1/13/2020

பொங்குக பொக்கம்


வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு பொங்கு!!

பொக்கம் pokkam , n. < பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம். Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திரு வுலா.).

பொலிவையும் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் குறியீடாக, பொங்கல். வாழ்வில், வேளாண்மையில், தொழிலில் பொங்கிவர வாழ்த்தி, விழுமுதலைக் கொண்டு ஆடுதல், பொங்கல் விழாக் கொண்டாட்டம்.

வேளாண்மை, தொழில், வாழ்வு யாவற்றுக்குமான‌ இயற்கையின் சிறப்பாகக் கதிரவன். கதிரவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்வு. வழக்காறாக, மனிதன் மரத்தை வணங்கினான். ஆற்றை வணங்கினான். மலையை வணங்கினான். கடலை வணங்கினான். கதிரவனையும் வணங்குகின்றான். பொங்கும் கதிரோன் நாள்!!

கூட்டமாக வாழத்தலைப்பட்டவன். மனம் தனிமையையும் நாடும். அதேபோல இன்னபிறரின் அணுக்கத்தையும் நாடும். கூட்டுக்களிப்பும் உண்டாட்டும் எந்த உயிரினத்துக்கும் உரித்தானது. அதன்நிமித்தம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் கலை இசை பங்கு கொள்கின்றது. நட்புபாராட்டிக் கெழுமை கொள்கின்றான் மனிதன்.

உறைவிடத்தைத் தூய்மைப்படுத்துகிறான். தொழுவம் பேணுகின்றான்.அழகூட்டுகிறான். உடனுறை விலங்குகளைச் சிறப்பிக்கிறான். புதுவிளைச்சலை வரவேற்க, 'புதுயீட்டுப் பொங்கல்' வைக்கிறான். உடன்படு உயிரினங்களுக்கும் படைக்கிறான். சமயமில்லை. பேதமில்லை. பொங்கலோ பொங்கலெனக் கூவிக் குதூகலம் கொள்கின்றான்.

பின்னாளில் தனித்துவம் கொள்ள விழைந்தான். அரசியல் பழகினான். செப்புமொழி முன்வைத்து நடைபோட்டான். வள்ளுவரை முன்னிறுத்தினான். திருவள்ளுவரை முன்னிறுத்தினான். தற்காப்புக்கலை பழக்குவித்தான். இணக்கம் முகிழ பாரிவேட்டை நடத்தினான். உளம் மகிழ கரிநாளில் கள்ளு உண்டாட்டு சேவற்கோச்சை!!

கூட்டுக்களி(இசை, நடனம், ஆடல், பாடல், கதை, கலை, விளையாட்டு), உண்டாட்டு, இதனூடாக அரவணைப்பு. உறுதிகொள்ள ஊக்கம்கொள்ள மேம்பட இவைதாம் அடிப்படை. நிறுவனம் செய்து கொடுத்தால் உழைப்புக்கு ஊட்டம். சாமியார் செய்து கொடுத்தால் பணத்துக்கு ஊட்டம். மனிதனுக்கு மனிதனே செய்து கொண்டால் அது பொங்கல்.

உவகை ஈகை நாடல் பேணல் பொங்க நண்பர்களைச் சந்திக்கலாம்,மூத்தோரைச் சந்திக்கலாம்;ஏக்கம் தாக்கம் அளவளாவிக் கொள்ளலாம்.பிணக்குகள் தீரும்.பகைமை ஒழியும். ஒழிக்க உறுதியும் இறுகும். மொத்தத்தில் தைப்பொங்கல் நம்மனத்துக்கும் புதுயீடுதான். பொங்கல்நல்வாழ்த்தும் வணக்கமும்! Cheers!!

பழமைபேசி.

1/07/2020

போராட்டம் வெட்டிவேலை சார்! அப்படியா?!

