3/29/2020

உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி


வணக்கம். During this tough pandemic period,  Why I choose to be positive? வைரசுகள் பலவிதம். அதில் இதுவொரு விதம். இதன் சுவடு, கண் மூக்கு வாய் வழியாக மூச்சுக்குழாய்க்குள் சென்றால், பல்கிப்பெருகி உடல்நலத்துக்குத் தீங்காகும். நம்மிலிருந்து பலருக்கும் அது பரவ வழிவகுக்கும். தற்காத்துக் கொள்ளவும் பொதுநலத்துக்கு வழிவகுக்கவும் ஒத்துழைப்பது நம் கடமை. ஆகவே, I choose to be positive.

மனநிலை என்பது நாம் உள்வாங்கும் பல செய்திகள், தகவல்கள், காட்சிகள், உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது. அறிவுறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் மயிரிழையளவுதான் வித்தியாசம். அந்த வித்தியாசத்தைக் கடைபிடிக்க சமநிலை தரித்தல் அவசியம். ஆகவே, I choose to be positive.

24 மணிநேரமும் வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் தொலைக்கலாம். இதிலிருந்தெல்லாம் விடுபட்டு, அதிகாரப்பூர்வ அரசுப்பூர்வ தகவலை நுகர்ந்து பெருமளவு நேரத்தை என் சிந்தைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டுமேயானால் சுயகட்டுப்பாடு அவசியம். ஆகவே, I choose to be positive.

நானும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, பிறந்த நொடியிலிருந்து இந்தநொடி வரைக்குமான பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றேன். அதில் எத்தனை எத்தனையோ அனுபவங்களைப் பெற்றே வந்திருக்கின்றேன். திரும்பிப் பார்த்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சவாலான நேரத்தைக் கடக்க முயலவேண்டுமேயானால், முதலில் நான் என் வசப்பட வேண்டும். ஆகவே, I choose to be positive.

மானுடத்தின் மகோன்னதம் அறிவியல். அறிவியலில் பல கூறுகள், பல பிரிவுகள். கற்பதற்கு கிடைக்கின்றன ஏராளம், ஏராளம். நாம்தான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும்.  அதற்குத் தேவை நாட்டம். அப்படியான நாட்டத்துக்கு விழைதல் அவசியம். ஆகவே, I choose to be positive.

பேரிடர் காலத்தில் துயருக்கு நெருக்கமானவர்கள் வயதில் மூத்தோர், உடல்நிலையில் பின்தங்கியோர், சிந்தைவலு குன்றியோர். அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமேயாயின், நமக்குள் ஊக்கம் வாய்த்திருத்தல் அவசியம். அன்றாடம் சில பலருடன் பேசியும் வருகின்றேன். அப்படியான ஊக்கத்திற்காக,  I choose to be positive.

அடிப்படையில், மக்களுடன் உரையாடும், கலந்திருக்கும், ஊடுபாயும் தன்மை கொண்டவனுக்கு, அப்படியானதன் தேவை அதிகரித்திருக்கின்றது. தேவையை ஈடுகட்டும் பொருட்டு, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வீட்டில் மருத்துவத்துறை சார்ந்தவர் இருக்கின்றார். ஊக்கமளித்துத் தோளோடு தோள் கொடுத்து நிற்றலும் அவசியம். மருத்துவத்துறை சார்ந்தவர் என்பதாலேயே அறிவுறுத்தலெனும் பெயரால் அச்சுறுத்தல்களும் வந்து சேர்கின்றன. அவற்றை முறியடித்து விழுமியம் பேண வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வாழ்க்கையைக் காலத்தின் அளவு முடிவு செய்வதில்லை. துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான பயணத்தில் வாழ்வுக்குடம் நிறைகுடமாக வந்து சேர்ந்ததா என்பதுதான் பொருட்டு. இயன்றவரையிலும் நிறைவானதாய் இருக்க முயல்கின்றோம். அத்தகு முயற்சிக்கு வித்து, துணிபு. ஆகவே, I choose to be positive.

நேற்றைய நாளைச் செப்பனிட முடியாது. ஆனால் நாளைய நாளைக் கட்டமைக்க முடியும். கட்டமைக்க உறுதியும் உள்ளமும் தேவையாய் இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

சிங்கம் பிடரியைச் சிலிப்பி எழுவது போல,  நாய் தன் பின்னங்கால்களை ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி நிலத்தைக் கீறி, பாய்ந்தோடத் தன்னை முடுக்கி முனைந்து கொள்வதைப் போல, அடுத்தவரையும் தட்டித் திடமாக்கி ஊக்கம் கொள்ளச் செய்திட நமக்குள் வேட்கை இருந்திடல் வேண்டும். ஆகவே, I choose to be positive.

