9/30/2010

ஏற்றவன்

வழிந்தோடும் இருளின்
பதட்டம் தணிப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வெற்றிப் பட்டியலில்
இடம் அமைப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வயிற்றுப் பசிக்கு
தின்னக் கொடுப்பவன்
உற்றவனை ஏற்றவன்

மரணத்தின் இடுகாட்டில்
துணை நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

தேடலில் புதையாது
காத்து நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

நேசிப்பை நேசிக்க
மறக்காது நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

மலர்களின் அழகை
இரசித்துப் பகிர்வான்
உற்றவனை ஏற்றவன்

இந்த அற்றவனுக்கு உற்ற ஏற்றவன் இவன்!!!

9/29/2010

மற்றவள்

9/27/2010

உறாதவன்

இந்தா, அவன் நல்லவன்... அப்படின்னா, கெட்டவனும் எங்கியோ இங்க இருக்கான்; அப்படித்தானே? நல்லதாவும் இல்லாம, கெட்டதாவும் இல்லாம ஒன்னு இருக்க முடியாதா??

இருக்கும்னா, அதுக்கு என்ன பேரு? இஃகி! வந்து மாட்டிகிட்டீங்கதானே? சொல்லுங்க... அப்பச் சொல்லுங்க....

கண்ணுகளா, நாம பொறக்கும் போது அல்லாருமே, உறாதவர்களாத்தான் பொறந்தோம்.... உறாததுன்னா, எந்நிலையும் கொள்ளாத ஒன்னுன்னு சொல்லிச் சொல்றாய்ங்க பெரியவங்க.... நாளா வட்டத்துல, அந்த சொல்லே காணாமப் போயிடுச்சி சமூகத்துல....

நல்லவன்... அல்லன்னா, கெட்டவன்! நல்லது, அல்லாங்காட்டி கெட்டது... இப்பிடிச் சொல்லிச் சொல்லியே பழகிப் போனாய்ங்க மனுசங்க....

நல்ல பழமையுஞ் சொல்லலை அவன்...  அதே நேரத்துல கெடுதியாவுஞ் சொல்லலை... உறாதவனா இருக்கான்... இருந்துட்டுப் போறான்... அப்படி வுடுறமா நாம? நல்லவங் கெட்டவன்னு ரெண்டு கட்சிக்காரனும் அவனைப் பார்த்து, வெத்துப்பயன்னு பேசிப் பேசியே அவனையுங் கெட்டவனாக்குறோம்...

இப்பக் கூடப் பாருங்க... நான், இந்த பழமைய எதுக்கு சொல்றன்னா, உறாதல்ங்ற சொல்லை அறிமுகம் செய்யத்தான் சொல்றதே... அதுக்கும் ஒரு சாயம் பூசி, நல்லது கெட்டதுக்குள்ள தள்ளி வுடுவாய்ங்க பாருங்க...... உறாமப் படிச்சி, எளிமையா இருக்கலாம்... இருக்க முயற்சியாவது செய்யுலாம்... இஃகிஃகி...

எளிமைன்னு சொன்னதும், இன்னொரு கதை ஞாவகத்துக்கு வருது.... அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்துல அப்படி ஒரு முசுவா, வேலை பார்த்துட்டு இருந்தாங்களாம் விஞ்ஞானிக....

எடுத்த ஆய்வுக் குறிப்புக, கணக்குகளை எல்லாம் ஏட்டுல எழுதணும்னு அல்லாரும் முயற்சியோ முயற்சி செய்யுறாங்க... ஆனா, எழுதி வெக்கவே முடியலையாம்....

செஞ்சிட்டு இருக்குற ஆராய்ச்சிய உட்டுப் போட்டு, ஏன் எழுத முடியலைன்னு ஆராய்ச்சியத் துவங்கினாங்களாம் விஞ்ஞானப் பக்கிக... எத்தனியோ பேனாவுகளை மாத்தி மாத்தி எழுதிப் பார்த்தாலும் முடியலையாம்...

இதைப் பார்த்துட்டு இருந்த வேலையாள் ஒருத்தரு, படக்குனு சிலேட்டுக் குச்சியில, ரைச்சோ ரைச்சுன்னு ரைச்சு (tick mark) போட்டு போட்டுப் பார்த்துகிட்டு இருந்தாராம்...

அதைப் பார்த்ததுமே, அந்த விஞ்ஞானப் பக்கிகளுக்கு விளங்கிடுச்சி... ஆய்வு மையத்துல இருக்குற மாற்றியமைச்ச புவி ஈர்ப்பு விசையினால, மையி கீழ் வாக்குல எறங்குறதுல சிக்கல்னு....

என்ன பிரச்சினையானாலும்,மலையாட்டம் நினைச்சு பதட்டப் படக்கூடாது... எளிமையா, அடிபணிஞ்சு யோசிச்சாத்தான் எதுவும் நடக்கும்னு சொல்லிச் சொல்றதுக்கு எங்க ஆசான் இந்தக் கதைய நமக்கு சொன்னதை, நானும் சொல்லிகிடுறேனுங்க...

ரைச், ரைச்.. போலாம் ரைச்....

9/26/2010

ச்சட்டனூகா

சட்டனூகா விமான நிலையத்தில்
வெளியேறி
பக்கவாட்டில் இருக்கும்
எழில்மிகு லுக்அவுட் மலையின்
அழகில் இலயித்து
வனப்பில் மூழ்கி
மெல்ல மெல்ல அதன்மீது
ஏறிக் கொண்டிருந்தேன்!

ஐயா,
கொஞ்சம் இறங்குறீங்களா?
விடுதி வந்தாச்சு!
சடுதியில்
நினைவுக்குத் திரும்பியவனாய்
மேரியாட் விடுதிக்குள்...

புன்னகை தவழ
பிஞ்சு மொழியில்
வரவேற்பு மங்கை!
அவள் கொடுத்த
கனிவுமுலாம் பூசிய
அந்த திறவு அட்டையுடன்
மின்தூக்கியில் ஏறி
உயரச் சென்று
அறையை அடைந்தேன்!

அமைதி தேவதை
அன்பாய் வரவேற்று
பக்குவமாய்க் காட்டினாள் 
பரிசினை!
ஆம், இருந்தது
அறை முழுக்கத் தனிமை!!

9/25/2010

பொய் விழுது

தன்னறையிலமர்ந்து
நெடுநேரமாய்
அலசி, ஆராய்ந்து
கொண்டிருந்தான்...
கூடுவதும்
குறைவதுமாய்
ஓரிடத்தில் நில்லாது
போக்குக் காட்டிக் கொண்டிருந்த
கணக்காயத்தில் இருந்த
தன் பங்குகளை!

