skip to main |
skip to sidebar
நெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the world)
இமயமலைக்கு வடக்கே பரந்து விரிந்திருப்பதும் புவியின் உயர்மேட்டு நிலமானதுமான உலகின் கூரையென வழங்கப்படும் திபெத் பீடபூமியின் பனிமலைகளும் பனிப்பாறைகளும் சிந்து, பிரம்மபுத்திரா, மீகாங், மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளுக்குப் பிறப்பிடம். இதேபீடபூமியின் மறுபக்கத்தில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர்கள் உயரத்தில் சேங் சியாங் (நெடிய ஆறு, நெட்டாறு) ஆறும் இங்கிருந்துதான் உருக்கொண்டு, சீனாவின் யுன்னான் மாநிலத்திற்குள் நுழையும் போது, 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பல்வேறு அருவிகளின் வாயிலாக வீழ்ந்து ஆயிரம் அடிக்குக் கீழிறங்கி விடுகிறது. சீனாவின் 40% விழுக்காட்டு நிலத்திற்கும் வடிகாலாக இருப்பது இந்த நெட்டாறுதான். பல்வேறு துணையாறுகள் மேட்டுநிலங்கள், மலைப்பள்ளத்தாக்குகள் வழியாக வந்து நெட்டாற்றில் தம்மை இணைத்துக் கொள்கின்றன. படிப்படியாகக் கீழிறங்கி மலைகளின் கடைசிக் கட்டமாக இருக்கும் சாங்கிங் மலைப்பகுதிக்கு வந்து சேரும் வண்டல்மேட்டு வண்ணத்தை தன் உருவாக்கிக் கொள்ள, நெட்டாறு எனும் பெயரிலிருந்து, செம்மண்ணாறு (யாங்சி) எனத் தன் பெயரை மாற்றிக் கொள்கிறது ஆசியக்கண்டத்தின் மீகநீண்டதும் 6380 கிமீ நெடிய பயணத்தைக் கொண்டதுமான இந்த ஆறு. அடுத்தடுத்து நாஞ்சிங், நாந்தோங், கழிமுகநகரும் வணிகத் தலைநகருமான சாங்காய் முதலான பெருநகரங்களினூடே பாய்ந்து கிழக்குச்சீனக் கடலில் அமைதி கொள்கிறது இந்த நெட்டாறு.
சீனாவின் 40 கோடிமக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மையின் முதுகெலும்பாக, கடலினின்று உள்ளே 1000 கிலோமீட்டர் வந்து போகக் கூடிய போக்குவரத்துக் களமாக, சீனாவின் நான்காயிரமாண்டுகால வரலாறு, நாகரிகம், பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டக்கூடிய பல தொன்மையான அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த நெட்டாற்றினைச் ’சீனாவின் துயரம்’ என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஒலிவியா நிக்கோலசு. மலைகள் சூழ பள்ளத்தாக்குகளின் வழியே பாய்ந்து வரும் யாங்சி, சமவெளியை அடையும் போது அவ்வப்போது கரைகளை உடைத்துக் கொண்டு உழவுநிலம், ஊருக்குள்ளெனப் புகுந்து விடும். கரையோரங்களில் தடுப்புச்சுவர்களைக் கட்டிக் காப்பாற்றுவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. முறையே 1870, 1931, 1954, 1998, 2010 ஆகிய ஆண்டுகளின் போது இடம் பெற்ற வெள்ளப்பெருக்கில் பெருத்த சேதத்தை உண்டாக்கியது யாங்சி. கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேருக்கும் மேலாக யாங்சியின் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்திருக்கின்றனர். இலட்சோப இலட்சம் மக்கள் உடைமைகளை இழந்தனர். 1931ஆம் ஆண்டு நிகழ்ந்த யாங்சி வெள்ளப்பெருக்கு சீனாவின் பேரழிவு என வர்ணிக்கப்பட்டது. சீனாவின் புரட்சித்தலைவன் மாவோ, யாங்சியின் குறுக்கே அணைகட்டி, வெள்ளப்பெருக்கினைக் கட்டுக்குள் கொண்டுவருவேனெனச் சூளுரைத்தார். ஆனாலும் அவர் காலத்தில் இதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.
அணை கட்டினால் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுமெனவும், விளைவுகள் பின்னடைவையே கொடுக்குமென்றும் இயற்கை ஆர்வலர்களும் பொறியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் யாவரும் தண்டனைக்காட்பட்டனர். 1992ஆம் ஆண்டு நடந்த, சீனப் பாராளுமன்றத்தில் 2633 ஓட்டுகளில் 1767 ஓட்டுகள் அணை கட்டுவதற்கு ஆதரவாகப் பதிந்தன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14, 1994ஆம் நாள் அணைக்கட்டுப் பணிகள் துவங்கி கடந்த 2012ஆம் ஆண்டு நிறைவடைந்தன. மலைகளுக்கிடையே மூன்று இடுக்குப் பள்ளத்தாக்குகள், குயுடாங், வு சியா, சிலிங் ஆகியன அமைந்திருக்கும் இடத்தையொட்டி இந்த அணை கட்டப்பட்டிருப்பதால், இவ்வணைக்கு முவ்விடுக்கு அணை (three gorges dam) எனப் பெயரிடப்பட்டு, நாட்டின் தொழில்நுட்பத்தின் குறியீடாகப் பணத்தில் அச்சடிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைச்சுவரின் நீளம் 2.3கிலோமீட்டர், 607 அடிகள் உயரம் கொண்டு, 574 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய அளவில், உலகிலேயே பெரிய அணையாக இது விளங்குகிறது. பென்னிகுவிக் என்பாரால் தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் பெரியாறு அணையின் உயரம் 155 அடியாகவும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது 130அடியாகவும் இருந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் இந்த முவ்விடுக்கு அணை எவ்வளவு பெரியது என்பதை நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இவ்வணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சீனாவின் தேவையில் 10 விழுக்காட்டினை ஈடு செய்கிறது. மேலும், கிழக்குச் சீனக்கடலில் இருந்து சீனாவின் மையப் பகுதியை நோக்கி 1000 கிலோ மீட்டர்கள் வரை சரக்குக்கப்பல்கள் வந்து செல்ல இந்த அணை உதவிபுரிவதால், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணியாக இது அமைந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இத்திட்டத்திற்குச் செலவிடப்பட்ட 24 பில்லியன் டாலர்களை பத்தே ஆண்டுகளில் ஈடுகட்ட முடியுமென அறிவித்தது சீன அரசு. சீனாவின் அதிசயமாய் அறியப்பட்ட பெருஞ்சுவருக்கு இணையாக இந்த முவ்விடுக்கு அணையும் சிறப்பிடத்தைப் பெற்று, சீனாவின் அணைகட்டும் திறனும் வர்த்த ரீதியில் மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்யப்படுகிறது.
சிறப்புமிக்க சாதனையாகப் போற்றப்படும் இந்த அணைக்கட்டின் மறுபக்கத்தையும் ஆய்ந்து பார்க்க வேண்டியது மனிதகுலத்தின் தேவையெனக் கொந்தளிக்கின்றனர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும். ஆற்றினை மறித்து அணைகட்டியதில் நீரில் அமிழ்ந்து போனவையும் அப்புறப்படுத்தப்பட்டதுமாக 13 நகரங்கள், 140 பேரூர்கள், 1350 சிற்றூர்கள், மொத்தமாக இடம் பெயர்ந்தோர் 14 இலட்சம் பேர் என்கிறது அரசுத் தரப்பு. ஆனால் இதைவிட அதிகமாக இருக்குமென்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏராளமானோர்க்கு உரிய இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படாமல் பெருமளவில் ஊழல் நடந்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகரமயமாக்கல் திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டதால், அக்குற்றச்சாட்டினை மறுக்கிறோமென அறிவித்தன உள்ளூராட்சி நிர்வாகங்கள்.
