8/28/2023

சங்கம்

இந்த வார ஈறு ஓர் அக்கப்போரில் கழிந்தது. என்னவெனில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. பிள்ளைகளுக்கு வயலின் வகுப்பு இருந்ததால், நண்பரின் அழைப்புக்குப் பணிய முடியவில்லை. அதன் பதிவு பிறகு கிட்டியது. கேட்டதுமே எனக்குக் கடும் சினம்தான் மேலெழுந்தது. அப்படி என்ன இடம் பெற்றது?

முன்னாள்தலைவர், உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி வினா விடுக்கின்றார். அதற்குரிய குழுத்தலைவர் அவர் தரப்புக் கருத்துகளைச் சொல்கின்றார். இடையில், அக்குழுவின் துணைத்தலைவர் (அமைப்பின் துணைத்தலைவரும் கூட) குறுக்கிட்டு, அவர் கருத்தைச் சொல்கின்றார்.
“எனக்கு குழுவுல என்ன நடக்குதுன்னே தெரியலை. எந்த இன்பர்மேசனும் ஷேர் செய்யுறதில்லை. டிரான்ஸ்பேரன்சியே இல்லை”
கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற செயலாளர் குறுக்கிட்டு, ”எனக்குச் சில கேள்விகள் இருக்கின்றது. கேட்கலாமா?”
“ம்.. கேளுங்க”
“உங்களுக்கு நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி பிரிச்சிக் குடுத்தாங்ளா?”
“ஆமா. நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி, எனக்குப் பிரிச்சுக் கொடுத்தது உண்மைதான்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதேவும், “கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க”
பதற்றம் பற்றிக் கொள்கின்றது. அதற்குப் பின் ஒரே சீர்கேடான சூழல்தான்.
0o0o0o0o0o
செயலரின் செயல் அநாகரிகமானது. குழுத்தலைவரின் செயல் அதைக்காட்டிலும் தரம் தாழ்ந்தது. ஏனென்றால் இது காணொலிக் கூட்டம். வீட்டில் பெரிய பெரிய திரைகளில் குடும்பத்தினர் பார்க்க நிகழ்ச்சியைப் பார்ப்போர் உண்டு. பொறுப்பில் இருப்பவர்களே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்வது ஒப்புக் கொள்ள முடியாதவொன்று. கழிசடைத்தனத்தைக் கழிசடைத்தனம் என்றாவது ஒப்புக் கொள்ள வேண்டுமென ஒரு குழுவில் பதிவிட்டேன். அவ்வளவுதான். நிர்வாகக் குழுவைச் சார்ந்த 5 அல்லது 6 பேர், EST - PST, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருப்பவர்கள், ஒரே நேரத்தில், ஆளுக்காள் ஒரு திசையில் இழுத்துக் கொண்டிருந்தனர். நான் நிதானமாகவே இருந்தேன். குழுவிலும் அவர்கள் செயற்பட்டவிதம் காடைத்தனமாகவே இருந்தது. அதற்கிடையே எழுதியதுதான் இது. இருந்தும் பயனளிக்காமல் போகவே கடைசியில் நாமும் இறங்கி அடிக்க வேண்டி ஆயிற்று என்பது தனிக்கதை.
0o0o0o0o0o
எதுவொன்றையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். குழுவில் அண்மையில் நடந்த ஒரு அலை(flare-up) பார்த்தோம். இந்நிகழ்வையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். எப்படி?
கதையில் நல்லகதை கெட்டகதை என்பதே இல்லை. ஒருகதையில் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதென்பதைக் கற்றுக் கொள்கின்றோம். இன்னொரு கதையில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமெனக் கற்றுக் கொள்கின்றோம். இதுவும் அப்படித்தான். ஒரு பாடம் பயில்வதற்கான ஒன்று, case study.
ஏதோவொரு நிறுவனம். ஒரு பொருளை விற்கின்றது. சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை அல்லது கருத்து. அது நிறுவனத்தின் வணிகத்திற்கு உகந்ததாக இல்லை. என்ன செய்வர்? social media situation management’க்கு தன்னியக்கமாக இருக்கின்ற ஒரு செயலியில் இருந்து அறிவுறுத்தல் செல்லும். உடனே மக்கள் தொடர்புத் துறை களத்தில் இறங்கும்.
அங்கீகரிக்கப்பட்டவர் உடனே அந்தக் கருத்தாளர், பயனரைத் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி, கருத்துக்கு நன்றி சொல்வார். நேரம் ஒதுக்கிக் கருத்துச் சொன்னமைக்காக கூப்பன், அல்லது பரிசுப் பொருள், இலவசசேவை என ஏதாகிலும் ஒன்றைக் கொடுப்பர். மேலும் அந்தக் கருத்து ஏன் எழுந்தது, அதில் மேம்பாட்டுக்கான பற்றியம் ஏதாகிலும் உள்ளதா முதலானவற்றை உள்வாங்கிக் கொள்வர். சந்தடி சாக்கில், நல்ல கருத்து, ஆனால் அந்தச் சொல், அந்தவரியை நீங்கள் சீரமைத்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் அந்த வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வர். இது நிறுவனத்தின் பார்வையில்.
பயனரின் பார்வையில், அவர் அந்தக் கருத்தை நீக்கி விட வாய்ப்புகள் அதிகம். கூடவே அவர் அந்தப் பொருளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவும் விழைவார்.
2008/2009 வாக்கில் பேரவைப் பக்கமே எவரும் வர மாட்டார்கள். பயங்கரவாத அமைப்பு என்றெல்லாம் பேச்சாகி, வர அச்சம். இணையத்தில் நாங்களெல்லாம் அப்படிச் சொல்பவர்களைச் சாடுவதில்லை. மாறாகத் தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவோம்.
அப்போதெல்லாம் இப்போது போலத் தொலைக்காட்சிகள் இல்லை. யுடியூப்கள் இல்லை. சன், ஜெயா, ராஜ், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே. மக்கள் தொலைக்காட்சியில் மட்டும், விழாவுக்கு வந்து சென்றோர் பலர் பேரவை குறித்துப் பேசியதை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அதற்குப் பயனர்கள் குறைவு. எனக்குத் தெரிந்து, ஜெயா தொலைக்காட்சியில் பேரவை குறித்துத் தனிநிகழ்ச்சியாக அமைந்தது நான் கொடுத்த நிகழ்ச்சிதான். அதற்குப் பிறகு தமிழ்மணம் வாயிலாகப் பலர் பேரவையின்பால் நாட்டம் கொண்டனர்.
என்னைக் காட்டிலும் பலர் பேரவைக்காக இந்த சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவை நிறைய. ஒருநாளும் இப்படிக் குழுவாகப் போய் கருத்தாளர்களைக் கையாண்டதில்லை.
-பழமைபேசி.

