2/28/2009

ஒப்புக்குச் சப்பா(ணி)...

ஒப்புக்குச் சப்பா எதனா எழுதினா, அனாமதேய அன்பர்கள் வாழ்த்துவாங்களாமே?! வாங்க, வந்து வாழ்த்திட்டுப் போங்க! மத்தவங்களும் எப்பவும் போல, வந்து போங்க!! என்ன ஆமாவா இல்லையா? இஃகிஃகி, சிங்கப்பூர்ல இருந்தப்ப தொத்திகிட்டதுதான் இந்த ஆமாவா??

அது சரீ, ஏன் கொஞ்ச பேரு உப்புக்குச் சப்பாணின்னு சொல்லுறாங்க? அது ஒப்புக்குச் சப்பாணிதானே? நாங்கெல்லாம் சின்ன வயசுல நொண்டி விளையாடுவோம். யாராவது ஒருத்தர் நொண்டி அடிச்சி, மத்தவிங்களைத் தொரத்திப் பிடிக்கணும். அப்ப, யார் அந்த ஒருத்தர்? அதை முடிவு செய்யுறதுக்கு, சா..பூ...த்ரீ.... மாதிரி கைய ஆட்டிட்டி, அப்புறமா சப்பாணி கொட்டணும். சப்பாணின்னா, ஒரு கையோட உள்ளங்கையில, அடுத்த கையோட உள்ளங்கையை மேல பாத்தோ, இல்ல அடுத்த உள்ளங்கையோட பொருந்துற மாதிரியோ கொட்டுறது.

அப்படிக் கொட்டும் போது, கருப்பு(வெளிப்புறம்), வெள்ளை(உள்ப்புறம்)இதுல ஒத்தையா இருக்குறவிங்களை நீக்கி, நீக்கிக் கடைசியா ரெண்டு பேர்ல வந்து நிக்கும். இப்ப, ரெண்டு பேர்ல ஒருத்தரை முடிவு செய்யுறதுக்கு, மூனாவதா ஒரு ஆள் தற்காலிகமா(ஒப்பு) அந்த ரெண்டு பேரோடச் சேந்து சப்பாணி கொட்டுறார் பாருங்க, அதாங்க ஒப்புக்குச் சப்பாணி.

சப்பாணின்னா, உடல் ஊனமுற்றவரைச் சொல்லுறோம். குழந்தைகள் மழலையோட சேந்து ரெண்டு கைகளையும் தட்டிச் தட்டிச் சிரிக்குற பருவம் இருக்கு பாருங்க, அதையுஞ் சொல்லுறது சப்பாணிப் பருவமுன்னு. ஒப்புங்றது, சாயலை தோற்றுவிக்கிற‌ங்ற பொருள் கொண்டதுங்க. அதான், தற்காலிகமான ஒரு போலித் தோற்றத்தை உண்டு பண்ணுறது ஒப்பனை... உங்க தனித்தன்மையான எழுத்துக் கீறலைத் தோற்றுவிக்கிறது கையொப்பம். இஃகிஃகி!! இப்படி தற்காலிகமா சேந்து கை கொட்டுறது, ஒப்புக்குச் சப்பாணி. அதுவே, ஒப்புக்குச் சப்பா நீ போடுன்னும் ஆச்சுது.

அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழ முடியுமா?

2/27/2009

பிறழ்ந்தது: அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா 'வேட்டு'!


ப‌திவ‌ர்க‌ளைக்

கொல்வேன்

அன்பால்!

ம‌க்க‌ளே, மேல‌ சொன்ன‌ வாச‌க‌த்தைப் பார்த்துட்டு, ப‌ழ‌மைபேசி ப‌திவ‌ர்க‌ளைக் கொல்வேன்னு சொல்லுறான்னு போயி நாலு பேர்கிட்ட‌ சொன்னீங்க‌ன்னா, உங்க‌ளுக்கு க‌டுமையான‌ ஊட‌க‌ நோய் இருக்குன்னு அர்த்த‌ம். இதையே ஊர்ல‌ பெரிய‌விங்க‌, எங்க‌ளைத் திட்டும் போது சொல்லுற‌து, "என்ன‌டா ப‌ழ‌மை இது? மொட்டைத்தாச‌ன் குட்டையில‌ விழுந்த‌ க‌தையாட்ட‌ம் பேசிகிட்டு?"ன்னு கேப்பாங்க‌.

அது ஒன்னுமில்லைங்க! அய்ய‌, அப்ப‌ச் ச‌ரின்னு கிள‌ம்புறீங்க‌ பாத்தீக‌ளா? சித்த‌ இருந்து வெவ‌ர‌த்தைக் கேட்டுப்போட்டுப் போங்க‌! ஒரு நாள் பெருமா கோய‌ல்ல‌ பூசை பண்ற‌ தாச‌ன், புர‌ட்டாசி மாச‌ம் க‌டைசி ச‌னிக் கெழ‌மையின்னுச் சொல்லி, பெருமாளுக்கு மொட்டை போட்டுட்டு, ஊருக்கு கெழ‌வ‌ர‌ம் இருந்த‌ குட்டையில‌ குளிக்க‌ப் போனான்.

என்ன‌ கேள்வி இது? தாச‌ன் எப்பிடி பெருமாளுக்கு மொட்டை போட‌ முடியும்? பெருமாளுக்கு நேர்ந்துகிட்டு, அவ‌ன் மொட்டை போட்டுகிட்டான். இப்பிடி குறுக்க‌ குறுக்க‌ கேள்வியெல்லாம் கேக்க‌ப்ப‌டாது, ஆம்மாஆ!!

அந்த நேரத்துல குட்டையில இருந்து ஊருக்குள்ள வந்துட்டு இருந்த ஒருத்தன், குட்டைக்குள்ள தாசங் குதிக்கிறதப் பாத்துட்டு வந்து, ஊருக்குள்ள சொன்னான், "தாசன் குட்டையில உழுந்துட்டான்!"ன்னு. ஒடனே, ஊர்க்காரங்க எல்லாருமா குட்டைக்கு நடந்து போனாங்க. அப்பப் பாத்தா, தாசன் குளிச்சிட்டு, மேல் வேட்டிய போர்த்திகிட்டு வந்துட்டு இருந்தான். ஒடனே, ஊர்க்காரவிக கேட்டாங்க, "ஏன்டா, குட்டையில விழுந்திட்டேன்னு சொன்னாங்களே?". ஆமா, விழுந்து விழுந்து குளிச்சேன். இனிப்போயி படையல் வெச்சி, உச்சி பூசைய நடத்தீர வேண்டியதுதான், வாங்க அல்லாரும் போலாம்ன்னான் வெகுளி மாதிரி.

அது போலப் போயி, பழமைபேசி கொல்வேன்னு சொன்னான்னு மொட்டையாச் சொல்லிடாதீங்க. அன்பால கொல்வேன்னு சொல்லி இருக்குறேன் மக்கா! அதே போலத்தான், அதிபர் ஒபாமாவும் வரி விலக்குல இருந்து அவிங்களை விலக்குவேன்னு சொல்லி இருக்காரு. அயல்க் கொள்முதல்(outsourcing ) செய்ய மாட்டோம்ன்னு அவர் சொல்லவே இல்லை! இல்லை!! இல்லை!!!

அப்ப அவர் என்னதான் சொன்னாரு? அவர் சொன்னது இதாங்க, No more tax breaks for companies that send jobs overseas! இதனோட முழு அர்த்தமும் தெரியணுமின்னா, மொட்டைத்தாசன் எதுக்காக, எப்படி விழுந்தான்னு பார்க்கணும் நாம. ஆமுங்க, அது என்ன அந்த Tax Break?அதைத் தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, இன்னும் கொஞ்சம் விபரங்களை அலசியாகணும்.

Offshore : வெளிப் பிரதேசத்துக் கொள்முதல்
Nearshore: அண்டைப் பிரதேசத்துக் கொள்முதல், கனடா மற்றும் மெக்சிகோ
Onshore: உட்பிரதேசத்துக் கொள்முதல்
Outsourcing: அயல்க் கொள்முதல், வெளிப்பிரதேசம் எதுவேணாலும்

இந்தப் பின்னணியில, வெளிப்பிரதேசத்துக் கொள்முதல்ல நிறைய சாதகமான அம்சங்கள் நிறுவனங்களுக்கு இருக்கு.


  • மலிவான விலை, சேவைக்கான குறைந்த ஊதியம் (ஒப்பிடும்போது)
  • நேர மாற்றம்(time difference), காலை நேரம் ஆரம்பிக்கும் போது, தேவையான அலுவல் முடிஞ்சு தயாரா இருக்கும்படி செய்ய முடியும்.
  • வெளிநாட்டு அரசுகள் வழங்குற சகாய வசதிகள், தொழில் வரி விலக்கு இப்படி....
  • கடைசியா வர்றது, உள்நாட்டுல இருக்குற நிறுவன (35% corporate tax.) வரியில சாதகமான அம்சத்தைப் பாவிக்கிறது. அவ்வளவுதான், இது கூட சகாயம்ன்னு சொல்ல முடியாது.

மேல சொன்னதுல கடைசியா இருக்கு பாருங்க, அதைதாங்க அதிபர் ஒபாமா சொல்லுதாரு Tax Breakன்னு. அதாவதுங்க, வரி கட்டுற முறையில இருக்குற ஓட்டை அல்லது சாதகமான அம்சத்தை அவர் நீக்கப் போறாராம். அதனால, வெளியூர்க்குப் போகும் வேலை வாய்ப்புகள் குறையும். கடைசிக்கு, அரசுக்கு மேலதிக வருமானமாவது வரும். இது அவங்க எதிர்பார்ப்பு. சரியான திட்டமும் கூட.

சரி, அது என்ன அந்த சாதகமான அம்சம் அல்லது ஓட்டை? இஃகிஃகி! சம்பளத்துக்கு வேலை செய்யுறவங்களைத் தவிர, மத்த எல்லார்த்துக்கும் வரிக் கண்க்கு காமிக்கிறதுல பல ஓட்டை ஒடசலுக உலகம் பூராவும் இருக்கத்தான் செய்யும். இதென்ன பிரமாதம்? முடிஞ்சா, அரசு கொஞ்ச ஆட்களை நெருக்கிப் பிடிச்சி, மத்தவங்களுக்கு ஒரு அச்சுறுத்தலைக் கொண்டு வந்து, அதன் மூலமா வரிய வசூல் செய்யலாம். வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னெல்லாம் கணக்குப் பாக்கவே முடியாது. இதுதான் யதார்த்தம்.

அதே பின்னணிதாங்க இதுவும். வெளிநாடுகள்ல இருந்து வர்ற வருமானத்த, அமெரிக்க‌ நிறுவனங்கள் அடுத்த அடுத்த வருசங்களுக்குத் தள்ளித் தள்ளி, கடைசியில கன கச்சிதமா அந்த 35% வரிய ஏப்பம் விடலாம். இதைத்தாங்க அவங்க கிடுக்கிப் பிடி பிடிக்கப் போறாங்களாம்.

சரி, இதுக்கும் இந்த வேட்டு கீட்டுன்னாங்களே, அதுக்கும் என்ன தொடர்பு? ஒரு தொடர்புங் கிடையாதுங்றது, என்னோட வேலை செய்யுற வெள்ளைச் சாமிகள், டிம் செரக், டாம் கோத் அவங்களோட கருத்து. இதுல ஒருத்தன் சனநாயகக் கட்சியோட அபிமானி. ஒருத்தன் குடியரசுக் கட்சி. ஏன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லுறாங்க?