அணை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பான அந்த பள்ளத்தாக்கு இடுக்குகளின் மலையுச்சியில், யாருமே அணுகமுடியாத பாறையிடுக்குகளில் மூன்று அல்லது நான்கு மனித உடல்கள் ஒரு சேர வைக்கப்பட்டிருக்கும் மரக்கலத்தாலான கல்லறைப் பெட்டிகள் சீனாவின் நான்காயிரமாண்டுப் பழமையான தொன்மைக்குச் சான்றாக விளங்கிக் கொண்டிருந்தன. இப்படியான சிறிதும் பெரிதுமான 12000 தொல்லியலாய்வு இடங்கள் முற்றாகக் கைவிடப்பட்டு நீருக்குள் அமிழ்ந்து போயின என்கிறார், யாங்சி ஆற்றில் 50 ஆண்டுகாலம் கப்பல் மாலுமியாக இருந்த டான் யுங். நான்காயிரம் ஆண்டு வரலாற்றுத் தடத்தோடு, தான் பிறந்து வாழ்ந்த தன் வீடும் இதோ இந்த இடத்தில்தான் இருந்ததென அணையிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருக்கும் ஆற்றுநீர்ப்பரப்பைக் காண்பிக்கிறார் அவர்.
பணிகள் எல்லாம் முடிந்தபின், 2003ஆம் ஆண்டு, ஜூன் ஆறாம் நாள், 580 மீட்டர்கள் நீளம் கொண்டதும் 140 மீட்டர்கள் உயரமானதுமான ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தற்காலிகச் சுவரை இடிப்பதற்கு, 2540 வெடிக்குச்சிகளும் 192 டன் எடையுள்ள வெடிமருந்தும் பாவித்து 12 விநாடிகளில் அச்சுவர் தகர்த்தெறியப்பட்டது. அப்படியென்றால், ஆற்றின் வழிப்பாதையிலிருந்து விலகி மறுபக்கமாக மலைப்பாறைகளை வெடித்துத் தகர்ப்பதற்கு எத்தனை மடங்கு வெடிமருந்து பாவிக்கப்பட்டது, பத்தாண்டு காலம் இடம் பெற்ற பணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்கத் தயாராவென கேட்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நூற்றுக்கணக்கான மாண்டு போனதாக அறியப்படுகிறது.
மலைகளுக்கிடையே பெருமளவு தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பதனால் தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிதும் பெரிதுமாக 3000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றதெனச் சொல்லி, அணை கட்டுவதற்கு முன், கட்டியதற்குப் பின் எனப் புள்ளிவிபரங்களைக் காண்பித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர் நிலப்பண்பு ஆய்வாளர்கள். 2008ஆம் ஆண்டு இடம் பெற்ற நிலநடுக்கம் மட்டுமே 87 ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டுவிட்டது. இவற்றுக்கும் அணைக்கும் தொடர்பில்லையென மறுக்கிறது அரசுத்தரப்பு.
