12/20/2025

எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழிலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பிரபஞ்சன் (1945–Dec 21, 2018), புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் ஆவார். இவருடைய இயற்பெயர் எஸ். வைத்தியலிங்கம். மனித உறவுகளின் சிக்கல்கள், வரலாற்றுப் பின்னணிகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்துள்ளார்.

இவரது படைப்புகளில் மிக முக்கியமானது 'வானம் வசப்படும்' எனும் வரலாற்று நாவல். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்காக, 1995-ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை (1709–1761) என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பதிவாளர்.. இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநர் டூப்ளெக்ஸின் மிக நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றினார்.

பெண்களின் உணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த புரிதலுடனும் மரியாதையுடனும் தனது கதைகளில் கையாண்டவர் பிரபஞ்சன். மிகக் கடினமான தத்துவங்களைக் கூட பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய  அழகான தமிழ் நடையில் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'பெண்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2004ஆம் ஆண்டுத் தமிழ்விழாவுக்காக அமெரிக்கா வருகை புரிந்துள்ளார். பேரவை மாநாட்டில், மாந்தநேயமும் நுண்ணுணர்வும் நகையுணர்வும் கூடிய கதைகளைச் சொல்லி சிறப்பானதோர் உரையை வழங்கியதன் வாயிலாக, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றார்.

எழுத்தாளர் பயிற்சிப்பட்டறை, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாக்கூட்டமெனப் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார். https://shorturl.at/3xdl2 ஊருக்குச் சென்றான பின், அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துப் பேசியிருக்கின்றார்.

”நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது. நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்”. 21 ஆண்டுகளுக்கும் முன்னர்.

இந்தப் பின்னணியில், இன்று இடம் பெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கிய அமர்வு, https://shorturl.at/4719d நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாந்தநேய, வாழ்வியல்க்கதைகள், மானுடவியல் நுண்ணுணர்வுகள் ஏன் நமக்கு முக்கியமென்பதை பிரபஞ்சன் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.

அண்மையில் நாம் நேரடியாகப் பெற்ற அனுபவம். Holistic review in MD admissions is a mission-aligned selection process that evaluates applicants based on a balanced combination of Experiences, Attributes, and Academic Metrics (E-A-M). Rather than relying solely on test scores and GPAs, admissions committees assess how an individual’s unique journey and qualities will contribute to the medical school’s learning environment and the future physician workforce. 

நிறைமதிப்பீடுகள். ஆனால் கிடைக்குமா கிடைக்காதாயெனக் காத்துக் கிடக்கின்றனர். காத்துக் கிடப்பதென்பது பெரும் வாதை. அவ்வளவாக மதிப்பீடுகள் இல்லாத நிலையிலும் சிலருக்கு இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன. என்ன காரணம்? அவர்களின் மாந்தநேய அடிப்படையிலான அணுகுமுறையும் தன்னார்வப்பணிகளும்.

ஒருவருக்கு இத்தகைய மனப்பான்மை மனத்துள் தரிக்கப் பெற்றிருந்தால் சிறப்பு. சரி, ஒருவருக்கு அது எப்படி வாய்க்கப்பெறும்? இளம்வயதிலேயே வாழ்வியல்க் கதைகளைப் பெருமளவில் நுகர்ந்திருந்தால் மனப்பண்பாடு அமையப் பெற்று, சமூகத்துக்கான தொண்டு மனப்பான்மை உருப்பெறும்.

எழுத்தாளுமை பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள், காலமெல்லாம் நின்று வாழும்!

-பழமைபேசி.


12/17/2025

2025 பேரவைத் திருவிழா - பன்மைத்துவப் பெருவிழா

பண்பாட்டு மாநாடுகளில் சமநிலையைப் பேணுவதற்கான பல முக்கியமான பற்றியங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு விழாக்களில் பன்மைத்துவம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உயிர்ப்பாகும். பலதரப்பு மக்களுக்கும் உரிய கவனத்தைக் கொடுத்து, பங்களிப்புக்கான இடத்தைக் கொடுத்து, சமநிலையோடு நன்றி பாராட்டி ஒன்றிணைந்து கொண்டாடும் போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு தழைக்கின்றது. நம் பிள்ளைகள் இத்தகைய மாநாடுகளைப் பார்க்கும்போது, உலகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதென்பதை இயல்பாகவே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களையும் நம்மையும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றது.

🎭 உள்ளடக்கம், பல்சார்புப்பங்களிப்பு 

பல்வேறு விழுமியங்கள், கோட்பாடுகளின் வெளிப்பாடுகள்; மாநாட்டில் விவாதிக்கப்படும், காட்சிப்படுத்தப்படும் விழுமியங்கள், சிந்தனைகள் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், பரந்துபட்ட, வட்டார, சகல தரப்புப் பண்பாடுகளையும் விருப்பங்களையும் சமமாக வெளிப்படுத்தவும் உட்பட்டதாயும் இருத்தல் வேண்டும்.

பல்வேறு கருப்பொருள்கள்: கலை, இலக்கியம், மொழி, வரலாறு, உணவு, இசை, உடை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பண்புகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூறு ஓங்கலான ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழமை, புதுமை: பாரம்பரிய, பழமையான பண்பாட்டு வடிவங்களுடன், சமகால பண்பாட்டுப் போக்குகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.

🎤 பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், அரங்குகள்

இணையான வாய்ப்பு: மாநாட்டுப் பேச்சாளர்கள், குழு விவாத அறிஞர்கள், வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலினச் சமநிலை, பல்வேறு வயதுக் குழுக்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாறுபட்ட சிந்தனைகள்: கல்விசார் அறிஞர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

சிறுபான்மைக்குரல்: மாநாட்டில் குரல் குறைவாக ஒலிக்கக்கூடிய சிறுபான்மை, ஒதுங்குநிலைச் சமூகங்களின் பண்பாடுகளுக்கும் அவர்களின் தரப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

📝 நடைமுறை ஏற்பாடுகள் 

மொழி அணுகல்த்தன்மை: பேச்சுகள், நிகழ்வுகள், ஆவணங்களைச் சீரான முறையிலும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காத வகையிலும் தொடர்ந்து இடம் பெறச்செய்தல் வேண்டும்.

வெளிப்படையான கொள்கைகள்: பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரையறைகள், கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

🧘 உரையாடல் அணுகுமுறை 

திறந்தமனப்பாடு: விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், கருத்தாடல்கள் எல்லாத் தரப்பினருக்கும்  இடமளிக்கக் கூடிய வகையிலும், பண்பட்ட முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: எந்த ஒரு கூற்றினையும் தரப்பினையும் மதிப்புக் குறைவாக வெளிப்படுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், வியந்தோதலின் வீச்சு எல்லைமீறப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழிகள்: மாநாடு முடிந்த பிறகு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெற்று, அடுத்த மாநாட்டில் சமநிலையை மேலும் மேம்படுத்த முயன்றாக வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மாநாடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதைக்குரிய, பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு தளமாக அமைந்து விடுகின்றது. சிற்சிறு நகர்வுகளையும் நன்கு திட்டமிட்டு, அன்பையும் அக்கறையையும் சேர்த்துச் சேர்த்து, குருவி கூடு கட்டுவதைப் போல, ஒவ்வோர் இணுக்கு இணுக்காகக் கொணர்ந்து கொணர்ந்து, பின்னிப்பின்னிக் கட்டமைப்பதற்கான உழைப்பினை, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செய்கின்றபடியால்தான் இப்படியான மாநாடு நமக்கு வாய்க்கப் பெறுகின்றது. அத்தகைய கூட்டுப்பணிக்கு இடைஞ்சலாக, திட்டமிட்டுக் குறுக்கீடுகள் நிகழும்போது எவனொருவனும் அறச்சீற்றம் கொண்டாக வேண்டும். 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐬𝐞𝐞𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐨𝐟 𝐬𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐬𝐭𝐬.

ஜூலை 6, 2025. இலக்கியக் கூட்டத்தில் பேசிய ஆளுமைகள் எல்லோராலும் சொல்லப்பட்டு அன்று, வலியுறுத்திச் சொல்லப்பட்ட கருத்துதான் இது. ”பன்மைத்துவம் ஓங்கிய பெருவிழா, இந்தக்கால கட்டத்தில் இது போன்ற விழாக்களைத் தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத விழா”. குறிப்பாக, இலக்கிய ஆளுமைகள் சு.வேணுகோபால் அவர்களும், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ‘பெருமாள் முருகன் வரக்கூடாது; அண்ணாமலை வரக்கூடாது; ஸ்டாலின் ராஜாங்கம் வரக்கூடாது; செந்தலை கவுதமன் வரக்கூடாது”, இது போன்ற வரக்கூடாதுகள் பிற்போக்கானவை. எல்லாத் தரப்புகளும் வர வேண்டும். நமக்குள் பண்பட்ட உரையாடல்கள் நிகழவேண்டும். நமக்குள் இணக்கம் மேலோங்க வேண்டும். அழைக்கப்படுகின்ற விருந்திநர் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் சமநிலை தவறாமல், சீர்த்தன்மைப் பிறழ்வின்றிச் சகலகூறுகளும் இடம் பெற வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைப் பாரமாக்கி, மேட்டிமைகளைத் தூக்கித் திரிந்து கொண்டிருத்தல் என்றென்றும் ஆகாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்! 

ஐயா மணியரசன் அவர்கள், தாமாகவே நம்மை அழைத்து, ’நீங்கள் யார்?, பல இடங்களில் உங்களைப் பார்க்கின்றேன், மங்காத தமிழென்று சங்கே முழங்கு என நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்கின்றேன்’ என்றெல்லாம் சொல்லி, பாவேந்தர் பாரதிதாசன் குறித்துத் தம் நினைவுகளைப் பகிர்ந்து ஊக்கமூட்டிப் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டு விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் செம்மாந்த விருந்தோம்பல்ப் பெருவிழா, பன்மைத்துவம் போற்றியதன் உச்சகட்டம். அதில் நாமும் பங்காற்றினோமென்பதில், தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்ப் பெருமை உண்டு. வாழிய நற்றமிழ்!

𝐌𝐞𝐠𝐚 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐨𝐩𝐭𝐢𝐦𝐢𝐬𝐦, 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐞𝐫𝐚𝐧𝐜𝐞 𝐣𝐨𝐢𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐬.

-பழமைபேசி.


#Truth,Transparency & Trust

#FeTNA2025

#Empathy

#Inclusiveness


12/16/2025

பேரவை விழா 2025 - மாநாட்டு மேடை நிரல் மேலாண்மை

 

மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பது திட்ட மேலாண்மை, மக்கள் தொடர்பு, நிகழ்நேர செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியப் பணியாகும். இந்த நபர், நிகழ்ச்சி உள்ளடக்கத்தையும் அட்டவணையையும் கவனிக்கும் நிரல் மேலாளரின் பொறுப்புகளையும், அதே சமயம் மேடையின் தொழில்நுட்பச் செயல்பாட்டைப் பிழையின்றி இயக்கும் ஒலி ஒளி நுட்ப மேலாளரின் கடமைகளையும் ஒருங்கிணைப்பவர் ஆவார்.

மாநாட்டுக்கு முன்னதான பணிகள்

  • பங்களிப்பாளர்கள், பேச்சாளர்கள், வீடியோ இடைவேளைகள், மேடை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அட்டவணையையும் இறுதி செய்தல்.
  • அனைத்துப் பேச்சாளர்கள், பங்களிப்பாளர்களிடம் அவர்களின் ஸ்லைடுகள், வீடியோக்கள், இசைக் குறிப்புகளை முன்கூட்டியே சேகரித்தல்.
  • ஒளி, ஒலி, வீடியோ தொடக்கம், பேச்சாளர் நுழைவு போன்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் குறிப்பையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிப் பட்டியல்  ஆவணத்தை எழுதுதல்.
  • உள்ளடக்கம் மற்றும் பேச்சாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு (மைக், மானிட்டர்கள், லைட்டிங்) வழிகாட்டியை வழங்குதல்.
  • பேச்சாளர்கள், கலைஞர்கள் மற்றும் குழுவினர் வந்து செல்லும் பாதைகள் தெளிவாக இருக்க, மேடைக்குப் பின்னால் உள்ள பகுதிகளை வடிவமைத்தல்.

மாநாட்டுத் தருணம்

  • அடுத்த பேச்சாளர் சரியான நேரத்தில், மைக்கைப் பொருத்திக்கொண்டு, மேடைக்குத் தயாராகக் காத்திருப்பதை உறுதி செய்தல்.
  • நிகழ்ச்சிப் பட்டியலின் நேரத்தையும், நிகழ்நேர நேரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல். ஒரு பேச்சாளர் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சியின் நேர அட்டவணையைக் காக்க, அடுத்த பகுதியின் நேரத்தைக் குறைக்க தயாரிப்பாளருடன் ஒருங்கிணைத்தல்.
  • விருதுவழங்கல், பாராட்டுரைகள், சிற்றுரைகள், நெறியுரைகள் முதலானவற்றை நேரத்துக்குத் தக்கபடி செயல்படுத்துதல்.
  • ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாகக் குழுவினருக்குத் தீர்வை விரைவாகத் தெரிவித்து, பார்வையாளர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் பார்த்துக் கொள்வது.
இப்படியாக, மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பவர், தொழில்நுட்பத் துல்லியத்துடனும், சரியான நேரத்துடனும், அமைதியான அணுகுமுறையுடனும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் ஆவதனை உறுதிசெய்யும் செயல்பாட்டு முதுகெலும்பாக ச் செயல்படுவர்.