இப்ப TCS, Satyam, InfoSys மாதிரி நிறுவனங்களுக்குத் தர்ற வேலை, ஒப்பந்த வேலை. அவங்களுக்குத் தர்ற ஊதியம், அமெரிக்க நிறுவன‌ங்களோட செலவு கணக்குல வந்திடும். ஆக, இதுக்கும் அந்த ஓட்டை ஒடசலுக்கும் தொடர்பு இல்லை. மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், ஐ.பி.எம் மாதிரி நிறுவனங்கள் இருக்கு பாருங்க, அவங்க நல்லாவே அந்த ஓட்டை ஒடசலைப் பாவிக்கலாம். ஏன்னா, அவங்களோட நிறுவனத்தோட ஒரு பகுதி நேரிடையா வெளியூர்ல இருக்கு. ஆக, அவங்க அந்த வெளியூர்ப் பிரிவுகள் மேல கணிசமான தொகைய இலாபமாக் காமிச்சி, 35% சதக் கழிவை எடுத்துகிடலாம்.

இப்ப சொல்லுங்க, இந்த 35% ஓட்டைய அடைக்குறதுனால, அந்த நிறுவனங்கள் எல்லாம் கடைய மூடிட்டு வெளிநாட்டுல இருந்து வெளியேறிடுவாங்களா? அப்படியெல்லாம் ஒரேயடியா, மூடிட மாட்டாங்க இராசா! மூடிட மாட்டாங்க!! ஏன்னா, மேல சொன்ன சாதகமான அம்சங்கள்ல ஒன்னு வேணா இல்லாம ஆயிடலாம். இன்னும் மத்தது இருக்கே?! நல்லாக் கூட்டி கழிச்சிப் பாருங்க, கணக்கு சரியா வரும்.

அமெரிக்காவுக்கு வேலை செய்யுற இந்திய நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? அவங்களுக்கும் இந்த 35% ஓட்டைக்கும் என்ன தொடர்பு? அப்புறம் எதுக்கு இந்த பீதி?? ச்சும்மா, நிம்மதியாத் தூங்க விடுங்கப்பா சனங்களை!

ஆபத்துக்குப் பயந்து ஆத்துல விழலாமா?

2/26/2009

அமெரிக்கா: நம்மவர்களுக்கான ஓர் நற்செய்தியும், செய்தித் துளிகளும்!

இன்றைய சூழலில் நல்ல செய்தி என்பதே அரிதாகிவிட்ட நிலையில், அமெரிக்க குடிபுகல் செயல்முறையில் ஓர் நற்செய்தி. ஆம் நண்பர்களே, நிரந்தரவாசிக்கான அட்டை பெற விண்ணப்பம் செய்வதில், I-140 க்கான விரைவு விண்ணப்ப விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது. அதன் விளைவாக, ஆறு வருட காலத்தை நிறைவு செய்பவர்கள், விரைவாக I-140ஐ முடித்து, EAD வாங்க வழி பிறந்து உள்ளது. EADஐ விரைவில் வாங்கி வைத்துக் கொள்வது உசிதம்.

அண்டை நாடான‌ மெக்சிகோவில், பொருளாதார‌ ம‌ந்த‌த்தின் விளைவாக‌, போதைப் பொருள் க‌ட‌த்துவோர் த‌ங்க‌ளுக்குள் செய்து வ‌ரும் க‌ல‌வ‌ர‌த்தால் சென்ற‌ மாத‌ம் ம‌ட்டுமே 1000க்கு மேலானோர் கொல்ல‌ப்ப‌ட்டதாக‌த் தெரிகிற‌து. சென்ற ஆண்டு பிற்பாதியில் 6,290க்கு மேலானோர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும், அருகில் இருக்கும் மாகாணங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை $1.75 Trillion வெள்ளிகள். சென்ற மாதம் வேலை இழப்பு 667,000 பேர். மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியது. நான்காவது காலாண்டில் GMன் வருவாய் இழப்பு $9.6 Billion. ஆனால், கனடிய நிறுவனங்களில் இலாபம் சிறிது குறைந்து இருக்கிறது. ஆனால், இழப்பு இல்லை. ஒட்டு மொத்தமாக C $64.5 Bi வருவாயும், அதில் வங்கிகள் C $22.5 Bi வருவாயும் ஈட்டி உள்ளன.


பட்டணம் எல்லாம் நம்ம பட்டணம்தான்,
பொட்டணம் வைக்கத்தான் இடமில்லை!!

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

2/24/2009

பள்ளயம் 02/24/2009


வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

அமெரிக்க செய்திகள் ஒன்றிரண்டை முதலில் பார்ப்போம். மைக்ரோசாஃப்ட்( Microsoft) நிறுவனம் வேலைக் குறைப்பினால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு, தவறுதலாக விடுப்புத் தொகையில் அதிகமாகக் கொடுத்து விட்டதாகவும், அதைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெருமளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், துவங்கிய நாளில் இருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் இப்போதுதான் முதன் முறையாக வேலைக் குறைப்பின் காரணமாய், பணியாளர்களை விடுவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில், அமெரிக்காவின் முதுகெலும்பு என்றும், உலகத் தொழிற்பேட்டை என்றும் வர்ணிக்கப்பட்ட டெட்ராய்ட் நகரை மையமாகக் கொண்ட நிறுவனங்களான, GM, Chrysler ஆகியவற்றை சீன நிறுவனம் வாங்க, பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பது, பரபரப்பாக பேசப்படுகிறது. அதே வேளையில், இந்த நிறுவனங்கள் அரசின் உதவித் தொகையை அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அந்த முயற்சி தோல்வியுறும் நிலையில், விற்பனை செய்வது அல்லது நலிவுற்றதாக அறிவிப்பது என்கிற நிலையில் இருப்பதாக, அதிகாரப்பூர்வமற்ற‌ உள்ளிடைத் தகவல்கள் கூறுகிறது.

எழுது தமிழ், பேச்சுத் தமிழ், தமிலீசு, தமிங்கலம்

தமிலீசு, தமிங்கிலத்துக்கான விளக்கத்தை அன்பர் ஒருவரும், நண்பர்கள் ஏன் நீங்கள் கொச்சைத் தமிழில் எழுதுகிறீர்கள் என்றும் வினவியதின் பொருட்டு, நாம் அவற்றைப் பற்றி அலசுகிறோம் அன்பர்களே. எழுது தமிழ் என்பது, எழுதுவதிலும், மேடைப் பேச்சுகளிலும் வெகுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முறையான உரையாடல், ஆவணங்கள், கட்டுரைகள், விண்ணப்பங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளில் இம்முறை பாவிக்கப்பட்டு வருகிறது. இதுவே, ஒருவர் அடுத்தவர் மனதை நெருங்கிச் செல்ல வேண்டுமாயின், இம்முறை உகந்ததாக இருப்பதில்லை. ஆயினும், இதுவே தமிழ்மணம் என்பதை மறுக்க இயலாது.

அடுத்தபடியாக, பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ். இது, வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். ஆனால், மக்களை எளிதில் சென்றடைய முடிகிறது என்பது எம் கருத்து. பதிவுலகில், பெரும்பாலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எம்மைப் பொறுத்தமட்டில், எமக்கு எழுதுவதற்கும் வாகாக உள்ளபடியினால், இச்சாயலில் சரளமாக எழுத முடிகிறது. எனினும் தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.

தமிலீசு முறை என்பது, நுட்பம் குறித்த ஒன்று. கணினி உலகத்தில், உருமாற்றி இல்லாத காலங்களிலும், தமிழ் விசைப் பலகை இல்லாத காலங்களிலும், ஆங்கில எழுத்துகளால் தமிழில் தகவல்ப் பரிமாற்றம் செய்ய வேண்டி உள்ளது. தமிழை, ஆங்கில மொழி எழுத்தில் பாவிப்பதையே தமிலீசு என வழக்கத்தில் குறிப்பிடுகிறோம். கூடுமானவரை, இதைத் தவிர்ப்பதும் நன்று என்ற மனப்பான்மையிலேயே பெருமளவில் நம்மவர்கள் இருக்கிறார்கள்.

இறுதியாக வருவது, தமிங்கிலம். தமிலீசுக்கு நேர்மாறானது. தமிழ் எழுத்துகளால், பரங்கியர் மொழியான ஆங்கிலத்தைப் பாவிப்பது. இன்றைய காலகட்டத்தில், தமிழுக்கு நேர்ந்த ஊறு இது என்றால் மிகையாகாது. எங்கும் இம்முறை வியாபித்திருப்பதை நாம் காணலாம். இம்முறை பற்றி நம் எண்ணங்களை மேலும் எழுதி, அனாமதேய அன்பர்களின் வாழ்த்தைப் பெறுவதிலும், அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் இருந்து விலகியிருப்போமே?! அஃகஃகா!!

நன்றி: சித்தகிரி கண்காட்சி


சூதனம்

மேலே உள்ள படத்தில், எருது ஒன்றுக்கு குளம்புத்தகடு (இலாடம்) பொருத்துவதைப் பார்க்கலாம். பொருத்துபவர், சூதன். தச்சு வேலைகளைச் செய்பவரையும், சூதன் என்றே தமிழில் சொல்வது. சூதனைப் போல், நெளிவு சுழிவுடன், நுணுக்கமாக இருந்து கொள் என்பதே, பேச்சு வழக்கில், சூதனமாக என்பது மருவி, "சூதானமாக இருங்க அப்பு!" என்று ஆனது. படத்தில் இருப்பவற்றைப் பற்றி, மேலும் அதிகமாகக் கூற வேண்டி உள்ளது. கால அவகாசமின்மையால், அவற்றை எதிர்வரும் காலங்களில் காண்போம் மக்களே!!!

படியாதவன் அடி நில்லாது!

2/21/2009

பத்தாம் பசலி!

பத்தாம் பசலி என்றால் என்ன?

பத்து வருடங்களை ஒரு முறை குறிப்பதற்கு பசலி கணக்கு என்று பெயர். ஆங்கிலத்தில் பத்து வருடங்களை ஒரு Decade என்கிறார்களல்லவா, அதுபோல. இந்த பசலி கணக்கு முறையைக் கண்டுபிடித்தவர் அக்பர். இந்தக் கணக்கு முறை ஏற்படுத்தப்பட்ட கி.பி. அறுநூறாவது ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள். இதையே, பழைய சம்பிரதாயங்களை விடாத, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சரியான பத்தாம் பசலி' என்று குறிப்பிடுகிறார்கள்.

தனக்குத் தானே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் எவை?

நத்தையில் ஆண் நத்தை, பெண் நத்தை என்று கிடையாது. அர்த்தநாரீசுவரர் போல ஒரு நத்தையே ஆணாகவும், பெண்ணாகவும் இயங்கும்; இனவிருத்தி செய்து கொள்ளும். மண் புழுவும் அப்படியே.

கத்தாத பிராணி எது?

ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு விசேட அமைப்பு உள்ளது. கழுத்தைத் திருப்பாமலேயே கண்ணைப் பின் நோக்கிச் செலுத்தித் தனக்குப் பின்புறமிருப்பவைகளைப் பார்க்கும் சக்தியுடையது அது. மேலும் அதற்குக் குரல் கிடையாது. ஆகவே அது கத்தாது.


