8/16/2009

இது பெரிய கம்ப சூத்திரம்? போங்கடே!!

அவன் எதோ ஒன்னை வெச்சிப் படம் போட்டுட்டு இருக்குறான். நம்மாள் சித்த நின்னு, அதைக் கவனிக்கிறான். அப்ப, உள்ளபடியே அது அவனுக்கு சுலுவானதாவும் தெரிஞ்சதாவும் இருக்கும். சில நேரங்கள்ல அது தெரிஞ்சிருக்காமலும் இருக்கும்.

ஆனாலும், நம்மாள் அதை ஒத்துக்குவானா? பாக்குற வரையிலும் பார்த்துட்டு, மீசையில மண் ஒட்டலைங்ற கதையாச் சொல்றது, ’இது பெரிய கம்ப சூத்திரம்? நானும் நாளைக்கு செய்து காட்டுறேம்பாரு!’ன்னு சொல்லிட்டுக் கம்பிய நீட்டிடுவான்.

ஆமா, அதென்னங்க அந்த கம்ப சூத்திரம்? இஃகிஃகி! வாங்க, நமக்கு தெரிஞ்ச கதைய மேல படிக்கலாம்.

வடமொழியில வால்மீகி எழுதின இராமாயணத்தைக் கேள்விப்பட்ட நம்ம இராசா, குலோத்துங்க சோழன் அந்த காப்பியத்தைத் தமிழ்லயும் படைக்க ஆவல் கொண்டாரு. நாட்டுல இருந்த புலவர்கள், ஒட்டக்கூத்தர் மற்றும் கம்பரைக் கூப்பிட்டு வேண்டிய பொன்னும் பொருளுங் கொடுத்து எழுதச் சொன்னார்.

நாளுங் கிழமையும் நிற்குமா? அதுபாட்டுக்கு போறது போயிட்டே இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் சோழ மன்னன், அவங்க இரண்டு பேரையும் அழைச்சு, 'என்ன காப்பியம் தயார்தானா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எழுதின வரைக்கும் எடுத்து விடுங்க கேட்கலாம்!'ன்னு சொன்னாரு.

உடனே ஒட்டக்கூத்தர், அயோத்தியிலிருந்து துவங்கி, சீதா தேவியை மீட்கும் பொருட்டு இராமன் படை கடலைக் கடக்க வானரங்களோட உதவியோட கடலில் பாலம் அமைக்க எத்தனிச்சது வரைக்கும் விவரிச்சிட்டு, அங்க தன்னோட கதை நிக்குதுன்னு சொன்னார்.

கதையில அவ்வளவு சிரத்தை காண்பிச்சு எழுதாத சூழ்நிலையில இருந்த கம்பர், மன்னருக்கு ஏதாவது சொல்லி ஆகணுமே? சமயோசிதமா, ஒட்டக்கூத்தர் விட்டதிலிருந்து அவருக்கே உரிய பாணியில், எந்தக் காட்சிகளையும் சித்திரத்தைப் போல வர்ணிச்சு இயம்பும் வல்லமை படைத்த கம்பர் ‘சடார்’னு வர்ணிச்சாரு,

துமிதம் தெறித்து மேலோகம் செல்ல
அமிர்தமென தேவர்கள் வாய் பிளந்தனரே!

துமிதம்ன்னா திவலைகள் அல்லது துளிகள். அதாவது இராமன் படை அம்புகளை விட்டெறிய, அவை கடலினுள் சென்று நீரின் மீது மோதியதில், நீர் சிதறித் துளிகளாக இந்திரலோகம் வரைக்கும் செனறு தெறித்து, அமிர்தமோ என அங்கிருந்த தேவர்கள் வாய் பிளந்தனர்ன்னு அந்தக் காட்சியைச் சித்திரத்தைப் போல கண் முன்னாடி கொண்டு வர்றாரு.

அதைப் பார்த்த ஒட்டக்கூத்தர், துமிதம்ங்ற சொல்லே, புழக்கத்தில் இல்லை. தூதம் எனும் சொல்லாட்சியே புழக்கத்தில் இருக்கிறதுன்னு வாதம் புரியுறார். கம்பர், துமிதம்ங்ற சொல்லாட்சி, நாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தப் பணிக்கப்படுறார்.

அதன்பொருட்டு, இரண்டு பேரும் சோழ நாட்டுக்குள்ள போறாங்க. கம்பரோ, கலைவாணி மேல பாரத்தைப் போட்டுட்டு நாட்டுக்குள்ள, ஒட்டக்கூத்தரோட போறார். அப்ப அங்க ஒரு பெண்மணி தயிர் கடைஞ்சிட்டு இருக்காங்க. சுற்றிலும் விளையாடிட்டு இருக்கிற குழந்தைகளைப் பார்த்து, அந்த மோர்க்காரி சொல்கிறாள், ‘பிள்ளைகளே தூரப் போய் விளையாடுங்கள், துமிதம் உங்கள் மேல் விழுமன்றோ?’.

அந்தக் காட்சியைப் பார்த்த ஒட்டக்கூத்தர், தான் அதுவரைக்கும் எழுதின இராமகாதையின் காண்டங்களை விட்டெறிய, அதில் ஒரு சிலவற்றைக் கம்பர் கைப்பற்றி, பின்னாளில் முழுமையாகப் படைத்துப் பெருமை பெற்றார். எதையும் சித்திரம் போல் வர்ணிக்கும் ஆற்றல் கொண்ட கம்பனின் வர்ணிப்பு, கம்ப சித்திரமானது; பின்னாளில் சித்திரமே சூத்திரமாக மருவி, கம்பர் சூத்திரமாக ஆனது.

மக்களே, மேல சொன்னது ஒரு சாரார் சொல்ற கதை. அது மெய்யா, பொய்யா, திரிபா, திரிபற்றதா, இதெல்லாம் அந்த கலைவாணிக்கே வெளிச்சம்! ஆனாலும், நமக்குன்னு ஒரு ஆற்றல், சிந்தனைன்னு இருக்குதுதானே? அதை வெச்சி மேற்கொண்டு அலசித் தொவச்சிக் காயப்போடலாம் வாங்க!

சூத்திரம்ன்னா என்ன? எதோ ஒன்றைக் கட்டுதல். கட்டுதல்னா, கயிறு வெச்சிக் கட்டுறது அல்ல மக்காள். அமைத்தல் அல்லது உண்டுபண்ணுதல் என்பதுதான் இங்க நாம சொல்றது. அதனால, உண்டுபண்ணக் கூடிய எந்திரங்களை சூத்திரம்ன்னு தமிழ்ல சொல்றது உண்டு. அதே போல, ஏதோ ஒன்றை கட்டமைத்துச் சொல்லப்படுகிற சொல்லாட்சிக்கும் சூத்திரம் என்று சொல்வது உண்டு.

தொல்காப்பியப் பெருந்தகை சொல்லும் விளக்கம் என்ன? செறிந்து விளங்கும்படியான சொற்களை அமைத்து முடிக்கப்படும் யாப்பு சூத்திரம் ஆவது, அப்படின்னு சொல்றார். யாப்புன்னா? கட்டுகை. ஆடுகளைக் காக்க, குடை போல ஒன்றைக் கட்டுவது குடை+யாப்பு, கொடாப்பு. மார்புப் பகுதியை அண்மித்துக் கட்டப்படுவது மார் + யாப்பு, மாராப்பு! மக்கா, இப்பக் குதூகலமா நிமிர்ந்து உட்காருவீங்களே? இஃகிஃகி, சரி வாங்க மேல படிக்கலாம்!

அந்த மாதிரி, செறிவான, வளமான சொற்கள் கொண்டு யாப்பது சூத்திரம். சூத்திரத்துல அறுவகைச் சூத்திரம் இருக்கு, பெயர்ச் சூத்திரம், விதிச் சூத்திரம், விளக்கியல்ச் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம், இந்த ஆறும்தாங்க. அதாவது, சூத்திர ஆக்கத்திற்கான நிமித்தத்தைப் பொறுத்து இது அமைகிறது.

இநத பின்னணியில, ’இப்படியான யாப்புகளைக் கொண்ட படைப்பை இலக்கண சுத்தமாகப் படைத்ததின் பொருட்டே, கம்பனின் படைப்புகளைச் சிலாகிக்கும் பொருட்டு கம்ப சூத்திரம் எனும் சொல்லாட்சி மேலோங்கியது’ அப்படீங்ற ஒரு முடிவுக்கு வர முடியுதா? இல்லையா??

23 comments:

priyamudanprabu said...

மார்புப் பகுதியை அண்மித்துக் கட்டப்படுவது மார் + யாப்பு, மாராப்பு! மக்கா, இப்பக் குதூகலமா நிமிர்ந்து உட்காருவீங்களே? இஃகிஃகி,
////

கண்டுபுடிச்சிடீங்களே??!?!??!?!!?

butterfly Surya said...

அருமை.

நல்லாயிருக்கு.

பழமைபேசி said...

@@பிரியமுடன் பிரபு

இஃகிஃகி!

//வண்ணத்துபூச்சியார் said...
அருமை.

