Showing posts with label பதிவர் சமுத்திரம். Show all posts
Showing posts with label பதிவர் சமுத்திரம். Show all posts

2/11/2012

டென்னசி, மெம்ஃபிசு நகரில் வலைஞர் சந்திப்பு

இப்பாரினில் நாம் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா,
அறஞ்செய்வாய்! நாமடைந்த
பெருமையனைத்தும் காத்திடுவாய்!
இந்நாள் செயல்செய்வாய்
நன்றாதல் கண்டோமெனச் சீறி வந்தே!!
அயல் மண்ணில்
தமிழ்நட்புப் பூண்டிடுவோம்
வந்திடுக தமிழ் மறவா!!


2/11/2012
மிசிசிப்பி ஆற்றங்கரையோர நகரம், மெம்ஃபிசு
டென்னசி மாகாணம்
pazamaipesi@gmail.com

சிறப்பு விருந்தினர்: சேலத்து மாம்பழம் வலைஞர் வெண்பூ 

2/24/2011

யாரிந்த வலைப்பேய்ச் சித்தர்??

பதினென் சித்தர்கள் இருந்த நாடு நம்ம நாடு. கோயமுத்தூர்ல இருந்து அப்படியே பொடி நடையா, அவலு கடலை பொரிய மென்னுகிட்டே மேக்கமுன்னா காத்து வாங்கிட்டுப் போனமுன்னாக்க, மருதமலை வந்துரும். அங்க பார்த்தீங்கன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கு கோயல்கூட இருக்குது.

அங்க உக்காந்துட்டு இருக்கும் போது, என்னா ஒரு மனநிறைவு?! அந்தத் துண்ணூரு வாசத்துக்கும், மலைக் காத்துக்கும்... அப்பப்பா...  அவரோட அருமை பெருமைகளை எல்லாம் எழுதணும்தான்... நேரங்காலம் வரணுமே எதுக்கும்?!
பாம்பாட்டிச் சித்தர் சன்னதி

சரி, யாரந்த பதினென்கீழ்ச் சித்தர்கள்? டேய்... அவுங்க பதினென் சித்தர்கள்தானடா? நீயென்ன பதினென்கீழ் ஆக்கிட்டியேன்னுதான எகுறுறீங்க? அதுவும், ஈரோட்டு மாப்பு எகிறுறது எக்கசக்கம்?! அது ஒன்னுமில்லீங்க, கீழ சொல்லப் போற பதினென் சித்தர்கள்ங்றதைத்தான் அப்படி சொல்லிச் சொன்னேன்.

1. அகப்பேய்ச் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதச் சித்தர்
5. இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மெளனச்சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளிச் சித்தர்
12. கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்தச் சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச் சித்தர்

இவங்க வரிசையில, நவீனச் சித்தர், அதாகப்பட்டது, பத்தொன்பதாவதா, வலைப்பேய்ச் சித்தர். பேய் அப்படின்னா, கெட்டதாவே பார்க்கப்படாது. பேய் மழை, பேய்க் கதை, பேய்க் காதல், பேயுழைப்பு இப்படியெல்லாங் கூட ஒரு முன்னொட்டா வரும். அதாவது, வீரியமிக்க அல்லது அதிதீவீர அப்படிங்ற பொருள்ல வரும்.

அப்படி வலைஞர்லயும், இவரு பேய் வலைஞரு. பல்சுவைப் பழம். எங்களுக்கெல்லாம் அன்பானவரு; நேசமானவரு!! என்ன கழுதை, அந்த ஈரோட்டுச் சங்கமத்தையும் வலையேத்தினா, எட்ட இருக்குற சித்தரோட பக்தர்கெல்லாம் மகிழ்ச்சியடைவாங்க... என்ன நாஞ்சொல்றது?!

1/21/2011

தமிழ்மணம் விருதுகளும், விமர்சனமும்!!

சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் தமிழ்மணம் திரட்டியானது விருது வழங்க்லைச் செவ்வனே நடத்தி முடித்திருக்கிறது. தமிழ் வாசகன் எனும் முறையில் நன்றியும் வாழ்த்துகளும்!

விருதுகள், படைக்கப்பட்ட படைப்புக்கே ஒழிய படைத்தவர்களுக்கு அல்ல. எதிலும் தனிமனிதர்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்வது என்பது களையப்பட வேண்டிய ஒன்று.

பங்கேற்ற நடுவர்கள் தத்தம் மனசாட்சிக்கு ஒப்ப நடந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியே, ஓரிருவர் வழுவி இருந்தாலும் தேர்வுக்குப் பங்கம் நேர்ந்திருக்காது. ஏனெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் பல நடுவர்கள் பணியாற்றினர். ஒருவரது மதிப்பீடு மட்டும் இறுதித் தெரிவினை முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சொறபம்.

கொடுத்த விருதினைத் திருப்பி அளிப்பது என்பது, கட்டமைப்புக்கும் கட்டமைப்பின் நேயர்களுக்கும் எதிரானது.

இறுதியாக, விருதுகள் என்பன கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய நாடப்படுவன அல்ல. அம்முறையில், தத்தம் இடுகையை தாமே விருதுக்குச் சமர்ப்பிப்பதில் அவ்வளவு நியாயம் இல்லை. மாறாக, தாம் வாசித்துச் சிலாகித்து, விருதுக்குத் தகுதியானவற்றை மற்றவர் முன்மொழிதலே சிறப்பாக இருக்க முடியும். இதிலும் சிக்கல் எழும். ஒரே பதிவரின் எண்ணற்ற இடுகைகள் முன்மொழியப்படக் கூடும். அப்படியான நேரத்தில், குறித்த பிரிவின் கீழ் முதலில் சமர்ப்பிக்கப்படும் இடுகை மாத்திரமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு சிலர், பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள். என் பார்வையில் அதுவும் சரியன்று. விருது வழங்கலின் நோக்கத்தில், நயம்மிகு இடுகைகளைத் தெரிவு செய்து பார்வைக்கு வைத்தலும் அடக்கம். அப்படியாக, நயம்மிகு இடுகைகள் பார்வைக்குச் செல்லாமல் தடுப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?

தமிழால் இணைந்தோம்!

1/15/2011

வட கரோலைனா பொங்கல் விழா - படப்பிடிப்பு துவங்கியது

பொங்கலோ பொங்கல்! மக்களே, டென்னசி மாகாணத்தின் சட்டனூகா நகரில் இருந்து கிட்டத்தட்ட நடுஇரவில் வட கரோலைனாவின் தலைநகருக்கு வந்து சேர்ந்தோம். அவ்வேளையிலும், தமிழாசான், சொல்வித்தகர் அமரர் கா.காளிமுத்து அவர்களுடைய உறவினருடைய உணவகம் ஒன்றின் அறுசுவை நம்மை “வா, வா” என வரவேற்றுப் புசிக்க வைத்தது.

புசித்து முடித்து, அறைக்குத் திரும்பியதும் தமிழ்மணம் விருதுகளைக் கண்டேன். அகமகிழ்ந்தேன். எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு அதில் அடங்கி இருக்கிறது. நேரம் செலவழித்து எழுதிய பதிவர்களின் உழைப்பு, கட்டமைப்பு உருவாக்கிப் போட்டிதனை அறிவித்து நடத்தி முடித்த தமிழ்மணம் திரட்டியினரின் உழைப்பு, நடுவர்களின் உழைப்பு என எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு, தமிழுக்கு அர்ப்பணிக்கப்பட்டதில் மிகவும் அகமகிழ்கிறேன்.

ஈரோட்டுப் பாசறைக்குப் பல விருதுகள். மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! எம்மவன் பாலாசி படைத்த “புழுக்கள்”. என்றும் எம்மை சிந்தனை வயப்படுத்தக் கூடிய ஒன்று. மாப்பு, ஈரோடு கதிர் படைத்த “கோடியில் இருவர்”, அர்ப்பணிப்பின் அடிநாதத்தை ஊர் உலக்குச் சொல்லும் இடுகை. விருதுக்குப் பெருமை!!

இதோ, அம்மகிழ்ச்சியின் தொடர்ச்சியாய்த் தமிழர் திருநாளைக் காணப் புறப்பட்டு விட்டோம். நேற்றைக்குத் தமிழ்சசி அவர்கள், விளையாட்டாய்க் கேட்டதில் உண்மை இருக்கிறதுதான். ஆனால், ஊக்கமும் உற்சாகமும் பெற அவையெல்லாம் செய்யத்தானே வேண்டி இருக்கிறது?!

இன்றைய நாள், உற்சாகத்தோடும் களிப்போடும் கழியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிவர் மக்களே, தமிழ்விழாக்களுக்கு தத்தம் குடும்பத்தோடு வாருங்கள். சக தமிழரையும் வந்து கலந்து கொள்ளச் செய்யுங்கள். உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கு வலிமையூட்டுங்கள்!!

ஆமாங்கய்யா... இதோ, படப்பிடிப்புத் துவங்கிருச்சு.... அட, இப்பத்தான் அறையிலிருந்து கிளம்பிட்டு இருக்கோமுங்க....



