12/31/2012

அச்சம் தவிர்! ரௌத்ரம் பழகு!!

வன்புணர்வுக்கெதிரான 
போராட்டக் களத்தில் 
எவனோ 
இடுப்பைக் கிள்ளிவிட்டான்! 
இதை மற்றவரிடம் 
சொல்வதா? வேண்டாமா?? 
ஆறுதல் கிடைக்குமா? 
அவமானம் நேருமா?? 
சீற்றம் கொண்ட புயலே 
சிக்குண்டது புயலில்!! 
இதை எல்லாம் வீணாக 
எதுக்கு பெரிசு பண்ணிட்டு?! 
அரவமற்று அடங்கிப் போனது 
களமாடிய ஆவேசப் பெருங்காற்று!! 

12/20/2012

ஏழைப் பசி


மடை திறபட 
படை மாணவர் 
புடை சூழ 
அடை மழையுள் 
குடை பிடித்து 
இடை இடிக்க 
நடை போட 
கடை வரவும் 
தடை இன்றி 
வடை வாங்கி 
எடை போடாது 
கொடை அளிக்க 
முடை நீங்கி 
சடை ஒழிந்து 
உடை பட்டு
விடை பெற்றது
பெடை நோவு!


12/12/2012

நினைவூஞ்சல்

என்றோ 
எதிர்பாராமற் கிடைத்த
இளம்பிராயத்து 
முத்தமொன்றின்
நினைவூஞ்சலில்
ஊசலாடும் போழ்து
விழுகிறது அடி பிடரியில்,
அப்பா, அம்மா கூப்பிடுறாங்க!



12/11/2012

பிறவிக்கடன்

சாதிக்கம்பின் வீச்சில்
அண்ணிக்குக் கல்யாணம்!
மணமகளாக அவர்
மணமகனாக இவன்
வானுலகப் பூச்சொரிகிறது
என் அண்ணனிடமிருந்து!!



12/09/2012

கைப்பாவை


வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான்.  எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய  விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி!

அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம்.

நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் மார்ஷல் எனும் சிற்றூரிலிருந்து பதினேழாவது மைல் தொலைவில், டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோ செல்லும் விரைவுச்சாலையில் அமைந்திருக்கிறது கெலாக்( Kellogg Cereal Company )  தானியத்திண்டித் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமைந்திருக்கும் சிறுநகரான பேட்டில்கிரீக் நகர், சீரியல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகிய போஸ்ட் சீரியலும் இதே ஊரில்தான் அமைந்திருக்கிறது.

கெலாக்  நிறுவனத்தை, வில் கீத் கெலாக் என்பவர் 1906ஆம் ஆண்டு நிறுவினார். அவரது தம்பியாகிய ஜான் ஹார்வே கெலாக் என்பவரே தானியத்திண்டி( cereal )யைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை. ஆங்கிலத்தில் சீரியல் எனப்படுகிற தானியத்திண்டி இல்லாத வீடு அமெரிக்காவில் கிடையாது. காலையிலேயே சமைக்கப்பட்ட உணவும் இறைச்சியும் உண்டு கொண்டிருந்த மேலைநாட்டைத் திருப்பிப் போட்டது தானியத்திண்டி எனச் சொல்லலாம். அதிலும் கெலாக் தானியத்திண்டிக்கென்றே ஒரு தனியிடம் சந்தையில் எப்போதும் உண்டு.

வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக என் அறைக்குச் சென்ற நான், மின்னஞ்சல்களைப் பார்த்து மறுமொழி கூற வேண்டியவற்றுக்கெல்லாம் பதில் மடல் அனுப்பினேன். அதன் பிறகு, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டிருந்தேன். பொதுவாக கூட்ட அறைக்குள் என் அலைபேசியை எப்போதும் எடுத்துச் செல்வதில்லை. எப்படியாகிலும் அது என் கவனத்தைச் சிதற வைப்பதோடு மற்றவரது கவனிப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதாலேயே.

தானியத்திண்டிக்கான சில்லறை வணிகத்தை இணையத்தினூடாக மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இடையிடையே அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குறித்த வினாக்களை நான் விடுத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எங்கள் துறையின் நேர்முக உதவியாளர் மேரி அறைக்கு வெளியே நின்றபடி என்னைப் பார்த்துச் சைகை செய்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு என்னை அழைக்கிறாள் எனக் கோபமாகவும் இருந்தது; காரணத்தை அறியும் பொருட்டு ஆவலும் மேலிட்டது எனக்கு. அமைதியாக கூட்ட அறையினின்று வெளியேறினேன்.

“என்ன மேரி? நான் முக்கியமான ஒரு கூட்டத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?”

“மன்னிக்கணும் மணி. உன்னோட மனைவி சுமதி அழைப்புக்கு மேல அழைப்பு விடுத்து, உடனே உன்கிட்ட பேசியே ஆகணும்னு சொல்றாங்க!!”

ஒரே குழப்பமாக இருந்தது. பக்கத்து ஊரான ஆல்பியனில் இருக்கும் மருத்துவமனையில் உடலியக்க மருத்துவராக வேலை பார்க்கும் என் மனைவி இந்நேரம் வேலைக்குப் போயிருப்பாள். மகள் அமிழ்தா குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாள். ஒரு வேளை ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏதாவதா? எப்போதும் இல்லாதபடிக்கு என்னை எதற்கு இவள் அழைக்க வேண்டும்??

அலைபேசி அறையில் இருக்கிறது. கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் கிடையாது. மேரியிடமே நேரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை மணி பதினொன்று ஆகிறது. ஆக, இந்தியாவில் இரவு ஒன்பதரை மணி. சரி, முதலில் அம்மாவையே அழைத்துப் பேசி விடுவோமென நினைத்து நேராக எனதறைக்குச் சென்றேன். அலைபேசியினூடாக ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அழைக்க, தொடர்பில் வந்த அப்பாதான் பேசினார்.

“அப்பா, நான் மணி பேசுறேன். எதும் பிரச்சினையா?”

“ஏம்ப்பா? நானும் அம்மாவும் இப்பதான் படுக்கலாம்னு விளக்கை அணைச்சோம். என்ன இந்த நேரத்துல?”

“ஒன்னும் இல்லப்பா. எனக்கு எதோ போன் வந்திச்சின்னு இங்க சொன்னாங்க. சரி, அம்மாகிட்ட குடுங்க!”

அம்மாவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன். இனி சுமதியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் அலைபேசிகளுக்கு செயலிழப்புச் செய்து விடுவார்கள். எனவே சுமதியின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துப் பயனில்லை. சுமதியின் அலுவலக உதவியாளரை அழைத்து, சுமதியை என் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கச் சொன்னேன். ஓரிரு மணித்துளிகளில் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வருவதைக் காட்டிக் கொடுத்தது அலைபேசியின் எண் காட்டி.

“அலோ!”

“சார், சுமதி இஸ் நாட் இன் டுடே!!”

அதிர்ச்சியாக இருந்தது. சுமதி, வேலைக்குப் போகலையா? ஏன்?? போகும் வழியில் எதுவும் விபத்து நேர்ந்திருக்குமோ? இவளுக்கு மட்டுந்தான் பிரச்சினையா? குழந்தை அமிழ்தா??  ஒரு மாதிரி நெஞ்சு படபடத்தது. இது போன்ற நேரத்தில் நெஞ்சுத் துடிப்பு அதிகரிப்பது இயல்புதானே? சுமதியின் அலைபேசி எண்ணுக்கே அழைப்பு விடுத்தேன்.

”அலோ!”

“ஏங்க, எத்தினிவாட்டி கூப்பிடுறது? போனை எடுக்க மாட்டீங்களா??”

“சொல்றா! சாரி, நான் மீட்டிங்ல இருந்தேன்.  எதும் பிரச்சினையா? என்ன ஆச்சி??”