நிகழ்ச்சிக்குழு என்பது, விருந்திநர்களையும் இடம் பெறும் நிகழ்ச்சிகளையும் தெரிவு செய்யும் குழு. நிகழ்ச்சிநிரல் அமைப்புக்குழு என்பது, மாநாட்டின் முக்கிய அரங்கில் இடம் பெறும் நிகழ்ச்சிகளுக்கான நிரல்வகுக்கும் குழு. மாநாட்டு மேடை நிரல் மேலாளர் குழு என்பது, நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதோடு மேடையை நிர்வகிப்பவர் அல்லது மேலாண்மை செய்பவர்கள் குழு.

2025 பேரவை மாநாட்டினைப் பொறுத்தமட்டிலும், நாம் நிகழ்ச்சிக்குழுத் துணைத்தலைவர் எனப் பெயரளவில் இருந்தாலும் கூட, ஒன்றமுடியாமல், ஒரு கட்டத்தில் குழுவிலிருந்தேவும் வெளியேறிவிட்டோம். நிகழ்ச்சி நிரல்வகுப்புப் பணிகளைச் செய்து வந்தோம். கடைசி கட்டத்தில் நம் ஆன்மாவுக்கு எதிராக நம்மால் செயற்பட முடியவில்லை. 2025 ஜூலை 1ஆம் நாள் நண்பகல்வாக்கில், தார்மீக எதிர்ப்பு களுடன் நம் பணிகளை முடித்துக் கொண்டோம். ஆதிக்க, அதிகார சக்திகள் நிரலைக் காவு கொண்டு விட்டன. தோராயமாக நம்மால் வகுக்கப்பட்டிருந்த 85% நிகழ்ச்சிகள் செம்மையாகவே இடம் பெற்றன. ஆனால், இடைச்செருகலாக என்னவெல்லாம் புகுத்தப்பட்டனவோ, ஒன்றுவிடாமல் அத்தனையும் நேரக்கடைபிடிப்பில் தோற்றுப் போயின; நிலைகுலைந்தும் போயின. மக்கள் இரசிக்கவில்லை.  இன்னின்னது எங்கள் தேவைகள்; செய்து தாருங்களெனச் சொல்லி இருந்தால், நாமே செம்மையாகச் செய்தும் கொடுத்திருப்போம். அதிகாரத்தை நம்பினார்கள் போலும். Honest work may be quiet, but it’s undefeated.

இத்தனைக்கும் பிறகும், ஜூலை மூன்றாம் நாள், மாநாட்டுக்கும் முதல்நாள், நண்பர்களுடன் இணைந்து மேடை நிர்வாகத்தைச் செம்மையாகக் கையாள்வது குறித்தான கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆலோசனைகள் பெறப்பட்டன. விருதுகளை இனங்காணுதல், தனித்தமிழில் அவ்விருதுகளுக்குப் பெயர் சூட்டுதல், பட்டயம் உருவாக்குதல் முதலான பணிகளிலும் நாம் ஈடுபட்டிருந்தோம். தொகுப்பாளர்களுக்கான சிற்றுரைகளையும் கட்டமைத்திருந்தோம். காலை ஆறரை மணிக்கெல்லாம் மாநாட்டு அரங்குக்கு முதல் ஆளாகச் சென்றிருந்தோம். மாநாட்டு மேடை நிரல் மேலாளர் பணியை நாம் ஆற்றுகின்ற வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கவில்லை. மாநாட்டிலிருந்து கிளம்பும் தருவாயில், கடந்தகாலத்தில் நம்மால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைவரொருவர் சொன்னார், “இது பேரவைவிழா இல்லை. பழமைபேசியின் பேரவை விழா”. நாம் சொன்னோம், “ மெய்யாலுமே ஊர்கூடித் தேரிழுத்த சாமான்ய மக்களின் வரலாற்றுப் பெருவிழா

𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞𝐬 𝐡𝐚𝐫𝐦𝐨𝐧𝐲, 𝐢𝐧𝐬𝐢𝐝𝐞 𝐚𝐧𝐝 𝐨𝐮𝐭.

-பழமைபேசி.

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ConventionStageProgramManager


12/15/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு 2

வேலையின் தன்மை, தரவுகள், முடிவெடுத்தல், செயல்முறைகள் தொடர்பாகத் திறந்த மனப்பான்மை, அணுகல், தெளிவு ஆகியவற்றை மேம்படுத்த, கையில் உள்ள தொழில்நுட்பத்தை நேரிய வழியில் பயன்படுத்துவது உகந்தது. தொழில்நுட்பம் என்பது தற்போது வெறும் உற்பத்தித்திறனுக்கானது மட்டுமல்ல; வெளிப்படையான கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மை வழிமுறையாகவே நாம் கருத வேண்டும்.

தொழில்நுட்பப் பயன்பாடு என்பது, விவாதங்கள், கூட்டக்குறிப்புகள், ஆவணங்களை ஒருங்கே திரட்டி, முடிவுகளையும் அவற்றின் காரணங்களையும்  பதிவுகளாக ஆக்கி, தேடக்கூடியதாகவும், சான்றுகளாகவும் வெளிப்படைத் தன்மையைக் கட்டமைப்பதையும் உறுதி செய்கின்றது. அந்த வகையில் நிகழ்ச்சிநிரல் வகுப்பிலும், தரவுகளும் செய்யறிவுத் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.

2009 - 2017 ஆண்டுகளுக்கிடையேயான சில ஆண்டுகளின் நிகழ்ச்சி நிரல்களை செய்யறிவுத் தொழில்நுட்ப வழங்கியிடம் கொடுக்கவும், அது அவற்றைப் பகுப்பாய்ந்து பொதுவான ஓர் அட்டவணையைக் கொடுத்தது. அதன்படிக்கு, முதல்நாள் இத்தனை மணி நேரம், இரண்டாம் நாள் இத்தனை மணி நேரம், ஆண்டுதோறும் இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள் இன்னின்னவை, அவை ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு காலம் என்பதையெல்லாம் கொடுத்து, ஒரு மாதிரி நிரலையும் நமக்குத் தந்துவிடுகின்றது.

மேற்படித் தரவுகள் நிகழ்ச்சிக்குழு, வழிகாட்டுதல்க்குழு ஆகியவற்றிடமும் காண்பிக்கப்பட்டு, கூடுமானவரையில் கிட்டத்தட்ட 50 விருந்திநர்கள் வரையிலும் அழைக்கலாமென்பதாகப் பணிகள் துவங்கின. செய்யறிவு(AI) கொடுத்த வரைவினையே அடிப்படையாகக் கொண்டுதாம் நிகழ்ச்சிநிரல்ப் பணிகளும் இடம் பெற்றன. இப்படியான நிகழ்ச்சிநிரல் என்பது தகவல் தொடர்புக்குரிய மின்னஞ்சல் கணக்கில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட, தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் இணைப்பராமரிப்பு (edit access) வழங்கப்பட்டிருந்தது.  எந்தவொரு திருத்தமும் தன்னிச்சையாகச் செய்யப்படவில்லை. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையிலேயே ஒவ்வொன்றும் செய்யப்பட்டன.

70% அளவுக்கு அட்டவணை முதிர்ச்சித் தன்மை கண்டதுமே, சுட்டி(url) இருப்போர் எவரும் பார்க்கக்கூடிய அளவில் வசதியமைப்புச் செய்யப்பட்டு ஒலி ஒளிக்குழுவினரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடமும் நேரிடையாகப் பேசவும் ஒலி, ஒளி, நுட்பங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கும் வசதியாக. அந்த நாளிலிருந்து, அது நிகழ்நிலை ஆவணமாகவே இன்று வரையிலும் இருந்து வருகின்றது.

95% முதிர்ச்சி கண்டவுடன், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பகிரப்பட்டது. சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அவை செய்யப்பட்டன. பிற்பாடு, நிகழ்ச்சிக்குழுவுடன் பகிரப்பட்டது. சில நிகழ்ச்சியின் பெயர்கள், வடமொழி, ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றுக்கான மாற்றுப் பெயர்கள் வைக்கச் சொல்லப்பட்டது. அப்படியாகப் பெயர்கள் மாற்றப்பட்டன. வழிகாட்டுதல்க் குழுவுக்கும் பகிரப்பட்டது. இப்படியாக அந்தச் சுட்டியினூடாக, நிகழ்நிலை ஆவணம் பொதுப்பார்வைக்கும் திறந்துவிடப்பட்டது. 

மேற்படிக்குழுக்களின் ஒப்புதல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு இன்றளவும் பேரவைக் கணக்கில் காணக்கிடைக்கும் ஆவணம் இதுதான். https://shorturl.at/WLrx3 ஜூலை 2ஆம் நாளுக்குப் பின்னர் எவ்விதத் திருத்தங்களும் எம்மால் மேற்கொள்ளப்படவில்லை. இணைப்பராமரிப்பாளர்கள், பதிப்பு வரிசையையும்(version history) இன்றளவும் காணமுடியும். மனிதர்கள் மாற்றிப் பேசலாம். ஆவணங்கள் பேசுவதில்லை.

𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐚𝐧 𝐚𝐜𝐭 𝐨𝐟 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲 𝐟𝐨𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐫𝐞𝐚𝐝𝐞𝐫𝐬, 𝐢𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐬𝐞𝐥𝐟.

-பழமைபேசி,

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ProgramLineUp

12/14/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு



உழைப்புக்கு நிகர் எவருமில்லை. துணிந்தவனின் சாதனைகளுக்குத் தடைகள் வந்திடினும் இலக்குகளில் மாற்றமிருப்பதில்லை . 2009ஆம் ஆண்டு துவக்கம், 2017ஆம் ஆண்டு வரையிலான நிகழ்ச்சி நிரல்கள், ஒவ்வோர் ஆண்டும் நம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். காரணம், இரண்டு நாள் நிகழ்வுகளுக்கான தொகுப்புரைகள் எழுதுவது நாம்தான். மணித்துளிக்கு மணித்துளி, நேர விரயம் ஏற்பட்டு விடக் கூடாதெனும் அக்கறையும் ஈடுபாடும் மேலோங்கி இருக்கும். அந்தப் பின்னணியில், தகவல்தொடர்பு , வட அமெரிக்க வாகை சூடி , இவற்றுடன் நாம் ஈடுபட்டுக் கொண்டது நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பு .

நாம் பார்த்த பணிகளில், மிகவும் நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துச் செய்ததில் அதிக உழைப்பினை எடுத்துக் கொண்டது இப்பணிதாம். முதல்நாள் ~35 நிகழ்ச்சிகள், இரண்டாம் நாள் ~30 நிகழ்ச்சிகள், இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பங்களிப்பாளர்களின் முகம் கோணாமல், அன்பையும் அக்கறையையும் குழைத்துக் குழைத்து, அவர்களின் வேண்டுதலுக்கெல்லாம் “no" சொல்லாமல், அதேநேரம் நிரலும் நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, காலை பதினொரு மணிக்கு இன்ன நிகழ்ச்சி என்றால், அதில் பங்கேற்கும் இந்த இன்னின்னார், அதே நேரத்தின் இலக்கிய இணையரங்கு நெறியாளர்கள் எனத் தகவல் வரும். தீர்வு கண்டாக வேண்டும். இன்ன நிகழ்ச்சிக்கு 40 மணித்துளிகள் என்றால், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்களென்பார். ஐந்து பத்து மணித்துளிகள் கூட்டிக் கொடுத்து அவரையும் அவர்தம் குழுவினரையும் மகிழ்ச்சியாக, அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். 65 நிகழ்ச்சிகள், அதன் பங்களிப்பாளர்களின் தேவைகள், நேரம், இணையரங்குகள், போட்டிகள் இவற்றையெல்லாம் அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து அவதானித்துச் செல்வதின் வழிதான் இது ஈடேறும் . அதிகார சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் இவை குறித்துக் கவலையிராது. தேர்ந்த களப்பணியாளர்களுக்கு மட்டுமே புரியக் கூடியன இவை.

பொதுவாக இரு நாள் விழாக்களின் நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு எப்படி இருத்தல் வேண்டும்?

1. ⚡ ஆற்றல் மேலாண்மை, வேகக்கட்டுப்பாடு (Energy Management and Pacing)

மூன்று நாள்களிலும் எழுச்சி குறையாமல், தளவு, தொய்வின்றி, வருகையாளர்களின் உற்சாகம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால், பங்களிப்பாளர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருக்கவிடக் கூடாது.