தமிழால் இணைந்தோம்!

1/10/2011

பழமை பேசியே எ௱௫௰ (750)!

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி - நாலடியார் 48.

வணக்கம். சரியாக முப்பது மாதங்கள்; கிட்டத்தட்ட 900 நாட்கள், 750 இடுகைகள். இவையெல்லாம் வெறும் எண்ணிக்கையே. எண்ணிக்கைகள் மட்டுமே வாழும் வாழ்க்கைக்குச் சிறப்புச் சேர்த்திடுமா? இன்றைய சூழலில், எங்கு காணினும், எதையும் எண்ணிக்கைதானே நிர்ணயிக்கிறது; ஆக, எண்ணிக்கை என்பது இன்றியமையாததுதானே?

வினா நம்மையும் சூழ்ந்தது. என்ணிக்கை நிர்ணயம் என்பது தற்காலிக வெற்றியாக இருக்குமே ஒழிய, அது வாழ்வாங்கு வாழ்ந்திடப் போவதில்லை. புறச்சூழல் கருதிக் கிடைக்கும் பாராட்டு எவையும், சூழல் மாறுகிற தருணத்தில் செல்லாக் காசுகள் ஆகிவிடும்.

அகம் கருதிக் கிடைக்கிற பரிசும், பொருளும், பாராட்டும் என்றென்றும் நம்மோடு வரும். மண்டிப் பெடைச் சேவலும், வன்கழுகுமாகச் சேர்ந்து உயிரற்ற இப்பூதவுடலைக் குதறிய பின்னும் அவை நம்மோடு சேர்ந்து வரும் என்கிற நாலடியாரை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இப்படியானதொரு மனநிலைக்கு ஆட்பட்டதும், மீண்டும் மற்றொரு வினாவானது நம்மைச் சூழ்ந்து கொண்டது. பகிர்ந்தது, படைத்தது எழுநூற்று ஐம்பதே ஆயினும், பலரும் பலனடையும் பொருட்டுப் பொருள் கொண்டு படைத்தது எம்மாத்திரமோ?

திரும்பிப் பார்த்தேன். முதல் நாளது முதல், இம்மணித் துளியானது வரையிலான மனவோட்டம் மற்றும் அகச்சூழலை! ஆங்காங்கே சறுக்கிடினும், மீண்டு வந்தது தெரிகிறது. மகிழ்ச்சி!

கடந்த 14-10-2009 தேதியில், ஐநூறுகளோடு அளவளாவினோம். இதோ மீண்டும், எழுநூற்று ஐம்பதுகளோடு அளவளாவுகிறோம். அளவளாவலுக்கு வித்திட்ட வலையுலக அன்பர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!!

ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்!! இது நடைமுறையில் சாத்தியமா? உங்கள் தரப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா??

இக்கூற்றானது கூறப்படுகிற இடத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அறிவு என்பது வளரும் என அப்படியே பொருள் கொண்டால், முரணாகத்தான் புலப்படும். அறிவு பெருக வேண்டும். எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை விட, எவ்வளவு திறம் வாய்ந்தவராக இருக்கிறார் எனக் கணக்கிடும் காலமிது. இணையத்தில் கிடைக்காதது ஏதும் உண்டா?

திறத்தை மேம்படுத்த, அவனியில் எல்லா தரப்பு மக்களும் தத்தம் முயற்சிகளைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பாக, நம் நாட்டில் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிற முக்கியமான ஒன்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் நிலைப்பாடு. அது என்ன?

மனிதனின் மனமானது, வயது கூடக்கூட முதிர்ச்சியடையும்; அடைய வேண்டும். அதன்பொருட்டு, பெற்ற அனுபவங்களின் வாயிலாக மனம் பண்படைந்து, பக்குவப்படும்; பக்குவப்பட வேண்டும். சிலருக்கு, பிறப்பிலேயே மனம் பண்படையப்பட்டு இருக்கும். மற்றவர்க்கு? பட்டறிவின் வாயிலாக அது கூடிவரும். ஆனால் இன்றைய நிலை? பண்படைந்து, பக்குவமுறுதல் என்பதற்கான தடைகள்தான் பெருகி வருகிறது. எனவே, ஆளும் வளரணும்; படினமும் பெருகணும் என்பதே சரி!!

நான் எனது உடன்பிறந்தாரோடு அல்லது உறவினர்களோடு உரையாடும் போது, எல்லாமும் தமிழில்தானிருக்கும். எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் கலப்பு இருக்காது. ஆனால் வெளியில் சிலரோடு உரையாடும்போது, அவர்கள் பேச்சை ஆங்கிலத்தில் திசை திருப்பி விடுவதைப் பெரும்பாலும் பார்க்கிறேன். தவறு எங்களிடமா அல்லது மற்றவரிடத்தா எனத் தெரியவில்லை. ஏன் இது?

இது தவறு என்பது சரியல்ல. பெற்ற குழந்தைகளுக்கு, முதன்மை மொழி ஆங்கிலமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கக் கூடும். நாம் தொடர்ந்து தமிழில் உரையாடுவதன் மூலம், அவர்களையும் தமிழின்பால் கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால்தான் என்ன? தமிழில் பேசுவதைக் கேட்கிற வரையிலும் மகிழ்ச்சியே!

பொதுவாக பொருள் உதவி செய்பவர்கள், உறவினர் அல்லாதவர்க்குச் செய்யும்போது யாதொரு தயக்கமும் இல்லாமல் செய்ய முடிகிறது. ஆனால் உறவினர்களிடம் செய்யும் போது ஏகப்பட்ட சிந்தனைகள். எதனால் இது?

கடந்து வந்த பாதை. அவரது நடத்தை மற்றும் அவரது பின்புலம், இவற்றுக்கும் மேலானதொரு காரணியாக இருப்பது, நம்முள் இருக்கும் கோபதாபமும்! எம்முள் இதே நிலை எண்ணற்ற முறை நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் நான் இடுகையில் பகிர்ந்து கொண்ட இப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!

முடிந்தவரை ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேச நினைக்கும் சிலர்கூட, வெட்கத்தால் அவ்வாறு பேசுவதை கைவிடுகின்றனரே?! முழுமையாகத் தன் தாய்மொழியில் பேச வெட்கப்படும் இந்தத் தனி குணம், எதிர்காலத்தில் மாறும் எனும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா??

நான் எதோ ஒரு தமிழ்ப் புரவலன் எனும் பாங்கில் அல்லவா வினாக்கள் விடுக்கப்படுகிறது. ஆனானப்பட்ட தமிழ் மாமேதையே, நான் ஒரு தமிழ் மாணவன் எனக் கல்லறையில் எழுதி வைத்துச் சாகும் போது, இச்சாமன்யன் எம்மாத்திரம்? இருந்தாலும் என் மனநிலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எதுவும் இயற்கைக்குக் கட்டுப்பட்டு இருக்கிற வரையிலும், மேன்மையோடு தொடரத்தான் செய்யும். இயற்கையைச் செயற்கை கொண்டு மாற்றியமைக்கும் போது, இன்னல்கள் நேர்வது தவிர்க்க இயலாதது. மாந்தர்கள், தத்தம் இருப்பிடத்தோடு, இனத்தோடு வாழ்ந்து வந்தான்.

இந்நூற்றாண்டில், புறச்சூழல் கருதி நாமனைவருமே தத்தம் மண்ணை விட்டகன்று வாழத்தலைப்பட்டு இருக்கிறோம். இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? உலகம் முழுமைக்கும் ஒரே இனமாக உருவெடுக்குமா? உலகம் முழுமைக்கும் ஒரே மொழி பேசப்படுமா??

உலகமயமாதல் உருவெடுக்கும்போது, தன்மயமாதல் உருவெடுக்காதா என்ன?? நான் பணிபுரிந்த நிறுவனமான, LMW, இலட்சுமி இயந்திரத் தொழிற்சாலைதான் நினைவுக்கு வருகிறது. மூன்று தலைமுறையைப் பார்த்த, மாபெரும் நிறுவனம் அது.

ஆங்காங்கே பிரிந்திருந்த பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒரு நிர்வாகத்தின் கீழ், ஒரே இடத்திற்குக் கொணர்ந்தார்கள் ஒரு தலைமுறையில். மற்றொரு தலைமுறையில், நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் பொருட்டு, பல பிரிவுகளாகப் பிரித்தார்கள். போக்குவரத்து, மற்றும் இன்னபிற காரண்ங்களைக் காட்டி மீண்டும் ஒன்றிணைக்கும் நாள், நான் மடியுமுன்பாகவே வரும் என நம்புகிறேன்.

யுனஸ்கோ ஆய்வின்படி எதிர்காலத்தில் முற்றிலும் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளதே?! அவ்வாறு ஒருநிலை வருமா?? அல்லது ஒவ்வொரு காலகட்டதிலும் தனக்கான அழிவு ஏற்படும் சூழலில், ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் மீண்டெழும் தமிழ் இம்முறையும் மீண்டெழுமா??