ஏங்க? எத்தினிவாட்டி சொல்றது??
வெளியில
ரொம்ப நேரமா
உங்களுக்கோசரம்
உக்காந்தது உக்காந்தவாக்குல
காத்திட்டு இருக்காரு
ஊர்லிருந்து வந்துருக்குற
உங்க அப்பா!!

9/23/2010

தொலைந்தவன்

தாயகம் சென்றிருந்தேன்;
நான் தொலைந்து போன
அயல்நாடுகளைப் பற்றி
அடுக்கடுக்காய்
அடுக்கிச் சொன்னேன்;
இரவு நீண்டு விடியல் வந்தது!
கிழக்குப்புறச் சுவர்க் கெளளி
சப்புக் கொட்டியது
ஊர் எல்லையில்
சேவல் கூவியது
வில்வ மரத்துக் காகம்
கரைந்து சொல்லிற்று வணக்கம்
முதலாளாய் எழுந்தாள் அம்மா
ஆரவாரம் எதுவுமின்றி
அமைதியாய்
அன்பொழுகக் காட்டினாள்
நான் தொலைத்து வந்த
தாய் மண்ணை!!

9/22/2010

கொடிய அலைபேசி!

குழந்தைகளையும் பாராமல்
ஓடிப்போன அந்த அண்டை வீட்டு
அத்தையின் வெற்றிடத்தை நினைத்து நினைத்து
அழுது புலம்பும் மாமாவை
வீட்டு வாசலில் இருந்து பார்த்த
அரும்புமொட்டு ஒன்று,
அம்மா, அம்மா...
நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??
அக்கணமே,
சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
தொடுப்பிலிருந்த
அந்தக் கொடிய அலைபேசி!

கிட்டப்பார்வை

எட்டத்தில்...
எதிர்த் திசையில் செல்லும்
தொடருந்தைக் கண்டதும்
ஆசை ஆசையாய்

கையசைத்து விட்டு
வாஞ்சையுற்றுச் சொன்னான்...
யாரோ நல்லவங்க
நல்லபடியா
போய்ச் சேரட்டும்!!

இதோ
இவனது தொடருந்து
இவனிருக்கும் திசையில்...
பரபரப்போ பரப்பு

அவசர அவசரமாய்
முண்டியடித்து ஏறி
அக்கடாவென அமர்ந்தபின்
அண்டி இருக்கும்
இவர்களைச் சொன்னான்
மனுசங்களா இவிங்க?
இவங்கெல்லாம்....
செத்துத் தொலைஞ்சா தேவலை!!


9/19/2010

அரசி நகரத் தமிழர் எழுச்சி!!!

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒன்றான வட கரோலைனாவானது, அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, அமெரிக்கத் தலைநகருக்குத் தெற்கில் உள்ள ஒரு கரையோர மாகாணம். இம்மாகாணத்தின் பெரிய நகரமான சார்லட், அரசியார் சார்லட் அவர்களது பெயரைக் கொண்டுள்ளமையால் அரசி நகரம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக, சார்லட்டின் மக்கள் தொகை வெகுவாகப் பெருகிக் கொண்டே வருகிறது. சார்லட் பெருநகரத்தைப் பொறுத்த மட்டிலும், மக்கள் தொகையானது கிட்டத்தட்ட பதினேழு இலட்சம் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு ஒப்பிடுகையில், சுமார் 32 விழுக்காடுகள் மக்கள் தொகை பெருகி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

இந்நகரின் மக்கள் தொகை ஏற்றத்துக்கு என்ன காரணம்? உள்ளூர்ப் பொருளாதாரமே! நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக நியூயார்க் மற்றும் மிச்சிகன் மாகாண மக்கள் வெகுவாக இந்நகருக்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். இடம் பெயர்ந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

அரசி நகரின் பொருளாதார ஏற்றமானது, வெகுவாகத் தமிழர்களையும் தன்பால் ஈர்த்து இருக்கிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. வந்த இடத்தில், இத்தமிழர்கள் சமூகத்திற்குத் தன்னாலான பணிகளைச் செய்து, தங்கள் வாழ்க்கையையும் மேன்மைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும்.

பெரும்பாலான தமிழர்கள், தெற்கு சார்லட்டிலும் பல்கலைக் கழகத்தை ஒட்டியுள்ள வட சார்லட்டிலுமே வசிக்கிறார்கள். ஆங்காங்கே, குழுக்களாக இருந்து தமிழ் வகுப்புகளை நடத்தி வந்த தமிழர்கள், சங்கமமைத்து ஒருங்கிணைந்து நடத்திய எழுச்சி விழாதான், இவ்வருடத்திய சார்லட் நகரத் தமிழர் கோடைவிழா.

விழா ஏற்பாடுகளை, சார்லட் நகரத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர். சார்லட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ரீடி கிரீக் பூங்காவின் குடில் ஒன்றில் தமிழர் கூட்டம் காலை பத்து மணியிலிருந்தே கூடத் துவங்கி, மணி பதினொரு மணிக்கெல்லாம் வாகன நிறுத்துமிடம் நிறைந்து, குடிலும் தமிழர்களால் நிரம்பியது.

நிகழ்ச்சி நடக்கவிருந்த வாயிலிலேயே சார்லட் நகரத் தமிழ்ச் சங்கத்தின் பதாகை அனைவரையும் வரவேற்கும்படியாக அமைந்திருந்தது. அருகில், விழா வரவேற்பாளர்கள் இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்றபடி இருந்தனர். அன்பர்கள் இதயச்சந்திரன், சுகுமார் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையையும் கவனித்தபடி இருந்தனர்.

விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, தமிழ்ச் சிறார்களுக்கான விளையாட்டுகள் நடைபெற்றன. கூடிக் களித்த சிறார்கள் இங்குமங்குமாய்ப் பூங்காவில் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். காலை பதினொன்று முப்பதுக்கு, சிறப்பு விருந்தினர்களாக தென் கரோலைனா மாகாணம் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் பூங்காவிற்கு வருகை அளித்தனர். அவர்களை, சங்கத் தலைவர் செந்தாமரை பிரபாகரன் மற்றும் பதிவர் பழமைபேசி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அருகண்மைப் புல்வெளிக்கு, பறையொலியுடன் கூடிய தமிழுணர்வோடு மக்கள் நடந்து சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையொட்டி, சிலம்பாட்டம் மற்றும் பறையாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த பனைநிலம் தமிழ்ச் சங்கத்தினரை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் உள்ளூர் ஆர்வலன் என்கிற முறையில் பதிவர் பழமைபேசி சிறப்பித்து மகிழ்ந்தார்.

