5/21/2013

நகைச்சுவைத் திருவிழா


நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.
வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை நுண்ணலைப் பெட்டியின் எண்ணிம மணிகாட்டி மட்டும் அறையைக் கப்பியிருந்த இருளின் அடர்த்தியைத் தனது இளம்பச்சை நிறத்தால் சற்றே குறைத்துக் கொண்டிருக்கிறது.
ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட ஈச்சம்பாயினை முன்னறையின் மையப்பகுதியில் விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டேன். காற்கழல் ஒவ்வொன்றும் மறுதொடையின் மேல் இருக்கும்படியாகவும் முதுகுத்தண்டு செங்குத்திட்டும், நெஞ்சம் விரிந்து நிமிர்ந்துமிருக்க நேர்கொண்ட தலையோடு அமர்ந்திருந்தேன்.
எல்லாமும் சரியான நிலையிலேயே இருக்கிறது என்று மனத்துக்கு மனமே சொல்லிக் கொள்ள ஓரிரு மணித்துளிகள் தேவைப்பட்டிருந்தன. மனம் சமிக்கை கொடுத்தானவுடன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. சமையலறையில் இருந்த குளிர்மி அடிக்கொருதரம் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. தலையின் பின்னால் இருக்கும் சுவர்க்கடிகாரமோ வினாடிக்கொருதரம் ’லொக்’கென்று இருமும். அந்த சத்தத்தின் அதிர்வில் உட்காதுச் சவ்வுகள் கிழிந்து விடும்போல இருந்தது.
அனுமானத்தின் பேரில் சொல்கிறேன். கிட்டத்தட்ட பத்து மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. ஆனாலும் அந்த இருமல்ச் சத்தத்தின் இடையூறு தணிவதாக இல்லை. எழுந்து விடலாமா என்று யோசித்தேன். பத்மாசனக் கூறுகள் அதனதன்பாட்டுக்கு அதனதன் சீரைச் செம்மையாய்த் தரித்துக் கொண்டுதானிருந்தன.
புண்பட்ட மனத்தை புக விட்டு ஆத்து என ஊரில் சொல்வது நினைவுக்கு வர, “ஓம்” சொல்வதில் மனத்தைப் புகட்டினேன். இருமல்சத்தம் துப்புரவாக நின்று போயிருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் மகள்களைப் பற்றிய எண்ண அலையில் ’ஓம்’ சொல்வதும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு என்னை நானே எப்போது தொலைத்து விட்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. இப்படியாக நேரிடும் என்பதை மனத்திற்கொண்டுதான், மாலை நான்கு மணிக்கு ஒலிக்கும்படியாக முன்கூட்டியே எனது ஐபோனில் அலறியைக் கட்டமைத்திருந்தேன்.
ஐபோனின் ஒலி கேட்டுக் கண் விழித்தேன். அலறிக்கு மாறாக, யாரோ அழைப்பது போல உணர்ந்தேன். ஆமாம். நண்பர் கல்யாண் குமார்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார். அழைப்போசைதான் தொடர்ந்து ஒலிக்கிறது.
”சொல்லுங்க கல்யாண்!”
“விஜய், என்ன செய்றீங்க? ரொம்ப நேரமாக் கதவு தட்டிட்டு இருக்கேன். வீட்டிலதான இருக்கீங்க?”
“ஓ, அப்படீங்களா? இதா, வந்துட்னுங்க!”
ஓடிப் போய் கதவைத் திறந்து விட்டேன். நண்பர் கல்யாண் குமார் தமிழ்ச்சங்க நிறுவனர்களுள் ஒருவர். சமூகத்தொண்டு புரிவதில் அவருக்கு நிகர் அவர்தான். அக்கம்பக்கத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அழைப்பது கல்யாண் அவர்களைத்தானாக இருக்கும்.
“குளிச்சிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தனே? மறந்துட்டீங்களா??”
“இதென்ன, இப்ப ஆச்சுங்க கல்யாண்!”, சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் ஓடிப் போய் துரிதகதியில் புறப்பட்டு வந்தேன்.
இன்றைக்கு எங்கள் ஊர் தமிழ்ச்சங்கத்தினுடைய நகைச்சுவைத் திருவிழா. திருவிழாவில், உள்ளூர்க் கலைஞர்களின் ’காதலிக்க நேரமுண்டு’ நாடகமும், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினருடைய ‘வெங்கட்டா3” நாடகமும் இடம் பெறுகிறது. முன்கூட்டியே விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லத்தான் கல்யாண் வந்திருக்கிறார்.