யுனஸ்கோ ஆய்வு அறிக்கையில் தமிழ் இடம் பெறவில்லை. எனினும் அக்காலத்தில், விஞ்ஞானம் இல்லை. எழுதுவதற்குத் தாள் இல்லை. தாளில் வரிவடிவங்களைப் பொறிக்க மசியும் இல்லை. அச்சும் இல்லை. இருந்ததெல்லாம் கற்களும், உளியும், ஓலைகளும், எழுத்தாணியுமுமே. இருந்தும் நிலைத்து நிற்கிறது தமிழ். காரணம்? மக்கள் ஒன்றியமாய் வாழ்ந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்கள் பலவாறாகப் பிரிந்து வாழத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் தமிழ் வாழ்கிறது. வாழும்! எங்கோ இருக்கும் நீங்களும், நானும் யாத்திருப்பதன் காரணம் கணினி அல்லவா? கணினியில் பதிந்திருப்பதை, இன்றிலிருந்து இன்னும் பத்துத் தலைமுறை கடந்து பிறக்கும் ஒரு பிறவியானது, தோண்டித் துழாவி எடுக்காது என்பதை எப்படி அறுதி இட்டுச் சொல்ல முடியும்? மரபுகளின் நீட்சிக்கு முடிவேதும் கிடையாது. அது இயற்கையின் நியதி!

நல்ல தமிழ்ல பேசினாலோ, பிள்ளைக்குத் தமிழ்ல பெயர் வைத்தாலோ, தமிழ் மீது அன்பும் ஆர்வமும் கொஞ்சம் இருந்தாலோ, "ஓ! நீங்க தமிழ் வெறியரா, எப்பவுமே தமிழ்ல தான் பேசுவீங்களா?" என்பதுபோல் பேசும் தமிழர்களை எப்படி அணுகுவிங்க?

புன்னகைத்துக் கடந்து செல்ல வேண்டியதுதான்! எவனொருவன், சினமுற்றுக் கிளர்ந்தெழுகிறானோ, அவன் தோல்விக்குத் தன்னைத் தாமாக இட்டுச் செல்கிறான் என்றே ஆகிறது. எறும்பு ஊறக் கல்லும் தேயும். அதற்கும் மேலாக, மற்றவர் மனதை நான் எதற்குக் கரைக்க வேண்டும்? எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன். அவ்வளவே!

என் மக்ள் கல்வி கற்பது, கோவையில் இருக்கும் ஒரு ஆங்கில இந்தியப் பள்ளியில். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், எனது அலைபேசி எண்ணை என் உறவினரிடத்தில் இருந்து பெற்று, சென்ற வாரத்தில் என்னை அழைத்திருந்தார். நான் பதைபதைத்துப் போனேன். மகள் என்ன செய்தாளோ, என்னவோயென!!

அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே துவக்கப் பள்ளியில் பயின்றும் வந்த உங்கள் மகள், இந்தி மற்றும் தமிழ் கற்றதோடு மட்டுமல்லாமல், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருப்பது வியத்தகு செயலாக இருக்கிறது எனக் கூறினார். நான் ஒருநாளும் என் மகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது கிடையாது. இதை இங்கே குறிப்பிடுவதன் காரணம், நாம் நாமாக இருக்கிற வரையிலும், நம்முடையது நம்முடனே வரும்.

இந்த ஆண்டில் ஏதாவது புத்தகம் எழுத எண்ணியுள்ளீர்களா? எண்ணியுள்ளீர்கள் எனில், எந்த மாதிரியான புத்தகம்? சிறுகதை அல்லது கவி காளமேகம்?? கவி காளமேகம் குறித்து நீங்கள் எழுதியவைகளை தொகுத்துப் புத்தகமாக வர வேண்டும் என்று நேற்று தான் எண்ணினேன்.

ஊர்ப் பழமை எனும் நூல் என்பது, நான் திட்டமிட்டுச் செய்த ஒன்றல்ல. நான் தாயகம் சென்றிருந்த போது, நட்பினரைச் சந்தித்த வேளையில் நண்பர் ஆரூரன் அவர்கள் தமது விருப்பத்தை வெளியிடவும், நானும் அதற்கு இசைந்தேன். அச்செயலானது, எமக்கு வெளியுலகில் நல்ல பல தொடர்புகளைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வழியில், எதுவும் அமையுமாயின் அதன் போக்கில் விட வேண்டியதுதான்!

நல்ல தமிழ் என்றாலே முகம் சுழிக்கும் சமுகத்தில் கோவை வட்டார வழக்குடன் தமிழ் பேசுவதை பலர் கேலி செய்வார்களே? அவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?? அதுவும் நீங்க வெள்ளையா இருக்கீங்க, நல்லா இங்கிலிபீசு வேற பேசறீங்க? எனவே இத்தொல்லை உங்களுக்கு அதிகமாக இருக்கும் இல்லையா??

ஏற்கனவே நண்பர் தென்னவன் கேட்ட கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? எம் மண்ணில் பேசப்படுவதை, எம்மக்கள் பேசுவதை நான் பேசாமல், சப்பானியனோ, சீனனோ வந்தா பேச முடியும்? கேலி பேசுபவர்களைப் பற்றி நான் பொருட் படுத்தினால்தானே அது எம்மை வதைக்கும்??

நீங்கள் உள்ளிட்ட எம் நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வதெல்லாம் இதுதான். உன் ஊரெதென யாரும் வினவினால், அழுத்தம் திருத்தமாக உமது ஊர்ப் பெரைச் சொல் என்பதுதான். உடுமலைப் பேட்டை என்றோ, கோயமுத்தூர் என்றோ நான் ஏன் சொல்ல வேண்டும்?? அந்தியூர் என்று சொல்வேன். கோபி பக்கந்தானே என்பார்கள். இல்லை, உடுமலைப் பேட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், எட்டாவது மைல்தூரத்தில் இருக்கிறது என்பேன்.

என் ஊரின் பெயரை நான் பிரகடனப்படுத்திப் பிரபலமாக்காத வரையிலும், வேறு யார் செய்திட முடியும்?? விபரந் தெரிந்தவ்ர்கள், ”ஓ, அந்தியூர்ல எல்லாம் மேட்டாங்காட்டு வறண்ட விவசாய பூமியாச்சே?” என்பார்கள். “ஆமாம், வாய்க்காத் தண்ணி பாயுற வெள்ளாமைக்காரங்க எல்லாம் அந்தியூர்க்காரங்ககிட்டத்தான் காசு பணம் வாங்க வருவாங்க!” என்பேன். உண்மை அதுதானே?!

உங்க குழந்தைகளுக்கு இந்தியா, தமிழ்நாடு, கோயமுத்தூர் மாவட்டம் பற்றி என்ன மாதிரியான புரிந்துணர்வை உருவாக்க போறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க?

நான் எதற்கு உருவாக்கணும்? என் பிறந்த மண்ணைக் காண்பித்தேன். நான் பிறந்த வீட்டைக் காண்பித்தேன்.என் பெற்றோரிடத்தில் வளர விட்டேன். வளர்கிறார்கள். புரிந்து கொள்வதும், கொள்ளாததும் அவர்கள்பாடு. ஆனால், நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்.

இந்தியாவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்பி வந்து விட முடியும்ங்ற நம்பிக்கை இருக்கிறதா?

கேள்விக்கான தேவையே இல்லை. நான் எங்கிருந்தாலும் நானாகவே இருப்பேன். ஆனாலும், எங்கே உயிர்ப்பிக்கப்பட்டேனோ, அங்கேயே மரிக்கவும் செய்ய வேண்டும் என்பது எம் தணியாத ஆசை.

நீங்க படிச்ச பள்ளிக்கு என்ன செய்து இருக்கீங்க? என்ன செய்யப் போறீங்க??

நான் பல பள்ளிகளில் படித்தவன். பள்ளிக்குச் செய்வதென்பதைவிட, என் ஆசிரியர்களுக்குச் செய்ய ஆசைப்படுகிறேன். செய்தும் வருகிறேன். பள்ளிக்கு ஒரு கட்டிடம் என்பதற்கு அரசாங்கம் இருக்கிறது. இச்சாமான்யனைவிட கடலளவு பொருளாதாரம் அரசிடம் இருக்கிறது. ஆனால், என் ஆசிரியர்களைச் சிறப்பிக்க, என்னைப் போன்ற மாணவர்களை விட்டால் வேறு எந்த நாதியும் கிடையாது என்பதுதான் இன்றைய நிலை.

குறைந்தபட்சம் உங்கள் சொந்தபந்த ஏழை மாணவர்களுக்காவது கல்விக்கான பொருள் உதவி செய்து இருக்கீங்களா?