புலம்பெயர்ந்த மண்ணில், தமிழனின் உணர்வுமிகு கலையான சிலம்பாட்டம் மற்றும் பறையொலியை நுகர்ந்து மகிழ்ந்த தமிழர் கூட்டம், குடிலுக்கு ஆவலோடு திரும்பினர். திரும்பியதும், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் அற்புதமான திருக்குறள் ஓது நிகழ்வு மற்றும், நாம் தமிழர் எனும் உணர்வுப் பெருமுழக்கம் ஆகியன இடம் பெற்றன.

தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவரும், பேரவையின் 2011ஆம் ஆண்டுக்கான தமிழ்ர் விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் அதன் பணி முதலானவற்றைக் குற்ப்பிட்டுப் பேசிய அவர், சார்லட் நகர தமிழ்ச் சங்கம் மென்மேலும் தழைத்தோங்க வேண்டும் என்றும், கூடி இருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு பெரிதும் அகமகிழ்வதாகவும் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அத்தோடு, அருகில் இருக்கும் மற்றொரு கரையோர நகரமான சார்ல்சுடனில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தமிழர் விழாவுக்கான அழைப்பையும் விடுத்து, வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் காலாண்டு இதழாக அருவி எனும் இதழ் தமிழரிடத்தில் பாயப் போவதையும், தமிழார்வலர்கள் மென்மேலும் முன் வந்து பேரவைக்கும் தொடர்ந்து பங்களிப்புச் செய்ய வேண்டுமென்கிற தன் பணிவான கருத்தைச் சொல்லி மகிழ்வதாகக் குறிப்பிட்டார் பதிவர் பழமைபேசி.

மதிய உணவுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழர்களின் அளவளாவலும் அரவணைப்பும் கூடிய விருந்தோம்பலும், உணவுப் பரிமாறலும் செவ்வனே நடந்து முடிந்தது. இதமான தட்ப வெப்பத்தில், மரங்களின் கனிதரு நிழலில், மெதுமெது புல்வெளியில் ஆங்காங்கே தமிழர் கூட்டம் கதைத்து மகிழ்ந்த காட்சி, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.

மதியம் ஒரு மணிக்குப் பிறகு, சார்லட் நகரில் பல ஆண்டு காலமாக வாழும் லலிதா ஜெயராம் அவர்கள், கடந்த காலங்களின் தமிழர் நினைவுகளை அசை போட்டு, இன்று புத்துணர்வோடும் எழுச்சியோடும் கூடிக் களிக்கும் சார்லட் நகர தமிழ்ச் சங்கம் மற்றும் நிர்வாகிகளைச் சிலாகித்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, சார்லட் நகர தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், நீதிக்கட்சிகளின் நிறுவனர்களில் ஒருவரான செட்டிகுளம் செ. தெய்வநாயகம் அவர்களின் கொட்பேர்த்தி செந்தாமரை பிரபாகர் அவர்கள் தலைவர் உரையாற்றினார். தமிழ்ச் சங்கமானது, எவ்விதச் சார்புமற்றுத் தமிழர்களின் பாசறையாகத் திகழ வேண்டும் எனவும், அமெரிக்கா தழுவிய தமிழ் நீரோட்டத்தில் பங்கு கொண்டு நமக்கு நாமே பணி செய்யும் களமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துப் பேசினார். அத்தோடு, உடன் பணியாற்றும் அத்துனை பேருக்கும் நன்றிகளை உரித்தாக்கித் தலைமை உரைக்கு அழகு சேர்த்தார்.

சார்லட் நகரத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் எழிலரசன் அவர்கள், பல ஆண்டு காலமாக தமிழ்க் கட்டமைப்புக்காகப் பணியாற்றி வருபவர். சார்லட்டில் அமையவுள்ள தமிழ்ப் பள்ளி மற்றும் அதன் தேவையை வலியுறுத்தி, மொழியின் அத்தியாவசியத்தை உணர்த்திப் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து பேச வந்த, பொருளாளர் இதயச்சந்திரன் அவர்கள் மிக நேர்த்தியாக சங்கத்திற்கான பங்களிப்பின் அவசியம் மற்றும் எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, வந்திருந்தோரிடம் பங்களிப்பைக் கனிவாக நல்கினார்.

தமிழறிஞர் அய்யா இராம.கி அவர்களின் இளவல், சுறுசுறுப்புக்கே சுறுசுறுப்பூட்டும் அன்பர், செயலாளர் இலக்குவன் அவர்கள், தமிழ்ச் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்வான, தமிழர் திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் யாவும் தமிழையும் தமிழ் பண்பாடு சார்ந்தும் இருக்கும்படியாகச் செய்து நடத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, சக தமிழர்களின் பங்களிப்பை நாடி உங்களிடம் பேசுகிறேன் எனக் குறிப்பிட்டுப் பேசினார் சங்கத்தின் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மீனா அவர்கள்.

சங்க நிர்வாகிகளின் உரையை அடுத்து, சைகைப் போட்டி, பிட்டுக்குப் பாட்டு, மற்றும் இதர விளையாட்டுகள் பூங்காவில் ஆங்காங்கே நடைபெற்றபடி இருந்தது. சார்லட் நகரத் தமிழர்களின் கோடைக் கொண்டாட்டம் சிறப்பாக மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

இறுதியில், நிகழ்ச்சிக்காக உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களும் அறுவடை முடிந்து நெற்குதிர் கண்ட உழவர்களாய் அகமகிழ்ந்து, அமரலானார்கள். தமிழ்க் கூட்டம் இல்லங்களுக்குத் திரும்பி இருந்த நேரமது. நகரந்தோறும், நாடு தோறும் தமிழ் வாழும்! தமிழ் தழைக்கும் எனும் ஊக்கம், இதை எழுதும் தமிழனுக்கு!!



தமிழால் இணைந்தோம்!

அமெரிக்காவின், “அருவி”

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இதழாக, விரைவில் ”அருவி” வெளிவர இருக்கிறது. அதன் ஆசிரியர் குழுவில் ஒருவனாக எம்மைத் தேர்ந்தெடுத்தமைக்கு பேரவையின் நிர்வாகக் குழுவினர்க்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

-- பழமைபேசி.







தமிழால் இணைந்தோம்!

9/16/2010

அரசி நகரான சார்லட்டில், தமிழர் விழா!

