Showing posts with label அறைகூவல். Show all posts
Showing posts with label அறைகூவல். Show all posts

12/14/2011

தோற்றது யார்?

அவையில் நுழைந்தேன்
பணிவாய் அமர்ந்தேன்
வீட்டின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
ஒதுக்கில் இருக்கும் காலணி போல
எனக்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில்!
விட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவேனும்
எனக்கும் முறைவைத்து
வாய்ப்பொன்று கொடுத்தார்கள்
கூற நினைத்ததைக் கூறினேன்
ஏகடியமும் எக்காளமும்
நையாண்டியும் எள்ளலுமாய்
அவை துள்ளியது
தோற்கடிக்கப்பட்ட தொனியோடு!
புன்முறுவல் கொண்டு வெளியேறினேன்
காற்று கட்டித்தழுவியது
நீலவானம் வாழ்த்தியது
வெயிலோன் ஒளி பொருத்தி மகிழ்ந்தான்
தோற்றது யார்?!!

செய்தோற்பு தெரிந்திருந்தும் வைக்கப்படும் வாதங்கள் வீணானது அல்ல! அவை வரலாற்றுப் பதிவுகள்!!

3/15/2011

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, தாக்குதல் நடக்கின்றன. என்ன காரணம்??

"ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர். இப்போது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்??"

பொதுவாக, மற்ற இடத்துக் கட்டுரைகளை நமது பக்கத்தில் வைத்து வியாபாரம் செய்வதில்லை. எனினும், இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவதால்... இதோ, அக்கட்டுரையின் தொடுப்பு இங்கே!!

12/31/2010

அமெரிக்க இறுதிக் கணங்கள்: 2010ல் செய்ய வேண்டியவை

அமெரிக்காவின் கிழக்கு அளவீட்டுப் பகுதியினருக்கு இன்னமும் ஆறு மணி நேரங்களும், மேற்குக் கரையோர மக்களுக்கு முழுதாக ஒரு நாளும் எஞ்சி இருக்கிறது. இந்த இறுதிக் கணங்களைப் பாவித்துச் செய்ய வேண்டியன எவை? எவை??
  • கொடையளிப்பன எவையாகிலும் இருந்தால், உடனே வினையாற்றி, அதற்கான படிவத்தைப் பெற்றுக் கொளல். (All the donations should have receipt)
  • பங்கு வணிக முதலீட்டில், லாப நட்டக் கணக்குகளை ஈடு செய்து கொளல். விரைவில் விற்கக் கூடியன எதுவும் இருந்தால், இன்று விற்பதன் மூலம், இருக்கும் லாபத்தை ஈடு செய்ய இன்று விற்பதன் மூலம் வரும் நட்டத்தை 2010 கணக்கில் கொண்டு வர இயலும்.
  • வருமான வரி இதுவரையிலும் சரியாகச் செலுத்தாதவர்க்கு, இன்று முன்வைப்புத் தொகையாக அளிப்பதன் மூலம், தண்டத் தீர்வையில் இருந்து தப்பிக்க முடியும்.
  • குடும்ப உறுப்பினருள் ஏற்பட்ட புதிய வரவு மற்றும் இழப்பினைச் சரியாக முறையிடுவதன் மூலம், வருமான வரிக் கணக்கைச் சீரமைத்துச் செம்மைப்படுத்த இன்றே கடைசி வாய்ப்பு.
  • ஏதாகிலும் மருத்துவச் செலவுக் கணக்கில் மீதம் வைத்திருப்பீர்களேயானால், அதைப் பாவிக்க இன்றே கடைசி நாள்(Empty your Flex Spending Account). என் கணக்கில் இன்னமும் அறுபது வெள்ளி மீதம் இருக்கிறது. நான் கண் பரிசோதனைக்குச் செல்லலாம் என இருக்கிறேன்.
  • கூடுதலான வரிக்கு உட்பட்ட தொகையை, சிறப்பு வைப்பீட்டு நிதிக்கு மாற்றுவதன் மூலம் வரியை அடுத்த ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டுப் பலனடைய இன்றே கடைசி நாள் ( Convert to a Roth IRA if applicable).
  • இந்த ஆண்டுக்கான மருத்துவப் பரிசோதனை ஆயிற்றா? ஆகாவிடில், நாட்காட்டி ஆண்டுக்கு ஒரு பரிசோதனை எனும் நிபந்தனை உள்ளவர்களுக்கு, இன்றே கடைசி நாள்.
எல்லாமும் சரி பார்த்து ஆயிற்றா? கடைகளுக்குச் சென்று வேண்டியன வாங்கிக் கொள்ளுங்கள். மாலையை, மனமகிழக் கொண்டாடுங்கள்!

Wish you happy new year!!!

12/27/2010

ஈரோடு பதிவர் சங்கமமும் நானும்!

”டே மணி, நீ அங்கண்ணந்தண்ணன் வண்டீல போயி, அனுப்பர்பாளையத்துல இருந்து பெரிய சர்வம் ரெண்டுமு, வாணா சட்டி நாலும் வாங்கியாந்துரு!”

“செரீங்ணா; இப்ப எதுக்குங் காசு பணம்; நான் மெதுவா கணக்கச் சொல்லீட்டு வாங்கிக்கிறேன்!”

“இல்றா, இந்தா வாங்கிக்கோ...”

அனுப்பர்பாளையம் என்ன? அனுமார் மலையேயானாலும், சாதி மதம் பார்க்காது ஓடிச் செல்வோம். ஊரார் திருமணங்கள், இன்னும் பிற நல்லவை கெட்டவைகளுக்கு, பிரதிபலன் ஏதும் பாராது ஓடிச் செல்லும் பூமி, கொங்கு பூமி. காலச் சற்கரம் சுழல, சுழல, சூழலும் மாறுகிறது. மனிதர்களும் மாறிவிடுகிறார்கள். இத்தனை நியதிகளையும் வென்று, அதே பண்பாடு கூடிய நிகழ்வை மீட்டெடுப்பது என்பது எவ்வளவு பெரிய காரியம்?

தனித்தன்மைப் பேறுகள் எல்லாம், உலகமயமாக்கலில் சின்னாபின்னமாகி, சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அவற்றை வென்று, நின்று காட்டியிருப்பது இந்நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

மாலையில், அருமை நண்பர், தளபதி நசரேயன் கூறிய சொற்கள் இந்த நடுநிசியிலும் எம்மை குதூகலப்படுத்துகிறது. “மணியண்ணே, உங்கூர்க்காரவுக பெட்னா விழாவையெல்லாம் தோறகடிச்சிட்டாங்கண்ணே; தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....”

மெய் மறந்தேன்... மெய் சிலிர்த்தேன்... அவையிரண்டுமே, நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் இரண்டு விழாக்கள். அவைகள் ஒப்பிடப்படும் போது, மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுப்பது யதார்த்தமாகத்தானே இருக்கும்?

ஈரோடு பதிவர் சங்கமம், இன்னும் இன்னும் மெருகு கூடித் தமிழர் பண்பாடு போற்றும் பெருநிகழ்வாக உருவெடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், காரைக்குடி எனப் பண்பாடு கொட்டிக் கிடக்கும் பல ஊர்களிலும் முறை வைத்து ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.

சாளரத்தின் ஊடாய் வெளியே பார்க்கிறேன். கொட்டிக்கிடக்கும் பனியில், ச்சட்டனூகா மலைத்தொடர்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கிறது. வளைந்து நெளிந்து ஓடும் டென்னசி நதியானவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நானும் புன்னகைக்கிறேன், என் ஊர் மக்கள் எனும் பெருமிதத்தோடு! அவர்களை நினைத்துப் பெருமிதம் கலந்த மமதையோடு சிரிக்கிறேன்!!