பனிப்பாறையில் பிறந்து, வண்டல்மண்ப் பூமியில் வளர்ந்து வந்த யாங்சியை அணைக்கட்டு மறித்து, மேற்புறத்துத் தண்ணீரைப் பாவித்து மின்சக்தியை எடுத்த பின்னர் கீழ்ப்பகுதிக்கு அனுப்புவதால், ஆற்றோடு வரும் வண்டல் யாவும் அணையிலேயே தேங்கி, அணையின் கொள்ளளவு வெகுவேகமாகக் குறைந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனைச் சரி செய்வதற்காக, ஆற்றின் தலைப்பகுதியில் மேலும் பல அணைகளைக் கட்டத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. அவை கட்டப்பட்டாலும், நேரப் போகும் துயரத்திலிருந்து தப்பவே முடியாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆங்காங்கே வண்டல்மண் தடுக்கப்பட்டு விடுவதால், இந்த பேரணைக்குக் கீழே இருக்கிற ஆற்றின் கரைகள் கரைந்து போகும். மழைக்காலத்தில் வெள்ளச்சேதம் மேலும் வலுவடையுமெனச் சொல்லி, அண்மையில் நிகழ்ந்த மழைக்கால இடர்களைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். அது மட்டுமல்லாது, அமெரிக்காவின் நியூயார்க்கைப் போல, இந்தியாவின் மும்பையைப் போல, வணிகத்தலைநகராக விளங்கும் சாங்காய் நகரம் கழிமுகத்தின் கரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, வண்டல்க்குறைபாட்டால் கழிமுகக்கரைகள் வலுவீனம் கொண்டு, கடலுக்குள் நகரம் புதையுண்டு போகவோ, அல்லது கடல்மட்டம் உயரும் போது நகருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தோ வருங்காலத்தில் ஏற்பட்டு விடுமென அஞ்சுகின்றனர் இயற்கை அறிஞர்கள்.
இயற்கைச்சூழல் மாசுபடுதலுக்கு அணையும் ஒரு காரணமென்கின்றனர். சீனாவின் நாற்பது விழுக்காட்டு நிலப்பரப்பின் வடிகாலாக இருக்கும் இந்த ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. யாங்சியில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு 2001ஆம் ஆண்டு 21 பில்லியன் டன்களாகவும், 2003ஆம் ஆண்டு 33+ பில்லியன் டன்களாகவும் இருந்தன. அரசாங்கமும் ஆற்றினைத் தூய்மைப்படுத்த நாளொன்றுக்கு சில மில்லியன் டாலர்களைச் செய்து வருகிறது. கொட்டப்பட்ட கழிவுகளைத் தூயமைப்படுத்துவதற்கு மாறாக ஏன் கொட்டப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாதெனக் கேட்டுப் போராடுபவர்களும் உண்டு. அரசுத் தரப்பில் இடம் பெறும் ஊழல்தான் டன் கணக்கில் கழிவுகளை ஆற்றில் கொட்டும் நிறுவனங்களைக் காப்பாற்றுகிறதென்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
தொழில்நுட்பம், உற்பத்தி முதலானவற்றில் மேன்மை கொள்ளும் மனித இனம், இயற்கை பேணலில் பின்னடைவு கொள்வது எந்நேரத்திலும் இடருக்கும் நம்மை ஆட்படுத்தக் கூடும். நாம் இயற்கையைக் கைவிட்டு விட்டால், பொறுத்துப் பார்க்கும் இயற்கையும் நம்மைக் கைவிட்டு விடக்கூடும். தகவலறிந்து நாம் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்தலன்றி நம்மிடம் வேறெதுவுமில்லை.
பழமைபேசி.
https://news.nationalgeographic.com/news/2006/06/060609-gorges-dam_2.html
https://youtu.be/cCJ5bU9UbYs


மீகாங் (அம்மா நதி)
வாய்மொழிக் கதைகளூடாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தங்களுக்கும் தங்களின் அடுத்த தலைமுறைக்கும் விசுவாசமாய் இருப்பதுதான் பழங்குடியினரின் வாழ்க்கை முறையாக உலகம்யாவிலும் இருக்கிறது. முழுநிலாக் காய்ந்த இரவின் விடியலும் தெளிந்த வானம் காணக்கிடைத்த நாளொன்றிலுமாகக் காடுமலை கடந்து மலையுச்சிக்கு வந்து சேர்ந்தனராம் கீழைநாட்டைச் சேர்ந்த சிலர். வந்தவர்கள், அவர்கள் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறதென்றும், எப்படியாவது அதற்கு ஒரு வழிவகை செய்ய வேண்டுமென்றும் தங்களுடைய பெரியவர் ஒருவரிடம் வந்து இறைஞ்சிக் கொண்டார்களாம். உடனே அந்தப் பெரியவர், மலைமுகட்டின் மீது ஏறிநின்று வலக்கையை விரித்து கீழைநாடு நோக்கி பாட்டொன்று பாட, கையிலிருந்து நன்னீர் ஊற்றுக் கொப்புளிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொண்டு மலைகளுக்கிடையே புரண்டோடத் துவங்கியதாம். வந்திருந்த கீழைநாட்டவரும் மனமகிழ்ச்சியோடு அந்த ஆற்றுப்பெருக்கு செல்லும்வழிச் சென்று, அவர்தம் நாடடைந்ததாகச் சொல்லிவிட்டு, வெண்பனி படர்ந்து நிற்கும் அந்த உச்சியை நோக்கி வணங்கிக் கொள்கின்றனர் திபெத் மக்கள். இமயமலையின் ’கோசோங்முச்சா’ எனும் முகட்டில் இருக்கும் அந்த ஊற்றுப் பகுதி, ’லாசாகோங்மா ஊற்று’ என அழைக்கப்படுகின்றது.
பதினேழேயிரம் அடிகள், ஐந்தரைக் கிலோ மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் திபெத் பீடபூமியிலிருந்து மலைமுகடுகளின் வழிக்கீழிறங்குகையில், புவியீர்ப்புவிசையால் மலைகளை அரித்துச் சீறிக்கொண்டு கிளம்பி, நான்காயிரத்து முந்நூற்று ஐம்பது கிலோமீட்டர்கள் பயணித்து, திபெத், மியான்மார், லாவோசு, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் நாடுகள் வழியாக எண்ணற்ற கோலங்கொண்டு வளைந்து நெளிந்து உறுமிச்சீறீ இலட்சக்கணக்கான புதுப்புது உயிரினங்களுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் தெய்வமென விளங்கி வாழ்வாதாரமாய் தன்னை ஈந்து பாய்ந்து, வியட்நாமின் தென்கோடியில் ஒன்பது கடல்நாகங்க(nine dragons)ளெனப் பிரிந்து ஆற்றிடைத்திட்டு(delta)களுக்கிடையே சலனமிழந்து தென்சீனக்கடலில் அமைதி கொள்கிறது இந்த மீகாங் பேராறு.
மலைமுகட்டில் எழுச்சி கொள்ளும் போது, ‘சூ கூ’ என வாஞ்சையோடு அழைக்கின்றனர் திபெத்தின் அன்பான மக்கள். திபெத்தைக் கடந்து சீனாவின் தென்கிழக்கு மாநிலமான யுன்னான் எல்லைக்குள் புகுந்தவுடன், ’லேன்காங்’ என அழைக்கப்படுகிறாள். சீனமலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஃகெங்குடான், யாங்ட்சே, சல்வான் முதலான துணையாறுகளும் வந்து இவளோடு புணர்ந்து கொள்ள, பெரும்பாய்ச்சலுடன் தென்புறம் நோக்கி மலைகளை உடைத்துக் கொண்டு பீறிடுகிறாள். தென்னாடு நோக்கிவந்தவள், சீனா, மியான்மார், லாவோசு ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கிற இடத்தை அடைகிறாள். இயற்கை இவளைத் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு பச்சைப் பசேலென ஓங்கியுயர் மலைகளோடு எழில் கொள்கிறது. அங்கிருந்து இருமருங்கிலும் ஓங்கிவளர் காடுகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டே நூறுகிலோமீட்டர்கள் கடந்து தாய்லாந்து, மியான்மார், லாவோசு ஆகிய நாடுகளின் எல்லைக்கோடுகள் சங்கமிக்கிற இடத்துக்கு வந்து விடுகிறாள். அவ்வப்போது தாய்லாந்து, லாவோசு, மியான்மார் நாட்டுநீர்ப்பிடிப்புத் துணையாறுகள் வந்து யத்தனிக்க, மறுப்பேதுமின்றித் தன்னகத்தே சங்கமித்துக் கொள்கிறது அம்மா நதி. லாவோசு, தாய்லாந்து மக்களின் மொழியில் மீ என்றால் அம்மா. காங் என்றால் நதி. மீகாங்கின் மேற்புறக்கரை தாய்லாந்தின் எல்லையாகவும், கீழ்க்கரை லாவோசின் எல்லையாகவும் கிட்டத்தட்ட 800 கிமீட்டர்கள் பாய்ந்து, கம்போடியாவைச் சென்று சேர்கிறாள் அம்மா நதி(மீகாங்).
