4/19/2009

அய்ய், அம்மா வந்துட்டா!

இயற்கையின் அழகில் ஒன்றி, வயல் வெளிகள், கால்வாய் மற்றும் வா.வேலூர்ச் சிற்றாற்றின் நீரழகு இவை அனைத்தையும் கண்டு களித்து, வாஞ்சையுடன் வயல் நண்பன் தன் தோட்டத்து நாய் பேச்சியுடன் மதியம் முதல் மாலைக் கருக்கல் வரை பொழுதைக் கழித்து விட்டு. இட்டேரியின் ஊடாக ஊரோரம் இருக்கும் குளக்கரையின் வாயிலாக ஊருக்குள் நுழைகிறான் பாலகன் பழமைபேசி.

ஊரின் பின்புறம் வழியாக உள்நுழையும் போது முதலில் வருவது தெற்கு வீதி. அந்தத் தெற்கு வீதியில் நுழைந்ததுமே அந்த வளவில் உள்ள மிட்டாய்க்காரப் பாட்டியின் கூப்பாடு கேட்கிறது. ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி. இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான். அந்தக் குரலைக் கேட்டவாறே வீதியில் நுழைகிறான் சிறுவன் பழமைபேசி.

தாரா தாரா தண்ணிக்குள்ள
தவள ரெண்டும் பொந்துக்குள்ள
நேத்து வெச்ச கொட்டாச்சி
நெய்ய ஊத்தி தின்னாச்சி
குத்தாலத்துக் குரங்கே
கூரைய விட்டு எறங்கே! ஏய்
கூரைய விட்டு எறங்கே!

வெளிச்சம் மங்கி, இருள் மெதுவாக வியாபிக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், வீட்டுப் பிறவடையில் மேய்ந்து கொண்டிருந்த கோழி மற்றும் அதன் குஞ்சுகளை அடைக்க முயற்சித்து, அது குடிசையின் கூரையின் மேல் போய் நின்று கொள்ளவே, அதைப் பார்த்து இப்படிக் கூப்பாடு போடுகிறாள் அவள். அதைப் பார்த்த பழமைபேசி,

“பாட்டி, என்ன கோழியப் போயி குரங்கேன்னு சொல்றீங்க. நான் தொரத்துறேன், நீங்க புடீங்க!”

“கண்ணூ பழமை, வாங்க இராசா, சித்த அந்தப் பக்கம் போயி அதை முடுக்கு சாமீ!”

பழமை அந்தப் பக்கம் இருந்து விரட்டி வர, இவள் இலாவகமாய்க் கூடையால் மூடி விடுகிறாள்.

“கண்ணூ, இனி அந்தக் குஞ்சுகளையும் புடிச்சுப் போடோணும்!”

“பாட்டீ, நாம் போகோணும். அம்மா சந்தையில இருந்து வாற நேரமாச்சு. பொழுது உழுகுறதுக்குள்ள ஊட்ல இருக்காட்டி திட்டும் பாட்டி!”

“செரிச் செரி, இதுகளை நாம் பாத்துகுறேன், நீ பதனமாப் போயி சேரு இராசா!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.

இதுகளைப் புடிக்க எனக்கு ஒரு மாமாங்கம்!
இந்தப் பயபுள்ளைக ஊடு திலும்ப ஒரு மாமாங்கம்!!

இப்படியாக இப்போது தன்வீட்டாரை ஏச ஆரம்பித்தாள் அந்த பாட்டி. சிறுவன் பழமைபேசி அங்கிருந்து கிளம்பி, தென் தெருவில் இருந்து அவன் வீடு இருக்கும் தெருவான தலைவாசல்த் தெருவுக்குள் நுழைய, அவனது சினேகிதன் அப்பாசாமி எதிர்ப்பட்டான்.

“டே பழமை, எங்கடா போன? நாங்கெல்லாம் தெள்ளு வெளையாடுனம் உன்னியத்தாங் காணம்!”

“நான் எங்கு சாளைக்குப் போயிட்டு வாறன்டா அப்பாசாமீ!”

“நீயி எங்கூடப் பழமா, டூவா??”

“ஏன்டா இப்பிடிக் கேக்குறே?”

“ஆமாடா, எனக்குமு பெருமாளுக்குமு சண்டை வந்துருச்சுடா! அதான் நீ அவங்கட்சியா? எங்கட்சியா? சொல்றா, நீ எங்கூடப் பழமா, டூவா?? பழமுன்னா பட்டாம்பூச்சி புடிக்கிறதுக்கு நாளைக்கு உங்கூட வருவேன்”

“பழந்தான்டா, நான் எங்கூட்டுக்குப் போகோணுன்டா...”

“அப்ப நீ சத்தியம் பண்ணு!”

அவனது வலது கையில், இவனது வலது கையை ஒப்புதல் அளித்தபடியே சொல்கிறான்,

“சத்தியமா உங்கூடப் பழம்!”

“பாத்தியா?! நீ அசத்தியமான்னு சொல்ற பாரு!!”

“இல்லீடா, நெசமாலுமேப் பழந்தான், நாம்போகோணுந் தள்றா!”

தெருவின் மேல்புறத்துல் இருந்து, வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான். தாயானவள் சந்தையில் இருந்து வந்திருப்பாளா? இன்னும் இல்லையா?? என்னவெல்லாம் வாங்கி வந்திருப்பாள்? வாங்கப்போன ஆடுகளும் வீடு வந்து சேர்ந்திருக்குமா, அல்லது தகப்பன் தோட்டத்துச் சாளைக்கே ஓட்டிச் சென்றிருப்பாரா? இவ்வாறு பலவிதமான கேள்விகளுடன்! தனது வீட்டு எல்லையை நெருங்குவதற்கு முன்பே மோப்பம் பிடித்து விட்டான் பாலகன் பழமைபேசி.