நண்பர்களே, உங்களின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறீர்கள்; பொறுப்புக் கூடி இருக்கிறது. உங்களிடம் வல்லமையும் இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் திருவிழா போல நீங்களும் இன்னும் பல விழாக்களை நடத்துவீர்கள்! இது திண்ணம்!! வாழ்க நீவிர்!!!

12/11/2010

மாபெரும் பதிவர் சங்கமம்! ஈரோட்டுத் திருவிழா!!

விழைதல் என்றால் விருப்பம். அப்படியாக, விருப்பப்பட்டு நடாத்தும் எந்தவொரு நிகழ்வும் விழாவாக நம்மிடையே உருவெடுக்கிறது. மகிழ்ச்சி, நல்லுறவு, நெறிமுறை, கொண்டாட்டம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் விழா என்பது.

மகிழ்ச்சி மற்றும் இன்பம் மட்டுமே நோக்கமாய் இருப்பின், அது ஒரு களிக்கை. வேடிக்கை மற்றும் உவகை மட்டுமே நோக்காய் இருப்பின் அது ஒரு கேளிக்கை. தன்னைச் சார்ந்தவனோடு நல்லுறவு பேணி, சமூக ஓட்டத்தின்பால் கவனத்தைச் செலுத்தி விழாவண்ணம் காப்பது விழா என்பர் அறிஞர் மக்கள்.

அவ்வகையிலே, ஈரோட்டு நண்பர்கள் இரண்டாம் ஆண்டாக, பெரியதொரு விழாவாக, 2010 பதிவர் சங்கமம் எனும் பதிவர் திருவிழாவை எதிர்வரும் டிசம்பர் இருபத்தி ஆறாம் நாள் சீரோடும், கொங்கு மண்ணுக்கே உரிய சிறப்போடும் நடத்தத் திட்டமிட்டு, சிரமேற்கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

காலத்தின் தேவை இந்த விழா! பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றெல்லாம், மாற்றங்கள் பெரு வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், மாற்றத்தைப் புரிந்து தன்னைத் தயார் செய்து கொள்ளக்கூடிய கால அவகாசம் வாய்க்காத, இக்கால கட்டத்தின் மாபெரும் தேவை இத்தகைய விழாக்கள்!

தமிழகத்தை, மடியா விழாவின் யாணர் நன்னாடு எனப் புறநானூறு கூறுகிறது. மடியா என்றால் ஆண்டு தோறும் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது, மடியாத என்றும் பொருள் கொள்ளலாம். சிறப்பை இழக்காத விழாக்களால் புதுமை பெற்றுச் சிறந்த நன்னாடு தமிழகம்!

சிலப்பதிகாரத்திலே, இந்திர விழாவைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். மக்களொடு மக்களாக, மக்கட்பிணைப்பை வலியுறுத்தி, நல்லுறவைப் பறைசாற்றி, சமத்துவத்தை சீர்தூக்கிப் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி நடத்தியதுதான் இந்திரவிழா.

ஆனால், இன்றைக்கு நடக்கும் விழாக்களின் மையக்கருத்துதான் என்ன? பெரும்பாலான விழாக்களின் உள்நோக்கம் ஒன்றாகவும், வெளிநோக்கு ஒன்றாகவும்தானே இருக்கிறது?? தனிமனித விழாக்கள் அவை என்பதுதானே உண்மை?? இப்படியான ஒரு காலகட்டத்தில், பொது நோக்கோடு நடாத்தப்படுகிற விழாக்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

இன்றைக்கு, அவனியெங்கும் அன்பால் பிணைக்கப்பட்ட தமிழர்களைக் காண்கிறோம். இணையப் பெருவெளியில் எவ்வளவோ களங்கமிகு இடர்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதை எல்லாம் கடந்து நட்புக் கயிற்றால் பிணைக்கப்பட்டோர் ஏராளம். ஒருவருக்கொருவர் உதவிகள் பல செய்து கொண்டும், தத்தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொண்டும், தத்தம் மரபுசார் விழுமியங்களைப் பேணி வருவது கண்கூடு. இவர்களின் பார்வை, ஈரோட்டுத் திருவிழாவின்பால் விழுந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு, தமிழகத்தின் மூலை முடக்குகளில் எல்லாம் பதிவர்களும் வாசகர்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் என்பதும் மகிழ்சிக்குரிய ஒன்றாகும். புதியனவற்றை புரிந்து ஏற்றுக்கொண்டு, அதன் சாதக அம்சங்களை தனதாக்கிக் கொள்தல் மட்டுமே ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க முடியும்.

மேலும்,ஆண்டுதோறும் ஈரோடு மாநகரில் திருவிழா என்பதை மாற்றி, தமிழகத்தின் இன்னபிற ஊர்களில், ஆண்டுக்கொரு ஊராகத் தெரிவு செய்து நடாத்துதலே தமிழும் தமிழகமும் சார்ந்த வலையுலகப் பயனாளிகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

ஆண்டுதோறும் வேறு வேறு ஊர்கள் எனும் போது, பயனாளிகளுக்கு அந்த ஊரைப் பற்றிய தகவல்கள், வரலாற்றுச் சிறப்புகள், மரபு, கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டுமல்லாது, உள்ளூர்ப் பதிவர்களின் தலைமைப் பண்புக்கு சிறப்புக் கூட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமையக் கூடும்.

சென்ற ஆண்டு, நான் கலந்து கொண்டதில் அறிந்து கொண்ட தகவல்கள் மற்றும் பெற்ற பேறினை எம் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க இயலாது. அப்படிச் சிறப்பாக அமையப் பெற்றது அந்நிகழ்ச்சி. அதைப் போலவே, இவ்வாண்டும் சிறப்பாக அமைய எம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன்.

வலைஞர்களே, ஈரோடு பதிவர் திருவிழாவிற்குச் சென்றிடுவீர்! கட்டமைப்பு வலுவடையத் துணை புரிந்திடுவீர்!!



10/13/2010

வஞ்சகக் காதலும், வஞ்சனைக் கொலைகளும்!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!

இன்றைய ஊடகங்களில், வஞ்சகக் காதலும் அதன் நீட்சியான வஞ்சனைக் கொலைகள் பற்றிய செய்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடம் பிடித்து வருகின்றன.

பெரும்பாலானோர் வருத்தத்தோடு சொல்வது, போதிய கல்வி அறிவின்மை, காதலுக்குத் தரும் முன்னுரிமையை அதை ஒட்டி வரும் காமத்திற்குத் தர முன்வராதது, காமம் பற்றிய அறிவின்மை, நமது பண்பாட்டில் போதிய மாற்றமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இங்கேதான் நாம் அவற்றில் இருந்து சற்று மாறுபடுகிறோம். ஏன்? அன்பையும், அறத்தையும் ஏட்டிலிருந்தோ, சட்டத்தின் மூலமாகவோ, அல்லது பண்பாட்டை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ ஒருகாலும் நிலைநாட்ட முடியாது.

Love stands far away from Lust! காதல் என்பதற்கும் காமம் என்பதற்குமான இடைவெளி வெகு அதிகம். அப்படியானால், காதலின் நீட்சியானது என்னவாக இருக்க முடியும்? இங்கேதான் தமிழின் சிதைவானது நம் கண்களுக்குப் புலப்படாமலேயே போகிறது.

காமம் வேறு; மோகம் வேறு! காமத்தைச் சிந்துபவன் காமுகன்; மோகத்தைச் சிந்துபவன் மோகன்! காதலின் நீட்சி மோகிப்பது; காமத்தின் நீட்சி மாச்சரியம்!! அன்பால் உருக்கிப் புணர்வது மோகம். உணர்ச்சியால் மட்டும் உருக்கிப் புணர்வது காமம். மோகத்தின் ஒருபாதி உள்ளடக்கம் காமம்.