There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest 
- Elie Wiesel.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே பேச்சுரிமையும் அதன்வழி மேற்கொள்ளப்படும் போராட்டவுரிமையும்தான். எங்கெல்லாம் போராட்டம் மறுக்கப்படுகின்றதோ, கீழ்மைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களாட்சிக் கோட்பாடு தோற்றுக் கொண்டிருக்கின்றதென்றே பொருள். அப்படியானால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து குறைகூறவே கூடாதா? கூறக்கூடாதுதான். ஏனென்றால், ஒருவனுக்கு எது குறித்தும் போராடுவதற்கு முழு உரிமையுண்டு என்பதுதான் அரசியல் சாசனம். 1966 பன்னாட்டுக் குடிமை, அரசியலுரிமைக் கோட்பாட்டு(ICCPR) உடன்படிக்கையில் ஏராளமான நாடுகள் பங்கு கொண்டுள்ளன. தத்தம் நாட்டு அரசியல் சாசனத்திலும் இதற்கான உரிமைகளைக் கொடுத்தேயிருக்கின்றன. வேண்டுமானால், போராட்டத்துக்கான காரணத்தை கேள்விக்குள்ளாக்கலாம். அது எதிர்த்தரப்பின் உரிமையாகக் கருதப்பட வேண்டும். இருந்தும், சில போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் உண்டு. எனவே, அதற்கான உளவியற் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அடையாளப்போலிகள்: உரிய கொள்கை, கோட்பாடு, அவற்றின்பாலான பற்றுதல் இருப்பவர்கள் அதனதன் இயக்கங்களில், அமைப்புகளில், கட்சிகளில் பங்கேற்று தொடர்ந்த பங்களிப்பினைத் தத்தம் அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் கொடுத்து வருவர். அப்படியல்லாதோருக்கு, அவ்வப்போது தம்மீதான மதிப்பீட்டின் மீது ஐயமேற்படும். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தம் இருப்பினை வெளிக்காட்டிக் கொள்ளவும் ஏதொவொன்று தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் போராட்டம் ஒரு கருவியாக எடுத்தாளப்படுகின்றது. நாட்டைக் காக்கின்றேன், மொழியைக் காக்கின்றேன், பண்பாட்டைக் காக்கின்றேனெனப் போராட்டங்கள் நடத்துவதும் பணம் திரட்டுவதுமெனக் கிளம்பிவிடுவர். போராட்டம் எனும் கூற்றினைச் சிதைக்க வேண்டுமென்பதற்காயும் செயற்படுவோர் உண்டு.

பிறநலம்நாடிப்போலிகள்: எந்தவொரு விழிப்புணர்வுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாமல் ஆட்டுமந்தையினுள் மற்றுமொரு ஆடெனச் சாமான்யனினும் பிறிதாய் இருந்து கொண்டிருப்போருக்குத் தம்மீதான நம்பிக்கைகூட இருந்திராது. ’அவர் சொல்கின்றார், செய்யாவிடில் அவரது நட்புப் பறிபோகும்; அறிவார்ந்த அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்; இதைச் செய்தால் அது கிடைக்கும்’ போன்ற காரணங்களுக்காகப் போராட்டத்தின் காரணத்தினையே அறியாமற் செயற்படுவது.

ஒட்டுண்ணிப்போலிகள்: தத்தம் வலுவைக் காண்பிக்கவும் தலைவராக உருவெடுக்கவும் நிலைநாட்டிக் கொள்ளவும் வேண்டும். அதிகாரசக்திக்கும் வணிகசக்திக்கும் ஊன்றாய் இருந்திடல் வேண்டும். மடைமாற்றுப் போராட்டங்களின் வழி, ஒரே கல்லில் இரு கனிகள் கிடைக்குமுகமாய்ப் போராட்டங்கள் வழியாகத் தன் படைகளைக் கொள்தல்.

போக்கிடப்போலிகள்: வெறுமையாய் உணரும் போது ஏதோவொடு கொழுகொம்பு தேவையாய் இருக்கின்றது. கூட்டமாக வாழ இயைந்தவன் மாந்தன். அந்நிலையில், களிப்புக்காகவேணும் பங்கு கொள்வது. எதிர்விளைவுகளென ஏதேனும் தென்பட்டால் மட்டுப்படுத்திக் கொள்வது அல்லது பின்வாங்கி விடுவது.

ஏதுபெறுப்போலிகள்: வெற்றியெனும் தருவாயில் தம்மையும் இணைத்துக் கொள்வது. அல்லது, வெற்றியெனும் பிம்பத்திற்காகவே அதிகாரமயத்தோடு இணைந்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கு பெறுவது. சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் போராட்டத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமாயென விவாதிக்க அதிகாரமயம் கூடுகின்றதென்பதைத் தெரிந்து கொண்டு வெகு ஆர்ப்பாட்டத்துடன் களமிறங்கிச் செயற்படுவது.

இப்படியான உளவியலோடு போராட்டத்தைக் கையிலெடுப்பவர்கள்தாம் போராட்டவுரிமைக்கே வேட்டு வைப்பவர்கள். இந்த எதிர்த்தரப்பினர், இத்தகைய உளவியலோடுதாம் அவர்கள் செயற்படுகின்றனரெனும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; ஏனென்றால் அவர்களின் ஆழ்மனத்தில் என்னமாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அறியாததாக இருப்பர். அல்லது, திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயற்படுத்தும் கூர்நோக்கர்களாய் இருப்பர்.