நாள் 1: வலுவாகத் தொடங்கி உத்வேகத்தைக் கட்டியெழுப்புதல்

துவக்கம் : அதிக ஆற்றல் கொண்ட, ஊக்கமளிக்கும், அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுடன்(எ.கா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு, போட்டி) தொடங்கி, ஒரு வலுவான தொனியை அமைத்து, பங்கேற்பாளர்களின் பங்களிப்பை  உறுதிப்படுத்த வேண்டும்.

உச்ச நேரம் : பங்கேற்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் பிற்பகலுக்கு முன்னதான நேரத்தில், அதிக கவனம் தேவைப்படும் அல்லது மிகவும் முக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்ட நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முடிவு : முதல் நாளை ஒரு முக்கியமான நிகழ்ச்சி, சமூகச் செயல்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூக்கலான நிகழ்ச்சியுடன் முடிக்க வேண்டும். இது ஒரு வெகுமதியாகவும், உறவுகளை உருவாக்க உதவுவதாகவும், இரண்டாம் நாள் தவறவிடக் கூடாதெனும் விரைவுத் தொனியில் திரும்புவதற்கு ஒரு வலுவான காரணமாகவும் இருக்கும்.

நாள் 2: ஈடுபாட்டைத் தக்கவைத்து, சிறப்பாக முடித்தல்

காலை மனமாற்றம் : முதல் நாள் இரவு நிகழ்வினால் ஒருவேளை தாமதமான தொடக்கம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகத் தொழில்நுட்பம் நிறைந்த அல்லது சிக்கலான அமர்வுகளை அதிகாலையில் வைக்கக் கூடாது. மக்களை எளிதாக நிகழ்வுக்குள் கொண்டுவர, சற்றே லேசான, அதிகமாக ஊடாடக் கூடிய நறுக்கான நிகழ்வுடன் தொடங்கலாம்.

மதியச் சோர்வு : இரண்டாம் நாள் பிற்பகலுக்கு முன்னதான நேரம் சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதி. இங்கு அதிகமாக ஊடாடும் வடிவங்களை (குழு விவாதங்கள், பார்வையாளர்களின் கேள்விகள், நேரடிப் பயிலரங்கங்கள், விநாடி வினா, பரிசளிப்புகள்) நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.

நிறைவு : நிகழ்வைச் சக்திவாய்ந்த, மறக்கமுடியாத நிறைவு அமர்வுடன் (எ.கா:, ஒரு தொலைநோக்குடைய அமெரிக்க வாழ்வியலை மேம்படுத்தும் நிகழ்வு, பேச்சாளர், ஒரு பெரிய அறிவிப்பு, தெளிவான அழைப்பு அல்லது அறைகூவல்) முடிக்க வேண்டும்; கூடவே எப்போதும் போலத் துள்ளலைக் கட்டியெழுப்புகின்ற மெல்லிசை நிகழ்ச்சி. இது பங்கேற்பாளர்கள் விழா முடிந்த விட்டதேயெனும் ஏக்கத்துடன் வீடு திரும்புவதைக் கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.

2. கட்டமைப்பு நுணுக்கப்பாடுகள் (Structural & Logistical nuances)

  • அமர்வுகளுக்கு/அறைகளுக்கு இடையில் பங்கேற்பாளர்கள் செல்ல, A/V அமைப்பு மாற்றங்கள், இடத்தைப் புதுப்பிக்கத் தேவைப்படும் நேரம்.
  • நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்கள், போட்டிகள், இணையரங்குகள், உணவு இடைவேளை, தொழில்நுட்பத் தேவைகள், இவையாவும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்தல்.
  • முக்கியப் பேச்சாளர்களை முன்பே சரிபார்த்து, A/V சோதனையை அவர்களின் நேரத்திற்கு முன்பே முடித்தல். சிலரை, அவர்தம் பின்னணியைக் கொண்டு, அதற்கேற்ற நேரத்தில் நேரம் ஒதுக்குதல் வேண்டும்.
  • தொய்வு நேரத்தில், இடைவெளி நேரத்தில், மேடையைப் பயன்படுத்திக் கொள்ள மாற்று ஏற்பாடுகள் எப்போதும் கைவசம் இருத்தல் வேண்டும்.

இரண்டு நாள் நிகழ்வுக்கான அட்டவணையைப் பொறுத்தவரை, மிக முக்கியமான நுணுக்கம் என்னவென்றால்,  இரவு நேர இடைவெளியுடன் கூடிய இரண்டு ஓட்டப் பந்தயங்களாக (two sprints with a deliberate overnight pause) நினைத்து, ஓட்டத்தின் வீச்சு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

( படம் : Truth, Transparency & Trust என்பதற்கொப்ப, நிரலைப் பலரும், எந்த நேரத்திலும் பார்க்கும்படியாக, செயற்குழு, வழிகாட்டுதல்க்குழு, இணையரங்குக்குழு, நிகழ்ச்சிநிரல்க்குழு, எனக் குறைந்தது 75+ பேருடன் பகிர்ந்துகொண்டு,  நாள்தோறும், நிகழ்ச்சி நிரலை ஒலி ஒளிக்குழுவினருடன் இணைந்து பேசிப் பேசிக் கட்டமைத்தன் சான்று)

𝐖𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐟𝐞𝐞𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬, 𝐨𝐮𝐫 𝐢𝐧𝐯𝐨𝐥𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐦𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐢𝐞𝐬.

(தொடரும்..)


-பழமைபேசி.

#FeTNA2025
#ProgramLineUp
#Empathy

12/08/2025

நட்பின் கதை

நட்பென்பது யாதெனில் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது. ஏன், பேசிக்கொள்ளாமலே ஒரு *புன்முறுவல் பூப்பதாகவும்* இருக்கலாம்.

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான, ஆழமான உறவுகளில் நட்பு தனித்துவமானது. அது ரத்த உறவையொத்த பிணைப்பைக் கொண்டிருந்தாலும், எந்தவித கட்டாயமும் இன்றி, மனதின் ஆழத்தில் இருந்து தானாகப் பூக்கும் பூவைப் போன்றது. ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வரும் ஏதோவொன்றாகக் கூட இருக்கலாம் அது.

நட்பென்பது வெறும் பேச்சால் மட்டும் கட்டப்பட்டது அன்று. ஒருவருக்கொருவர் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் நட்பின் வெளிப்பாடுகள்தான். ஆனால், அதைவிட மேலானது மௌனத்தின் மொழி. சில நேரங்களில், ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை, இரு நண்பர்களுக்கு இடையேயான ஒரு புன்முறுவல் ஊட்ட வேண்டிய உணர்வினைப் பூக்க வைத்துவிடும். அந்தச் சிரிப்பில், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், புரிதலும், அன்பும் அடங்கியிருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுப்பதும், ஆறுதல் சொல்வதும், தவறு செய்தால் சுட்டிக்காட்டுதும்தான் அதன் இலக்கணம். அது ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலைப் போன்றது. அதன் அடியில் அமரும்போது, எல்லா கவலைகளும் மறைந்து, மனம் அமைதி அடையும்.

வாழ்க்கைப் பாதையில், நாம் பலரைச் சந்திக்கிறோம்; பலருடன் பழகுகிறோம். ஆனால், ஒரு சிலரே நம் இதயத்தில் அவர்களுக்கானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள்தான் நம் *நண்பர்கள்* . அவர்களின் வருகை நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. எனவே, அத்தகைய நட்பைப் போற்றுவது கடமையாகும். அந்தப் புன்முறுவல்களின் கதைகளும், பேசாத வார்த்தைகளின் பொருண்மியங்களும் என்றென்றும் நீடிப்பதே நட்பின் கதையாகத் தொடரும்.

கண்டம் விட்டுக் கண்டமாக அந்நியப்பட்டுவிட்ட நமக்கு, *வேணுகோபால்* என்பவர் யாரென்றே தெரியாது. புனைவாக நாம் அடித்து விட்ட கதைகளைக் கண்டவர், தனித்தகவல்களாக அவ்வப்போது எதையாவது அனுப்புவார். முன்பின் தெரியாத ஒருவரிடம் நாம் பெரிதாக ஒன்றும் அளவளாவிட முடியாதுதானே? நன்றி சொல்தலும் வணக்கம் சொல்தலுமாக இருந்த காலகட்டம். கோவிட் பெருந்தொற்று.

*வேணு* , போலந்தில் இருக்கும் மகளைப் பார்க்கச் சென்றவர் அங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது. அன்றாடம் நம்மிடம் பேசுவார். எங்கள் அலுவலகம் _கிராக்கோவ்_ , _வார்சா_ ஆகிய இரு நகரங்களிலுமே உள்ளது. அணுக்கமான நண்பர்கள் நமக்கு அங்கு உண்டு. ஏதாகிலும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்களென்றேன். ஊருக்கு டிக்கெட் மாத்திரம் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டார். நானும் அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தகவல் வருவதற்கு முன்னம் அவரேவும் ஏற்பாடுகள் செய்து கொண்டார். பயணக்கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்தபின்னர் ஊருக்கு வந்திருந்த நேரத்தில் ஒரு சில முறை சந்தித்துக் கொண்டோம்.

வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒரு பயணம். எப்போது எந்தத் திருப்பம் வருமென்று யாருக்கும் தெரியாது. மரணம் என்பது வாழ்வின் நிரந்தரம். அந்த நிஜத்தின் முன் நின்று பார்க்கையில், நம் கையில் இருப்பது இந்தத் தற்காலம் மட்டுமே! இறப்பைப் பற்றிய அச்சத்திலோ அல்லது கடந்த காலத்தின் வருத்தங்களிலோ, நம் பொன்னான நிகழ்காலத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. இனிமேல் வரப்போகும் நாட்களைப் பற்றிக் கனவு காண்பதை விட, இன்று என்ன செய்ய முடியுமென்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு; ஒவ்வொரு மூச்சும் ஒரு கொண்டாட்டம். இந்த நொடியில் முழுமையாக வாழ்ந்திடுவோம்; உணருங்கள், சிரியுங்கள், அன்பு செலுத்துங்கள்!

நேசித்தவர்களோடு நாம் கழித்த நாட்களை நினைத்துத் துயரப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் நமக்கு அளித்த மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டோரின் நினைவுகள்தான் நம்முடைய விலைமதிப்பற்ற சொத்து. நாம் சிரித்த சிரிப்புகள்... ஒருவருக்கொருவர் அளித்த ஆறுதல்கள்... ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட தருணங்கள்... இவை அனைத்தும் காலத்தால் அழியாத செல்வம். அந்த நினைவுகளின் ஒளியில், நம் எஞ்சிய வாழ்வை நாம் வாழ வேண்டும். அவர்கள் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர்களின் அன்பின் சுவடுகள் நம் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும்.

துயரத்தை ஒதுக்கிவிட்டு, நேசத்துக்குரியவர்களுடன் நாம் பகிர்ந்த அனுபவங்களின் ஆனந்தத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை நமக்கான, ஒரு அற்புதமான கதை. அதில் ஒவ்வொரு நொடியும் நாம் நாயகனாக வாழும்போது, மரணம் என்பது ஒரு முடிவாக இல்லாமல், நிறைவான ஒரு பயணத்தின் ஓய்வாக மாறும். வாருங்கள், வருத்தம் வேண்டாம். அன்னாரின் அன்பின் நினைவுகளோடு, தற்காலத்தைத் துணிவாக எதிர்கொள்வோம்! அன்பனுக்கு *மலர்வணக்கம்* !

𝐌𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐰𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐧𝐚𝐭𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.


-பழமைபேசி.

12/06/2025

மணிகண்டன் கனகசபை

மணிகண்டன் கனகசபை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்புக்குழு உறுப்பினர். தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு, பேரவை நிகழ்ச்சிகள், திருவிழா முதலானவற்றின் காணொலிகளைப் பராமரித்து வந்தவர். 

தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுப்பது என்பது, தனிப்பட்ட உறவுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான ஒரு மிக முக்கியமான பண்பாகும். இது வெறுமனே ஒருமுறை உதவுவது அன்று; மாறாக, ஒரு பொதுவான இலக்கை அடைய, ஒரு நல்லுறவைப் பேண, தொடர்ந்து இணைந்து செயல்படும் மனப்பான்மையைக் குறிக்கிறது. அந்த வகையில் திரு.மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

திட்டங்கள் மாறும்போதோ அல்லது புதிய சவால்கள் வரும்போதோ, வளைந்து கொடுத்து, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படியாக, திரு மணிகண்டன் அவர்கள் சிறப்புச் சேர்த்தார். விழாவில் நம்மைக் கண்டதுமே, வேலைகளுக்கு ஆட்கள் வேண்டுமாயெனக் கேட்டு, சில பலரை அறிமுகப்படுத்தினார். இஃகிஃகி, நமக்குத்தான் எவரையும் நினைவில் இருத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் வந்து, இடைக்கிடை, ‘அண்ணா, எதனா செய்யணுமா? எதனா செய்யணுமா??’ எனக் கேட்டபடி இருந்தனர்.

