7/30/2011

இஃகி இஃகி - 1

கோடி
விண்மீன்கள்
ஒன்று கூடி
நின்றாலும்
ஒரு கதிரவன்
ஆக இயலாது!

#அமெரிக்க வெள்ளி

--------------------

புதைத்த குழந்தைக்காய்
அழுகின்றார்
பெற்றோர்!

புதைத்த
கூலிக்காய்
அழுகின்றான்
வெட்டியான்!!

இடையில்
புகுந்து
ஆட்டையைப்
போட்டது
எவரோ?!

#அரசியல்

-----------------------

கங்கையில்
மூழ்காமலே
கோட்டான்
அன்னமானது

இருந்த
காகம்
இறைத்தன
பொறுக்கப் போய்விட்டதால்!!

#வாசகர் சிந்தனைக்கு

----------------------------

புயலிடம்
ஓங்கி வளர்ந்த
மரங்களுக்கு அச்சம்!

தரைப்புல்லுக்கு
ஒருபோதும்
அச்சமென்பது
கிடையாதே!!

#திமுக தொண்டன்

----------------------------
முடியாது
என்பதும்
இயலாது
என்பதும்
வேறு வேறு!
ஒத்தன அல்ல!!

#தமிழ்

7/29/2011

முனைவர் மு.இளங்கோவன் சொல்வீச்சு

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

--கவிஞர் காசி ஆனந்தன்.

7/25/2011

இடை வளையாட்டம்

இன்றைய மாலை, ஒரு மகிழ்வான மாலை. காலியர்வில் (Collierville, TN) ஏரியைச் சுற்றி கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் நல்ல ஓட்டம். ஓடி முடிந்ததும் கிடைக்குற சுகமே சுகம்!!

பிறகு வீட்டுக்கு வந்தா, மகளுக்கு ஒரே கொண்டாட்டம். பிடிபடாம இருந்த, இடையைப் பருதியால் சுற்றும் நயம் பிடிபட்டிடுச்சுன்னு அவங்களுக்கு ஒரே மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!



இடையில் வளையமிட்டு, இடையில் பரிதியோ என வியக்கும் வண்ணம் இலாவகமாக ஆடும் ஆட்டம், Hula Hoop எனப்படுகிறது. நீங்களும் நயம் பிடிபடப் பயிற்சி செய்ய வேண்டுமா? இதோ, இக்காணொலியைக் காணுங்கள்.


பயிற்சிக்குப் படியாதது பாழ்!!!

7/20/2011

பில்ட்மோர் பண்ணையகம் - எழில் கொஞ்சும் படங்கள்

அரசி நகராம் சார்லட் நகரில் இருந்து, மிசிசிபி ஆற்றங்கரையாரத்திற்கு இடப்பெயர்வு நிகழும் தருவாயில், வட கரொலைனா மாகாணத்தின் பில்ட்மோர் காடுகளில் இருக்கும் பில்ட்மோர் பண்ணையகத்திற்குச் சென்று தங்கும் ஒரு வாய்ப்புக் கிட்டியது.

இந்த பண்ணையகமானது, George Washington Vanderbilt II என்பாரால் 1889க்கும் 1895க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட, தனியாருக்குச் சொந்தமான, அமெரிக்காவின் மிகப்பெரிய வீடாகும். 250 அறைகளும், கிட்டத்தட்ட 70 கூடங்களும், நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகள், கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவிலான சோலை வனங்கள் கொண்டதாகும் இப்பண்ணை வீடு.

இரு நாட்கள் தங்கி இருந்து பெற்ற அனுபவத்தை அடுத்தடுத்த இடுகைகளில் காணலாம். இப்போதைக்கு, கீழ்க்கண்ட கவின்மிகு காட்சிப் படங்களைக் கண்டு களியுங்கள்!!

நகர்ச்சில்லுகளைச் சொடுக்கி, பெரிய அளவில் காணவும்!!



7/11/2011

பேரவைத் திருவிழா - கூடுதல் படங்கள்











சுட்டிகளைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் பாருங்கள்!!

படங்கள் உதவி

திரு.கண்ணன் அவர்கள், பனைநில தமிழ்ச்சங்கம், தென்கரோலைனா.

7/10/2011

சினேகம்


கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

நெல்லி மரமே நெல்லி மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

தேக்கு மரமே தேக்கு மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்துக்கு கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

பலா மரமே பலா மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தரலை நான் தரலை
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தரலை நான்

கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ
கியான் கியான் குருவி நான்
கியான் கியான்க்கோ

வாழை மரமே வாழை மரமே
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தராயோ நீ?

நான் தருகிறேன் நான் தருகிறேன்
குஞ்சுக் குருவிக்கு
மாரிக்காலத்து கூடுகட்ட
இடம் தருகிறேன் நான்

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் நெல்லி மரம்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் தேக்கு மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் வந்து இடியும் இடித்து
மழையும் பெயததே
அய்யோ பாவம் பலா மரமும்
முறிந்து வீழ்ந்ததோ

காற்றும் போயி
இடியும் போயி
மழையும் போனதே
சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!

சினேகம் உள்ள வாழைமரத்தை
தெய்வம் காத்ததே!!

தமிழாக்கம்: பழமைபேசி
பாடியது: திருமகள் பழமைபேசிக்காக, திருமதி பழமைபேசி.


இனிமைத் தமிழ்மொழி

வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடிகிறதா? என்னதான் நாம் அகம் காத்து இனிமை போற்றினாலும் கூட, அவ்வப்போது வேண்டாத அல்லனவை நம்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அப்படித்தான் யானும் ஏதோ ஒரு காரணத்தால் அகத்தாக்குதலுக்கு ஆட்பட்டு இருந்த வேளையது.

“இந்தாங்க, இதுல இருக்குற பாடல்களைக் கேளுங்க.. எல்லாம் தெளியும்” எனச் சொல்லி நகர்ந்தாள். மனையாள் சொல்லி, அதற்கு உடனே செவிமடுத்தால் என்னாவது?! கிருதா எகிறியது. சிறிது நேரங்கழித்தே அவள் கொடுத்த குறுவட்டுப் பேழையை அவதானிக்கலானேன்.

இனிமைத் தமிழிமொழி எனும் முகப்பு மொழியுடன் கூடிய அழகான அட்டைப்படக் காட்சியானது எம்முள் ஒருவித மலர்ச்சியை உண்டு செய்தது. பேழையின் பின்பக்கத்தை நோக்கினேன். இன்ப அதிர்ச்சியில் மெய்மறந்தேன்.

ஆம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் இலச்சினை இருப்பதன் மூலம், இக்குறுவட்டானது பேரவையின் விழாவில் கையளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. திருவிழாவின் போழ்து, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இணைய வர்ணனை அளிப்பது, இணையரங்குகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, விருந்தினரைக் கவனிப்பது என அங்குமிங்குமாய் இருந்தநிலையில் இக்குறுவட்டினைக் கவனிக்க இயலாது போய்விட்டிருக்கிறது போலும்.

பேழையைத் திறந்ததும், அதனுள் கையடக்க குறுநூல் ஒன்று சொருகப்பட்டு இருக்கக் கண்டேன். தரம்மிகு, நயம்மிகு நூலது. உள்ளீடாக, தெளிதமிழில் தமிழிசைத் தேனமுதத்திற்கான முன்னுரை. அதைத் தொடர்ந்து முத்தான தமிழ்ப் பாடல்கள் பத்து.

ஒவ்வொரு பாடலுக்கும் அமிழ்தாய்த் தலைப்பு, இணைப்புரை, தீந்தமிழ்ப்பாடல், ஆங்கிலத்தில் சுருக்கவுரை என மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடற்பகுதியையும் ஓரிரு முறை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பிறகு பதினைந்தாம் இலக்கம் இட்ட பகுதிக்குள் வாசிப்பின் மூலம் நுழைகிறேன்.

மீண்டும் பேரின்ப அதிர்ச்சி எம்முள். இந்த அரிய படைப்பினை நமக்களித்திருப்பது கெழுமைமிகு நண்பர் பொற்செழியன் அவர்கள் எனத் தெரிய வருகிறது. உற்சாகமிகுதியுடன் குறுவட்டினைக் கணினியில் இட்டு இசைக்கச் செய்கிறேன்.

சென்ற ஆண்டு தமிழ்விழாவில் கேட்டு இன்புற்ற அதே குரல். அறவாழி இராமசாமி அய்யா அவர்களின் தமிழ்வீச்சு தேனாய்ப் பாய்கிறது. முன்னுரை கேட்ட ஒரு மணித்துளியில், இயற்கையைச் சிலாகித்தபடியே இணைப்புரை. கேட்ட தெளிதமிழில் சொக்கிப் போகிறேன்.

ஈரோடிலிருந்து கிட்டத்தட்ட எட்டு கல் தொலைவில் இருக்கும் திருநணா(கூடுதுறை)வில் இருக்கும் காயத்திரிமடுவின் அண்மையில், அந்த படித்துறையில் நின்று நோக்கின் பொன்னியானவள் எழிலாய் ஒருபக்கம் வளைந்து நெளிந்து வருவாள். மறுபக்கம் பார்த்தால், பவானி ஒயிலாய் வந்து உடன் சேர்வாள். நிலத்தடியில் இருந்து அமுதநதி சுரந்து வந்து பொன்னியோடு கலப்பாள். பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கும். கொங்குக்கு அமைந்த ஒரு சிறப்பு அது.

அதைப் போல எம் தமிழும், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது இசையும், நம்மவர்கள் அமுதயாழினி, நம்பி பொற்செழியன் குரலும் முக்கூடலாய்க் கலந்து கற்கண்டொடு கலந்த தேனாய்ப் பாய்கிறது நம் செவியுள். ஞாயிறு, திங்கள், மாமழை, பூம்புகார் என இயற்கையின் கூறுகளான நீர், நெருப்பு, காற்று, மண் முதலானவற்றைப் போற்றிப் பாடும் செந்தமிழ்ப்பாடல் ஒன்று. மெய்மறந்தேன். செந்தமிழால் தேனிசைக் கடலில் முக்கிக் குளித்தவனாயினேன்.

ஐந்து பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரையில், என்னைச் சுற்றி நடப்பது யாதொன்றும் யானறிந்திருக்கவில்லை. மெல்ல என்நிலை அறிந்தேன். செய்த முதற்செயல், அன்பர் பொற்செழியனை அழைத்துப் பாராட்டியதுதான். மனதாரப் பாராட்டி உவப்பெய்தினேன்.

எஞ்சிய பாடல்களையும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துமே முத்தான பாடல்கள். அகத்திற்குச் சுகமும், சிந்தனைக்கு விருந்துமாய் அமைந்திருக்கின்றன. அதன் தாக்கத்தில் இருந்து விடுபட நெடுநேரமானது. அவர்களுடைய அனுமதியின்றியே ஒருபாடலை வலையேற்றி இருக்கிறேன். ஆர்வமிகுதியால் நேர்ந்த அத்துமீறலை நண்பர் பொற்செழியன் ஏற்றுக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதோ அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
நண்பர் பொற்செழியன், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் அமுதயாழினி மற்றும் நம்பி பொற்செழியன், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

எனக்கு இன்னும் சில படிகள் வேண்டுமென யாத்திருக்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க அவர்தம் தொண்டு!!

7/07/2011

FeTNA 2011: இலக்கிய விநாடி வினா காணொலிகள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவானது, மேலைப்பெருமழை புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக கடந்த சூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென்கரோலைனா மாகாணம், சார்ல்சுடனில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே!

திருவிழாவில், தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு போற்றும் விதமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அவற்றுள் தனித்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக, ஆண்டு தோறும் இஅடம் பெற்று வருகிற இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இது ஒரு பல்லூடக(multimedia) நிகழ்ச்சியாகும். இந்த அருமையான நிகழ்ச்சி, இனப்படுகொலைக்கு உள்ளான ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு உணர்வுப் பெருக்குடன் அர்ப்பணிக்கப்பட்டது.

ஆசான் உயர்திரு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள், கடும் உழைப்பைக் கொடுத்து இந்நிகழ்ச்சியை வடிவமைத்துத் தொகுத்தளித்தார். ஆசான் உயர்திரு கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பயிற்சியாளராக இருந்து உதவிகள் செய்தார். இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெற்றன.
  • பதினெண்கீழ்க் கணக்கும், தமிழர் வாழ்வும்
  • கீழ்க்கண்ட நூல்களில், தெரிவு செய்யப்பட்ட பகுதிகள்
    • திருக்குறள்
    • புறநானூறு
    • குறுந்தொகை
    • நாலடியார்
  • முந்தைய ஆண்டு விழா மலரில், தெரிவு செய்யப்பட்ட பாடங்கள்
    • 2007 மலர், பாமரர் வளர்த்த தமிழ்
    • 2008 மலர், இலக்கியத்தில் சுற்றுலாவும், சுற்றுலாத் தலங்களும்
    • 2009 மலர், பண்பாடு கெட்டால்...
    • 2010 மலர், பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்
  • தமிழ் எழுத்துகளில் கிரந்தம்
  • தமிழ்த் திரைப்படங்களும், தமிழர் பண்பாடும்
  • தமிழிசையும் நாட்டுப்புறக் கலைகளும்
  • ஐம்பெருங் காப்பியங்களுள் குறிப்பிடப்பட்ட பகுதிகள்
  •  நவீன இலக்கியம்
பெருஞ்சித்திரனார் அணிக்கு முனைவர் இரமாமணி செயபாலன் அவர்களும், முனைவர் இரா.திருமுருகனார் அணிக்கு பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். போட்டியின் நடுவர்களாக முனைவர் மு.இளங்கோவன், முனைவர் சொர்ணம் சங்கர் மற்றும் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்போட்டியானது, சகலதரப்பட்ட தமிழரும் நுகர்ந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்விதமாக, போட்டியில் எட்டு வயது முதல் எண்பது வயதானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ப்ங்கேற்ற எட்டு வயது சிறுமியான ஸ்ரீநிதி மணிவாசகம், எண்பது வயதுக்கும் மேற்பட்ட ஐயா உயர்திரு அமிர்தலிங்கம் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர்.