'சிதம்பர ரகசியம்' இதன் பொருள் என்ன?

சிதம்பர ரகசியம் என்று குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? 'ஒன்றுமில்லை' என்றுதான் அர்த்தம். பஞ்ச பூத லிங்கங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்த ஊரில் குடிகொண்டிருக்கிறார். ஆகாயம் எப்படி உருவமற்றதோ, அதே போல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது. அதாவது ஒன்றுமில்லாதது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.

ஒற்றுமையாக வாழாத, கொல்லும் எண்ணம் கொண்ட உயிரினம் எது?

தேள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வதில்லை. புணர்ச்சிக்குப் பிறகு பெண் தேள், ஆண் தேளை அப்படியே நெருக்கிக் கொன்று விடும்.


திசை காட்டும் கருவியிலுள்ள சேவல், காற்று வீசும் திசை நோக்கி இருப்பதன் காரணம் என்ன?

பறவைகள் அனைத்துமே ஓய்வெடுத்துக் கொள்ளும்போது காற்று வீசும் திக்கு நோக்கியே அமர்ந்திருக்கும். உதாரணமாக வடக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறதென்றால் பறவைகள் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கும். திசைகாட்டும் கருவியிலுள்ள சேவல் எப்போதும் காற்று வீசும் திசையையே நோக்கியிருப்பதாக அமைக்கப்பட்டிருப்பது.

அதிக ஆண்டுகள் வாழும் பிராணி எது?

பிராணிகளிலேயே ஆமைகள்தான் அதிக ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அவை உயிரோடு இருக்கும்.


மனிதன் அழுவதுபோல் அழுகை ஒலி எழுப்பும் உலோகம் எது?

கேட்மியம் என்ற உலோகம் விசேஷ குணம் கொண்டது. அதை வளைத்தால் அழுவது போன்ற ஒலி உண்டாகும். மனித அழுகைக் குரலை அந்த ஒலி ஒத்திருக்கும்.

2/20/2009

மாறுபட்ட பார்வையில: இராசீவ் காந்தியைக் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்

எனக்கு நினைவு தெரிஞ்ச, இன்னாருக்கு இன்னார் கேட்கும் பத்து கேள்விகள்ங்றது, நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும் போது ரொம்பப் பிரபலம். கன்னியாகுமரியில இருந்து காசுமீரம் வரைக்கும் அதே பேச்சுத்தான். நாளேடுகெல்லாம் அதைப் போட்டு நல்லாக் காசு பார்த்தாங்க.

ஆமாங்க, சட்டத்தரணி இராம்சேத்மலானி அவிங்க பிரதமர் இராசீவ் காந்திக்கு, தினமும், கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்ன்னு போட்டுத் தாக்கினாரு. இராசீவ், அதைக் கண்டுகிடவே இல்லைங்றது வேற விசயம். பதில் சொல்ல முடியலையோ என்னவோ, யாருக்குத் தெரியும்?!

அந்த‌ நேரத்துல, யாரோ ஒரு வெளங்கா வெட்டி எங்க ஊர்ப்பக்கம் தமிழை வம்புக்கு இழுத்தாங்க. தெலுங்குல 'வினேதி', 'அடுகேதி'ன்னு காதால கேக்குறதுக்கும், வாயால் கேக்குறதுக்கும் தனித் தனி சொல் இருக்கு. ஆனாத் தமிழ்ல, கேள்விங்ற ஒரே சொல்லை வெச்சி இருக்காங்க, அது குழப்ப(ambiguity)த்துக்கு வழி கோணுது. அதனாலதான், உணர்வுகளை உணர்வுகளாக்(sensitive) கொண்டு செல்லுற கீர்த்தனைகள், சங்கீதங்கள் எல்லாம் தெலுகு, உருதுல இருக்குன்னு வியாக்கியானம்.

எங்க தமிழ் ஆசானுக்கு வந்தது பாருங்க கடுஞ்சினம். எங்க ஊரு வினாங்கோயில் முன்னாடி நெசமாலுமே ஊரைக் கூட்டிப்பிட்டாரு. வினா தொடுப்பதும், விடை அளிக்கிறதும்ன்னு இருக்க, எப்படி அந்த நாதாரி அப்பிடிச் சொல்லலாம்ன்னு பிடிபிடின்னு பிடிச்சிட்டாரு. இன்னும் அவ‌ர் நிறைய விபரங்களைப் பேசினதா நினைவு. மறந்துட்டேன். நினைவுக்கு வரும்போது எழுதுறேன், சரியா? இஃகிஃகி!! அந்த தமிழ் ஐயா அவிங்க, சர்க்கார் பாளையம்(ஜக்கார் பாளையம்) இராமச்சந்திரன் அவிங்க. அவிங்களுக்கு ஒரு நன்றி கலந்த வணக்கம் இந்த நேரத்துல சொல்லிகிடுறேன்!!


நெருப்பென்றால் வாய் வெந்து விடாது!

2/18/2009

<பிறழ்ந்தது>இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்க முடிவு அபத்தம்!

என்னங்க இது? ஊர்ல பெத்தவிங்க யாரும் நிம்மதியா இருக்க வேண்டாமா?? பரபரப்பக் கூட்டுறதுக்கு என்ன வேணாலும் எழுதிக்கிடலாமா? நாடு கெடுறதே இந்த மாதிரி பிறழ்ந்த செய்திகளாலத்தான்...

உதவிநிதி வாங்கியிருந்தாலும், நிறுவனங்கள்ல‌ ஒப்பந்த வேலைக்காரர்களா இருக்குற வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம்ன்னும் சொல்லி ஆச்சு. வேலை இழந்து மறு வேலை எடுக்க முடியலைன்னா, தாய் நாட்டுக்குத் திரும்பணும். டில்லியில வேலைக்குப் போறோம். அங்க வேலை இல்லைன்னா, திரும்பவும் கோயமுத்தூர்க்கு வர்றது இல்லையா? இந்த தலைப்பைப் பார்த்துட்டு, மறுபடியும் ஊர்ல இருக்குற பெரியவிங்க அடிச்சுப் புடிச்சு, மகனையோ, மகளையோ தொலைபேசில கூப்பிடுறதுல இவங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. எதோ, இங்க கழுத்தைப் புடிச்சி வெளில தள்ளுற மாதிரி?!

இது ஏதோ பதிவுக்குன்னு போடுறது இல்லைங்க. இதனோட பாதிப்பு, அதிகம். இங்க வேலை செய்துட்டு இருக்குற ஒருத்தனுக்கு, வீட்ல பெண் பார்த்துட்டு இருக்காங்கன்னு வெச்சிகோங்க, இந்தத் தலைப்பப் பார்த்தவிங்க பெண் குடுக்க யோசிப்பாங்களா? மாட்டாங்களா?? பிரபல நாளிதழ் இப்படி தலைப்பு வெச்சா சரி! உணர்ச்சி வயப்பட்ட நிலைல, ஒரு சாமான்யன் சின்ன தவறு செய்தாப் போச்சு, லப லபன்னு பிடிச்சுக் கும்மிடமாட்டாங்க?! பரபரப்பான காலங்களில் முந்திச் சென்று செய்தி சேர்ப்பதில் போட்டி இருக்கட்டும்! இக்கட்டான காலங்களில், பிந்திச் சொன்னாலும் பிறழாமல்ச் சொல்வதில் உறுதி இருக்கட்டும்!!

நிகழ்ந்த மாற்றம் இதுதான்!

கண்ணால் காண்பதுவும் பொய்!
காதால் கேட்பதுவும் பொய்!!
தீர விசாரிப்பதே மெய்!!!

2/17/2009

இதாண்டா ஆளுமை!

நாட்டிற்குத் தேவை இத்தகைய ஆளுமை! ஒலியை கூட்டிக் காணவும்!




ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.


2/16/2009

பள்ளயம் 02/16/2009



அயர்லாந்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வேதாகம விற்பன்னர் ராபர்ட் கால்டுவெல், தமிழ் மொழியப் படிக்க ஆரம்பிச்சாராம். கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு ஆட்பட்ட அவரு, தமிழ்ல தமிழையே ஆராய்ச்சி செய்யுற அளவுக்கு தமிழ் மேல பற்றுக் கொண்டவரா ஆயிட்டாராமுங்க. அவர்தான், இந்த உலகத்துலயே முதன் முதலா செம்மொழின்னும், நம்ம தமிழ் அந்த செம்மொழின்னு உலகுக்கு அறிவிச்சவராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++

கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நாட்டுக்கட்டை, திமிசுக்கட்டைன்னு பல கட்டைகளப் பத்தி பேசிட்டு இருந்தோம். நீங்க, இந்த படத்துல பாக்குறது நாட்டுக்கட்டை. நாட்டுக்கட்டையில இருந்து, தாம்புக் கயிறால மாடுகளை இணையாப் பூட்டி, உழவன் செய்யுற வேலை தாம்பு ஓட்டுற வேலை. அதாவது, கொள், நெல், பயிறு இதுகளை எல்லாம் பயிருல இருந்து பிரிச்செடுக்குற வேலை. களத்துல அறுவடை செஞ்ச கொள்ளுச் செடி, கடலைச் செடி இதுகளைப் போட்டு, அதுகளுக்கு மேல கால்நடைகளை நடக்க வெச்சி, அதை செடியில இருந்து விழுத்துற வேலை.

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊர்ல ஐப்பசி மாசம் முச்சூடும் நல்லா அடை மழை பெய்யும், இடைவெளியே இல்லாம. அப்பப்ப கிடைக்குற இடைவெளில ஊரு சனம் ஓடியாடி செய்ய வேண்டிய வேலைகளச் செய்வாங்க. அப்ப சொல்லுற பழமைதான், "டே இராசூ, இன்னைக்கி வெட்டாப்பு உட்டுருக்கு. மளார்ன்னு போயி, தெக்காலூர்ல இருக்குற சின்ன பாப்பாத்தியக் கூட்டிட்டு வந்துர்றா!". ஓயாம நடக்குற ஒன்னுல கிடைக்குற இடைவேளைதாங்க, இந்த வெட்டாப்பு.

++++++++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படத்துறைல நம்பூர் ஆளுக நெறயப் பேர் வந்து, நம்பூர்ப் பழமயிகளச் சொல்லி பிரபலியப் படுத்துறாங்க. அது நெம்ப நல்லா, சனங்ககிட்டயும் போயிச் சேருது. இராசக்காபாளையத்து சுந்தரத்தண்ணன், சத்தியராசண்ணன், மணிவண்ணன் ஐயாவிங்கன்னு நெறயப் பேர்த்தச் சொல்லிட்டே போகுலாம். அவிங்க சித்த விளக்கமுஞ் சொன்னாங்கன்னா இன்னும் நெம்ப நல்லா இருக்கும். கவுண்டமணி ஐயாவிங்க பிரபிலியப் படுத்துனதுதான், ங்கொக்க மக்கா!

அது ஒன்னுமில்லீங்க கண்ணூ, நம்பூர்ப் பக்கமெல்லாம் ஒருத்தனுக்கு காசு பணம் இருக்குதோ இல்லியோ, தாய்மாமனிருந்தாப் போதும். அதுக்கப்பறம் பாடு பழமை எல்லாம், மாமம்மாரு பாத்துக்குவாங்க, அதான்! இஃகிஃகி!! அப்பிடி இருக்கையில கண்ணூ, அக்காமார் புள்ளயிக, தங்கச்சிமார் புள்ளயிக எல்லாம், மாமம்பின்னாடி காட்டுல மேட்டுல ஓடித் திரிஞ்சு வெளையாடுறதும், பெராக்குப் பாக்குறதும், கண்டொளி வெளையாடுறதும்ன்னு நாலும் நடக்கும்... அப்பப்ப போயி, தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!