சமுதாய, குடிமைநலம் போற்றிடப் போராடும் முதற்தரப்பினர், இவர்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கொள்கைவழிப் போராட்டங்கள் இத்தகு போலிப்போராட்டங்களால் நீர்த்துப் போகவும், சிதைந்து போகவும், கண்டனத்துக்காட்படவும் நேரிடுகின்றது. ஆகவே, போலிகளைச் சுட்டுவது காலத்தின் கட்டாயம்.

போலித்தனத்தின் கருவறுப்புக்கிடையே தத்தம் கொள்கைவழிப் போராட்டங்களையும் முனைப்போடு ஒரு மாந்தன் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அதன் தேவை என்ன??

விழிப்புணர்வு: எல்லாக் குடிமக்களுக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. அத்தகு சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வுக்காகவேணும், கவன ஈர்ப்புக்காகவேணும் போராட்டங்களை, இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

மக்கள்சக்தி: ஒவ்வாத சட்டங்களோ, பழக்கவழக்கங்களோ தலையெடுக்கும் போது, அதற்கான எதிர்வினையென்ன என்பதை ஒருமுகப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை எந்தவொரு சமூக ஆர்வலனுக்கும் உண்டு. அதற்காகவேணும், ஓர் ஊர்வலத்தையோ, கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.

ஒற்றுமைப்படுத்தல்: மாந்தனையப் பெருவெள்ளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்புநலம், கூறுகள், விருப்பு வெறுப்புகள், கலைநயம் போன்றவை இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் பாலினம் என வைத்துக் கொள்வோம். பெருவெளியில் எங்கெங்கோ ஒருவர் இருக்கக் கூடும். அப்படியான ஒருமித்தவரின் ஒற்றுமைக்குப் போராட்டங்கள், இயக்கங்கள் தேவையாக அமைகின்றன.

ஒருங்கிணைவு: செயலூக்கம் பெறவும், மேன்மை கருத்திச் செயற்படவும் ஆங்காங்கே இருப்போர் ஓரிடத்தில் சங்கமித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளப் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

தீர்வுபெறல்: எல்லாப் போராட்டங்களும் எல்லாக் காலங்களிலும் வெற்றியை ஈட்டிக் கொடுக்குமெனச் சொல்ல முடியாது. ஆகவே, மாற்றுத்தீர்வு குறித்து ஆயவும் அதற்கான படிப்பினையைப் பெறவும் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

இத்தகு தேவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒருவர் ஏன் போராட்டவுரிமையை வலியுறுத்தியும், போராட்டவுரிமைக் கொச்சைப்படுத்துதலை எதிர்த்தும் செயற்பட வேண்டும்??

போராட்டவுரிமை என்பது ஒவ்வொரு மாந்தனின் அடிப்படை அரசியலுரிமை, குடியுரிமையாகும். மக்களாட்சித் தத்துவம் தழைத்தோங்க எதிர்க்குரலும் எதிர்வினையும் இருந்தேயாகவேண்டும். மனிதனுக்குத் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க ஏதோவொரு வடிவில் ஓர் இடம் இருந்தே தீர வேண்டும்; அல்லாவிடில் அடிமைத்தனத்துக்கே அது வழிவகுக்கும். சமூகத்தில் வெகுவாகத் தெரிந்திராத சில பல பிரச்சினைகளை வெளிப்படுத்த போராட்டங்கள் ஏதுவாகும். எந்தவொரு மேன்மையும் மாற்றத்தினைக் கொண்டே இடம் பெறுகின்றது. அத்தகைய மாற்றங்களுக்குப் போராட்டங்கள் வித்திடுகின்றன. எதிர்மறையான மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. பாரதூர விளைவுகளைச் சார்ந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இடையேயான ஒற்றுமைக்கு வித்திடுகின்றது போராட்டம். அதிகாரவரம்புமீறல், கொடுங்கோன்மை, முறைகேடு போன்றவற்றை அம்பலப்படுத்துகின்றன போராட்டங்கள். அரசு, அமைப்பு, நிறுவனங்கள் போன்ற குடிமை மையங்களுக்கிடையேயான சீரின்மையைக் களைந்து நல்வழிக்கு வித்திடுகின்றன போராட்டங்கள். எதிர்முகாம், மாற்றுமுகாம், பிறர்மனது என மற்ற சமூகச் சிந்தனைகளையும் இணக்கத்தையும் இனம் காணச் செய்கின்றன போராட்டங்கள். எதையுமே செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருப்பதற்கு மாற்றாக, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இட்டுச் செல்கின்றது போராட்டவடிவம்.