நகர்ச்சில்லுகளைக் காணொலியாக்கி, இணையத்தில் தரவேற்றுவதற்கே இரண்டு மணி நேரம் செல்வாகும் போது, அனைத்துப் பாடங்களையும் படித்து, அதில் சுவையான வினாக்களைத் தெரிவு செய்து, பாடல்களையும் காணொலிகளையும் தக்காரிட நிகழ்ச்சியின் நெறியாளர் ஆசான் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களுக்கு எத்தனை மணி நேரங்கள் ஆனதோ?! யூகிக்கவே முடியவில்லை. கடும் உழைப்பை நல்கி இருக்கிறார் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி.

இதோ, நிகழ்ச்சியின் காணொலிகளைக் கண்டு பயனுறுங்கள். இந்நிகழ்ச்சிக்கு பலவழிகளிலும் உதவிகள் செய்து உறுதுணையாய் இருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர், தமிழ்மணம் குழுவினர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த லதா கண்ணன் அவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர்க்கும் எமது பணிவன்புடன் கூடிய நன்றி! நன்றி!! நன்றி!!!




தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!

7/06/2011

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் திருவிழா - விமர்சனம்

பெரும்பாலான அமெரிக்க வாழ் தமிழர்கள் Upper Middle Class எனப்படும் உயர் மத்திய தர வர்க்கம் என்று சொல்லலாம். அவர்கள் உழைக்கிறார்கள் - உயர்கிறார்கள் ஆனால் வாழ்வது என்னவோ ‘இயந்திர’ வாழ்க்கை என்பது ஒரு பொதுவான மதிப்பீடாக இருக்கிறது

இந்த monotony எனப்படும் உளத் தனிமையிலிருந்து விடுபட கிடைக்கும் ஓய்வுகளின் போதெல்லாம் உல்லாசங்களின் ஈடுபட விரும்புகிறார்கள் அவற்றுள் ஒன்று ஆண்டுதோறும் அவர்கள் கொண்டாடி மகிழும் FeTNA திருவிழா. இதற்குக் கவர்ச்சி சேர்ப்பதற்காகவும் மக்களை ஈர்ப்பதற்காகவும் பெரும் பொருட்செலவில் தென்னக சினிமா நட்சத்திரங்களை வரவழைக்கிறார்கள் என்பதுதான் சிலரால் எனக்குத் தரப்பட்ட சித்திரம்.

ஆனால் தமிழ் அறிஞர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் - இசை வல்லுநர்கள் - நடன மணிகள் - பல்வேறு திறமைகள் கொண்டவர்கள் என்று இவர்கள் வரவழைத்தவர்கள் பட்டியல் சினிமா நட்சத்திரங்களை விட மிக, மிக நீளமானது என்பது அங்கு அழைப்பின் பேரில் நேரில் சென்றபோதுதான் தெரிந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் - வருபவர்களுக்கான வசதிகள் -உணவு உபசரிப்பு- அதை இன்முகத்தோட்டு ஓடி ஓடி கவனிக்கும் உற்சாகமிகு தொண்டர்கள் - கண் துஞ்சாது மெய் வருத்தம் பாராது அயராது பாடுபடும் இதன் தளபதிகள் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோருக்கு மிக நல்ல முன்மாதிரிகள். இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது,

வந்திருந்த தமிழ் அறிஞர்கள் பயனுள்ள உரைகளை வழங்கினார்கள். இவர்களில் பேராசிரியை புனிதா ஏகாம்பரம், புதுவை பேராசிரியர் இளங்கோவன் உள்ளூர் அறிஞரைப் பொறுத்தவரை பேரா: “கபிலர்’ பாசுகரன் ஆகியோரை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சிலம்பம் முதலிய பாரம்பரியக் கலைகளுக்கு தரப்பட்ட முக்கியத்வம் - “பறை”யை பல்லாயிரம் பொருட் செலவில் தென்னகத்திலிருந்து வரவழைத்து முழங்கச் செய்தது - அவ்வாறே கரக ஆட்டத்தின் பெருமையையும் கூடி இருந்த மக்களுக்கு உணர்த்தியது ஆகிய அனைத்து வியந்து பாராட்டுவதற்கு உரியன - பாராட்டுவோம்.

நடிகர் நாசர் நல்லதோர் உரையாற்றினார். அது அவருடைய இலக்கிய அறிவையும் ரசனையையும் வெகுவாகப் புரிந்து கொள்ள உதவியது. அந்த இனிமை - எளிமை - யதார்த்தம் சொக்க வைத்தது. அவரை நடிகர் என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்கி விட நினைப்பது பாவம்.

நடிகர் சார்லி வெறும் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. M.Phil பட்டம் வரை கையில் வைத்திருக்கும் ஓர் அறிவு ஜீவி. அவரும் அவரது இரு நண்பர்களித்த அந்த நகைச்சுவை விருந்து அதிலும் அந்த பசுவின் கதை எளிதில் மறக்கக் கூடியதல்ல. விலா நோகச் சிரிப்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

நாடகம் : அவர்கள் ஆர்வத்தைப் பாராட்டலாம். திறமையைப் பாராட்ட வேண்டுமானால் அவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதே சமயம், இன்னும் சின்னப் பெண் போலவே இருக்கும் ‘கோடை மழை’ வித்யாவின் “சிவகாமியின் சபதம் “ நாடகத்தில் அவரது அனுபவ முத்திரை தெரிந்த்தது.

அதுபோல உள்ளூர் நடன மணிகள் - அதாவது அமெரிக்க வாழ் இளம் குருத்துக்கள் - அளித்த நடன நிகழ்ச்சிகள் அற்புதம். என்ன வேகம் - என்ன அழகு - என்ன நேர்த்தி - ‘கோரியோ-கிராஃபி’ எனப்படும் நடன அமைப்பு உத்தியை இவர்கள் நங்கு புரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள் என்பது இதன் பொருள். இவற்றோடு ஒப்பிட்டால் ‘மானாட..மயிலாட’ மற்றும் ‘ஜோடி நம்பர் ஒன்” ஆகியவை வெறும் குரங்காட்டங்கள் - குப்பைகள்.....!!!!!!!!!!

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செய்யது உட்பட குழுவினர் நடத்திய நிகழ்ச்சி யார் யாரிடமெல்லாமோ எதிர்பாரா வகையில் என்னென்ன ஏராளமான திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு, இவர்களை தேடிப்பிடித்து திறமை வெளிப்பட உதவிய FeTNA வின் சேவை இதுபோல் என்றும் தொடர வேண்டும்.

திருபுவனம் ஆத்மநாதனின் கச்சேரியில் பல இனிமையான பழைய பாடல்கள் ஒலித்தன. நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது அமைந்து போனதால் பலர் இந்த நல்ல இசை நிகழ்ச்சியை தவற விட்டு விட்டார்கள்.

உள்ளூர் இளைஞர் - யுவதிகள் கலந்து கொண்ட திரைப்படப் பாடல் இசை நிகழ்ச்சிக்குத்தான் அத்தனை நிகழ்ச்சியை விட ஏராளமான கூட்டம். ஏற்பாடுகளைச் செய்ய அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு நேயர்களின் பொறுமையை சோதித்தது அநியாயம். தொகுத்து வழங்கிய யுவதிக்கு மேடை ஆளுமை நிறையவே இருக்கிறது. அது போலவே ஆர்வக் கோளாறும் அதிகம். இவ்வளவு அலட்டல் வேண்டாம். இன்னும் கொஞ்சம் DIGNIFIED-ஆகக் கையாளலாம். பாடியவர்கள் அனைவரும் நன்றாகப் பாடினார்கள். ஆனால் பாடல் தேர்வுகள் சுகமாக அமையவில்லை. பாடல்கள் ஒன்றையொன்று இயல்பாக இனிமையாகத் தொடர வேண்டும் இப்படி கொப்புக்கு கொப்பு தாவக் கூடாது. இன்னொன்று நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களை இளையராஜா என்றும் SPB என்றும் நினைத்துக் கொண்டு சுயத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்பதே இவர்கள் இளமையின் தலை வாசலில் நிற்பதால் ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் என்னுடைய அன்பான - பணிவான அறிவுரை - வேண்டுகோள்.

அந்த வகையில் கனடா நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் உறுப்பினரான ராதிகா சிட்சபை ஈசன் (சிட்சபேசன் அல்ல - அவரே சொன்னது) அணுகு முறை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஓர் அழகான - எளிமையான - இனிமையான - பாசாங்குகள் ஏதுமில்லாத உரை ஒன்றை ஆற்றினார். அந்த ஆளுமை - தன்னம்பிக்கை எனக்கு இந்திரா காந்தியை நினைவு படுத்தியது. அதை அவரிடம் சொல்லவும் செய்தேன், “நான் ராதிகாவாகவே இருப்பதில் யாருக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும். நான் இறுதிவரை ராதிகாவாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.அது..அது தலைமத்துவப் பண்பு.. அது அவரிடம் நிறையவே இருக்கிறது. அரசியலில் இன்னும் வளர்வார் என்கிற நம்பிக்கையை நம்மிடம் நிறையவே ஏற்படுத்துகிறார்.

இதே விழாவில் எழுச்சி உரையாற்றிய ‘ நாடுகடந்த திமிழ் ஈழ அரசாங்கத்தின் (Transnational Govt. of Tamil Eelam’ பிரதமர் விஸ்வநாதன் உருத்திர குமார் உதிர்த்த கருத்துக்கள் அவரது எதிரிகளையும் அவர் பால் ஈர்த்து கட்டிப் போடக் கூடியவை. வெறும் வார்த்தை அலங்காரமாக இல்லாமல் நிறைய தகவல்கள் - புள்ளி விவரங்கள் என்று தன் வாதங்களை முன் வைத்தார். வழக்கறிஞராகப் பணி புரியும் அவரது வழக்கு வாதங்களை சம்பந்தப்பட்ட நீதிபதி ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ தெரியாது.அன்று கூடியிருந்த பெரும் திரளாவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொண்டாட்டமும் கோலாகலமுமாக நடைபெற்ற இந்த விழாவில் அருகருகே வேறு பல தனி அரங்குகளும் நடைபெற்றன. பேச்சுப் போட்டி - திருக்குறள் போட்டி. அமெரிக்க ஈழத் தமிழருக்கான நடவடிக்கைக் குழு - பதிவர் கூட்டம் - மருத்துவர்கள் கருத்தரங்கு - இலக்கிய கருத்தரங்கு முதலிய SERIOUS-ஆன விஷயங்களும் இந்த விழாவுக்கு பெருமை சேர்த்தன.

இவற்றுக்கெல்லாம் சிகரம் அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் தமிழை காப்பதற்கும் - வளர்ப்பதற்கும் - அரசு ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கும் செய்து வரும் முயற்சிகள் இவைமெய் சிலிர்க்க வைக்கின்றன. அந்த விஷயத்தில் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கும் நாம் நம் அரிய சொத்துக்கள் பறிபோவது தெரியாமல் உறங்கிக் கிடக்கிறோம் அதனால் தமிழகத் தமிழர்கள் தலை குனியத்தான் வேண்டும். அமெரிக்காவில் வாழும் அந்தத் தமிழர்களும்தமிழகத் தமிழர்கள்தானே என்கிற பம்மாத்து வேண்டாம். அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள்..! அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது பேரா: புனிதா ஏகாம்பரம் சொன்னது போல் நான்காம் தமிழ்ச் சங்கம்....!!!

இதை 24 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கும், தியாக உள்ளத்தோடு அயராது உழைக்கும் தொண்டர்கள். இவர்களுக்கு தலைமை ஏற்கும் தன்னலமில்லாத தலைவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க உலகெங்கும் வாழ் தமிழ்ச் சமுகம் கடைப் பட்டிருக்கிறது.

இங்குள்ள திறமை வாய்ந்த கலைஞர்களுக்கும் ‘கலைமாமணி’ விருதும், இங்கு அரும் பணியாற்றும் தலைமைத்வ பண்புள்ள பெரியவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளையும் வழங்க மைய அரசு முன்வரவேண்டும் என் பது என்னுடையது மட்டுமல்ல தமிழார்வம் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களின் அவா - ஆசை- ஆதங்கம் வேண்டுகோள் எல்லாம். வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை ! நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு..!!

எழுதியவர்: அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

7/05/2011

பேரவையின் தமிழ்த்திருவிழா இரண்டாம் நாள்


முதல்நாள் நிகழ்ச்சியின் போழ்து கண்ட தமிழ்க் கலை நிகழ்ச்சிகளின் தாக்கம், அனைவரையும் ஊக்கமூட்டி சரியான நேரத்துக்கு தமிழ் உறவுகள் அனைவரையும் அரங்குக்குக் கூட்டி வர, விழா நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு, காலை 8.30 மணிக்குத் துவங்கியது.

முதலில், திருக்குறள் மறைமொழி ஓதல் இடம் பெற்றது. பிறகு, அன்பர் யுவராஜ் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டது.

அடுத்து, அரங்கத்தில் இருப்போரைப் பரவசப்படுத்தும் விதமாய் இருந்தது கிரீன்வில் தமிழ்ச்சங்கத்தாரின் நாட்டிய நிகழ்ச்சி. முழுத்திறனும் ஒருங்கே வெளிப்பட்டது. மெய்சிலிர்த்துப் பார்த்திருந்தேன்.

முனைவர் பிரான்சிசு முத்து அவர்கள், தமிழர் பண்பாட்டு ஆய்விதழ் எனும் தலைப்பில் தெளிதமிழில் உரையாற்றினார்.

வட அமெரிக்க தமிழ்ச்சிறார்கள் பங்கேற்ற தமிழ்த்தேனீ நிகழ்ச்சியின் ஒரு பங்காக, பன்முகத்திறன் போட்டியை பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்கள் அட்டகாசமாய், சுவைக்கூட்டி நடத்திச் சென்றார். நண்பர் பொற்செழியன் ஒருங்கிணைத்திருந்தார்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தின், இசையும் நளினமும் சந்திக்கின்றன நடன நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அடுத்து, கெழுமைமிகு நண்பர் அட்லாண்டா இராசா அவர்கள் தமிழ்த்தேனீ போட்டியின் பரிசு வழங்கலைத் தொகுத்தளித்தார். முனைவர் அரசு செல்லையா, முனைவர்.மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர். செல்வன் பவுர்னிகா அவர்கள், மூன்று போட்டிகளில் வென்று வாகைசூடி எனும் பட்டத்தை வென்றார். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களது கட்டுரை வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது மேடையில். பன்முகத்திறனில் செல்வி மாதவி சங்கரும் செல்வன் நம்பி பொற்செழியன் சிறப்பிக்கப்பட்டனர்.