அவர் அவரது சிற்றுந்தில் பயணிக்க, நான் எனது சிற்றுந்தில் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே காலியர்வில் காரல் அரங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன்.
தமிழ்ச்சங்க விழாக்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம். ஆசை தீர மொக்கை போடலாம். பயனுள்ள தகவல்களை அறிந்து வரலாம். மிக முக்கியமாக, சுவையுள்ள சாப்பாடு உண்ணக் கொடுப்பார்கள். அதுவும் மனைவி மக்கள் ஊருக்குப் போயிருக்கும் இத்தருணத்தில் சோறு முக்கியமல்லவா? ஓடியாடி வேலை செய்தால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல ”டு-கோ” கூடக் கொடுப்பார்கள்.
முதன்முதலில் அவன்தான் எதிர்ப்பட்டான். விழாவிற்கு ஏனடா வந்தோம் என்றிருந்தது. எல்லாம் இந்த கல்யாண் குமாரால் வந்தது வினை. உனக்கு எவ்வளவு சம்பளம்? எவ்வளவு மிச்சமாகுது? வகைதொகையில்லாமல் கேள்வியாய்க் கேட்டுத் தொலைப்பானே இந்த முருகவேல்??
நான் அவனைப் பார்க்காதது போல மறுவாசலில் வைத்திருந்த எதோவொரு பெட்டியை எடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு போனேன்.
“ஏனுங் விஜய்? எப்பிடி இருக்கீங்க? போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்றீங்க?? எங்க ஊட்டுல நங்கையாளையும் பாப்பாக்களையுங் காணம்??”, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா இந்த இருகூர்க்காரன்.
முருகவேலின் மனைவியினுடைய அண்ணன் கரையாம்பாளையம் சண்முக சுந்தரமும் நானும், கோயம்பத்தூர்க் கல்லூரியில் ஒரே வகுப்பு. அதன் நீட்சியாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையே கூடுதலான பழக்க வழக்கம். அதை வைத்துக் கொண்டுதான் என்னைப் படுத்துகிறான் என்று சொல்வதும் சரியாக இருக்கும். ஆனால் கள்ளங்கபடமில்லாதவன். கோயமுத்தூர் ஊரக நாகரிகம் அமெரிக்கா வந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவனிடம்.
”வாங்க சித்த நேரம் இருந்து பேசீட்டுப் போகுலாம்!”, அருகிலேயே வந்துவிட்டான் முருகவேல்.
“நான் நல்லா இருக்கணுங்க? நீங்க??”
”எதோ பொழப்பு ஓடுதுங்க? ஏனுங், ஊட்ல ஆரையுங் காணமுங்க??”
“எல்லாரும் ஊருக்குப் போயிருக்குறாங்க முருகு!”
“அப்படீங்களா? செல்வி சொல்லவே இல்லை. அவளுக்குத் தெரியாதாட்ட இருக்குது? ஆமா, நீங்க போகலைங்களா??”
“போகணும். லீவு எசவாக் கெடைக்க மாட்டீங்குதுங்க முருகு, அதான்! உங்க வீட்டுல?”
“எங்கீங்க, உங்களுக்குத்தான் தெரீமே எல்லாம்? இன்னும் அட்வான்சு பரோல்லதான் இருக்கறோம். இன்னும் கிரீன் கார்டுக்கு பிரியாரிட்டி வர்ல? ஆறு வருசம் ஆச்சுங்க அப்பன் அம்மாளைப் பார்த்து! படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரமாட்டீங்குதுங்க! எங்கம்மாவுக்கு வேற நாளுக்கு நாள் ஒடம்புக்கு ஆகாமப் போய்ட்டு இருக்குது!”
“அதெல்லாம் கவலைப்படாதீங்க முருகு. இப்ப ஊர் முன்ன மாதர இல்ல பாருங்க. தடுக்கி உழுந்தா ஆசுபத்திரிங்க!”
“ஆமா, நீங்க ஊருக்குப் போயிட்டி வந்து எத்தினி நாளாச்சுங்க?”
“ஒன்ரை வருசம் ஆச்சுங்க முருகு!”
“நீங்கதான் அமுச்சி செத்த எழவுக்கே போக முடியலைன்னு சொல்லிச் சொன்னீங்களே? ஞாவகத்துக்கு வருதுங்க. வெளிநாட்டுக்கு ஏண்டா வேலைக்கு வந்தம்னு இருக்குதுங்க இப்பெல்லாம். அப்பனாத்தாளைக,  கூடாமாடா இருந்து பாக்க முடியாட்டிப் போகுதுங்க. செத்ததுக்கும் பொறகு எழவுக்குக் கூட போக முடியாதாட்ட இருக்குது பொழப்பு? போன வாரம் நடந்த விசியந் தெரீந்தான உங்களுக்கு??”
“ஏனுங்? என்னாச்சுங்க??”
“நம்ம, பரஞ்சோதி இருக்காரல்லங்க? பெட்எக்ஸ் விசுவநாதம் பிரண்டு??”
“ஆமா, தெரியுஞ்சொல்லுங்க!”