“ஒன்னும் இல்ல. கொஞ்சம் எனக்கு ஒடம்புக்கு செரியில்ல. ஆஃப் எடுத்திட்டேன்!”

“ஆமா!  நீ டுயூட்டில இருப்பன்ட்டு அங்க கூப்ட்டிருந்தேன்; சொன்னாங்க!”

“ஆமா, நீங்க அங்க கூப்பிட்டிருப்பீங்கல்ல? நான் வீட்டிலதான இருக்கன்னு நினைச்சி, அமிழ்தாவை லஞ்ச்சுக்கு நான் பிக் அப் செய்யறேன்னு சொல்லிட்டு வந்தங்க. இப்ப எனக்கு ரொம்பவும் முடியலை. நீங்க போக முடியுமா?”

“இவ்வளவுதானா? நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன். ஆனா, அமிழ்தாவுக்கு கார் சீட்டு??”

“அதான் கழட்டிப் போட்ட இன்ஃபேன்ட் சீட்டை, உங்க கார்ல பின்னாடி வெச்சிருக்கீங்கல்ல?”

“கரெக்ட்! அப்ப,  நூன் டைம், பனிரெண்டுக்கு போயி அழைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுறேன்!”

“வேண்டாம். வெளியிலயே சாப்பிட்டுட்டு, விட்டு கூப்பிட்டுட்டு வந்திடுங்க.  வெள்ளிக் கிழமைங்றதால, சாயுங்காலம் அஞ்சு மணிக்கு முன்னமே பிக் அப் செய்திடணுங்க!”

மகள் அமிழ்தாவுடன் வீட்டிற்குச் சென்று சுமதியுடன் இருந்து விட்டு வரலாம் என நினைத்தேன். அது நடக்கவில்லை எனும் ஏமாற்றத்துடன் கேட்டேன், “ஏன்டா, உனக்கு ஒடம்புக்கு என்ன பிரச்சினை?”

“ஏங்க, இதென்ன கேள்வி? கல்யாணம் ஆயி ஆறு வருசம் ஆச்சி. இன்னுமா? வீட்டுக்கு தூரம், ரொம்பப் படுத்துது; அதான்! அவ வீட்டுக்கு வந்தா, என்ன மம்மி, ஏது மம்மீன்னு கேட்டுக் கொடைஞ்செடுப்பா!! வெளியில எதனாவது வாங்கிக் குடுத்து சமாளிங்க!!”

“சாரிடா; நாம் பாத்துக்குறேன்!”

மகள் அமிழ்தாவுக்கு மூன்று வயதுக்கும் மேலாகிறது. மிகவும் சுட்டி. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுமட்டும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பாள். நண்பகற் பொழுது அவளுடன் கழியப் போவதை எண்ணி மகிழ்ச்சியெனக்கு. ஆனால் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் என்னைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொள்ளப் போவது உறுதி. நாளைக்கு அருகில் இருக்கும் காலாமசு ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருக்கிறேன். அதை நினைத்தாலே எனக்கும் குதூகலம் பிறக்கிறது. அழைத்துப் போக வேண்டும். ஆற்றங்கரைப் பூங்காவில் படங்கள் நிறைய எடுத்து, அம்மா அப்பாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த மாதத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த மாதமான ஆகஸ்டில் இருந்து மிச்சிகன் மாகாணத்தில் குளிரோ குளிர்தான்.

பதினொன்றரை மணிக்கெல்லாம்  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மார்ஷல் குழந்தைகள் காப்பகத்துக்கு  சென்று சேர்ந்துவிட்டேன். கண்ணாடித் தடுப்புச் சுவரில் பார்க்கிறேன். இடது கையில் கைப்பாவையான க்யூட்டெடியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்து விட்டாள். இன்னும் பத்து மணித்துளிகள் இருக்கிறது உணவு இடை வேளைக்கு.  என்னைக் கண்டதில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

அவள் வருவதற்கு முன்பாக அவளது கைப்பாவையான ’க்யூட்டெடி’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாங்கள் சார்லட் பெருநகரத்தில் குடியிருந்த போது அவளது முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அப்போது ஆந்திர நண்பர் வெங்கட்டா பரிசாகக் கொடுத்த துணியாலான சிறு கரடி பொம்மைதான் அது.  அமிழ்தாவின் கைக்கு அடக்கமாக மூன்று இஞ்ச் உயரத்தில் இருக்கும். குளிக்கும் போது தவிர, எப்போதும் அதைத் தனது இடது கையில் கவ்விப் பிடித்தபடி இருப்பாள்.

இந்த இரண்டரை ஆண்டுகளாக அமிழ்தாவிடம் சிக்குண்ட அந்தப் பொம்மை, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அழுக்குப் படிந்து, கிழிந்து, நைந்து, சிதையும் தருவாயில் இருக்கிறது க்யூட்டெடி. உறக்கத்தில் கூட கை நழுவிவிடக் கூடாது; அவ்வளவுதான், அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். அந்த அளவுக்கு க்யூட்டெடியோடு அமிழ்தா ஒருமித்துப் போயிருக்கிறாள்.

இதோ நண்பகல் மணி பனிரெண்டு ஆகிவிட்டது. எழுச்சியோடு ஓடி வந்து கொண்டிருக்கிறாள் என் செல்லம் அமிழ்தா.

“அப்பா, அப்பா, அம்மா எங்கப்பா?”

“அம்மா, டூட்டிக்குப் போயிட்டாங்கப்பா!”,  வேறு வழியில்லை; பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அல்லாவிடில் வீட்டுக்குப் போக வெண்டுமென அடம் பிடிப்பாள்.

“இம்… இம்…  என்னை வந்து பிக் பண்ணுறேன்னு சொன்னாங்க?”, மழழையோடு குழைந்தாள்.

“இல்ல தங்கம்; எதோ அசஸ்மெண்ட் இருக்குன்னு வரச் சொல்லிட்டாங்களாம். அதான் அப்பா வந்திருக்கன்ல?”, ஒரு பொய் பல பொய்களைப் பெற்றெடுக்கும் என்பது இதுதான் போலிருக்கு.

ஒரு மணி நேரம் கரைந்ததே தெரியவில்லை. அருகிலிருந்த ஜேசன் டெலி உணவகத்தில் இருவருமாக உண்டு மகிழ்ந்தோம். அவளுக்கு உருளைக்கிழங்கு நொறுக்கு என்றால் மிகவும் விருப்பம். அவள் விருப்பமே எனது விருப்பமும். நன்றாக அடித்து நொறுக்கினோம். போதாக்குறைக்கு அவளது அம்மாவும் அருகில் இல்லை. அல்லாவிடில், கொலஸ்டிரால், அது இது என்று படுத்துவாள்.

”அப்பா, வீட்டுக்கு போலாம்ப்பா!”, சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வெடுக்கென தனது இடது கையை இழுத்து, அக்கையிலிருக்கும் க்யூட்டெடிக்கு அரும்பிஞ்சு இதழ்களால் முத்தம் கொடுத்தாள்.

“இல்லடா கண்ணு. அப்பாவுக்கு இன்னும் ரெண்டு மீட்டிங் இருக்கு; ஆபிசுக்குப் போகணும். ஃபோர் தெர்ட்டி, நான் வந்திடுவேன், சரியா? ”

“போங்கப்பா!”, சலித்துக் கொண்டாள்.

“நாளைக்குதான் நாம காலாமசு(Kalamazoo) போறம்ல? போட் ரைடு, பிஷ்ஷிங் எல்லாம் இருக்கல்ல??”