அப்ப, அங்கங்க இருக்குற பெரிய அம்மினி புள்ளயிகள மாமம்மாரு கூப்புடறது, "ங்கக்கா மக்கா, எங்கடா அல்லாரும்? வாங்க சித்த!"ன்னு. அதாவது, எங்க அக்காவோட மக்காள்ங்றது, ங்கக்கா மக்க(ள்) ஆயி, ங்கொக்கா மக்கன்னும் ஆயிப்போச்சு! ங்கொக்கா மக்கா, பழமயிக பேசுனதுல நேரம் போனதே தெரீல, போயிப் பாடு பழமயப் பாக்கோனும். நீங்களுமா, அப்ப போயிப் பாருங்க சித்த!!

++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு!

2/15/2009

அமெரிக்கா: H1B ஊடகங்களில் பிறழ்ந்த செய்திகள்?

பொருளாதார மந்தம், அதன் விளைவாக வேலை இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே! இனியும் சொல்லப் போனால், விகிதாச்சாரப்படி பார்த்தாலும் கூட, வேலை இழந்தவர்களில் வெளி நாட்டவரை விட அமெரிக்கர்களே அதிகம். நானே கூட, இது குறித்து சில பதிவுகளைப் பதித்து இருக்கிறேன்.

அவையாவும், இனிமேல் விண்ணப்பம் செய்பவர்களுக்கும், பாதிப்புக்குள்ளான நிறுவனங்களுக்கான உதவித் தொகை(TARP) பெற்ற நிறுவனங்களில் பணி புரிவோருக்கே பொருந்தும். பணியில் இருக்கும் எவரது உள்நுழைவு(visa)ம் இரத்துச் செய்யப்படவில்லை, அப்படி செய்யவும் மாட்டார்கள்.

பணித் திட்டங்கள்(project) முடிவடையும் நிலையில், அதில் பணி புரிந்தோர், வேலை இழந்ததாகக் கருத்தில் கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்தில், மற்றுமொரு வேலையில் சேரும் தருணத்தில் அவர் இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டியது இல்லை.

அமெரிக்காவில் உள்நுழைவில் வேலை செய்வோரை, உள்நுழைவு(h1b visa) இரத்துச் செய்து திருப்பி அனுப்புகிறார்கள் என்றால், அது பிறழ்ந்த செய்தி! வளர்ந்த நாடுகளில், வாங்கு சக்தியும் நுகர்வோரும் பெருக வேண்டுமானால், மனித சக்தி பெருகி ஆக வேண்டும். அல்லது, தனது நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்கு பொருளாகவோ, சேவையாகவோ இப்போது இருப்பதை விட‌ அதிக ஏற்றுமதி செய்தாக வேண்டும். அமெரிக்காவுக்கு இன்றைய சூழலில், இதில் எது ஒன்று நடக்க வேண்டும் என்றாலும், அதற்கு வெளிநாட்டு மனித சக்தியின் தேவை தவிர்க்க முடியாதது.

இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசி, வருடத்திற்கு இவ்வளவு பேர், பத்து வருட ஒப்பந்தம், பதினைந்து வருடம் ஒப்பந்தம் என்ற வகையில் தகுதியுள்ளோரை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதன் மூலம், வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் பெருகுவர். கூடவே, உற்பத்தியும் பெருகி, அவர்களது உள்நாட்டு, வெளிநாட்டுப் பொருளாதாரத்தை ஏற்றப் பாதையில் முடுக்கி விட முடியும்.

அவர்கள் அங்கே பணி புரியுங்காலங்களில், மாதா மாதம் ஒரு தொகை ஓய்வு நிதி, மற்றும் சமூக நல நிதி என்ற வகையில் பிடித்தம் செய்து, தாய்நாட்டு அரசுக்கு, அதாவது இந்திய அரசுக்கு செலுத்துவதின் மூலம், இந்திய அரசும், பணிபுரிபவரும் பலனடையலாம். உலகமயமாக்கல் என்று சொல்லிவிட்டு, ஒரு வழிச் சார்பை மட்டுமே கொண்டிருந்தால் போதாது. காலம் மாறும், இந்திய மனித சக்தி ஆளும் என்பதும் காலத்தின் கட்டாயம்!!

மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன், எனக்குத் தெரிந்து யாரும் வெளிநாட்டவர் இங்கு வேலை செய்யக் கூடாது என‌, அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப் படவில்லை. அவர்கள் செய்ய வந்த பணி முடிந்து, தாயகம் திரும்பி இருக்கலாம். அல்லது, அவர்களாகவே திரும்பி இருக்கக் கூடும்.

2/14/2009

நன்றியுள்ள நாய்கள் பேசக் கூடாதா, என்ன?!

காதல் ஒரு கேடா?

காதலர் தினம் நடந்தேறி வரும் வேளையில், காதல் கேடானாதா எனும் கேள்வி சில, பலருக்கு ஏற்படலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதற்கான விடை சரியானதாக இருக்க வேண்டும் என்பது எம் அவா.

கண்ணாளன் என்று விளிக்கிற பாடல்களைக் கேட்கிறோம். கண்ணாளன் என்றால் காதலன் அல்லது கணவன் என்று பொருள் கொள்ளலாம். அது போலவே, பெண்பாலில் சொல்லப்படுவது கண்ணாட்டி. அப்படியாக வரும் ஒரு பாடல்,


பட்டணம் தான் போகலாமடி பொம்பளே,
பணம் காசு தேடலாமடி!
நல்ல கட்டாணி முத்தே, என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே!!


இதே பொருள் கொண்டு, கிராம‌ப் புற‌ங்க‌ளில் சொல்லும் வ‌ழ‌க்கு, "க‌ண்ணும் க‌ருத்துமா இருந்து பழகிக்க! க‌ண‌க்கு வ‌ழ‌க்கைப் பாத்து ந‌ட‌ந்துக்க‌!!" இவையெல்லாம் கிராம‌ங்க‌ளில் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ள் சொன்னாலும் கூட‌, அவ‌ர்க‌ள் சொல்ல‌ வ‌ருவ‌தைப் புரிந்து கொள்ளும்ப‌டியான‌ வாழ்க்கை முறை மாறிவிட்ட‌து என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம்.

க‌ண்ணைப் போல, தனக்கு முத‌ன்மையாய் அன்புட‌ன் இருப்ப‌வ‌ர், அந்த‌ க‌ண்ணாட்டி அல்ல‌து க‌ண்ணாள‌ன். அதே பொருளில், முத‌ன்மையான‌ அன்பைக் கொண்டும், ந‌ல்ல‌ உள்ள‌த்தோடும் இருக்க‌ப் ப‌ழ‌கிக் கொள்ள‌ வேண்டு மென்ப‌துதான் க‌ண்ணும் க‌ருத்துமா இருக்க‌ப் ப‌ழ‌கிக்க‌. இதையே, க‌ண்க‌ள் கொண்டு பார்த்துக் க‌வ‌ன‌மா இருத்த‌ல் என்கிற‌ பொருளில் புழ‌ங்கி வ‌ருகிறோம். என‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌து, அன்போடும் ந‌ல்லுள்ள‌த்தோடும் இருப்ப‌து க‌ண்ணும் க‌ருத்துமாயிருப்ப‌து என்ப‌து.

க‌ண‌க்கு வ‌ழ‌க்குப் பாத்து ந‌ட‌ந்துக்க! ஆன்றோர் சான்றோர் பெரியவர்கள் கணித்துச் சொல்வது கணக்கு. புத்திசாலியாய் தனக்குத் தானே கணித்துக் கொள்வதும், ஒரு கணக்கு. வழக்கு என்றால், ஊரில், அனுபவத்தின் பேரில், காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு மரபு. இதன் அடிப்படையில் சொல்வதுதான், கணக்கு வழக்குப் பாத்து நடந்துக்க.

ஆக‌, கண், அதாவது காதல் எனும் ப‌ண்பும் உயிர்மைக்கு அவ‌சிய‌மாகிற‌து. க‌ண், அதாவ‌து விழி எனும் உறுப்பும் உயிர்மைக்கு அத்தியாவ‌சியமாகிற‌து. கண்(காதல்) கொண்டோர் தின‌ம், காத‌ல‌ர் தின‌ம்; அத்தகைய‌ நாளில் நீங்க‌ள் க‌ண் தான‌ம் செய்யுங்க‌ள். அது ப‌ண்பாயினும் ச‌ரி, உறுப்பாயினும் ச‌ரி!!

தான‌த்திற்கு ஒப்பான‌து, பேணி காப்ப‌துவும். வ‌ருடாந்திர‌ க‌ண் ப‌ரிசோத‌னை செய்வ‌து வாழ்விற்கு மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று! ந‌ம்மில் நிறைய‌ப் பேர், வ‌ருட‌த்திற்கு ஒரு முறைய‌ல்ல‌, வாழ்விலேயே ஒரு முறை கூட‌ப் ப‌ரிசோத‌னை செய்து இருக்காமால் இருப்போம். விழித்துக் கொள்வீர்! கண்ணுறுவது (காதல்) கேடல்ல! அதைப் பேணி காக்காமல் விடுவதுதான் பெருங்கேடாக அமையக் கூடும்!!


க‌ண்ணும் க‌ருத்துமா இருந்து பழகிக்க!
க‌ண‌க்கு வ‌ழ‌க்கைப் பாத்து ந‌ட‌ந்துக்க‌!!



அழுக்குவண்ணாத்தி, ஒன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு?!

2/12/2009

அமெரிக்கா: நம்மவர்கள் கைது(H1B) மற்றும் சூடான செய்திகள்!

ஏற்கனவே எச்சரிக்கைப் பதிவுகள் போட்டோம். அதையொட்டி வலைஞர் தளபதி அவிங்க எள்ளல் பதிவு போட்டு, அந்த எச்சரிக்கையோட தாக்கத்தை அந்தலை சந்தலை ஆக்கிட்டாரு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நம்மாளுக ஒரு பதினோரு பேரை, ஏய்ப்புக் குற்றத்துக்காக‌ குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இருக்காங்க. ஆகவே, வேலைக்கான உள்நுழைவு(H1B)க்கு விண்ணப்பிக்கிறவங்க பாத்து சூதானமா இருந்துக்குங்க.
அது பற்றின செய்தி!

U.S. businesses use the H-1B program to employ foreign workers in specialty occupations that require theoretical or technical expertise in specialized fields, such as scientists, engineers, or computer programmers. As part of the H-1B program, the Department of Homeland Security (DHS) and the Department of Labor (DOL) require U.S. employers to meet specific labor conditions to ensure that American workers are not adversely impacted, while the DOL's Wage and Hour Division safeguards the treatment and compensation of H-1B workers. Congress sets a numerical cap for the admission of skilled workers into the U.S. The current H-1B cap is set at 65,000 visas per fiscal year. H-1B aliens can work in the United States for three years, with an option for an additional three years (for a maximum of six years).


Those arrested Wednesday by ICE agents include:

Shiva Neeli, arrested in Boston, Mass.;
Ramakrishna Maguluri, arrested in Atlanta, Ga.;
Villiappan Subbaiah, arrested in Dallas, Texas;
Suresh Pola, arrested in Pennsylvania;
Vishnu Reddy, arrested in Los Angeles,
Chockalingam Palaniappan, arrested in San Jose, Calif.;
Vijay Myneni, arrested in San Jose, Calif.;
Venkata Guduru, arrested in New Jersey;
Praveen Andapally, arrested in New Jersey;

Amit Justa, arrested in New Jersey;
Karambir Yadav, arrested in Louisville, Ky.;


அடுத்து தீவிரவாதத்தை விசாரிக்கிற புலனாய்வு, இரகசிய துப்பறியும் அதிகாரி(FBI)களைப் பெருமளவுல, வரி ஏய்ப்பு, நிதி மோசடி, வீட்டுக் கடன் மோசடிகளை விசாரிக்கிறதுக்காக நிர்வாக மாற்றம் செய்திருக்காங்களாம். இது வரைக்கும், தோண்டித் துருவுனதில நிறையப் பேர் கையும் களவுமா மாட்டிகிட்டாங்களாம். நம்மாளுக எல்லாம், கொஞ்சம் சுதாரிச்சுகுங்க. முக்கியமா, ஒப்பந்த வேலை, சொந்த வேலை செய்யுறவிங்க, நிறுவ‌ன‌ங்க‌ ந‌ட‌த்துற‌விங்க‌.

உத்தேச $790B பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சித் தூண்டு(Economic Stimulus) நிதியின் உள்ளடக்கம்:

போக்குவ‌ர‌த்துக்கான‌ நிதி: $49.6 பில்லிய‌ன், பாதைக‌ள் சீர‌மைக்க‌, பால‌ங்க‌ள் க‌ட்ட‌, இர‌யில் போக்குவ‌ர‌த்து மேம்பாடு.

வ‌ரிக் குறைப்பு: $282 பில்லிய‌ன் வ‌ரிக் குறைப்பு, தொழில் வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளில்.

வேலை செய்வோர்க்கான‌ வ‌ரிச் ச‌லுகை: த‌னிந‌ப‌ருக்கு $400, குடும்ப‌த்திற்கு $800ம் 2009 ம‌ற்றும் 2010 வ‌ருட‌த்தில் த‌ர‌ப்ப‌டும்.

வரிக் க‌ட்ட‌ண‌ மாற்று: வ‌ருமான‌ வ‌ரிக் க‌ட்ட‌ண‌த்தில் ம‌று சீர‌மைப்பு செய்வ‌தில் ச‌லுகை, $70 பில்லிய‌ன், 2 கோடியே 40 இல‌ட்ச‌ம் பேருக்கான‌ ச‌லுகை

சொகுசூர்தி(Car)க்கான‌ விற்ப‌னைவ‌ரிச் ச‌லுகை: புதிய‌ ஊர்தி வாங்குப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌னை வ‌ரிச் ச‌லுகை.

ச‌மூக‌ நிதி உத‌வி: சமூக நிதி உதவி வாங்குபவருக்கு, த‌லை ஒன்றுக்கு வருடத்திற்கு கூடுதல் தொகை $250.

க‌ல்வி உத‌வி: $54 பில்லிய‌ன், ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் ஆய்வுக்காக‌

புது வீடு வாங்குவோர்க்கு: $8000 வ‌ரிச் ச‌லுகை. முத‌லில் $15000 என்ப‌து, இப்போது $8000 ஆக‌க் குறைக்க‌ப்ப‌ட்டு உள்ள‌து!

2/11/2009

ஈழ மன்னன் ஏலேல‌!

கி. மு. காலத்தில் இலங்கையை ஆண்ட 'ஏலேல' என்ற தமிழ் மன்னனைப்பற்றி, பலவிதமான கதைகள் சொல்வார்கள்('ஏலேலோ' என்று இப்போதும் மீனவர்கள் பாடும் கீதம், இந்த அரசனைப்பற்றிய வாழ்த்துதானாம்). சுவாரசியமான இந்தக் கதைகளில் ஒன்று - அவன் மழையைத் தடுத்து நிறுத்தியதாகச் சொல்கிறது.

நாமெல்லாம் மழைக்கு ஏங்கிக்கொண்டிருக்கையில், இந்த அரசன் ஏன் மழையைத் தடுக்கவேண்டும்? அதற்குக் காரணம் ஒரு கிழவி. அந்தக் கிழவி, தன் வீட்டுக்கு வெளியே வெய்யிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாளாம். அப்போது திடீரென்று மழை பெய்து, காய வைத்த அரிசியை, மீண்டும் நனைத்துவிட்டது.

'இந்த மாதத்தில் மழை பெய்வது வழக்கமில்லையே', என்று புலம்பிய அந்தக் கிழவி, நேராக ஏலேல மன்னனின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறாள், 'ராசா, உன் ஆட்சியில இப்படிக் கண்ட நேரத்திலே மழை பெய்யுதே, இது என்ன நியாயம்? நனைந்துபோன என் அரிசிக்கு என்ன பதில்?', என்று முறையிட்டிருக்கிறாள்.

இதைக் கேட்ட அரசருக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது. 'இயற்கையைக் கட்டுப்படுத்துவது அரசரின் அன்றாடப் பணிகளில் இல்லைதான். என்றாலும், என் பிரஜைகளில் ஒருவர் இப்படி வருத்தப்படுகிறாரே, அதற்கு நான் ஏதேனும் செய்தாகவேண்டுமே!', இப்படிப் பலவிதமாய் யோசித்துக் குழம்பிய அரசன், நிச்சயமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல், தன்னுடைய குலதெய்வத்தை நினைத்து தவத்தில் அமர்ந்துவிட்டான்.

சிறிது காலம் கழிந்தது. அரசனின் உறுதியை மெச்சிய தெய்வம், அவனுக்குமுன்னே தோன்றி, 'என்னப்பா வரம் வேண்டும்?', என்று கேட்க, அரசன் விசயத்தைச் சொன்னான். அந்த தெய்வம், மழைக்கான தெய்வத்தை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் நிறைவாக, 'இனிமேல், உரிய காலத்தில்தான் மழை பெய்யவேண்டும்', என்று முடிவுசெய்யப்பட்டது.


ஆகவே, ஏலேல மன்னன் ஆட்சி செய்த காலம்வரை இலங்கையில் கண்ட நேரத்தில் மழை பெய்யாதாம். வாரம் ஒரு முறை, அதுவும் இரவில் மட்டும் பெய்யுமாம். தண்ணீருக்குத் தண்ணீர், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லை. இதைப் போற்றும் விதமாக மீனவர்கள் 'ஏலேல' என்று சொல்லி மன்னனை வாழ்த்திய வண்ணம், படகு செலுத்துவது வாடிக்கை ஆனது.

2/09/2009

பள்ளயம் 02/09/2009

மகா சிவராத்திரி சமீபத்துல, எங்க ஊர், சலவநாயக்கன் பட்டிப் புதூர் சுப்ரமணி அண்ணன், ஆறுக்குட்டி அண்ணனவிக தோட்டத்துக் களத்து மேட்டுல பள்ளயம் போட்டுப் படுகளம் நடக்குமுங்க. தோட்டங் காட்டுல விளைஞ்ச மொச்சை, கொண்டக்கடலை, அவரை, பயறு, கொள்ளுன்னு பலதும் போட்டு வேக வெச்சி, அதுகளை தோட்டங் காட்டைச் சுத்தியுமு இருக்குற நாட்றாயன், பொடாரப்பன், கருப்பராயங் கோயில்ல படப்பு வெச்சி, அவிசாயங் குடுத்துக் கடைசில களத்து மேட்டுல படுகளம் நடக்கும். சாயங்காலம் ஆரம்பிச்சிதுன்னா, வெடியக் காலம் நாலு மணி, அஞ்சு மணி வரைக்கும் இந்த நிகழ்ச்சி நடக்குமுங்க. ஊரே கூடி வேடிக்கை பாக்கும். அண்ணனவிக அந்தியூர்க்கார ஊட்டுப் பசங்கன்னு சொல்லி, எங்க அண்ணந் தம்பி மூனு பேர்த்தையும் நெம்ப நல்லாப் பாத்துகிடுவாங்க. பல தானியங்களையும் கலக்கி வேக வெச்சிப் படப்பு போடுறாங்க பாருங்க, அதைச் சொல்லுறதுங்க பள்ளயம்முன்னு. அந்த ஞாவகத்துல தானுங்க, அவியலுக்கும் கிச்சடிக்குமு தொணையா நம்ம பள்ளயம். இஃகிஃகி!

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு வாரம் பத்து நாளா, இழு பறியா இருந்த, பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி ($838 billion economic stimulus bill)க்கான மசோதா சித்த நேரத்துக்கு முன்னாடிதேன், ஒரே ஒரு ஓட்டு எச்சா வாங்கி, அமெரிக்க மேல்சபையில செயிச்சு இப்ப அதிபரோட கைச்சாத்துக்கு முன்னேறி இருக்குங்க. நெம்ப நல்ல விசயமுங்க இது. இதனால, வேலை வாய்ப்பு பெருகும், வரிகெல்லாம் குறையும், பங்குச் சந்தையில போட்ட காசு கொஞ்சம் தெப்புத் தேறும்ன்னு எல்லாரும் நெம்ப எதிர்பார்க்குறாங்க.

++++++++++++++++++++++++++++++++++++++++++


கபலை ஓட்டுறதுன்னும், சால் ஓட்டுறதுன்னுஞ் சொல்லுறது இதானுங்க. சின்ன வயசுல, எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ஓட்டுறதை அப்பிடி நின்னு வேடிக்கை பாப்பனுங்க. காளைக, கிணத்து மேட்டுல, கீழ இருந்து மேல வரும்போது மெதுவா வரும்ங்க, சால்ல தண்ணிய மோந்த பொறகு, ய்ஃகெய்ன்னு சொன்னதுதான் தாமுசம், காளைக ரெண்டும் சல்லுன்னு கீழ போகும்ங்க. அப்ப, ஓட்டுறவிங்க, வடத்து(கயிறு) மேல ச்சங்குன்னு எட்டி லாவகமா உக்காருவாங்க பாருங்க, அது அசத்தலா இருக்கும். அவ்ளோ பெரிய சாலு கெணத்துக்குள்ள இருந்து மேல வார்றதப் பாக்க, அப்பிடியொரு வேடிக்கையா இருக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

(அன்பால‌)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++

அப்புறம், இந்த நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்குன்னெல்லாம் ஊர்ல சொல்லிப் பேசுறதக் கேட்டு இருப்பீங்க. அதுகளக் கொஞ்சம் பாக்குலாமுங்க இன்னைக்கி. அவன் பலே ஆளு, நாலுந்த் தெரிஞ்சவன், முக்கியமா நீக்குப்போக்கு தெரிஞ்சவன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதாவது, மத்தவங்ககிட்ட இருக்குற குத்தம்(குற்றம்) கொறைகளைக் கண்டுக்கிடாம, சகசமாப் பழகுறவன்ங்கிறது அர்த்தமுங்க. கெட்டவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் நீக்கும் போக்கு கொண்டவன்ங்றதுங்க.