சோம்பலாக இருக்கின்றதா? மங்கலாக இருக்கின்றதா?? சோகமாய் இருக்கின்றதா? சோகையாய் இருக்கின்றதா?? விரியக் கண்களைத் திறந்து பாருங்கள். வாய்விட்டு, அஃகஃகா பெருத்துச் சிரியுங்கள். உங்களுக்குள் ஆழம் பிறக்கும். அவை அனைத்தும் அதற்குள் புதையுண்டு போகும். நீங்கள் மிளிர்ந்து இருப்பீர்கள். அதற்குத் தேவை ஓர் ஆறுதல், ஒரு துணை, ஒரு சொல். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

நம்விரல்களில் நச்சின் சுவடு படிந்து விட்டது. கண்களைக் கசக்கும் போது, மூக்கினைத் தொடும்போது, ஏதாகிலும் தின்னும் போது, காயம் புண்களினூடாகயெனப் பலவாறாக எப்படியோ அது நம்முடலுக்குள் புகுந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்? உடம்பில் இருக்கும் அணுக்களில் புகுந்து தன்வசப்படுத்தி தன் உருவைப் பெருக்கிப் பெருக்கி உடலைத் தின்ன, சிதைக்கத் துவங்கும். உடலெங்கும் இருக்கும் அணுக்கள் வெளியாள் உட்புகுந்து விட்டதைக் குறிக்க புரதச்சுவட்டினை வெளிப்படுத்தும். அப்படியான புரதச்சுவடுகளைப் படித்துத் தெரிந்து கொண்ட உடல், அவற்றை அழித்தொழிக்கும் பொருட்டு நம் எலும்பு மச்சையிலிருந்து இலட்சோப இலட்சம் வீரர்களை இரத்தத்தின் வெள்ளையணுக்கள் வாயிலாக அனுப்பும். வெளியேற்றும்பொருட்டு, தும்மல் இருமல் ஏற்படும்; வெப்பத்தை உயர்த்தி அவற்றை அழிக்கும் பொருட்டு காய்ச்சல் ஏற்படும். புரதத்தைக் கொண்டு தடுப்புக் காவலர்களை அனுப்பும் பொருட்டு புரதச்சத்தினை செலவிடுவதால், தசைநார்கள் வலிக்கும். முதன்முறையாக ஒரு நச்சு உட்புகும்போது, அழித்தொழிப்பு வேலை கடுமையாக இருக்கும். ஒருமுறை அழித்தொழிப்பில் வெற்றி பெற்று விட்டால், உடற்சக்தியானது அதன் வகை, தன்மை முதலானவற்றை நினைவில் வைத்திருக்கும். மறுமுறை எதிர்ப்படும் போது எளிதில் வென்றெடுக்கும். இப்படியான நச்சு எதிர்ப்பு அணுக்களுக்கும் சிந்தையின் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு. https://www.sciencedaily.com/releases/2010/03/100323121757.htm சிந்தை மேலான எண்ணத்தோடும் ஊக்கத்தோடும் இருக்கும் நிலையில், உடலின் கோடானுகோடி அணுக்களும் அவ்வண்ணமே இருக்கின்றன. அவை அப்படி இருக்கும் போது, அவற்றின் பிரதிகளும் ஊக்கம் பெற்று அழித்தொழிப்பில் வெற்றி பெறுகின்றன. ஆகவே, I choose to be positive; We must remain positive. உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி, Let's be positive! Wish you all the best!!

Signing Off,
பழமைபேசி,
Pazamaipesi@gmail.com.

3/13/2020

சமையலோடு உறவாடு



வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, ஒருவர் தம்மைச் சமையலில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வையே முழுமையாக்கும். எப்படி?

சமைப்பதென்பது நம் மனநலத்தை மேம்படுத்தும். ஏனென்றால், அது பொறுமையைச் சிறுக சிறுக நம்முள்ளே உட்புகுத்தி தேவையற்ற கொந்தளிப்புகளையும் உணர்வுப் பிழம்புகளுக்கான அத்தனை காரணிகளையும் மட்டுப்படுத்தி விடும். மனநிறைவை ஈட்டித்தரும். புத்தாக்கத்துக்கான அத்தனை கதவுளும் திறக்கப்பட்டு எல்லையற்ற தன்னாட்சியை அது நமக்குக் கொடுக்கும். வகை வகையாய், விதவிதமாய் புதுப்புது வழிகளில் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம். தாவரங்களோடும், இதர பண்டங்களோடும் உரையாடலை மேற்கொள்ளும் மனம். ஒவ்வொரு மணம், சுவை, ஓசை, வண்ணம் எனப் பல பரிமானங்களில் அவற்றை மனம் அணுகத் துவங்கும். இதன் வாயிலாக, மனம் விசாலமடைந்து சிந்தை பலவாறாக விரிவடைய தொடங்கும்.  ஒன்றைச் செய்து வடிவாக வரும் பொருட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனம் தன்னம்பிக்கையில் ஆழ்ந்து புரளும். குடும்பநலமும் குதூகலிக்கத் துவங்கும். பாராட்டுகளும் கொடையுள்ளமும் படிப்படியாக பரவசத்தைக் கொணரும்.

