11/27/2025

காயத்ரி சண்முகசுந்தரம்

காயத்ரி சண்முகசுந்தரம்

பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் இருந்தபோது, அவர்கள் இத்தனை மணிநேரம் தன்னார்வத் தொண்டு புரிய வேண்டுமென இருந்தது. அவர்கள் பல பணிகளும் செய்பவர்கள்தாம். இருந்தாலும், ஏனோ அருகிலுள்ள உணவு வழங்கல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் (secondharvestmetrolina) பணிபுரிய ஆசைப்பட்டனர். குழந்தைகளுடன் பெரியவர் எவரேனும் ஒருவர் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை. நாங்கள் குடும்பமாகவே சென்றிருந்தோம். பின்னர், கிட்டத்தட்ட அது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. உள்ளே சென்று விட்டால் வேலை முசுவாக இருக்கும். இரண்டரை மணி நேரம்தான். ஆனால் எல்லாரும் இணைந்து செய்யும் போது, வேறெந்த சிந்தனைக்கும் இடமிராது. வீடு திரும்புகையில், யாதொரு தொடுப்புகளுமற்றுப் பணிகளின் நிமித்தம் ஆழ்ந்து கிடந்தபின் கிடைக்கப் பெற்ற மனவிடுதலையானது நம்மைக் களிப்புணர்வுக்கு(Euphoria) இட்டுச் சென்றிருக்கும். அத்துடன், பலவிதமான மக்களைக் காண்பதும் அவர்களுடன் பேசுவதும் புதிய அகத்திறப்பைக் கொடுப்பதாக இருந்தது,

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பங்கள் ஒன்றாக பொருண்மை மிக்கதாய் நேரத்தைச் செலவிடுவது சவாலானது.தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே நோக்கத்துடன் கலந்துகொள்ளும் தரமான நேரத்தை, கூட்டுத்தன்னார்வத் தொண்டு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

தன்னார்வத் தொண்டு செயல்பாடுகள் மூலம், பெரியவர்களும் குழந்தைகளும் புதிய சவால்களைச் சந்தித்து, குழுப்பணி, தலைமைப் பண்பு, இடர்தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. குடும்பமாகச் சேர்ந்து ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும்போது, அது அனைவருக்கும் ஓர் ஆழமான மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது. குடும்பத்தை அவர்களின் சுற்றுப்புறம், உள்ளூர் சமூகத்துடன் இணைக்க உதவுகிறது. புதிய நபர்களைச் சந்திப்பதன் மூலம் சமுதாயத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது.

பண்பாட்டு ரீதியாக முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, இத்தகு பணிகள் உதவுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு உதவியவர்களென இவர்களைச் சொல்லலாம்.  விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் ஆர்வலர்களாக இருந்து விட்டுத் தற்போது, சார்லட் தமிழ்ச்சங்க ஆர்வலர்களாக இருக்கின்றனர் திருமிகு. காயத்ரி சண்முகசுந்தரம் குடும்பத்தினர். திருமிகு காயத்ரி அவர்கள், நாடகப் போட்டிகளின் நிர்வாகி. நாடகங்களுக்கான ஒலிக்கோப்புகளைப் பெற்று, தொகுத்து, அந்தந்த வரிசைப்படி வைத்து அரங்கேற்றுவது, போட்டியாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து ஏற்பாடுகளைச் செய்வதென தொடர்முழுதும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர்தம் இணையவர் அவர்கள் பாட்டுப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். புதல்வரோ இசைக்கருவிப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கென குடும்பமே உழைத்தமையென்பதெலாம், விழாவின் பன்மைத்துவம், இணக்கம், கூட்டுறவு போன்றவற்றையே எடுத்தியம்புகின்றன.

It’s the choice to see someone else’s need and decide that your time, your hands, and your heart can help lighten their load. Every act, no matter how small, creates a ripple of hope. And when many people choose compassion at once, those ripples become waves of real change.

கலைகள் பல, ஒரே களம்: வட அமெரிக்க வாகை சூடி

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

 

No comments: