7/20/2020

தேர்தல்


அந்த மலையை ஏறினால், மறுபடியும் சிறிதும் பெரிதுமாக இரு மலைத்தொடர்கள் வரும். அவற்றைக் கடந்த பின் சமநிலத்தில் நான்குகாத தொலைவு சென்றால் போதும், அத்தைமகள் தனலட்சுமியைப் பார்த்து விடலாம். நேரடியாகச் சொல்லிவிட்டால் நம் கவுரதை என்ன ஆவது?

"அம்மா, மாமன் வந்து எவ்ளோ நாளாச்சு? குளுரு காலம்னா எளப்பு வந்துரும்னு சொல்லுவியே? அதுல கிதுல??", பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, உருமாலைக்கட்டுத் துணியைத் தலையிலிருந்து பிடுங்கி தாழ்வாய்க் கட்டைக்கு முட்டுக் கொடுத்து வாயைப் பொத்திக் கொண்டான் தங்கவேலு.

ஒன்னுகாளியாத்தாவுக்கு பொசுக்கெனக் கப்பிக்கொண்டது மனம்.

காளியம்மாவின் அம்மாவுக்கு வெகுநாட்கள் குழந்தை பிறக்கவேயில்லை. சூரைப்பழக் காளியம்மன் கோயிலுக்கு பூவோடு எடுப்பதாய்ச் சபதம் மேற்கொண்டதன் விளைவாய் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளே பிறந்தன. ஐந்து குழந்தைகளுக்கும் காளியாம்மாள் என்றே பெயர் சூட்டினாள் தாய்க்காரி. அப்படியாக அவர்களின் பெயர்களெல்லாம், ஒன்னுகாளியாத்தா, ரெண்டுகாளியாத்தா, மூனுகாளியாத்தா, நாலுகாளியாத்தா, அஞ்சுகாளியாத்தா என்பதாக நிலைத்து விட்டது பொன்னாலம்மன்சோலைக் காட்டுக்குள்ளே.

ஆண்மகவு இல்லையே என்கின்ற ஏக்கத்தில் ஆறாவதாய் வந்து பிறந்தவன்தான் ஆறுக்குட்டி. ஆறுக்குட்டியை ஈன்றவள், ஈன்றெடுத்த சகடநதியோரக் கரையோரத்திலேயே குருதிப்பெருக்கின் நிமித்தம் போய்ச் சேர்ந்துவிட்டாள். இப்படித்தான் ஆறுக்குட்டிக்கும் தங்கவேலுவின் அம்மாவே,  அக்காள்க்காரியே அம்மாக்காரியாகவும் ஆகிப்போனது வரலாறு.

பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவன் ஆறுக்குட்டி. 'கண்ணு, வேசகாலம் பொறந்துருச்சு. ஆடுகளை நான் ஓட்டிக்கிறன். போய், ஒருவிசுக்காப் பாத்துப் போட்டு வாடே என் தங்கம்!", இறைஞ்சிக் கொண்டாள் ஒன்னுகாளியாத்தா.

ஆறாம்மேட்டுப் பேய் என்றால் யாருக்குமே 'கருக்' என்றுதான் இருக்கும். பேயின் வேலைதான் இது, காத்திரமாக நம்பினான் தங்கவேலு. விசயம் வேறொன்றுமில்லை. கட்டுச்சோத்து மூட்டைக்குப் பொத்தல் விழுந்து புளிச்சோற்றுப் பருக்கைகள் சில பல, பொலபொலவென உதிரத் தொடங்கின. தன் சட்டையைக் கழற்றி சட்டையின் முதுகுப்பக்கப் பரப்புக்கு மேலே கட்டுச்சோற்றை உட்கிடத்தி, 'லபக்'கெனக் காவி எடுத்துக் கொண்டு போனான்.

சேனக்காரச்சிங்காரிமலை உச்சிக்குக் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்த போதுதான் கவனித்தான். சட்டையிலும் பொத்தல். "இந்தப் பேயோட இரவுசு பெரிய்ய இரவுசாட்ட இருக்கூ?", வேட்டியைக் கிடத்தி, அதனுள் வைத்துச் சுருட்டிக் கட்டி, கைக்கோலை முடிச்சுக்குள் விட்டுருவி எடுத்துக் கொண்டு போனான். இன்னும் இரு மலைகள் கடந்தாக வேண்டும். அம்மா கொடுத்த கட்டுச்சோற்றுப் பண்டங்களை மாமனுக்குக் கொடுக்கின்றோமோ இல்லையோ, தனலட்சுமிக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்பதில் குறியாய் இருந்தான் தங்கவேலு.

