

ஆவணம் என்பதை அதன் பரந்த பொருளில் கொண்டால், அது ஒரு சமூகத்தில் வாழ்கின்ற தனி மனிதர்கள், குழுக்கள், அரசு போன்றவர்கள் உருவாக்கும் கடிதங்கள், குறிப்பேடுகள், கையேட்டுக் குறிப்புகள், சான்றிதழ்கள், உரிமைப்பத்திரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இன்றைய தேவையை முன்னிட்டுப் பாதுகாக்கப்படும் ஏடுகள், நாளைய தலைமுறைக்கு ஆவணமாக மாறும். எனவே, ஒவ்வொரு தனிமனிதரும் சமூகங்களும் இணைந்து ஆவணப்படுத்தலில் ஈடுபடுவது அவசியமென வலியுறுத்தப்படுகின்றது.
இயன்றவரை, எம்மால், ஆவணப்படுத்தலுக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றேன். தமிழ்மொழியின் சொற்கள், வட்டாரவழக்கு, சொல்லாடல்கள், சொலவடைகள், தகவல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எடுத்துக்காட்டாக, சேவலின் வகைகளைப் படங்களோடு ஆவணப்படுத்தி இருக்கின்றேன். அதற்காக நான் கொண்ட உழைப்பு மிகப் பெரியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்வுகள் குறித்து என்னைக் காட்டிலும் அதிகமாக நானறிந்து எவரும் எழுதியிருக்கவில்லை. பண்பாட்டின் ஒரு கூறு. அதைப்பற்றி எவராவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
பேரவையின் துவக்ககாலத்திலிருந்து விழாக்களுக்கு வந்திருந்த விருந்திநர்கள், சிவாஜி, எம்.எஸ்.விஷ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா உள்ளிட்டோர் பட்டியல் இணையதளத்தில் ஓடுபடமாக ஓடிக் கொண்டே இருந்தன. அதேபோல முந்தைய விழாக்களின் போதான படங்களும். இவையெல்லாம் வரலாற்று ஆவணங்கள்.
அண்மையில் சேன் ஆண்டோனியோவில் நண்பர் ஒருவர் வினவினார், “எப்படி, 2010இலேயே, பின்னாளில் விஜய் மணிவேல் தலைவராக வருவாரெனத் தெரிந்து பேட்டி எடுத்தீர்களா?”. இல்லையென மறுமொழிந்தேன். சொன்னேன், ”நான் விஜய் அவர்களை மட்டும் பேட்டி எடுக்கவில்லை. பேரவைக்காக உழைத்துக் கொண்டிருந்த பலரையும் நேர்காணல் கொண்டு பதிந்தேன். அதில் விஜயும் ஒருவர்”. ஆவணப்படுத்தல் என்பது ஒரு தொடரியக்கம். அவ்வப்போது, அவ்வப்போதையவற்றைப் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாவிடில், வரலாறு, அடையாளங்கள் முதலானவற்றுக்கு ஊறு நேரும். எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு கல்வெட்டு, பத்துவரிகள் கிடைக்கின்றதென வைத்துக் கொள்வோம். ஒட்டுமொத்த வரலாற்றையே அது மாற்றியமைக்க வல்லது.
திருக்குறள், உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றோம். எப்படி? தன்னலம் பாராத ஆயிரமாயிரம் பேர் கொடுத்துச் சென்றிருக்கும் கொடையது. எப்படி? ஓலைச்சுவடிகளில் இருக்கின்றன. அவை நாட்பட நாட்பட நைந்து போகும். ஆகவே ஆங்காங்கே தன்னார்வலர்கள், புரவலர்கள் படியெடுப்பு விழா நடத்துவார்கள். அதாவது ஓர் ஓலையைப் பார்த்து மற்றோர் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு பதிப்பிக்க வேண்டும். அப்படியானவர்களுக்கு மொழியறிவும் எழுத்தறிவும் இருந்தாக வேண்டும். இப்படித் தலைமுறை தலைமுறையாக்த் தரவுகளைக் கடத்தி வந்ததினால்தான் நமக்கு வாய்த்திருக்கின்றது அது.
பழமை, இதை ஏன் இப்போது எழுதுகின்றாய் என்கின்றார்கள். ஏன் எழுதக்கூடாதெனத் திரும்பக் கேட்டேன். ’இல்லை, தேவையற்ற சஞ்சலங்கள்’, அப்படியிப்படியென இழுத்தனர். உண்மைக்குப் புறம்பாக இருந்தால் சுட்டலாம். மாற்றியமைக்கக் கடமைப்பட்டவன். ஆனால் எழுதக்கூடாதென எதிர்பார்ப்பது சரியன்று. எடுத்துக்காட்டாக, ‘அருவி’ எனும் பெயர் சூட்டியவர், பனிமலர், கோடைமலர், இளவேனில்மலர், இலையுதிமலர் என்றெல்லாம் பெயர் கொடுத்து, அச்சுக்குக் கொண்டு போவதெப்படியென்றெல்லாம் செதுக்கியசிற்பி நண்பர் சிவானந்தம். மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்டில் அதற்கென ஒரு டெம்ப்ளேட் வடிவமைத்து இப்படியிப்படியெல்லாமெனச் செயலாக்கம் செய்தவர் நண்பர் ப்ரிதிவ்ராஜ் சிவராஜ். நண்பர் எழில்வேந்தனும் நானும் வடிவமைத்து அச்சுக்கு அனுப்புவோம். இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகளே அதில் இடம் பிடித்தன. இந்தத் தகவலை நான் பதியாவிட்டால், எவரும் பதியப்போவதில்லை.
”பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!” -பாரதி
”We're living in an era of unprecedented change, and I want to be a part of documenting it”. -Ron Fournier பதிவதென்பது ஒரு தொடரியக்கம்., பொதுத்தொண்டு. பிழைகள் இருந்தால் சுட்டுங்கள். முடக்க நினைப்பது பத்தாம்பசலித்தனம்.
படம்: பேரவை விழாவில், திரு செந்தில் துரைசாமி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டது. தம் பெற்றோர் மறைந்து விட்டனர். ஆனால் இந்தப் படம் இருக்கின்றதெனச் சொன்னார். நானும் சொல்லி இருந்திருக்க வேண்டும்; நான் பதிந்ததும் இருக்கின்றதென. https://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_28.html அதிலும், ஆவணப்படுத்துதலே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
-பழமைபேசி, 07/10/2024.
No comments:
Post a Comment