சரி, அப்படியானால் எந்தவொரு சாமான்யனும் காமவயப்படுவது இல்லையா? காமவயப்படுவது யதார்த்தம். அவ்வயப்பட்டு இடறிப்போவது அனர்த்தம்! இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மனக்கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

காமுகனை மிருகம் என்றார்கள். மோகத்தை வெளிப்படுத்துகையில் கொஞ்சு புறாவே என்றார்கள். ஏன்? பறவை இனத்துள், கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கு மேலானவை ஒருமிகள். விலங்குகள் அப்படியானவை அல்ல! ஒருமிகள் என்றால்? ஒருத்திக்கு ஒருவனாய் / ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பவை பறவைகள். பகுத்தறிவற்ற பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தியாய் இருக்கின்றன. இதுதான் அறிவியல்ப்பூர்வமான உண்மை.

அதே வேளையில், பகுத்தறிவுள்ளவனுக்குப் பாலியல் கற்றுத் தருவதும் அவசியமே! பழங்காலத்துக் கோவில்களிலும், கல்வெட்டுகளிலும் முன்னோர் அதைத்தான் செய்தார்கள். அதே வேளையில், கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டார்கள்.

சரி, பாலியல் குறித்தான் அறிவின்மைதான் இக்கொலைகளுக்குக் காரணமா? அப்படியானால், காமத்தை அறியாதவர்கள்தான் இக்கொலைகளைச் செய்கிறார்களா?? அப்படி அல்ல என்பதுதானே உண்மை. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே மணமானவர்கள்.

கள்ளக்காதல்? ஏதோ ஒன்றை மறைவாகச் செய்வது கள்ளத்தனம்! ஒரு மாணவனும், மாணவியும் பிறர் அறியா வண்ணம் புரிவது கள்ளக் காதல். மணமானவர்கள் புரிவது கள்ளக் காதலா?? அது வஞ்சகக் காதல். தன்னை நம்பி வாழ்க்கைக்குள் வந்தவரை வஞ்சித்துச் செய்யும் காதலது!!

இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிகழும் அனர்த்தம் அல்ல; உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால், அமெரிக்காவில்தான் கிட்டத்தட்ட 40% பேர், வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தவறைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சென்ற தலைமுறையினரோடு ஒப்பிடும் போது, பெருமளவில் குறைந்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஆய்வுகள்.

குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?? சமூகத்திலே, அப்படியானவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தத் துணிந்தார்கள். பதவி இழந்த அரசியல்வாதிகள், வாய்ப்பிழந்தவர் வரிசையில் விளையாட்டு வீரர்கள், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள்.... என எண்ணற்றோர்.

கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு முதலானவற்றில் மணவாழ்க்கையின் போதான விசுவாசத்தைச் சிலாகித்துப் படைப்புகள் படைத்தார்கள். அறம் என்பது சொல்லித் தெரிவதில்லை; நடைமுறையில் மட்டுமே வரும்! Practicing is better than preaching!!

சென்ற வாரம் கூட, Blue Cross Blue Shield எனும் நிறுவனத்தில் யாருக்கோ பிறந்த நாள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டு வருகிறார்கள். ஒருவர் எழுந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எப்படி??

”I am Tom Verego, married to Darlene Verego for 36 years!”, எனச் சொல்லி அமர்கிறார். கரவொலி விண்ணை முட்டுகிறது. அதற்காக, மணமுறிவு கொண்டோரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பது அல்ல. ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பதைப் பெருமையாய் நினைப்பதைத்தானே இது சொல்கிறது?!

இத்தனைக்கும் மேலாக, பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டம்தான். மணமான ஒரு பெண்ணை, அப்பெண்ணின் இசைவோடு காமத்திற்கு உட்படுத்தியிருந்தாலும் அது சட்டப்படிக் குற்றம்.

Adultery (முறையற்ற உறவு)க்கு மிச்சிகனில் ஆயுள் தண்டனை என்றால், இந்தியாவில் பிரிவு 497ன் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை. தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எவ்விதத் தண்டனையும் இராது. ஆணுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். (கண்ணுகளா, நாம பார்த்து இருந்துக்கலாமப்பூ...)

மேலும், இது வஞ்சகக்காதல் ஆகாதென வாதிடுவோர் பலர் இருக்கக்கூடும். கட்டிய மனைவி அல்லது கணவனின் கவனத்திற்கு உட்பட்டுச் செய்தால் அது வஞ்சகக் காதல் அல்லதான்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுச் செய்யும் பட்சத்தில், அது வஞ்சகக் காதலே; எவரும் அங்கீகரிக்கப் போவதில்லை! அங்கீகரிக்கவும் கூடாது!!

வஞ்சகக் காதலின் நீட்சியாய் நிகழும் வஞ்சனைக் கொலைகள் தவிர்க்கப்பட வேண்டுமாயின், மணமுறிவுகள் எளிதாக்கப்பட வேண்டும். ஊடகங்கள், கட்டற்ற சுதந்திரத்தை வரைமுறையோடு பாவித்து, வக்கிரம் மற்றும் வன்முறைப் படைப்புகளைத் தவிர்த்து, அற்ம்(ethics) என்பதைக் கையில் எடுத்தாலொழிய இதற்கு விமோசனமில்லை!!!

10/08/2010

பொருள் பேசுகிறது!

எல்லாருக்கும் வணக்கம்! என் பெயர் “பொருள்”. நான் எங்கும் இருப்பேன். தூணாகவும் இருப்பேன். துரும்பாகவும் இருப்பேன். நான் இல்லாத நாடு இல்லை. இல்லாத ஊர் இல்லை. இனியும் சொல்லப் போனால், நான் இல்லாவிட்டால் எந்த மனிதரும் இல்லை.

அஃறிணை எனத் தரம் தாழ்த்திப் பேசினாலும், நிலை அதுதான் உயர்திணையே! பேசுவது மட்டும், வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர்! உயர்திணைக்கு எதிராக, கீழ்திணைதான் வரும். ஆனால், நாங்கள் அப்படி எதையும் கீழ்மைப்படுத்த விரும்பவில்லை. எனவேதான், அஃறிணை என்கிறோம் என வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர் குலத்தோர்!

ஆனால், யாராவது என்னைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறார்களா? என்னை, மிகக் குறைந்த விலையில் வாங்குவதையும், அதிக விலையில் விற்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள். நான் ஒன்றும், சும்மா பிறந்து விடவில்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் அழிவில்தான் பிறக்கிறேன்.

என்னை, உயிர்ப்பிப்பதும் மனிதர்களே! உயிர்ப்பித்துப் பாவித்து, பாவித்துப் பலன் பெறுவது மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். இன்றைக்கு ஈரோடு கதிர் அவர்கள், அவர்தம் இனத்திற்கு நேரும் இன்னலைப் பற்றி எழுதி இருக்கிறார். மகிழ்ச்சி! ஆனால், இதோ நான் உயிர்க்கும் கதை! நீங்களாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!


மாந்தர் குலமே, என்கதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது, என்னைப் பாவிப்பதைக் குறைத்து, பாவிக்கும் முறைகளைச் செம்மைப்படுத்தி, மற்றன அழிவதைக் காத்து, நீரும் மகிழ்வாயிருக்கத் தெரிந்து கொள்வீரே!

நான், எப்போதும் போல, அஃறிணையாய் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்... செத்துப் போகிறேன்... உயிர்த்து, உழைத்து, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்.

-பொருள்.

10/07/2010

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-2!!