செய்மன உணர்வு

தமக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கென சமைக்கத் துணிந்து, மனத்தின் அத்தனை பார்வையும் நன்றாகச் செய்து அசத்த வேண்டுமென்கின்ற வேட்கையின் பொருட்டு ஒருமுகமாக அந்த இலக்கில் குவியும் மனம். மனம் ஒருமுகப்பட வேண்டுமெனத் தனித்தனிப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சமைத்தாலே போதும். அத்தனை கவலைகளும், மனச்சிதற்ல்களும் ஒழிந்து போகும், பேரின்பத்தில் ஆழ்ந்து போகும் மனம். நாட்பட நாட்பட உள்ளுணர்வு மேம்பட்டு, அளவீடுகளெதுவுமின்றி நிதானத்திலேயே ஒன்றைப் படைக்க முற்படுவீர்கள். அதுதான் கைவாக்கு என்பது. அப்படியான கைவாக்கு மேம்படும்போது மனம் பண்பட்டே போகும்.

புத்தாக்க உணர்வு

பல்வேறு காய்கறிகள், தனிப்பொருட்கள்,  வறுப்பது, தாளிப்பது, சுடுவது, அவிப்பது, கருக்குவது எனப் பல்வேறு சமைக்கும் முறைமைகளென பலதரப்பட்டவோடு பின்னிப்பிணைந்து புதிது புதிதாகச் செய்து பார்க்கத் தூண்டும் மனம். தேடலை விதைக்கும். நாடலை விதைக்கும்.  மற்றவர் அறிந்திராத ஒன்றைப் படைக்க விழையும் மனம். அந்த இடத்தில்தாம் ஒருவரின் மனத்தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடையத் துவங்கும். அது அவரவரின் தொழில், வாழ்க்கையிலும் துலங்கத் துவங்கும். மனத்தடை அகன்றால், out of box thinking எனப்படுகின்ற மனவிரிவு நேர்ந்தே தீரும்.

பொறுமை

சமைக்க சமைக்க உள்ளுணர்வு வலுப்படும். Blending இரண்டறக் கலந்து நயம் வெளிப்படுகின்ற தருணத்துக்காக மனம் ஏங்கும். அந்தத் தருணத்தை மட்டுமே இலக்காகக் கொள்ள மனம் விழைகின்ற போது, பொறுமை என்பது தானாக வந்து விடும் ஒருவருக்கு.

மனமறிதல்

பாராட்டும் போது மனம் இலயித்துப் போகும். நாட்பட நாட்பட அடுத்தவரின் நாடிபிடிக்கப் பழகிப் போகும் மனம். சுவையில், காட்சியில் மேம்பாடு காணத் துடிக்கும். அடுத்தவரின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளும். இத்தகைய பண்பு என்பது சந்தைப்படுத்தலுக்கான ஆதார வேர். அத்தகைய பண்பு சமையலின் வாயிலாகவும் நமக்கு நேரிடும்.

நெகிழ்மனங்கொள்தல்

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அந்தப் பொருளும் அதனதன் இடம், வகையைப் பொறுத்து அதன் தன்மையைக் கொண்டிருக்கும். அப்படியான நிலையில் நினைத்தபடி வாய்க்கப் பெறாவிட்டால் உடனே அதனை ஈடுகட்டும் பொருட்டு வேறெவோன்றைச் செய்து சரிக்கட்டப் பழகும் மனம். உப்புக் கூடிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கினைத் துண்டுகளாக்கிப் போட்டு விடுவதைப் போல. எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிவதைக் காட்டிலும், மனம் நெகிழ்ந்து சரிக்கட்டிக் கொள்ளப் பார்க்கும்.

முறைமைகொள்தல்

சமையலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது, ஒழுக்கம், பேணல் என்பதும் தானாகவே அமைந்து விடுகின்றது. கிடங்கில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கின்றது? என்னவெல்லாம் வாங்கி வர வேண்டும்? எப்படியெல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்? கெடுதல், வீணாதல், பேணுதல், வாங்கி வருதல் எனப் பலவாறாக மனம் பண்பட்டுப் போய் விடும்.

மெய்நலம்பேணல்

சமைத்தலில் ஈடுபடும் போது, நாடலும் தேடலும் விழைவும் நேர்ந்து விடுகின்றனயென்பதைப் பார்த்தோம். அவற்றின் பொருட்டு, தரம், நயம், நலம் என்பதும் தானாகவே அமைந்து வந்து சேர்ந்து கொள்கின்றது.  தாவரங்களின் இன்றியமை்யாமை, சத்துகளின் வகை, இன்ன நிலைக்கு இன்ன உணவு என்பதெல்லாமும் வாய்க்கப் பெற்று விடுகின்றது. அதன்நிமித்தம் மெய்நலமும் மேம்படுகின்றது.

சமைப்பதென்பது மனிதனை முழுமைப்படுத்தியே தீரும். சமத்துவமும் நிறைகொளலும் நேர்ந்தே தீரும். சமைக்கத் தெரியாதவன் அரை மனிதன்.  மெய்நலமும் மனநலமும் மேம்பட சமையலைப் பழகு.  Cooking is one of the mozt zen things; you have to be there!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com