அவ்வளவுதான், கதிரவன் கண்ட மலர் போல முகம் மலர்ந்தது. அதே மலர்ச்சியுடன் காப்பகத்தில் விட்டுவிட்டு வந்து அலுவலகத்தை அடைந்ததும், சுமதிக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தி ஆயிற்று.  அதன் பிறகு அலுவலக நண்பர்களிடம் வார ஈறுக் களிப்புகள் குறித்தான பேச்சு நீடித்தது. பேச்சின் போது காலாமசு ஆற்றைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

காலாமசு ஆறு மற்றும் ஆற்றுப்படுகையானது கிட்டத்தட்ட 11000 ஆண்டுகளாக மனிதர்களால் பல்வேறு பணிகளுக்குப் பாவிக்கப்பட்டு வருகிறதாம். அதிலிருந்தே தெரிகிறது இதுவொரு செவ்விந்தியர்களின் களம் என்பது. மிச்சிகன் ஏரியில் கலக்கும் இந்த ஆறானது மிகச்சிறிய ஆறாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாக இன்றும் விளங்குகிறது.

மாலை நான்கரை மணிக்கெல்லாம் மார்ஷல் காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தா. என்னைக் கண்டதும், வகுப்பு ஓம்புநரான ஜில் கோஃபர் புன்னகைத்தாள். எழுப்பி விடட்டுமா என சமிக்கையிலேயே வினவ, நானும் சரியெனும் பாங்கில் தலையசைத்தேன்.

வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோறும், குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை விரிப்பு, மாற்று உடுப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உடைமைகளைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பி விடுவார்கள். அவற்றைச் சலவை செய்து மீண்டும் திங்கட்கிழமை கொடுத்தனுப்ப வேண்டும். அமிழ்தாவை எழுப்பி,  அவர்களே அவளது உடைமைகளை எல்லாம் பையில் போட்டுக் கொடுத்தபடியால் நான் எதையும் கவனித்திருக்கவில்லை. அப்பாவைக் கண்ட குதூகலத்தில் அமிழ்தாவும் எழுந்து துள்ளலாய் ஓடி வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.

காப்பகத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆறு மைல் தூரம்.  வீட்டிற்குச் செல்லும் வழியில், காலாமசு ஆறு, அதன் படகுத்துறை, மீன்பிடித்துறை, நாளை யாரெல்லாம் அங்கு வருவார்கள் முதலானவற்றைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். அமிழ்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது அலுவலக நண்பர் ஸ்டீவ் என்பாரின் மகள் ஜேனட்டும் வருவாள் எனச் சொன்னதில் அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

வீட்டிற்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த நான் எனது கவ்வுகழலிகளைக் கழற்ற எத்தனிக்கிறேன். ‘ஓ’வென்று பெரும் ஓலம். பேரொலி கேட்டெழுந்த அவளது அம்மா சுமதியும்  என்னவென்று கேட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்தாள். சற்று நேரத்திற்கு அமிழ்தா என்ன சொல்கிறாளென்றே  எனக்குப் புரியவில்லை.

“மம்மீ… ஐ வான்ட் இட்!  ஐ வான்ட் மை க்யூட்டி, ஐ வான்ட் மை க்யூட்டி!!”

புரிந்து விட்டது. சத்தியமாக நான் இப்போதுதான் கவனிக்கிறேன். அவளது கையில் எப்போதுமிருக்கும் அவளது அருமைப் பாவையான க்யூட்டெடி இருக்கவில்லை. என் சொகுசுந்து வாகனத்துக்கு நாலுகால்ப் பாய்ச்சலில் உடனே விரைந்தேன். அரக்கப்பரக்கத் துழாவுகிறேன். பின்னிருக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கான சிற்றிருக்கையைக் கழற்றுகிறேன். கார் முழுவதையும் பார்க்கிறேன். பார்த்த இடங்களை மீண்டும் பார்க்கிறேன். எனக்கு அது அகப்படவே இல்லை.

“அம்மாக்காரியும்  சேர்ந்து என்னை வறுத்தெடுப்பாளே? கடவுளே, நான் இனி என்ன செய்வேன்??”, நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் ஓடினேன். அவர்கள் கொடுத்தனுப்பிய பையினைக் கமுத்தித் தேடிக் கொண்டிருந்தாள் சுமதி. அவளுக்குப் பக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே அமிழ்தா.

”ஏங்க, குழந்தையப் பார்த்துக் கூட்டிட்டு வர முடியாதா? இதுல இல்ல. சரி நடங்க, கார்லதான் இருக்கும். நான் பார்க்குறேன்!”, சினம் தலைக்கேறிய சுமதி, அழுது கொண்டே அமிழ்தா, கடுப்புடன் நான் என எல்லாருமாகப் போனோம் வாகனத் தரிப்பிடத்திற்கு. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுத் தேடினாள் சுமதி.

“என்னங்க, இங்கயும் காணோம்?”

“சென்ட்டர்லயே எடுக்காம வந்துட்டம் போலிருக்கு?”

“ஏங்க, வெள்ளிக்கிழமை நாளுங்க இது? எல்லாம் போயிருப்பாங்க?”

அவ்வளவுதான். சங்குசங்கென்று குதிக்க ஆரம்பித்தாள் அமிழ்தா. ஒரு கட்டத்தில், டமால் எனத் தரையில் விழுந்து படுத்துக் கொண்டாள்.

“புதுசு வேணா வாங்கித்….”, நான் முடிக்கவே இல்லை.  இருவரும் ஒருசேர அவரவர்பாட்டுக்கு இரைந்தார்கள்.

“இல்ல, அது வேலைக்காவாது. ஏற்கனவே நாம அது ட்ரை பண்ணுனதுதானே? மண்டே வரைக்கெல்லாம் வெயிட் பண்ணினா அவ்ளோதான். கொழந்தை அழுது அழுது காய்ச்சலாகி ஃபிட்ஸ் வந்தாலும் வந்திடும்! போயிப் பார்க்கலாம் வாங்க!!”

வீடு திறந்தது திறந்தபடி இருந்தது; வீட்டினுள் கிடந்தது கிடந்தபடி இருந்தது. எப்படிக் காரை எடுத்தேன்; எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்றே எனக்குத் தெரியாது. கேவிக் கேவி அழுது கொண்டிருந்த அமிழ்தா விசும்பலுக்கு மாறியிருந்தாள். அவ்வப்போது மூச்சிரைப்பு வந்து போனது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. காலையில் சுமதியிடமிருந்து அழைப்பு வந்த போதே எனக்கு மனதில் சஞ்சலம். யாரையோ இழந்து பிரிந்த மனத்துயரம் மேலிட்டது. அப்படி ஏதும் நிகழவில்லை என்ற ஆறுதல் வெகுநேரம் நீடித்திருக்கவில்லை.

முன்பொருநாள் வீட்டிலிருக்கும் சோபாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட க்யூட்டெடியைக் கண்டு பிடித்தெடுப்பதற்கு ஓரிரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டாள் அமிழ்தா. அந்த நினைவெல்லாம் வந்து ஆட்டுவிக்கிறது இப்போது. அரும்பாவை க்யூட்டெடியை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறாள்? மனம் முழுதும் கப்பிய சோகம் நிரம்பிப் பொங்கி இப்போது என் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

அமிழ்தாவைப் பார்க்கவே எனக்கு தயக்கமாய் இருக்கிறது.  சுமதி, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் காருக்கே திரும்பி வந்து தேடத் துவங்கினேன். இது சும்மா ஒரு போங்காட்டம். அவர்களுக்கு அருகில் இருக்கக் குற்ற உணர்வும் அச்சமும் என்பதுதான் உண்மை.

பாதுகாப்புப் பணியாள் உட்பட அவர்கள் மூவரும் என்னருகே வந்து கொண்டிருக்கிறார்கள். அமிழ்தா இன்னும் விசும்பிக் கொண்டுதானிருக்கிறாள்.

“டேனியல்கிட்டப் பேசினேன். அவர் இன்னும் அரை மணி நேரத்துல வர்றாராம். நீங்க லன்ச்சு முடிச்சிட்டு ட்ராப் பண்ணும் போது கையில வெச்சிருந்தாளா?”

