5/15/2023

தெரிவுகள்

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

வாழ்க்கை என்பது தெரிவு. எப்படி? அன்றாடமும் வாழ்வு என்பது ஒவ்வொன்றுக்குமென எண்ணற்ற தெரிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் எந்தத் தெரிவை மேற்கொள்கின்றீர்களோ அதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் அடுத்த கணம், அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்பன எல்லாமும் அமையும். இப்படியாக வாழ்வின் முடிவுப் புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது, உங்களின் பயணம் உங்கள் தெரிவுகளால் ஆனதான பயணமாக இருக்கும்.

இனிய நண்பர் அவர். உடனே தொடர்பு கொண்டார். சந்திக்கும் ஆவல். "என்ன திருப்பி...." என்பதற்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டே இடைமறித்தேன், "ஏங்க, இது நம்ப கோயமுத்தூருங்க. எத்தினிவாட்டி வேணுமின்னாலும் வரலாம் போகலாம்", கலாய்த்தேன். 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.

புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொருமுறை தாயகம் வரும் போதும் இக்குறிப்பிட்ட வினாவை எதிர்கொண்டு பழகிப் போய் விட்டது. ஆம், அவர் கேட்க வந்தது, "இப்போதுதானே வந்து போனாய், மீண்டும் இவ்வளவு சீக்கிரமே வந்திருக்கின்றாயே? எல்லாம் சுபம்தானே?" 

இவ்வினாவின் தோற்றுவாய் என்பது இருவிதமான அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது மேற்கூறிய காரணம். இரண்டாவது, வெளிநாடு என்றாலே அடிக்கடி வந்து போக இயலாது. நான்கு, ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறைதான் என்பதான பொதுப்பழக்கமும் பொதுப்புத்தியும்.

இரண்டாவது அடிப்படை நிமித்தம்தான் நாம் "தெரிவுகள்(சாய்ஸஸ்)" என்பது பற்றிப் பேச வேண்டியதாகின்றது. ஆண்டுதோறும் வருவாயுடன் கூடிய விடுப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் உண்டு. தாயகம் வந்து செல்ல, சராசரியாக தனிநபருக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

பிறகு ஏன் அப்படியான பொதுப்பழக்கம் உண்டாகிற்று? விடுப்பு எடுப்பதால் பொறுப்பு உயர்வுகள், வணிக விரிவாக்கம், கல்வி மேம்பாடு, சேமிப்பு முதலானவை மந்தமாகும். ஆகவே ஆண்டுதோறும் வந்து செல்ல இயலாது. இயலாது என்பதன்று. ஏற்புடையதாக இருக்காது. ஆனால் இது அவர் அவருடைய தெரிவு என்பதுதான் அடிப்படை.

பயணங்களைக் கட்டுப்படுத்தி அதன் வழியாக வளர்ச்சிகளைக் கொண்டோரும் இருக்கின்றனர். அது அவர்களுடைய தெரிவு. இயன்றமட்டிலும் பயணங்களை மேற்கொண்டு, பெற்றோர், உற்றார் உறவினரோடு பொழுதுகளைப் பகிர்ந்தவரும் இருக்கலாம். அந்த அனுபவத் தேவை என்பது அவர்களின் தெரிவு.

இடைப்பட்ட இந்த 11 மாதங்களில் விடைபெற்றதில் நெருக்கமானோர் 10 பேருக்கும் மேல். கடந்தமுறை வந்திருந்த போது நாரகிரி எனும் ஊரில் 2 நாட்கள் தாங்கி இருந்தோம். ஆருயிர் நண்பன் இன்று விடைபெற்றவனாகிப் போனான். நண்பர் அலெக்ஸ் அவர்களைக் கண்டு உறவாடினோம். மரணப் படுக்கையிலும் எமக்காக அகல விரிந்த அந்தக் கண்கள், பார்வை இம்முறை எம‌க்கில்லை. ஒருவேளை நான் சென்றமுறை வராமல் இருந்திருந்தால்? எல்லாம் அவரவர் சாய்ஸ். உங்கள் வாழ்க்கை உங்கள் மனத்தில், உங்கள் மனத்தில் மட்டுமே!

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

‍பழமைபேசி, கோவை.

5/07/2023

சித்ரா பெளர்ணமி

தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை.

கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார்.

நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பர் அருகிலிருந்தவர்களை அழைத்து என் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கச் சொன்னார். அப்போதுதான் அறிய நேரிட்டது, அது நான் வாழ்ந்த ஊரல்ல. வேறொரு ஊர். ஆனால் அந்த ஊரையும் நான் நன்கறிவேன். அவருக்கு அருகில் இருந்தவர்களும் பரிச்சியமானவர்களே.

அருகில் இருந்த எல்லாருக்குமே மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. திடீரென அங்கே கோயிற்திடலில் இருந்த ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதையொத்த சிறுவனிடம் என்னைக் காண்பித்து, இது யார் தெரியுமாவெனக் கேட்டனர். “இது, பழமைபேசிதானே?” என்றார் அந்த இளம்பிள்ளை.

அடுத்த கூட்டத்துக்கு நேரமாகிவிடுமேயென எண்ணி அழைப்பை முடித்துக் கொண்டேன். ஆனால் என்னால் அடுத்த அழைப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. மனம் சமநிலையில் இருந்திருக்கவில்லை. கூட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைக்க வேண்டினேன்.