உலகின் எந்தநாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்சினைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்குயென எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது. தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழிப் பயணிக்க முற்படும் தருவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும்.

ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்துக் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?? சீராகப் பணி செய்கின்றானா?? இவைதாம் மனிதனின் மாண்புகள்.

போராடுவதென்பது நம் கலாச்சாரம் பண்பாடு இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவொரு உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்கு செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு. குரல் கேட்கப்பட வேண்டும்! கொள்கை தரிப்போம்! உரிமை கொள்வோம்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.

காடடையும் படைக்குருவிகள்

தென்னிந்தியாவின் மான்செச்டர் என அழைக்கப்பட்டது கோயமுத்தூர் மாநகரம். ஒன்றிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில்தாம் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. அந்த நூற்பாலைகளின் உற்பத்தியின் தேவைக்கேற்ற பருத்தி சாகுபடியும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இடம்பெற்று வந்தது. இந்த சூழ்நிலையில்தாம் 1980ஆம் ஆண்டு வாக்கில் என்றுமில்லாதபடிக்கு பருத்தியின் பூக்களும் காய்களும் புதுவிதமான புழுக்களால் சூறையாடப்பட்டன. மாலையில் பருத்திக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய விவசாயி, காலையில் காடெங்கும் உதிர்ந்தும் சிதைந்துப் போனதைக் கண்டு மனம் வெதும்பினான். இரவோடு இரவாக ஒரு பூ, காயைக்கூட விடாமல் தின்றுவிட்டுக் கொழுத்துக் கிடந்தன ‘புரோட்டினியா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் புழுக்கள். கடன் வாங்கிப் பயிரிட்டு, பேணிவளர்த்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் பல தூக்கிட்டுக் கொண்டனர்.

பறக்கும் பூச்சிகளில் இருந்துதாம் புழுக்கள் உருவாகின்றனயென்பதைக் கண்டு கொண்ட வேளாண் அறிஞர்கள் இனக்கவர்ச்சிப் பொறியைக் கண்டுபிடித்து ஏக்கருக்கு இத்தனை பொறிகள் என அமைத்தனர். இரவு நேரத்தில் பொறியில் எரியும் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்பட்டு அதிலிருக்கும் புனலில் வீழ்ந்து மடிந்தன அத்தகைய பூச்சிகள். இருந்தாலும் நிலைமை கட்டுக்கடுங்கவில்லை. பருத்திக் காடுகள் சுடுகாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. விபரமறிந்த விவசாயிகள் பருத்திக் காடுகளுக்குள் ஆழமாக வாய்க்கால்கள் வெட்டினர். புழுக்கள் அத்தகைய வாய்க்கால்களுக்குள் விழுந்து மறுபக்கம் செல்ல ஊர்ந்து போகத்தலைப்படுகையில் செறிவாக குழிகளுக்குள் காணப்பட்டன. அவற்றையெல்லாம் சாக்குப்பைகளில் சேகரம் செய்து காட்டுக்கு வெளியே கொண்டு போய்க் கொட்டித் தீவைத்துக் கொழுத்தினர். என்றாலும் அவற்றின் சூறையாடல் நின்றபாடில்லை. அந்த நேரத்தில்தாம் எங்கிருந்தோ வந்தன படைக்குருவிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காடெங்குமிருந்த புழுக்களை கொத்திக் கொண்டு போயின அவை. விவசாயி பெருமூச்சு விட்டான். பின்னாளில், இத்தகைய காய்ப்புழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே சிறப்புக் கொல்லிமருந்துகள் சந்தைக்கு வந்து சேர்ந்தன. எனினும், இன்றும் இந்த படைக்குருவிகளின் பங்கு தனியொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