நல்லாயிருக்கு.
//

நன்றிங்க வண்ணத்துபூச்சியார்!

vasu balaji said...

இது நாமளுந்தான் தமிழ் படிப்பமேன்னு சேர்ந்த பொழுது முதல் ஆண்டு பாடத்தில் கு.அழகிரி சாமியின் கவிச்சக்கரவர்த்தி நாடகம் பாடமாக‌ வந்தது. அதில் துமி என்ற சொல்லைக் கம்பர் பயன் படுத்தியதை ஒட்டக் கூத்தர் எள்ளி, கம்பர் பாமர மக்களிடம் வழக்கில் இருக்கிறதென்பதை தயிர் கடையும் தாய் பேசுவதைக் கொண்டு நிரூபித்ததால் ஒட்டக்கூத்தர் தாழ்வுணர்ச்சி கொண்டார் என்றிருந்தது. மேலும் கம்பராமாயணத்தில் தேடிய பொழுது யுத்த காண்டத்தில் இருந்தது அந்தப் பாடல். அதில் துமிதம் என்ற சொல் பயன் படுத்தப் படவில்லை. துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார் என்று வருகிறது.

"குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதன் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார் -
அமுதல் இன்னம் எழும் எனும் ஆசையால்."

மேலதிகத் தகவல்:
இன்றும் இலங்கையில் பல பாகங்களில் மழை தூறுவதை மழை துமிக்கிறது எனப் பயன்படுத்துகிறார்கள்.

கம்ப சித்திரம் வேறு கம்ப சூத்திரம் வேறு என்றும் ஒரு விளக்கம் இருக்கிறது. கம்பரின் பாடல்கள் சிலவற்றில் ஒரு முடிச்சைப் போட்டு அதை பல்லாயிரம் பாடல்களுக்கு அப்பால் ஒரு பாடலில் அவிழ்ப்பதைக் கம்ப சூத்திரம் என்பதாகக் கூறுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

அப்படிப் போடுங்க பாலாண்ணே, சுவையான மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!

//அவிழ்ப்பதைக் கம்ப சூத்திரம்//

அவிழ்ப்பது புதிர். யாப்பிடுவது சூத்திரம் அப்படீன்னு தொல்காப்பியர் சொல்றாருங்க... இஃகிஃகி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எத்தனையோ தெரியாத விசயங்கள விளக்கறீங்க! தொடருங்கள்.

Anonymous said...

பக்கத்து வீட்டுல தண்ணிக்கு 'தூத்தம்' ன்னு சொல்லுவாங்க. துமிதத்தில இருந்து தான் தூத்தம் வந்திருக்கணும்

ஈரோடு கதிர் said...

பழம... எங்கிருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க...

ஒன்னுக்கு மேல ஒன்னு ஆச்சரியமா இருக்கு

S.Muruganandam said...

பழமை பேசி ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.

manjoorraja said...

துமிதத்திற்கான உங்களின் சுவையான விளக்கமும் நன்று
துமி தம் அதாவது துளி தம் மீது விழுவத் எனக் கொள்வதே சரியாக இருக்குமோ என தோன்றுகிறது. (வானம்பாடிக்கு நன்றி)

துமிதம் என்று கூறுவதிலும் தவறில்லை.

ஆனால் கம்ப சூத்திரம் பற்றிய விளக்கங்கள் நன்றாக இருந்தாலும் சரியான விளக்காமா என்பதில் சந்தேகம் உள்ளது.

பழமைபேசி said...

@@ச.செந்தில்வேலன்

நீங்கதான் ஊர்க்கு போகும் போது சொல்லாமலே போயிட்டீங்க்... நான் சீராட்டு உங்ககூட... இஃகி!

//சின்ன அம்மிணி said...
பக்கத்து வீட்டுல தண்ணிக்கு 'தூத்தம்' ன்னு சொல்லுவாங்க. துமிதத்தில இருந்து தான் தூத்தம் வந்திருக்கணும்
//

ஓ அப்படீங்களா, அவங்க எந்த ஊருங்க?

//கதிர் - ஈரோடு said...
பழம... எங்கிருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க...//

ஒரு ஆராய்ச்சி, அலசல், தொவையல்தான் மாப்பு....

//Kailashi //

நன்றி, நன்றி!!

@@மஞ்சூர் ராசா

வாங்க, வாங்க; ஐயத்தை போக்குங்க மேலதிக விபரம் ஏதும் கிடைச்சா...

நிகழ்காலத்தில்... said...