மக்களே, வணக்கமுங்க! அண்ணன் குடுகுடுப்பையார் மற்றும் பதிவுலகின் இன்றைய பிரபலமுமான தம்பி முகிலன் அழைப்பை மறுக்க வேண்டிய ஒரு சூழல். மேலும், வட அமெரிக்க வலைஞர் தளபதியின் எள்ளலை முறியடிக்க ஒரு வாய்ப்பு எமக்கு.

“என்னங்ணே, அங்க தமிழ் விழா, இங்க தமிழ் விழா” அப்படின்னு எப்ப பார்த்தாலும் இடுகை போடுறீங்க? உங்க ஊர்ல தமிழ்ச் சங்கமோ அல்லது தமிழ் விழாவோ நடக்குறதே இல்லியேன்னு கடுப்பேத்திகிட்டு இருந்தாரு. இதோ, அவரைக் கடுப்பேத்துறதுக்கான ஒரு வாய்ப்பு எமக்கு.

ஆம் மக்களே, எங்கள் சார்லட் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் கோடை விழாவானது எதிர்வரும் ஞாயிறு, செப் 19 அன்று வெகு விமரிசையாக நிகழ் இருக்கிறது. அந்நிகழ்வில், பனைநிலம் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பாட்டமும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக, ஆதரவு தருக!!

Location:

Reedy Creek Park
2900 Rocky River Road
Charlotte, NC 28215 US

When: Sunday, September 19, 10:00AM - 4:00 PM

கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்!

தமிழால் இணைந்தோம்!

9/15/2010

அர்ப்பணிப்பு

பணம்... பணம்... பணம்... நகரமெங்கும் இதே சிந்தனைதான். வேலை கொடுப்பபவனிடத்தில் ஏனிந்த நிலை என வினவிய மாத்திரத்தில் வந்து விழுகிறது உடனடியாய், காசு போட்டுக் காசு எடுக்கிற இடம்டா இது என.

வேலை செய்யும் தொழிலாளி மட்டும் சளைத்தவனா, என்ன? கையில காசு, வாயில தோசை... அசந்தா, மண்ணே கூடப் போடுவம்யா... ஏன்னா, அது என் திறமை எனக் கொக்கரிக்கும் காட்சிகள் நகரமெங்கும்.

முன்பணமாக ஐம்பதினாயிரம் ரூபாயை அழுதும், வராத வேலைக்காரனால் பாதியில் நிற்கும் வீட்டு வேலையை நினைத்துப் புலம்பும் நடுத்தர வர்க்கத்து அப்பாக்கள். திடீரெனச் சொல்லாமற் கொள்ளாமற் காணாமற்போன வாகன ஓட்டிகள். தலையில் பாதி சிரைத்தும் சிரைப்படாத திருப்பதி பக்தனைப் போலத் தவிக்கும் வீடுகள். அப்பப்பா, நகரத்தின் அலங்கோலங்கள்தான் எத்துனை, எத்துனை?? நேர்மை ஒழிந்து, மனிதம் அற்றுப் போய்த் திரியும் பணப் பேய்கள் நகரெங்கும்.

இச்சூழலில்தான் எம் கிராமத்தை நோக்கிப் பயணித்தோம் நாம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தாய் மண்ணைக் காணும் பொருட்டுப் பேராவலுடன் சென்றோம் நாம். நமக்கு முன்னதாகவே, அப்பகுதியைச் சார்ந்த மரம் ஏறும் தொழிலாளர்களான மணி அண்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே முகங்கள். அவர்களைப் பார்த்ததும் எமக்குள் பழைய நினைவுகள் அலையாய்த் திரண்டன.


லெட்சுமாபுரம், குண்டலப்பட்டித் தோப்புகளில் ஓடியாடித் திரிந்ததும், நாமும் தென்னை மரங்கள் ஏறி இறங்கியதுமான காட்சிகள் வந்து போயின. ஆசைக்கு, நாமும் மரம் ஏறுவோம் எனப் பிடிவாதமாகச் சொல்லி ஏற முற்பட்டதும், பதைபதைத்துப் போயினர் அருகிலிருந்தவர்கள். இருந்தாலும், நான்கைந்து மரங்களை ஏறி நமது திறமையைக் காண்பித்து விட்டுத்தான் ஓய்ந்தோம் நாம்.


ஆனாலும் அவர்களுடைய மரம் ஏறும் ஆற்றல், திறம் மற்றும் அனுபவத்திற்கு முன் நாம் தூசியன்றோ? மணியண்ணன் அவர்கள் லாவகமாய் ஏறிக் கிளைக்குக் கிளை தாவுவதும், ஒரு கையில் மட்டையைப் பிடித்துக் கொண்டு மறு கையில் லாவகமாய் வினையாற்றும் பாங்கே பாங்குதான். கவனம் சிறிது சிதைந்தாலும் அன்றைக்குச் சங்குதான். ஒவ்வொரு மணித்துளியும் முழுக் கவனத்துடன் காரியமாற்றக் கூடிய தொழில் இது.

அடிக்கும் ஆடிக் காற்றில் இங்குமங்குமாய் அல்லாடும் 120 அடி மரங்களில்கூட எவ்விதத் தயக்கமுமின்றி ஏறுகிறார் இவர். உச்சியில் இருக்கும் இவரது தன்னம்பிக்கையில் சிறு ஓட்டை விழுந்தாலும், மரணத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும். அத்தகைய மரத்தில், இருக்கும் ஒரு சில காய்களுக்காகவும் சளைக்காது ஏறுகிறார் இவர்.

“அண்ணா, அந்த ஒன்னு ரெண்டு காயுக்கும் இந்த மரங்களை ஏறித்தான் ஆகணுமா?” என வினவியதும், “தொழில்னு வந்தா ஏறித்தான் ஆகோணும்... உட்டுப் போட்டு போறதுல ஞாயம் இல்ல பாருங்க”, என வெள்ளந்தியாகச் சொல்கிறார் இவர். நகரங்களுக்கும் கிராமத்துக்கும்தான் எவ்வளவு இடைவெளி?

இப்படியாக, மணி அண்ணன் மற்றும் குழுமத்தினருமாகச் சேர்ந்து, கிட்டத்தட்ட நானூறு மரங்களிலும் ஏறிக் காய் பறித்து, சிரை எடுத்து, குருத்தில் மருந்து வைத்துக் கீழிறங்குகிறார்கள். காலை மணி பத்து ஆகிவிட்டிருந்தது.


