6/26/2012

அமெரிக்க தமிழ்த் திருவிழா - கவிவணக்கம்


எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!

பால்ட்டிமோர் நகரில்
தமிழாலே நினை
ஆராதிப்பதெங்கனம்
என்பதெங்கள் எண்ணம்!

தமிழாலே
இணைந்திடுவோம்
செயலாலே
வென்றிடுவோம்
என்பதெங்கள் சொல்!

உனக்கான திருவமுது
வெள்ளிவிழா மலராக
தமிழ்த்தேனீ போட்டியாக
நயம்மிகு கவியரங்காக
பலவும் படைப்பது
என்பதெங்கள் செயல்!

எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!!


6/23/2012

FeTNA வெள்ளி விழா - பழமைபேசி பேசுகிறேன்

என் நீண்ட நாள் ஆசை.... நல்லகண்ணு அய்யா அவர்களுடன் ஒரு பொழுதாவது இருக்க வேண்டுமென! ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது. பேரவை வெள்ளி விழாவுக்கு அணி சேர்க்கும் அய்யா அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்!!

திரு. இரா.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் ராமசாமி - கருப்பாயி தம்பதியருக்கு 1925 டிசம்பர் 26 அன்று மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னர் தனது பதினெட்டாவது வயதிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பொதுவாழ்வு வாழத் தலைப்பட்டார்.
போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் நாங்குனேரி வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும், வடகரையிலிருந்து வள்ளியூர் வரையுள்ள கிராமங்களுக்கும் நடந்தே சென்று விவசாய சங்கங்களை தோழர் இரா.நல்லகண்ணு உருவாக்கினார். மடாதிபதிகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமங்களில் தலித் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.
சாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காகத் தன் வாழ்க்கையை சிறைக் கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். பொதுவாழ்வில் எளிமையையும் சிக்கனத்தையும், தூய்மையையும் இன்றளவும் போற்றி வருபவர்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர் கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் மாணவராகப் பயின்ற தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், முதுபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். தற்போது அவருக்கு 83 வயதாகிறது. ஆனால், இன்னும் இயக்கப் பணிகளிலும் எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
’டாக்டர் அம்பேத்கர்’, ‘ஒளி வீசும் சுடர்’ ’வெண்மணி தியாகிகள் கவிதை’, ’டாக்டரின் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை’, ’மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் (மொழிபெயர்ப்பு)’, ’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்கள்’, ’பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ’விவசாயிகளின் பேரெழுச்சி (மொழிபெயர்ப்பு)’, ’தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு’, முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
பேரவை கொண்டாடவிருக்கிற நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனாருடன் தொடர்பில் இருந்தவர். பொதுவுடமைத் தலைவர் ஜீவா அவர்களின் மறைவின் போது எப்படியெல்லாம் தானும் முனைவர் மு.வ அவர்களும் ஒருவொருக்கொருவர் தேற்றிக் கொண்டார்கள் என்பதையும் முனைவர் மு.வ அவர்களின் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் தன் கட்டுரைகள் வாயிலாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள்.
தமிழ்நாட்டு அரசின் ’அம்பேத்கர்’ விருது, அனைத்திந்திய காந்திய சமூகநல அமைப்பின் ’காந்திய விருது’, முற்போக்கு எழுத்தாளர் கழகத்தின் ‘ஜீவா விருது’ உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளைப் பெற்றவர்.
தமிழ் மொழியாலும், தமிழ்ப் பண்பாட்டாலும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதுபெரும் தொண்டர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் வருகை, அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவினுடைய மணிமகுடத்தின் மாணிக்கக்கல்!!

6/10/2012

அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா

இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
ஐங்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு 
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்



Register early before it gets full. It happened in FeTNA 2009!  Register Now!!

6/04/2012

FeTNA: அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012

தமிழ்த் திருவிழா

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) என்பதாகும். வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழாவாக வெகுப் பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும் விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்ற ஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளி விழாவானது முனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

”தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.

வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை.செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலா பால் மேடை நிகழ்ச்சி, திரைப்பட நடிகையும் சின்ன திரைக் கலைஞருமான பிரியதர்ஷினி நாட்டியம், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டா பெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.


இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.

விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதள முகவரி: www.fetna.org

பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள் பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370.

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. பொற்செழியன் 314 249 0706 
நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் இடம் பெறும் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி 443 254 4775
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர், திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன். ’இதயங்கள் இயங்கட்டும்’ எனும் தலைப்பிலான கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்பு கொள்ள: 860 212 2398

‘விஜய் டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக் கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா. மனோகரன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 267-421-2891

கூடுதல் தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, 843-814-7581  திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளி விழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

6/03/2012

திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர் பிரியதர்ஷினி


தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.

Register today for such a great Tamil Event. www.fetna.org