\\மழை தூறுவதை மழை துமிக்கிறது எனப் பயன்படுத்துகிறார்கள். \\

இதை நான் கிராமத்து பெரியவர்களிடம் கேட்டு இருக்கிறேன். இதை நான் ’துளிக்கிறது’ என்பதை துமிக்கிறது என்று சொல்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்:))

கணக்கில் சூத்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுவதற்கும் இதற்கும் சம்பந்தம் என்ன எனபதை கொஞ்சம் சொல்லிப்போடுங்க பங்காளி!!

குறும்பன் said...

இந்த ஊரு Rocket Science தான் நம்ப கம்ப சூத்திரமா?

சுலுவான செயல It is not a rocket science அப்படின்னு சொல்லுவாங்க. நாம இது கம்ப சூத்திரம் அல்ல என்று சொல்லுகிறோம்.

பழமைபேசி said...

//குறும்பன் said...
இந்த ஊரு Rocket Science தான் நம்ப கம்ப சூத்திரமா? //

ஆமாங்கோ...

//நிகழ்காலத்தில்... said...
கணக்கில் சூத்திரம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுவதற்கும் இதற்கும் சம்பந்தம் என்ன எனபதை கொஞ்சம் சொல்லிப்போடுங்க பங்காளி!!
//

ஆமாங்க, அந்த ஆறுல, விதிச் சூத்திர வகையில வருதுங்க கணக்கு விதிகள்....

ஆரூரன் விசுவநாதன் said...

"இலக்கியம்" என்னும் வார்த்தை சங்க இலக்கியங்களில், திருக்குறளில், தொல்காப்பியத்தில் இல்லை???????? இலக்கியம் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன? இது எங்கிருந்து வந்தது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் நண்பரே....

நானும் நண்பர் கதிரும் நீண்ட வாதத்திற்கு பின் உங்களை கேட்பது என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.

அது சரி(18185106603874041862) said...

ஞான் இன்னியும் நாலு ரெவுண்டு விட்டுன்டு திரிச்சி வருமாக்கும்... பட்சஷே சேட்டன், நிங்களின்ட ஒரு வல்லிய கேள்வி உண்டுமாக்கும்...ஆ சுதந்திரம் சம்ஸ்கிருத வார்த்தையல்லோ??? நிங்கள் தமிழின்டு சொல்லிட்டு...எனக்கு மனசுலாயில்லா...

பழமைபேசி said...

@@ஆரூரன் விசுவநாதன்

உங்களுக்கும் மாப்புக்கும் விளக்கம் போட்டாச்சுங்கோ....

@@அது சரி

நான் இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், ஜெயமோகன் வலைப்பூவுக்கு போறதைக் குறைச்சிக்கங்கன்னு.... எப்படி இருந்த அண்ணாச்சி, இப்படி ஆயிட்டாரே?

ஸ்வதந்திரம் வட மொழியேதான் அண்ணாச்சி! அதுல என்ன ஐயம??

அது சரி(18185106603874041862) said...

நன்னாயிட்டு உண்டு...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்...

இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம்?? :0))

பழமைபேசி said...

//அது சரி said...
நன்னாயிட்டு உண்டு...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்...

//

அது சரி அண்ணாச்சி, அது அப்படி அல்ல;

ஒட்டக்கூத்தம் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

இப்ப நான் விமானம் புடிக்க போயிட்டு இருக்கேன்.... அடுத்த இடுகை, இதான்!

தென்னவன். said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

naanjil said...

தம்பி ம்ணி
நல்லதொரு படைப்பு.

சூத்திரத்திற்கு சிங்காரவோலு முதலியாரின் விளக்கம்.

சிறிய கண்ணாடியில் பெரிய தேகங்களின் உரு செவ்வையாகச் செறிந்து இனிதாக விளங்குவதுபோல், சில எழுத்தாலான செய்யுட்களில் பல் பொருள்களையடக்கித் தின்மையுடன் நிலவுவது.

வாழ்த்துக்கள்
நாஞ்சில் பீற்றர்

Unknown said...

//.. சின்ன அம்மிணி said...

பக்கத்து வீட்டுல தண்ணிக்கு 'தூத்தம்' ன்னு சொல்லுவாங்க. துமிதத்தில இருந்து தான் தூத்தம் வந்திருக்கணும் ..//

மழைத் தூறல் விழும்போது கூட, 'தூத்த' வருதுடானு எங்கப்பிச்சி சொல்லும்..

பழமைபேசி said...

//naanjil said... //

மேலதிக விளக்கத்திற்கு நன்றிங்க அண்ணா!

@@பட்டிக்காட்டான்..

தூத்தல்... இஃகிஃகி!