“ஆமா. இருந்திச்சி.  ரூமுக்குள்ள போயி உட்கார்ந்தப்புறங்கூட முத்தங் குடுத்திட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

“ம்”, அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் என்பதை அந்த ஒற்றை எழுத்து பதிலே காட்டிக் கொடுத்தது.

பாவம் அமிழ்தா, அது குழந்தை. முதல் பிறந்த நாளுக்குப் பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாய், 365 கூட்டல் 365, எழுநூற்று முப்பது, இதிலொரு 75 நாட்கள்,  ஆகமொத்தம் எண்ணூற்று ஐந்து நாட்கள் க்யூட்டெடியோடு பின்னிப் பிணைந்தபடி இருந்தவள் எப்படித்தான் தாங்குவாளோ இப்பிரிவை? பிஞ்சு மனம் நொந்து கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு.

டேனியல் வந்து சேர்ந்து விட்டான்.  அவனிடம் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தாள் சுமதி.  குழந்தையின் மனநலமும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம் எனப் பரிவாய்ச் சொல்லிக் கொண்டே எங்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான். உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆள் நடமாட்டம் கண்ட விளக்குகள் தன்னிச்சையாய் ஒளிரத் துவங்குகிறது. அமெரிக்காவில் எல்லாமே தானியக்கம்தான்.

என்னையறியாமல் ஆனைமலை மாசாணியம்மனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கிறேன். “ஆத்தா, உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? எப்படியாவது அதை இங்க இருக்கப் பண்ணு!”, திரும்பத் திரும்ப மனம் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

அமிழ்தாவின் வகுப்பறைக்கு முன்னால் வந்தாயிற்று. இனி அறைக்கதவைத் திறக்க வேண்டும். நடைபாதையில் இருக்கும் மின்விளக்கின் வெளிச்சம் கண்ணாடிச் சுவரையும் ஊடுருவி உள்ளே பாயத்தான் செய்கிறது. எனினும் அந்த பாவையது கண்களுக்கு அகப்படவில்லை. டேனியலைப் பார்க்கிறேன். அவன் கையிலிருக்கும் சாவிக் கொத்தில் ஒரு பத்துப் பதினைந்து சாவிகள் இருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொன்றாய்ப் போட்டுத் திறக்க முயற்சிக்கிறான்.  நேரம் கூடக் கூட மனத்தின் பாரமும் வலியும் கூடிக் கொண்டே போகிறது. எனக்கே இப்படியென்றால் அந்த பச்சைமண்ணுக்கு? ”மாசாணியாத்தா, அது கிடைக்கலைன்னா நீ ஒரு பொய்! வேசக்காரி!!”, என் வலியெல்லாம் சினமாகி ஆனைமலை ஆத்தாளின் மேல் பாயத் துவங்கியது.

அப்பாட, ஒருவழியாய் டேனியல் அறைக்கதவை திறந்து விட்டான். அமிழ்தா துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். அதற்குள் டேனியல் மின்விளக்குக்கான சொடுக்கியைத் தட்டினான். ஒளி ஒளிரவும், அமிழ்தா குதித்தெழவும் சரியாய் இருந்தது. பிற்பகலில் அவள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கருகே, சுவரோரத்தில் கிடந்தது க்யூட்டெடி.  முத்த மழையில் நனைந்து பரவசமாகிக் கொண்டிருந்தது க்யூட்டெடி.   காலையில் எழும் போது கண்ட என் மனைவியின் கண்களை, அதற்குப் பிறகு இப்போதுதான்  முதன்முதலாய்  எதிர்கொள்கின்றன செம்மாந்து ஒளிரும் என் கண்கள்.

“சாரி மாமாய்!”, என்னைப் பார்த்துக் கனிவாய்ச் சொன்ன சுமதியின் கண்கள் சோர்வாயும் களைப்பாயும் இருந்தன. நான் டேனியல் கைகளைப் பற்றி எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி பொங்க. வாசலுக்கு வந்ததும், டேனியலுக்கு ஹக் தர வேண்டுமென அமிழ்தா சொன்னாள்.

அவர்களிடம் விடை பெற்ற பின்னர், வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.

அடுக்களைக்குச் சென்று சூடாய்க் காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு போகிறேன்.  இடது கையானது அவளது அன்புப்பாவை க்யூட்டெடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்க,  வலதுகைக் கட்டை விரல் சூப்பிய நிலையிலிருந்து விட்டுச் சற்று விலகியிருக்கிறது. தன் ஒரு காலைத் தன் தாயின் மேல் அவள் போட்டிருக்க, தாயின் ஒரு கை தன் மகளை வாஞ்சையாய்ப் பிடித்தபடி தூங்குகிறார்கள் இருவரும்.

இன்னும் அங்கு விடிந்திருக்காது. அதனாலென்ன? அழைத்துப் பேச வேண்டியதுதான். ஆமாம், எனக்கு என் அம்மா வேண்டும் போல இருக்கிறது.

நன்றி: வல்லமை

12/02/2012

கிண்ண இனிப்பம்

முழுக்க முழுக்க வீட்டிலேயே சமைக்கப்பட்ட “கிண்ண இனிப்பம்”. ஒவ்வொரு இனிப்பத்துக்கும் தனித்தனியான வடிவும் இடப்பட்டது. அடுமனையில் அசத்திய என் மனையாளுக்கு நீங்களும் ஒரு “ஓ” போடுங்களேன்!!


11/28/2012

காப்பாற்று

எதுவுமற்றதற்கு
வெறுமனே 
அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து
“கப்.. சுப்.. காரவடை” அரற்றினேன்!
கப்னா என்னப்பா?
சுப்னா என்னப்பா?
காரவடைனா என்னப்பா?
கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்!
இறைவா
என்னைக் காப்பாற்று!!



11/27/2012

சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்

கார்த்திகை சோதித் திருநாள் வாழ்த்துகள்!

வீடுகளின் மதில்சுவர்கள் மற்றும் திண்ணை,  காடு கழனிகளின் பொழிக்கல், கிணற்றடியில் இருக்கும் எக்கியறை(motor room), தோட்டத்துச் சாளையில் இருக்கும் திண்ணை மற்றும் விளக்கிடுக்கு என் எங்கும் சிறு அகல் விளக்குகள்(கார்த்திகை விளக்கு) ஏற்றப்படும். பிறகு சற்றொப்ப பின்னேரம் 8 மணிக்கு ஊர்த்தலைவாசலில் இருக்கும் விநாயகர் கோவிலில் இருக்கும் விளக்குத்தூணில் தற்காலிகமாய் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏறி நின்று ஊர்த்தலைவர்/பெரியவர்கள் புடைசூழ அணையாச் சுடர் ஏற்றப்படும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு  பழக்கலவை முழுக்கு, பால்முழுக்கு உள்ளிட்டவற்றின் போது பாவிக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்பட்ட திருவமுதின் எஞ்சியவற்றை அனைவருக்கும் அளிப்பார்கள்.

பூசனைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டும் தருணத்தில் ஊர் விடலைகள் “சூந்து” விளையாடுவார்கள். சோளத்தட்டு, கம்பந்தட்டு, வைக்கோல்கற்றை முதலானவற்றின் ஒரு முனையில் தீயிட்டு அவற்றைக் கையில் வைத்தபடியே பாடல் பாடிக் கொண்டு இலாகவமாய் ஆட்டிக் கொண்டு வலம் வரும் ஒரு துள்ளு விளையாட்டு இதுவாகும். எண்ணையில் ஊற வைக்கப்பட்ட துணி வளையத்தை நாய்ச் சங்கிலியின் ஒரு முனையில் கட்டி, அதற்கு எரியூட்டியபின் சுழற்றிச் சுற்றி இலாகவமாய் ஆடி வருவதும் உண்டு. விடலைகளின் தீரமிகு விளையாட்டில் அத்துமீறி சில பல தீ விபத்து நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது உண்டு. இவற்றானவற்றின் போது சில பல கிராமியப் பாடல்கள் பாடப்படுவதும் உண்டு. கொச்சையான பாடல்களும் இதில் அடக்கம்.