“அவரோட தங்கச்சி ஊட்டுக்கார்ரு, எளவயசுதானாமா, நாப்பத்தஞ்சு நாப்பதாறு இருக்கும்னு சொல்லிச் சொன்னாங்க. திடீல்னு ஆர்ட் அட்டேக்ல போயிட்டாருங்லாமா. இங்கிருந்து இவிங்க பத்தாயரம் டாலர் செலவு வண்ணிப் போயிருக்குறாங்க. போய்ச்சேர்றதுக்குள்ளயே பாடி எடுத்துப் போட்டாங்களாமா. என்ன பொழப்புங்க இது? ஆமா, உங்கூட்டுல நீங்க எத்தினி பேருங்கொ?”
“நாங்க மூனு பேரு. நாந்தான் கடைசிங்க முருகு”
“அல்லாருமே வெளிநாடுதானுங்களா?”
“அக்கா, அம்மா அப்பாகோட ஊர்ல இருக்காங்க!”
”உங்க மச்சானுக்கு என்ன வயசாச்சுங்க?“, கேட்டு முடிக்கவும் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. இந்த அளவில் முருகவேலுவிடம் இருந்து தப்பித்தோம் என்கிற நினைப்பில் நழுவி வந்து விட்டேன்.
சற்று நேரம் ஒய்.ஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூரில் இருக்கும் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான தஞ்சை நடராஜன் அவர்களும் வர, அவருடனும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பங்குச்சந்தையில் ஆப்பிளின் விலை, அமேசானின் விலை, கூகுளின் விலை எனச் சகல விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதுதான், ஆட்டோசோன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் தமிழ்ச்சங்க செயலருமான திவாகர் வந்தார்.
“என்னங் விஜய், போஸ்ட் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுறீங்க போலிருக்கு?”
“ஆமாங்க திவாகர். நீங்க எப்படி இருக்கீங்க?”
“ப்ச். நாளுக்கு நாள் ஒன்னும் செரியில்லைங்க. ஊருக்கே போயிடலாம்னா, வீட்டுல சங்கீதா ஒத்துக்க மாட்டீங்றா”
”இதென்னடா இழவுக்கு மேல இழவா இருக்கு? சொள்ளைக்குத் தப்பிச்சு வந்த கன்னுகுட்டி தினாசுகிட்ட மாட்டிகிட்ட மாதர ஆயிப் போச்சே நம்ம நிலைமை?!” என்று நினைத்துக் கொண்டே எசப்பாட்டு பாடினேன், “ஓ அப்படீங்களா?”
“என்ன அப்படீங்களா, ஒன்னுந்தெரியாத மாதரி? ஊர்ல இருந்து போன் வந்தாலே போதுங்க, அம்மாவுக்கு என்னாச்சோ, தம்பிக்கு என்ன ஆச்சோன்னு செத்து செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்குங்க விஜய்!”
“ஆமாங்க, இது சொன்னீங்களே, நெம்பச் சரி!”
”பொசுக்கு பொசுக்குன்னு ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாங்கூட போன் வருதுங்க. மொதல்ல எல்லாம் நாம கூப்ட்டாத்தான் உண்டு!”
“ஆமாங்க திவா! போன் ரேட் நெம்பக் கம்மி போல இருக்கு?”
“பெர் மினிட்டுக்கு ஐம்பது பைசாதானுங்களாம்!”
“தயவு தாட்சண்யம் இல்லாம நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் ஆக்கிவிடணும். அப்பதான் இந்தக் கொடுமை கொறையுமுங்க!”
“ஆமாங்க விஜய். ஊர்ல அம்மா தனியா இருக்காங்க. தம்பிக்கு நொய்டால ப்ராஜக்டு. சிஸ்டர் சென்னையில இருக்கா. அதான் நானும் ஊருக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன். அப்பாவத்தான் கடைசில கூட இருந்து கூடப் பாக்க முடியல!”
“புரியுதுங்க திவா!”
“அம்மாவையாவது மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க விஜய்! ஆமா, உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுதா? நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க??”
“இப்போதைக்கு அதப்பத்தி பெருசா எதும் யோசிக்கலைங்க திவா!”
பேச்சுக் கச்சேரிக்குள் அடுத்த ஆடொன்று அதன் போக்கில் வந்து புகுந்தது.
“வாடா மச்சான். இவர் பேரு விஜய்; பார்ட்லட் பேங்க்ல வேலை பாக்குறாரு!””
“விஜய் சார், எனக்கு நல்லாத் தெரீமே! நம்ம கல்யாண் குமார் கூட வருவாரே? பார்த்திருக்கேன்!! அலோ சார், நல்லா இருக்கீங்களா? உங்க பாட்டியோ யாரோ தவறிப் போனப்ப, நீங்க ஊருக்கே போய் செட்டில் ஆயிட்டதாச் சொன்னாங்களே? இன்னும் நீங்க இங்கதான் இருக்கீங்களா சார்??”
எனக்கு இந்த நகைச்சுவைத் திருவிழா மிகவும் அவசியமா? உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது.
நன்றி: வல்லமை