மேற்படி இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுள் ஒருவர் வந்து, ‘அண்ணே, மாரி செல்வராஜ் அவர்களுக்குத் தொண்டை வலியாம்; இன்ன மருந்துதான் வேண்டுமென்கின்றார். டாக்டரின் மருந்துச் சீட்டு இருந்தால்தான் வாங்க முடியும்’, என்றார். மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்களை அழைக்க, அவர் தமக்கு அந்த உரிம அனுமதி இல்லையென்றும், இன்னாரை அழையுங்களென, ஒருங்கிணைப்பாளர் திருமிகு. மீனா இளஞ்செயன் வழியாகத் தொடர்பு கொள்ளப் பணித்தார். திருமிகு மீனா அவர்கள், மருத்துவர் சுஜாந்தி இராஜாராம், மருத்துவர் சுஜாதா சஜிவன் ஆகியோரைத் தொடர்பில் கொணர்ந்தார். நண்பரிடம் அவர்களைக் கோர்த்துவிட்டபின் நாம் விடுபட்டுக் கொண்டோம். ஆனாலும் மற்றவர்கள் விடவில்லை. அடுத்தடுத்து மருத்துவம் குறித்த உதவிகளுக்கு முறைப்பாடுகள் வந்து கொண்டிருந்தன. சார்லட் மருத்துவர் இராஜேஷ் தோட்டா அவர்களிடமும் மகர் அவர்களிடமும் தள்ளிவிட்டுக் கொண்டோம். இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

𝐖𝐡𝐞𝐫𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐬𝐚𝐰 𝐨𝐛𝐬𝐭𝐚𝐜𝐥𝐞𝐬, 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐌𝐚𝐧𝐢𝐠𝐚𝐧𝐝𝐚𝐧 𝐬𝐚𝐰 𝐬𝐩𝐚𝐜𝐞𝐬 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐛𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝, 𝐚𝐧𝐝 𝐡𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐭𝐡𝐞𝐦 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞, 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞.

அன்புடன் தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும், இந்த நாளை ஒரு மறக்க முடியாத அழகான நினைவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. தங்கள் உதவிகள் ஏதோவொரு வகையில், ஏதோவொரு தருணத்தில் தங்கள் வாழ்விற்கான பொருண்மியத்தைக் கொடுக்க வல்லது. சிறப்புகள் பெற்றிடுவீர் திரு மணிகண்டன் கனகசபை.

-பழமைபேசி.
#PROTeam #FeTNA2025

12/02/2025

செந்தில்குமார் கலியபெருமாள்

செந்தில்குமார் கலியபெருமாள்

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்பு, தொழில்நுட்பக் குழுக்களின் துணைத்தலைவர், நம் நெடுங்கால நண்பர்.

கருப்பெட்டிச் சோதனை என்பது  சோதனையின் ஒரு வகையாகும். இதில், ஒரு சோதனையாளர், சோதிக்கப்படும் பொருள், அதன் உள்ளீடு, குறியீடுகள், விவரங்கள் பற்றி எந்தவொரு தகவலும் அறிந்திரா நிலையில், முன்நிலைப்பாடற்றுச் சோதனைகளைச் செய்வார். இந்தச் சோதனையில், பொருளானது ஒரு 'கருப்பெட்டி' போலக் கருதப்படுகிறது. அதாவது, அதன் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. கருவில் இருக்கும் உயிரின் அடையாளத்தன்மைகள், பண்புநலன்கள் எதுவும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இன்னபொருள், இன்ன கருவி முதலானவற்றின் உள்ளீடுகள், தனிநபர்கள், இடம் முதலானவற்றின் எதன் பின்னணியும் அறிந்திராமல், அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதனை சோதித்துப் பார்க்கும் முறை. தகவல் தொடர்புக்குழுவுக்குக் கிடைத்த அப்படியான ஒருவர்தாம் ‘அண்ணாச்சி’ என அன்போடு அழைக்கப்படுகின்ற திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

சச்சரவு, விமர்சனம், கொந்தளிப்பு போன்ற நுண்ணுணர்வு கூடிய தகவலை வெளிப்படுத்துகின்ற போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது தனிப்பட்ட நபரின்பால் வெளியிடப்படும் தகவல் அன்று. மாறாக, ஆகக்குறைந்தது 20 ஆயிரம் பேருக்கு, அமைப்பின்பால் தெரிவிக்கப்படுகின்ற தகவல். 5% நுகர்வோர் மனம் புண்பட்டுவிடுகின்றதென வைத்துக் கொள்வோம். எஞ்சியிருக்கின்ற 95% பேரை நல்லவிதமாக அணுகியிருக்கின்றோம்தானே எனக் கொண்டுவிடலாகாது. ஏனென்றால், இதுவே வாடிக்கையாகி, பத்துமுறை நிகழ்கின்றதென வைத்துக் கொண்டால், 50% நுகர்வோரின் ஒவ்வாமைக்கு அது வித்திட்டுவிடும். நல்லதொரு தகவல்தொடர்புக்கு அடையாளம், நூற்றுக்கு நூறு வெற்றி கொள்வதாக இருந்திடல் வேண்டும். அப்படியான, நுண்ணுணர்வு கூடிய தகவல், செய்தியறிக்கை முதலானவற்றைச் சோதிக்க, திரு. செந்தில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார். வெகுளித்தனமாக ஒவ்வொன்றையும் வினவும் போது, சரிசெய்து கொள்ளும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

அண்ணாச்சி அவர்கள் கலையுணர்வு மிக்கவர், பாடகர், தமிழுணர்வாளர் என்ற முறையில், காலவுணர்வினை வலியுறுத்தக் கூடியவர்.  “கோடைவிடுமுறைக் காலத்தை நம் பிள்ளைகள் குதூகலமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செலவிட்டுக் கொண்டிருப்பரென நம்புகின்றேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”, தலைவர் மடல் முதலான பலவற்றிலும்,  இது போன்ற வாழ்வியலுக்கு நெருக்கமான வரிகள் இடம் பெறுவதற்கு, அளவளாவலின் போது இவர்கள் தருகின்ற கண்ணோட்டங்களே காரணமாக இருந்தன.

விழா துவங்கி விட்டது. நேரலை உலகுக்கே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘மங்கல இசை’, ‘மங்கள இசை’, அக்கப்போர். இஃகிஃகி. இவருக்குப் பதற்றம். ஏனென்றால், விழாவின் அரங்குகளுக்கான ஒவ்வொரு பின்னணிப் படத்தையும் வடிவமைத்துச் செயற்படுத்தியவர் இவரே. “அண்ணாச்சி, உங்ககிட்ட சரி பார்த்திட்டுதானே செய்தன்?”, அலறுகின்றார். ‘மங்கல இசை சரிதானுங்க. என்ன பிரச்சினை இப்ப?’. ‘இல்ல அண்ணாச்சி, இன்னாரே சொல்றாங்க, அது பிழையின்னு’. மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, நன்று போன்ற இடங்களில் கையாளப்படுவது. மங்களம் என்பது, நற்காரியத்தின் முடிவினைக் குறிப்பது’ என்றெல்லாம் சொல்லி வகுப்பெடுத்த பின்னர்தாம் அடங்கினார். அந்த அளவுக்கு நுண்ணுணர்வும் கடமையுணர்வும் மிக்கவர். தகவல்தொடர்பு என்பது மட்டுமேயன்று, பல குழுக்களின் வாயிலாகவும் பங்களித்தவர் திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐜𝐚𝐫𝐢𝐧𝐠 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐛𝐭𝐥𝐞 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐥𝐢𝐟𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥.

-பழமைபேசி.

#PROTeam #FeTNA2025


 

12/01/2025

சரவணன் கிருஷ்ணன்

சரவணன் கிருஷ்ணன்

தகவல் தொடர்புக்குழுவால் என்ன செய்திட முடியுமென்பதைக் காண்பித்தோம். ஒரு அமைப்பின் தகவல் தொடர்பாளர், நிறுவனத்தின் வெளிப்புற, உள்புறத் தொடர்புகளை நிர்வகிப்பதற்கும், அதன் நற்பெயரைப் பேணுவதற்கும், அதன் குறிக்கோள்களை, செயற்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும் பொறுப்பானவர் ஆவார். அவரின் முக்கிய பணிகள் கீழ் வருமாறு:

அமைப்பின் இலக்குகள், செய்தியை,  பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் தொடர்புத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல்.

பத்திரிகை வெளியீடுகள், செய்திமடல்கள், இணையதள உள்ளடக்கங்கள், அறிக்கைகள், உரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை எழுதுதல், திருத்துதல், பரப்புதல் முதலானவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு, அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், மதிப்புகள் குறித்து ஈர்க்கக்கூடியதும் உண்மையானதும் துல்லியதுமான தகவலை உருவாக்கிட வேண்டும்.

 ஊடகவியலாளர்களுடலும் உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திப் பேணுதல் மிக அவசியம். வினாக்களுக்கும் விசாரிப்புகளுக்கும் முறையாகப் பதிலளித்து அக்கறை கொண்டாக வேண்டும்.

குறிப்பாக ஊடங்களிலும் பொதுவெளியிலும் வெளிவரும் செய்திகளைக் கண்காணித்தல், அதற்கொப்பச் செயற்பாடுகளை, எதிர்வினைகளை உடக்குடன் அமைத்துக் கொண்டாக வேண்டும். 

எண்ணிம, சமூக ஊடக மேலாண்மை, அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல், உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பார்வையாளர்களுடன் ஈடுபடுதல். இணையதளத்தை புதுப்பித்தல்,உள்ளடக்கத்தை ஈர்க்கக்கூடியதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

உள் செய்திமடல்கள், அக இணையப் புதுப்பிப்புகள் மூலம் அமைப்புக்குள் தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொண்டு, அமைப்பினரின் செயல்பாடுகளும் அதற்கொப்ப இருக்குமாறு அறிவுறுத்திடல் வேண்டும். மாநாடுகள், நிகழ்வுகள்,  பிற விளம்பர நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.

ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எதிர்மறையான நிகழ்வின்போது, அமைப்பின் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும் சரியான நேரத்திலும், உறுப்பு அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல்.

தகவல் தொடர்புக்குழுவினர் எப்போதும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டும் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டும் இருந்தனர். வட அமெரிக்காவெங்கும், ஏன் உலகமெங்கும் பேரவைக்கான ஆர்வலர்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கும். அப்படியானவற்றைக் கண்காணித்து, அமைப்பின் தகவலை அதற்கொப்ப அமைத்துக் கொள்தலுக்கும், திருவிழா குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பினை அறிந்து உடனுக்குடன் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான சிறந்த தொடர்பாளராக விளங்கியவர்தாம் உய்த்துணர்வில் சிறக்கும் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள். 

தமிழ், மக்கள், பண்பாடு முதலானவற்றின்பால் அக்கறை கொண்டவர். விழாவின் பயணக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். குறைவான கட்டணத்தில் விடுதி, குழுவாகப் பயணம் செய்வதன் மூலம் செலவுக்குறைப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளை தொடர்பு கொண்ட ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நம்மோடு துணை நின்றவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.

’ஏப்பா, மெய்யாலுமே இத்தனையும் செய்யப்பட்டதா?’ என்றால், ஆமாம், செய்யப்பட்டதுதான்!

𝐖𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐏𝐑 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐞𝐥𝐥𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐨𝐭𝐞 𝐨𝐮𝐫𝐬!🎉🎉

-பழமைபேசி.
தகவல் தொடர்புக்குழு, FeTNA 2025.