ஆங்காங்கே இருக்கும் தேங்காய்களைக் கூடையில் வைத்து, தோப்பின் ஓரத்தில் இருக்கும் களத்திற்குக் கடத்திக் கொண்டிருந்தனர் பெண்கள் அணியினர்.
சிறுஇடைவெளிக்குப் பின்னர், சண்முகம் அண்ணன் காய்களை எண்ணத் துவங்கினார். எண்ணும் போது, ஒவ்வொரு இருநூறு காய்களுக்கும் தென்னை ஓலை ஒன்றில் ஒரு முடி போடப்பட்டது. ஐந்து முடி காய்கள், அதாவது ஆயிரம் காய்கள், ஒரு வண்டிக் காய் என்பது தேங்காய் வியாபாரத்தில் ஒரு கணக்கு.


நவீன யுக்திகளும், மரம் ஏறும் பொறிகளும் சந்தைக்கு வந்திருந்தாலும், மரத்தின் உச்சியில் செய்யக் கூடிய வேலைகளைச் சூட்சுமத்துடன் செய்வதற்கு இவர்களைத் தவிர வேரறிவார்? இவர்களது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் சமுதாயம் தரும் விலை என்ன?? கேட்டறிந்தாம் நாம்.


பெரும் முதலீடு செய்து, ஓடியாடிப் பராமரிப்புச் செய்யும் உழவனுக்குக் கிடைக்கும் விலை காய் ஒன்றிற்கு இரண்டு ரூபாய். தோட்டத்தை விட்டுக் கிளம்பும் உரித்த தேங்காயின் விலை மூன்று உரூபாய் நாற்பது காசுகள். சந்தையிலோ காயின் விலை எட்டிலிருந்து பத்து உரூபாய். உரித்தல் அற்ற இளநீரின் விலையோ உரூபாய் பதினைந்து.

ஆக, இடையில் ஈட்டப்படுவது நான்கு உரூபாய். உயிரைப் பணயம் வைத்து, நூறு அடி, நூற்றம்பது அடி என ஏறிக் காய் பறிக்கும் தொழிலாளிக்குக் கிடைப்பது, காய் ஒன்றுக்கு அறுபது காசுகள் மட்டுமே. மனம் நொந்து போனோம் நாம்!

அத்தகைய சூழலிலும், செய்யும் தொழிலின் மீது கண்ணியத்தோடு சிரத்தை காண்பிக்கும் இம்மகாத்மாக்கள் செய்யும் தியாகம் எவரையும் எட்டாமற்ப் போவது மாபெரும் சோகம். இவர்களுக்குக் காப்பீடு உண்டா? கீழே விழுந்து, ஆகாதது ஆகிவிட்டால் புனர்வாழ்வு உண்டா?? தேங்காய் ஒன்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அர்ப்பணிப்பும் உழைப்பும் இருட்டுக்குள் உறைந்து போவது வரலாற்றுப் பிழைதானே??


9/10/2010

கண்டுபாவனை


செமப் புளிப்பு..வ்வூ...
ஆஆஆ....ஒரே காரம்
வூஊஊஉ...சரியான துவர்ப்பு
ச்சே... கசக்குது
உப்புக்கரிக்குது..உவ்வே
இல்ல, இப்ப இனிக்குது...
பொறுமைக்கான மாசூல் அது!!

9/07/2010

புகல்தலொடு புகழ்தலும்! புகழ்தலொடு நவில்தலும்!!

ஒருவர், தனது மனதில் நினைத்த எண்ணத்தைச் சொற்களாக்கி மற்றவரிடத்துக் கொண்டு சேர்ப்பதை, அதன் தன்மையைக் கருத்திற் கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம்.

சொல்லுதல், கூறுதல், அறைதல், செப்புதல், இயம்புதல் இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கான விளக்கங்களையும் எழுதலாம்தான்.... ஆனால், இன்றைய நேரத்தின் தன்மை கருதி அவ்வரிசையில் உள்ள சில சொற்களை மட்டும் பார்த்துவிட்டு, ஆக வேண்டியதைப் பார்க்கலாம் வாருங்கள்.

நவில்தல் என்றால், நல்லூழ் ஒன்றைக் கருத்திற் கொண்டு, அவ்வெண்ணத்தின் வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: நன்றி நவில்தல்.

புகல்தல் என்றால், எண்ணம் என்பது தானாக எழுவதற்கு மாறாக, குறிப்பிட்ட எண்ணத்தை தன்னுள் எழச் செய்து அல்லது நாடிச் சென்று, அதற்கான சொற்பிரயோகங் கொண்டு வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: வீரனெனப் புகல்தல்

புகழ்தல் என்றால், எண்ணம் என்பது தானாக மனதிற் சொரிந்து, இசைந்து, உருகி, அவ்வெண்ணத்தைத் தக்க சொற்களால் அறியத் தருவது. உ-ம்: கொடையாளன் எனப் புகழ்ந்தான்.

இளம்பிராயத்திலே அவ்வப்போது நிர்ப்பந்தனைக்கு ஆளாவது வழமையே. ஏதாவது ஒன்றை, மீண்டும் மீண்டும் ஐம்பது தடவை எழுது, நூறு தடவை எழுது என நிர்ப்பந்தம் செய்வார் ஆசிரியர். அதாவது, மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம், அதாகப்பட்டது அவனுள் பற்றுதலாய்ப் படியும் என்பது நம்பிக்கை.

மேலே சொன்ன நிர்பந்தனைக்கு ஒத்த அமைவதே புகல்தல் என்பதும். அடுத்தவர் தம்மை நிர்ப்பந்தம் செய்வதற்கு மாறாக, தன்னைத் தானே எண்ண ரீதியாகச் செய்து கொள்வது.

நான் நல்லவன் எனும் நினைப்பைத் தன்னுள் உருவாக்கிக் கொண்டு, நேர்மறை எண்ணம் கொண்டு, நல்லவன் போன்றதொரு தோற்றத்தின் வெளிப்பாடாய் இடுகை இடுகிறோமே, அதுவும் புகல்தல்தான்.

ஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான்.

பதிவுலகத்தில் எழுதும் பெரும்பாலானோரும் இதற்கு விதிவிலக்கற்று, புகல்தலின்கண் நல்லவராய் உருவெடுப்பர் எனபது எம் புகழ்தலே!!

முன்பின் தெரியாத ஒருவரை அண்ணா, அண்ணா என விளிக்கிறோம். மாப்பு எனச் சிலாகிக்கிறோம்; பங்காளி எனப் பிரியம் கொள்கிறோம். இதுவே, திரும்பத் திரும்ப நிகழும் போது எண்ணங்கள் மனிதனை வெற்றி கொள்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், மனிதனை எண்ணங்கள் வெற்றி கொள்வதே மிகுதி.

