3/18/2022

மந்தைத்தனம் (bullying)

மேலைநாடுகளில் காடைத்தனத்திற்கு எதிரான சட்டங்கள் பல உண்டு. குறிப்பாக, இளைய சமூகத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டுப் பள்ளி, கல்லூரிகளில் மிகக் கவனமாக செயற்படுத்தப்படுகின்றது.

மந்தைத்தனம் பலவேறு விதங்களில் ஒருவர் அல்லது கூட்டத்தின் மீது ஏவப்படலாம். அவை கீழேவருமாறு:

1. ஒருவர்மீது வதந்தி பரப்புதல் அல்லது பொய்/அவதூறு கட்டமைத்தல் 

2. கேலிப்பெயர்களைச் சூட்டுவது, அவமானத்துக்குள்ளாக்குவது 

3. தள்ளிவிடுவது, எச்சில் உமிழ்வது, உடுப்புகளைக் கிழிப்பது 

4. நிராகரிப்பது அல்லது தனித்து விடப்படுவது 

5. மிரட்டுவது, பொது இடத்தில் வைத்து சிறுமைப்படுத்துவது 

6.குற்றேவற்பணிகளுக்கு ஏவிவிடுவது 

7. உடைமைகளைச் சேதப்படுத்துவது 

இணையக் குழுமங்களில் பெரும்பாலும் இவை, மந்தைக் கூட்டங்களினூடாக உருவெடுக்கும். Mobbing means bullying of an individual by a group, in any context, such as a peer group, school, workplace, neighborhood, community, or online.

கண்ணெதிரில், யாராவது ஒரு தனிநபர் (targeted individual) அல்லது கூட்டம், இப்படியான மந்தைத்தனத்துக்கு ஆட்படும் போது, அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியதும், மேட்டிமையை எதிர்த்தொழிப்பதும்  நம் அனைவரது கடமை. சமூகத்தில், அமைதி, இணக்கம், புத்தாக்கம், மேன்மை போன்றவை தழைக்க வேண்டுமானால், இதற்கெதிரான சமூகத்தின் பங்களிப்பு மிக மிக அவசியம். உங்களின் சிறு செய்கையால், ஓர் உயிர் காப்பாற்றப்படலாம். உங்களுக்கு வேண்டியவர் குற்றச்செயல்களில் இருந்து காப்பாற்றப்படலாம். ஏன், உங்களை நீங்களேகூடக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இவற்றுக்கு எதிராக இருக்கவும் சமாளிக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்? 

1. தம்மை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். படிப்பு, பொது அறிவு, பொருளாதாரம், நட்பு வட்டம், குடும்பம் எனப் பலவற்றிலும் தன்னிறைவு பெற்றதொரு சூழலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்படியானோரின் ஒத்துழைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். Empower yourself as much as possible in everything.

2. Face your fears and weaknesses. தமக்கான வலுவீனம், அச்சம், மருட்கை போன்றவற்றுக்கான காரணங்கள் என்னவென்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றுக்கான சூழல் நேரும் போது, கவனமாக இருக்கலாம். அல்லது அதிலிருந்து மீண்டு கொள்ளும் வழியைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.Build up your mind & body. மனப்பழக்கம், தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. சரியானோர், தவறானோர் என்பது மட்டுமே உண்டு. சரியாய் இருக்கப் பழகிக் கொள்தலும், முயல்வதையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

4. நாம் நாமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். முலாம் பூசிக்கொண்டோ, நடித்துக் கொண்டோ, மூடிமறைத்துக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. அவரவர் அடையாளம், விழுமியங்களைக் கொண்டு தன்னிச்சையாக இருப்பதே வாழ்வினை எளிமைப்படுத்தும். Accept the things about yourself that you can’t change and change what you can.

5. பேச வேண்டும். கருத்தைச் சொல்ல வேண்டும். ஐயோ, நமக்கெதுக்கு வம்புயென வாளாதிருத்தல் கடமையினின்று தவறுவதற்கே வழிவகுக்கும். வாழப்பிறந்த மாந்தனின் தன்னாட்சியை மட்டுப்படுத்தும். Exercise the liberty.

வாட்சாப், ஃபேசுபுக், கூகுள் போன்ற குழுமங்களில் பலர் சேர்ந்து இயங்கும் போது, பொது இலக்கு என்பது துவக்க காலத்தில் செயன்முறையில் இருக்கும். போகப்போக, வீக் டார்கெட், அல்லது தம் கொள்கை, விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாதவர் போன்றோரின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கும் தருணத்தில் டார்கட்கள் குறிவைக்கப்படும். அப்படியான கூட்டத்தில் நாமும் ஒருவரா? யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியாயின், உணர்ந்து செயற்படல் நன்று. 

உயிர்களிடத்தில் அன்பு வேணும்;  தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிரமுடைய நெஞ்சு வேணும்;  இது வாழும் முறைமையடி பாப்பா!!


No comments: