Jul 5, 2009

வட அமெரிக்கத் தமிழ் விழா: July 05, 2009 காலை 6 மணி

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்!

தமிழன் என்றாலே கூச்சல், குழப்பம், தூற்றுதல் என பிணக்குகள் கொண்டு திரிந்த மடமைக் காலம் மலை ஏறி விட்டதையா! மலை ஏறி விட்டதையா!! வட அமெரிக்காவிலே, ஜ்யார்ஜியா மாகாணத்திலே, அட்லாண்டாவிலே அது துரத்தி அடிக்கப்பட்டதையா!!!

ஆம் நண்பர்களே! நான் உலகின் பல் வேறு நாடுகளிலே வாழ்ந்திருக்கிறேன். இளம்பிராயம் தொட்டே பல் வேறு குழுக்கள், தமிழ்ச் சங்கங்கள் என்று கண்டிருக்கிறேன். சிங்கப்பூரிலே, மலேசியாவிலே, பாலித் தீவிலே, பின் டொரோண்டோவிலே, மூனிச் நகரிலே, ராலேவிலே, சார்லட்டிலே என்று பல நாடுகளிலேயும் ஊர்களிலேயும் பல சங்கங்கள், பல விழாக்கள் கண்டவன் என்ற முறையிலே சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கிறேன்.

இரு நாட்கள், தினமும் காலை 8 மணி முதல் நடுநிசி வரையிலும் மணிக்கிரு நிகழ்ச்சிகள், உண்டி சுருங்கும் குறிப்பறிந்து உடனே உணவு, இன்முக வரவேற்பு என்ற விருந்தோம்பலுக்கு மறு பெயர் என்ன என்று கேட்டால், அது அட்லாண்டா தமிழ்ச் சங்கம் என்பேன் நான்!

புலம் பெயர்ந்த இடத்திலே, தமிழன் இங்கே எழுச்சி பெறலாமா? அறிவார்ந்த சிந்தனையை, முன்னோக்கும் பார்வைதனைக் கொள்ளலாமா?? என்றெல்லாம் பதை பதைத்து நிற்கிறது ஒரு கூட்டம். இங்கே சாதி அரசியலுக்கு இடம் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சி இல்லை.... ஏன், விருந்தோம்பல் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் நான் கண்ட இரு நாட்கள்! விருந்தோம்பல் என்பதுதானே தமிழன் பண்பாடு? விருந்தினர்க்கு என்று ஒரு நிலை வருமேயாயின், தன் நிலத்திற்கான விதையே ஆயினும் அது கூடப் படைக்கப்படும் என்றுதானே சொல்கிறது முகப்புக் குறள்??

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விருப்பு வெறுப்பற்ற பத்திரிகையாளன் பார்வை கொண்டும், அதற்கு மேலாக சாமானியத் தமிழனாகவும் கண்டவன் என்ற முறையிலே, அட்லாண்டா தமிழ் சங்கத்திற்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கும், நன்றி கூறும் நிலையிலே நான் இருக்கிறேன்.

இப்படி நேர்மறையான கருத்துகளையே சொல்வதனால், எனது தகமை மீது வாசகர்களுக்கு ஐயம் வந்துவிடுமோ, பத்திரிகை தர்மத்திற்கான மாண்பு மாசுபட்டு விடுமோ என்றஞ்சி எதிர்மறையாக ஏதாவது உளதா எனச் ச்ல்லடைப் போட்டுத் தேடுகிறேன். ஒன்றும் அதில் பிடிபடவில்லை என்பதைத் தமிழன்னையின் மேல் ஆணையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அட்லாண்டா தமிழ்ச் சங்கமே, ஓய்வு ஒழிவின்றி கருமமே கண்ணாக மூன்று நாட்களுக்கும் மேலாகத் துஞ்சாமல் பம்பரமாய்ச் சுழன்ற அந்த 80 குடும்பங்களையும் தமிழன்னை வாழ்த்துகிறாள்! வாழ்க, வளர்க!!

மக்களே இன்று மேடை நிகழ்ச்சிகள் என்று எதுவுமில்லை; ஆனால் விடுதியிலே உள்ள கூடலறையில் இலக்கிய வட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறிவார்ந்த இலக்கியவாதிகள் பலர் வந்திருந்து பல அரிய செய்திகளை, அவர்கள்தம் புலமையை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழ் கற்போம்! பண்பாடு காப்போம்!! என்ற நல்ல சிந்தனையோடு தமிழ்ச் சான்றோர் ஆன்றோரைக் காணும் ஆவலில்,

பழமைபேசி.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Jul 4, 2009

Fetna Live.... தமிழ் விழா, இரண்டாம் நாள் நிறைவுப் பகுதி

பின்னேர உணவு இடை வேளைக்குப் பின்னர், முக்கியப் பங்களித்தளிவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறையப் பிரபலங்களை அரங்கில் பார்க்க முடிந்தது.

அதற்குப் பின்னர் அனுராதா ஸ்ரீராம் அவர்களின் நிகழ்ச்சி, ஆடல் பாடலுடன் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நள்ளிரவு வரையிலும் தொடருமென்பதால், இன்றைக்கு முடிவாக இடவிருந்த இரண்டாம் நாள்க் கண்ணோட்டம் இட முடியாத நிலையில் இருக்கிறேன். வலையில் நேரடியாக ஒலிபரப்பு இடம் பெற்று வருகிறது.