சட்டனூகா, அக் 07: வீட்டில் இருக்கும் மகனோ அல்லது மகளோ, தனிமையாக இருக்க மட்டுமே விரும்புகிறாரா? மாலையில், காரணமெதுவும் இன்றி நேரங்கழிந்து வீட்டுக்கு வருகிறாரா? பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் காணப்படுகிறாரா? சரியாகச் சாப்பிடுவது இல்லையா??

இதில் எது ஒன்று உண்மையாக இருந்தாலும், உங்கள் பிள்ளை உங்களை விட்டு நழுவிக் கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அமெரிக்காவில், இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் விபரீதம் என்னவாக இருக்க முடியும்?

பள்ளிகளில் மற்றவரைக் கேலி பேசியும், நையாண்டி செய்தும், இணையத்தினூடாக அவதூறுகளைப் பரப்புவதுமே! இணையத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்று வரும் சமூகக் குமுகங்களின் ஊடாக, இத்தொற்று நோயானது வெகு எளிதில் பரவி வருகிறது என்பதே இன்றைய நிலை.

இணைய வசதி அவ்வளவாக இல்லாவிட்டாலும் கூட, மேற்கத்தியக் கலாசாரத்தின் தாக்கம் மற்றும் சமகால நிகழ்வுகள் பற்றியதான தகவல்கள் இந்தியக் கல்விச் சாலைகளிலும் துரிதகதியில் நிலைகொண்டு வருவது கவலையளிக்க்க் கூடியதாகவே உள்ளது.

நிராகரித்தலும், கேலிக்கு உள்ளாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதும் பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட கொடிய செயல்கள். அப்படி இருக்கையில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மனதை, அவ்வாறான செயல்கள் எவ்வளவு தூரம் பதம் பார்க்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை.

அவ்வாறான மனம் நோகடிக்கப்பட்ட குழந்தைகள்,  ஆற்றுப்படுத்தலின்றித்   தெரிவு செய்வது ”தற்கொலை” எனும் முடிவைத்தான்! இளம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சைப் புகுத்துவதால் ஏற்படும் அதிமோசகரமான விளைவுகளைத் தகர்த்தெறிவது பெற்றோரால் மட்டுமே முடியும்.  இதோ, தற்கொலை செய்து கொண்ட ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் தாய் சொல்வது இதுதான்:

Donna Witsell has a message for parents: "It happened to my daughter, it can happen to yours too. No one is untouchable. No one is untouchable."

Bullying is in our schools, and it's online. Why do kids do it? What can be done to put an end to it? 

சுட்டி-1

சுட்டி-2
சுட்டி-3

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-1!!

7/28/2010

தமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....

கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப் பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!

தமிழ் வாழ்க!

100% கழிவு, தமிழுக்கு??

தமிழ்ச் சொல்? அருகில் இருக்கும் மின்கம்பத்தில்?!!!


கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில் எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும் பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

இராவத்தூர், ராவத்தூர், ராவுத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??

7/12/2010

சார்ல்சுடனும் பனை நிலமும்!!

http://www.dailymotion.com/swf/video/xdztpb_charleston-fetna-2011-movie_travel

அடுத்த ஆண்டு தமிழர் திருவிழா நடக்கப் போற இடம் சார்ல்சுடன் அப்படின்னு சொன்னதும் நான் சொன்னேன், கூட்டம் கூட்டுறது கடினமாச்சேன்னு. ஏன் அப்படி சொன்னேன்னா, அந்த ஊரு ஒரு கோடியில இருக்கிறதுதான் காரணம். ஆனா மக்கா, இவங்க இருக்கிற சுறுசுறுப்பைப் பார்த்தா, அடுத்த ஆண்டு விழா வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றுல ஒரு மாபெரும் திருப்பு முனையா இருக்கும் போல இருக்கே??

ங்கொய்யால, பனை நிலமா? கொக்கா?? பொளந்து கட்டுங்க.... உங்க நாட்டுப்புறத்து வாத்தியத்துக்கே வருவாய்ங்கய்யா மக்கள்! வாழ்த்துகள்!!

6/03/2010

நிந்திதத் தமிழ்!



அறிவுப்பூர்வமாவதற்கு
எப்படியெல்லாம்
உணர்ச்சிவயப்பட வேண்டி இருக்கிறது
இவரால்?


குழந்தையை
அன்பு கலந்த வாஞ்சையோடு
அரவணையுங்கள் எனப்பகருதலற்று

எமோ...மோசனல், ரேரேஃஃஃஃசனலென
தமிழை நிந்தித்துத்
தன் பை நிரப்புதலோ??

6/02/2010

பெண் நடிகை?!

நெஞ்சம் என் மொழிக்காகவே துடிக்கிறது
மற்ற மொழிகளிலும் தாழ்வாய்
என்மொழியைச் சிலர் நினைத்திடலாம்
பொது மன்றங்களில் அது
பேசப்படாமலும் போகலாம்; ஆனால்
எனக்கு உயர்ந்தது என் தாய்மொழியே!
என் அவார் மொழியானது
நாளை உதிருமெனில், சாவு
என்னை இன்றே சூடிக்கொள்ளட்டும்!

ஏன்? ஏன்?? இவன் நல்லாத்தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு அப்படின்னுதானே நினைக்குறீங்க? நமக்கெல்லாம் இந்தளவுக்கு நெஞ்சுரம் வந்திடுமா என்ன?? நான் ஒரு கோழைப்பயல்ங்க.... பிரச்சினைன்னு வந்தா, எட்டு காததூரம் ஓடிடுவேன்... இஃகிஃகி!! சரி, அப்ப யார்தான் இதைச் சொன்னது??

தசுகிசுத்தான் நாட்டைச் சார்ந்த பாவலன் இரசூல் கம்செத்தோவ் சொன்னதுதாங்க இது. சரி, அவங்க நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு? வெறும் 80 இலட்சம்தாங்க! தசிக்ங்றது அவங்க மொழி!! எல்லாருமே, தூய தசிக் மொழியிலதான் பேசிப் புழங்குறாய்ங்களாம். ஆண்டுக்கு ஆண்டு, அம்மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை கூடுதாமாங்க. தமிழ்நாட்டுல??

இரசூல் கம்சொத்தோவ் போலப் பாடி புகழ் பெற முடியாதுதான். ஆனாலும், நமக்குன்னு ஒரு கிருதா இருக்கத்தான செய்யுது?


உங்களால மட்டும் எப்படி ஆங்கிலச் சொல் கலக்காமப் பேச முடியுது? அதுவும் அமெரிக்காவுல இருந்துட்டு, அமெரிக்காவுல இருக்கிற சகதமிழர்கள்கிட்ட எப்படிச் சரளமாத் தமிழ் பேசமுடியுதுன்னு அடிக்கடி மக்கள் கேக்குறாய்ங்கள்ல, நம்மையும் பார்த்து??

அவங்க அப்படிக் கேட்கும் போதெல்லாம், வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் சொன்னதுதாங்க நினைவுக்கு வரும். அவர் அப்படி என்னதான் சொன்னாரு??

“பழமையண்ணே, எதிர்ல நிக்கிறவன் தமிழன்னு தெரிஞ்சாப் போதும்.... நமக்கு சுட்டுப் போட்டாலும் தமிழைத் தவிர வேறெதும் வராதுண்ணே! நானும் மேலாளரா இருக்கேன்... வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்!”

தளபதி, இப்படி சொல்லிச் சொன்னதுல இருந்து நாமளும் அதேதானுங்க. கூடவே, வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவைத் தலைவர் சொல்றதும் நினைவுக்கு வரும். அவர் அப்படி என்ன சொன்னாருன்னு கேக்குறீங்களா??