11/29/2025

வட அமெரிக்க வாகை சூடி - 2

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு மக்களின் ஒவ்வாமைக்கு இட்டுச் சென்றிருந்த காலமென ஒன்றிருந்தது. ஆனால் அப்போதேவும் மாணவர்களுக்கான போட்டிகள் எழுச்சியோடும் சீரோடும் இடம் பெற்று வந்தன. இணையவசதிகள் பிறநாடுகளில் தலையெடுக்கத் துவங்கி இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, பேரவையை உலகெங்கும் கொண்டு செல்லக் கூடிய பணிகள் செம்மையாக இடம் பெற்றன. 
  • நாடளாவிய அளவில், பல்வேறு கல்விக்கான முன்னெடுப்புகள், அமைப்புகள் வாயிலாக, அறிவியல், கணிதம், தானியங்கியல், இசை முதலான போட்டிகளில் நம் பிள்ளைகளும் பெருமளவில் பங்கு பெறுகின்றனர். எங்கும் பணமாகப் பரிசுகள் வழங்குவதில்லை. 
  • உளவியலாளர்களும் கல்வியாளர்களும் சொல்வது யாதெனில், பணம் போன்ற பெரிய வெளிப்படையான வெகுமதிகள், உண்மையில் ஒரு மாணவரின் உள்ளுணர்வுத் தூண்டுதலை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பரிசுப் பணமாக அல்லாமல் (எ.கா., கோப்பை, பதக்கம், அல்லது சிறப்புச்செய்தல்) இருக்கும்போது, ​​கவனம் முழுவதும் கற்கும் செயல்முறை, திறன் மேம்பாடு, வெற்றிக்குரிய மரியாதை ஆகியவற்றில் இருக்கும். பணத்தின் மீதிருக்காது. பெற்றோர்களின் இடையூடுகளையும் மட்டுப்படுத்தும்.
  • பணம் கொடுப்பது கல்வியின் இலக்கிற்கு முரணாக, கல்வியின் சீரிய தன்மையிலிருந்து, பொருளாசையை நோக்கிக் கவனத்தை மாற்றும். பரிசுகள், ஒரு நினைவுச் சின்னமாக (plaque, custom medal, or unique book set) இருக்கும்போது, ​​அது செயற்பாட்டின் மறக்கமுடியாத சின்னமாக அமைகின்றது.
  • அமெரிக்காவில், ஒரு ரொக்கத் தொகையானது, சட்டப்படி "பரிசு" என்று கணக்கிடப்பட்டால், அது வெற்றி பெறும் மாணவரின் வரி செலுத்த வேண்டிய வருமானமாக மாறும். இதனால்,  வரிப் படிவங்களை (1099-MISC) மாணவருக்கு வழங்க வேண்டும், சில இடங்களில் வரியையும் பிடித்தம் செய்ய வேண்டிய நிலை வரும்.
மேற்கூறப்பட்ட காரணங்களின் நிமித்தம், 2010 காலகட்டத்திலேயே பணமுடிப்புக்கு எதிராக நாம் கிளர்ச்சிகள் செய்தது உண்டு. ஆமாம், நாம் செய்த கிளர்ச்சிகளுக்கு அளவேயில்லை. இஃகிஃகி. கவனம், போட்டியின் தரத்திலும் நயத்திலும் இருக்க வேண்டுமேவொழிய, பணம், பணம் தொடர்பான விளம்பரங்களென இருக்கக் கூடாது. நம் கருத்தினைப் பொருளாளரிடம் சொல்ல, எஞ்சியதை அவர் பார்த்துக் கொண்டார். அன்னாருக்கு நன்றி.

நண்பர் செளந்தர் அவ்வப்போது யோசனைகள் சொல்லிக் கொண்டிருப்பார். தேர்தலிலும் போட்டிகள் குறித்த கருத்தாடல்கள் இடம் பெற்றிருந்தன. பொறுப்புகள் கிட்டியவுடன் மளமளவென குழுக்களை அமைக்கும் பணிகள். வட அமெரிக்க வாகை சூடி, அதற்கான ஆவணங்கள் கட்டமைக்கப்பட்டன. விழாவுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. வழிகாட்டுதல்க்குழு உறுப்பினரின் யோசனைக்கொப்ப நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்தானேயெனக் கேட்டார் பேரவைத் தலைவர். ஒருவிநாடி கூட யோசிக்காமல், மறுத்துவிட்டோம். ஏன்? விழா நடத்துகின்ற ஊரிலிருந்தேவும் எதிர்ப்பு வரும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்குள் அடைபடுவதையும் நாம் விரும்பவில்லை, ஒருங்கிணைப்பாளர்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளராக அடைமொழியேதுமற்று இருத்தல் சுகமென நினைத்தது உள்ளிட்டவைதான் காரணங்கள். வட அமெரிக்க வாகை சூடிக்கான ஒருங்கிணைப்பாளர்? அவசியம் உள்ளூரில் இருக்கும் ஒருவர்தாம் அந்தப் பொறுப்பில் இருந்தாக வேண்டுமென்பதையும் தெரிவித்து விட்டோம்.

நாம் பணியாற்றாத குழுவேயில்லையெனச் சொல்லுமளவுக்கு அன்போடும் அக்கறையோடும் எல்லாக் குழுவினரும் நம்முடன் தொடர்பில் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம். திருமிகு பரணி அவர்கள், தொடர்ந்து, நம்மிடம் இடம் பெறும் பணிகள் குறித்து அளவளாவியபடி இருந்தார். பதற்றம், பரபரப்பு என்பதெல்லாம் வெகுகுறைவு. வாசிங்டன் டிசி பகுதியிலிருந்து ஒருவர், உள்ளூரிலிருந்து ஒருவர், மிச்சிகன் மாகாணத்திலிருந்து ஒன்று, இவைதாம் நமக்கு நினைவுக்கு வருகின்றன.  பொருட்படுத்தக் கூடிய அளவில் பெரிதாக ஒன்றுமிருந்திருக்கவில்லை. விழாநாளும் வந்துவிட்டது. 

முதல்நாள், நண்பகல் உணவுநேரத்தில் நெருக்கடி. நண்பர்களின் உதவியால் சமாளித்தோம். இரண்டாம் நாள் கோப்பைகள்,பதக்கங்கள் வைக்க இடம் வேண்டும். அறை இல்லை. அரங்க மேலாளரை அவரது அறையில் சென்று பார்த்துப் பேசி, அழைத்து வந்து போட்டிகள் நடந்து கொண்டிருப்பதைக் காண்பித்தோம். புரிந்து கொண்டார். கூடுதல் பணம் கொடுப்பதற்கில்லை. பார்த்து உதவுங்களென்றோம்; குறிப்பாக பூட்டித் திறக்கும்படியான அறை கேட்டோம். நாம் மன்றாடியதைக் கண்ட அவர், கொடுத்து விட்டார். இஃகிஃகி. 

பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், இதரப்பரிசுப் பொருட்களென, அரங்கத்து அறைக்குள் வைப்பதற்கு உதவ வேண்டுமென மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்கள் வேண்டினார். அதேநேரத்தில் எனக்குப் பல வேலைகள். நம்மிடம் இருந்த கூடுதல் பாஸ்களை, நண்பர்கள் கான்சாஸ் இராஜேஷ் ஜேசுராஜ், வெங்கட் உள்ளிட்டோரிடம் கொடுத்து, அவருக்கு உதவும்படிச் சொல்லவே, அவர்களும் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றி.

முதல்நாள்(ஜூலை 4) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 60 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள். இரண்டாம் நாள்(ஜூலை 5) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 90 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 50 நிமிடங்கள். வழங்கப்பட்ட பதக்கங்கள் 840. கோப்பைகள் 247. சான்றிதழ்கள் 1600+.  பயன்படுத்திக் கொண்ட அறைகள், ஜூலை 3ஆம் நாள் 9, ஜூலை 4ஆம் நாள் 4, ஜூலை 5ஆம் நாள் 2. மேடை நேரத்திலும் சரி, அறைகள் பயன்பாட்டிலும் சரி, எவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடித்திருக்கின்றோம். 

அன்போடும் அக்கறையோடும் பிள்ளைகள் ஒவ்வொருவரையும், ஒருமுறைக்குப் பலமுறை(ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக) மேடையேற்றி, பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கியென எல்லா முறைமைகளையும் செய்து கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். எல்லாமும் சிறப்பாக முடிந்தநிலையில், ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாரதி முருகேசன் வந்து சொன்னார். “அண்ணா, உங்களுக்கானதை நீங்கள் இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்”. சுற்றிலும் பார்த்தேன். யாரையுமே, எந்த செயற்குழு, வழிகாட்டுதல்க் குழுவினரையும் காணோம். ஒருங்கிணைப்பாளர்கள், திருமிகு பரணி, நான் என எல்லாருமே கேரொலைனா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், எங்களை நாங்களே புகழ்ந்து, பாராட்டி படமெடுத்துக் கொண்டோம். https://www.youtube.com/live/nAB7JvPt2pQ?si=WLhVqDm8sM3ieGEK&t=8802 இஃகிஃகி. பெற்றோர்கள், மாணவர்கள், நடுவர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் வெற்றி.

மேடையை விட்டிறங்கி நமக்குக்கிடைத்த பதக்கம், பொன்னாடையை வீட்டாரிடம் தரலாமென நினைத்துச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் ஒருவர் ’தபதப’வென பிள்ளையை இழுத்துக் கொண்டபடி வந்தவர், ’எல்லாம் முடிஞ்ச்சுங்ளா, நாங்க லேட்டு, எங்க பிள்ளைக்குப் பதக்கம்?’. ’இந்தாங்க இது எனக்குக் கொடுத்தது’, நானே பிள்ளையின் கழுத்தில் போட்டு, அந்தச் சிறு பெட்டியையும் கொடுத்து அனுப்பி வைத்தேன். நான்கு தப்படி எடுத்து வைத்தேன். மற்றுமொரு தம்பி வந்தார். “பழமபேசி அண்ணை, பொட்டிகளை எடுத்தாரச் சொன்னவைக...” என இழுத்தார். இவர்தாம், இந்த மூன்று நாட்களாகப் பெட்டிகளை அங்குமிங்கும் நகர்த்தும் பணியைச் செய்து கொடுத்தவர்; செக்யூரிட்டி ஆட்களின் இம்சைகளுக்கு இடையேவும். கையிலிருந்த பொன்னாடையை தம்பிக்குப் போர்த்தி எல்லாம் ஆச்சுது, எடுத்துச் செல்ல ஒன்றுமில்லையெனச் சொல்லியபின் வீட்டாரை நோக்கிச் சென்றேன். பாரமெல்லாம் இறங்கி, சூன்யமாகி, நீர்ப்பரப்பின் மேலே அசைந்து அசைந்து ஆடிச்செல்லும் அன்னம் போலிருந்தது மனம்!

𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬𝐧’𝐭 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐰𝐢𝐧𝐧𝐢𝐧𝐠. 𝐈𝐭’𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐬𝐡𝐚𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐨𝐮𝐧𝐝.

[முற்றும்]

-பழமைபேசி.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

11/28/2025

வட அமெரிக்க வாகை சூடி


அமெரிக்காவின் தலையாய செவ்வியல்த் திரைப்படம் ஒன்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டு நத்தார்நாள் (Christmas) விடுமுறைக்காலத்தின் போதும், உலகெங்கும் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்படுகின்ற படம். குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து, ஆண்டுதோறும், திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகின்ற படம். அதுதான் It's a Wonderful Life (1946). ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது நமக்குள் ஒரு பாடத்தை விதைத்துச் செல்லும் வன்மை கொண்டது.

ஜார்ஜ் பெய்லி என்ற ஒரு நல்லெண்ணம் கொண்ட, தன்னலமற்ற மனிதனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். அவர் பெட்ஃபோர்ட் ஃபால்ஸ் என்ற சிறிய நகரத்தில் வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும், ஜார்ஜ் தன் பெரிய கனவுகளான உலகைச் சுற்றுவது, கல்லூரிக்குச் செல்வது போன்றவற்றைத் தியாகம் செய்து, குடும்பத் தொழிலான பெய்லி பிரதர்ஸ் பில்டிங் அன்ட் லோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் மலிவு விலையில் வீடுகளை வழங்குகின்றார். அதேநேரம், பேராசை கொண்டவரும் கொள்ளை கொள்பவருமான வங்கியாளர் மிஸ்டர். பாட்டருக்கு எதிரான தன் கிளர்ச்சியையும் மேற்கொள்கின்றார்.

கதை 1945 ஆம் ஆண்டு நத்தார்நாள் முன்மாலையில் தொடங்குகிறது. ஜார்ஜ் தற்கொலை பற்றி யோசிக்கிறார். ஏனெனில், அவரது மறதி பிடித்த மாமா பில்லி, நிறுவனத்தின் $8,000 பணத்தைக் கோட்டை விட்டுவிட, அந்தப் பணத்தை மிஸ்டர். பாட்டர் எடுத்து வைத்துக்கொள்கிறார். நிதி அழிவு, குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜார்ஜ், தன் வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக நம்பி ஒரு பாலத்தில் இருந்து குதிக்கத் தயாராகிறார். குடும்பத்தினர்,  நண்பர்களின் வேண்டுதல்கள் விண்ணை அடைந்தவுடன், அவரைக் காப்பாற்ற பூமிக்கு தேவலோகதேவதை ஒருவர் அனுப்பப்படுகிறார்.

ஜார்ஜ் பிறந்திருக்காவிட்டால் பெட்ஃபோர்ட் ஃபால்ஸில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை தேவலோகதேவதை ஜார்ஜுக்குக் காட்டுகிறார். இந்த மாற்று யதார்த்தத்தில், ஜார்ஜின் தம்பி ஹாரி குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிடுகிறான், ஏனெனில் அவனைக் காப்பாற்ற ஜார்ஜ் அங்கு இல்லை. இதன் விளைவாக, போரில் ஒரு கப்பலைக் காப்பாற்றுவதற்காக ஹாரி அங்கில்லை. இப்படியாக அடுத்தடுத்துக் காட்சிகள் விரிகின்றன.