அடுத்து வந்தது, நாஞ்சில் பீற்றர் அய்யா மற்றும் ஆசான் கொழந்தைவேல் ஆகியோர் இணைந்து அளித்த இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி. மிக மிக இலக்கியச் செறிவோடு, பதினென்கீழ்க் கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும், முனைவர் இரமா ஜெயபாலன் அவர்களும் அணித்தலைவர்களாகச் செயல்பட்டனர். எட்டிலிருந்து எண்பது வரை எனக்குறிப்பிட்டு, எண்பது வயது நிரம்பிய பெருமதிப்புமிகு அமிர்தலிங்கம் அண்ணாதுரை அவர்களும் எட்டு வயது நிரம்பிய செல்வி ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தினரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதற்குப் பின்னாலான கடும் உழைப்பினைப் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. அடுத்து கரோலைனா தமிழ்ச்சங்கதினர் வழங்கிய, காவடி ஆட்டம் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் சங்கே முழங்கு நிகழ்ச்சி, விவரிக்க சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பியா, தென்கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் நடனக் கோர்வை நிகழ்ச்சி இடம் பெற்றது. பிறகு, பாரியின் கதை எனும் நாடகம், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கதினரால் இடம் பெற்றது. ஒப்பனைகள் வெகு பிரமாதம்.

வானொலி அறிவிப்பாளர் திரு.அப்துல ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து நடத்திய பட்டிமண்டபம், தமிழைச் சிதையாமல் காப்பது பொதுமக்களா அல்லது ஊடகங்களா எனும் தலைப்பில் இடம் பெற்றது. அணித் தலைவர்களாக, பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்களும், நண்பர் திரு.ஜான் பெனடிக் அவர்களும் பேசினர். சிறப்பாக இருந்தது.

தமிழின் இன்றைய நிலை எனும் தலைப்பில் முனைவர் சு.பழனியப்பன் பேசினார். கருத்துச் செறிவோடும், ஆதாரப்பூர்வமாகவும் பேசியமை குறிப்பிடத்தக்கது. வெள்ளுடையில் அரங்கத்தைக் கலக்க வந்தார்கள், கரோலைனா தமிழ்ச்சங்கத்தினர். அவர்களது ஒயிலாட்டம், வெகுசிறப்பாக இருந்தது. சீட்டி ஒலி விண்ணைப் பிளந்தது. அடுத்து, தென்கரோலைனா சங்கத்தினரின் சிறப்பு நாடகத்தின் ஒரு பகுதியான நடனம் இடம் பெற்றது. எழிலார்ந்த காட்சியது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை வரலாற்றிலேயே இடம் பெறாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. வயதில் மூத்தவர்கள், சுகாதாரத்தில் நாங்கள் இன்னமும் இளையோரே எனப் பறைசாற்றக் களமிறங்கினர், மிசெளரி தமிழ்ச்சங்கப் பெரியோர். என்னே கண்கொள்ளாக் காட்சியது?!

புதுகை பூபாளம் குழுவினரும், நடிகர் சார்லியும் இணைந்து நடத்திய நாடகம் அனைவரையும் விலா எலும்பு முறியுமளவிற்குச் சிரிப்பைக் கூட்டியது.

மனித உரிமை வழக்கறிஞர் கெரன் பார்க்கர், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றினர். அழுத்தத்திருத்தமாக பேசினர். தமிழர் அனைவரும், அவர்களது பேச்சினை அவசியம் காணொலியில் காண வேண்டிய உரையது. இந்நிகழ்ச்சியைப் பேரவைத் தமிழர் முனைவர் பழனி சுந்தரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சி இது என்று உறுதியாகச் சொல்ல முடியும். அரங்கம் அதிர்ந்து, தமிழர் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் நீந்தினர். ஆம. திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம் மற்றும் தமிழ்க்கலைகள் பல சுற்றுகளாக இடம் பெற்றன. சகோதரி சந்திரா அவர்களைக் கண்கள் பனிக்க பாராட்டி மகிழ்ந்தேன்.

இரவு உணவு இடைவேளையில், முனைவர் மு.இளங்கோவன் மற்றும் முனைவர் சு.பழனியப்பன் அவர்க்ள் சிறப்பாளர்களாய் இருக்க, முனைவர் சொர்ணம் சங்கரும் பதிவர் பழமைபேசியும், தமிழ்மணம் பட்டறை மற்றும் பதிவர் சந்திப்பினை இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில், சிறப்பான கருத்துகள் பல அலசப்பட்டன.

இளந்தமிழர்களின் சாதனைகளும், சவால்களும் எனும் தலைப்பில் இடம் பெற்ற நிகழ்ச்சி, பெற்றோருக்கும் வளர்ந்து வரும் இளந்தமிழருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது. பயனுள்ள இந்நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்.

பேரவை சிறப்பு விருந்தினர் சிறப்பிக்கப்பட்டார்கள். தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். நிறைவாக, அட்லாண்டா சகானா டிரீம்சு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர் கூட்டம், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திளைத்துப் போய் தத்தம் உறைவிடம் நோக்கித் திரும்பும்போது நடுநிசியைத் தாண்டிய நேரமது. அட்லாண்டிக்கடல் கானப் பறவையொன்று, கானம் பாடி அவர்களைக் வழியனுப்பிக் கொண்டிருந்தது அரங்க வாயிலில்!!

தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!

7/02/2011

2011 FeTNA தமிழ்த் திருவிழா முதல் நாள் நிறைவு! ஒரு கண்ணோட்டம்!!

சூலை 2, 2011, சனிக்கிழமை காலை 8 மணிகெலாம் விழா அரங்கத்திற்குச் சென்றடைந்து விட்டேன். சென்றவனுக்கு, அளப்பரிய மகிழ்ச்சியும் பரவசமும் பெருவியப்பும். சங்ககால்த்துற்குள்ளாகவே காலடி எடுத்து வைத்தாற் போன்றதொரு மனநிலை.

சங்ககாலப் படங்கள், தமிழன்னை உருவப்படம், திருவள்ளுவர் படம், பண்பாட்டுப் பதாகைகள், நல்வண்ணக் கோலங்கள், அழகு வேலைப்பாடுகள் என அரங்கம் மிக எழிலோடும், பொழிலோடும் காட்சியளித்தது.

மாபெரும் அரங்க வளாகம். வாகனத்தரிப்பு இடங்கள், வணிகக்கடைகள் பரப்பிடம், விசாலமானதொரு உணவுக்கூடம். வசதிக்குறைவில்லாதொரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் விழாக் குழுவினர்.

மங்கள் இசையுடன் விழா துவங்கியது காலை 8.30 மணிக்கு. உள்ளூர்ச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கப் பாடலும் இசைத்தனர். அரங்கம் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.

வாழ்த்துப்பா இசைத்தலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் நீலவண்ண தமிழ்ச் சீருடை அணிந்த பெண்டிர் புடைசூழ குத்துவிளக்கேற்றினார்கள். சிறுகச் சிறுக மக்கள் கூட்டம் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தலைவர் முனைவர்.பழனிசுந்தரம் அவர்கள் உண்ர்வுமிகு தலைமையுரை ஆற்றினார்கள். இனமாண்பு போற்றுவது மட்டுமே பேரவையின் வேலை, தம்கடமையில் அரசியலைக் கலப்பதே இல்லை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

கவிஞர் சேரன் அவர்களின் பாடலுக்கு, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்துச் சிறார்களின் நடனம் இடம் பெற்றது. பூமியின் அழகே, பரிதியின் சுடரே எனுமந்தப் பாடல் அரங்கத்தைக் கட்டிப் போட்டது. நடனமும் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து, அன்பர் பொற்செழியன் இராமசாமி அவர்கள் அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அறிமுகத்தைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் குத்துவரிசை இடம் பெற்றது.

அமெரிக்காவில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளில் எல்லாம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினைக் கொண்டு வருமுகமாக அமையப் பெற்றதுதான் அமெரிக்க தமிழ் கல்விக்கழகம். அதனை அறிமுகப்படுத்தியும், அதன் கட்டமைப்புப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் முனைவர் அரசு செல்லையா அவர்கள். அட்லாண்டாவில், தமிழ்ப் பாடம் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விரிவாக எடுத்துரைத்து நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டினார் அட்லாண்டா மாநகர் தமிழ் சங்கத் தலைவர் முனைவர். திரு. ரவி பழனியப்பன் அவர்கள்.

அமெரிக்க தமிழ் கல்விக்கழகத்தின் கட்டமைப்புக்கு வலு சேர்த்த அன்பர்கள் திரு.செளந்திர பாண்டியன், முனைவர் சொர்ணம் சங்கர் முதலானோர்க்கு சிறப்புச் செய்யப்பட்டது.

பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் சொல்வீச்சாலும் நகைச்சுவையாலும் அரங்கத்தினைக் கவர்ந்தார். இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இலதா கண்ணன் அவர்களது தெளிதமிழும் உச்சரிப்பும், அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இதுவல்லவோ தமிழ் என உணர்ந்து சிலாகிக்கத் தூண்டியது.

சார்ல்சுடன் மாநகர உறுப்பினர் திருமதி காத்லீன் வில்சன் என்பார் வாழ்த்துரை வழங்கினார்கள். டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தாரின், அமெரிக்க மருமகள் ஆண்டிபட்டி மாமியார் எனும் நாடகத்தின் மூலம் சிரிப்பொலி மூலம் அரங்கத்தை அதிர வைத்தார்கள்.

அதற்குப் பின் உணவு இடைவேளை கிட்டத்தட்ட 12.15 மணியளவில் துவங்கியது. காலை ஒன்பது மணி முதலே இணை அரங்குகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் இணையமர்வுகளாக இடம் பெற்றன.

உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பசு நகரத் தமிழ்ச்சங்கத்தினரின் நடனம் இடம் பெற்றது. வெகு அருமையாக இருந்தது. மிகுந்து இரசித்துப் பாராட்டப்பட்டது. தனித்தமிழே நனிச்சிறப்பு எனும் தலைப்பில், நண்பர் துரைக்கண்ணனின் தந்தையாரும் தமிழறிஞருமான திரு.துரை எழில்விழியன் அவர்களின் சொல்வீச்சு இடம் பெற்றது. சிந்தனைகளைக் கிளறுவிதமாக இருந்தது அவரது பேச்சு.

அடுத்து, கவிஞர் நா.முத்துகுமார் அவர்களது தலைமையில் கவியரங்கம் இடம் பெற்றது. அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்பில் இடம் பெற்றது கவியரங்கம். உணர்வுப்பூர்வமாக இருந்தன கவிதைகள். கவிநயம் சில இடங்களில் மிகவும் தூக்கலாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுகளை அள்ளி வழங்கினர் பார்வையாளர்கள்.

அரசி நகரத்து அருங்கலைகள் எனும் தலைப்பில், சார்லட் நகர தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய வில்லுப்பாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மிப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம் முதலானவை அடங்கிய கதம்பம் அனைவரையும் கவர்ந்து, நாட்டுப்புறத்துக்கே இட்டுச் சென்றது. மிகவும் அருமை!!

அட்லாண்டா நகரத்தினர் வழங்கிய வீணை இசை, தெவீகக்களையோடும் இனிமையோடும் சிறப்புற அமைந்தது.

புதுகை பூபாளம் குழுவினர் வழங்கிய நிகழ்ச்சியில் மொத்த வருகையாளர்கள் ஒருங்கே அமர்ந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நகையுணர்வுக்கு ஆட்பட்டமையால், ஏராளமானோர்க்கு விலா எலும்பு வலிக்கத்துவங்கின என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து சர வெடிகளை வெடித்துக் கொண்டே இருந்தனர் பிரகதீசுவரனும் செந்திலும்.

இடையில், தமிழிசைப்பேழை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நடிகர் சார்லியின் மேடை நிகழ்ச்சியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர் தனது அனுபவ நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் வினாவுக்கு விடையளித்தல் நிகழ்ச்சியும் சுவாரசியமாக நடத்தப்பட்டது.

கோடைமழை வித்யா அவர்களது சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. உணவு இடைவேளை சிறிது தள்ளிப் போகவே, முனைவர் சுந்தரவடிவேலுவும் பதிவர் பழமைபேசியும் இணைந்து தமிழ் மொழி குறித்தான கலந்துரையாடலை நடத்தினர். கூடியிருந்தோர் வெகுவாக அதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன். விழா மலர் வெளியீடு, முக்கிய விருந்தினரைச் சிறப்பித்தல் ஆகியன்வற்றைத் தொடர்ந்து, முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அழகான பாடலை, இசையறிவோடு தோய்த்துப் பாடினார் முனைவர். அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. தொடர்ந்து, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் குறித்தான தமிழ்ப் பேச்சால் அரங்கத்தைக் கட்டிப்போட்டார் என்றே சொல்ல வேண்டும். சக பதிவர் என்கிற முறையிலே, நமது பாராட்டுகள் அவருக்கு உரித்தாகட்டும்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து, கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் தான் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் தன் அனுபவத்தைப் பகர்ந்தார். அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுற அமைந்தது அவரது பேச்சு.

தொடர்ந்து பண்பட்ட மனதுக்குச் சொந்தக்காரர், கலையாற்றலும் நயமும் மிகுந்த நடிகர் நாசர் அவர்கள் திரைப்படம் குறித்தான் கருத்துகளை மிகச் செறிவாக எடுத்துரைத்தார். மிக, மிகப் பணிவோடும் பண்போடும் ஆற்றிய உரை என்றே கூறுவேன்.

நிறைவு நிகழ்ச்சியாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசை இடம் பெற்றது. இன்னிசையில் நனைந்த தமிழ் நரம்புகள் காதில் தேனைக் கொண்டு செவியுணர்வாகப் பாய்ச்சியது. மொத்தத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது, மிகுந்த செறிவோடும் நல்லதொரு ஒழுங்கோடும் அமைந்திருந்தது. ஒளிப்பதிவுகளை இங்கே சென்று கண்டு களித்திடுவீராக.


படங்களுக்கு இங்கு சுட்டிடுவீர்!!

நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க முற்படும் வரையிலும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது,

--சார்ல்சுடன் இஃகயாத் விடுதியில் இருந்து உங்கள் பழமைபேசி.

எழிலார்ந்த நடையில் நடந்தேறி வரும் பேரவைத் திருவிழா

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன் வருகை அளித்திருக்கிறார். மேலும் பல அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களோடு, தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாய்ப் பல நிகழ்ச்சிகள் பிற்பகல் உணவுக்குப் பின் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசி நகரத் தமிச் சங்கத்தின் அருங்கலைகள் எனும், தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முழுத்தகவலுடன் இன்னபிற தகவல்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை, இப்படங்களைக் கண்டு மகிழ்வீராக!!


தமிழால் இணைந்தோம்!!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் திருவிழாவில், கலைமாமணி கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களது தலைமையில், உணர்வுமிகு கவியரங்கம் நடைபெற்றது. மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அன்பர் உதயசூரியன் மிகச் சிறப்பாக தொகுத்தும், ஒருங்கிணைத்தும் இருந்தார். இதோ, அதில் இடம் பெற்ற ஒரு கவிதை!!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
ஆண்டுபல மூத்தோரே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!!
திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

கல்தோன்ற மண்தோன்ற முன்தோன்றிய முதுபெரும் தமிழே
முதுகெலும்பாகட்டும்!!
ஆம், முதுபெரும் தமிழே
எமக்கு முதுகெலும்பாகட்டும்!!

புழுதி தடவி, விழுந்து கிடந்து
ஆடி ஆடி விளையாடிப்
புரண்டு தழுவிய எம்நிலத்தைத்
தழுவித் தாவிவரும் செங்காற்றே
சற்றே என்மீது மோதிவிடு
என்னைக் கொஞ்சம் பேசவிடு

எழுதக் கையும்
எழுதக் கையும் நடுங்கி விடும்
எம்மவர் துயர வரலாறு

சிட்டுக்குருவிகள் போல் பறந்து திரிந்திருந்தோம் - இன்று
விட்டில்பூச்சிகளாய் தீயில் வீழ்ந்து மாய்ந்து விட்டோம்

அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு
எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பு மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??
அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு

தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை
சொல்வதற்கு
உனக்குத் தமிழ்ச் சொல்லேதும் கிடையாதா?
மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ?

மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ??

நமக்கான அந்நானிலத்தில்
தமிழுக்கும் தமிழனுக்கும் நாதியுண்டோ??
ஆம், பிறந்தோம் என்று அடங்கி அழிவோமா?

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

தேமதுரத் தமிழோசை
வீடுகளில் ஒலிக்கச் செய்திடுவோம்!
பன்னாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்பல
கற்றுத் தேர்ந்திடுவோம்!
பார் பார்க்கக் கனடியச் சபையில்
தமிழ்க்குரலிட்ட
இராதிகா சித்சபேசன்கள் பெருகட்டும்
மொத்தத்தில்
நம்குரல் அவனியெங்கும் ஒலிக்கட்டும்
அரவணைத்த நாட்டுக்குப்
பெருமைகள் பல சேரட்டும்
நம் பிள்ளைகள்
பேறுகள் ஏராளம் பெற்றிடட்டும்

ஐநா சபையில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு

முச்சந்தியில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு
நாமே கூற்றாவோம்!!
நம் உயர்வே கூற்றாகட்டும்!!

வாழ்க தமிழ்!!

FeTNA: பேரவை விழா எழுச்சியுடன் ஓங்கியது!

அரங்கம் எங்கும், பனைநில தமிழ்ச்சங்கத்துக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைப் பறைசாற்றும் விதமாகப் பல்வேறு பதாகைகளுடனும், வண்ண மலர்கள் சூட அழகுற எழிலோடு அமையப் பெற்றிருக்கிறது. கடையெழு வள்ளல்கள், முதல், இடை, கடைச்சங்கம் போற்றும் படங்கள் என பல்வேறு கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ச்சிறார்கள் வாழ்த்துரைக்க, நிகழ்ச்சி மங்கல் ஒலியுடன் துவங்கியது. அதையொட்டி, முனைவர் தண்டபாணி குப்புசாமி வரவேற்புரை வழங்கினார். அதையடுத்து குத்துவிளக்கேற்றி முறையாக நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் அவர்கள் உணர்வுமிகு தலைமையுரை வழங்கினார். இதோ, இம்மணித்துளியில் கவிஞர் சேரன் அவர்களின், பூமியின் அழகே, பரிதியின் சுடரே பாடலுக்கு தமிழ்நாட்டியத் தாரகைகள், தமிழிசைக்கொப்ப நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பாடல் வரிகள், அரங்கத்தைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்து, வட அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தினரின் சிலம்பாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

தற்போது முனைவர் அரசு செல்லையா அவர்கள், அமெரிக்க தமிழ்க் கழகத்தினை அறிமுகப்படுத்தி பேசி வருகிறார். இக்கழகத்தின் தேவை, ஒருங்கிணைந்த பாடத்திட்டம், அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் தமிழை இடம் பெறச் செய்வது, தற்போதைய முன்னெடுப்புகள் முதலானவற்றை மிகவும் கருத்துச் செறிவோடும், நுட்பங்களின் அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

அவரை அடுத்து அட்லாண்டா தமிழார்வலர் இரவி, சியார்ச்சியா மாகாணத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விளக்கி வருகிறார். தமிழை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக அங்கீகாரம் செய்த சியார்ச்சியா மாகாணத்திற்கு நமது நன்றிகள். அவர் இச்செய்தியைப் பகரும் தருவாயில் அரங்கம் அதிர்ந்தது.

அதையடுத்து, கட்டமைப்புக்கு வலுவூட்டிய நண்பர் செளந்திர பாண்டியன் மற்றும் முனைவர் சங்கரபாண்டி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. பாடநூல்களை முக்கிய விருந்தினர்கள் வெளியீடு செய்தார்கள்.

அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் நிச்சயம் வலுப்பெறும். அமெரிக்க மண்ணில் தமிழ் தழைத்தோங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தற்போது தமிழ்ப் பேராசிரியர் திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் தமிழ்ப் பேச்சால் அவையைக் கட்டிப் போட்டு உரையாற்றினார். நல்ல தமிழ் சொல்வீச்சு.

விழாவின் கருவுக்கிணங்க, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தமிழச்சி அவர்களின் மேடைநடத்தும் பாங்கு அமைந்திருந்தது. தமிழும், தமிழ் உச்சரிப்பும் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது.

திருமதி.புனிதா ஏகாம்பரத்தின் சொல்வீச்சுக்குப் பின், நடிகர் சார்லி அவர்களின் மேடைநாடகம், கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் வினா,விடை நேரம் அமைந்திருந்தது.

இணை அரங்கில் தமிழ்த்தேனீ போட்டிகள், உலகத் தமிழர் அமைப்பின் கூட்டங்கள் என பலவும் இடம் பெற்று வருகிறது. அமெரிக்க மருமகள் ஆண்டிப்பட்டி மாமியார் எனும் தலைப்பில் இடம் பெற்ற நகைச்சுவை நாடகம் கைதட்டலை அள்ளிக் குவித்தது. இணையரங்குகளில் இடம் பெற்ற தமிழ்த் தேனீ நிகழ்ச்சியில், அமெரிக்க இளஞ்சிறார்களின் தமிழாற்றம் வியக்கத்தகு விதமாய் இருக்கக் கண்டோம்.

அத்துடன் எல்லா அரங்குகளிலும் நிகழ்ச்சிகள் உணவு வேளைக்காக இடை நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. உணவு ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் மட்டுமே, வந்திருப்போரை ஒருமுகமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பெரும் கூட்டம். 1100 பேர் வரையிலும் வந்திருக்கக் கூடும் எனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.


Watch live streaming video from fetnaorg at livestream.com
பரிதியின் சுடரே, நற்றமிழே வாழ்க! நின் கொற்றம் சிறக்கவே!!

--அரங்கத்தில் இருந்து பழமைபேசி

முதல் நாள் நிகழ்ச்சிக்கான ஆயத்தம்

சார்ல்சுடன் நகரில் இருக்கும் விடுதிகள் எங்கும் தமிழ்க் குரல்! வழமைக்கு மாறாக, நிறைய ஈழத்தமிழ் தேனாக வந்து பாய்கிறது காதுகளில். காலை ஆறு மணி தொடக்கம், பல விடுதிகளில் பல நண்பினரைச் சந்திக்கும் பொருட்டு போய் வந்திருக்கிறேன். மிக ஆவலாய் எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

வெளியே, நீலக்கடல் வெளி அம்சமாய்க் காட்சி அளிக்கிறது. காலை நேரக் காற்று வருடிச் செல்கிறது. தமிழ்க்கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. பனைநில தமிழ்ச் சங்கத்தாரோ தேனீக்களாய் இங்குமங்கும்.

அரங்கம் வடிவாய் அழகுறப்பட்டுக் காட்சியளிக்கிறது. இன்னும் பத்து மணித் துளிகளுக்குள், மங்கல இசை முழங்க, 2011 பேரவைத் தமிழ்த் திருவிழா, மேலைப்பெருமழைப் புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக எழுச்சி கொள்ளக் காத்திருக்கிறது.

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு


-- விழா அரங்கத்தில் இருந்து உங்கள் பழமைபேசி.

7/01/2011

2011 FeTNA விருந்தினர் மாலை - படங்கள்

மிகவும் இரம்யமானதொரு இயற்கைச் சூழல். மீனகம். கண்கவர் வண்ணங்களில், வகைவகையாய் மீன்கள். மீனகம் முற்றத்தில் வந்து நின்றாலோ, கடலைத் தழுவி வரும் இனிய மாலைக் காற்று நம்மையும் தழுவிச் செல்கிறது.

நீலக் கடல்வெளியில், இராட்சத கப்பல்கள் முதல் சிறு படகுகள் வரை வகை வகையாய் கலங்கள். அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே மேலெழும்பிச் செல்லும் டால்பின் வகைப் பெருமீன்கள். கண்ணுக்கு பார்வை கிடைக்குமளவுக்கு நீல்வண்ணம் நீண்டு கிடக்கும் பரவசக் காட்சி.

இவை நடுவே, தமிழ் உறவுகள் கதைத்துக் கதைத்து உற்சாகக் கடலில் மிதக்கும் காட்சி. மீனகமே இன்தமிழ் கேட்டுப் பூரித்தது.

முக்கிய விருந்தினர்கள் அனைவருக்கும் பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் தெண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்பு நல்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, பனைநில தமிழ்ச்சங்கத்தினர் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

நிறைய தமிழுறவினர் வந்து நலம் விசாரித்தனர். அகமலர்ச்சிக்கு எல்லையே இல்லை. பெருமகிழ்ச்சியுடன் பேரவை முன்னோடியினருடன் நானும் நலம் விசாரித்து, அளவளாவி மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

எனக்குப் பணி நிமித்தம் அறைக்கு வர வேண்டி இருந்தமையால், நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு முன்பே விடைபெற வேண்டியதாயிற்று. இயற்கைச் சூழலுடன், பலவகையான உண்டி மற்றும் பானங்களுடன், தேன்தமிழ் உறவுகளுடன் ஒரு இனிய மாலைப் பொழுதை அனுபவிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்த பனைநில தமிழ்ச்சங்கத்தாருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!

நிழல்படங்கள் உதவி: திரு.கண்ணன் மற்றும் திரு.சிவன் அவர்கள்

சுட்டியைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் கண்டு மகிழுங்கள்!!





--சார்ல்சுடன் கடற்கரை முற்றத்தில் இருந்து பழமைபேசி!!

2011 பேரவைத் தமிழ் விழா - கோலாகலத் துவக்கம்

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், எங்கும் இன்புற்ற நினைவுகளைக் கண்டேன். ஆம், கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இதே சார்ல்சுடனுக்கு வந்திருந்தேன். 2011 பேரவைத் திருவிழாப் பணிகள் துவக்கவிழாவிற்கு வந்திருந்தேன். என்னே ஒரு இனிமையானதொரு நாள்?

அதே நினைவுகளொடு, டென்னசி மாகாணம் மெம்பிசு நகரில் இருந்து பேருவப்புடன் இன்றைய நாளில், அதே சார்ல்சுடனுக்கு வந்திருக்கிறேன். இடையிடையே, தமிழ் உறவுகளிடம் இருந்து அழைப்புகள். இப்படியாக, இதோ சார்ல்சுடன் நகருக்கு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு கண்ட உறவுகளையும், புதிதாய்க் காணப் போகும் உறவுகளையும் காணப் பேரவலுடன் சார்ல்சுடன் மீனகத்திற்குள் அடியெடுத்து இன்னமும் இருப்பது முப்பதே மணித்துளிகள்தாம்.

இத்திருவிழாவினை நடத்துவதற்கு, தம் உழைப்பைக் கொடுத்தவர்கள் ஏராளம். ஒரு குடும்ப விழாவில் என்னென்ன கூறுகள் நிகழுமோ, அத்துனையும் இங்கே உண்டு. ஆழக்கடலில் முக்குளித்து முத்துக் கிடைத்தது போன்றதொரு உணர்வுதான் உழைத்தவர் அனைவருக்கும்.

நிகழ்ச்சிகளைத் தர இருக்கும் பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வர இருக்கும் மூன்று நாட்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், பேரின்பக் கூறுகள் இடம் பெறப் போகிறது. அண்மையில் இருக்கும் தமிழருக்கெலாம், இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை. இக்கணமே புறப்பட்டு வாருங்கள். விழாக் காணுவோம்! கொண்டாடுவோம்!!

விருந்தினர்க்கு வரவேற்பு அளிக்குமுகமாக, மாலை விருந்து நடக்கப் போகும் சார்ல்சுடன் மீனக வளாகத்தில் இருந்து,

பணிவுடன்,
பழமைபேசி.