“நேரம் இல்லை; விபரம் தெரியாது; பேச்சு வராது அப்படின்னு நினைச்சா, எதுவொன்னும் செய்ய முடியாது. ஆனா, மனசு வெச்சிட்டா எதையும் செய்ய முடியும்!”, அப்படின்னு சொல்லிச் சொல்வாரு. இதுவும் எனக்குப் பிடிச்சிருக்கு; நிதர்சனமும் கூட!

ஆகக் கூடி, என்ன சொல்ல வர்றேன்னா, தமிழனைக் கண்டா தமிழ்லதான் பேசுறதுங்றதுல மனசு வெச்சா, தன்னால தமிழ் வந்து நாக்குல தாண்டவம் ஆடும்ங்றேன்... என்ன நாஞ்சொல்றது??

இப்படித்தான் பாருங்க, நம்ம பங்காளி ஒருத்தன் எடக்குமுடக்காவே பேசிட்டு இருந்தான். எங்க நாஞ்சொல்றதை எல்லாம் தமிழ்ல சொல்லு பாக்கலாம்னான். செர்றா பங்காளி, பேசு பாக்கலாம்னேன் நானு!

“யார்கோட கால்ல, இவ்வளவு சீரியசாப் பேசிட்டு இருக்கே?”

“அழைப்புல யார்றா அது, வெகு மும்முரமாப் பேசிட்டு இருக்கே?”

“நான் இப்ப பிசி...நீ கேக்குற கொசுடீன்க்கெல்லாம் ஏன்சர் குடுத்துட்டு இருக்க முடியாது!”

“நான் இப்ப ரொம்ப முசுவு... நீ கேக்குறதுக்கெல்லாம் மறுமொழி குடுத்துட்டு இருக்க முடியாது!”

இப்படியே சித்த நேரம் மாறி மாறிப் பேசிட்டு இருந்தோம். கடைசில, மிரண்டு போய், கை கூப்பி வணக்கம் சொல்லத் துவங்கிட்டான்.


அதே போல வார இதழ்கள்ல அடிக்கடி பார்க்கிற சில சொற்கள், எரிச்சல் வர்றா மாதிரி இருக்கும் பாருங்க...

பெண் நடிகையுடன் தொழில் அதிபர் இரகசியப் பயணம்னு எழுதுவான். ஏன்டா, என்னைக்குடா ஆண் நடிகைய எங்களுக்கு காண்பிக்கப் போறீங்க? எனக்கு வெவரந் தெரிஞ்ச நாள்ல இருந்து, பெண் நடிகை, பெண் தோழி, பெண் வேலைக்காரின்னு பெண்களாவே சொல்லிச் சொல்றீங்களே?


..ங்கொய்யால, நடிகை, தோழி, வேலைக்காரப் பெண்மணி அப்படின்னு எழுதினா, கிளுப்புகிளுப்புத் தட்டாதோ??

அதைவிடக் கொடுமை... நான் நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி ஊருக்குப் போயிருந்தப்ப பார்த்தனுங்க.... முதல் மாதிரி, பொடி பொட்டுக எல்லாம் பாவாடை, தாவணி, உள்ளூர்த் தையல்காரர் தைச்ச சட்டை இதெல்லாம் உடுக்கறது கிடையாது... எல்லாம், திருப்பூர் பின்னல்ச் சட்டைதாம் போங்க.... சரி, காலமாற்றம்... நாகரிக மேம்பாடு... இருந்துட்டுப் போகட்டும்....

Love is sweet... Look at here... இப்படித்தான் சொல்லுது அதுல இருக்குற வாசகம்... ஏப்பா, என்னைக் கவனி, காதல் இனிது... பொன்னேந்தல்... இப்படியான வாசகங்கள் திருப்பூர் அச்சுல ஏறாதா?? என்னமோ போங்க...

என்னமோ சொல்ல வந்துட்டு... என்னமோ பேசிட்டு இருக்கம்பாருங்க... மக்கா, இன்னும் சரியா ஒரு மாதந்தான் இருக்கு... நம்ம வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோட தமிழ் விழாவுக்கு.... கனெக்டிகெட்ல நடக்குது இந்த ஆண்டு.... எல்லாரும் வரப் பாருங்க...

விழாவுக்கு இன்னமும் பதியாதவங்க, உடனே பேரவையோட இணைய தளத்துல போயிப் பதிஞ்சுடுங்க... முக்கியமா, போக்குவரத்து, விடுதி வசதிகளை உடனடியாச் செய்யப் பாருங்க... சரியா?


செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

5/31/2010

பதிவுலகச் சீர்கேடும், மூன்று நாள் விடுப்புக்கு வந்த கேடும்!!

எனதருமை வாசகர்களே, நண்பர்களே,

இப்படியானதொரு இடுகையை இடுவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. மன்னிக்கவும்!!

May 28 மாலை: சட்டநூகா நகரில் இருந்து சார்லட் நகருக்கு வந்தடைதல்

May 28 இரவு 9.30 மணி: சொந்த அலுவல் காரணமாக, நண்பர், சகபதிவர் ஆருரன் அவர்களுக்கான அழைப்பு

நீண்ட நாட்களாக அழைக்காமல் விடுபட்டுப் போனதற்கான விளக்கம்; சொந்த அலுவல் குறித்தான அளவளாவுதல்; இடையூடாக, பதிவுலகத்தில் ஏதோ சலசலப்பு என்று மட்டுமான தகவல்

May 29 சனி, காலை 7.30: நண்பர், சகபதிவருமான கதிர் அவர்களுடன் மடலாடல்

பூக்காரி எனும் இடுகையை வாசிக்கச் சொல்கிறார். வாசிக்கிறேன். மிகவும் எரிச்சலுற்றேன். பின்னூட்டங்கள் வாயிலாக, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர முடிந்தது. தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டதை அடுத்து, அலைபேசியில் கதிருடன் அளவளாவல். முழு விபரமும் தெரிய வருகிறது. வருத்தம் தெரிவித்ததோடு, அமைதி காக்குமாறு முடிவும் செய்தோம்.

May 29 சனி காலை 8.10: நண்பர், உடன்பிறவாச் சகோதரர் புதுகை அப்துல்லாவுக்கு அழைப்பு

சொந்த அலுவல் குறித்தான அளவளாவல். அவர் கேட்ட அலுவலை முடித்துத் தருகிறேன் என உறுதி கூறல். உரையாடல் முடியும் தருவாயில், நர்சிம் அவர்களது மேலான அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்தல். சில வினாடிகள் நேரமே அது குறித்துப் பேசிக் கொண்டோம்.

May 29 சனி காலை 9-10 காலை: அனைத்து இடுகைகளையும் வாசித்து, அந்தச் சிறு குழந்தையை நினைத்து நினைத்து பெரும் வருத்தம். மீண்டும் கதிர் அவர்களுக்கு அழைப்பு. இரு சாராருமே காரணம், எனினும் கொச்சைத்தனமான இழிவான சொற்களை நினைத்து அவமானமுற்றோம்.

May 29 சனி, நண்பகல்: பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கள் இல்லத்திற்குப் பயணம்

நித்திரையில் இருந்து, எழுந்து வந்தவருடன் செய்திப் பரிமாற்றம். அண்ணன் அவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினார். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றியே பேச்சு. குடும்பத்தினரும் கவலையில் பங்கு கொள்கிறார்கள். இடையூடாக, மீண்டும் கதிருக்கு அழைக்க, அவருடன் சீமாச்சு அளவளாவுகிறார். எங்கள் வீட்டுச் சகோதரிக்கு நேர்ந்த இடர் ஆகவே நினைத்துப் புலம்பினோம். வெளியே எங்கும் செல்ல மனம் வரவில்லை.