கண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.

பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.

நடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி சிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.

கிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.

புறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசிக்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று!

”அம்மா, எனக்கென்னமா வாங்கியாந்த?”

“இராசூ, கன்ணூ, பழமை வாடா, வந்து கால்மொகங் கழுவு வா!”

அவசர கதியில் பிறவடையில் இருக்கும் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து கை, கால் முகம் கழுவிய பின்னர், நேராக தன் தாயிடம் வந்து, அகப்பட்ட அவளது சேலையின் ஒரு கொங்கைக் கொண்டு முகம் மட்டும் துடைத்துக் கொண்டான் பாலகன்.

“அம்மா, என்னெல்லாம் வாங்கியாந்த காமி!”

“இர்றா, இர்றா! ஆமா, சாளைக்குப் போனியே, அப்பத்தா என்ன சொல்ச்சு?”

“அப்பத்தா சிக்கநூத்து போயிட்டு இன்னும் வருலை. நீ என்ன வாங்கியாந்த, குடும்மா!”

இவனது அலப்பறையைத் தாங்காது, தாய் அந்த மக்கிரியில் இருக்கும் தூக்குப் போசியைத் திறந்து, தேனான அந்த பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!

26 comments:

அப்பாவி முரு said...

anna.,

orey veettula iththini vaasamaa..

oorula engka periyammaa veettukku poona maathiri irukku. angkayum ippidiththaan irukkum, vaasanai.

கயல் said...

ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க! எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு! வழக்கம் போல இந்த பகுதியும் அருமை!!!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
anna.,

orey veettula iththini vaasamaa..

oorula engka periyammaa veettukku poona maathiri irukku. angkayum ippidiththaan irukkum, vaasanai.
//

அப்படீங்களா, நல்லது!

vasu balaji said...

கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும். அக்கு அக்கா வீட்டு வாசனை. அலாதிங்க பழமை. படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் பழைய கவனம் வராம போகாது. அம்மாட வாசம். இப்பவும் அது எதிர் பாராம சந்தர்ப்பங்கள்ள வரப்போ ஓடிப்போய் அந்த மடில அந்த வாசம் சுவாசமா இழுக்க மாட்டமான்னு ஏங்கிப்போகும் மனசு. கண்ணில தண்ணி கட்டும். ஊரே வாசம். காலைல படிக்கறப்ப மனசு எங்கயோ பறக்குது. நன்றிங்க பழமை.

பழமைபேசி said...

//கயல் said...
ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க! எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு! வழக்கம் போல இந்த பகுதியும் அருமை!!!
//

நன்றிங்க கயல்!

பழமைபேசி said...

// பாலா... said...
கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும்.
//

வணக்கம் பாலாண்ணே!

கொட்டாச்சி = தேங்காய்ச் சட்னி
தெள்ளு = கற்களை கற்கள் கொண்டு தள்ளி ஆடும் விளையாட்டு
கல்நெய் = petrol
மண்நெய் = Tar

vasu balaji said...

நன்றிங்க பழமை.

Mahesh said...

எடத்துக்கொரு வாசம்...

பேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்...

:))))))))))))

பழமைபேசி said...

//பாலா... said...
நன்றிங்க பழமை.
//

இது எல்லாம் நம்ம கடமை அல்லங்களா?

priyamudanprabu said...

////
கண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.

பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.////

நல்ல மோப்ப சக்தி
ரொம்ப நல்லாயிருக்கு

priyamudanprabu said...

////
கல்நெய் = petrol
மண்நெய் = Tar
///

நல்லாயிருக்கு

பழமைபேசி said...

//Mahesh said...
எடத்துக்கொரு வாசம்...

பேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்...
//

இஃகிஃகி! மகேசு அண்ணே...

ஆ.ஞானசேகரன் said...

வந்துடேன்.....

ஆ.ஞானசேகரன் said...

//ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி.//

அய்ய்ய்ய் நான் ஒன்னாப்பு படிக்கின்ற ஞாபகம் வருது..

ஆ.ஞானசேகரன் said...

//“நீயி எங்கூடப் பழமா, டூவா??”//

நாங்க சொன்னது காயா? பழமா?

ஆ.ஞானசேகரன் said...

//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!//

பலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே! சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம்போல அருமை சார்

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!//

பலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே! சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......

//

வாய்ப்பை நல்லா பயன்படுத்திகிட்டீங்க ஞானியாரே!

அது சரி(18185106603874041862) said...

நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன் அண்ணே...

Suresh said...

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

ஆறாம்பூதம் said...

உங்க கடைப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... பொழப்புத்தனம் எல்லாம் நல்லாப் போவுதா கண்னு...

Machi said...

//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//

பாட்டின்னா கூப்புடுவீங்க?

Machi said...

உங்க வீட்டுல பொடக்காலி இல்லையா? இஃகி

பழமைபேசி said...

//குறும்பன் said...
//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//

பாட்டின்னா கூப்புடுவீங்க?

April 21, 2009 2:00 PM


குறும்பன் said...
உங்க வீட்டுல பொடக்காலி இல்லையா? இஃகி
//

அதுங்களா? உரையாடல்ல நம்ம வழக்குப் பேச்சும், உரையாடலுக்கு வெளிய எழுத்து நடையுமுங்க!!

வில்லன் said...

சத்தியமா உங்கூடப் பழம்!

வில்லன் said...

//பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.

நடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி சிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.

கிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.

புறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசிக்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று!//


இத்தன வசம் இருக்குன்னு இத படிச்ச பொறகு தான் தெரிஞ்சது. எதெல்லாம் இப்பவும் ஊருல இருக்கா இல்ல வெறும் ஏட்டுல தானா????