தந்தனத்தான் தோப்பிலே
தயிர் விக்கிற பொம்பளே
தயிர் போனா மயிர் போச்சி
இங்க வந்தாத்தான் ஆச்சி
சூந்தாட்ட வெளிச்சத்திலே ஊரு
சேந்தாடுவோம் சதுரு
நான் எடுக்குறேன் ஒன் உசுரு!!

மன்னிக்கவும். எனக்கு நினைவில் இருப்பவற்றை எல்லாம் மின்னேற்ற முடியாதாகையால், எஞ்சிய சில பாடல்களுக்கு பெப்பே!! சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்!!

11/25/2012

நந்தியாவட்டை

பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும்.
“என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?”
“தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா.  விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!”
பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான். கம்பிகளாலான வாயிற்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. திரும்பிப் போகலாமா, அல்லது உள்பக்கமாகக் கைவிட்டுத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா என யோசிக்க முற்பட்ட கணத்தில்தான் கவனித்தான். கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள் அக்கா. கன்னத்தில் குழி விழச் சிரித்தது இடுப்பில் இருந்த அவளது குழந்தை.
“நான்… வந்து… இரங்காச்சாரி கடைக்குப் பக்கத்துல இருக்குற சீதாராமய்யர் பையன் வசந்த்!”
“தம்பி, உள்ள வாப்பா. உன்னை நல்லாத் தெரியும். உள்ள வாப்பா. உங்க அக்கா சந்திரா நல்லா இருக்காளா? பர்வதம் பாட்டி எப்படி இருக்காங்க? இப்பவெல்லாம் இராமர் கோயிலுக்கு வர்றதே இல்லை போல!”
“பாட்டி, கொஞ்சநாள் சுசீலா அத்தை வீட்டுக்கு கும்பகோணம் போயிருந்தாங்க அக்கா!”
“உட்காரு. வர்றேன்!”, முன்னறையில் இருந்த பிரம்பு இருக்கையைக் காட்டிச் சென்றிருந்தாள் அவள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அங்கிருந்த பந்தினை எடுத்து அவனை நோக்கி எறிந்தது. பதிலுக்கு அவனும் குழந்தையை நோக்கி உருட்டி விட்டான்.  சற்று நேரத்தில் விஜயம்மா பாட்டி வந்தாள், “வாப்பா! சங்கரூ…”
“பாட்டி, நான் வசந்த். எங்கண்ணன் பேர்தான் சங்கர். அவன் சிந்தாமணியில அக்கவுண்டன்ட் வேலை பாக்குறான் பாட்டி!
”அட, சீதாராமனோட ரெண்டாவது பையனா நீயி? ஆளுகெல்லாம் ஒசரத்துக்கு வந்துட்டீங்கப்பா. ஆமா, சொர்க்க வாசல் திறப்புக்கு வந்ததுதான். அப்புறம் மேலு பர்வதத்தைப் பாக்கவே முடியலையே? உடம்புக்கு சொகமில்லையா கண்ணூ?”
“சுசீலா அத்தையப் பார்க்கப் போயிருந்தாங்க பாட்டி!”
“ஓ, அதான பார்த்தேன்!”, பாட்டி சொல்லி முடிக்கவும் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள் அக்கா. “லோக்க போய்யி, பின்னாண்டிகி காப்பி ஏசி எத்திகினி ஒச்சேனு சுதா! மாட்டாடிகினு உண்டு நுவ்வு”, விறுக்கென எழுந்து சென்றாள் பாட்டி. பாட்டியின் மாட்லாடுதலில் இருந்து தெரிகிறது  அந்த அக்காவின் பெயர் சுதா என்று.
“தம்பி, நீ எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற? மணீஸ் ஸ்கூலா?”
“சபர்பன்தானுங்க அக்கா. ப்ளஸ் ஒன்!”
“அட, ஒட்டுமொத்த இராம்நகரே சபர்பன்தான் போலிருக்கு! உங்க அக்காவும் நானும் பத்து வருசம் ஒரே வகுப்புதாம்ப்பா. சரியான லொல்லு பிடிச்சவ அவ!”, சொல்லிச் சிரித்தாள் சுதா. என்னவென்று புரியாமலே அருகிலிருந்த குழந்தையும் வாய் விட்டுச் சிரித்தது. நடந்து கொண்டிருந்த அளவளாவலில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் புரூக்பாண்ட் காப்பியுடன் திரும்பி வந்த விஜயம்மா பாட்டி.
சற்று நேரம் வீட்டு முன்னறையில் பேசிக் கொண்டிருந்த அவர்கள், வீட்டின் முன்புறமிருந்த பூக்காட்டில் இருக்கும் நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.  சுதா, உள்ளே சென்று பொரி வாங்கி வந்த மழைக்காகிதப் பையில் பூக்களை இட்டு நிரப்பிக் கொடுத்தாள்.
“வசந்த், எனக்கும் ஒரு உதவி வேணும். கல்கியில ஜெயலலிதா எழுதின உறவின் கைதிகள் தொடர்கதையச் சேகரம் செஞ்சி பைண்ட் போட்டு வெச்சிருக்கிறதா மங்களாதேவி சொன்னா. உங்க பக்கத்து வீடுதானே? நாளைக்கு இந்தப் பக்கம் நீ வந்தியானா, அதை வாங்கிட்டு வந்து தர முடியுமா வசந்த்?”
”சரிங்க அக்கா, கண்டிப்பா வங்கிட்டு வர்றேன்!”, அன்று துவங்கியது சுதா அக்காவுக்கும் அவனக்குமான பிணைப்பு.
அக்காவுக்கு ஒரே மகள் சுமதி. சுமதிக்கு அப்பா இல்லை என்பதைவிட, அக்காவுக்குக் கணவன் இல்லை என்பதுதான் ஊராருக்கு முதன்மை.  சுதா அக்காவைப் பற்றி சுதா அக்காவிடமே கேட்டுத் தெர்ந்து கொள்ள மனம் வரவில்லை வசந்த்துக்கு. மயிலாடு துறையிலிருந்து அவ்வப்போது வரும் சந்திராக்கா சொல்லித்தான் தெரிந்து கொண்டான் நிறைய. விஜயம்மா பாட்டி, சுதா அக்கா,  சிறுமி சுமதி என அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பவர் எவர்க்கும் கனிவு பிறக்கும்.
பின்னாளில் வசந்த்துடன் படிக்கும் காட்டூர் சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டான். வசந்த்தும் சேகரும் அவ்வப்போது சுதா அக்காவைப் பார்க்கப் போவார்கள். குறிப்பாக, நூலகத்தில் இருந்து நாவல்கள் பலவற்றை எடுத்து வரச்சொல்வாள் அக்கா.  எடுத்துத்தருவதும், பிறகு கொண்டு போய் நூலகத்தில் சேர்ப்பதுமாகத் தொடர்ந்தது அவர்களது நட்பு. வசந்த் சி.ஐ.டியில் மெக்கானிக்கல் படிக்கப் போனான். சேகர், பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல்ஸ் படித்தான். தன் கணவன் விட்டுச் சென்ற மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலைப் புதுப்பித்திருந்தாள் சுதா அக்கா. இதன் நீட்சியாக, அவர்கள் மூவருக்குமிடையில் உண்டான போக்குவரத்தும் படிப்படியாக அருகிப் போனது.