இப்படியானதொரு அகச்சூழலில்தான், தாயகப் பயணம் மேற்கொண்டோம் நாம். கண்டவரெலாம் நல்லவராகத் தெரிந்தார்கள். அது மட்டுமா?? நாடிய போதெலாம், தயக்கமின்றி உதவினார்கள்.

இன்ன தேதியில் வருகிறேன், உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்றேன். நீங்கள் நல்லபடியாய் வந்து சேருங்கள். மற்றனவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நானும் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தேன்.

புகல்தலின் பயனாய், அவர்களும் எனது அகச்சூழலைப் போன்றதொரு அகச்சூழலையே கொண்டிருந்தார்கள். சமூகத்திற்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நல்லவனாய் நினைத்து எழுதப்படும் எழுத்துகள், எழுதியவனை நல்லவனாக்கிப் புன்னகைக்கும் காட்சி எம்முள் விரிந்தது.

அந்நேரத்தில்தான், நூல் அறிமுக விழாவும் வந்தது. பெருந்திரளாய்ப் பதிவர் கூட்டம். அன்போடு வந்து கலந்து கொண்டார்கள். மனதார மகிழ்ந்தேன். காலத்தின் இன்மை கருதி, நன்றி நவிலக் கூட இயலாதவன் ஆனேன். என்றாலும், அவர்கள் வருந்தி இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் அவர்கள்; வணிகர் அல்ல அவர்கள்!! வாழ்க பதிவுலகம்!!!

ஆரூரன், சஞ்சய் காந்தி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் பாலாண்ணன், பாலாசி, வெயிலான், பங்காளி சிவசு, தமிழ்ப்பயணி சிவா, முன்னெப்போதும் பார்த்திராத பெண்பதிவர்கள் எனப் பட்டியல் வெகு நீளம்!

இருப்பைத் தொலைத்து மீண்டு வந்த உறவுக் கதையும் இதில் அடக்கம். தம்பிமார்கள் அரங்கசாமி, ரங்சு, செயப்பிரகாசு என இப்பட்டியலும் வெகு நீளம். உறவுகளைக் கொண்டு வந்து சேர்க்கவல்ல எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் இவர்கள்! வாழ்க பதிவுலகம்!!

ஆரூரன் மற்றும் ஈரோடு கதிர் ஆகியோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு இடமும் எங்களைக் குதூகலிக்கச் சென்ற இடம் அல்ல அவை. எல்லாமும் கல்விச் சாலைகள்... எண்ணங்களை விதைத்தோம்... விதைத்த விதைகள் காணாமற் போகலாம்... விதைப்பது காணாமற் போகாது அல்லவா?? வாழ்க பதிவுலகம்!!

அடுத்து நிகழ்ந்தது... இந்தியன் எக்சுபிரசு இதழின் செய்தியாளர் சந்திப்பு... நூல் அறிமுக விழாவிற்கு வந்த அன்பரும் பதிவருமான வெங்கட் என்னை நாட, நானோ மற்றவரை நாடினேன். மாலையில் மனதுக்கினிய ஒரு நிகழ்வு அது. சஞ்சய் காந்தி, குதூகலமாக்கிக் கொண்டிருந்தார். எண்ணங்கள் ஒருவனை முன்னெடுத்துச் செல்லும். சஞ்சய் காந்தியைப் பற்றிச் சொல்வதற்கு சொற்கள் போதாது. வாழ்க பதிவுலகம்!

அதைத் தொடர்ந்து, அன்பு அண்ணல் மஞ்சூராரின் வேண்டுகோள். அவரது இல்லத்திலே மீண்டுமொரு சந்திப்பு. அன்பர்களோடு அளவளாவல். காசி அண்ணாவை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். வாய்ப்பு அமையவில்லை.

எண்ணங்களை விதைக்க வேண்டி, கோவையிலிருந்து சென்னையில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அகத்திற்குச் செல்லும் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று செய்திருந்தார் ஆரூரன். குடும்ப நிகழ்ச்சியதன் முக்கியத்துவம் கருதி, இறுதி வேளையில் பயணத்தைக் கைவிடலாயிற்று. ஆரூரன் அவர்கள் இது குறித்து வருத்தப்பட மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

திடீரென, மறந்து விட்டிருந்த திட்டத்தை உயிர்ப்பித்தபடி அழைத்திருந்தார் அண்ணன் உண்மைத்தமிழன். இருவருமாகச் சிறிது நேரம், சீமாச்சு அண்ணன் பெருமை பகர்ந்தோம். பின்னர் மீண்டும் ஆரூரன் அவர்களே பயண ஏற்பாடுகளைச் செய்யலானார். ஆனால், இம்முறை ஜெயா தொலைக்காட்சி நிகழ்வுக்கு!

எனக்கோ, சென்னையைப் பற்றி அவ்வளவாக அறிமுகம் கிடையாது. இருந்தாலும், பதிவுலகின் மேல் நம்பிக்கைச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினேன். ஈரோடில், வழியனுப்பி வைத்தார்கள் மாப்பு கதிரும் ஆரூரனும். பாலாண்ணன் வாழ்த்தினார்.

அடை மழையுனூடாக, அபலையாய் வந்திறங்கியவனைக் கோயம்ப்பேட்டில் வந்து அரவணைத்தார் அண்ணன் அப்துல்லா. விருந்தோம்பலால் அடித்துத் துவைத்தார் அண்ணன். எண்ணங்கள் ஆட்டுவித்தது. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

தொலைக்காட்சி நிலையம்... தயாரிப்பாளர் என்னை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை வடிவமைப்பாரோ எனத் தயங்கி நின்றேன். அவரோ, தமிழை முன்னிலைப்படுத்தினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது தமிழக ஊடகத் துறையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டார். எமக்கோ, இரட்டிப்பு மகிழ்ச்சி! அண்ணன் சரவணன் (உ.த) அவர்கள் அறிமுகப்படுத்திய விதம் அப்படி. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!

நிகழ்ச்சியை முடித்ததும், அண்ணன் அப்துல்லா வசம் நாம். எண்ணங்கள் கரைபுரண்டு ஓடியது. கடற்கரைக்கு, பிறந்த பிள்ளையை அழைத்துச் செல்வது போல வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார். பதிவர் சந்திப்பு நடக்குற இடம் இதாண்ணே என்றார். புன்னகை வழிந்தோடியது. வாழ்க பதிவுலகம்!!