சரி, அப்ப போக்குநீக்குன்னா? எதோ ஒன்னு வெளியில போறமாதர இருந்தா அது போக்குநீக்கு(make a drain)ங்க. மேல கபலை ஓட்டுறதுல சால் இருக்கு பாருங்க, அதைச் செய்யும் போது, தண்ணி சிந்தாம ஓட்டை ஒடசல் இல்லாமச் செய்ன்னு சொல்லும் போது, வழக்கத்துல சொல்லுறது, "டேய்! சால்ல எந்த விதமான போக்குநீக்கில்லாம இருக்கோனும். இல்லாட்டி, உங்கப்பங்கிட்டச் சொல்ல வேண்டி வரும்!!"ன்னு.

சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும். எதானாச்சி சும்மா, ஒப்புக்குச் சப்பான(excuse) காரணத்தைச் சொல்றது. சாக்குங்றதே ஒரு போலியான செய்கை! அதுலவேற, மகாப் போலியான சாக்குன்னு சொல்லுறதுதாங்க நொண்டிச் சாக்கு. இது எப்பிடி இருக்குன்னு பாருங்க?! இஃகிஃகி!

நொண்டிக் குதிரைக்கு, சறுக்கினது சாக்கு!

2/08/2009

திருப்பூர் அவியல், சிங்கப்பூர் கிச்சடிக்குத் துணையாக, அமெரிக்கப்பூர் பள்ளையம்!

வணக்கம்! திருப்பூர்ல இருந்து அவியல், சிங்கப்பூர்ல இருந்து கிச்சடின்னு அட்டகாசமான, அருமையான பதிவுகள் வந்திட்டு இருக்கு. அவிங்க அளவுக்கு நம்மால தர முடியாட்டாலும், முடிஞ்ச அளவுக்கு அவிங்களுக்குத் துணையா நாமளும் அமெரிக்கப்பூர் பள்ளையம் எழுதினா என்னன்னு தோணிச்சி. ஏன்டா, கழகங்கள்லதான் இணை, துணைன்னு போட்டு நொங்கு எடுக்குறாங்க, உனக்கு இங்க‌ பதிவு போடுறதுலயுமான்னு நீங்க கேக்குறது புரியுது அண்ணாச்சி! இஃகிஃகி!!

நாங்கெல்லாம் திருமூத்திமலைத் தண்ணியில வளந்தவிக அண்ணாச்சி! அதான், இதுலயும் துணையா இருக்கலாமுன்னு, இஃகிஃகி!! இந்த நேரத்துல உடுமலைக்கு திருமூர்த்தி மலைத் தண்ணி கொண்டாந்த மகராசருக, வித்தியாசாகர் ஐயா, பெருந்தகை சாதிக்பாட்சா அவிங்களுக்கும், எங்க ஊர் மாதிரியான பட்டி தொட்டிகளுக்குத் திருமூத்திமலைத் தண்ணி கொண்டாந்த அண்ணன் ப. குழந்தைவேலு அவிகளையும் நன்றியோட நினைவு கூர்ந்துகிடுறேன். அரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!

பள்ளையம்


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்!

2/07/2009

அமெரிக்க வேலை:பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ வரைவு

வணக்கம்! கண்டதைச் சொல்லி, பீதியக் கிளப்பி விளம்பரம் தேடுறதுக்கு அல்லங்க இந்த பதிவு. ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான். ஆகவே, தப்பா நினைச்சிக்கிடாதீங்க. ரெண்டு சட்ட மற்றும் கூடுதல் சட்ட‌ முன் வரைவுகள், இப்ப ஒப்புதலுக்காகவும் அல்லது பாதி ஒப்புதலோடவும் இருக்குங்றது நம்ம எல்லார்த்துக்கும் தெரிஞ்ச விசயம்.

ஒன்னு பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ முன் வரைவு, அடுத்தது பொருளாதார வளர்ச்சி தூண்டுத‌ல்(National economic stimulus package) நிதிக்கானது. இதுக ரெண்டுலயுமே, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது குறிச்சி, நேரிடையாகவே அல்லது மறைமுகமாவோ சொல்லப்பட்டு இருக்குங்றாங்க அரசியல் பக்கிக. எனக்கு முழுத் தகவலும் இப்ப கிடைக்கலை. வலையிலயும் தேடிப் பாத்தேன், நான் வேலை பாக்குற‌ நிறுவன அலுவலரும் கைய விரிச்சிட்டாரு. கிடைச்ச உடனே தர்றேன்னு சொல்லி இருக்காரு. ஒப்புதல் வாங்கி, சட்டமான அம்சங்களைக் கீழ குடுத்து இருக்கேன்.

சரி, சுருக்கமா அதன் விளைவுகளைப் பாக்கலாம் இப்ப. ஏற்கனவே பாதிக்கப்பட்ட உடமைகளுக்கான சலுகை நிதி வாங்கின‌ நிறுவனங்கள்ல வேலை பாக்குற ஊழியர்கள், தன்னோட H1B நீட்டிப்புக்கு போகும் போது மறுக்கப் படலாம். ஏற்கனவே இந்த அம்சம் முன்வரைவுல இருந்து, அப்புறம் தூக்கிட்டாங்களாம். இப்ப, குடியரசுக் கட்சிக்காரங்க என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலை. இந்த நிலைமைல இருக்குறவிங்க, அவிங்க அலுவலக சட்டத்தரணிகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்குங்க. நானும், விபரம் தெரிய வர்றப்ப பதியுறேன்.

ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேரும் போது, அந்த நிறுவனத்தைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டு சேருங்க. ஒப்பந்த வேலைக்குப் போறதுன்னாக் கூட யோசிச்சி செய்யலாம். பாதிக்கப்பட்ட நிறுவனத்துல‌ ஏற்கனவே வேலை செய்யுறவிங்க, அடுத்த நல்ல வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்க.

நிரந்தரவாசிக்காக விண்ணப்பிச்சிருக்குறவிங்க, அதுக்கு முந்தைய நிலையான வேலைக்கான அங்கீகார நிலைக்கு(EAD) மாறலாமாங்றதையும் யோசிக்கலாம். ஏன்னா, சில பேர் அதற்கான வாய்ப்பு இருந்தும் H1Bலயே தொடர்வது உண்டு. காரணம், வருசா வருசம் நீட்டிப்புக்குப் போகவேண்டியது இல்லைன்னு.

மேற்படிப்புக்கு வர்றவிங்க, ஏற்கனவே படிச்சிட்டு இருக்குறவிங்க, அவிங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு என்ன ஆச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அது இனிமேல் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒன்னும் விபரமாத் தெரிய மாட்டேங்குது. எல்லாம், இனியும் ஒரு மாசம் ஆகணும். இவனுக நல்லாக் குழப்பி, பல கலந்துரையாடல் நடத்தி, தெளிவா சொல்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும்.

"The current amendment provisions were “ambiguous”. We expect more clarity to arise when it goes for reconciliation to the Congress!"

The amendment that passed isn’t as tough as the one Grassley proposed on Feb. 5, which would have prohibited firms from hiring H-1Bs altogether. The modified amendment instead makes TARP recipients jump through extra hoops before they can hire those foreign workers. Specifically, it subjects recipients of TARP funds to the same rules so-called H-1B dependent employers must follow. (An H-1B dependent employer is one whose workers brought in with that visa comprise 15% or more of the employer's total workforce.) These rules include:

1. The employer can’t displace any similarly employed U.S. worker with an H-1B hire within 90 days before or after applying for H-1B status or an extension of status.

2. The employer can’t place any H-1B worker at the worksite of another employer – meaning it can’t outsource a worker for a client – unless that employer first makes a “bona fide” inquiry as to whether the other employer has displaced or will displace a U.S. worker within 90 days before or after the placement of the H-1B worker.

3. The employer has to take good-faith steps to recruit U.S. workers for the job opening, at wages at least equal to those offered to the H-1B worker. The employer must offer the job to any U.S. worker who applies and is equally or better qualified than the H-1B worker.

The amendment falls short of preventing large banks from using H-1Bs brought into the U.S. by outsourcing firms like India-based Infosys (INFY), Wipro (WIT), and Tata, which are among the top recipients of petitions for the H-1B visa program. “Most of the H-1B use, and abuse, happens through relationships banks have with outsourcing firms,” says Hira. “I don’t think [the amendment] restricts them from working w those firms.” In other words, a bank could still legally force a laid-off American employee to train a replacement worker who is on an H-1B visa.

A related provision was passed in the U.S. House on Jan. 21 as an amendment to a bill that passed to reform TARP.

That measure, introduced by U.S. Representative Sue Myrick (R-N. Carolina), prohibits TARP recipients from outsourcing call-center work to foreign companies. The bill has not yet been taken up by the Senate. Source

அவசரத்துல கல்யாணம், அவகாசத்துல அழுகைன்னு பெரியவிங்க சொல்வாங்க. அதனால, புது வேலை, வேலை மாற்றம், அமெரிக்காவுக்கு படிக்க வர்றவிங்க, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்ல இருக்குறவங்க, அவசரப்படாம, தொலைநோக்குப் பார்வைல முடிவு எடுங்க! ஏய், என்ன அறிவுரையா? ஐயோ அப்பிடி எல்லாம் இல்லைங்க. என்னோட நண்பர் வெங்க்கிய நினைச்சேன்! எழுதினேன்!! இஃகிஃகி!!

பொறுப்பி(disclaimer): சட்டத்தரணிகளே குழம்பி இருக்குற இந்த நேரத்துல, நான் கொடுத்து இருக்குற தகவல்கள் சரியானதாகவும் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. இஃகிஃகி!

அமெரிக்காவில், "இன்னைக்கு வீட்லயே இரு!" வழக்கம் அமல்

வணக்கம்! பொருளாதார மந்தம், அதன் விளைவுகள், எதிர் நடவடிக்கைகள்ன்னு நாலும், உலகம் பூராவும் நடந்துட்டு இருக்கு. இங்க அமெரிக்காவுல, பொருளாதார வளர்ச்சி(stimulus package) முடுக்குநிதிக்கான திட்ட முன்வரைவு, அமெரிக்க நடுவண் அரசாங்கத்தோட கீழ்சபையில ஒப்புதல் வாங்கி, மேல் சபையோட ஒப்புதலுக்கு போயிருக்கு. சனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில ஒரு பொதுவான ஒப்புதல் கை கூடினதை ஒட்டி, நேத்தைக்கே வாக்கெடுப்பு முடிஞ்சு, உடனே அதிபரோட ஒப்புதலுக்கு போகும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா போகலை, திங்கள்கிழமை மேல்சபையில வாக்கெடுப்பு இருக்கும்ன்னு சொல்லுறாங்க அரசியல் பக்கிக!

இந்த நிதி ஒதுக்கீடு ($780 Billion) அமலுக்கு வந்தா, வேலை வாய்ப்பு பெருகும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. நிதி ஆதாரம் கூடினா, சிறு தொழில்கள் பெருகலாம். பொருளாதாரம் ஏற்றப் பாதைக்கு திரும்பும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, இந்த நிதி ஒதுக்கீடுனால ஒன்னும் பலன் இருக்காதுன்னும் சிலர் சொல்லுறாங்க. அது குறிச்ச வேடிக்கையான, ஒரு எள்ளல் மின்னஞ்சல் கூட உலகம் பூராவும் உலாவிகினு இருக்கு. அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.

எனக்கு எங்க அமுச்சியவிங்க நினைவு வந்தது நேத்து. ஒன்னுமில்லைங்க, என்னோட அருமை நண்பர், திருச்சிக்காரப் பயல் Rockfort மகேந்திரன் கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு வேலை பாக்குறாரு. வழக்கம் போல அலைபேசில அழைச்சாக்க, எப்பவும் அலைபேசில கொறஞ்ச குரல்ல மருகுற ஆளோட சத்தம் வெகு தூக்கலா இருந்துச்சி. என்னடா இது ஆச்சரியமா இருக்கேன்னு கேட்டப்பதாங்க, எனக்கு எங்க அமுச்சியவிங்க ஞாவகம் வந்துச்சி.

சுருக்குப் பையில பணம் கொறச்சலா இருந்துச்சின்னு வையுங்க, திடீல்ன்னு எங்க தோட்டத்துல வேலை செய்யுற சுப்பனையும், வள்ளியையும் கூப்ட்டு இன்னைக்கி வீட்லயே இருந்துக்குங்கன்னு சொல்லிப் போடும் எங்க அமுச்சி. அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம். அதனாலதான், வீட்ல இருந்த நம்ம திருச்சிக்காரப் பய மகேந்திரனோட குரல் வலுவா இருந்துச்சுங்க. இந்த வழக்கத்தோட பேருதாங்க இன்னைக்கு வீட்லயே இரு(Furlough) வழக்கம்.

நேத்தைக்கு இதனால மட்டும் 38 மில்லியன் வெள்ளி மிச்சம் ஆச்சுதாம் மாகாண அரசுக்கு.மேலும் இந்தத் திட்டம் 2010ம் ஆண்டு பாதி வரைக்கும் தொடரலாம்ன்னு ஒரு யூகம் இருக்காம். ஏன்னா, கலிஃபோர்னியா அரசுக்கு 40 பில்லியன் பற்றாக்குறை இருக்குதாமுங்க, அதான்!
சரி இப்ப, அந்த மின்னஞ்சலோட தமிழாக்கத்தைப் பாப்பமா?

கேள்வி: அது என்ன பொருளாதார வளர்ச்சி முடுக்கு நிதி?
பதில்: இந்த நிதியை, அரசு கந்தாயங் கட்டுபவர்களுக்குத் தரும்.

கேள்வி: அரசுக்கு எப்படி இந்த நிதி கிடைக்கும்?
பதில்: கந்தாயங் கட்டுபவர்களிடம் இருந்து.

கேள்வி: ஆக, அரசு நமக்கே நம் பணத்தைத் திருப்பித் தருகிறது?
பதில்: கொஞ்சமா.

கேள்வி: இந்த நிதியோட நோக்கம்?
பதில்: நீங்க இந்த பணத்துல போயி நாலும் வாங்குவீங்க, அது பொருளாதார வளர்ச்சிய முடுக்கும்.

கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதார வளர்ச்சியையல்ல‌ முடுக்கும்?
பதில்: டப்பிய மூடு?!

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

கொசுறு: நம்ம ஊர்ல எல்லாம், காசு குடுத்துப் பதவி வாங்கி, வாங்கின பதவியில காசு பாப்பாங்க. நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு இருக்கைய‌ சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.

2/05/2009

திமிசுக் கட்டையும், நாட்டுக் கட்டையும்!

வணக்கம்! இன்னைக்கு நம்ம வட்டாரத்தில அலசின விசயம் வந்துங்க‌, அமெரிக்காவுல ஒரு பெண் ஒரே பிரசவத்துல 8 குழந்தைகளப் பெத்துகிட்டதுதான். அந்தப் பொம்பளைக்கு ஏற்கனவே ஆறு குழந்தைக இருக்காம். இப்ப, ஆறு பையன், ரெண்டு பெண் குழந்தைக ஒரே பிரசவத்துல. ஆக மொத்தம், பதினாலு. தொலைக்காட்சி, புத்தகங்கள்ன்னு அவங்க அனுபவத்தை சொல்லுறதுக்கு பல கோடிக்கணக்கான வெள்ளிகள் மதிப்பு ஒப்பந்தம் காத்திட்டு இருக்காம். நாம என்னத்த சொல்ல?

சரி, தம்பி ஸ்ரீராம் நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டைகளப் பத்தி பதிவு போடச் சொல்லி இருக்காரு. இஃகிஃகி! அதை நாம பாப்பமா இப்ப‌?! பொதுவா நீங்க பல கட்டைகளக் கேள்விப்பட்டு இருப்பீங்க. நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டை, உருட்டுக் கட்டை, கர்லாக் கட்டைன்னெல்லாம். அது போக, கட்டை பிரம்மச்சாரின்னு சொல்லுறோம். பிரம்மச்சாரின்னா நமக்குத் தெரியும். இஃகிஃகி! அதென்ன கட்டை பிரம்மச்சாரி? அது ஒன்னும் இல்லங்க, கட்டையாட்டம் உறுதியான பிரம்மச்சாரி! கட்டைகள‌, ஒன்னொன்னா விலேவாரியாப் பாக்கலாம் வாங்க! என்ன செய்யுறது?! தெரிஞ்சோ தெரியாமலோ உள்ள வந்திட்டீங்க, பொறுமையா இருந்து படிச்சிட்டுப் போங்க! (என்னா வில்லத்தனம்?)


நாட்டுக் கட்டை: கட்டைன்னா உடல்ங்ற அர்த்தமும் இருக்கு. அதே சமயத்துல, மரக்கட்டையையும் கட்டைன்னே சொல்லுறோம். ஒசரங் குறைஞ்சதையும், சிறு பொருளையுங்கூட கட்டையா இருக்குன்னு சொல்லுறது உண்டு. உறுதியக் குறிக்கும் போதும் கட்டை உடம்புன்னு சொல்லுறோம். அப்புறம், நிலையில ஒன்னை நிறுத்துறதை நாட்டுதல்ன்னு சொல்லுறோம். உதாரணம், செங்கோல் நாட்டினான், நிலை நாட்டினான். அந்த வரிசையில, ஒன்னை நிலை நிறுத்துற கட்டைப் பொருளை நாட்டுக் கட்டைன்னு சொல்லுறது. நாட்டுப்புறத்துல இருந்து வர்ற கட்டைன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் மாட்டேன்னு சொல்ல முடியுமா என்ன?!

திமிசுக் கட்டை: திமிசுன்னாங்க மேலும் கீழுமாவோ, அல்லது பக்கவாட்டுலயோ அசையுற ஒன்னு. படகுல இருக்கும், கைத்தறியில இருக்கும், இப்படி எங்கயும் அது இருக்கும். அந்த மாதிரியான கட்டைகளச் சொல்லுறது, திமிசுக் கட்டைன்னு. அது செய்யுற வேலை, ந்ல்லா வலுவா இருக்குறதுக்காக, நல்லா குண்டா, கனமா இருக்குற கட்டைகளைக் கொண்டு செய்து இருப்பாங்க. வாசல்ல, கல் மண்ணை வெச்சி காரை போட்ட பின்னாடி, கல்லுக மேல தூக்காம இருக்குறதுக்கு இப்பிடியான கனமான திமிசுக் கட்டைய மேலயும் கீழயுமா அடிப்பாங்க, அதுல கல்லுகெல்லாம் அமுங்கிடும். இந்த திமுசுக் கட்டைய, கிராமங்கள்ல எத்து மசைன்னும் சொல்லுவாங்க.

மசைன்ன உடனே எனக்கு இனியோன்னும் ஞாவகத்துக்கு வருது. எழுதுறதுக்கு மசை தீந்து போச்சுன்னு சொல்லுவோம். ஆமுங்க, பேனாவுல ஊத்துற அந்த நீல அல்லது கருப்பு நிற மைய(ink)ச் சொல்லுறது மசைன்னு. இஃகிஃகி! மாட்டு வண்டியில, அச்சாணிக்கு ஊத்துறது(lubricant) கூட மசைதான். அதை கீலுன்னும் சொல்லுறது உண்டு. விளக்கெண்ணயில, மெதுவான துணி, கரித்துண்டையும் ஊற வெச்சி, இந்த மசை செய்வாங்க. அதேபோல, வேங்கை மரத்தையுஞ் சொல்லுறது திமிசுன்னு. ஆக, சந்தனக் கட்டை, தேக்குக் கட்டை, இது மாதிரியான மரங்களோட வரிசையில வரும் இந்த திமிசுக் கட்டையும். ஆனா, நல்லாக் குண்டா, வாட்ட சாட்டமா, எதையும் அமுக்குற திமிசுக் கட்டை மாதிரி வர்ற பொம்பளையப் பாத்து திமிசுக் கட்டைன்னோ, எத்து மசைன்னோ நீங்க சொன்னா, அதுக்கு நான் எப்பிடி பொறுப்பாக முடியும்?

கர்லாக் கட்டை: கர்மம்ன்னா உங்களுக்குத் தெரியும், வேலை, பணி அல்லது ஆக்கம் அப்பிடின்னு. அதனோட தொடர்புச் சொல்தாங்க, கர்லா, வேலைக்கானங்ற அர்த்தத்துல வரும். அப்ப, வேலைக்கான கட்டையச் சொல்லுறது கர்லாக் கட்டை. உடற்பயிற்சியில, பயிற்சிக்கான வேலைக்குப் பொழங்குற கட்டைய கர்லாக் கட்டைன்னு சொல்றோம், அது உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். கட்டையா, சிறு உருவத்துல இருக்குறவிங்களை, கர்லாக் கட்டை கணக்கா இருக்கான்னு நீங்க சொன்னா, அது நல்லாவா இருக்கு? நீங்களே நல்லா ரோசனை செஞ்சி பாருங்க, என்ன?!

சரி, இதுக்கு மேலயும் ஒக்காந்து பொட்டி தட்டிட்டு இருந்தா எனக்கு பதார்த்தஞ் செய்யுற உருட்டுக் கட்டையில விழுந்தாலும் விழலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! நான் வாறேன்!!

இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!

2/04/2009

கனவில் கவி காளமேகம் - 13

வணக்கமுங்க! நாம குப்பை கொட்டிட்டு இருக்குற சார்லட்டைத் தலைமையிடமா வெச்சிருக்குற அமெரிக்க (bank of america) வங்கியோட நிலைமை பத்திதாங்க இன்னைக்கு எங்கயும் பேச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அல்லா வங்கியும் கீழவரம் போய்ட்டிருந்தப்ப, இது மாத்திரம் ஆலமரமா காட்சியளிச்சது. சரி, இருக்குற ஒரு விழுதை விட்டு, அடுத்த மரத்தையும் அணைச்சிக்குவோம்ன்னு மெரில் லின்ச்ச(Merrill Lynch) வாங்கினதுதாங்க தப்பாப் போச்சு. அணைச்சதுல, அந்த மரம் இந்த மரத்தையும் கீழ இழுக்குது. ஆமுங்க, அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.

ஆக மொத்தத்துல, ஒரு காலத்துல அம்பது வெள்ளிக்கு மேல இருந்த‌ பங்கு தொகை ஏழு வெள்ளிக்கு வந்துச்சு. சரி இனி இறங்காதுன்னு பாத்தா, இன்னைக்கு நாலு வெள்ளி எழுபது சதம் ஆயிடிச்சி. என்ன கூத்துன்னு கேட்டிங்கன்னா, அரசாங்கத்துகிட்ட அதிகப்படியா கையேந்தின நிறுவனங்கள்ல, அஞ்சு இலட்சம் வெள்ளிக்கு மேல யாருக்கும் ஊதியம் இருக்கப்படாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆக, முக்கியப் புள்ளிகள் வெளில போயிடுவாங்கங்ற ஒரு இதுல, மறுபடியும் சரிவு. கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும்ங்றது இதுதானோ? அதை விடுங்க, நெம்ப நாளைக்கப்புறம் நேத்தைக்கு நம்ம கனவுல வந்த காளமேகம் அப்பிச்சி என்ன சொன்னாருன்னு பாக்கலாம் வாங்க!

"என்னடா பேராண்டி, பொங்கல் எல்லாம் நல்லாப் போச்சா? நல்லாதான இருக்கே?"

"வாங்க அப்பிச்சி, நெம்ப நாளா ஆளே காணோம்! எனக்கு உங்ககிட்ட கேக்க வேண்டியது ஒன்னு ரெண்டு இருக்குங் அப்பிச்சி!"

"கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!"

"அப்பிச்சி, இந்த செமக் கட்டைங்றாங்களே அது என்னுங்? செமையா இருக்குதுன்னு சொல்லுறாங்க, செமையா எழுதறன்னு சொல்லுறாங்க, செமையா அடிச்சிட்டன்னும் சொல்லுறாங்க. அந்த செமைன்னா என்ன?"

"ஆமாடா, அது தமிழ் வார்த்தைதேன்! உடகார்ங்றதை ஒக்காருன்னு சொல்றதில்லையா, அது மாதிரிதேன் இதுவும் மருவிப் போய்டிச்சி. தோட்டங் காட்ல இருக்குற பொழிய, கட்டைன்னும் சொல்லுறது உண்டு. கட்டை முறிஞ்சு, தண்ணி கடைப் போகுதுன்னெல்லாம் சொல்லக் கேட்டுருப்ப நீ! அப்ப மழைக் காலங்கள்ல போயி, இருக்குற கட்டைக எல்லாம் வலுவா இருக்கான்னு பாக்குறது உண்டு. அப்பச் சொல்லுறது, "இது செமக் கட்டை, ஒன்னும் முறியாதுன்னு!" அதாவது, இது செம்மையான கட்டை, ஒன்னும் சட்டை செய்யத் தேவையில்லன்னு. ஆக, நல்லா இருக்குற எதையும், செம்மையா, செமையா, செவ்வையான்னு சொல்லுறதும் வழக்கம் ஆயிடிச்சு. அதை ஒட்டி வாற சொலவடை ஒன்னு சொல்லுது, உக்கார்றவன் செமையா உக்காந்தா, செரைக்குறவனும் செமையாச் செரைப்பான்னு!"

"ஓ, அதானா இது? ஆமா, அந்தத் தொடையகராதின்னாங்?"

"நல்ல கேள்வியாத்தான் கேக்குற நீ இன்னைக்கி! தொடைன்னா, பாட்டோட ஒரு அங்கம். ஓசை குறிச்ச ஒன்னு. தமிழகராதிய வகைப்படுத்தும்போது சொல்லுறது, சதுரகராதின்னு. ஏன்னா, தமிழகராதிய நாலு வகையாப் பிரிக்கலாம். பெயரகராதி, the different signification of words. பொருளகராதி, containing words of the same signification. தொகையகராதி, containing collective nouns or generic words. தொடையகராதி, a rhyming dictionary. ஒத்த தொடை இருக்குற சொல்லுகளை வகைப்படுத்திச் சொல்லுறது தொடையராதின்னு."

"அப்பிடீங்களா அப்பிச்சி! இதுக்கு மேல நீங்க எதனாச்சியும் கேட்டு அக்கப்போர் செய்தாக்க, சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவேன். நான் இப்ப தூங்கணும்!"

"ச‌ரிடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

2/02/2009

அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!

வணக்கம் நண்பர்காள்! நேற்றைக்கு இங்க ஒரு முக்கியமான தினம். ஆமாங்க, வருடாந்திர பிடிபந்து விளையாட்டுத் தொடரோட உச்சப் போட்டி(super bowl). முதல் பாதி, அவ்வளவு விறுவிறுப்பா இல்லை. ரெண்டாவது பாதி, ஒரே விறுவிறுப்புதான் போங்க. முதல் பாதிக்கும் ரெண்டாவது பாதிக்கும் இடையில அமர்க்களமான சிங்கியடியும் நடந்துச்சு. மொத்தத்துல ஆட்டம் பூராவும் நல்லா இருந்துச்சுங்க! இஃகிஃகிஃகி!!

கடைசில நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமாவோட விருப்ப அணி(Pittsburgh), கடைசி நிமுசத்துல அதிகப்படியா நான்கு புள்ளிகளை எடுத்து வென்டுடுச்சுங்க. ஆட்டம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அவரோட குதூகலப் பேட்டியும் ஒலிபரப்பாச்சு. ஆட்டத்துல தோற்ற அணி, மெக்கெய்ன் மாகாணத்(Arizona)தோட அணிதானுங்க! இங்கயும் ஒபாமாவுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

நம்மெல்லாம், எப்பனாச்சும் சிக்கீட்டு சிங்கியடிக்குறோம்! ஆனாப் பாருங்க, ஒபாமாவோட நிர்வாகத்துல பதவிக்கு வர இருக்குறவிங்க, சிக்காமலே சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தரா, கட்ட வேண்டிய வரிய இவ்வளவு நாள், தவறுதலாக்(?) கட்டாம இருந்ததுக்கு, இப்ப வந்து சிங்கியடிச்சுட்டு இருக்காங்க. ஆமுங்க, பதவிக்கு வரும்போது வரி பாக்கி இருந்தா அவ்வளவு நல்லா இருக்காது. அதனால, எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட இதையும் அதையும் சொல்லி சமாளிக்கிற வேலை நடந்துட்டு இருக்கு.

ஆமா, சும்மா சிங்கியடி சிங்கியடின்னு சொல்லிப் பேசுறமே, அப்பிடீன்னா என்ன? (இஃகிஃகி, ஆரம்பிச்சுட்டான்டா இவனோட வேலையன்னு, நீங்க காய்ச்சுறது தெரியுதுங்களே?! லேசுபாசா எடுத்துக்குங்க, கோவப்படுறது உங்க உடம்புக்கு ஆகாது, ஆஆம்ம்மா!)

சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வெக்கம்! அந்த வெட்கமில்லாம, வெளிப்படையா நடந்துக்குற பொம்பளையச் சொல்லுறது சிங்கின்னு. சிங்கிகோடச் சேந்து போடற குதூகல ஆட்டத்தைச் சொல்லுறது சிங்காட்டம். (பாரு அவனை, தெள்ளவாரி! எவளோகூடப் போயி சிங்காட்டாம் ஆடிட்டு வாறான்!!) அப்புறம், ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பொம்பளைகளையும் சிங்கின்னு சொல்லுறது உண்டு. சிங்கன்னா, சிங்கியோட ஆண்பால்.

அதேபோல, கூச்சம் இல்லாம, ரெண்டு கைகளையும் மடக்கி, முழங்கை முட்டிகளை வெளிப்புறமாப் பக்கவாட்டுல் நீட்டிட்டு, விலா எலும்புல மேலயும் கீழயும் அடிச்சுக்குறதை சிங்கியடின்னு சொல்லுறதாமுங்க. ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுறது, ஒத்தைச் சிங்கியடி. ஆமாமா, நீங்கெல்லாம் நல்லா நல்லா, புறுக் புறுக்குன்னு ஒத்தச் சிங்கியடி அடிச்சிருப்பீங்க, அதுவும் நம்ம ராஜ.நடராஜன் அண்ணன் அவிங்க, நாள் முச்சூடும் அதே வேலைதேன். இஃகிஃகி!! போங்க, நீங்கெல்லாம் சிங்கியடிச்சுப் பாத்து நெம்ப நாளாயிருக்கும், போயிச் சிங்கியடிச்சுப் பாருங்க போங்க!!!

அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்!

2/01/2009

சும்மா இல்ல‌, நாராசம் சிங்கிநாதம்!

வணக்கம்! தம்பி Sriram அவிங்க அப்பப்ப நம்ம பக்கத்துக்கு வந்து போவாரு. இப்பக் கொஞ்ச நாளாக் காணோம்! என்ன விசயமின்னு தெரியலை? நம்ம பக்கத்துக்கு வந்து போற தாக்கத்துல, வழக்கொழிந்த சொற்கள்ன்னு சொல்லி ஒரு தொடரைத் துவங்கி வெச்சு, அது நல்லபடியாப் போய்கிட்டு இருக்கு. அவருக்கும், தொடர்ல கலந்துக்குறவிங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

அந்தத் தொடர்ல சந்தனமுல்லை நினைவுகூர்ந்த சொல்தாங்க, இந்த நாராசம். கேக்கவே நாராசமா இருக்குன்னு பொழங்குறது உண்டு. நாராசத்தை சலாகைன்னும் சொல்லுறது உண்டு. வைத்தியன் பாவிக்கிற சிறு கூரான இரும்புத் தண்டு (Needle-like tool of steel)தானுங்க இந்த சலாகை, நாராசம். அப்ப, இதைக் காதுல விட்டா எப்பிடி துன்பமும் வலியும் இருக்குமோ, அப்படியாக இந்தப் பேச்சு இருக்குங்றதை, நாராசமேத்துற மாதிரி இருக்குன்னு சொல்லுறது, அதாங்க நாராசமாயிருக்குன்னும் ஆயிடுச்சி. இஃகிஃகி!

அடுத்து, யாராவ‌து அக்க‌ப்போர் செய்திட்டு இருக்கும் போது, ஏம்ப்பா சிங்கிநாத‌ம் செய்துட்டு இருக்கேன்னு கேட்கிற‌து வ‌ழ‌க்க‌ம். சிணுங்க‌ல் நாத‌ம்ங்ற‌துதான் சிங்கிநாத‌ம்ன்னு ஆயிடுச்சுன்னும் சொல்லி இருந்தாங்க‌. சிங்கிநாத‌ம்ங்ற‌தே ஒரு சொல்தானுங்க‌. எதையும் மேம்போக்கா எடுத்துட்டு, லேசுபாசா, சிர‌த்தை இல்லாம‌ ந‌ட‌ந்துக்குற‌ ப‌ழ‌க்க‌ந்தானுங்க‌ இந்த‌ சிங்கிநாத‌ம்ங்ற‌து. இந்த‌ சொல், சிங்கியிலிருந்து வ‌ந்த‌ ஒரு தொடுப்புச் சொல். வ‌ர்ற‌ கால‌ங்க‌ள்ல‌, சிங்கி, சிங்க‌ன், சிங்கிய‌டிக்குற‌து ப‌த்தி பாக்க‌லாமுங்க‌.

ச்சும்மா, Sriram அவிங்க சும்மா இருந்தா ஆகாதுன்னு, சும்மா இருக்குற நேரத்துல நீங்களும் தொடர்ல கலந்துக்குங்கன்னு, சும்மா இல்லாம‌ ஒரு தொடர் எடுத்து விட்டதுல, சும்மா பல தகவல் கிடைக்குதில்ல?! அதான், இந்த தொடுப்பைச் சொடுக்கி, சும்மா பத்தின அருமையான பதிவையும் படிங்க, சும்மா படிங்க நல்லா இருக்கும். இஃகிஃகி!!