இப்படியாக அடுத்தடுத்து எல்லா உடுப்புகளையும் கட்டுச்சோத்துப் பொத்தலுக்கு நேர்ந்து விட்டிருந்த நிலை; ஆமாம்; கட்டிய கோவணத்தையும் உருவிப் பத்துப் போட்ட பிறகான சூழ்நிலையில்தான் யோசித்தான். 'தக்காளி, இந்தக் கட்டுச் சோத்துக்குள்ளயே பேய் பூந்துருச்சோ? உள்ள இருந்துட்டேவும் நம்மிய இமுசி பண்ணுதோ??'.

பரபரபரவென ஒவ்வொன்றாகப் பிரிக்கலானான். உண்டு கொழுத்த அது, சாவகாசமாய்க் கண்களை உருட்டி உருட்டி அண்ணாந்து ஒசரப் பார்த்தது. அம்மணமாய், வெறிபிடித்து விறுவிறுவென ஓடினான் ஓடினான் மலையுச்சியை நோக்கி ஓடினான் தங்கவேலு. ஏனென்றால் அந்த எலி ஒசரப்பார்த்தது இவன் முகத்தை அல்ல; குஞ்சாமணியை!!

‍-பழமைபேசி.

7/06/2020

மணியான் Vs கணியான்

மணியானுக்கும் கணியானுக்கும் கொழுவல் "டேய் தண்ணிபாட்டுலுன்னா தண்ணி மட்டுந்தான் ஊத்தி வெக்கோணு" "ஏன், இன்னிக்கொரு நாளிக்கு அருகம்புல் சூசு ஊத்தி வெச்சாத்தா என்னோ?" "ஆமா, இதேபாட்டுல பாட்டுலு சும்மாத்தான இருக்குன்னு பெரிய கேன்ல இருந்து வடிச்சி, பெனாயிலுமு ஊத்தி வெப்பே. தண்ணி பாட்டுலதானேன்னு, வாறவனோட‌ கை நீண்டு போய் துழாவி, மூடியக் கழத்தி வாயில ஊத்தும்... செரியா அது?" "நீ வேணுமுன்னே மொடக்கடி பேசற" "அடேய், இதெல்லாம் மனிதவளர்ச்சியின் படிப்பினைடா. இன்னும், எங்காத்தா ஊத்தி வெச்சுச்சு, ஆயா ஊத்தி வெச்சுச்சுன்னு முன்னோர் புராணம் பாடிட்டு இருக்கப்படாது, புரீதா? அப்படித்தா போனவாட்டி பார்ட்டீல..." "என்னத்தக் கண்டுட்ட பார்ட்டீல? அருமியா நடந்து முடிஞ்ச்..." "உம்பொண்டாட்டியக் கேளு, கட்டுன மூட்டயத் தொழாவ உட்டுட்டா" "ஏன், அப்பிடி என்ன நடந்துச்சு?" "மசுரு, நீ ஊசு அண்ட் த்ரோ தட்டுக குடுத்தே அல்லாருக்கும். கூடவே, ஊசு அண்ட் த்ரோ கரண்டிக குடுத்துத் தொலைக்க வேண்டீதுதான? சில்வர் கரண்டிக வெச்சிட்டே... தின்னு போட்டு அல்லாரும் தட்டுகளட் டிரேசுல அடிக்கும் போது கரண்டிகளையும் அடிச்சுட்டாங்க; பொறுக்கியெடுக்க வேண்டீதாப் போச்சு, அது அது, அப்படி அப்படித்தா செய்யோணும்... மனித வளர்ச்சிக்கு அதான்டா அர்த்தம்" "இப்ப எதுக்கு இந்தக் கட வெக்கிறே?" "ஒரு நிகழ்ச்சி நடத்துனா, செரியான நேரத்துக்கு தொவங்கி செரியான நேரத்துக்கு முடிக்கோணு... கொஞ்சநஞ்சம் முன்னப்பின்ன போகுலாம்... அது எதார்த்தம்... சும்மா, தான்தோன்றித்தனமா லொடலொடன்னு பேசி மணிக்கணக்குல முன்னபின்னப் போகப்படாது..." "லீவு நாளு, நேரமிருக்குது... அதுலென்ன தப்பு?" "அடே, இவங்கன்னா இப்படித்தாங்றமாரி ஆயிப்போயிரும்டா, அத நிமுத்திச் செரி பண்றது எவ்ளோ கடுசு தெரீமா?? லெகசின்னு சொல்லிச் சொல்றது இங்லீசுல... ஒனக்கு அதெல்லாம் எத்தாது... காசு பணம்னு சுத்துமாத்துலயே இருக்குற‌ ஒனக்கு, அடுத்தவனோட நேரம், மனசுங்றதெல்லாம் எப்பிடிப் புரியும்.. தலவிதி, செரி, நான் நடயக் கட்டிக்கிறன்..." லா.. லா.. லா.. லாலாலா... லா.. லா.. லா... பழமைபேசி.