4/14/2013

தள்ளாட்டம்

டாஸ்மாக்கிலிருந்து
வெளியேறும்
கனவானைப் போல,
நான்
செல்வழி களங்கி
தட்டுத் தடுமாறுவதற்கு
இதுதான் காரணம்!
ஒரு ஊர்ல...
எனத் துவங்கியதுமே
இடைமறித்துச்
சொல்லிவிட்டாள்!
ஒரு ஊர்ல ஒரு ராஜா
வேணாம்ப்பா,
ராஜா இல்லாத ஊர்க்கதையா
ஒன்னு சொல்லுங்க!!

4/12/2013

கொழுகொம்பு


நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.
தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் நிர்வாணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு நின்றிருந்தது. ஓடிப் போய் அந்த ஆடையின் ஒரு கங்கினைப் பிடித்து இழுத்தாலென்ன என்கிற குறும்பு நினைப்பில் நானிருக்க, அதனுள்ளிருந்து பொத்துக் கொண்டு வெளியேறியது எதையோ ஒன்றை இழுத்துப் பிடிப்பதற்கான வெறிபிடித்த அமெரிக்கன் டிப்பர் குருவியொன்று.  ஆடை கிழிபட்டதில் சிறிதுக்கும் பெரிதுக்குமான இடைப்பட்ட நடுக்கத்தோடு நடுங்கி நின்றது பெரி மரம்.
இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் மனசாட்சி நம்மை, ”நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? செத்துத் தொலையேண்டா!!” என நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு கேட்டுத் தொலைக்கும் அபாயம் இருக்கிறபடியால், துரிதகதியில் காலைக்கடன்கள் முடிக்கப்பட்டு ஓடுகளப் பாதைக்கு ஏதுவான உடுப்புகளில் உடம்பைப் புகுத்திக் கொண்டேன். உறக்கத்தில் இருக்கும் மனிதங்கள் நான்கும் உறக்கத்திலேயே இருக்கட்டுமென விழைந்து அரவமேதும் இல்லாதிருக்கும்படியாகக் கதவைச் சாத்தி வெளியே வந்தாயிற்று.
இளங்காலை வெயில் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலாடையையும் ஊடுருவி உள்ளே வந்து தசைநார்களை குதூகலத்தால் தோய்த்தது. ஊடுருவப்பட்ட தோலாடையை மேவிவிட்டது மிசிசிப்பி ஆற்றைத் தழுவி வந்த சாரக்காற்று. செவிப்புலத்தில் இசைஞானியின் இசையில் ஜானகியின் மெல்லிசை மதுரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. மனம் சொக்கி போதையில் ஆர்ப்பரித்துக் கொண்டே உடலுக்குள் இருந்து வெளிக்கிளம்பி குளத்திலிருக்கும் நீர்ப்பரப்புக்கும் மேலாக இறக்கை கட்டிப் பறக்கின்றன. சுகித்துக் கொண்டன ஏனைய மெய்ப்புலங்கள் யாவும்.
இன்னபிற புலங்கள் யாவும் தன்னிலை மறந்து உவப்புக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கால்கள் இரண்டும் ஓட்டம் பிடித்தன குளத்தின் மருங்கிலிருந்த ஓட்டப்பாதையினூடக! ஐந்தரை மைல் தொலைவு ஓடியதை விழிகளிரண்டு தவிர மற்ற புலங்கள் எதுவும் கவனித்திருக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் குளக்கரையில் ஓடுவதென்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.
காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம். இதைச் சொன்ன மாத்திரத்தில் சண்டைக்கு வருபவர்கள் உண்டு. யார் வருகிறார்களோ இல்லையோ, தாய் நாட்டு மக்கள் மீது பாசம் கொண்டவளும் பெண்ணிய மனப்பான்மை கொண்டவளுமான மச்சினிச்சி ஒப்புக்கொள்ள மாட்டாள். எனவே மிகுந்த கவனத்தோடு அமெரிக்காவில் என்பதை இடைச்செருகலாகப் பாவித்து திருத்திச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.
ஒருவர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் கூட மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது உலகின் ஏனைய பகுதிகளில். அத்தகைய தீர்மானங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. தனி மனிதர்களால் தன் அகத்தின் விருப்புக்கொப்ப வாழ இயலவில்லை. இதன் காரணமாய் எனக்கும் என் மச்சினிக்குமிடையே முரண்பாடு எழுகிறது. எனவே ஏற்கனவே சொன்னது சற்று மாற்றிச் சொல்லப்படுகிறது.
காலவெள்ளத்தில் அகப்பட்ட அமெரிக்காவாழ் மக்கள் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறார்கள். தகுந்த காரணங்கள் இருப்பின், காலத்தின் போக்கையும் தேவைக்கொப்ப மாற்றிக் கொள்கிறார்கள்
வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் குளக்கரையில் ஓட வேண்டும். இது எமக்குக் கிடைத்த மிதவுகோல். இதைப் பற்றி மிதந்து பயணிக்கிறேன் காலவெள்ளத்தினூடாக. என்னுடைய அலுவலக நண்பன் மனோஜ் வதேரா என்பவனுக்குக் கிடைத்திருப்பது மற்றொன்று. கால அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுகைக்குச் சென்று விடுகிறான்.
மெம்ஃபிசு நகரத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட குழுமம். குழும உறுப்பினர்கள் யாவரும் தன்னார்வலர்கள். யாருடைய அறிவுறுத்தலுக்கோ நிபந்தனைக்கோ ஆட்படாதவர்கள் இவர்கள். எனக்கும் கூட ஆசையுண்டு. இருக்கிற ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டால் வேறென்ன இருக்கும்? இக்குழுமத்தில் இருப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாட்டச்சுவை எதில் கிடைக்கிறது? கைப்படகுகளில் ஏறி ஆற்றுக்குள் பயணித்துத் தூய்மைப்படுத்துவதில் கிடைக்கிறது மனத்துக்கு இனிமையூட்டும் காயகல்பம்.
வார ஈற்று நாட்களில் வீட்டில் இருக்க மாட்டான் மனோஜ். கைப்படகும் நீர்நிலைத் தூய்மையாளர்களுமென எங்காவது துடுப்படித்துக் கொண்டிருப்பான்.  அவனோடு அவனது குழுமத்தைச் சார்ந்த மற்றவர்களும் அவரவர் கைப்படகுகளோடு ஆற்றங்கரைக்கு வந்து விடுகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நாட்டு நடப்பு, உலக நடப்பு, ஊர்க்கதை, வீட்டுக்கதை, பகடி, எள்ளல், கேலி, சிரிப்பு எனப் பலதையும் மென்று தின்று கொண்டே ஆற்றுக்குள் படகைச் செலுத்துகிறார்கள். உடலுக்கு நல்ல பயிற்சி. மனத்துக்கு நல்ல களிப்பு. ஆற்றின் அழகுக்கும் செயலுக்கும் ஊறு விளைவிக்கிற எதைக் கண்டாலும் களைந்து அப்புறப்படுத்தி மகிழ்கிறார்கள். ஆற்றின் கரைகளைத் தன்னுடல் போலக் காதலித்து அவற்றோடு வாழ்வுப் புணர்ச்சி கொள்கிறார்கள்.
மனோஜ் வதேராவின் மனைவி பாருல் வதேரா. பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். மருத்துவராக வேலை பார்க்கிறாள். தான் பார்க்கும் மருத்துவர் வேலையைக் காட்டிலும் அவளுக்குப் பிடித்தது குப்பை பொறுக்குவது. பொறுக்கி என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளுக்குக் கிடைத்த கொழுகொம்பு அது. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கணக்கர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்த தன் நண்பர்களோடு குப்பை பொறுக்குவதில் புணர்ச்சியுச்சம் கொள்வது அவளது வாடிக்கை. விடுப்பு நாட்கள், மாலை நேரங்கள் என்கிற போதெல்லாம் பூங்காங்கள், பெருந்தெருக்கள் முதலான இடங்களுக்குச் சென்று குப்பை பொறுக்கிப் போடுகிறாள். இதற்கென ட்ரேஷ் பிக்கப் கிளப்புகள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக நிறையத் தொடர்புகள் கிட்டுகிறது, கும்பலாய்ச் சென்று வெளியில் திரிந்து வருவதில் சுவாரசியம் என்கிறாள் பாருல்.
தெருவின் கடைக்கோடி வீட்டிலிருக்கும் ஸ்டெஃபனி தனித்து வாழும் தாய். ஒரே மகன் ஜேசன். அவளுக்கு காப்பீட்டு நிறுவனமொன்றில் நுகர்வோர் தொடர்பாளர் வேலை. வீட்டைச் சுற்றிலும் சர்க்கரைப்பாகுத் தூக்கிகளை அங்கங்கே வைத்திருக்கிறாள். ஓசனிச் சிட்டுகளுக்கு ஊணூட்டி உயிரூட்டுவது அவளுக்கான பற்றுதல். மரங்களை வளர்த்து, செடிகளுக்கு மராமத்துச் செய்து சூழல்பாதுகாப்புக்கு நல்கும் உழைப்பே அவளுக்கான துணை.
இடைக்கிடையே ‘ஹம்மிங்பேர்டு’ பட்டறைகளை நடத்தி விழிப்புணர்வு வேலைகளைச் செய்கிறாள். காடுகளுக்குப் போகிறாள். இவளுக்கு தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஹம்மிங்பேர்டு குமுகத்தினர் வந்து உதவுகிறார்கள். இப்படியானவை மனிதனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. உயிர்த்தோம்;இருந்தோம்;மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை ஊட்டி விடுகின்றன.