May 29 சனி இரவு: திரு. மாதவராஜ் இடுகை. மனம் மேலும் இறுகி, நித்திரை கொள்ளாத த்விப்பில். அடுத்த சில மணி நேரங்களில், நட்சத்திர இடுகை. பிற்படுத்தப்பட்ட பெண் என, மெதுவாக சாதி தலையெடுக்கிறது.

இதுகாறும், புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து கொண்டு, சொந்தச் சகோதரியாய் நினைத்த நாங்கள் மனிதர்கள் அல்லவா?? சாதியைப் பார்த்துத்தான் கவலை கொண்டோமா??

கவலையினூடே, அவள் ஒரு தொடர்கதை எனும் பெண்ணின் பெருமையைப் பறை சாற்றும் படத்தைக் காண்கிறோம். முற்போக்கு சிந்தனையும், அதேவேளையில் கட்டுப்பாடு தவறாமையும் அப்படத்திலே வெளிப்படுகிறது. அதைச் சிலாகித்துக் கொண்டே, தமிழ்மணத்தைத் தட்டுங்கால், செந்தழல் இரவியின் இடுகை.

நேர்த்தியான, மனதிற்குப் பிடித்தபடியாக இருந்தமையால், வணக்கமும் பரிந்துரைக்கான ஒப்பமுக்கும் செலுத்தி அரைகுறை நித்திரை கொள்கிறேன்.

May 30 ஞாயிறு காலை: பதிவுலகம் எங்கும் இதேதான். வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.

May 30 ஞாயிறு நண்பகல்: மனக்குழப்பத்தில் எது செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே அமைதி காப்போம் என ஒருமனதோடு நண்பருகளுக்குமான ஒரு அறிவுறுத்தல். சீமாச்சு அண்ணாவின் இல்லத்திலேயே உறக்கம்.

May 30 ஞாயிறு, மாலை 7 மணி: பதிவர், சகோதரி முகுந்த் அம்மா அவர்கள், வேறொரு நண்பருக்கு அழைத்து, அவரிடம் இருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, என்னை அழைக்கிறார்கள்.

என்ன சொல்வதென அறியாது, அலைபேசியை அருகில் இருந்த சீமாச்சு அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். கண்ணீர் விடாதது குறையாக அவர் புலம்ப, நாங்கள் இருவரும் சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறோம்.

May 30 இரவு: என் வீட்டாருடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவர்களோ திகைத்துப் போய், அச்சமுறுகிறார்கள்.

May 31 காலை 5 மணி: மீண்டும், தமிழ்மணம் வாசம்; இடுகைகள் வாசித்து, மனநோய் மேலிடுகிறது. என் சார்ந்த நண்பர்களுக்குச் சொல்வதன் மூலம், என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இடுகைகள் இட்டு, மேலும் தீயில் எண்ணெய் வார்க்கவா? செந்தழல் இரவி அவர்களுக்கு மட்டும் நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் மடலாடல் வழியாக. இரு நாட்களும் சரிவரத் தூக்கமின்மையால், நித்திரையில் ஆழ்ந்து போகிறேன்.

May 31 காலை 9 மணி: உள்ளூர் நண்பர்களிடம் உரையாடல். அனைவருமே, ஒருவிதமான இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார்கள். அதன்பொருட்டு, மீண்டும் மடல். பொறுமையாக இருப்போம் என. சுயலாபம் கருதி என்றும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அறிவுரை சொல்வதன் மூலம், நானும் அதைக் கடைபிடித்தாக வேண்டுமே??

May 31 காலை 10 மணி: வினவு குழுமத்தின் இடுகை. நொந்து போயிருந்த மனது, மேலும் கசங்கிக் கண்ணீர் வடித்தது. தோழர்களே, சாதி பார்த்துத்தானா, நாங்கள் இந்த மூன்று நாட்களும் மனக்கண்ணீர் வடித்தோம்?? இடுகை இடாத காரணத்தால், நாங்கள் கள்ள மெளனிகளா ஆனோம்?? என்னால், என் நண்பர்களும் அவச்சொல்லுக்கு ஆளானார்களே?? செந்தழல் இரவியாரே, இதற்குத்தானா உம்மை நாங்கள் வணங்கினோம்??


முன்பின் பார்த்திராத சகோதரிக்காய், சகோதரனுக்காய், பாரெங்கும், எத்துனை எத்துனை தமிழ் உறவுகள் சாதி பார்க்காது, துஞ்சாது அல்லல் உற்றனரோ??


5/30/2010

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

கடந்த இரு நாட்களாக, மின்தமிழ் மடலாடற் குழுவில் நான் இட்ட இரு இடுகைகளும் சிறந்த விவாத இழைகளாக உருவெடுத்தன. அதிற்கிடைத்த ஒரு தகவல்தான் இது!

லெனின் சோவியத் ருஷியாவின் ஆட்சிச் தலைமையில் இருந்த போது, மேடையில் பேசக் கூப்பிட்ட தருணத்தில் தன்னைப் புகழ்ந்தவர்களைப் பார்த்துச் சொன்னார். ”தோழர் லெனின் என்பதற்குமேல் ஒரு வார்த்தை என்னைப் பற்றிப் பேசக்கூடாது. மக்களிடம் பேசவந்த கருத்தைப் பேசுங்கள்” என்று.

இதையே பணிவோடு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பாராட்டும் ஒவ்வொரு சொல்லும் உங்களிலிருந்து என்னை அன்னியப் படுத்துகிறது. நமக்குள் உள்ள நட்பில் இடைவெளியையும் எனக்கு மனச்சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

அறிவு ஒரு கூட்டுமுயற்சி. பலபேர் சேர்ந்து தேர் இழுப்பதுபோல், பலபேர் சேர்ந்து சிந்திக்கும்போது, உங்களுக்குத் தெரிந்ததை நானும், எனக்குத் தெரிந்ததை நீங்களும் என ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கிறோம்.

அகமதாபாத்தில் பேச அழைத்தார்கள். அங்குத் தமிழர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். இது 80களில் நடந்தது. வடஇந்தியாவில் முருகன் கோயில் உள்ளதா எனக் கேட்டேன். அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். ஏன் என்றேன். தந்தைக்கே பாடம் சொன்னவன் முருகன். தந்தையை விஞ்சியவன். தகப்பன் சாமி. இங்குள்ள மக்கள், எவ்வளவு வளர்ந்தாலும் தகப்பனுக்குப் புத்திசொல்லும் பண்பாடு இல்லை. அதனால் முருகனையும் இவர்கள் ஏற்பதில்லை என ஒருவர் சொன்னார்.

அக்கருத்து சரியா தவறா என்பது வேறு. ஆனால் தமிழ் நாட்டில் அறிவு பெரியவரிடம் இருந்தாலும் சிறியவரிடம் இருந்தாலும் மகனிடம் இருந்தாலும் ஏற்றுப் போற்று எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

”அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்...
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!”

என ஒரு அரசன் பாடுகிறான்.

எல்லோரும் ஒவ்வொருவிதத்தில் அறிவு சான்றவர்கள். எனக்கு இலக்கணமும் தத்துவமும் தெரியுமென்றால் வேறு சிலருக்கு கம்யூட்டரும், மருத்துவமும் தெரியும். பிறர் திறமை நமக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.

பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!!

அன்புடன்
ஆராதி


5/25/2010

புணரின் புணருமாம் இன்பம்!

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்!
-நாலடியார்

மரண தண்டனை; வாழ்வதற்காகவே உயிர்த்த உயிரை வலுக்கட்டாயமாக மாய்த்தல்! ஆறறிவு உள்ள மனிதன், மற்றொரு ஆறறிவு உள்ள மனிதத்தைக் மரித்துப் போகச் செய்கிறான்.