அரசு செய்ய வேண்டிய பணிகளுக்கு மாற்றாக, தனிமனிதர்கள் அளிக்கும் நிதியானது முறையற்ற ஒன்று. மாறாக, தான் கட்ட வேண்டிய வரியை, அரசுக்கு முறையாகச் செலுத்தலாம். எங்கு அரசின் உதவி பெறுவது ஏதுவாக இல்லையோ, அதற்குச் செய்திடலாம். மேலும், சமூகப் பணிகளுக்கு நேரிடையாகத் தன் உழைப்பை நல்கிடலாம்.

என் மகளின் பிறந்த நாளன்று, ஐயாயிரம் உரூபாயை நன்கொடையாக அளிப்பதைக் காட்டிலும், அன்றைய தினத்தில் அவள் நேரிடையாகச் சென்று சமூகப் பணியாற்றுவதைப் பெரிதும் விரும்புவேன் நான்.

செய்தவற்றைப் பட்டியலிட்டுச் சொல்வது அறமாகாது. இருந்தாலும், ஒரு செய்தியை மற்றவர்க்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இது. தகுந்த வசதியின்றிச் சுகாதாரத்தைப் பேணாமல், அவதியுறுவோர் நாட்டில் பெருகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதை நான் முதன்மையாகக் கருதுகிறேன்.

வலைபதிவுகளில் ஆச்சரியப்பட்ட ஐந்து வலைபதிவுகளை சொல்ல முடியுமா? காரணத்தை ஒரு விமர்சனம் போல முடிந்தால் தரவும். நீங்க இதில் தப்பித்தால் உங்களை வலையுலக அரசியல் பிதாமகன் என்ற பட்டத்தை தருவேன். சம்மதமா?

நிறைய இருக்கின்றன.

http://maravalam.blogspot.com%2c/
http://mooligaivazam-kuppusamy.blogspot.com%2c/
http://pkp.blogspot.com%2c/
http://ocblogs.blogspot.com%2c/
http://www.kasangadu.com/

இதுதவிர, நெஞ்சை அள்ளியவை இன்னும் பல இருக்கின்றன. இவற்றுக்கான விமர்சனம் தேவையற்றது என நான் எண்ணுகிறேன். நீங்கள் அங்கு சென்றதும் புரிந்துவிடக் கூடிய அளவில்தான் பதிவுகளைப் பதிவு செய்யும் பதிவர்களின் செயல்பாடு இருக்கிறது.

நீங்க எளிமை விரும்பின்னு நான் நினைக்கிறேன். யார் மாதிரி இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?

காந்தியைப் போல் இருக்க வேண்டும். வள்ளலாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி, சமகாலத்தவரை இருட்டடிப்புச் செய்ய விரும்பவில்லை. சக பதிவரைக் குறிப்பிட்டுச் சொல்வதனால், சில அசெளகரியங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. எனினும் குறிப்பிட விரும்புகிறேன். சகிப்புத்தன்மை மற்றும் எளிமை போற்றுவதில், சக பதிவர் சீமாச்சுவைப் போல் நானும் பண்படைய வேண்டும் என அவ்வப்போது நினைத்துக் கொள்வது உண்டு.

வெளி நாட்டில் விவசாயம் செய்யும் முறைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்; நேரிலும் பார்த்திருப்பீர்கள்; மேலை நாட்டு விவசாயம் போல, நம் நாட்டு விவசாயத்தை பெரிய அளவில் முறைப்படுத்தி செய்ய இயலுமா? அல்லது இப்படியே தொடர்வதே சிறந்ததா?

நல்ல கேள்வி. கூடவே காலத்தின் கட்டாயமும் கூட. குறைந்த பொருட்செலவில் வேளாண்மை என்பது இசுரேல் மற்றும் கனடாவில் நடைமுறையில் இருக்கிறது. கனடிய நாட்டின் கோதுமை உற்பத்தியைக் கண்டு வியந்து நின்றேன் நான். இசுரேல் மற்றும் கலிஃபோர்னியாவின் காய்கறி வளர்ப்பும் வியத்தகு ஒன்றாகும். விரைவில், இதுகுறித்துச் செய்திகள் சேகரம் செய்ய வேண்டும்.

பொதுவாக தண்ணீர்ப்பஞ்சம் என்ற பிரச்சினை மேலை நாடுகளில் இல்லை; அதற்கு அந்நாடுகளின் தகவமைப்பு மட்டுமே காரணமா அல்லது நீர் மேலாண்மை மெய்யாகவே சிறப்பாக உள்ளதா??

நீர் மேலாண்மைதான் முக்கியக் காரணம்.

சென்ற இடுகையில் நடிகர் சோபனா, நடிகர் சிந்து எனக் குறிப்பிட்டு உள்ளீர்களே? அது பிழையல்லவா??

ஒருவன் - ஒருத்தி, பாடகன் - பாடகி, செல்வன் - செல்வி, சிறுவன் - சிறுமி என்கிற வரிசையில், ஆசிரியன் - ஆசிரியை, நடிகன் - நடிகை என்பதுதானே சரி? ஆசிரியர், நடிகர் என்பனவெல்லாம் பொதுப் பெயர்தானே?

நடிகன் கமல், நடிகன் இரஜினி என அழைப்பதில் சிக்கல் இருக்கிறதல்லவா? அதே சிக்கல்தான் எனக்கும்; நடிகை சிந்து என்பதிலும், நடிகை சோபனா என்பதிலும். தமிழ் ஒருபோதும் பெண்டிரை நிந்திப்பதில்லை!! பெண் ந்டிகை என்பதும், நடிகையர் திலகம் என்பதும் அபத்தத்தின் உச்ச கட்டம். நடிப்புத் திலகம் சாவித்ரி என்றால், குறைந்துவிடுமா என்ன?!

உடன் அளவளாவிய அன்பர்கள், ஜோதிஜி, புதுகை அப்துல்லா, ரங்சு, தென்னவன், சேது மற்றும் குறும்பன் ஆகியோருக்கு நன்றி! மேலும் உடன் பயணித்து வரும் சக பதிவுலக அன்பர்கட்கும் நன்றி!!

1/07/2011

வெள்ளிச் சிறப்பு இராவு!

நெல்லரிதல் சிறப்பு
அறுசீரடியாசிரிய விருத்தம்
நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்
அமைந்துவட நாகஞ்சூழ்பொன்
நாவலோ எனவியப்ப
அரிபருவம் நாடித் தெண்ணீர்
நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்
குண்டைநகர் உழவர் போல்வார்
நாவலோ எனவிளிப்பத்
வினையின் மூள்வார்!


நாவல் தமிழ்ச் சொல்லே அன்றி, வேறெதுவும் அல்ல எனச் சொல்லி மட்டையாகும் தமிழ்ச் செல்வன் மைந்தனைச் சிறப்பிக்கும் இடுகை!!

நீலாமணி

நேராப் பாரு நீலாமணி
நீலா, அங்க பாரு!

துணைக்கு இவிகளும்!


ஆசனூர்க்குப் போட்டின்னு நாங்க சொல்லவே இல்லை!!!

10/26/2010

முகமூடி


இவங்கள்ல ஒருத்தர், இந்த வாரம் ஊருக்கு வர இருக்காரு. அதுபத்தின விபரம் சீக்கிரம் வெளியாகும். வர்றவரை பார்த்துக் கவனிக்க வேண்டியது, அங்க இருக்குற உங்க கடமை மக்களே!!!


10/18/2010

பதிவர்புரம்

சபரி, சீமாச்சு, சசி, ரூப், திரு, பழமைபேசி
பழமைபேசி, திரு, ரூப், சசி, சபரி, சீமாச்சு, ஜாங்கோ ஜக்கு மாப்பிள்ளை

Stone Mountain Park, Atlanta, GA.

10/03/2010

பதிவுலகம்: அன்புத் தம்பியே, என்ன ஆச்சு?

பிரச்சினையின் ஆழம் தெரியாமை; பக்குவமின்மை; அறியாமை; புறச் சூழலின் தாக்கம்; அகச்சூழலின் சிறைபிடிப்பு; முதிர்ச்சியின்மை! இப்படியாக, நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றுக்கு யாராவது விதி விலக்கு உண்டா இவ்வுலகில்? எத்தகையவராயினும், எதோ ஒரு சூழலில், ஏதோ ஒன்றுக்கு இரையாகித்தானே போகிறோம் நாம்?


உடன் இருப்பவர்கள், உடனிருந்து அத்தகைய ஒவ்வாத செயலின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றிவிட்டால், இரையானவர் பாக்கியசாலி ஆகிவிடுகிறார். நேர்மாறாக, வியந்தோதலில் அகப்பட்டு அகக்கண் மறைபட்டுப் போனாலோ, நிலைமை மேலும் அகோர முகமெடுத்துத் தாண்டவமாடும்.

கடந்த காலங்களில் எல்லாம், அறிவியல் வளர்ச்சியானது அவ்வளவு விரைவாக ஊடோடிச் செல்வனவாக இல்லாமல் இருந்தது. அதுவே மனித குலத்தின் தவறுகளின் வீரியத்தைக் குறைத்து, கட்டுக்குள் வைத்திருந்தது என்று சொன்னால், அது மிகையானதாக இருக்க முடியாது.