மென்மையாகப் பேசுவாள் ஸ்டெஃபனி. ஓசனிச்சிட்டுவைப் போலவே இருப்பாள் அவளும். அவள் வீட்டைக் கடந்து வரும் போதெல்லாம் நின்று பார்த்து வருவது தவிர்க்க இயலாதது. நான் எதுவும் செய்வதில்லை. ஓசனியோடு ஓசனியாய் அவளும் இருந்திட மாட்டாளா எனக் கண்கள் தேடுகின்றன. ஓசனியின் சிறகடிப்பு, சிலுசிலுப்பு ஒலிகள், இணுக்குகள் ஒடிந்து விடாதபடிக்கு உட்கார்ந்து தாவிச்செல்லும் பாங்கு முதலானவற்றைத்தான் நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்!
குளக்கரைக்கு வரும் போது கூட அவளைப் பார்த்தேன். மண் அள்ளிப் போட்டுச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறாள்.  பெட்டூனியா பூச்செடிகளிருக்கும் பூந்தொட்டியிலிருந்து தவழ்ந்து வரும் ஓசனியின் இளமஞ்சள் இறகொன்று, குனிந்திருக்கும் அவளது பின்னங்கழுத்தினை வருடிக் கொஞ்சியது. தலை நிமிர்ந்து பார்க்கையில் அவள் கண்ணெல்லையில் நான் நிற்கிறேன். ஓசனிச் சிறகடிப்பின் அதிர்வை ஒத்திருந்த அவளது கண்ணிமைகளின் அதிர்வில் அவளையண்டி இருந்த மொனார்டா மலர்கள் நாண, மலரின் கருநீல வண்ணம் வெண்மையேகி நீலமாய் ஒளிர்ந்தது. “ஹாய் மணி” சொன்னவளின் வெண்மணிப் பற்களில் நீலம் பட்டுத் தெறிப்பதைக் கண்டு இளமுறுவல் பூக்கிறேன் நான். இனிமேலும் நான் இங்கு நின்றால் ஓசனிகள் படையெடுத்து வந்து என்னை விரட்டக் கூடும். என் வேலையை நான் பார்க்க வேண்டுமென்கிறபாட்டில் இங்கு வந்து விட்டேன் நான்.
காலியர்வில் நகராட்சியின் நூலகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ’ஹால்’ பூங்காவிலிருக்கும் குளக்கரையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாளொரு முறையாவது வந்து குளத்தடியில் ஓட வேண்டும். அப்படிச் செய்யும் போது எனக்கான அந்த நாள் சிறப்புக் கொள்கிறது. மொத்தத்தில் மனமும் வளம் பெறுகிறது. யார் யாருக்கோ என்னவெல்லாமோ இருக்கையில், குளக்கரையே எனக்கான தொடுப்பு.
அதோ குளத்தின் அந்த மூலையிலிருக்கும் வங்குக்கு நேர் மேலே குத்திட்டிருக்கும் பெரியவருக்கு மீன்பிடிப்பது குதூகலம். சனி, ஞாயிறுகளில் தன் பேரனையும் கூடக் கூட்டி வந்து இன்னோர் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். மீனுக்காக மீன் பிடிப்பதில்லை இங்கு யாரும். தூண்டிலில் அகப்பட்ட மீனைக்கூட மீண்டும் குளத்திலேயே விட்டு விடுகிறார்கள்.
குளக்கரையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தைச் சுவாசித்து சிலையாய் வீற்றிருந்து காலத்தைப் புசிக்கிறார்கள். ’தூண்டிலாளர்கள்’ என்ற பெயரில் நீர்நிலையெங்கும் உலாப் போகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க தனி உரிமங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அலுவலகத்தில் இருக்கும் ’கிடாயன்’ ரோபர்ட் ஜான்சன் ஒரு தூண்டிலான். எப்போது பார்த்தாலும் ஃபிஷ்ஷிங் பற்றியே பினாத்திக் கொண்டிருப்பான். அதற்கென்ற வார, மாத இதழ்களோடு மீன்பிடிப் பெட்டியையும் வெத்தலை பாக்குப் பெட்டி போல கொண்டு திரிவான். அலுவலக அரட்டைகளின் போது, தூண்டிலாளர் குமுகாய அனுபவங்களைத் தின்று ஏப்பம் விடுவான். இரத்த அழுத்தம், மனநோய் போன்றவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு நிவாரணம் என்கிறான். தன்னம்பிக்கையை வளர்த்து இணக்கத்தைப் பெருக்கும் என்கிறான். இந்தக் குளத்திலும் எப்போதும் யாராவது மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன அமைதியும், வெளியின் இலக்கணமற்ற இசையும், நீர்நிலையின் மணமும் முகில்களின் காற்றுக்கொத்த ஓடுபராக்கும் விலையில்லாப் பண்டமாய்க் கிடைக்கின்றன. அனுபவிப்பவன் பேறு கொண்டவனாகிறான்.
குளத்தையொட்டி இருக்கும் மரங்களுக்கும் எனக்குமிடையில் நேசம் உண்டு. சென்ற கோடையில் இட்டுச் சென்ற கனடியக் கீசுகளின் முட்டைகள் எல்லாமும் வசந்தகாலக் குஞ்சுகளாய் பூத்திருக்கிறது குளத்தின் கீழ்க்கரையில். வசந்தகால இலை துளிர்ப்புக்கான காத்திருத்தலுடன் குச்சி மரங்களாய் இருக்கும் செரி மரங்களின் நுனிக் கிளைகளில் அமர்ந்து  உச்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றன கருந்தாரிச் சிட்டுகள்.
அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடையதன் பெயர் சோமா. அவள் அவனை அப்படித்தான் விளித்து அழைக்கிறாள். வாட்டசாட்டமாய் இருக்கிறான் சோமா. கருமைநிற வெல்வெட்டுத் துணியைப் போர்த்தினாற்போல அவனது மயிர்க்கற்றைகள். அருகிலிருக்கும் வளவு ஒன்றில்தான் வசிக்கிறாள். அவ்வப்போது சோமாவை அழைத்துக் கொண்டு அவளும் வந்து விடுகிறாள் குளக்கரைக்கு.
ஐந்தாவது மைல் ஓட்டத்தின் துவக்கத்தில்தான்  காட்சியொன்று அங்கே ஈடேறியது. குளத்தின் மடுவிறக்கத்திலிருந்த அந்தப் பெண் மஞ்சள் வண்ணப் பந்தொன்றை ககனமார்க்கத்தினூடாக குளத்துக்குள் விட்டெறிந்தாள். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாயொன்று தரைமார்க்கத்தினூடாக பந்தின் வேகத்துக்கொப்ப இணையாக ஓடி, ஓடி, குளத்தின் நீருக்குள் பாய்ந்து, வேகத்துக்கிணையாகவே நீச்சலடித்து வீரியமிழந்து வீழ்ந்த பந்தினை லபக்கென்று தன் வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்தது. மீண்டும் பந்தை வீசாமல் கையை மட்டும் தம் திறம் கொண்ட மட்டும் பின்னால் இழுத்து வேகமாய் வீசினாள். பந்து அவளது கையிலேயே இருப்பதைக் கூர்ந்த நாய் ஒரு இம்மி கூட நகரவில்லை. வாலை ஆட்டிக் குழைந்தது.
பந்தினை வேகமற்ற வேகத்தோடு செங்குத்தாய் வீசி இலாகவாமாய்ப் பிடித்துக் கொண்ட பின்னர், மீண்டும் திறம் கொண்ட மட்டும் கையை வீசி எறிந்தாள். நாய் வாளாமல் அதே இடத்தில் நின்று கொண்டே வாஞ்சையாய் அவளைப் பார்த்தது. பந்தினை இரு உள்ளங்கைகளுக்குள் பிடித்தபடி அதை உருட்டிப் படுத்தினாள் அவள். இவளுக்கென்ன விசர் பிடித்திருக்கிறதா எனும் பாங்கில் அவளை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றது அந்த நாய்.
பிணையல் முடிந்ததும் இடத்தை விட்டு விறுக்கென்று ஓடி மறையும் பாம்பினது வேகத்தில், பந்தினை விட்டு வீசுவதைப் போலத் தன் வலக்கையை குளத்தை நோக்கி வீசினாள் அவள். நாயும் வானைப் பார்த்துக் கொண்டே குளத்தை நோக்கி ஓடி ‘தபோர்’ என குளத்து நீருக்குள் பாய்ந்து வீழ்ந்தது. பந்து மட்டும் இன்னமும் அவள் கைகளிலேயே இருந்தது. வெற்றிப் பெருமிதத்தில் திளைப்பும் செருக்கும் அவளுக்கு.
கடைசி வட்ட ஓட்டத்தினை ஓடி நிறைக்கும் நோக்கில் நம் கால்கள் வேகமெடுத்தன. அலைகளின் ஒத்திசைவுக்கொப்ப மதகில் நீர் துள்ளிக் குதித்து கடை போனதைக் கவனித்த விழிகள் வியப்பில் நகைத்துக் கொண்டன. நம்மைப் பார்த்த டென்னசி நீல பூபிப் பறவைகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து போயின. இனி வீடு நோக்க வேண்டும். அல்லாவிடில் மனைவியென்னும் அதிரூபத்துக்கு முன்னால் வீழ வேண்டி இருக்குமெனக் கருதி கால்கள் ஓட்டத்தினின்று தாழ்ந்தன. மெய்ப்புலங்கள் யாவும் சொக்கு நிலையிலிருந்து திரும்பிக் கொண்டன. அப்போதுதான் கவனித்தேன். இன்னமும் அந்த நாய் குளத்துக்குள்ளேயேதான் இருக்கிறது. பல நேரங்களில் நாய்களும் பாடங்கள் பல கற்பிக்கும்.
“சோமா, ஐ அம் சாரி. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி திஸ் டைம். ஐ வில் நெவர் டு திஸ் டு யூ. இனிமேல் இப்படி செய்யவே மாட்டேன் சோமா. மன்னிச்சிடு. குளத்துக்குள்ள பந்து வீசுற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த மாட்டேன். வெளியில வா. ப்ளீஸ் சோமா!!”, இனி அது எப்போது மனம் இளகி மன்னிப்பு வழங்குமோ தெரியாது.  கீரியைக் கீறுவானேன்? பிராண்டலுக்கு பச்சிலை தேடுவானேன்??
எதையோ கண்டு கொண்ட பாவனையில் தாவித் தாவி தப்படி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது,  ப்ளாக்பெரிச் செடிகள் மண்டிப் பூங்காவின் ஓரத்திலிருக்கும் புதரிலிருந்து ‘விருட்’டென வெளிக்கிட்ட பெருமுயலொன்று!!

