட இருப்பன்ந் தெரியுமா?”, குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிப் போனார் கொங்குநாதன்.

”அப்புடியா சித்தப்பா? அப்ப, ஆலமரத்தைப் பத்தியும் சித்த சொல்லுங்க சித்தப்பா!”

“ஆமா அங்கிள், ஆலமரத்தைப் பத்தியும் சொல்லுங்க அங்கிள்!”, உடனிருந்த மற்ற வாண்டுகளும் நச்சரிக்கத் துவங்கவே, உற்சாகமாய் மேற்கொண்டு பேசலானார் கொங்குநாதன்,

“டே கண்ணுகளா, ஆலமரம் வலுவான மரம். அதோட விதை நிலத்துல விழுந்தவுடனே, முதல்ல விடுறது முளை. அப்புறமா நிலத்துக்குள்ள ஊன்றுறது ஆணி வேர். சரியா?”

“சரிங்க சித்தப்பா, இன்னுஞ் சொல்லுங்க!”

“சரி, முதல்ல வேர்களைப் பார்ப்போம். ஆணி வேர் நல்ல வலுவா நங்கூரமா நேர்த்திசையில நிலத்துல வெகுதூரத்துக்கு ஊன்றும். நிலத்துக்குள்ள செங்குத்தா வளர வளர, அதுக்கு பக்கபலமா பக்க வேர்களும் படரும்!”

“ஆமாங்க சித்தப்பா, நம்மூர் ஆலமரத்து வேர் பக்கத்துல இருக்குற வீதம்பட்டி மாரியாத்தா கோயல் முன்னாடி கூட இருக்குதாம்!”

“ஆமாடா மாடசாமி, இந்தப் பக்க வேருக பலகல் தொலைவுக்கும் படரும். பக்க வேர்களுக்கு வலுவா, பக்க வேர்ல இருந்து விரவி வேர்கள் விரவி இருக்கும். ஆணி வேர்ல இருந்து, அடுக்கடுக்கா இந்த பக்கவேர்களும் விரவி வேர்களும் படர்ந்து விரியும். விரவி வேர்கள்ல இருந்து பிரியுறது சல்லி வேர்கள். சின்னசின்னதா முளைச்சி, மரத்துக்கும் மற்ற வேர்களுக்கும் ஊட்டமா இருக்குறதுதான் இந்த சல்லி வேர்கள்!”

“அப்படிங்களா சித்தப்பா. கேக்க்க் கேக்க நெம்ப ஆசையா இருக்கு சித்தப்பா. அப்படியே நிலத்துக்கு மேல மரத்துல இருக்குறதையும் சொல்லுங்க சித்தப்பா!”

“சொல்றேன் சொல்றேன்.... அடி மரத்தினின்று பிரிவது கவை; கவையிலிருந்து பிரிவது கொம்பு; கொம்பிலிருந்து பிரிவது கிளை; கிளையிலிருந்து பிரிவது சினை; சினையிலிருந்து பிரிவது போத்து; போத்திலிருந்து பிரிவது குச்சு(சி); குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு!”

”இவ்வளவு இருக்குதுங்களா சித்தப்பா? அப்ப அந்த விழுதுங்றது?”

“ஆமாடா மாடசாமி, அதான் ஆலமரத்தோட சிறப்பே. கிளையில இருந்து, நிலத்தை நோக்கி கீழ்ப்புறமா விழுந்து தொங்குறதுக்குப் பேர்தான் விழுது. இதுவே நிலத்துல விழுந்தவுடனே, நிலத்துக்குள்ள வேரா மாறி ஊன்றவும் செய்யும்!”

“ஆமாங்க அங்கிள்; நம்மூர் ஆலமரத்தை மூனுவிழுது ஆலமரம்னு ஏன் சொல்றாங்க?”

“முதல்ல மூனு விழுதுகள் மட்டுந்தான் பிரதானமா நிலத்துல ஊன்றி ,பெரிய மரமாக் காட்சி அளிச்சுட்டு இருந்த்து. ஆனா, இப்ப நிறைய விழுதுகள் இருக்குடா செல்லம்!”

இப்படியாக்க் கிராமத்தில் இருந்த இரண்டு வாரங்களும், ஊரின் ஆலமர விழுதுகளான அடுத்த தலைமுறைக் குழந்தையினரோடு வெகு இனிமையாக்க் கழிந்தன கொங்குநாதனுக்கு. குழந்தைகளுக்கா, இவரைப் பிரிவதில் மிகுந்த வருத்தம். அந்த வருத்தத்திலும் வினவினாள் மச்சுவீட்டுக்காரனின் பேத்தியான செளம்யா,

“அமெரிக்கா அங்கிள், நீங்க அமெரிக்காவுல இருக்கீங்க? ஏன், தமிழ் தமிழ்னு ரொம்ப ஆவலா இருக்கீங்க?”