கம்போடியாவில் வாழும் கெமர் இனமக்களின் வாய்மொழிக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. அக்கதைகளிலும், நூற்றுக்கணக்கான கதைகளின் வேராக மீகாங் திகழ்கிறாள். தான் பிறந்த திபெத் பனிப்பாறையிலிருந்து தென்சீனக்கடலில் துயில் கொள்ளும் வரையிலும் இலட்சோப இலட்சம் புத்தர் சிலைகளுக்கும் கோயில்களுக்கும் மெருகூட்டி வரும் அம்மா நதியின் அரவணைப்பில் உருக்கொண்ட நகரம் புனோம் பென். பென் என்ற ஒரு பணக்காரப் பெண், இன்றைய புனோம் பென்னின் புறநகர்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். மீகாங் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, உள்ளீடற்ற மரமொன்று அவளுக்குச் சொந்தமான புல்வெளிக்கு மிதந்து வந்தது. அம்மரத்தில் நான்கு வெண்கல புத்தர் சிலைகள் இருந்தன. புத்தர் ஒரு புதிய வீட்டிற்குள் வரவேண்டும் என்று விரும்புவது போன்ற ஒரு அடையாளமாக அக்காட்சி அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் புத்தருக்காக அங்கு ஒரு கோவில் கட்டினாள். இப்போதும் தலைநகர் புனோம் பென்னில் அந்தக் கோயிலும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பென் உருவாக்கிய அக்கோயில் பெரும் புகழுடன் வளர்ச்சியடைந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். நூறு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கோர் படை, சியாம் நகரின் மீது படையெடுத்த போது, கம்போடியாவின் தலைநகரம் புனோம் பென்னுக்கு மாற்றப்பட்டது. கெமர் மொழியில் புனோம் என்ற சொல்லின் பொருள் ’குன்று’ என்பதாகும். எனவே புனோம் பென் என்றால், பென் என்ற பெண்ணுக்குச் சொந்தமான மலை என்று பொருளாகும். அப்பெண் கட்டியதாக நம்பப்படும் அக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோயில் ஆகும். அக்கோயிலை புனோம் வாட் என்று அல்லது மலைக் கோயில் என்று அழைக்கிறார்கள். இப்படிக் கம்போடியாவின் உயிர்நாடியாக விளங்கிய அம்மாநதி, வியட்நாமுக்குள் புகுந்து பலவாறாகப் பிரிந்து டெல்டா பகுதிகளுக்கிடையே சென்று தென்சீனக் கடலில் ஐக்கியமாகிக் கொள்கிறாள்.
அமேசான் நதிக்கு அடுத்தபடியாக சுவையைக் கொண்ட நதியாக மீகாங் இருந்து வந்ததோடு, பல்வேறு தாவரங்களையும் உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டிருந்ததிலும் அமேசானுக்கு அடுத்ததாக விளங்கியது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தனித்துவமான தாவரங்கள், 1200க்கும் மேற்பட்ட தனித்துவமான பறவைகள், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள், 850க்கும் மேற்பட்ட நன்னீர்வாழ் மீன்வகைகள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படியாக அருந்தவப் பேராறாக விளங்கிய மீகாங் ஆற்றையொட்டி காடுகளில் வெறும் இரண்டாயிரம் யானைகளே தற்போது உள்ளன. பல்லாயிரக்கான நன்னீர் டால்பின்கள் இருந்த ஆற்றில், இருநூறுக்கும் குறைவான டால்பின்களே இன்று இருக்கின்றன.
இயற்கையானது அந்தந்த நிலப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான உணவினை ஏதோ ஒரு உருவில் சமநிலையோடு வழங்கியே வந்திருக்கிறது அண்மைக்காலம் வரையிலும். தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம், மியான்மார் முதலிய நாடுகளுக்கும் அப்படித்தான். அவர்களுக்குத் தேவையான புரதச்சத்தில், எழுபது விழுக்காட்டுக்கும் மேல் அம்மாநதியின் மீன்வளமாகவே இருந்து வந்தது. ஆற்றிலேயே வீடுகட்டி, ஆற்றிலேயே வாழ்ந்து, ஆற்றையே தொழுது கொண்டிருந்தனர் புத்தர்வழி அன்புமக்கள். 1970களுள் துவங்கியது அவர்களுக்கான துன்பம். ஆமாம், அம்மாநதியை சிறுகச்சிறுகச் சிதைத்து பலவந்தப் படுத்தும் வேலைகள் துவங்கியது அக்காலகட்டத்தில்தான்.
திபெத், யுன்னான் மாநிலத்துக்குள்ளே மீகாங் ஆற்றுக்குக் குறுக்காகவும் துணையாறுகளை மறித்துமென இதுவரை சிறிதும் பெரிதுமாக அறுபது அணைகளைக் கட்டியிருக்கிறது சீனா. இன்னும் பல அணைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலைகளுக்கிடையே பலத்தை அழுத்தத்தை உண்டாக்கி எந்த நேரத்தில் என்ன நிகழுமோயெனக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன இவை. சீனா மட்டுமன்றி, மீகாங் பாய்கிற மற்றநாடுகளும் அவரவர் பகுதிகளில் அணைகளைக் கட்டிச் சூறையாடத் துவங்கியிருக்கின்றனர். இயற்கையின் வழிப்பாதையை மாற்றியமைப்பதன் வாயிலாகச் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மேற்குலக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சீனாவின் அணைகள் கட்டப்பட்ட இடத்தில் வாழ்ந்த இலட்சோப இலட்சம் மக்கள் எவ்வசதிகளுமற்ற திபெத் பீடபூமிக்குள் குடியேற்றப்பட்டு, அங்கு வாழும் திபெத்தியர்களைச் சிறுபான்மையாக்கப்படப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். லாவோசு, கம்போடியாவில் அணைகளைக் கட்டுமிடத்தில் வாழ்ந்தவர்கள், எவ்வித இழப்பீடும், வாழ்வாதாரமும் வழங்கப்படாமல் தூக்கியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மீன்வளம் முற்றுமாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டப்படுகிற அணைகள் எல்லாம் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்துக்குக் கட்டப்படுபவை அல்ல. மாறாக, நீர்மின்திட்டத்துக்காக மட்டுமே கட்டப்படுபவை ஆகும். எனவே அரிசியின் ஏற்றுமதியில் சிறப்பாகயிருந்த வேளாண்நிலங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்நாடுகளில் நிகழ்ந்த அணைக்கட்டுச் சீரழிவுகளை நினைவுபடுத்துகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 1975ஆம் ஆண்டு. சீனா பேரழிவைச் சந்தித்தது. பாங்க்யோ அணைச்சுவர்கள் நீர்வரத்தின் அழுத்தம் தாக்குப் பிடிக்காமல் சிதறியது. இரண்டு இலட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஒரு கோடியே இருபது இலட்சம் பேர், உடைமைகளை இழந்து வீடுகளை இழந்து அபலைகளாயினர். அடுத்தடுத்து இருக்கும் அணைகளும் உடைந்து பெருக்கெடுக்கக் கூடுமென அஞ்சிய அரசு, பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டுக் கிட்டத்தட்ட அறுபது அணைகளைத் தாமாக முன்வந்து பீரங்கிகளைக் கொண்டு உடைத்தெறிந்தது. 2017ஆம் ஆண்டில் கூட லாவோசு அணை உடைந்ததில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாங்க்யோ அணைப் பேரழிவு குறித்த தகவலைப் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவதற்குத் தடை விதித்திருந்தது சீனா. 1975ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரழிவு குறித்த செய்திச் சேகரத்துக்குக்கான தடை, கடந்த 2005ஆம் ஆண்டுதான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மலைகளை உடைத்து அணைகளைக் கட்டும் போது நிகழ்ந்த ஆபத்தான விளைவுகள் இன்னமுமே முற்றாக மறைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. மலைகளைப் பிளக்கும் போது பயன்படுத்தப்படும் மருந்தின் நெடி சுவாசத்தைப் பாதிப்பதாகவும் நிறையக் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாகவும் பழங்குடியினர் அலறுகின்றனர்.