புளோரிடா மாகாணத்தில் ஓர்லேண்டோ நகரில் பணியும் சிண்டி எனும் பெண்மணிக்குக் கடந்த இருநாட்களாக இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகின்றது. ”தன் வீட்டுக்கு அருகேயிருக்கும் பிறிதொரு வீட்டில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கடைசியாக நான் எப்போது பார்த்தேன்? அவள் ஏன் முன்னைப் போல வெளியே விளையாடவே வருவதில்லை??’, இப்படியான வினாக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தன. வீட்டில் தனியாக வசிக்கும் சிண்டி, அவ்வப்போது வீட்டு முன்றலில் இருக்கையைப் போட்டமர்ந்து அண்டை வீட்டுச் சின்னன்களின் விளையாட்டுகளைப் பார்த்து இன்புறுவது வாடிக்கை. அதன்நிமித்தம்தான் இந்தச் சிக்கல். ஒருகட்டத்தில், தயக்கத்தையும் தம் மனத்தடையையும் விட்டொழித்து ஊக்கத்துடன் சென்று அந்த வீட்டிலிருப்பவர்களிடம், அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்கின்றார் சிண்டி. கிடைத்த மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. ஐயமுற்றவர், அவர்களுடைய கார்களையும் வீட்டையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக உணர்ந்தார். உடனே, 9-1-1, அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்து, கடந்த ஒரு மாதமாகவே அக்குழந்தையைத் தாம் கண்ணுறவில்லையென்றும், வீட்டாரைக் கேட்டால் மழுப்புகின்றார்களென்றும் கூறி அழுதார். குழந்தையின் அழகையும் அறிவையும் தாம் மிகமிக மதித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களைச் சொல்லிப் புலம்பினார் சிண்டி.

சட்டம் ஒழுங்கு அலுவலர்களும், துப்பறியும் அலுவலர்களும் தத்தம் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. 2008ஆம் ஆண்டு ஜூலை பதினைந்தாம் நாள் பதியப்பட்ட முறையீட்டின் நிமித்தம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தன. 2008ஆம் ஆண்டு ஜூன்மாத வாக்கில் குழந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்பதாக முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக, நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்து போனதாகவும், அதன்பின்னர் குடும்பத்தினர் அவர்களின் வீட்டுப் பிறவடையில் வைத்துத் தகனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின்னர், குழந்தையின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டு வரையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம் பெற்றன. விசாரணை அலுவலர்கள், உரிய சான்றுகளைக் கட்டமைப்பதில் வெகுவாகத் திணறினர். கடைசியாக, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்ற படைக்குருவிகள் கொந்தளித்துப் போயின. இந்த படைக்குருவிகள், மனிதகுலத்துக்கு இன்னல் நேரும் போதெல்லாம் குரல் கொடுப்பர். அவர்கள் இந்த ஊரில், இந்த மாநிலத்தில், பொதுவாக ஒரு இயக்கத்தின்பாற்பட்டோ, கட்சியின்பாற்பட்டோ, அமைப்பின்பாற்பட்டோ இயங்குபவர்கள் அல்லர். அவர்கள் எல்லாருமே சாமான்யத் தனிமனிதர்கள், எளியனும் எளியர்கள். தன் பசியாற்ற, தன் குடும்பத்தின் பசியாற்ற, ஐந்துக்கும் பத்துக்குமாக உழைக்கும் பொதுமனிதர்கள்தாம் அவர்கள்.

குழந்தையின் சாவுக்கு இவர்கள்தாம் காரணமென அலுவலர் தரப்பினால் நிறுவமுடியவில்லை. விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாகப் பொய் சொன்னது மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. அதன்நிமித்தம், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து முற்றுமுழுதுமாக விடுதலை செய்யப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். படைக்குருவிகளால் தாங்கமுடியவில்லை. ஒரு குழந்தை யாதொரு காரணமுமின்றி நம்மிலிருந்து விடுபட்டுப் போயிருக்கின்றார். இன்னொரு குழந்தை இதுபோன்ற நிலைக்கு ஆட்படாமலிருக்கச் செய்வது நம் வேலையென வெகுண்டெழுந்தனர்.

தனிமனிதர்கள்தாம். ஒத்த மனநிலை கொண்டோரிடம் செய்தியைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தத்தம் மனக்கொந்தளிப்பினை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி குரலை வெளிப்படுத்தினர். ஆக்ககரமான உரையாடலை மேற்கொண்டனர். உரிய சட்டங்கள் வரவேண்டுமென ஆர்ப்பரித்தனர். விளைவு, கேய்லிச்சட்டம் (caylee's law) அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தை இறந்து போனால், ஒருமணி நேரத்துக்குள்ளாக உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், குழந்தையின் பெற்றோர், வளர்ப்புப் பொறுப்பாளர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவர். குழந்தை காணாமற்போனால், 24 மணி நேரத்துக்குள் உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், பெற்றோர்/பொறுப்பாளர் தண்டனைக்குரியவர் ஆவார்.

அமெரிக்காவில் எத்தனையோ சட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயராலேயே இடம் பெற்று வருகின்றன. அல்லாவிடில், படைக்குருவிகள் சும்மாயிருப்பதில்லை. அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

படைக்குருவியில் ஒரு குருவியாக இருக்க நமக்குத் தடையாக இருப்பதுதான் என்னவோ?!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.