ஆனால், இன்றைக்கு? எந்தவொரு ஊடகமானாலும், அதன் வலிமை அளப்பரியது. கண்ணிமையானது சட்டென தப்படிப்பதற்குள்ளாகவே, உதிர்த்த சொற்கள் பாரெங்கும் வியாபிக்கிறது. உதிர்த்தது, உதிர்த்ததுதான். திரும்பப் பெறல் என்பதே கிடையாது அவற்றுக்கு!

அதே வேளையில், விரைவாகச் சென்று சேர்ப்பவன் வெற்றிசாலி என்றும் போதிக்கும் இவ்வுலகம். விளைவு? விரைவு... விரைவு.... எதிலும் விரைவு... வாழ்க்கையையே விரைவாக்கி, விரயமும் ஆக்கத் தயங்குவதில்லை கணங்கள்!

Stick to the basics; Think simple! அண்டை வீட்டு அண்ணனுக்கு வணக்கம் சொல்லத் தயங்குகிறோம். அலாசுகாவிலும், அடிலெய்டிலும் இருக்கும் முகமறியா மனிதனுக்கு வாழ்த்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம். கூடவே, எங்கோ, எவனோ, என்னவோ கத்திக் கொண்டிருக்கும் ஒருவனைச் சொற்களாலே கொலையும் செய்கிறோம். அவனது அந்தரங்கம் அலசுகிறோம்... அனாயசமாய்ச் சூறையாடி, இணையப் பெருவெளியில் பரம்படிக்கிறோம்.

பண்டைக் காலத்திலெல்லாம், பாராளும் மன்னனே ஆனாலும் உயரப் படியேறிச் சென்றுதான் அமுது பருக வேண்டும். ஏனப்படி? எதுவும், எளிதாகக் கிடைக்கும் தருணத்தில் உதாசினப்படுத்தப்படும் என்பது அவர்களது நம்பிக்கை. நவீனயுக புருசர்கள், கட்டுடைக்கப் பிறந்த மகான்கள்! இதை எல்லாம் கட்டுடைப்பதுதானே அவர்கள்தம் முதல் பணி?

கணினியைக் கையாள்பவன் எல்லாம் அறிவாளி; அக்கணினியில் அவன் செய்வதெல்லாமே சிற்ப வேலை!! வாங்கிக் கொடு கணினியை... ஆவதென்ன? எவரையும், எளிதில் வீழ்த்திவிட முடியும் எம்மால்! அகம், உயரப் பறக்கிறது!

இது இப்படி இருக்க... எவை எல்லாம் அந்தரங்கம்? யாருக்குத் தெரியும்? இந்தா பிடி... எனது பிறந்த தேதி! என் குழந்தையின் அழகைப் பார்.... என்னைப் பார்... என்னழகைப் பார்.. என்னவரைப் பார்.. பட்டியல் நைல் நதியின் நீளத்தையும் மிஞ்சும்.

அலைபேசியில் பிடி, நகர் காட்சி... முடிந்தால் என்னையும் பார்... அவனையும் பார்... இதோ அவளையும் பார்... எல்லையே இல்லை! விபரீதம் உணரும் மட்டும், விளையாட்டுக்கு எல்லையே இல்லை!

தருண்! நேற்று வரையிலும், அன்பான மாணவன்... பண்பான மாணவன்... கல்வியில் முதலிடத்து மாணவன்... ஊருக்கே வழிகாட்டியாய் இருந்த நம்மாணவன். இன்றைக்கு??

உலகமே அவனை ஒருவிதமாய்த்தானே பார்க்கிறது? பதினெட்டு வயதிற்குள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே, சோரம் போய்விட்டதுதான் காலக் கொடுமை!

விளையாட்டு... இணையப் பெருவெளியின் கட்டற்ற சுதந்திரம்... விளைவு? எந்த இணையத்தில் விளையாடினான் எனச் சொல்லப்படுகிறதோ, அதே இணையத்தில் எண்ணற்ற செய்திகள் அவன் பெயர் தாங்கி.... அவனது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி!

சக மாணவனின் அந்தரங்கத்தை, இணையத்தில் ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு... சக மாணவன், அருகிலிருந்த வாசிங்டன் பாலத்தில் இருந்து, ஃகட்சன் ஆற்றில் குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள, பிரச்சினையின் தாக்கம் பெருமளவில்! அவனைச் சார்ந்த பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரும் பெரும் சோகத்தில்!

குமுகாயம், மின்னாடல், மடலாடல், சிட்டாடல், உசிலாடல், வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் என நாளும் நாளும் வசதிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே, நாம் வெளிக்காட்டும் அகச்சுவடுகளும் தடம் பதித்துக் கொண்டே வருகின்றன.

இத்தனைக்கும் இடையே, கல்விச் சாலைகளுக்குச் சென்று, இணையப் பாவனை பழகி, தமிழ் வளர்க்க வாரீர் எனப் பறை சாட்டுகிறார் ஒரு கூட்டம்...

கோவை என்றாலே, அன்பு வளர்ப்பதும்... பண்பு வளர்ப்பதும்... விருந்தோம்பல் வளர்ப்பதும்.. கோவன், அந்த இளங்கோவன் காட்டிய வழியில் அறம் வளர்ப்பதும்தான்...

அவ்வழியில், மின்வெளிக் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்திடல் வேண்டும் எனச் சொன்னாயே, என்தம்பி, சஞ்சய் காந்தி? நடத்திடும் காலமெப்போ??

இம்மணித்துளியில் கூட, எங்கோ ஒரு தமிழன், தனது அறியாமையினால் அகப்பட்டுக் கொண்டிருப்பானாய் இருக்கும்...

இம்மணித்துளியில் கூட, எங்கோ, எவனோ ஒரு தமிழன், வியந்தோதலின் பொருட்டுச் சோரம் போய்க் கொண்டிருப்பானாய் இருக்கும்...

9/30/2010

ஏற்றவன்

வழிந்தோடும் இருளின்
பதட்டம் தணிப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வெற்றிப் பட்டியலில்
இடம் அமைப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வயிற்றுப் பசிக்கு
தின்னக் கொடுப்பவன்
உற்றவனை ஏற்றவன்

மரணத்தின் இடுகாட்டில்
துணை நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

தேடலில் புதையாது
காத்து நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

நேசிப்பை நேசிக்க
மறக்காது நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

மலர்களின் அழகை
இரசித்துப் பகிர்வான்
உற்றவனை ஏற்றவன்

இந்த அற்றவனுக்கு உற்ற ஏற்றவன் இவன்!!!

9/07/2010

புகல்தலொடு புகழ்தலும்! புகழ்தலொடு நவில்தலும்!!

ஒருவர், தனது மனதில் நினைத்த எண்ணத்தைச் சொற்களாக்கி மற்றவரிடத்துக் கொண்டு சேர்ப்பதை, அதன் தன்மையைக் கருத்திற் கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம்.

சொல்லுதல், கூறுதல், அறைதல், செப்புதல், இயம்புதல் இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கான விளக்கங்களையும் எழுதலாம்தான்.... ஆனால், இன்றைய நேரத்தின் தன்மை கருதி அவ்வரிசையில் உள்ள சில சொற்களை மட்டும் பார்த்துவிட்டு, ஆக வேண்டியதைப் பார்க்கலாம் வாருங்கள்.

நவில்தல் என்றால், நல்லூழ் ஒன்றைக் கருத்திற் கொண்டு, அவ்வெண்ணத்தின் வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: நன்றி நவில்தல்.

புகல்தல் என்றால், எண்ணம் என்பது தானாக எழுவதற்கு மாறாக, குறிப்பிட்ட எண்ணத்தை தன்னுள் எழச் செய்து அல்லது நாடிச் சென்று, அதற்கான சொற்பிரயோகங் கொண்டு வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: வீரனெனப் புகல்தல்

புகழ்தல் என்றால், எண்ணம் என்பது தானாக மனதிற் சொரிந்து, இசைந்து, உருகி, அவ்வெண்ணத்தைத் தக்க சொற்களால் அறியத் தருவது. உ-ம்: கொடையாளன் எனப் புகழ்ந்தான்.

இளம்பிராயத்திலே அவ்வப்போது நிர்ப்பந்தனைக்கு ஆளாவது வழமையே. ஏதாவது ஒன்றை, மீண்டும் மீண்டும் ஐம்பது தடவை எழுது, நூறு தடவை எழுது என நிர்ப்பந்தம் செய்வார் ஆசிரியர். அதாவது, மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம், அதாகப்பட்டது அவனுள் பற்றுதலாய்ப் படியும் என்பது நம்பிக்கை.

மேலே சொன்ன நிர்பந்தனைக்கு ஒத்த அமைவதே புகல்தல் என்பதும். அடுத்தவர் தம்மை நிர்ப்பந்தம் செய்வதற்கு மாறாக, தன்னைத் தானே எண்ண ரீதியாகச் செய்து கொள்வது.

நான் நல்லவன் எனும் நினைப்பைத் தன்னுள் உருவாக்கிக் கொண்டு, நேர்மறை எண்ணம் கொண்டு, நல்லவன் போன்றதொரு தோற்றத்தின் வெளிப்பாடாய் இடுகை இடுகிறோமே, அதுவும் புகல்தல்தான்.

ஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான்.

பதிவுலகத்தில் எழுதும் பெரும்பாலானோரும் இதற்கு விதிவிலக்கற்று, புகல்தலின்கண் நல்லவராய் உருவெடுப்பர் எனபது எம் புகழ்தலே!!

முன்பின் தெரியாத ஒருவரை அண்ணா, அண்ணா என விளிக்கிறோம். மாப்பு எனச் சிலாகிக்கிறோம்; பங்காளி எனப் பிரியம் கொள்கிறோம். இதுவே, திரும்பத் திரும்ப நிகழும் போது எண்ணங்கள் மனிதனை வெற்றி கொள்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், மனிதனை எண்ணங்கள் வெற்றி கொள்வதே மிகுதி.

இப்படியானதொரு அகச்சூழலில்தான், தாயகப் பயணம் மேற்கொண்டோம் நாம். கண்டவரெலாம் நல்லவராகத் தெரிந்தார்கள். அது மட்டுமா?? நாடிய போதெலாம், தயக்கமின்றி உதவினார்கள்.

இன்ன தேதியில் வருகிறேன், உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்றேன். நீங்கள் நல்லபடியாய் வந்து சேருங்கள். மற்றனவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நானும் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தேன்.

புகல்தலின் பயனாய், அவர்களும் எனது அகச்சூழலைப் போன்றதொரு அகச்சூழலையே கொண்டிருந்தார்கள். சமூகத்திற்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நல்லவனாய் நினைத்து எழுதப்படும் எழுத்துகள், எழுதியவனை நல்லவனாக்கிப் புன்னகைக்கும் காட்சி எம்முள் விரிந்தது.

அந்நேரத்தில்தான், நூல் அறிமுக விழாவும் வந்தது. பெருந்திரளாய்ப் பதிவர் கூட்டம். அன்போடு வந்து கலந்து கொண்டார்கள். மனதார மகிழ்ந்தேன். காலத்தின் இன்மை கருதி, நன்றி நவிலக் கூட இயலாதவன் ஆனேன். என்றாலும், அவர்கள் வருந்தி இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் அவர்கள்; வணிகர் அல்ல அவர்கள்!! வாழ்க பதிவுலகம்!!!

ஆரூரன், சஞ்சய் காந்தி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் பாலாண்ணன், பாலாசி, வெயிலான், பங்காளி சிவசு, தமிழ்ப்பயணி சிவா, முன்னெப்போதும் பார்த்திராத பெண்பதிவர்கள் எனப் பட்டியல் வெகு நீளம்!

இருப்பைத் தொலைத்து மீண்டு வந்த உறவுக் கதையும் இதில் அடக்கம். தம்பிமார்கள் அரங்கசாமி, ரங்சு, செயப்பிரகாசு என இப்பட்டியலும் வெகு நீளம். உறவுகளைக் கொண்டு வந்து சேர்க்கவல்ல எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் இவர்கள்! வாழ்க பதிவுலகம்!!

ஆரூரன் மற்றும் ஈரோடு கதிர் ஆகியோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு இடமும் எங்களைக் குதூகலிக்கச் சென்ற இடம் அல்ல அவை. எல்லாமும் கல்விச் சாலைகள்... எண்ணங்களை விதைத்தோம்... விதைத்த விதைகள் காணாமற் போகலாம்... விதைப்பது காணாமற் போகாது அல்லவா?? வாழ்க பதிவுலகம்!!

அடுத்து நிகழ்ந்தது... இந்தியன் எக்சுபிரசு இதழின் செய்தியாளர் சந்திப்பு... நூல் அறிமுக விழாவிற்கு வந்த அன்பரும் பதிவருமான வெங்கட் என்னை நாட, நானோ மற்றவரை நாடினேன். மாலையில் மனதுக்கினிய ஒரு நிகழ்வு அது. சஞ்சய் காந்தி, குதூகலமாக்கிக் கொண்டிருந்தார். எண்ணங்கள் ஒருவனை முன்னெடுத்துச் செல்லும். சஞ்சய் காந்தியைப் பற்றிச் சொல்வதற்கு சொற்கள் போதாது. வாழ்க பதிவுலகம்!

அதைத் தொடர்ந்து, அன்பு அண்ணல் மஞ்சூராரின் வேண்டுகோள். அவரது இல்லத்திலே மீண்டுமொரு சந்திப்பு. அன்பர்களோடு அளவளாவல். காசி அண்ணாவை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். வாய்ப்பு அமையவில்லை.

எண்ணங்களை விதைக்க வேண்டி, கோவையிலிருந்து சென்னையில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அகத்திற்குச் செல்லும் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று செய்திருந்தார் ஆரூரன். குடும்ப நிகழ்ச்சியதன் முக்கியத்துவம் கருதி, இறுதி வேளையில் பயணத்தைக் கைவிடலாயிற்று. ஆரூரன் அவர்கள் இது குறித்து வருத்தப்பட மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

திடீரென, மறந்து விட்டிருந்த திட்டத்தை உயிர்ப்பித்தபடி அழைத்திருந்தார் அண்ணன் உண்மைத்தமிழன். இருவருமாகச் சிறிது நேரம், சீமாச்சு அண்ணன் பெருமை பகர்ந்தோம். பின்னர் மீண்டும் ஆரூரன் அவர்களே பயண ஏற்பாடுகளைச் செய்யலானார். ஆனால், இம்முறை ஜெயா தொலைக்காட்சி நிகழ்வுக்கு!

எனக்கோ, சென்னையைப் பற்றி அவ்வளவாக அறிமுகம் கிடையாது. இருந்தாலும், பதிவுலகின் மேல் நம்பிக்கைச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினேன். ஈரோடில், வழியனுப்பி வைத்தார்கள் மாப்பு கதிரும் ஆரூரனும். பாலாண்ணன் வாழ்த்தினார்.

அடை மழையுனூடாக, அபலையாய் வந்திறங்கியவனைக் கோயம்ப்பேட்டில் வந்து அரவணைத்தார் அண்ணன் அப்துல்லா. விருந்தோம்பலால் அடித்துத் துவைத்தார் அண்ணன். எண்ணங்கள் ஆட்டுவித்தது. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

தொலைக்காட்சி நிலையம்... தயாரிப்பாளர் என்னை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை வடிவமைப்பாரோ எனத் தயங்கி நின்றேன். அவரோ, தமிழை முன்னிலைப்படுத்தினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது தமிழக ஊடகத் துறையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டார். எமக்கோ, இரட்டிப்பு மகிழ்ச்சி! அண்ணன் சரவணன் (உ.த) அவர்கள் அறிமுகப்படுத்திய விதம் அப்படி. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!

நிகழ்ச்சியை முடித்ததும், அண்ணன் அப்துல்லா வசம் நாம். எண்ணங்கள் கரைபுரண்டு ஓடியது. கடற்கரைக்கு, பிறந்த பிள்ளையை அழைத்துச் செல்வது போல வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார். பதிவர் சந்திப்பு நடக்குற இடம் இதாண்ணே என்றார். புன்னகை வழிந்தோடியது. வாழ்க பதிவுலகம்!!

கோவைக்கு விமானத்தில் சென்று, சென்ற வேகத்தில் மீண்டும் சென்னை. இம்முறை அமெரிக்காவுக்குத் திரும்ப. பிற்பகல் மூன்று மணியில் இருந்து, இரவு பதினொரு மணி வரைக்கும் என்ன செய்வதென யோசித்திருந்த நேரமது.

எண்ணங்கள் கைகூடி வந்தது. எழுத்தாள்ர், இதழியலாளர், பண்பாளர் எனச் சகலதும் எழுதிக் கொள்ளலாம்தான்... அவற்றால் எங்கள் எண்ணங்கள் கூடவில்லையே? ஆம், நண்பர் யாணன் வந்திருந்தார் விமான நிலையத்திற்கு. பக்கத்துலதாங்க அய்யா வீடு, வாங்க வீட்டுக்குப் போலாம் என்றார். ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

வீட்டிற்கு அழைத்துச் சென்று, நாளைய பதிவர்கள், சாதனையாளர்களான அவர்தம் இளவல்களோடு களிப்புற்று மகிழ்ந்தோம் நாம். சின்னஞ்சிறு மகன்களே ஆனாலும், தீர்க்கம் கண்களில் வழிகிறது அவர்களுக்கு. நல்ல எண்ணங்கள் அவர்களுள்... ஏனென்றால் அவர்களும் நாளைய பதிவர்களே! வாழ்க பதிவுலகம்!!

விமான நிலையம் வந்து ஏற்றிவிட்டுச் சென்ற, அன்பரும் பதிவருமான யாணன் அவர்கள், இதோ தொலைக்காட்சியின் ஊடான நம் எண்ணங்களையும் வலை ஏற்றியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மீதும், நம்மீதும் பற்றுக் கொண்ட அவரது எண்ணங்களும் நமது எண்ணங்களே! வாழ்க பதிவுலகம்!!








தமிழால் இணைந்தோம்!!!

9/06/2010

நிச்சயமாப் பாருங்க மக்கா!!!


US$ 15000 விலை மதிப்புமிக்க சந்தனச் சிற்பம்.... இதில் மொத்த மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பு.

==============

கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில யாருமே சரியாப் புழங்குறது இல்லைங்க வருத்தம் யாருக்கோ இருக்காம். Buzz(உசுலு) மற்றும் மின்னஞ்சல்ல புலம்பிட்டு இருந்ததை இங்கயும் பதிஞ்சிடலாமே??

கட்டாயம் அப்படின்னா, நிபந்தனையின் பேரில் செய்வது.
அவசியம்ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது
நிச்சயம்ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது
கண்டிப்பான்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது....

உதாரணம்: ஒருத்தர் ஒரு நிகழ்ச்சிக்கு வரவேண்டியதைத் தவிர்க்க முடியாது அப்படின்னா, அவசியம் நீங்க வந்தே ஆகணும் அப்படின்னு சொல்ணும்.... அதைவுட்டுபிட்டு, கண்டிப்பா வரணும்னோ, நிச்சயமா வரணும்னோ சொல்லப்படாது....

compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே மக்கா?? அவ்வ்வ்......

============

சரிங்க மக்கா, நிச்சயமாப் பாருங்க என்ன? என்னத்த?? நண்பர்கள் சிலர் நம்மை ஜெயா தொலைக்காட்சியில ஏத்திவுட்டு இருக்காங்க.... செப்டம்பர் 7ந் தேதி காலை 8 மணிக்குக் காலைக் கதிர் நிகழ்ச்சியில ஒளிபரப்பு ஆகப் போகுதாம் நிகழ்ச்சி... நிச்சயமாப் பார்த்துட்டு, உங்க கருத்தைச் சொல்லுங்க மக்கா....




பகிர்வுக்கு நன்றி வெயிலான்!!!

8/03/2010

இது இவருக்குத் தெரியும்!

இந்தப் படம் இந்த இடத்துல இருக்குன்னு, தளபதி நசரேயனுக்கும், மாடு மேய்ப்பருக்கும் தெரியும்!



7/27/2010

கோவையில் கூடிடுவோம்!!!

அனுதினமும் மின்னூடகங்களினூடாகப் பேசி மகிழ்கிறோம். சிலவேளைகளில், மின்னூட்டு முகம் பார்த்தும் கூடப் பேசி மகிழ்கிறோம். என்றாலும், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் சூழலில் கிடைக்கப் பெறும் தாயகக் கடிதங்கள் கண்டு அடையும் உவகைக்கு முன்னால் தொலைபேசுதல் என்பது எளிதாய்த் தோற்று விடுகிறதே?

என்னதான் கடிதங்களை வைத்திருந்து, வைத்திருந்து வாசித்து மகிழ்ந்தாலும், இதோ வந்தேன் உனைக் காணவென்று முன் தோன்றி, முகம் கொடுத்துப் பேசுவதன் முன் கடிதங்கள் நனைந்த அப்பளங்களாகின்றன. என்னதான் நயம்பட எழுதி, பணிவு, அன்பு, நேயம் முதலானவற்றை விரித்தாலும், நோக்குதலும் நோக்குதலும் இடும் பிணைப்புக்கு ஈடாவதில்லை.

நேரில் சென்று, முகம் கொண்டு, பார்த்து, பேசி, தமிழால் இணைந்திடத்தான் ஆசை. காலதேவன் கஞ்சனவன்; அளந்துதானே கொடுக்கிறான்? எனவேதான், இந்த எளியவனிவன், தம் பணிவார்ந்த அழைப்பை, வரி வடிவத்திலே உங்கள் முன்னே விரித்திடச் செய்திடுகின்றேன்.

எம் தாயகத்து வலையுலக உறவுகளே, உம்மில் பலர் எப்படியும் வந்திடுவோம் என ஏற்கனவே இசைந்திட்டீர். மகிழ்ச்சி! நீவிர் மட்டும் வந்திட்டால் போதுமென எண்ணாது, இன்னும் பல அன்பர்களைக் கொணர்ந்து சேர்த்திடுவீர். இசைந்தோரல்லாது இருப்பாரும், வந்திடுவீர் கண்டு மகிழ்ந்திடுவோம்.

ஆம், தென்மேற்குப் பருவச் சாரலில் குளுகுளுக்கும் கோவைதன்னில் கூடிடுவோம்... நட்பு வட்டத்தை விரியச் செய்திடுவோம்... நூல் அறிமுக விழாவென்றே அரங்கம் பிடித்தோம். பதிவர் பெருமக்கள் வந்திட இசைந்திட்டார். இசைந்தோர் அனைவரும் விழாவினூடே இனித்துக் கதைத்திட நேரம் கிட்டாதேயெனப் பணித்திட்டார், விழா துவங்குமுன்னே பதிவர் கூடலென!!

ஆம், வலையுலக நண்பர்காள், வந்திடுவீர் எதிர்வரும் ஞாயிறு, 01082010, பிற்பகல் மூன்று மணிக்கு, கோவை அன்னபூர்ணா வளாக கங்கா அரங்கம் நோக்கி! நேரில் காண்போம்; உறவு கொண்டாடிடுவோம்!!

இதோ, அருட்சுடர் பதிப்பகத்தார் வெளியிட்ட, எம் வலைப்பதிவுகளின் சில இடுகைகளை உள்ளடக்கிய நூலின் அறிமுக விழா குறித்த அழைப்பிதழும்!!

===========================

பழமைபேசியின் ஊர்ப் பழமை நூல் அறிமுக விழா

01082010
ஞாயிறு மாலை 4.30 மணி
கங்கா அரங்கம், அன்னபூர்ணா, இரத்தின சபாபதி புரம்,
கோயம்பத்தூர்



7/09/2010

வட அமெரிக்க வலைப்பதிவர்களின் சில படங்கள்!!!

மக்களே, என் நினைவுக்கு எட்டிய வரையில், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட பதிவர்களை இந்த மூன்று நாள் விழாவின் போது நான் சந்தித்ததாக அறிய வருகிறேன். என்னிடம் உள்ள படங்கள் இவை மட்டும்தான். மற்றனவற்றைச் சக பதிவர்கள், பகிர்ந்து கொள்வீர்களாக!!!



இந்தா..... யாரிந்தப் பதிவர்??

யாருங்க இந்தாளு??



அமெரிக்கத் தலைநகரில் முத்தமிழ் விழா 2010, அழைப்பு!

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்
முத்தமிழ் விழா 2010

இடம்:
Northwest High School,
13501 Richter Farm Road,
Germantown, MD 20874.

ஜூலை 10, 2010 சனி மாலை 3 மணி முதல் இரவு 10.30 வரை

நிகழ்ச்சிகள்
இயற்றமிழ்

கவிஞர் தாமரை (திரைப்படப் பாடலாசிரியர்), சொற்பொழிவு

பட்டிமன்றம்: பேராசிரியர் பர்வீன் சுல்தானா (விஜய் தொலைக்காட்சி) அமெரிக்க மண்ணில் தமிழ்க்கல்வி, பண்பாடு வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது பெண்களா? அல்லது ஆண்களா?

தோழர் தியாகு (உணர்வுமிகு தமிழ்ப் பேச்சாளர், சென்னை)

திரு. எழிலரசன் (இராசாமணி), த‌மிழ் ஒலிப்பில் “ழ” விழிப்புண‌ர்ச்சி(பாடல்களுடன்)

பேராசிரியர் ஜெயராமன் பாண்டியன் – மொழியும் இனமும்

செல்வி ப்ரியாமணி, திரைப்பட நடிகை (பார்வையாளர்களுடன் இணைந்து அளிக்கும் நிகழ்ச்சி)

இசைத்தமிழ்

திருமதி லதா கண்ணன் – இசை சங்கமம்

திரு. கிளெமெண்ட், திரு. அல்டிரின், திருமதி சுஜா – காக்கை சிறகினிலே..

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி – ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலாஜி

நாடகத்தமிழ்

நாடகம்: மெரிலாண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் – வசூல்ராசா MBBS

மாபெரும் கிராமிய நடனம் – கலைராணி நாட்டிய சாலை மாணவிகள் குழு நடனங்கள்

நாடகம்: சுதந்திர அடிமைகள் (வெர்ஜீனியா நண்பர்கள்)

இதர விபரங்களுக்கு: peter.yeronimuse@gmail.com

பின்குறிப்பு: அட ஆமாங்க, நாமளும் அங்க இருப்போம்.... எல்லாரும் வந்திடுங்க! இஃகி!!

7/08/2010

இவர்கள் யார், யார்??


மக்கா, நீங்களே கண்டுபிடிச்சுகுங்க....

7/01/2010

அமெரிக்காவில் அண்ணன் அப்துல்லா!!!

ஏய்... என்னையா இது?? இரவு முழுக்க மின்னஞ்சலோ மின்னஞ்சல்....இத்தனை பேருக்கு அண்ணன் மேல் அக்கறையா?? ஆச்சரியமும் மகிழ்ச்சியும்!!!

என்னால ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பதில் எழுத இப்ப நேரம் இல்லை.... குளிச்சி, ஆயத்தமாகி விமான நிலையத்துக்கு உடனே ஓடணும்.... ஆகவேதான் இந்த இடுகை....

அண்ணன் நல்லபடியா வந்து சேர்ந்தாரு... இப்ப நித்திரையில இருக்காரு.... எழுந்ததும், நியூயார்க், நியூயார்க்னு பாடிட்டே வலம் போகப் போறாரு.... மத்தபடி அண்ணனுக்குன்னு தனியா ஒரு பதிவுத் தொடர் எழுதலாம்தான்.... ஆனாப் பேரவைத் திருவிழா இருக்கே?

எழுந்ததும் அவரையே எழுதச் சொல்றேன்... அண்ணே... உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு....

6/30/2010

தமிழ்ச் சேவகன் சின்னப்பையன் சத்யா

ஆற்றுவார் ஆற்றல் பணிதல், அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை! இக்குறளுக்கு இலக்கணமானவர்; இளகிய மனதுக்குச் சொந்தக்காரர்; அதீத நகைச்சுவை உணர்வும் கொண்டவர்; பணிவாகப் பேசி அடுத்தவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அதிசய மனிதர் இவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் எம்மை அழைத்து அளவளாவிக் கொண்டு இருந்தார். அதனூடாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் பேரவையின் திருவிழாவைப் பற்றியும் நினைவு கூர்ந்துவிட்டு, ”தன்னார்வத் தொண்டராக வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். யாரை அணுக வேண்டும்?” என்று வினவினார். அன்றைய நாள் தொட்டு இன்று வரையிலும், தமிழர்களுக்காகவும் தமிழ்ச்சங்கப் பேரவைக்காகவும், அல்லென்றும் எல்லென்றும் பாராமல் உழைத்து வருபவர்தான்
சின்னப்பையன் என்கிற சத்யா அவர்கள்.

கனெக்டிக்கெட் மாகாணம், வாட்டர்பெரியில் நடக்க இருக்கும் தமிழ்த் திருவிழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்த அவரிடம், நாம் கண்ட செவ்வியின் சாராம்சம்தான் இது.

வணக்கம் சத்யா! விழா ஏற்பாடுகளில் வெகுமும்முரமாய் இருக்கிறீர்கள். தங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது??

(வழமையான நகையுனூடே தொடர்கிறார்) வணக்கம், வணக்கம் பழமைபேசி! ஆமாம், இந்த ஏழு எட்டு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் தருணத்தில் இருக்கிறோம். மகிழ்வாய் இருக்கிறேன். கடந்த எட்டு மாத கால அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். அந்த அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட, மேலான அனுபவத்தை அடைந்த உணர்வுதான் மேலிடுகிறது.

மகிழ்ச்சி சத்யா! திருவிழாவுக்கான உங்களது கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. என்றாலும், குழப்பங்கள், ஏமாற்றங்கள், அயர்ச்சி, சலிப்பு, விரக்தி முதலான உணர்வுகளும் உங்களை நிச்சயம் ஆட்கொண்டிருக்கும். அத்தருணத்தில், “இது எல்லாம் ஒரு பொழப்பா” என நினைத்த்து உண்டா??

இல்லவே இல்லை. நான் சார்ந்த சமூகத்திற்குப் பணி செய்வதை என் கடமையாகக் கருதினேன். கூடவே, இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை எண்ணிப் பெருமையடையவும் செய்தேன். என் ஈடுபாட்டை அறிந்த அமெரிக்க நண்பர்கள், என்னைப் பாராட்டும் போது பெருமிதம் கொண்டேன் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அமெரிக்க நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் போல, சில தமிழ் நண்பர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பார்களே??

ஆமாம். சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. தமிழர்களுக்கென்று ஒரு அமைப்பு; அதற்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை. பங்களிப்புச் செய்து கொண்டு விமர்சனம் செய்யலாம். எதுவுமே செய்யாமல், புறம் பேசுவது சரியானது அல்ல என்பதே என் கருத்து.

சத்யா, பேரவைக்கும் தமிழ்ச் சங்கத்திற்கும் முன் அறிமுகம் இல்லாதவர் நீங்கள். அப்படியான சூழலில், தமிழ்ச் சங்கம் மற்றும் பேரவையின் முன்னோடிகள் உங்களை நட்த்திய விதம் பற்றிக் கூற முடியுமா??

அஃகஃகா! எட்டு, ஒன்பது மாதம் தொடர்ந்து வேலை செய்வதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியவில்லையா? மிகவும் நல்லபடியாக, சகோதர சகோதரிகள் போலவே நட்த்தினார்கள். ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் அறவே இல்லை. இனியும் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனியிடம் கொடுக்கப்பட்டு இருப்பது போலவே உணர்கிறேன்.

அப்படியானால், மற்றவர்களுக்கு??

என்ன கேள்வி இது?? தனியிடம் என்றால், எனக்கான இடம் அது. அது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்து இருக்காமலா போயிருக்கும்?? இன்னுஞ் சொல்லப் போனால், என்னைவிட மிக அதிகமாக உழைப்பவர்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள்.

பேரவையின் சிறப்பு என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

புலம் பெயர்ந்த நாட்டிலே, வட அமெரிக்காவிலே இருக்கிற தமிழர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரும் ஒரு கட்டமைப்பு. தமிழர்களாகிய நாம் எல்லோருமே அதை வலுப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எம் ஆவல்.

அதிகார மையம் போன்று யாராவது செயல்படுகிறார்களா? ஆமெனில், அதைப் பற்றி விரிவாக்க் கூற இயலுமா??

என்ன இது? நல்ல கேள்வியே உமக்குக் கேட்கத் தெரியாதா?? அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நாளில் இருந்தே, நான் விழா ஒருங்கிணைப்பாளருடைய வழிகாட்டுதலில்தான் வேலை செய்து வருகிறேன். எங்கள் ஊரைச் சார்ந்த
முனைவர் பழனி சுந்தரம் அவர்கள்தான், அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தலைவர். ஆகவே, அவருடன் சேர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பின்னாலேயே நானும் பயணிப்பேன்.

பேரவைப் பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளு முன்னரே, பேரவையைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தீர்களா??

இல்லை. சென்ற ஆண்டு விழாவின் போது, உங்களுடைய வலைப்பூவை அவதானித்திருந்தேன். அதுதான் எனக்குக் கிடைத்த அறிமுகம்.

அப்படியானால், பேரவையின் மீது வைக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருந்து, உமக்கு அவை பற்றிய விபரங்கள் தெரியாமலும் இருக்கலாம் இல்லையா??

விமர்சனங்கள் சரியானதாக இல்லாமலும் இருக்கலாம் இல்லையா? இந்த எட்டுமாத காலமாக அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியெல்லாம் எதுவும் என் கண்களுக்குப் புலப்படவில்லை. அதற்கும் மேலாக, தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டமும் இல்லை. தமிழர்கள் ஒன்று கூடி, விழாவைக் கொண்டாட வேண்டும். கல்வி மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வளவுதான் என் மனதில் தோன்றுவது.

இப்படி தினமும் நள்ளிரவு வரை உழைக்கிறீர்களே? குடும்பத்தாரின் அணுகுமுறை எப்படி இருக்கிறது எனச் சொல்ல முடியுமா??

துவக்கத்தில் விரக்தியாகத்தான் பேசினார்கள். பெரும் குழுவாகப் பலரும் கூடி வேலை செய்யத் துவங்கியதைக் கண்டதும், விரக்தியானது மறைந்து ஒரு புரிந்துணர்வு வந்து விட்டதாக உணர்கிறேன் நான்.

சத்யா, உங்களைப் பேரவைக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த்தில் எனக்குப் பெருமை; தமிழர்களுக்குப் பெருமை; குறிப்பாக, பதிவுலகுக்குப் பெருமை! உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!! என்னிடம் கேட்க வேண்டியது ஏதாவது உள்ளனவா??

நீங்கள் நிறைய இலக்கிய நூல்கள் படித்து வருவதாக அறிகிறேன். இளைஞர்களுக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா எனச் சொல்லுங்கள்.

மொழி வளம் கூடும். மனம் பண்படையும். கூடவே வாசிப்பனுபவம் பெருகிப் பேரின்பம் கிட்டும்; கிட்டுகிறது என்பதுதான் என் நிலை. நன்றி சத்யா! உங்கள் ஊர்த் திருவிழா சிறக்க எம் நல்வாழ்த்துகள்!!

நீங்களும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக, உங்களுடைய பதிவுலகப் பணி சிறக்க என் வாழ்த்துகள்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!