விளை நிலத்தில் ஊடுருவிய களையை அகற்றுதல் போன்றது என்றும் வாதிடுவான் மனிதன். மனிதனை மனிதனே மனிதனாக்கவியலாது தோற்றுப் போய், மனிதம் அற்ற செயலைச் செய்யும் காரியமே அதுவென வாதிடுபவனும் மனிதனே! இவ்விரு வாதங்களையும் இடத்திற்கேற்ற வியந்தோதலுடன் இன்னொரு மனிதன்!!

இன்றைய நாளில், இகம் போற்றவல்ல இந்த அவனியில் மரணதண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் ஐம்பத்தெட்டு; அது மனிதமற்ற செயலென ஒதுக்கி வைக்கும் நாடுகள் தொன்னூற்று ஐந்து; இதுவும் அதுவுமாய் இருப்பவை எஞ்சிய நாடுகள்!!

இங்கேதான் நாம் ஒன்றைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். யாரும், யாரையும் தூற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரவர் அவரவர் வாதங்களில், எண்ணங்களில் ஊன்றி நிற்கின்றனரே அல்லாது, காழ்ப்பும் கடுமையும் குடிபுகுதலுக்கு இடம் கொடாது அன்றைய தினத்தை அருள் நீங்காப் பற்றுதலுடனே கழிக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில், ஒரு சில மாகாணங்கள் மரண தண்டனை என்பது சட்டத்திற்குப் புறம்பானது எனச் சொல்லுகையில், அண்டைய மாகாணங்களில் அது சட்டத்தின் ஆதரவுடன் நிமிர்ந்து கோலோச்சுகிறது. இரு மாகாண மக்களும் காழ்ப்பை உமிழ்ந்து, அன்பைத் தொலைத்து, மனதை நோகடித்துக் கொண்டா இருக்கிறார்கள்? மாறாக, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இடத்தின் தன்மைக்கொப்ப தம்மையும் ஆட்படுத்திக் கொண்டல்லவா இருக்கின்றனர்??

எந்த மாகாணத்தில் மரண தண்டனையைச் சட்டத்தில் சேர்க்கவில்லையோ, அதே மாகாணத்தில் கருக்கலைப்புக்குச் சட்டத்தில் இடமளித்து இருக்கிறார்கள். அல்லது, அதற்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் இருக்கிறார்கள் என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?

எந்த மாகாணத்தில் மரண தண்டனைக்குச் சட்டத்தில் இடமிருக்கிறதோ, அங்கே கருக்கலைப்புக்கு இடமில்லை. இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எனினும், பெரும்பாலான மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அதற்கு ஒத்துழைப்பும் செய்கின்றார் பெருமக்கள்.

ஆயினும், அவரவர் எண்ணங்களையும் வாதங்களையும் அவர்கள் கைவிட்டு விடவில்லை. வாய்ப்பு அமைகிற போதெல்லாம் துணிச்சலாக, தத்தம் கருத்துகளை உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணர உணரும் உணர்வுடையாரை நாடிச் செலல் தவறல்லவே?!

நடப்புக் காலகட்டமென்பது தமிழினத்திற்கு மட்டும் அல்ல; ஏனைய பல்வேறு தேசிய இனங்களுக்குமான நெருக்கடி மிகுந்த காலம். மாற்றங்கள் பெருவேகம் எடுத்துச் சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று, அண்டபேரண்டத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன! அதன் வேகத்தில் மனிதங்கள் மரித்துப் போகின்றன!!

நம்மில் எத்துனை எத்துனை முரண்பாடுகள்? இறப்புகளை மறப்புகளாக்க ஒரு கூட்டம். மறப்புகளை இருப்புகளாக்க ஒரு கூட்டம். மனிதம் மறந்தவரென ஒரு கூட்டம். செம்மொழி மாநாடு என ஒரு கூட்டம். அதாகாவென ஒரு கூட்டம். ஊழலே திறமென ஒரு கூட்டம். ஊழலுக்கு எதிர்ப்பு என ஒரு கூட்டம். எதிர்த்தே ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். எதிர்ப்பவனை எதிர்ப்பவர் எவரும் துரோகியரென ஒரு கூட்டம். எதிர்ப்பவர் எவரும் பிழைக்கத்தெரியா மடையரென ஒரு கூட்டம்.

கொள்கைப் பற்றுடன் ஒரு கூட்டம்; பற்றிருந்தும் ஒழுகாரென ஒரு கூட்டம்; கொள்கை எதுவுமற்று ஏமாறுபவர் ஒரு கூட்டம்; ஏமாறுபவரென நடித்து ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். மொழியென ஒரு கூட்டம். மொழியைக் கேலி செய்து அற்ப மகிழ்வு பெறுபவர் ஒரு கூட்டம். இப்படி, வகை வகையாய் எண்ணிலடங்காக் கூட்டங்கள்!!

இவ்வகையான கூட்டங்களுக்குள், மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது; எண்ணிக்கையில் மிகக் குறைவாய்!!

  • என்மொழியை, எண்ணங்களை ஆராதிக்கிறேன்; ஆராதிக்க மறுப்பவரைக் கடிந்து கொள்ளேன்! ஆராதிக்க முனைபவனை எள்ளி நகையாடுவதை நிராகரிக்கிறேன்!!


  • எந்தவொரு தேசத்தையும் நேசிக்கிறேன். மனிதமே மகத்துவம் என என்றும் போற்றுவேன். மனிதர்கள் அனாதரவுகள் ஆவதைக் கண்டு மனம் நோகிறேன்!!


  • அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கிறேன். மாண்பு போற்றுவேன். மாற்றங்கள் கண்டு ஒரு போதும் அஞ்சேன்!!


  • எண்ணுவது இழுக்கன்று; தோற்பது இழிவுமன்று; மற்றவர் உணர்வுகள் மதிக்கப்படுவது ஈனமுமன்று!!
--பழமைபேசி.


5/19/2010

விடாமுயற்சி

இந்தக் காணொளியானது வேடிக்கையாக இருந்தாலும், அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு..... ஏ அப்பா.... வணிகமயத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர் மத்தியில் இப்படியுமான மகாத்மாக்கள்!


மாப்பு, முயற்சியைக் கை விட்டுவிடாதீர்கள்! வாழ்த்துகள்!!

4/24/2010

நானும் இருக்கேன்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!

பரபரப்புச் சூறாவளி ஈன்றி
கவனத்தைக் கொய்து
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அடுத்தவன் நைந்துகொள்ள
நின்தாள் அவன் சிரம்மிதிக்க
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அந்தரத்தை உடைத்து
கருவறைக்குள் அத்துமீறி
மாந்தநேயமது கொன்று
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!


அடைபட்ட நிலையில் மாந்தன்....


































12/19/2009

செந்தமிழ்!

சர்க்யூட்அவுசு காம்பவுண்டுல ஆபீசு
ஸ்காலர்கள் ஸ்டே செய்றதுக்கு ரூமுக
கொடிசியா ஹாலுக்கு போற ரோடு
த்ரீ மன்த்சுல ப்ரிட்ஜ் ரெடி ஆயிரும்
கெஸ்ட் ரிசீவிங் கமிட்டில அவரு மெம்பரு
நம்மாளு ஹெல்த் கமிட்டிப் பிரசிடெண்ட்
எல்லா காலேஜ் ஆசுடலும் ஹாலும் ப்ளாக் செய்தாச்சு
மாநாட்டு புக்ஸ்டால் கான்ட்ரேக்டுக்கு பேசணும்
பார்க்கிங் டெண்டர் பிக்சு ஆயிடிச்சி
தேர்டு டே ப்ரசென்ட்டேசன் நீ செய்யுற


ஆம், கோயம்பத்தூரில்
என்னைச் சுற்றிலும்
உலகத் தமிழ் செம்மொழி
மாநாடு வேலைகள்
துரித கதியில்!

