7/11/2024

பெருங்கூடம்

 

2024 பேரவை விழாவின் முதன்மை அரங்கம் கிட்டத்தட்ட 2660 பேர் அமரக்கூடியதென மாநாட்டு அரங்கு ஆவணம் சொல்கின்றது. நான் தனிப்பட்ட முறையில் கவனித்த வரையிலும், முதல்நாள் மரபுக்கலை நிகழ்ச்சிகளின் போது, இரவு 9 மணியளவில் தோராயமாக 1200 பேரும், இரண்டாம் நாள் மெல்லிசையின் போது தோராயமாக 2200 பேரும் இருந்திருக்கலாமென்பது கணிப்பு. இவையிரண்டு தவிர, பகற்பொழுதில் இடையில் எதற்கோ அந்தப்பக்கம் சென்றிருந்த போது, மேடையில் ஏதோ இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அது என்னவென்றே கருதாமல் ஒரு 25, 25 பேர் உள்ளே இருந்தனர்.

தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான வாட்சாப் குரூப்பில் இடம்பெற்ற உரையாடலின்படிக்கு, தமிழிசை நிகழ்ச்சியின் போது 60-80, கவியரங்கத்தின் போது 80-100, பட்டிமன்றத்தின் போது 300 பேரும் பார்வையாளர்களாக இருந்திருக்கலாம்.

நம்மிடம் பேசிய தமிழ்நாட்டு விருந்திநர் சொன்னது, எனக்கு தொழில்முனைவோர் மாநாட்டின் போது வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து, வெறும் பத்தே பேர் இருக்க முதன்மை அரங்கில் பேசவைத்துவிட்டனரென அகங்கலாய்த்துக் கொண்டார். சரி, ஏன் இந்த நிலை. நம் கருத்துகள் கீழே வருமாறு:

1. விமானநிலைய முனையம் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அதையொத்த வளாகம்தான் இது. அதை நினைக்கும் போதேவும் பிரமாண்டமாக இருக்கின்றது. ஒருகோடியிலிருந்து மறுகோடிக்குச் செல்லவேண்டுமென நினைத்தாலே அலுப்புத் தோன்றும்.  உளநிலை முதற்காரணம்.

2. சாப்பாட்டுக்கு பேருந்தில் பிறிதொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் தளத்திலிருந்து வெளிவாயிலுக்கு சும்மா வந்தாலே சற்று தொலைவு நடந்துதான் வந்தாக வேண்டும். வந்ததும் வரிசையில் நிற்க வேண்டும். வாய்ப்புக் கிட்டியதும் பேருந்தில் ஏற வேண்டும். இடம் சென்று சேர்ந்ததும் இறங்கி வரிசையில் நிற்க வேண்டும். வெயில். உணவுக்கூடம், சிற்சிறு கூடங்கள். கதவுக்கு வெளியில் வரிசையாக நிற்பதற்கு மாறாக உள்ளேயே நிற்க வேண்டும். இப்படி ஒருவேளைச் சாப்பாட்டுக்கே சராசரி 2 மணி நேரம் செலவிட வேண்டும்.

3. நிறைய இணையமர்வுகள். அவற்றுக்கும், ஆள்பிடிப்பு வேலைகளெல்லாம் கூட நடந்தன. ஆனால் சிலவற்றுக்கு இயல்பாகவே நல்ல கூட்டம். அதாவது ஓரிரு கூட்டங்களுக்கு 200 பேர் வரையிலும். இஃகிஃகி, அதிகாரமையத்தின் ஆசிபெற்ற விருந்திநர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளப்பட்டதும் நடந்தது.

4. எந்த அரங்கிலும் நெடுநேரம் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது. உடல் சோர்ந்துவிடும். காரணம், இருக்கைகள் அப்படி. கைதாங்குச்சட்டங்கள் இல்லாத குறுகிய இருக்கைகள். சமதள இருக்கைகள். இப்படிப் பலகாரணங்கள்.

5. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறாதது. முதன்மை அரங்கின் நிகழ்ச்சிகளை வணிகவாளாகத்தில், இரண்டாவது, முதற்தளத்தில் நேரலை ஒளிபரப்புச் செய்திருக்கலாம். நான் அவ்வப்போது பேசுபுக்கில் பார்த்துக் கொண்டேன். அதுவும் சில நேரம் இருக்கும். பலநேரங்களில் இருக்காது.

2018 துவக்கம், பிரமாண்டம், மில்லியன் டாலர் விழாக்கள், அது, இதுவென ஊதி ஊதிப் பெருக்கி ஓய்த்துவிட்டதாகத்தான் நான் கருதுகின்றேன். 12 ஆண்டுகட்குப் பிறகு கலந்துகொண்டவன் நான். சாமான்யவர்க்கத்துக்கும் அதிகார மேல்தட்டு வர்க்கத்துக்குமான வேறுபாடாகத்தான் இதைக் கருதுகின்றேன். சாமான்யன் என்ன நினைப்பான்? வந்தவர்கள் சாப்பிட்டார்களா? நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் மகிழ்வா? கவியரங்கத்துக்குக் கூட்டமா?? இப்படியான சாமான்யத்தனம்தான் மேலோங்கும். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலே கூட ஆயிரம், ரெண்டாயிரம் பேர் நிகழ்ச்சிகளைக் காணும் காலமிது.  தமிழ்மணத்தில் நேரலை செய்து உலகுக்கே காட்டினோம்! அது ஒருகாலம்!!

#FeTNA2024


No comments: