5/20/2012

பத்மினியோடு பண்ணையார்

அழகானதொரு கிராமம். அவ்வூரில் ஒரு பண்ணையார். மிகவும் நல்லவர், ஊருக்காக எண்ணற்ற நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். அத்தகைய நல்லவருக்கு, எப்படியாவது பத்மினியை அடைந்துவிட வேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அப்படி இப்படி எனப் பலவழிகளிலும் முயன்றவர், தன் ஆசைப்படியே பத்மினியைத் தனதாக்கிக் கொண்டார். நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து, ஊரே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த அவர்தம் மகள் சினம் கொண்டு, பத்மினியிடமிருந்து பண்ணையாரைப் பிரிக்க முயல்கிறார். ஆனால், அம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. ஆம், உள்ளூர் வாலிபர் முருகேசன் துணையோடு பத்மினி தன்னைப் பிரிந்து போவதில் இருந்து மீண்ட பண்ணையார், பத்மினியோடு ஊருக்குள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நகரத்தில் இருந்த பண்ணையாரது மகன் ஊருக்கு வருகிறார்.அவரும், பண்ணையாரை அவர்களது குடும்பச் சொத்தான செங்கற்சூளைக்கு அழைத்துச் சென்று அவர் மனத்தை மாற்ற முயல்கிறார். அவரும் மனம் மாறிவிட்டார். இறுதியில் பத்மினிக்கு என்ன ஆயிற்று? ஊர் மக்கள் பத்மினிக்கு உதவுகிறார்களா?? பத்மினியோடு குதூகலமாய் இருந்த பண்ணையார் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் பத்மினியோடு எப்படிக் குதூகலமாயும் கிளுகிளுப்பாயும் இருந்தாரென்பதை இக்காணொலியில் கண்டு களிப்படையுங்கள்.

5/15/2012

தலைப்பு

வயிறார உண்டு
உண்ட வட்டலிலே
கை கழுவி
இன்னும் நான்
எழக்கூட இல்லை
வாஞ்சையாய்
நீண்டது தலைப்பு
புடவைத் தலைப்பு!!

5/05/2012

அமெரிக்காவுல இது தீராத ’பஞ்சாயத்து’ங்க!!

தமிழ் மொழியில, ஒற்று விதிகள்னு கிட்டத்தட்ட அறுபத்து ஐந்துக்கும் மேலான விதிகள் இருக்குங்க. அந்த அறுபத்து ஐந்துக்கும் மேலானதையும் அறிந்து வைத்துக் கொண்டு, தனக்கே உரிய ஏரணத்தையும் மனதிற்கொண்டுதான் இந்த விவாதத்துல ஒருவர் பங்கு கொள்ள முடியும். அதிலயும் ஒரு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட ஒன்றைத் தவறு என உணர்வதற்குப் பெரும்பாலும் இவ்விதிகளை அறிந்திருக்கத் தேவையில்லை. ஒலிப்புகளும், பொருள் மயங்கா இடுகுறியைத் தருகிறதாவென ஆய்ந்து பார்க்கும் ஏரணம் மட்டுமெ தவறைச் சுட்டிக்காட்டப் போதுமானது.

அமெரிக்க பறவைகள் சரணாலயம்
இந்திய பொதுவுடமைக் கட்சி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்
தயிர் கடை


மேற்கண்ட தொகைச் சொற்களில் பார்த்தோமானால், முதல் சொல்லானது நிலைமொழி நின்று, வருமொழியோடு புணரவில்லை. ஏன்?

புணரக்கூடாது என்பதில்லை. புணரும் போது, வெளிப்படுகிற பொருள் மாறும்.

அமெரிக்கப் பறவைகள் புகலிடங்கள்.

ஆப்பிரிக்க யானை, அராபியக் குதிரை என்பதைப் போல, அமெரிக்காவுக்கே உரிய பறவைகளின் புகலிடங்கள் எனப் பொருள் வெளிப்படுகிறது.

அமெரிக்க பறவைகள் புகலிடங்கள்.

அமெரிக்காவில் இருக்கிற பறவை புகலிடங்கள்.. அப்புகலிடங்களில் எப்பற்வை வேண்டுமானாலும் புகலாம்.

இந்திய பொதுவுடமைக் கட்சி: இந்தியாவில் இருக்கிற பொதுவுடமைக் கட்சி. இந்தியப் பொதுவுடமைக் கட்சி: பொதுவுடமை நாடான இந்தியாவில் இருக்கிற கட்சி.

ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவது வட்டத்தில் இருக்கிற கட்டிடத் தொழிலாளர் சங்கம். 

ஏழாவது வட்டக் கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவதாக இருக்கும் வட்டக்கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் சங்கம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: மதுரையில் இருக்கும் காமராசர் பல்கலைக்கழகம்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்: தென்னாட்டு காந்தி போல, மதுரையில் இருக்கும் காமராசரான சோமராசர் நினைவாக இருக்கும் பல்கலைக்கழகம்.

தயிர் கடை என்றால், தயிரைக் கடை
தயிர்க் கடை என்றால் தயிர் விற்கும் கடை.

வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம்: வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்: வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழுக்கான சங்கம் அல்லது வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழ்ச்சங்கம். வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம் எனப் பொருள் கொள்ள ஏதில்லை.

ஒற்று இடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது, இடாமல் விடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது என்பதைக் கண்டோம்.

மரபுகள் போற்றப்பட வேண்டும். மறுப்பதற்கில்லை. சொல்லாக்கத்தின் அடிப்படை விதியான, ஒரு பொருளுக்கு ஒரு சொல் எனும் அடிப்படை அதனினும் இன்றியமையாதது.

ஒரு விதியை மட்டுமே அடிக்கோடிட்டு வாதிடுவது சரியாகா. மொத்த விதிகளையும் ஒலிப்புகளையும் ஒரு சேரக் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துனையையும் கருத்திற் கொண்ட பிறகும் பொருள் மயங்கினால், பொருள் மயங்கா வண்ணம் ஒற்றுகளை அமைத்துக் கொள்வதே தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும்.