கோவைக்கு விமானத்தில் சென்று, சென்ற வேகத்தில் மீண்டும் சென்னை. இம்முறை அமெரிக்காவுக்குத் திரும்ப. பிற்பகல் மூன்று மணியில் இருந்து, இரவு பதினொரு மணி வரைக்கும் என்ன செய்வதென யோசித்திருந்த நேரமது.

எண்ணங்கள் கைகூடி வந்தது. எழுத்தாள்ர், இதழியலாளர், பண்பாளர் எனச் சகலதும் எழுதிக் கொள்ளலாம்தான்... அவற்றால் எங்கள் எண்ணங்கள் கூடவில்லையே? ஆம், நண்பர் யாணன் வந்திருந்தார் விமான நிலையத்திற்கு. பக்கத்துலதாங்க அய்யா வீடு, வாங்க வீட்டுக்குப் போலாம் என்றார். ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

வீட்டிற்கு அழைத்துச் சென்று, நாளைய பதிவர்கள், சாதனையாளர்களான அவர்தம் இளவல்களோடு களிப்புற்று மகிழ்ந்தோம் நாம். சின்னஞ்சிறு மகன்களே ஆனாலும், தீர்க்கம் கண்களில் வழிகிறது அவர்களுக்கு. நல்ல எண்ணங்கள் அவர்களுள்... ஏனென்றால் அவர்களும் நாளைய பதிவர்களே! வாழ்க பதிவுலகம்!!

விமான நிலையம் வந்து ஏற்றிவிட்டுச் சென்ற, அன்பரும் பதிவருமான யாணன் அவர்கள், இதோ தொலைக்காட்சியின் ஊடான நம் எண்ணங்களையும் வலை ஏற்றியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மீதும், நம்மீதும் பற்றுக் கொண்ட அவரது எண்ணங்களும் நமது எண்ணங்களே! வாழ்க பதிவுலகம்!!








தமிழால் இணைந்தோம்!!!

9/06/2010

நிச்சயமாப் பாருங்க மக்கா!!!


US$ 15000 விலை மதிப்புமிக்க சந்தனச் சிற்பம்.... இதில் மொத்த மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பு.

==============

கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில யாருமே சரியாப் புழங்குறது இல்லைங்க வருத்தம் யாருக்கோ இருக்காம். Buzz(உசுலு) மற்றும் மின்னஞ்சல்ல புலம்பிட்டு இருந்ததை இங்கயும் பதிஞ்சிடலாமே??

கட்டாயம் அப்படின்னா, நிபந்தனையின் பேரில் செய்வது.
அவசியம்ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது
நிச்சயம்ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது
கண்டிப்பான்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது....

உதாரணம்: ஒருத்தர் ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டியதைத் தவிர்க்க முடியாது அப்படின்னா, அவசியம் நீங்க வந்தே ஆகணும் அப்படின்னு சொல்ணும்.... அதைவுட்டுபிட்டு, கண்டிப்பா வரணும்னோ, நிச்சயமா வரணும்னோ சொல்லப்படாது....

compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே மக்கா?? அவ்வ்வ்......

============

சரிங்க மக்கா, நிச்சயமாப் பாருங்க என்ன? என்னத்த?? நண்பர்கள் சிலர் நம்மை ஜெயா தொலைக்காட்சியில ஏத்திவுட்டு இருக்காங்க.... செப்டம்பர் 7ந் தேதி காலை 8 மணிக்குக் காலைக் கதிர் நிகழ்ச்சியில ஒளிபரப்பு ஆகப் போகுதாம் நிகழ்ச்சி... நிச்சயமாப் பார்த்துட்டு, உங்க கருத்தைச் சொல்லுங்க மக்கா....




பகிர்வுக்கு நன்றி வெயிலான்!!!

9/04/2010

திருமண வாழ்த்து

சென்னையில் இன்று திருமண விழாக் காணும் நண்பர்கள் திருநிறைச்செல்வன். க.மகேந்திரன் மற்றும் திருநிறைச்செல்வி பதிவர் செள.தமிழரசி அவர்கள் இருவரையும்,


கலையாத கல்வி, கபடற்ற நட்பு,
குறையா வயது, குன்றா வளம்
போகா இளமை, பரவசமான பக்தி
பிணியற்ற உடல், சலியா மனம்
அன்பான துணை, தவறாத சந்தானம்
தாழாக் கீர்த்தி, மாறாச் சொல்
தடையற்ற கொடை, தொலையா நிதி
கோணா செயல், துன்பமில்லா வாழ்வு
என்ப் பதினாறும் உற்றுப்
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!!


விஜயகுமார் வேணுகோபால், நியூஜெர்சி.
வெங்கடேசன் சந்திரன், பெங்களூரு,
பழமைபேசி, சார்லட்.

9/01/2010

மீளக் கிடைத்த நாளிதுவோ?!

முன்னிரவில் உற்றார் உறவினரோடு அளவளாவல், அதன் பின்னர் கொஞ்சு மழலையருடன் உறவாடல் என நடுநிசியைக் கடந்துதான் நித்திரைத் தழுவலானது நிகழ்ந்தது. வழமை போலவே பிஞ்சுக் கால்கள் தேகம் வருட, பஞ்சுக் கைகள் காதைத் திருகக் கண்கள் விழித்தன மறுநாட்க் காலைப் பொழுதில்!

மூத்தவள் நான் முந்தி நீ முந்தியென ஓடி வந்து கழுத்தைப் பிடித்து கொஞ்சு முத்தத்தினூடாகச் சொன்னாள், “அப்பே... உங்களுக்கு இன்னிக்கி பிறந்த நாளுப்பா... பாட்டி, உங்களுக்குப் புடிச்ச நிலக்கடலை உருண்டை செஞ்சி வெச்சிருக்காங்க...”

மாலை ஆறு மணிக்கு வரவேண்டிய மின்சாரம், முன்னதாகவே அருள் பாலித்துப் பிரகாசித்த முற்றத்து மின்விளக்கு போல சுயத்தின் பிரஞ்ஞை இன்றியே பிரகாசித்தது அவன் முகம்.

தன் பெற்றோரை அண்டியிராத பிறந்த நாட்ப் பொழுதுகள் பதினெட்டு... புலம் பெயர்ந்து வாழுமவனுக்கு கிடைக்கக் காணாத நாளாக எண்ணி மகிழ்ந்தான். அம்மகிழ்ச்சியினூடகத் தன் பிள்ளைகளை வாரி இழுத்துக் கட்டியணைத்தபடி அறையை விட்டு வெளியில் வந்தான்.