ஒருநாள் வசந்த், சேகர் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தார்கள் விஜயம்மா பாட்டியும் சுதா அக்காவும். இருவருமாகச் சேர்ந்து விருந்து பரிமாறி அசத்தினார்கள். விஜயம்மா பாட்டிதான் எதெதோ சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள். விடை பெறும் தருவாயில், சேகருக்கும் வசந்த்துக்கும் தனித்தனியாகப் பரிசொன்றைக் கொடுத்தாள் சுதா அக்கா.  சிவசங்கரி எழுதிய “அவன்” எனும் நாவல்தான் அது.  அவர்களிருவரும் அதைப் படித்தார்களா எனக் கண்டறிவதற்காய்,  பின்னாளில் வாய்வழித் தேர்வெல்லாம் நடத்தி அவர்களைச் சோதித்துப் பார்த்தாள் சுதா அக்கா. கல்லூரி மாணவர்கள் என்றாலே நடத்தை தவறக் கூடியவர்களெனும் மனோபாவம் வெகுவாகப் பரவியிருந்த காலகட்டமது.
காலவெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்கு அவர்களும் விதிவிலக்காய் இருந்திருக்கவில்லை.  சுதா அக்கா இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறாள். சேகர், பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை. அவ்வப்போது செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டு வந்தவன், தற்போது நூற்பாலைகளுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உள்ளூர்ச் சந்தையில் வணிகம் செய்கிறான்.  வசந்த் எனும் நாமகரணம் கொண்டவனாகிய அவனோ, சில பல நாடுகளைச் சுற்றி வந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறான்.
”ஏங்க, தீவாளியன்னைக்கு என்ன தொணதொணன்னு போன்ல ஒரே பேச்சு? வந்து கொழந்தைகளைக் கவனிங்க!”, எப்போதும் போல அரற்றி மிரட்டினாள் அவனுடைய ஆத்துக்காரி.
“இரு இன்னும் ஒன்னே ஒன்னு.  காட்டூர் தடியனுக்கு மட்டும் தீவாளி வாழ்த்து சொல்லிட்டு வந்திடுறேன் கண்ணம்மா!”
பலமுறை அழைத்தும் சேகர் தொடர்புக்கு வருகிறான் இல்லை. அவனுடைய மனைவியின் அலைபேசி எண்ணைத் துழாவி எடுத்து அழைத்தான். “செல்வி, நமஸ்காரம்! தீவாளி எல்லாம் வந்துடுத்தா? சேகர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறான்?”
“அண்ணா, ஹேப்பி தீவாளி! அவர் மாடியில் இருக்கார். இருங்கோ குடுக்கறேன்!”
“டே… ஹேப்பி தீவாளிடா! நல்லா இருக்கியா?”
“இருக்கன்டா.  கொஞ்சம் மூடு அவுட், அதான்!”
“ஏண்டா, சொல்லு, என்ன விசயம்?”
“நம்ம விஜயாப் பாட்டி சுதா அக்கா இல்ல? அவங்க நேத்து இராத்திரி சூசைடு அட்டெம்ப்ட்டாம்டா! சபர்பன் ஸ்கூல் வட்டாரம் பூரா இதாம்பேச்சு”
“என்னடா சொல்லுற? அவங்க மகள் எல்லாம் கல்யாண வயசுல இருப்பாங்களேடா இப்ப?”
“ஆமாம். அவங்க சொந்தக்காரங்க தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை போலிருக்கு. என்ன செய்யுறதுன்னே தெரியலை. நான் அவங்க வீட்டுக்குப் போயி நாலஞ்சி வருசம் ஆச்சி. போனா, என்னையும் சேர்த்துக் கதை கட்டி வுட்றுவாங்கன்னு போறது இல்லை! ப்ச்!!”
“சேகர் நாயே, நாம ஏதாவது செய்யணும்டா. சந்திராக்கா தீவாளிக்கு வந்திருக்காங்க. நான் கூப்பிட்டுச் சொல்லுறேன். நீ இப்ப காட்டூர்லதான இருக்க? போடா, சந்திராக்காவைக் கூட்டிட்டுப் போயி சுதாக்காவைப் பாருடா, ப்ளீஸ்!”
”பார்த்து என்னடா செய்ய முடியும்? ஆறுதல் சொல்லலாம். தீவாளி முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சி ஆளுக்கொரு திசையில ஓடப் போறோம்??”
“இல்ல. நீ மொதல்ல என்ன காரண காரியம்னு தெரிஞ்சி வை. அக்காவோட ஒப்புதலின் பேரில், தற்கொலை முயற்சிக்குக் காரணமானவங்களை சட்டத்தின் முன்னாடி நிறுத்துறோம்! ’விடோ லேடீஸ்’னா இளப்பமா? உனக்கும் மகளுக இருக்காங்க. எனக்கும் இருக்காங்க. இதே நிலைமை நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கும் வரலாமில்லையா?”
“இப்பத்தான்டா எனக்கு மனசு கொஞ்சம் நல்லா இருக்கு. இதா, இப்பவே போறன்!”
சந்திரா அக்கா,  தேசிய வங்கி ஒன்றில் மேலாளர். வசந்த்தின் சுக துக்கங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலருள் இவளுக்கும் தனியிடமுண்டு. எல்லாமும் சந்திராக்கா, சேகர் வழியாகவே நடந்தேறியது.
சுதா அக்கா, மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாள். கணவன் விட்டுச் சென்ற கடையை மீட்டுத் தானே நடத்தி வருகிறாள். ஆனாலும் ஊராருக்கு அவளொரு விதவை! யாரோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசலாம்.  அக்கா, தங்கை எனும் உறவின் பேரில் எப்போது வேண்டுமானாலும் காசு, பணம் கேட்டு உருட்டி மிரட்டலாம். தன் வீட்டு வேலைகளுக்கு அவளையும் அவளது மகளையும் வந்திருந்து வேலை செய்யச் சொல்லலாம். தங்களுக்குச் சுமையாக இருக்கும் பெரியவர்களை அவளது வீட்டில் கொண்டு போய்த் தள்ளி விட்டு வரலாம்.  ஏனென்றால் அவளொரு விதவை.
”அக்கா, நான் அமெரிக்காவுல இருந்து சபர்பன் சந்திரகலாவோட தம்பி வசந்த் பேசுறன்க்கா!”
“டேய், இன்னும் என்னை ஞாவகம் வெச்சிருக்கியாடா? சந்திரா, சேகர் எல்லாரும் இந்த ஒருவாரமா எங்கூடத்தான். இனிமே எனக்கு சாவே கிடையாதுடா.  எனக்கெதோ ஒரு புதுப்பிறவி எடுத்திருக்குறா மாதிரித்தான்டா இருக்கு. எப்படா வசந்த் ஊருக்கு வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. விஜயம்மா இருக்குற வரைக்கும் உன்னையும் உங்கண்ணன் சங்கரையும் அடிக்கடி நினைச்சுக்கும் தெரியுமா? கோவிச்சக்காதடா வசந்த்!  நீ…  ஒரு…, ஒரு மணி நேரங்கழிச்சுக் கூப்பிடுறியா? யாருன்னு தெரியலை, நந்தியாவட்டைப் பூ வேணுமின்னு கேட்டு அந்தப் பையன் வந்திருக்கான்னு நினைக்கிறேன். மறுபடியுந் தவறாமக் கூப்புடு, செரியா?!”
“நந்தியா வட்டைப் பூக்கள் என்றென்றும் அக்காவைப் பார்த்துக் கொள்ளும்!”, தனக்குத் தானே பேசிக் கொண்டவன் சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.  உவப்புக் கொண்டவனுக்கு உடனே தன் மகள்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது. மிசிசிப்பி ஆற்றங்கரைக் காற்று அவன் முகத்தில் பட்டுத் தெறிப்பதை அனுபவித்தபடி, தன் குழந்தைகளை வாரிக் கொஞ்சியணைத்து முத்தமிடும் நோக்கில் மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.
அங்கே மற்றுமொரு நட்புக் கேடயமொன்று உருபெற்றுக் கொண்டிருந்தது; நந்தியாவட்டை மலர்கள் பூத்திருக்கும் விஜயம்மா வீட்டுப் பூக்காட்டில்!!