நான் பார்த்திராத ஒரு சிறுவன். என் பேச்சுகள், எழுத்துகள்வழி அறிமுகமாகி இருந்திருக்க வேண்டும். எவ்விதத்திலும் என் பேச்சும் எழுத்தும் நடவடிக்கைகளும் அப்படியானவர்களைப் பாதித்து விடக் கூடாதுதானே? யோசிக்கலானேன். அறிஞர் ஆல்பர் ஐன்ஸ்டினின் கூற்று நினைவுக்கு வந்தது. வெற்றி கொள்வதில் இல்லை வாழ்வு, மதிப்புக் கொள்வதில் இருக்கின்றது.  “Try not to become a man of success, but rather try to become a man of value” ― Albert Einstein


5/04/2023

தனிமையெனும் கொள்ளைநோய்

சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”.

மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general

நிகழ்ந்த இருவேறு பற்றியங்களைக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்சாப் குரூப். கிட்டத்தட்ட 110 பேர் வரையிலும் அதில் இருந்தனர். எல்லா வாட்சாப் குரூப்களைப் போலவே, இதிலேயும் ஃபார்வர்டுகளாகப் பகிர்வர். குட்மார்னிங் செய்திகள். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கான வாழ்த்துகள். பொது உரையாடலாக எது குறித்தும் பேச மாட்டார்கள். அப்படியே பேசுவது என்றாலும், பகிர்கின்ற பதிவுகளுக்கு, சூப்பர், அருமை போன்றன இடுவார்கள். ஒருகட்டத்தில், இரு குரூப்களாக ஆகிவிட்டது. முதலாவதில், இன்னமும் அதே போக்குத்தான். அடுத்ததில், நண்பர்களுக்குள் பேசிக்கொள்வது, கிண்டல் கேலி, பகிரும் செய்திகளைக் கேள்விக்குள்ளாக்குவதென உயிர்ப்புடன். இதேநிலைதான் சமூகத்திலும்.

உறவினர்களுக்கென ஒரு வாட்சாப் குரூப். நாற்பது, ஐம்பது பேர் இருக்கின்றனர். உரையாடல் என்பது எதுவும் இராது. வாழ்த்துச் செய்திகள் மட்டும் இடம் பெறும். இதேநிலைதாம் குடும்பங்களிலும். சாப்பிட்டாயா, சாப்பிட்டேன். கடைக்குப் போனாயா, போய்வந்தேன். பில் கட்டியாச்சா, கட்டியாச்சு. அவ்வளவுதான். சின்னஞ்சிறு கதைகள் பேசி, தூக்கிவிடக் கரம் நீட்டிக் களிப்புக் கொள்வதெல்லாம் பகற்கனாவாகி விட்டது.

வாழ்வென்பது ஒரு பயணம். பயணத்தில், காணும் காட்சிகளும் பேச்சுகளுமென ஐம்புலன்களினூடாகப் பெறுகின்ற அனைத்தும் நமக்கு வாழ்வின் பயனை, அனுபவத்தை ஈட்டித் தருகின்றன. இந்த ஐம்புலன்களின் பாவனையென்பது ஒன்றுக்கொன்று மிகாமலும் குறையாமலும் சீரோடு இருந்துவிட்டால் நலம். மேம்பட்டதாக இருக்கும். 

மருத்துவத்துறைத் தலைவர் சொல்கின்றார், “People now use social media as a replacement for in-person relationships, and this often meant lower-quality connections". இதில் இருவிதமான பின்னடைவுகளைக் காணமுடிகின்றது. முதலாவது, மனிதனோடு மனிதன் பேசுகின்றது(பலுக்கல்) இல்லாமற்போய் விடுகின்றது அல்லது குறைந்து போய் விடுகின்றது. அடுத்தது, சார்புத்தன்மை கொண்ட முன்பின் தெரிந்திராத அனாமதேயர்களுடனான நேரவிரயம் கோலோச்சுகின்றது. இப்படியாகக் கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் தனித்தனி ஆட்களாக இருக்க நேரிடுகின்றது. ஆறுதலும் ஊக்கமும் தேவையாக இருக்கின்ற நேரத்திலே ஈடு செய்ய ஆளில்லை.

நேரடியாகப் பாதிக்கப்படுவது ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். மருத்துவத்துறை அறிக்கை சொல்கின்றது, ”physical consequences of poor connection can be devastating, including a 29% increased risk of heart disease; a 32% increased risk of stroke; and a 50% increased risk of developing dementia for older adults”. எப்படி? தனிமையின் காரணம் ஊக்கமிராது. ஊக்கமில்லாவிடில் உடற்பயிற்சி உள்ளிட்ட உடலுக்கான நகர்வுகள் இராது. போதிய உணவுப்பழக்கம் இராது.

In response, the advisory outlines the framework for a new national strategy. It is based on six foundational pillars, which are:

1. Strengthening social infrastructure, which includes things like parks and libraries as well as public programs.

2. Enacting pro-connection public policies at every level of government, including things like accessible public transportation or paid family leave.

3. Mobilizing the health sector to address the medical needs that stem from loneliness.

4. Reforming digital environments to "critically evaluate our relationship with technology."

5. Deepening our knowledge through more robust research into the issue.

6. Cultivating a culture of connection.

முதல் ஐந்தும் அரசுக்கானவை, அமைப்புகளுக்கானவை. தனிமனிதனாக நாம் என்ன செய்ய வேண்டும்? நேரிலும் சரி, தொழில்நுட்பக் கருவிகளூடாகவும் சரி, மனிதன் சகமனிதனிடம் பேச வேண்டும். அலுவல் அல்லாத வாட்சாப் குரூப்களை, நண்பர்கள் உறவினர்களுக்கான வாட்சாப் குரூப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். எந்திரத்தனமாக அவற்றுள் கிடந்து தனிமையெனும் கொள்ளைநோய்க்கு நெய் வார்க்கக் கூடாது. சமூகவலைதளங்களின் பயன்பாட்டைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general