10/21/2008

கனவில் கவி காளமேகம் - 7

ஆமாங்க, நேத்தைக்கும் வழக்கம் போல கவி காளமேகம் உறுமிகினே நம்ம கனவுல வந்தாருங்க. நாமதான், இந்தப் பொருளாதார நெருக்கடியில சிக்கி ஒரு கொழப்பத்துல இருக்கமே. அவரு அதை எப்படித்தான் கண்டு புடிச்சாரோ தெரியலை,

"என்னடா பேராண்டி, என்ன? மாய் மாலத்துல மாட்டிகிட்டு மெரள்ற மாதிரித் தெரியுது??"

"ஆமாங்க அப்பிச்சி! எதுக்கும் நீங்க கேக்குறதுக்கு முன்னாடி, நானே கேக்கறேன் இன்னைக்கு! இல்லாட்டி நீங்க எதனாக் கேட்டு உசுர எடுப்பீங்க?!"


"சரி, ஆகட்டுங் கேளு!"

"ஆமா அப்பிச்சி, உங்க காலத்துல எல்லாம் எப்பிடி இந்தப் பணம், மொதலீடு இதெல்லாத்தையும் பராமரிப்பு செய்தீங்க, அதைச் சொல்லுங்களேன் எனக்கு!"

"அடேய், நீ இன்னைக்கு தாண்டா உருப்படியாக் கேள்வி கேட்டு இருக்குற?! எல்லாம், பட்டாத்தானடா உங்களுக்கு ஞானம் பொறக்குது?!"

"என்ன‌ ப‌ண்ணுற‌துங்க‌ அப்பிச்சி, ச‌ரி நீங்க‌ சொல்லுங்க‌!"

"நாங்கள்ளெல்லாம் கொஞ்ச‌மாப் ப‌ண‌த்தைக் கையில‌ வெச்சுக்குவோம். அதுவும் பாத்தியானா, இந்த‌ நெல‌வ‌றைக்கு மேல‌ இருக்குற‌ பொந்துக‌, உப்பும் புளியும் பொட்டு வெக்கிற‌ மொடாவுக‌, கொஞ்ச‌ நிறைய‌ன்னா மொள‌காத்தூள் மொடாவுல‌ கூட‌ப் போட்டு வெப்பொம்."

"அப்ப‌ ச‌ம்பாதிச்சு மிச்ச‌ம் மீதி ஆவுற‌து எல்லாம்?"

"எல்லாமே, பொருளாத்தான்டா வெச்சுக்குவோம். சும்மா,அறுவ‌து மூட்டை இராகி, சோள‌ம், நெல்லுன்னு வ‌ச‌திக்குத் த‌குந்த‌ மாதிரி இருக்கும்டா! எல்லாமே, தானிய‌ம், ஊடு, வாச‌ல், ப‌ண‌ட‌ங் க‌ன்னுக‌, கோழி சாவ‌ல்ன்னு நாலும் க‌ல‌ந்து வெச்சிருப்போம். இந்த‌க் காயித‌த்தை ந‌ம்புற‌தெல்லாம் உங்க‌ கால‌த்துல‌ வ‌ந்த‌துதாண்டா பேராண்டி."

"அப்ப‌, சாமான் செட்டு வாங்க‌னுமின்னா?"

"ஊட்டுல இருக்குற‌ தானிய‌ம், ப‌ண்ட‌ங் க‌ன்னுல‌ எதோ ஒன்னு, ஆடோ, கோழியோ இப்ப‌டி எத‌னாச்சும் கொஞ்ச‌த்தை எடுத்துகிட்டு ச‌ந்தைக்குப் போவோம். அங்க‌ இதுக்கு ஒரு வெலை. அந்த‌ வெலைக்கு வேணுங்ற‌ சாமான் செட்டுக‌! பிர‌ச்சினை தீந்த‌து."

"அதெப்ப‌டி தாத்தா, ஒரு க‌டையில‌ விப்பீங்க‌...ஆனா, நீங்க‌ நாலு க‌டைக்குப் போக‌ணுமே. அப்ப‌, ரூவா?"