மொத்தத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக எவ்விதத் தொய்வுமின்றி இனிதே நடந்தது. வட அமெரிக்கத் தமிழ் விழாக் குழுவினருக்கு பாராட்டுகள் உரித்தாகட்டும்.

விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) என்கிற வகைப்பாட்டு(label) சுட்டியைச் சொடுக்கவும்.

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna): July 04, காலை 10.40 மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...காலை 11.30 மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... நண்பகல்

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...பிற்பகல் நான்கு மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... மாலை ஏழு மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... மாலை ஏழு மணி

மாலை நான்கு மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு விவாழினை ஒட்டி, அண்ணாவுடன் செயலாற்றிய அனுபவங்கள் குறித்த உரையை முடித்துக் கொண்டார் VIT வேந்தர், முன்னாள் அமைச்சர் முனைவர் விசுவநாதன் அவர்கள்.

அதற்குப் பின்னர் அமர்க்களமாக மேடையேறினார் மக்கள்க் கலைஞன் பசுபதி. கூத்துப்படறையிலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து திரைப்படம் என தான் கடந்து வந்த பாதையைப் பற்றிப் பேசினார். பின்னர் அரங்கதினர் கேட்ட கேள்விகளுக்கு எந்த சுற்றி வளைப்பும் இன்றி விடை அளித்து பொழுதை சுவராசியமாக்கினார் என்றே சொல்ல வேண்டும்.

அதற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிதான் விழாவினுடைய மகுடத்தின் மற்றுமொரு முத்தானது. வன்னிக்காடுகளில் மருத்துவராகப் பணியாற்றி, தற்போது அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க மருத்துவர் இ. சாண்டா அவர்கள் தொகுத்து வழங்கிய விவரணமும் உரையும்.

அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தி ஆர்ப்பரித்தது. ஆனால் தமிழகத்திலி இருந்து வந்த விருந்தினர் இருக்கையில் அமர்ந்தே இருந்தார். அவர் தவிர அரங்கத்தினர் மொத்தமும் எழுந்தது கண்டு, அவரும் எழுந்து நின்றார் வேறு வழியில்லாமல். நான் எதிர்மறையான செய்திகளை இந்த நல்ல விழாவில், சூழலில் இட வாய்ப்பு இருக்காது என்றே நினைத்து இருந்தேன். ஆனாலும் அவரது இந்த செயல் எனக்கு வருத்தமாகவே மேலிட்டது.

பலத்த ஆரவாரத்திற்கிடையே அவர் விடை பெற்றுச் சென்றதும், அதே ஆரவாரத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள். நல்ல செறிவான இலக்கிய மற்றும் மொழி பற்றிய விபரங்களை சரளமாக வெளிப்படுத்தினார். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தீடீரென உள்குத்துப் பேச்சுக்கு மாறினார் அவர். அரங்கில் இருந்த, புலம் பெயர்ந்த மக்களுக்கு அது புரியவே இல்லை. எனக்கோ நெஞ்சில் இடித்தது போன்ற உணர்வு மேலிட்டது. புறங்கூறுதலும், மறதியும் தமிழனுக்கு நேர்ந்த இழிவான குணங்கள் என்றார். கலைஞரை வசைபாடுவோரை நினைத்துச் சொல்லி இருப்பாரா? அது அவருக்கே வெளிச்சம்.

அதற்குப் பின்னாலே, தொழிலாகக் கருதி உரையாற்றும் பேச்சாளர்களை சாடுவது மாதிரியான நான்கு பந்து குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். தொழில், நட்பு, குடும்பம், உடல் நலம் ஆகிய நான்கு பந்துகளில், தொழில் என்பது இரப்பர் பந்து, மற்றவை கண்ணாடிப் பந்துகள் என்றார். அந்த இரப்பர்ப் பந்துப் பேச்சுகளால், மற்ற கண்ணாடிப் பந்துகளைக் கைவிட்டால் உடைந்து விடும் என்று சொல்லி இரப்பர்ப் பந்து பேச்சாளர்கள், அதாவது நன்றாகப் பேசும் பேச்சாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து சரியாகப் பேசினாரா என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

நானே கூட இதே கருத்தில் பல இடுகைகளை இட்டு இருக்கிறேன். ஆனால், விழாவில் கலந்து கொண்ட இன்னபிற பேச்சாளரைக் குறி வைத்துப் பேசியதாயின் அது விரும்பத்தக்கது அல்ல. எனக்கு ஏதோ அதில் உள்குத்து இருப்பதாகவே உணர்கிறேன். அவர் உரையாற்றி முடிந்ததும், அவருக்கான நன்றிக் கவிதையுடன் இரவு உணவுக்கான இடைவேளை அறிவிக்கப்பட்டு இருக்கிறது..........

(மீண்டும் விரைவில்.......)

விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) என்கிற வகைப்பாட்டு(label) சுட்டியைச் சொடுக்கவும்.