11/19/2012

மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு மலர் வணக்கம்


நம்மை விட்டு அகன்றிருக்கும் தமிழ்ப் பற்றாளர், சமூகநலப் போராளி, சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர், மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு மலர் வணக்கம்!

புலம்பல்

கதிரவன் துளிர்ப்பது
கிழக்கில்
விண்மீன் புடைப்பது
வானில்
புறம் பேசி அறைவது
முதுகில்
ஆமாம்
விருப்பமில்லை
கொட்டடியில் அடைபட
எதையோ எழுதுகிறேன்
பட்டும்படாமல்!!


11/15/2012

கைம்பெண் தாய்

என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.

1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவர் 5 மணிக்கு அலுவல் முடிந்து விட்டாலும் வீட்டிற்குத் தாமதமாகவே வருகிறார். வந்தபின்னரும் மூத்த தாயைக் கையாளும் விதம் சரியில்லை.

2. மகன் இங்கே. வயோதிக விதவைத் தாய் ஊரில். தாயின் தங்கைகளே, “முண்டச்சி  முண்டச்சி” என விளித்தும் இழித்தும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். தாயுக்கு உதவ வரும் ஆடவர்களோடு இணைத்துப் பேசும் கொடுமை. அங்கே தாய் அழ, இங்கே மகன்  விம்முகிறார். 

3. விதவைத் தாயைக் கவனிக்காத ஊரிலிருக்கும் மகன்கள்/மருமகள்கள். அம்மாவை நினைத்து அழும் அமெரிக்க மகள்.

4. ஊரிலிருக்கும் விதவைத் தாயின் சொத்தினைப் பறிக்கும் நோக்கில், தாயை  வேசியென்றும் திருடியென்றும் வசை பாடும் உறவினர்கள். அமெரிக்காவில்  கையறு நிலையிலிருக்கும் மகனும் மகளும். 

5. விதவையான மாமியாரை இழித்தும் பழித்தும் பேசித் துன்புறுவதைக் கண்டு  வெகுண்டெழும் அமெரிக்க மருமகன். 

ஆணாதிக்கச் சமூகம்தான் இவற்றுக் காரணம் என்று பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. ஏனென்றால், தன்னை அண்டி இருக்கும் பெண்களால்தான் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறாள் விதவைத்தாய் என்பவள்.

அமெரிக்காவைப் பொறுத்த மட்டிலும், தானொரு விதவை என்று சொல்லும் வரையிலும் அவரைப்பற்றிய தகவல் மற்றவருக்குத் தெரிவதில்லை. ஆனால், தாயகத்தில்? விதவை என்பதைத் தெரிந்த கொண்ட பின்னரே அவருக்கான பெயர் தெரிய வருகிறது.

அண்டியிருக்கும் பலநூறு கைகளும் அவளை நோக்கியே நீளும். தனக்கான பணியைச் செய்வதற்கும், பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதற்கும், குழந்தை வளர்ப்புக்கும், வீட்டுப் பராமரிப்புக்கும் என எதற்கும் அவள் வேண்டும் இவர்களுக்கு. கைம்பெண்ணின் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்குமே அவள் ஒரு கீழானவள் அல்லது எளிதில் இலக்காக்கப்படக் கூடியவள். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மாபாதகம் இது.

அதிலும் தன்னந்தனியாக அல்லது பெற்ற பிள்ளைகளிடமிருந்து மனத்தாலும், இடத்தாலும் எட்ட இருப்பவர்களின் நிலை மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும். அப்படியானவள், எப்படியும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகள், மின்கட்டணம் கட்டுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது, அலைபேசி பழுதுபார்ப்பது என்றான சிறுசிறு வேலைகளைச் செய்து தர யாதோ ஒருவரை அண்டி அவர்தம் உதவியோடுதான் வாழ்ந்தாக வேண்டும். உடனே கிளம்பி விடுவார்கள் மேட்டிமை பொருந்திய ஆதிக்க மனம் கொண்டோர். எப்படி?

“இந்த முண்டச்சிக்கும் இன்னாருக்கும் கள்ள உறவு!”. கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் மிக எளிமையாகச் சொல்லிக் கடப்பதை நாம் எங்கும் காணலாம். அத்தாயின், பெண்மணியின் வயது ஐம்பத்தி ஐந்தாக இருந்தாலும் சரி, எண்பதாக இருந்தாலும் சரி, இத்தகைய ஒரு வன்கொடுமையிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. மேலும், இப்படிச் சொல்லிச் செல்பவர்களில் பெண்களே மிகுதி என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய பெண்களுக்கு அத்தகைய ஒரு நிலை அடுத்த கணமே நிகழாது என்பதற்கு என்ன நிச்சயம்?

”முண்டை” எனும் சொல்லை உருவாக்கியவன் ஒரு காட்டு மிராண்டி. அதைப் பாவிப்பவன் ஒரு பிணந்தின்னி. இச்சொல்லை அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டும். இனவெறிச் சொற்களுக்கான பட்டியலிலும் இது சேர்க்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் கடுமையான போக்கைக் கடைபிடித்தாலொழிய இது அழியப் போவதில்லை.

ஆனாலும் அதைக் களைவதற்கும், அத்தகைய வன்கொடுமையைக் கண்டித்துக் களைவதற்கும் உகந்த சட்டங்கள் ஊரிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இருக்கத்தான் செய்கின்றன. மக்கள், குறிப்பாகப் பெண்கள் வெகுவாக வெளிக்கிளர்ந்து வர வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க மனோபாவத்திற்கும், ஆதிக்க மனோபாவமுள்ள பெண்களுக்கும் தக்க பாடம் கற்பிக்க முடியும். ஆனால், தனக்கு எத்தனை இழிவுகள் நேர்ந்தாலும், அவள் காட்டும் தாய்மைப் போக்கே இத்தகைய வன்கொடுமைக்கான காரணமாகவும் இருந்து விடுகிறது.

ஒரு விதவைத்தாய் அச்சுறுத்தப்படுகிறாள். இழிவுபடுத்தப்படுகிறாள். அவதூறுக்கு ஆளாகி சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறாள். இத்தகைய கொடிய செயலுக்குக் காரணமானவர்களின் பேச்சு, செயல்கள் முதலானவற்றிற்கும் அழிக்கப்பட முடியாத ஆதாரங்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அந்த விதவைத்தாய் சட்டம் – ஒழுங்கு அதிகாரிகளை நாட மறுக்கிறாள். அவள் சொல்லும் காரணம்தான் என்ன?

“பாவம். போலீசு கீலீசுன்னு போனா இளையவளுக்கும் சிக்கலு. மூத்தவளுக்கும் சிக்கலு. அவங்க வீட்டுல இன்னும் கண்ணாலங்காச்சி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு!”. இங்குதான் கயவர்களின் ஏகபோக மனப்பான்மை ஊக்குவிக்கப்படுகிறது. தயவு தாட்சண்யமின்றிப் பெண்கள் வெளியே வர வேண்டும். இது நீங்கள் மட்டுமே அனுபவிக்கும் கொடுமை அல்ல. நாளை இது உங்கள் மகளுக்கும் நேரக் கூடும். உங்கள் பெயர்த்திகளுக்கும் நேரக்கூடும்.

மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் வெகுவாக உருப்பெற வேண்டும். நீங்களும் நானும் செய்யத் துணியாவிட்டால், நம் அம்மாவுக்கும் அத்தைக்கும் மனைவிக்கும் அக்காவுக்கும் தங்கைக்கும் மகளுக்கும் செய்ய வேறு யார் வருவார்?