"ச‌ந்தைக்கு எல்லாம் ஒரு ஆளோ ரெண்டு ஆளோ இருப்பாங்க‌. அவிங்க‌ளை நாங்க‌, ச‌ந்தைப் ப‌ண்ணாடின்னு கூப்புடுவோம். அவ‌ரு வ‌ந்து காசு ப‌ண‌ம் சில்ல‌றை முறிச்சுக் குடுப்பாரு, எல்லா கணக்கு வழக்கையும் பாத்துகிடுவாரு. ஆனா, அத‌னால‌ அவ‌ருக்கு எந்த‌ லாப‌மும் இல்ல‌ பாத்துக்க‌. நாங்க‌, சுங்கம்(ச‌ந்தை வ‌ரி) இவ்வ‌ள‌வுன்னு க‌ட்டுவோம். அதுல‌ அவ‌ருக்கு பொழ‌ப்பு ந‌ட‌த்த‌ ஒரு கூலி. அவ்வ‌ள‌வுதான்!"

"ஆமா, கொண்டு போன‌ சாமான்ங்க‌ விக்க‌லைன்னா?"

"அட‌, இதென்ன‌ வெவ‌கார‌மா இருக்கு. சாய‌ந்த‌ர‌ம் மிச்ச‌ச் ச‌ந்தைல‌ ஏழை பாழைக‌ளுக்கு குடுத்துட்டு வ‌ந்திருவோம். மிச்ச‌ம் கொண்டு வ‌ந்தா ஊரு சிரிக்காது?"

"இப்ப‌டித்தான் இருந்தீங்ளா?"

"பின்ன‌? எல்லாமே அச‌ல்டா... பொருளுக்குப் பொருளு! உங்கிட்ட‌ நிற‌ய‌ப் பொருள் இருக்குதா, நீ முத‌லி. இல்லையா, கெட‌க்குது க‌ழுதை. உழைச்சுத் தின்னு. மாய் மால‌த்துக்கு இட‌ங் கெடையாது!"

"இப்பெல்லாம் அப்ப‌டி இல்லை அப்பிச்சி!"

"தெரியுந் தெரியும். எப்பப் பொருளே இல்லாம‌, அதுக்கு ஒரு தார‌த்தைக் (பணத்தைக்) கொண்டு வ‌ந்தீங்ளோ, அப்ப‌வே உங்க‌ பொருளாதார‌ம் வ‌லுவிருக்காதுன்னு தெரியுந் தெரியும்!"


"சரி, இன்னைக்கு வேற என்ன சொல்லப் போறீங்க?"

"இன்னைக்கு நீ மனசு சொகமில்லாம இருக்கே, அதனால நல்ல வார்த்தை நாலு சொல்லிட்டு நாங்கிளம்புறேன்,

பழைமைஎனும் பாதையிலே
பார்புதுமை மெருகேற்றி
உழைப்புக்கு வடிவேற்றி்
ஊர்வலமே போவாயோ!

மனிதம்என் றும்ஒன்று்
மதம்எல்லாம் சமமென்று
தொனிக்கின்ற பாட்டையிலே
தொடர்ந்தேநீ போவாயோ!!"



இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

13 comments:

குடுகுடுப்பை said...

உழைப்புக்கு வடிவேற்றி்
ஊர்வலமே போவாயோ!

கலக்கிட்டீங்க.

பண்ட மாற்று முறைதான் இப்போதும் உள்ளது.பண்டம் மாற்ற உபயோகப்படுத்தும் சில தாள்களின் உண்மை மதிப்பு யாருக்கும் தெரியாது.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

கலக்கிட்டீங்க.//

அவர் சொல்லுறதை உங்ககிட்ட சொல்லுறது ஒரு கலக்கலா? :-o)

//பண்ட மாற்று முறைதான் இப்போதும் உள்ளது.பண்டம் மாற்ற உபயோகப்படுத்தும் சில தாள்களின் உண்மை மதிப்பு யாருக்கும் தெரியாது.//

காரணம், பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி.... , :-o(

நசரேயன் said...