பெயர்கள் பெரும்பாலும் அடையாளம், வரலாறு, பண்பாடு முதலானவற்றைத் தாங்கி நிற்கின்றன. பெயரிடும் செயல் ஒரு படைப்புச் செயல் ஆகும். கொடுக்கப்படும் பெயரானது, அதன் வளர்ச்சி, மதிப்பு, எதிர்கால வெற்றியைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். ’மேன்மை அணி’, ‘வட அமெரிக்க வாகை சூடி’, ‘கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ’ எனப் பெயர்கள் சூட்டியதிலிருந்து, இயக்கமாக மாறியது வரையிலும் நாம் மனமார்ந்து கொள்ள நிறைய இருக்கின்றன.

பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்வடையத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும், பிறந்திருப்பதற்கான காரணங்கள் ஆயிரமாயிரம் உண்டு. நீங்கள் இதைச் செய்திராவிட்டால், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கக் கூடும். தங்கள் பிறப்புக்குப் பயன் உண்டு, விழுமியம் உண்டு, நோக்கம் உண்டு. தன்னார்வலரைப் பற்றி எழுதுகின்றோம். யாரோ ஒருவர் அதனை அவரின் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு, அப்பாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்த உள்ளம் மகிழ்ந்து ஆற்றுப்படுகின்றது. அந்த உவப்பினூடாக அவர் நல்லதாக இன்னொன்றைச் செய்வார். உலகு இயங்குவது இப்படித்தான்!

மேற்கூறப்பட்ட திரைப்படமேவும் ஓர் எடுத்துக்காட்டு. 1946ஆம் ஆண்டு வெளியாகி, தயாரிப்புத் தொகையான 6 மில்லியன் டாலர்களில் பாதி அளவுக்குக்கூட வருவாய் பெறவில்லை. தோல்விப்படமாக அமைந்தது. நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களைத் தயாரிக்க முடியவில்லை. 1974ஆம் ஆண்டு காப்பீட்டு உரிமை காலாவதி ஆகிவிடுகின்றது. மனித அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகின்றது. படைப்பின் விழுமியமும் நாளுக்கு நாள் உலகுக்குப் புலப்படத் துவங்குகின்றது. அந்த நேரத்தில் அது தோல்விப்படம். இன்றைக்கு அது அமெரிக்காவின் தலையாய செவ்வியல்ப்படம். செய்வது நன்றெனின் வென்றேதீரும் என்றாவது!

(தொடரும்)

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.
 

11/27/2025

காயத்ரி சண்முகசுந்தரம்

காயத்ரி சண்முகசுந்தரம்

பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் இருந்தபோது, அவர்கள் இத்தனை மணிநேரம் தன்னார்வத் தொண்டு புரிய வேண்டுமென இருந்தது. அவர்கள் பல பணிகளும் செய்பவர்கள்தாம். இருந்தாலும், ஏனோ அருகிலுள்ள உணவு வழங்கல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் (secondharvestmetrolina) பணிபுரிய ஆசைப்பட்டனர். குழந்தைகளுடன் பெரியவர் எவரேனும் ஒருவர் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை. நாங்கள் குடும்பமாகவே சென்றிருந்தோம். பின்னர், கிட்டத்தட்ட அது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. உள்ளே சென்று விட்டால் வேலை முசுவாக இருக்கும். இரண்டரை மணி நேரம்தான். ஆனால் எல்லாரும் இணைந்து செய்யும் போது, வேறெந்த சிந்தனைக்கும் இடமிராது. வீடு திரும்புகையில், யாதொரு தொடுப்புகளுமற்றுப் பணிகளின் நிமித்தம் ஆழ்ந்து கிடந்தபின் கிடைக்கப் பெற்ற மனவிடுதலையானது நம்மைக் களிப்புணர்வுக்கு(Euphoria) இட்டுச் சென்றிருக்கும். அத்துடன், பலவிதமான மக்களைக் காண்பதும் அவர்களுடன் பேசுவதும் புதிய அகத்திறப்பைக் கொடுப்பதாக இருந்தது,

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பங்கள் ஒன்றாக பொருண்மை மிக்கதாய் நேரத்தைச் செலவிடுவது சவாலானது.தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே நோக்கத்துடன் கலந்துகொள்ளும் தரமான நேரத்தை, கூட்டுத்தன்னார்வத் தொண்டு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

தன்னார்வத் தொண்டு செயல்பாடுகள் மூலம், பெரியவர்களும் குழந்தைகளும் புதிய சவால்களைச் சந்தித்து, குழுப்பணி, தலைமைப் பண்பு, இடர்தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. குடும்பமாகச் சேர்ந்து ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும்போது, அது அனைவருக்கும் ஓர் ஆழமான மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது. குடும்பத்தை அவர்களின் சுற்றுப்புறம், உள்ளூர் சமூகத்துடன் இணைக்க உதவுகிறது. புதிய நபர்களைச் சந்திப்பதன் மூலம் சமுதாயத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது.

பண்பாட்டு ரீதியாக முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, இத்தகு பணிகள் உதவுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு உதவியவர்களென இவர்களைச் சொல்லலாம்.  விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் ஆர்வலர்களாக இருந்து விட்டுத் தற்போது, சார்லட் தமிழ்ச்சங்க ஆர்வலர்களாக இருக்கின்றனர் திருமிகு. காயத்ரி சண்முகசுந்தரம் குடும்பத்தினர். திருமிகு காயத்ரி அவர்கள், நாடகப் போட்டிகளின் நிர்வாகி. நாடகங்களுக்கான ஒலிக்கோப்புகளைப் பெற்று, தொகுத்து, அந்தந்த வரிசைப்படி வைத்து அரங்கேற்றுவது, போட்டியாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து ஏற்பாடுகளைச் செய்வதென தொடர்முழுதும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர்தம் இணையவர் அவர்கள் பாட்டுப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். புதல்வரோ இசைக்கருவிப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கென குடும்பமே உழைத்தமையென்பதெலாம், விழாவின் பன்மைத்துவம், இணக்கம், கூட்டுறவு போன்றவற்றையே எடுத்தியம்புகின்றன.

It’s the choice to see someone else’s need and decide that your time, your hands, and your heart can help lighten their load. Every act, no matter how small, creates a ripple of hope. And when many people choose compassion at once, those ripples become waves of real change.

கலைகள் பல, ஒரே களம்: வட அமெரிக்க வாகை சூடி

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

 

றிச்சேட் இருதயநாதன்

றிச்சேட் இருதயநாதன்

கட்டுரை எழுதுவது என்பது வெறும் தேர்வுக்காக மட்டும் அல்லாமல், சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி, மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க உதவும் ஒரு முக்கியமான கலை ஆகும். தமிழ்க் கட்டுரைகள், மூன்று பகுப்புகளைக் கொண்ட ஒரு நிலையான அமைப்பைப் பின்பற்றுகின்றன.  முன்னுரை, இது வாசகரின் கவனத்தை ஈர்க்கும் திறவுகோல். கருப்பொருள், இங்கேதான் காரண ஏரணங்களும், தகவல்களும் எடுத்துக்காட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் அடுக்கடுக்காகவும் வைக்கப்படுகின்றன. முடிவுரை, இது கட்டுரையின் சுருக்கத்தினை தொகுத்துச் சொல்கின்றது அல்லது சொல்லப்பட்ட அனைத்தையும் சுருக்கமாக, வலுவாக முடிக்கும் பகுதி. தமிழ் மொழியில் கட்டுரைகள் எழுதுவதற்கான மரபு, இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களின் அமைப்பிலிருந்தே தோன்றியிருக்கலாம். அதாவது, ஒரு கருத்தைத் துவக்கி, விளக்கி, முடிக்கும்முறை, தொன்றுதொட்டு வருகிறது.

கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, கவனம் ஈர்க்கும் கட்டம், தேவைகளைக் கண்டறியும் கட்டம் , காட்சிப்படுத்தும் கட்டம், செயல் கட்டம்  போன்ற சிறப்பு நுட்பங்களானது ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களுக்குக் குழப்பமின்றி தெளிவாக எழுத உதவுகின்றது. 

கட்டுரை எழுதுவது என்பது ஒரு பொருள் பொதிந்த தலைப்பை எடுத்து, எளிமையாகவும், ஒழுங்காகவும், தெளிவாகவும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி வெளிப்படுத்தும் ஒரு கலை. மின்னசோட்டா தமிழ்ச்சங்கமானது தமிழ்மொழிக்கும் கலைக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் ஆழத்துக்கே சென்று பேணிவருகின்றது. கட்டுரைப் போட்டிகளுக்கு நடுவராக இருக்கச் சொல்லி சில பல கட்டுரைகளைக் கொடுத்தார்கள். தட்டச்சில் இருந்தன கட்டுரைகள் சிலவற்றைத் தவிர. செய்யறிவு மேலோங்கி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தகவல்களைத் திரட்டுவதென்பது அவ்வளவு பெரிய செயலன்று. ஆகவே கையால் எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரலானேன். ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட படைப்புகள், ஒரு சிறு அடித்தல் திருத்தலின்றி எழுதுகோலால் எழுதப்பட்டிருந்தன அவை. வியப்புற்றேன். புலம்பெயர் மண்ணில் தமிழைப் போற்றுகின்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்பது நற்செய்தி.

வட அமெரிக்க வாகை சூடியின் படைப்புத்தேனீ பிரிவில், கட்டுரைப் போட்டிகளின் செயல்தலைவர்தாம் திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்கள். போட்டிக்கான பதிவுகளை ஆய்ந்து முறைப்படுத்துதல், ஒவ்வொரு பகுப்புக்குமான தலைப்புகளைத் தெரிவு செய்து வடிவமைத்தல், முதற்கட்டக் கட்டுரைகளை நடுவர்களிடம் அளித்துத் தரவரிசைப்படுத்துதல், பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்தி கடைசிகட்டப் போட்டிக்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல், கடைசிகட்டப் போட்டிகளுக்கான வளமிக்க தலைப்புகளைக் கண்டறிதல், விழாவில் இறுதிகட்டப் பணிகளென ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்.  சோர்வுறாமல், ஊக்கமொழியுடனும் உடல்மொழியுடனும் பேசுவதன் மூலம் பங்கேற்பாளர்களை நிகழ்வோடு பிணைக்க வேண்டும். தமிழின்பாலும் அக்கறையுடன் இருத்தல் வேண்டும். சிற்சிறு பற்றியங்களிலும் கவனத்தைச் செலுத்துவதன் வாயிலாக முழுமையடைகின்றது எடுத்துக்கொண்ட செயல்.  திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

Focusing on the next generation means planting seeds of possibility in soil we may never walk upon ourselves. It calls us to lead with vision, compassion, and courage, knowing our choices today shape the world they inherit. When we invest in their growth, 𝐰𝐞 𝐢𝐧𝐯𝐞𝐬𝐭 𝐢𝐧 𝐚 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐝𝐞𝐟𝐢𝐧𝐞𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐲 𝐨𝐮𝐫 𝐥𝐢𝐦𝐢𝐭𝐬 𝐛𝐮𝐭 𝐛𝐲 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐩𝐨𝐭𝐞𝐧𝐭𝐢𝐚𝐥. Let us rise to the responsibility of empowering them to dream boldly and build wisely.

நீரார்ந்த உலகமிதில் நிலைத்திருக்கும் மொழிகளுள்ளே
சீரார்ந்த முதல்மொழியாம் சிறப்புநல் தமிழ்மொழியே!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.


 

11/26/2025

வித்யா சுரகண்டர்

 

வித்யா சுரகண்டர்

அமெரிக்காவில் தன்னார்வத் தொண்டு (Volunteering) ஒரு பிரிக்க முடியாத பண்பாட்டுப் பகுதியாக மாறியதற்கு, வரலாற்று, சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. துவக்ககால அமெரிக்காவில்,  ஊர்களும் குடியேற்றங்களும் வளர்ந்தபோது, மக்கள் நெருக்கமான சமூகங்களாக வாழத்தலைப்பட்டனர். அரசாங்கத்தின் உதவிகள் குறைவாக இருந்ததால், அண்டை வீட்டாரைச் சார்ந்து வாழ்வது அத்தியாவசியமாக இருந்தது. ஒருவருக்கொருவர் உதவ, மக்கள் குழுக்களாக இணைந்தனர். 1736-ஆம் ஆண்டில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பிலடெல்பியாவில் முதல் தன்னார்வத் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்கினார். இது, "பொது நன்மைக்காக" தனிநபர்கள் இணைந்து, ஒரு அமைப்பை உருவாக்குவதன் முதல் பெரிய எடுத்துக்காட்டாகும்.

1830-களில் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரெஞ்சு தத்துவஞானியான ’அலெக்சிஸ் டி டாக்வில்லே’ என்பவர் அமெரிக்கச் சமூகத்தை உற்று நோக்கினார். அவர், அமெரிக்கர்கள் எல்லாத் தேவைகளுக்காகவும்,  தேவாலயங்கள் கட்டுவது முதல் மருத்துவமனைகள் உருவாக்குவது வரை, தாங்களாகவே பல தன்னார்வ அமைப்புகளை அமைக்கும் அரிதான பழக்கத்தைக் கண்டு வியப்புற்றார். ”அமெரிக்கர்கள் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் வாயிலாகத் திருவிழாக்களை நடத்துகிறார்கள், கருத்தரங்குகளைத் தோற்றுவிக்கிறார்கள், புத்தகங்களைப் பரப்புகின்றனர்" என்று குறிப்பிட்டார். இதுதான் அமெரிக்காவில் இரண்டறக் கலந்த, ஒரு பண்பாடாகவே தன்னார்வத் தொண்டு ஆனதற்கான அடிப்படை.

உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பட்டப்படிப்பை நிறைவு செய்ய மாணவர்களுக்குக் குறிப்பிட்ட மணிநேரம் சமூகத் தொண்டு செய்வதை கட்டாயமாக்குகின்றன. இத்தகு பண்பாடானது, தலைமைப்பண்பு, தகவல் தொடர்பு, ஒரு குழுவில் பணிபுரியும் திறன் போன்றவற்றை வளர்க்கிறது. ஒரு நோக்கத்தில் ஈடுபடுவது மனம் முழுமை கொள்வதையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; மன அழுத்தத்தைக் குறைத்து நமக்காகப் பலர் இருக்கின்றனர் எனும் பாதுகாப்புணர்வையும் ஈட்டித் தருகின்றது.

எங்கள் வளவில் ஒரு பரபரப்பு. பலவாறான வினாக்கள். நிறைய பாதுகாப்பு அலுவலர்கள் அந்த வீட்டின் முன் குவிந்திருக்கின்றனர் என்பது செய்தி. ஒருவர், ’குடியேற்ற அலுவலர்களாக இருக்கக் கூடும்’. அடுத்தவர், ’துப்பாக்கிச்சூடு’ என நினைக்கின்றேன். அடுத்தவர், ‘உடல் சுகவீனம், ஏனென்றால் மருத்துவ வண்டி நிற்கின்றது’. இப்படிப் பலவும். ஒரு மணி நேரம் கடந்து, ஒருவர், ‘எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான். தற்கொலை’. அடுத்த விநாடியேவும் ஒருவர் பதிந்தார், Whatever the situation, we should respect their privacy. Still, we’re always ready to help in any way we can". அவ்வளவுதான், ஒட்டுமொத்த வாட்சாப் குரூப்பும் அதனை வழிமொழிந்தும், இன்னின்ன உதவிகள் செய்யலாம், யாராவது ஒருவர் மட்டும் ஒருங்கிணைப்புச் செய்யட்டுமெனச் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரரேவும் பொறுப்பேற்றுக் கொண்டு, உதவிப்பணிகளும் இடம் பெற்றன. இதே அந்த முதல்நபரின் கருத்து வேறாக இருந்திருந்தால்? என்ன, ஏது, எப்படி, எதற்காக என்றெல்லாம் திசைமாறிப் போயிருக்கக் கூடும்தானே? அப்படி மாறாமல் இருக்க, சட்டென அவர் உரைத்த கருத்துத்தான் அமெரிக்கப் பண்பாடு.

திருமிகு. வித்யா சுரகண்டர் அவர்கள் சிகாகோ தமிழ்ச்சங்கத்தில் தன்னார்வலராக இருந்தவர். மருத்துவப் பின்னணியைக் கொண்டவர். எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து தன்னார்வத் தொண்டு புரிவதில் ஆவல்கொண்டவர். தற்போது கேரொலைனா தமிழ்ச்சங்கப் பகுதியில் வசிப்பவர். பல்வேறு குழுக்களின் வாயிலாகப் பணிபுரிபவர். வட அமெரிக்க வாகை சூடியின் கலைத்தேனீ பிரிவில், இசை சார்ந்த போட்டிகளின் செயல்தலைவர். ஒவ்வொரு கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு, விழாவிலும் போட்டிகளை நடத்திக் கொடுத்ததோடு மட்டுமன்றி இதரப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இசை, நாட்டியம், மருத்துவம் முதலான துறைகளில் தாம் பெற்றிருக்கும் அனுபவத்தைச் சமூகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆவல் மிக்கவர்.

𝐕𝐢𝐝𝐲𝐚 𝐒𝐮𝐫𝐚𝐤𝐚𝐧𝐝𝐚 𝐍𝐚𝐭𝐚𝐫𝐚𝐣 𝐌𝐨𝐡𝐚𝐧𝐚𝐦 𝐫𝐞𝐦𝐢𝐧𝐝𝐬 𝐮𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐫𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐨𝐮𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐩𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 


லசாங்கிகா சுகுமாறன்

லசாங்கிகா சுகுமாறன்

இளம்தலைவர்கள் புதுமையான, துணிச்சலான சிந்தனைகளைக் கொண்டு வருவார்கள். சமுதாயத்தின் சிக்கல்களுக்கு, பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தீர்வுகளைக் காண்பார்கள்.

மாற்றத்தை உருவாக்குபவர்கள்: அவர்கள் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தங்கள் சமூகத்தில் உள்ள அநீதிகள், குறைகள் அல்லது சவால்களைக் கண்டு, உடனடியாகச் செயல்பட்டு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கத் துணிகிறார்கள்.

தொழில்நுட்பப் பயன்பாடு: சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் சமூக ஊடகங்கள், நவீன தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஊக்கமளிப்பவர்கள்: இவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, வெற்றியின் மூலம், சக இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் கூட முன்மாதிரியாக அமைந்து, சமூகப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டுகிறார்கள்.

பாரபட்சமற்ற அணுகுமுறை: இவர்கள் பெரும்பாலும், பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இணைப்புப்பாலம்: முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் அமெரிக்காவில் பிறந்த, வளர்ந்துவரும் இரண்டாம் , மூன்றாம் தலைமுறையினருக்கும் இடையே பண்பாட்டு ரீதியாக, அணுகும் விதத்தில் பெருத்த இடைவெளி உள்ளது. அதனைச் சரிக்கட்டும் ஆற்றலாய் இளம்தலைவர்கள் விளங்குகின்றார்கள்.

குறிஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவர், முன்னோடிகள் வார்த்தெடுப்புத் திட்டத்தின் தலைவர், தமிழ்ப்பள்ளி ஆசிரியர், நிர்வாகி, நாட்டியம், இசையில் தேர்ந்த கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்தாம் திருமிகு லசாங்கிகா சுகுமாறன் அவர்கள். கொலராடோ மாகாணத்திலிருந்து, மூன்று நாள்களும் தன்னார்வப்பணி செய்வதற்கென்றே வந்தவர். பகலெல்லாம் வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் இளையோரை ஆற்றுப்படுத்துகின்ற, நெறியூட்டுகின்ற, நிகழ்ச்சிகளின் நிர்வாகியாகப் பணியாற்றி, முன்னோடியாகச் செயலாற்றியவர். மாலையில் உணவுக்குழுவின் விருந்தோம்புநராகப் பணி. இளம்செயல்த் தலைவர் லசாங்கிகா அவர்களின் பங்களிப்பு அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்துக்குத் தொடர்ந்து இடம் பெற்றிட வாழ்த்துகள்.

𝐌𝐬 𝐋𝐚𝐬𝐚𝐧𝐠𝐢𝐤𝐚 𝐒𝐮𝐤𝐮𝐦𝐚𝐫𝐚𝐧 is a shining example of youth leadership fueled by passion, vision, and purpose. She inspires others through her dedication to uplifting her community and her courage to lead with integrity. Her journey reminds young people everywhere that 𝐭𝐡𝐞𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 𝐦𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

11/25/2025

அஷ்ரபி ஹனீபா அஹ்மது

அஷ்ரபி ஹனீபா அஹ்மது

தூரிகைப் போராளி ஓவியர் மருது வீட்டிற்கு வருகைதரும் பேறு கிட்டியது. கதைவயப்பட்டுக் கிடந்தோம். தமிழ்நாட்டில் தற்போதுதான் ஓவியத்தைப் புசிக்க மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைப்பட்டிருக்கின்றார்களெனச் சொன்னார். ஆமாம், எப்படியெல்லாம் ஓவியத்தை உள்வாங்கி உணர்வதென நாமும் பலவற்றையும் தின்னத்துவங்கினோம்.

ஓவியத்தைப் புரிந்து கொள்வதென்பது ஒரு பல அடுக்குச் செயல்முறையாகும். இது வெறுமனே, அதைப் பார்ப்பது மட்டுமல்ல; அதன் சூழல், நுட்பம், உள்ளடக்கம், அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம், கண்டடையும் காலம் முதலானவற்றை உணர்ந்து உணர்ந்து நம்முள் உருக்கொள்ளும் பெருங்காதை என்பதேயாகும். நுண்ணுணர்வுகளின் தொகுப்பு.

கொசுவர்த்தி. யார்க் பல்கலைக்கழகத்தில் மாணவனாயிருந்த காலம். ரொறண்ரோ நகரமே ஒரு மாதகாலம் பதைபதைத்துக் கிடந்தது. மருத்துவர் ஒருவரின் மனைவியைக் காணவில்லை. அவர் எங்கே? துப்புதுலக்கலில் தேக்கமா? பரபரப்பு. பால்வாடியிலிருந்து துவக்கப்பள்ளி முடியும் வரையிலான மாணவர்கள் வரைந்த எல்லா ஓவியங்களையும் தம்முன்னால் கொட்டு வந்து கொட்டச் சொல்கின்றார் உயர் புலனாய்வு அலுவலர். பகுத்துப் பகுத்துச் சிலவற்றை ஆராயத்தலைப்படுகின்றார். அந்த ஒரு ஓவியம், நான்கு வயதுக்குழந்தை தீட்டியது. 

குழந்தையிடம் அந்த ஓவியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார். அப்பா இல்லாத குழந்தை. வேலைக்குச் செல்லும் அம்மா, துரிதகதியில் குழந்தையை வாரிப்போட்டுக் கொண்டு போய் பால்வாடியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுகின்றார். செல்லும் வழியில் கண்களால் கண்ட காட்சியை வண்ணக்கோல்களால் தீட்டியிருக்கின்றது. குளக்கரையின் மீது ஏறி நின்று ஒரு பொட்டலத்தை ஏரியில் வீசிக்கொண்டிருக்கின்றார் ஒருவர். அவ்வளவுதான்! ஏரி தூர்வாரப்படுகின்றது. உள்ளே பல பொட்டலங்கள். நாளொரு பொட்டலம் வந்து விழுந்திருக்கின்றது. குழந்தை ஒன்றுக்கு மேற்பட்ட நாளில் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கின்றது. மருத்துவர் அகப்பட்டுக் கொண்டார்.

ஓவியம் உங்களுக்கு என்ன உணர்வை ஏற்படுத்துகிறது? அமைதி, மகிழ்ச்சி, குழப்பம், அல்லது துக்கம்? ஓவியத்திலுள்ள ஏதேனும் ஒன்று வாழ்க்கையில் உள்ள ஒரு பற்றியத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறதா? ஓவியத்திலுள்ள பொருள்கள் அல்லது வண்ணங்கள் எதைக் குறிக்கக்கூடும்? எடுத்துக்காட்டாக எரியும் மெழுகுவர்த்தியின் உயரம், துவக்ககாலம், பாதி எரிந்தநிலை என்பதாக இருக்கும் போது இடைக்காலம், தரைதொடும் நிலையில் இருப்பின் கடைசிக்காலமென்பதான குறியீடாக இருக்கலாம்.

வட அமெரிக்க வாகை சூடியின் படைப்புத்தேனீயில் உள்ள ஓவியப்போட்டிதாம் அதிகமான போட்டியாளர்களைக் கொண்டது. அந்த ஓவியங்களையெல்லாம் தீட்டச் செய்து கலையுணர்வில் வேள்வியை நடாத்திக் கொடுத்தவர்தாம் அஷ்ரபி ஹனீபா அஹ்மது அவர்கள். படைப்பாளியே ஒருவர் நமக்குக் கிடைக்கப் பெற்று, படபடப்புகளேதுமின்றி, விழுமியமீட்டுக் கொடுத்தமை சிறப்பு. சிறார் கதைகளைத் தீட்டுபவர், ஓவியக்கலையில் திளைப்பவர், தமிழார்வலர், ‘பாறை வீடு’ எனும் படப்புத்தகத்தைப் படைத்திருக்கின்றார். ‘சூடி’ எனும் குழந்தைதாம் பாறை வீட்டின் நாயகி. இப்படியான நூல்களுக்கு நாம் இடமளித்துப் போற்ற வேண்டும்.

We enjoyed your contribution, Ms. Ashrafi Hanifa Ahmed. As an author and a true painting fanatic, your involvement and help in conducting the painting competition brought creativity, passion, and inspiration to the event. 

வண்ணங்களைக் குழைத்து எண்ணங்களைப் படைப்பாக்கும் ஓவியப்போட்டி, குழந்தைகளின் திறத்துக்கு அழகானதொரு தளத்தை கொடுக்கின்றது.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.

 

திவ்யா வினோத்

 

திவ்யா வினோத்

பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ச்சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்ப்பள்ளி ஆசிரியரென தமிழ்ச்சமூகப் பணிகள் பலவும் ஆற்றி வருபவர். தற்போது அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர். வட அமெரிக்க வாகை சூடியின் எல்லா நடனப் போட்டிகளுக்கான முன்னோடியாக இருந்து செயலாற்றியவர்தாம் திருமிகு. திவ்யா வினோத் அவர்கள்.