வன்கொடுமைச் சட்டம் என்பது அடித்துத் துன்புறுத்துவதற்கு மட்டுமே ஆனது அல்ல. சொல்லாலும் வேறு பல செயலாலும் மனத்தைத் துன்புறுத்துவதற்கும் பொருந்தும். அதிலும், விதவைத்தாயிக்கு நேர்ந்த இன்னல்களுக்கான தண்டனை கடுமையானதாகக் கூட இருக்கும். 

Verbal harassment These involve the use of abusive or derogatory comments or remarks (epithets), usage of comments or words based on race. Four types of cruelty are dealt with by the law 498-A:
  • conduct that is likely to drive a woman to suicide; தற்கொலைக்குத் தூண்டக்கூடிய செயல்கள்
  • conduct which is likely to cause grave injury to the life, limb or health of the woman,
  • harassment with the purpose of forcing the woman or her relatives to give some property, அவதூறு பரப்பி அச்சுறுத்துதல்
  • Harassment because the woman or her relatives is unable to yield to demands for more money or does not give some property. பணப்பறிப்பு, நிலப்பறிப்பு முதலானவற்றை மனத்துள் வைத்துச் செய்தல்

ஆக, சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மனித உரிமைப் பேராளர்கள் எனப் பலரும் முன் வர வேண்டும். நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது இடம் பெற வேண்டும். கொடுமை செய்பவர்கள் உற்றார், உறவினர் என்கிற தயவுதாட்சண்யமின்றி விதவைப் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில், இத்தகைய வழக்குகளுக்கான கட்டணத்தை பாதிக்கப்பட்ட பெண்களிடம் பெறுவதில்லை. மாறாக, வழக்கு வென்ற பின் தண்டிப்பட்டவர் கொடுக்கும் இழப்பீட்டில் இவ்வளவு என ஒப்பந்தம் போடப்படுகிறது. இது வழக்குகள் பதிவதை வெகுவாக ஊக்குவிக்க உதவுகிறது. இதே போன்ற பழக்கத்தைத் தாயகத்திலும் கொண்டு வருதல் வேண்டும். இந்திய, தமிழ்நாட்டு அரசுகள், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாமும் செயல்பட வேண்டும். தாய்மையைப் போற்றுவோம்! கயமையை வேரறுப்போம்!!

11/10/2012

நினைப்பு


நினைப்பு

இவ்வுலகில்
எங்கு நோக்கினும்
பிளவுகள்
பிணக்குகள்
முரண்கள்
பாகுபாடுகள்
காழ்ப்பு
சலிப்பான எண்ணத்தோடு
குளக்கரையில் 
ஓடிக்கொண்டிருக்கையில்
தடுமாறி இடறி விழ
அன்பாய்க் கைகொடுத்து
தூக்கிவிட்டுச் சென்ற
முகமறியா அந்நபரின்
வாஞ்சையில்
தோற்றுப்போயின
எல்லாமும்!!

தொப்பி

நீலவண்ணத் தொப்பியை
பெட்டியின் மேலே
வைத்து விட்டு
அப்போதுதான்
சிவப்பு வண்ணத் தொப்பிக்கு
மாறியிருந்தேன்!

வேகமாய்
நிகழ்ச்சிக்கூடத்தின்
மறுகோடிக்குச் சென்று
அழுது தீர்த்தாள்
அம்மா 
நீலக்கலர் தொப்பிக்குள்ள இருந்த
அப்பாவைக் காணோம்!

அம்மா 
நீலக்கலர் தொப்பிக்குள்ள இருந்த
அப்பாவைக் காணோம்!


10/30/2012

கனிக்குழைவு

சாவு நோக்கிச் செல்லும் பாதையில்
எதிர்கொள்கிற நீயும் நானும்
ஒருவருக்கொருவர் 
செலுத்திக் கொள்வதில்
தயக்கமென்ன வேண்டிக் கிடக்கு?
மனமாரச் சொல்கிறேன்
“வணக்கம்”!

=================

தமிழரை இணைக்கும் ஒரே சொல் “வணக்கம்”!
சொல்லப் பழகு! தன்னால் பின்னால் வரும் ”இணக்கம்”!!




வினா


ஏங்க? 
ஊர்லிருந்து எங்கம்மா வரும் போது 
உங்களுக்குன்னு 
எதும் எடுத்துட்டு வரச்சொல்லிச் சொல்ல வேண்டியது 
எதும் இல்லல்ல? 
இப்படியொரு வினா 
பிறந்திருக்கத்தான் வேண்டுமா??
வினவிப் பிறக்கிறது இவ்வினா
உங்கள் கழிவிரக்கம் 
தன்னை வாரி அணைக்குமெனும்
 எதிர்பார்ப்பு எதுவுமின்றி!!




10/29/2012

சுட்டு குட்டு

மகள், சில பல தமிழ்ப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாள். பரிசுகளும் பெற்றாள். அவள் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்த தருணத்தில், அய்யா பெரியவர் நல்லகண்ணு அவர்கள் அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்ததைக் கண்ட நான், அவரிடம் வாழ்த்துகளைப் பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என மகளை வற்புறுத்தி இருந்தேன். அவளும் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரது காலில் விழப் போக அவரோ நாணத்துடன் எழுந்து கொண்டார். எண்பத்து எட்டின் கைகள் எட்டின் கைகளைப் பற்றி வாழ்த்திக் குலுக்கியது. அத்தோடு நான் அதை மறந்து விட்டிருந்தேன்.

பிறிதொரு தருணத்தில் மேடையில் அல்லாடிக் கொண்டிருந்த போது தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ”உங்கள் விருப்பத்திற்கு குழந்தையைக் கட்டாயப்படுத்தாதீர். அவர் என்ன கடவுளா? அவரும் நம்மைப் போல மனிதர்தானே?” என்றார். அதுவும் பலர் சூழ்ந்திருந்த நேரத்தில்! எனக்கும் குற்ற உணர்வு மேலிட்டது.

சில கணங்கள் கழித்து நான் விழா முன்றலுக்குச் செல்கிறேன், அங்கிருந்த திரைப்படக் கலைஞரைச் சுற்றிலும் மாபெரும் முட்டலும், நெரிசலும். மேற்கூறிய நண்பரும் அக்கூட்டத்தில் நின்று பிறவிப் பயனடையப் பெரிதும் முயன்று கொண்டிருந்தார். அந்த அவர் கூட இணையப் பெருவெளியின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு, தன் தத்துவ சிந்தாந்தங்களை உதிர்த்துக் கொண்டிருக்க, நம் நண்பரும் அவற்றைப் பின்தொடர்ந்து, உள்வாங்கி, முழுமை அடைந்து கொண்டு இருப்பாராயிருக்கும்!!

10/27/2012

நாயகன்


அக்கட்ட போயிருங்கடீ
கண்ணு வெச்சித் தொலச்சிருவீங்க
மத்தியானச் சோறுங்கறதுக்கு
வருவாரு அவரு!!

10/25/2012

மாற்றம், அது ஏமாற்றம்


இன்றைக்கு
உங்களுக்கான நண்பகல் உணவை
வெளியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள்!
கிட்டிய மகிழ்ச்சி மரித்துப் போனது
ஆமா, 
என்னோட தோழிகள்
வர்றாங்க இங்க 
மத்தியானச் சாப்பாட்டுக்கு!!

10/24/2012

ஊழ்வினை


கொலையும் செய்வாள் பத்தினி 
சொல்கிறான் கடுக்கன்காரன்! 
அவனப்படிச் சொன்னதிலிருந்தே 
பேதி வந்து பீதி பொங்கி 
குலை நடுங்குகிறது; 
வீட்டிற்குத் திரும்புவதா? 
வேண்டாமா??

10/23/2012

ஆயுதபூசை


இன்றெதோ பூசையாம்
தான் பாவித்த ஆயுதமான
சொல்லம்புகளைத்
தேடிக் கொண்டிருக்கிறாள்
நானில்லாத நேரம் பார்த்து!!