மொத்த வீடும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. பிறந்த நாள்க் காணுபவனைக் கவனிக்கும் பொருட்டு, தாய், தந்தை, மனைவி மற்றும் சின்னஞ்சிறு பிள்ளைகள் என வீட்டில் இருக்கும் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”போ...கண்ணூ... போ... கையோட போய்க் குளிச்சிட்டு வந்துரு... அந்த கம்ப்யூட்டர்ப் பொட்டியோட மெனக்கெடாத சொல்லிட்டன்”, கண்டிப்பாய்ச் சொன்னாள் அம்மா.

“இந்தாங்க காப்பி!”, பவ்யமாய் வளைய வந்தாள் மனைவி.

வெற்றுக் கொப்பளித்தளோடு அன்றைய சூடாகாரம் உள்ளே இறங்கியது. என்றுமில்லாத சுவையாக இருந்தது மனைவியின் கைபட வந்த காப்பியானது. அந்த வேகத்திலேயே, குளியலுமாகி, புது ஆடைகளும் தரித்து வெளியே வந்தான் பிறந்த நாள்க் காணும் அவன்.

ஏற்கனவே குளித்துச் சிரித்துப் புளகாங்கிதத்தில் இருக்கும் பெற்றோரை வணங்கி, அமர்ந்த நிலையில் படமும் கிளிக்கிக் கொண்டான்.

“கண்ணூ, நாமப்ப தெக்க திருமூத்தி மலைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துறலாமா?”, இளகிய மனதோடு மொழியால் வருடினாள் தாய்.

“அவ்ளோ தூரம், கைக் கொழந்தைகளை வெச்சிட்டுப் போய்ட்டு வாறது சிரமம்... வேற எதனா சொல்லுங்மா!”, பணிவாய் இரங்கினாள் மனைவி.

“அப்ப, நாம மருதமலை போய்ட்டு வரலாமுங்ளா?”, கனிவாய்க் கேட்டார் வாகன ஓட்டி.

“அது நல்ல ரோசனை...”, முடித்து வைத்தார் அப்பா.

காலைச் சிற்றுண்டியுடன், குதூகலமாய்ப் புறப்பட்டது வாகனம் மணியகாரன் பாளையம், நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக. குக்கிராமங்களாய் இருந்து, கிராமிய மகோன்னதத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த கிராமங்கள், தத்தம் விழுமியங்களைத் தொலைத்து அம்மை போட்ட தேகமென உருமாறிக் கிடந்தன. போக்குவரத்து நெரிசல் வேறு. காலத்தின் கோலமடா... வீடெல்லாம் வேலியடா... இயற்கைக்கே கொள்ளியடா என முணுமுணுத்துக் கொண்டான்.

இடையர் பாளையம் சந்தியில் இருக்கும் கனத்துப் பருத்த ஆலமரங்கள் இன்னமும் இருக்கிறது. வாழ்க கவுண்டம்பாளையம் நகராட்சி!!! வடவள்ளி சாலைக்கு மாறியது வாகனம்.

இருமருங்கிலும் இருந்த வாழைத் தோப்புகளும், கமுக மரங்களும் மஞ்சள்த் தோட்டங்கள் போனால் என்ன? வண்ண வண்ணமாய், கட்டிடங்கள், கட்டிடங்கள்... எங்கும் கட்டிடங்கள்... சாக்கடைகள் கண்ட இடமெலாம் அடுக்ககங்கள்... சாக்கடையும் அடுக்ககமும் ஒட்டிப் பிறந்த குழந்தைகளோ??

வடவள்ளியைக் கடந்து, கல்வீரம் பாளையம் வரவும்தான் மனம் நிலைகொள்ள ஆரம்பித்தது அவனுக்கு. ஆம், பச்சைப் பசேல் மரங்கள் முன்பிருந்தது போலவே தலைகாட்டத் துவங்கியது. அப்பப்பா.... தாயகத்துப் பசுமையே பசுமை! நெடிய, விழுதுடன் கூடிய மரங்கள், அடி பெருத்த மரங்கள், குடையாய்க் கவிழ்ந்த மரங்கள்.... இரசித்து நெகிழ்ந்தான் அவன்.

இடையில் தட்டுப்பட்ட மண்டபத்தின் முன் இருந்த அம்பாரிப் பந்தலைப் பார்த்ததும் குதூகலம் பொங்கி, ஆனந்தக் கண்ணீர் வடித்தான். தன் தாய் மாமன் மணத்திற்குப் பின், கிட்டத்தட்ட தனக்குப் பத்து பனிரெண்டு வயதில் நடந்த தன் மாமன் திருமணத்தை நினைவுக்கு மீட்டு வந்தது அந்த அம்பாரிப் பந்தல். வாகாய்க் கிளிக்கிக் கொண்டான்.

பாராதியார் பல்கலைக் கழகம் வரவேற்றது. மிகத் தூய்மையாய் இருக்கும் வளாகம் கண்டு, மிக்க மகிழ்ச்சியுற்றான் அவன். “என்ணிய முடிதல் வேண்டும்”, முகப்பில் மிளிர்ந்த வாசகத்தை மீண்டும் மீண்டும் வாசித்து உருப் போட்டுக் கொண்டான். எண்ணிய முடிதல் வேண்டும்!!

அந்தோ! அதே இடம்!! தனக்கு வயது பதினேழாக இருக்கும் போது, எந்த இடத்தில் இரவு ஏழு மணிக்கு இறங்கி, நடு நடுங்கி, அங்கே இருந்த இட்டேரியின் வழியாகச் சென்றானோ, அதே இடம். ஆம், வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற பேராவலில், அதற்கான வாய்ப்பை நாடி, ஐஓபி காலணியில் இருக்கும் ஒருவரை நாடிச் சென்ற அதே இட்டேரிதான் அது. இன்று, நல்லதொரு வழித்தடத்தோடு காட்சி அளித்துக் கொண்டு இருந்தது.

அகமகிழ்ச்சியோடு மேற்குமுகமாக நிமிர்ந்து பார்த்தான். பாம்பாட்டி சித்தர் கண்ட மருதமலை எழில் கொஞ்சிக் கொண்டிருந்தது. முகிலினமோ மலைமுகடுகளை முகர்ந்து சிருங்காரத்தில் மெய்மறந்து தன்னை இழந்து கொண்டிருந்தன.


இலயிப்பில் இருந்தவனை நோக்கித் திடீரெனக் கிறீச்சிட்டாள் மூத்தவள், “அப்பே இங்க பாருங்கப்பா, அப்பா சீக்கிரம் இங்க பாருங்”. திடீரென வந்த ஓசையின் பொருட்டு அதிர்ந்து திரும்பினான் அவளிருக்கும் திசை நோக்கி!!

(தொடரும்)