“ஆமாடா கண்ணு, எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும் கடைசில இனத்தோடதான வந்தடையணும்?”

செளம்யாவுக்குப் புரிந்ததோ இல்லையோ, செளம்யாவின் அம்மாவான மீனாட்சிக்குப் புரிந்திருந்தது, மிகுந்த மரியாதையுடன், இரு கரங்களையும் ஒன்று கூப்பி கொங்குநாதனை நோக்கி வணங்கினர் மீனாட்சியும், மச்சுவிட்டுப் பெரியவரான சேனாதிபதியும்.

கிராமத்தில் இருந்து கோயம்பத்தூர் வந்த கொங்குநாதன், வேண்டியனவற்றைக் கொள்வனவு செய்து உற்றார் உறவினரோடு இருந்து பொழுதைக் கழித்துவிட்டு, மீண்டும் சென்னை, ஃபிராங்க்பர்ட்டு வழியாக சனிக்கிழமை மாலையில் சார்லட் வந்தடைந்தார்.

ஞாயிற்றுக் கிழமை முழுதும் பயணக் களைப்பை நீக்கும் பொருட்டு ஓய்வெடுத்த கொங்குநாதன், திங்கட்கிழமை அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, நண்பர்களுக்காக வாங்கி வந்த தமிழ் நூலகளோடு ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்தார்.

மூன்று வாரங்களாகப் புழக்கத்தில் இல்லாவிட்டாலும், தூய்மை குறையாமல் இருக்கும் தனது அறையைப் பார்த்த்தும் வியப்பு மேலோங்கியது. தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, அதில் இருந்த மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் எழுதிய, தமிழர் பண்பாடு எனும் நூலை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு, நண்பரான ஃபிரான்சிசு அவர்களுடைய அறையை நோக்கி நடக்கலானார்.

அங்கே சென்ற அவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அறையில் இருக்கும் பரப்பு நாற்காலியின் மேலிருந்த அவரது பெயர்ப்பலகை மாற்றப்பட்டு இருந்தது. உடனே ஃபிரான்சிசைப் பார்த்து கட்டித் தழுவ வேண்டும் போல இருந்த்து கொங்குநாதனுக்கு. ஆம், பெயர்ப்பலகையில் புது வண்ணத்தில் மிடுக்கோடு மிளிர்ந்து கொண்டிருந்தது நாமகரணம், ஃபிரான்சிசு எழில் கோத்!”

குறிப்பு: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2010 ஆண்டு விழா மலரில் இடம் பெற்ற படைப்பு இது. மலரில் இடம் பெற்ற மற்ற படைப்பாளர்களும் சக பதிவர்களுமான பாலாண்ணன், மாப்பு ஈரோடு கதிர் மற்றும் தம்பி க.பாலாசி ஆகியோருக்கும் வாழ்த்துகள்!


10 comments:

a said...

உண்மைச்சம்பவமா.. சில இடங்கள் புனைவு போல் தெரிகிறது.....

பழமைபேசி said...

//வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
உண்மைச்சம்பவமா.. சில இடங்கள் புனைவு போல் தெரிகிறது.....
//

கதையின் கரு...உண்மைச் சம்பவத்தைத் தழுவியதே!! நீங்க வரிக்கு வரியெல்லாம் பாக்கபிடாது...

ப.கந்தசாமி said...

ஆமாங்க பழமைபேசி, யாருங்க அது கொங்குநாதன், நீங்கதானுங்களா?

a said...

//
கதையின் கரு...உண்மைச் சம்பவத்தைத் தழுவியதே!! நீங்க வரிக்கு வரியெல்லாம் பாக்கபிடாது...
//

சரிங்ணா........

Mahi_Granny said...

கொங்குநாதனின் முயற்சிக்கு பாராட்டுக்கள் . நான்கு படைப்புக்கள் மட்டும் படித்தாகிறது. மீதி எங்கே படிக்கலாம் .

நசரேயன் said...

உள்ளேன்

vasu balaji said...

கொங்குநாதருக்கு நன்றி:)

/ நசரேயன் said...
உள்ளேன்/

ம்கும். அப்ப நான் என்ன வெளியேனா?:)))

Mahesh said...

வணக்கம் கொங்குநாதன். விழா பணியெல்லாம் முடிஞ்சு சார்லோட் திரும்பியாச்சா??

க.பாலாசி said...

//ஊரின் ஆலமர விழுதுகளான அடுத்த தலைமுறைக் குழந்தையினரோடு வெகு இனிமையாக்க் கழிந்தன கொங்குநாதனுக்கு.//

எனக்கும்தாங்க... அப்பாடி ஆலமரத்துக்குள்ள இத்தனயா...

மிக்க மகிழ்ச்சி.. பகிர்ந்தமைக்கும் நன்றி..

ஈரோடு கதிர் said...

அடடா...
இப்படியும் எழுதலாமா....!!!