வழக்கம் போல கலக்கல்
அமெரிக்கா டாலர் க்கு பதிலா மஞ்சை நோட்டு கெடைகாமா இருந்தா சரிதான்

தங்ஸ் said...

எங்கய்யனும் அடிக்கடி சொல்லுவாரு..ஒருகாலத்துல,எல்லார்கிட்டயும் மூட்டை, மூட்டையாப்பணம் இருக்கும். ஆனா சாப்புட ஒண்ணுமிருக்காது.

பழமைபேசி said...

//நசரேயன் said...
வழக்கம் போல கலக்கல்
அமெரிக்கா டாலர் க்கு பதிலா மஞ்சை நோட்டு கெடைகாமா இருந்தா சரிதான்
//

:-o)

பழமைபேசி said...

//தங்ஸ் said...
எங்கய்யனும் அடிக்கடி சொல்லுவாரு..ஒருகாலத்துல,எல்லார்கிட்டயும் மூட்டை, மூட்டையாப்பணம் இருக்கும். ஆனா சாப்புட ஒண்ணுமிருக்காது.
//

பணம் வந்தது... அப்புறம் நெகிழி அட்டை(plastic card, credit card) வந்தது.... அப்புறம் ஒன்னுமே வேணாம்னு வீடு, வண்டி, வாகனம்னு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க...

கையில காசு வாயில தோசை அது நம்ம ஊர்ல.... இங்க?

Mahesh said...

//காரணம், பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி, பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடியோட‌ பண்ணாடிக்குப் பண்ணாடி.... //

அப்பறம் போண்டி....

கவி காளமேகம் நாலுந் தெரிஞ்சவர் போல... அடிக்கடி வரச் சொல்லுங்க... அப்பிடியே சார்சு புசு, பெர்னான்கெ, இன்னும் மத்த நிதியுலக அறிவுஜீவிக கனவுலயெல்லாமும் போய் எதாச்சி நல்லது சொல்லச் சொல்லுங்க

Mahesh said...

பெர்னான்கெயோட சகோதரர் கூட உங்க ஊர்லதான் கச்சேரிக்கு போராரு போல..வக்கில்தாரியாமா?

பழமைபேசி said...

//Mahesh said...
பெர்னான்கெயோட சகோதரர் கூட உங்க ஊர்லதான் கச்சேரிக்கு போராரு போல..வக்கில்தாரியாமா?
//

எல்லாம் வெறுங் கையில மொழம் போடுறவிங்க....
நாம இங்க வந்து குருவி சேக்குற மாதிரி ஒத்தை ஒத்த வெள்ளியா சேக்குறம்... என்ன ஆவப் போவுதோ?

ஆமா, நம்மூரு வெங்க்கி பேசுனதக் கேட்டீகளா?

ராஜ நடராஜன் said...

அய்!அம்மா மொடாக்குள்ள அரிசிக்குள்ள,பருப்புக்குள்ள ஒளிச்சி வைக்கிறதெல்லாத்தையும் தேடி கம்மர்கட் மிட்டாய் வாங்கித் தின்கிற சொகம் இருக்குதே....

( பொட்டிக்குள்ளயெல்லாம் கம்பிய விட்டுத் திருடற பயலுக்கு மொடாவெல்லாம் என்னா மாத்திரம்)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
அய்!அம்மா மொடாக்குள்ள அரிசிக்குள்ள,பருப்புக்குள்ள ஒளிச்சி வைக்கிறதெல்லாத்தையும் தேடி கம்மர்கட் மிட்டாய் வாங்கித் தின்கிற சொகம் இருக்குதே....
//

அப்ப நான் கெளரித்தான் உட்டுட்டனா?

பழமைபேசி said...

//அப்ப நான் கெளரித்தான் உட்டுட்டனா?//

அடச்சே, கிளரி விடுறத, நாம ஊர்ல கெ+ள+ரி விடுறதுன்னு சொல்லுவோம். அத எழுதப் போய் அது கெளரி ஆயிடுச்சு....

venkatx5 said...

நல்ல தகவல்.. பகிர்ந்ததற்கு நன்றி..