11/20/2009

ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை!

மக்களே, வணக்கம்! வேலை, வேலை.... இன்னைக்குதான் அப்படியே ஒரு இடுகை ஒன்னை இடலாமுன்னு, இஃகி! நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் உள்வாங்கின கிராமங்கள். நகர வாடையே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்கமின்னா பெதப்பம்பட்டி, மேற்கமின்னா நெகமம், வடக்கமின்னா செஞ்சேரிமலை, அவ்வளவுதான்!

எப்படியும் ஆறுமாசத்துக்கு ஒரு வாட்டி, காதுவலியோ தொண்டை வலியோ வரும். அப்பவெல்லாம் உடுமலைப் பேட்டை பழனிரோடு/தளிரோடு மொக்குல வைத்தியநாதன் மருத்துவர்கிட்டப் போவேன். அம்புட்டுதேன்! இப்பிடியே மொதல் பதினஞ்சி வருசமும் போச்சுது. அப்பறம் பொள்ளாச்சி, கோயமுத்தூர்னு சில வருடங்கள்... அதுக்கப்றம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரசு, இசுரேல் மறுபடியும் அமெரிக்கா.

முதலாம் வகுப்பு படிக்கும் போதே திராவிட மேடைகள் பரிச்யமாச்சுது. அதுக்கு என்னோட குடும்பப் பின்னணியானது பொதுவாழ்வு, வழக்குகள்ன்னு இருந்ததும் ஒரு காரணம். வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க.


அவங்கள்ல ஒருத்தருக்குதான் கல்யாணம் ஆகி, ஒரு பெண் பிள்ளை. இலட்சுமண ஐயருக்கு கல்யாணம் ஆச்சா, ஆகலையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவங்களுக்கு 60 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தாங்க.

அவங்க பெண் பெயர் ஞானசெளந்தரி. அவங்க கணவர் எனக்கும் என் சகோதரர்களுக்கும் தமிழாசிரியர், இலட்சுமண வாத்தியார்னு அன்பா அழைப்போம். கிராமத்துல வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லாரும் ஒன்னும் ஒன்னுமா அணுக்கமா இருந்தோம். எங்களுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அவங்க வீடு. பொருட்கள் ஓசி வாங்குறது, கைமாத்து வாங்குறதுன்னு எந்த வித்தியாசமும் இல்லாமத்தான் இருந்தது. அவங்க, சிலர் விமர்சிக்கிற பார்ப்பனர்ங்ற விசயமே எனக்கு என்னோட இருபதுகள்லதான் தெரிய வந்தது.

அடுத்தபடியா, நான் கோயமுத்தூர்ல சில காலம் வேலை செய்திட்டு இருக்கும் போது வாய்த்த நண்பன், இராஜேசு. இப்ப, ஆசுதிரேலியாவுல இருக்கான். கோயமுத்தூர்ல இருக்குற வரைக்கும், நானும் அவனும் வருசா வருசம் சபரிமலைக்கு ஒன்னாப் போவோம். நண்பர்கள் எல்லாரும் அவனோட வீட்டுக்கு எந்தத் தயக்கமும் இல்லாம சராங்கமாப் போவோம். ஏன்னா, அவங்க அப்பா எங்களை எல்லாம் அன்பா உபசரிச்சி அனுப்புவாரு.

இப்பவும் அவங்க திருச்சி சாலையில, சென்ட்ரல் ஸ்டுடியோ சமீபம் கிருஷ்ணா குடியிருப்புல இருக்குற வீட்லதான் இருக்காங்க. நான், சிங்கப்பூர் வந்ததுக்கு அப்புறம் இராஜேசு எங்க அலுவலகத்துல பணி புரிஞ்சிட்டு இருந்த ஒரு கிறித்துவப் பெண்ணைக் கல்யாணம் கட்டிகிட்டான். ரொம்ப நல்லவன், வெளிப்படையானவனும் கூட.

இந்த இரு குடும்பங்கள்தாங்க, எனக்கு தாயகத்தில இருக்கும் போது என் வாழ்க்கையில அமைந்த, எதிர்கொண்ட பார்ப்பனர்கள். இப்படிச் சொல்லவே எனக்கு வெட்கமாவும், அருவறுப்பாவும் இருக்கு. ஏன்னா, அவங்க பழகின விதம் தாய் புள்ளையாவல்ல இருந்துச்சு? இந்த இடுகைக்காக அவங்களை இப்படிக் குறிப்பிடுறேன், அதுக்காக அவங்க இதைப் பொறுத்துக்குவாங்கங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

மத்தபடி நிறைய இதழ்கள், மேடைப் பேச்சுகள், இப்ப இடுகைகள்னு நிறைய படிச்சாச்சு. வேதனையா இருக்கு! கலைஞர் அடிக்கடி சொல்ற ஒரு மேற்கோள் ஒன்னுதான் ஞாவகத்துக்கு வருது. தூங்குறவனை எழுப்பிடலாம்; தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுதான்.

இந்தப் பின்னணியைக் கொண்டவன் மனதில் சில கேள்விகள். என்னோட பின்னணிய, நேர்மையா உள்ளது உள்ளப்டி சொல்லிட்டேன். ஆகவே, ஆரோக்கியமான பின்னூட்டம் போடுறவங்க மட்டும் போடலாம்.


  • சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்?

  • ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். அதை எதிர்த்துத் தலைவர்கள் போராடி இருக்கலாம். ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?

  • மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். அப்படியானால், மொழியைக் கொண்டவர்கள் காப்பாற்றுகிறார்களா?

  • பகுத்தறிவுப் பகலவன், சூத்திர ஆன்மிகவாதிங்றதால அவர் காலில் விழுந்தாராம். அப்படியானால், பகுத்தறிவு என்பதும் சுயமரியாதை என்பதும் வெறும் பேச்சுத்தானா?

  • பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, மற்றவரைத் தன்னகத்தே இழுக்க முயலும் இயக்கத்தோர் பார்ப்பனர் அல்லாதோரிடத்து இருக்கும் பேதங்களை விமர்சித்து எழும் காலம் எப்போது?

  • தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?

  • புதுமை படைக்கிறோம், கட்டுடைக்கிறோம் என்று சொல்லி தம்மை முன்னிறுத்திக் கொள்கிற இவர்கள், பார்ப்பனர், பார்ப்பனீயம் எனும் சொல்லில் வீழ்ந்து அந்தக் கட்டுக்குள்ளாகவே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதுதானே ய்தார்த்தம்?

மனிதனை மனிதனாகப் பார்த்து, தமிழை தமிழாகப் பாவிக்காத இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். அன்பும் அடக்கமும் மட்டுமே வாழ்கிற தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல! இது இவர்கள் போடும் வெற்றுக் கூச்சல் மட்டுமே என்பது இந்தக் கிராமத்தானின் தாழ்மையான எண்ணம்!!

ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது!

11/17/2009

பணிவு என்பது, தாழ்வும் இழிவுமா??





பணிந்து வணக்கம் செலுத்துவதால் ஒருவர் தாழ்ந்தவர் என்றாகி விடுவரோ? பணிந்தவருக்கு அது பெருமையே! ஏசுவோர் ஏசட்டும், பணிந்தவன் மட்டுமல்ல; துணிந்தவனும் நீயே! எளியோர் உள்ளம் வெல்பவனும் நீயே!!