4/03/2024

திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?

 திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?


the number of girls born per 1,000 boys in Tamil Nadu are 932 in 2017 to 933 in 2018.


source: https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-slow-in-bridging-gender-gap-at-birth/articleshow/77215998.cms


1. ஆக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவு.


2. இந்த பற்றாக்குறையைச் சரிக்கட்ட, வயதிற்குறைந்த பெண்களைத் திருமணம் செய்வது ஈடுகட்டி வந்தது. எடுத்துக்காட்டாக, 29 வயது ஆடவன் 20+ வ்யதுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் என்பது, கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெண்களுக்கும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அப்போதுதான் நாட்டின் உற்பத்தித்திறன் கூடும். எனவே 29 வயதுள்ள ஆடவனுக்கு 25 வ்யதுக்குக் கீழுள்ள பெண் கிடைப்பது அரிதினும் அரிது.


3. 25+ வயதில் கல்வி + வேலையுடன் திருமணத்திற்கான இடத்தை அடைகின்ற பெண்ணுக்கு இன்னும் லீடர்ஷிப் வேலை என்பதான ஆசை வரக்கூடும். இப்படியாகப் பெண் காலம் தாழ்த்தத் தாழ்த்த ஆணுக்கான வாய்ப்பு அரிதாகிப் போகின்றது.


4. இதுதான் திருமண வாய்ப்புகள் காலத்தாழ்ச்சியாவதற்கான காரணங்கள். அதை விடுத்து, பெண்கள் நிபந்தனை, அப்படி இப்படி என்பதெல்லாம் விரக்தியின்பால், அச்சத்தின்பால் ஏற்படுவதே. 


5. சீரின்மை


ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. நிப்பாட்டிக் கொள்வார்கள்.

ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. மீண்டும் ஓர் ஆண்மகவுக்காக இரண்டாவது குழந்தை.


இத்தகைய போக்கு சீரின்மையை ஏற்படுத்தி விடுகின்றது.


6. பொருள்முதல்வாதம்: நல்லவீடு, கடைச்சாப்பாடு, நாளொரு உடுப்பு, வீட்டிலேயே சினிமா தியேட்டர், நவீனங்கள், நீச்சற்குளம் இப்படியான கன்சூமரிசம் பெருகப் பெருக பெண்ணின் வருமானம் இன்றியமையாததாகின்றது. கூடவே அவளின் இன்செக்யூரிட்டி ஃபீலிங்கும் கூடி விடுகின்றது. இதற்காக நாம் அந்தப் பெண்ணைக் குறை கூறலாகாது. இது அவளின் குற்றம் அன்று. சமூகத்தின் குற்றம். தன்னைச் சுற்றிலும் நான்கு பேர் அப்படியாக இருக்கும் போது, இயல்பாகவே அவளுக்குள்ளும் ஆசை பிறக்கத்தானே செய்யும்?


7. அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்குமான சமச்சீரின்மை. பொருளாதாரமயமாக்கலின் பொருட்டு நிலங்களின் விலை பன்மடங்கு கூடிவிட்டது. வணிகவாய்ப்புகள் பெருகி விட்டன. இதன் நிமித்தம் சொத்துமதிப்பு கூடிவிட்டது. பர்ச்சேஸ் பவர், வாங்குதிறன் கூடிவிட்டது. இதன் விளைவாக மதிப்பீடுகள் புறவயப்பட்டுப் போய் விட்டன.  அக விழுமியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏற்படும் முரண்கள் திருமண ஆசையைச் சிதைத்து விடுகின்றன. 


8. பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்படும் இன்செக்யூரிட்டி ஃபீலிங். நம்மை யார் கவனிப்பார்கள் என்பதான கவலை. மகனோ, மகளோ, அவர்களை நம்பி இருத்தல் சரி வராது. உலகமயமாக்கலின் விளைவு இது. அவரவர் இருத்தலுக்கு அவரவரே பொறுப்பு. பெற்ற பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க உழைப்பதைக் காட்டிலும் முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். நம்மை நம் வழியில் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். மேலைநாட்டுப் பழக்கவழக்கம் அப்படித்தான்.


9. Individualism. தன்னுமை. சட்டத்துக்குட்பட்டு வாழ எந்த ஒருவருக்கும் முழு உரிமை உண்டு. அவரவருக்கு அவரவர் ஆசை, விருப்பங்கள். அதனில் தலையிடுவதற்கு எந்த அப்பா, அம்மாவுக்கும் உரிமை இல்லை. வேண்டுமானால் ஆலோசனை கூறலாம். அவர்களின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் உறுதுணையாக இருக்கலாம். உலகமயமாக்கலின் விளைவுகளுள் இதுவுமொன்று. முன்பெல்லாம் பெற்றோரின் பொருளாதார உதவி கடைசிக்காலம் வரையிலும் தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. 25 வயதில் மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது, பெண்களுக்கும். புரிந்து நடந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. தத்தம் ஆசையை பிள்ளைகளிடத்திலே, பிள்ளைகளின் குடும்பத்திலே திணிக்க முயல்வது குற்றம். செண்ட்டிமெண்ட்டுக்கெல்லாம் இடமில்லை.


10. ஆணாதிக்கம் என்பது எளிய சொற்களிலே இருக்கின்றது. உண்ணுகின்ற உணவிலே இருக்கின்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது.  அத்தகைய ஸ்டீரியோ டைப்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். (எடுத்துக் காட்டு:)நடிகர் மங்கிகாந்த், நடிகை மங்கம்மா என்கின்றோம். ஏன் நடிகன் மங்கிகாந்த் எனச் சொல்லக் கூடாது? நடிகை, நடிகன். பொதுப்பால் நடிகர். இப்படியான முரண்பாடுகள், Generation-Z (born after 1995) தலைமுறையினரிடம் சினத்தைக் கிளறிவிட வல்லது. ஆகவே, சமூகம் மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தெளிதல் வேண்டும். உலகமயமாக்கல் மேம்பாடு வேண்டும், ஆனால் மேலைநாட்டுப் பழக்கவழக்கம் கூடாதெனக் கொடி பிடித்தல் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதற்கு ஈடானது.


-பழமைபேசி.