3/31/2013

தமிழ் ஏஸ்வெல்?!


மெம்ஃபிசு விமானம் சற்று காலத்தாழ்ச்சியுடனே வந்தது. மூன்று நாட்களுக்கென முப்பதுநாள் மூட்டை முடிச்சுகளுடன் பயணம் செல்பவன் அல்லன் நான். சிறு பெட்டியில் மூன்றே மூன்று நாட்களுக்கான உடுப்புகளும் சிறுகதை நூலொன்றும் போதுமெனக்கு. எபோதோதாவது ஏதோவொரு  இதரத்துக்கான தேவை வரும். ஒன்று நான் தங்கியிருக்கும் விடுதியானது அதைக் கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அல்லது, எனது ஒப்பந்தக்காரன்  புதிதாய் நான் வாங்கியதற்கான இழப்பைச் சரிக்கட்ட வேண்டும். ஏன் இதையெல்லாம் நான் சொல்கிறேனென்றால், காரணமிருக்கிறது. இவ்வுலகில்  எது  நடப்பதற்கும்  நிமித்தமோ  காரணமோ இல்லாமலில்லை. 

முன்பொரு காலத்தில், அதாவது 2005ஆம் ஆண்டுவாக்கிலெல்லாம் உள்ளூர்ப் பயணங்களுக்குக் கூட பெரிய பெரிய வானூர்திகளைப் பாவித்தன நிறுவனங்கள். பொருளாதாரத்தில் கட்டுப்பாடு கொணரவேண்டிய சூழல் வந்து இரங்கராட்டினம் ஆடவே, சிறிய அளவிலான வானூர்திகளைப் புழக்கத்தில் விட்டார்கள். அவரவர் அடுத்தவர் மூச்சுக்காற்றை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்.  ஒன்றினுள்ளே புகுந்து வெளியே வந்து மற்றொன்றினுள் புகுந்து வெளியே வந்தென மணிகளைக் கோக்கும் நூலிழையைப்போல, இருக்கும் நூற்று சொச்சங்களின் இருநூற்று சொச்ச
நாசித்துவாரங்களிலும் புகுந்து புகுந்து வெளியேவந்து அடங்கிப் போகும் ஆசனத்தின் அடிநழுவி மேலெழும்பிய அந்த மலக்காற்று. அடிச்சிக்கோபுடிச்சிக்கோவென இருக்கும், கூடக் கொண்டு வரும் பைகளை எஞ்சி இருக்கும் இடுக்களில் திணிப்பதற்காய். 

கட்டிப்பறக்கும் மனிதமூட்டைகளில் இவனுக்கு முதலிடம். சிக்குண்டு போவதில் என்ன முதலிடம்? சிலபல பெருவிரற்கடைகள் அகலமான இருக்கை கிட்டும். கலோரியில்லாத உருளைக்கிழங்கு நொறுவல் என்று சொல்லி இல்லாத ஊத்தைஉருளைக் கிழங்குகளின் சீவல்ப் பொட்டணங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். இவனைப் போலவே இருக்கும் அந்த மற்றவர்களும் வாராவாரம் வந்து தொலைப்பார்கள். என்ன இழவுடா சாமி? வாராவாரம் அதே மூஞ்சிகளோடு பயணம். இதிலென்ன சுவாரசியம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அதே ஆட்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதுதானே சிலபல கதைகள் நமக்குக் கிடைக்கிறது. 

நேற்று அந்த மூவரும் பேசிப் பேசி வானூர்தியைச் சொற்களால் நிறைத்தலிருந்து, “ஓ, யு ஸ்பீக் ரஷ்யன் லேங்வேஜ்? யு நோ, மை சன் ஆல்சோ ஸ்பீக்ஸ் ரஷ்யன் வெரி வெல். ஹி லேர்ன்ட் இட் ஃப்ரம் மை பாய் பிரண்ட் ஹு இஸ் எ ரஷ்யன். ஹிஸ் டேட் வாஸ் சோ சர்ப்பரைஸ்டு வென் ஹி வாஸ் ஸ்பீக்கிங் இன் ரஷ்யன் யு நோ?!”. களத்து மேட்டுக்குள்ள புகுந்த கவுதாலியப் போல இது நாம,”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்?!”

3/29/2013

புவிக் குழந்தைகள்!

குளக்கரையில்
மஞ்சக்குளித்து
அந்தி தொலைத்து
இருள் பூசிக்கொள்ளும்
குருவிகள் பூத்த
புவிக் குழந்தைகள்!


Live from Halle Park Lake, Collierville, TN, U.S.A!!


3/27/2013

நான் வித்யா!

யோகா கிளாசுக்கு
பாரதி நகர் போயிருக்கும்
அம்மாவுக்குத் தெரியாமல்
தாத்தாவுக்கு காப்பி
போட்டுக் கொடுக்கிறாள்
தாயம்மா பாட்டி!
அந்த மாமாவிடம்
இனிமேல் இங்கு
வர வேண்டாமென்று
சொல்லி அழும்
சின்னமணி அக்காவுக்கு
கன்னத்தில் நல்ல அறை!!
சாக்கடையில்
தவறி விழுந்த
பிரவீணாவுக்கு
கைகால் கழுவிவிட்ட
பிச்சைக்காரத் தாத்தாவை
பிடித்துக் கொண்டு
போகிறது போலீசு!
சதர்ன் மில்
முரளி அண்ணனுக்கு
ஷிப்ட் மாறினது தெரியாமல்
மொட்டை மாடிக்குப் போகும்
மெளலி மாஸ்டர் வீட்டு
சந்திரகலா அக்கா!
மேரி மிஸ்ஸுடைய
செல்போனில் ரீடையல்
போட்டுப் பார்த்ததில்
அது எங்க ஸ்கூல் பஸ்
டிரைவர் அண்ணன்தானாம்
பிடீ பிரியடில் சொன்னான்
த்ரீ ஏ தினேஷ் குமார்!
அம்மாவிடம் சொல்லி
பெர்மிசன் வாங்க வேண்டும்
என்னுடைய ஸ்கூல் டே
பெர்பாமன்சுக்கு ட்ரீட்
ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
ஆமாம் நான் இன்றைக்கு
கலைமகள் வித்யாலயா
பிரைமரி ஸ்கூலில்
ஒன் சீ படிக்கும் வித்யா!!

3/25/2013

அம்மா மரம்


அப்பா
அந்த மரத்தோட
அம்மாமரம்
எங்கப்பா?
புறத்தே
தனியாய்
நிற்குமந்த
மரத்தின்
அம்மாவை
நினைத்து
அவளுக்கு நாட்டம்!
வெகுதொலைவே
ஊரிலிருக்கும்
அம்மாவை
நினைத்து
எனக்கு வாட்டம்!!