யார் வேண்டுமானாலும் நடனப்போட்டிகளை முன்னின்று நடத்த முடியுமாவென்றால், நடத்த முடியும். ஆனால், சிறப்பாக நடத்த முடியுமாயென்றால் முடியாது. இன்றைய சூழலில், ஆட்டம், நடனம் என்பது எல்லா வீடுகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றது. பிள்ளைகள், நுட்பங்கள், நளினங்களை நுணுக்கல் பார்வையில் நோக்குகின்றனர். டிக் டாக், இன்ஸ்டா முதலானவற்றின் வீச்சு நீக்கமற எங்கும் வியாபித்திருக்கின்றது. ஏனோதானோயென கையாள்வோமெனில், நம்மைப் பார்த்து சிரிப்பாய்ச் சிரித்துவிடுவர். தற்போதும், ஏககேலியும் கிண்டலுமாய்த்தான் அவர்கள் முதல்தலைமுறையினரைப் பார்க்கின்றனர் என்பது வேறுகதை. ஏதோ நம்மால் இயன்றவரை, முயலவேண்டும்தானே?

நடனப்போட்டிகளின் முன்னோடிகளுக்கான தேவைகள் என்னென்ன?

  • கவனத்துடன் பார்க்கும் திறன் (Observational Skills): நடனக் கலைஞர்களின் நுட்பம், நடிப்பு, இசைக்கு ஏற்ற அசைவுகள் மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை மிக நுணுக்கமாகக் கவனிக்கும் ஆற்றல்.
  • நடன நுட்பங்களில் ஆழமான அறிவு: பல்வேறு நடன பாணிகள் (கிளாசிக்கல், சமகாலம், ஹிப்-ஹாப், நாட்டுப்புற நடனம் போன்றவை) பற்றிய தொழில்நுட்ப அம்சங்கள், அசைவுகள், மற்றும் தரநிலைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
  • நடுநிலைமை, பக்கச்சாய்வின்மை(Impartiality): அனைத்துப் போட்டியாளர்களையும் வயது, பாணி அல்லது வேறு எந்தத் தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் பாரபட்சமின்றி சமமாக மதிப்பிடுதல்.
  • மதிப்பெண் இடுகை, கருத்துத் தெரிவிக்கும் திறன்: நியாயமான மற்றும் நிலையான மதிப்பெண் முறையைப் (scoring system) பயன்படுத்தி, பொருத்தமான வயது, விருது நிலைகளுக்கு ஏற்ப துல்லியமாக மதிப்பிட வேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் (Constructive Communication): போட்டியாளர்களின் வெற்றிகள், குறைகளை ஊக்கமளிக்கும், நேர்மறையானதும் பயனுள்ளதுமான முறையில் எடுத்துச் சொல்லும் திறன்.

இத்தனையையும், மற்றவர்களுக்கு அக்கறையும் அணுசரணையுமாக எடுத்துச் சொல்லி, போட்டிகளை நடத்துபவராகவும் கொதிநிலைக்கு ஆட்படாதவராயும் இருத்தல் வேண்டும். திவ்யா அவர்களைப் போன்றவர்கள், வட அமெரிக்க வாகை சூடியைத் தாங்கிப் பிடிக்கும் வேரான விழுதுகள்.

Divya’s convincing capacity shines through every challenge. She turned competitions into moments of growth, guided by love and compassion. 𝐇𝐞𝐫 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐞𝐬 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐭𝐨 𝐫𝐢𝐬𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐠𝐫𝐚𝐜𝐞, 𝐧𝐨𝐭 𝐩𝐫𝐞𝐬𝐬𝐮𝐫𝐞.

உள்ளத்திலிருந்து தோன்றும் ஒவ்வொரு வெளிச்சமும் கலையே!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

11/24/2025

பத்மரேகா ஜெய்பிரகாஷ்

பத்மரேகா ஜெய்பிரகாஷ்

வரலாற்றுத் தகவல்கள், கடந்த காலத்தில் மக்கள் செய்த வெற்றிகள், தவறுகளை நமக்குக் காட்டுகின்றன. ஒரு சமுதாயம், அரசு எவ்வாறு செழித்தது அல்லது வீழ்ச்சியடைந்தது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாம் தற்போதைய சவால்களைச் சமாளிக்கவும், எதிர்காலத்தில் சிறப்பாக முடிவுகளை எடுக்கவும் முடியும். பல்வேறு குழுக்கள், நாடுகளின் வரலாற்று அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வது, பிறரின் கண்ணோட்டங்களையும் உணர்வுகளையும் மதிக்க உதவுகிறது. இது சகிப்புத்தன்மை, நல்லுறவை மேம்படுத்துகிறது.

வரலாற்றுத் தகவல்கள் ஒரு கண்ணாடியைப் போன்றவை. அவை நாம் யார், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எங்கு செல்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. மூல ஆவணங்கள் பாதுகாக்கப்படும்போது, வரலாற்றை தவறாகப் புரிந்துகொள்வது அல்லது திரித்து எழுதுவது தடுக்கப்படுகிறது. அவை உண்மையை நிலைநாட்ட உதவுகின்றன.

வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் நமது கடந்த காலத்தைத் துல்லியமாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா சிறப்பான விழா. கேரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான முனைவர் பாரதி பாண்டி அவர்கள் சொல்லியதிலிருந்து, “தலைவரே, இன்னொரு தடவை ஃபெட்னால இந்தமாரி விழா நடக்குமானு தெரியலை”. எல்லாமும் முறியடிப்பதற்காகவே என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். இருந்தாலும், அவர் சொல்வதிலும் விழுமியம் இருக்கின்றது, ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். அத்தகைய விழாவினை, ஒலிப்பதிவு வாயிலாக, மிக நேர்த்தியாக, இடைக்கிடை ஒலிக்கோர்ப்புகளையும் இணைத்து, ஆவணப்படுத்தி, பேரவை வானொலியாக இடம் பெறச் செய்துள்ளனர் ஊடகக்குழுத் தலைவர் திருமிகுபத்மரேகா, துணைத்தலைவர்கள் திருமிகு. ஷீலா ரமணன்திருமிகு. சுமிதா கேசவன் உள்ளிட்ட குழுவினர். எனக்கு என்ன கேள்வியென்றால், அதற்குப் பின்னாலான உழைப்பு, அதன் மதிப்பு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு திரைப்படத்தில், ஒரு நெல்மணியில் புனைந்திருக்கும் சித்திரத்தைக் காண்பிக்க, ”இதென்ன அரிசியா?”, வாங்கி, டபக்கென வாயில் போட்டு மென்று தின்றுவிடுவான். இஃகிஃகி. Archive it on YouTube, it ought to endure as a permanent documentary.

கலைத்தேனீக்குழுத் தலைவர் இராஜேஷ், துள்ளல் மனம் கொண்டவர். அவர் சொல்லியதிலிருந்து, ”அண்ணா, டென்னசீலிருந்துனா, ரேகா இருக்காங்ல. அவங்க ரொம்ப ஹெல்ப்ஃபுல். கலைத்தேனீக்குக் கீழ நிறைய வருதுல்லங்ணா. எல்லாம் ஒரே ஆள்னா பார்க்கவே முடியாது. ரேகாவும் ஒரு பிரிவைப் பார்த்துகிட்டாங்க”.

𝐄𝐯𝐞𝐫𝐲 𝐡𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐡𝐨𝐥𝐝 𝐚𝐧𝐝 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐛𝐮𝐫𝐝𝐞𝐧 𝐰𝐞 𝐬𝐡𝐚𝐫𝐞 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐞𝐩 𝐭𝐨𝐰𝐚𝐫𝐝 𝐚 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭𝐞𝐫, 𝐤𝐢𝐧𝐝𝐞𝐫 𝐰𝐨𝐫𝐥𝐝. 𝐈𝐧 𝐠𝐢𝐯𝐢𝐧𝐠 𝐡𝐞𝐥𝐩 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐜𝐞𝐢𝐯𝐢𝐧𝐠 𝐢𝐭, 𝐰𝐞 𝐝𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐨𝐟 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫𝐧𝐞𝐬𝐬.

தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பொறுப்புக் கண்டிருக்கின்றீர்கள்! சிறந்திட வாழ்த்துகள்!!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

 

வாசுதேவன் வரதராஜன்

வாசுதேவன் வரதராஜன்

போட்டிகள் நடத்தும் போதும் சரி, அல்லது, மக்கள் தொடர்பு வேலைகள் அது எதுவாக இருந்தாலும் சரி; எல்லாரும் செய்கின்றோம் நல்ல நோக்கத்துடன்தான். ஆனால், திறம்மிக்க வேலைகள், நயம்மிக்க வேலைகள் எப்பொழுது வெளிப்படுகின்றன? அது எண்ணுவது அல்ல. ஒவ்வொன்றையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவருதலாக வேலைகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கு தரம் மிளிர்ந்தே தீரும்.

கணக்குப் பராமரிப்பில் பேரவை பொருளாளர் வள்ளிக்கண்ணன் ஆவணமயமாக்கலைச் சிறப்பாக நிறுவிவருகின்றார். பெரும்பகுப்பு. அப்படியான பகுப்புகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பகுப்பு. பகுப்புக்குள் சில பல பிரிவுகள். பிரிவுகளுக்குள் சில பல பேருறைகள். ஒவ்வொரு பேருறைக்குள்ளும் தனி உறைகள்(folders), உறைகளுக்குள் ஆவணங்கள். இது பரிவர்த்தனைகளை, அதாவது விழுமுதல், விற்பனை, கொள்முதல், பணம் செலுத்துதல், பெறுதல், பற்று, வரவு, செலவு, இருப்பு, இலாபநட்டம் போன்றவற்றை ஒரு முறையான வகையில் பதிவு செய்யும் கலையாகும். இப்படிச் செய்யும் போது, மொத்தமாக எண்ணுதல் என்பதல்லாமல், ஒவ்வொன்றையும் தவறவிடாமல் எண்ணுதல் வாய்க்கப் பெறும். அதையொத்ததுதான் வாசுதேவன் அவர்களது வேலைப்பாடுகளும்.

ஐக்கிய ராச்சியத்தில்(UK) உள்ள வட தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பு, மாணவர்களுக்கான தொடர் போட்டிகளை நடத்தினர். அமெரிக்காவில் இருந்து ஒரு நடுவர் இருந்தே ஆக வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதால், நானும் இசைந்து தொடர்ந்து வாராவாரம் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன். போட்டிகள் சிறப்பாக நடந்தன. ஐக்கிய ராச்சியம் குறித்த வாழ்வியலைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. ஆனாலும் பணிச்சுமையின் தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில்தான், திரு வாசுதேவன் வரதராஜன் அவர்கள், டெலாவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிகளுக்கு நடுவராக இருக்கச்சொல்லி, தரவுகளை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார். தரவுகளில், பெயர் நீக்கம் செய்து, முறையாகப் பெயரிட்டு, போட்டிகளின் தன்மை, கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் எனக்குறிப்பிட்டுக் கூடுதலாக நுண்ணிய பற்றியங்களையும் கொடுத்திருந்தார். இவரை நான் முன் பின் அறிந்திலன். இருந்தாலும் கூட, பக்கச்சாய்வுகள், விருப்பு வெறுப்புகள், பிழைகள் இடம் பெறக்கூடாது என்பதில் அவர் காட்டியிருந்த தன்முனைப்பின் நிமித்தம், அவர்மீது ஒரு மதிப்பும் மரியாதையும் அதன்போக்கில் நமக்குள் இடம் பெற்றது.

அதிகார மையங்களும் அரசியல் மையங்களும் சாதி மேட்டிமைகளும் தற்காலிகமானவை. அவை அப்போதைக்குத் தன் வலிமையைக் காண்பித்து, வெற்றி கொண்டுவிட்டதான கூச்சலை இட்டுச் செல்லும். நேர்த்தியான வேலைகளைச் செய்கின்ற தன்னார்வலர் எவராயினும், அவருக்கான சிறப்பும் மதிப்பும் நிரந்தரமானவை. படைப்புத்தேனீயிலும் இடம் பெற்று, வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்குப் பணியாற்றி உள்ளீர்கள். தமிழ்ச்சங்கத் தலைவராகவும் பொறுப்பினைப் பெற்றிருக்கின்றீர்கள். அதே ஒழுங்கோடும் முறையோடும் தங்கள் பணி சிறக்க வேண்டும்.

Unbiased accountability is the bedrock of trust; it ensures that principles and performance, not personal relationships, determine the outcome. 𝐈𝐭’𝐬 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐭𝐨 𝐟𝐚𝐜𝐞 𝐟𝐚𝐜𝐭𝐬 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐟𝐞𝐚𝐫 𝐨𝐫 𝐟𝐚𝐯𝐨𝐫, making improvement possible for everyone involved.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.