ஆற்றோடு வாழ்ந்து கொண்டிருந்த மண்ணின் மக்களுக்குக் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டது. வேளாண்மை முற்றாகப் பொய்த்தது. வியட்நாம் மக்கள் வீதிக்கு வந்தனர். உலகநாடுகளின் வற்புறுத்தலுக்கிணங்க, சீனா தன் அணைகளுள் ஒன்றிலிருந்து அப்போதைக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டிருந்தது. நிலைமை சரியாகி மழையும் பெய்யவே அப்போதைக்கு பிரச்சினை ஓய்ந்தது. ஆனாலும், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் இருக்கும் சீனநிறுவனங்களுக்கான மின்பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்தது. சீனாவின் பண உதவியின் பேரில், மேலும் பல அணைகள் கட்டப்படவிருக்கின்றன. மின்உற்பத்தி நடைபெறும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், இதர நேரங்களில் தண்ணீர் வரத்து இல்லாமையாலும் ஆற்றின் கரைகள் சிதைந்து ஆற்றின் தடம் மாறி வருவதாயும் மீன்கள் குடியேற்றம் முற்றிலும் நின்று போய்விட்டதாகவும் சொல்லவொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் பொதுமக்கள். ஏராளமான அணைகள் குறுக்கிடுவதால், வண்டல்மண் ஆற்றோடு வருவதுமில்லை. ஆற்றுக்குப் பாதுகாப்புமில்லை. மீன்வளமுமில்லை. வேளாண்மையுமில்லை. அம்மாநதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைச் சிதைத்துப் பிரித்தாளும் போக்கு எங்களைக் கொல்லாமல் கொன்றுகொண்டு இருக்கிறதெனச் சொல்லி ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார் லாவோசு நாட்டு மூதாட்டி ஒருவர். லாவோசில் சீனா கட்டும் சையாபுரி அணை வேலைகள் முடிக்கப்படும் போது, இயற்கையே எங்களுக்கு ஒரு வழிகாண்பிக்குமெனச் சொல்கிறார் வியட்நாமியப் பழங்குடி ஒருவர். நாட்டார் சாபம், காலத்தின் கையில்.
அம்மாவை வல்லாதிக்கம் கற்பழித்துக் கொண்டிருக்கிறது; பிள்ளைகள் செய்வதறியாது வலியால் துடித்துக் கொண்டிருக்கின்றனர். பொருட்களைச் சிக்கனமாய்ப் புழங்கப் பழகுவோம்; இயற்கையைப் போற்றுவோம். நம்மால் முடிந்தது அவ்வளவுதான்!
-பழமைபேசி.
https://wle-mekong.cgiar.org/mekong-river-facts/
http://e360.yale.edu/features/life_on_mekong_faces_threats_as_major_dams_begin_to_rise