8/26/2023

What is mob mentality?

Once entering a group, deindividualization and the loss of self awareness can occur. This ultimately results in people thinking as a group rather than as individual and is known as mob mentality. Though mob mentality can be helpful, it is often detrimental.

பரவலாகத் தமிழ் அமைப்புகளில் இப்படியான கலாச்சாரம் ஏற்பட்டு விடுவதைக் காணலாம்.  பேச்சில் கவர்ச்சி, சாதி, பணம் என ஏதாகிலும் ஒன்றில் மிடுக்காக இருப்பார். அவருக்குச் சிலபல நண்பர்கள். அதே சங்கத்தில் வேறொரு குழு. சன்னமாக எதிர் புதிர். ஒரு இன்னொரு குழுவைக் கலாய்க்கும். அதிலொரு இன்பம். கொஞ்சம் கொஞ்சமாக அது உள்ளிழுத்துக் கொள்ளும். சுயசிந்தனை அற்றுப் போகும்.  

இப்படியான சூழல் இளைஞர்கள், குடும்பங்களின் நலனைப் பதம் பார்த்து விடுகின்றது. அண்மையில்தாம் நண்பர் தம் மனைவியை இழந்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளாகவும் தமிழ்ப்பள்ளி, சங்கம் என இருந்திருக்கின்றனர் இணையர் இருவருமே. குழந்தைகள் அவர்கள்பாட்டில். இன்று அம்மையார் தவறிவிட்டார். அவர் சொன்னதிலிருந்து, “தப்புப்பண்ணிட்டேன் பழமை, வேலை, சங்கம், ஸ்கூல், அக்கப்போர்”னே இருந்துட்டேன்.

Your digital footprints speak volumes than your cv. இஃகிஃகி, நான் தமிழ்ச்சங்கச் சூழல்களில் கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளாக இருந்து வருகின்றேன். சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். சுவடுகள் எங்கோ படியெடுக்கப்பட்டுக் கொண்டேவும் இருக்கும். அவை நமக்கே எதிராகவும் திரும்பக் கூடும். காட்டமாக எழுதுகின்றோம்தான்.  அதைச் சிந்தைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். உள்வாங்கிக் கொள்ளாமலே புறம் பேசுவது என்பது அவரவர் விருப்பம்.

இயன்றமட்டிலும் மனதறிந்து நேர்மையாக இருந்து விடுவது.  கூட்டுக்குழுச் சுழலுக்குள் அகப்பட்டுக் கொள்வதில்லை. வாழ்க்கை என்பதே பயணம்தானே? எப்படியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது முக்கியம். எவ்வளவு வேகம், உயரம் என்பதல்லவே!!

-பழமைபேசி. 08/26/2023.

8/23/2023

தகவல் இயங்குநிலை (dynamic data)

அலுவலகக் கூட்டங்களின் போது கவனிக்கலாம். ஏதோவொரு பேசுபொருளின்பாற்பட்டு முன்வைக்கப்படும் கருத்துகளில் இழுபறி ஏற்படும். கூட்டத்தை நடத்துபவர், இது குறித்த தகவல்களை ஆய்வு செய்து விட்டு அடுத்த கூட்டத்தில் மேற்கொண்டு பேசிக் கொள்ளலாமெனக் கூட்டத்தைக் கடத்திச் செல்வார் அல்லது அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டு இன்னார் வேலை செய்யப் பணிக்கின்றேனெனக் கடத்திக் கொண்டு போவார். பேச்சுகளை வளர்ப்பதில்லை. இழுபறிப் பேச்சு என்பது நேரத்தை வீணாக்கவே செய்யும் பெரும்பாலான நேரங்களில்.  ஆகவே தகவலின் அப்போதைய நிலையறிந்து செயற்பட வேண்டியதாயிருக்கின்றது.

மகள்கள் மருத்துவமனை ஒன்றுக்குத் தன்னார்வப் பணிக்குச் செல்வது வழக்கம். அப்படியாக அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகையில் அவர்களின் அலைபேசியில் வழித்தடத்துக்கான செயலியை முடுக்கிவிடக் கோரினேன். “அப்பா, எத்தினிநாளாகப் போய்வருகின்றோம். இன்னமும் டைரக்சன் போடணுமா?”. ஆமாம், போட்டுத்தான் ஆக வேண்டுமென்றேன். காரணம், இம்மாதிரியான செயலிகள் அந்த நேரத்துக்கான தகவலின் அடிப்படையில் செயற்படுபவை. செல்ல வேண்டிய தடம் மாறியும் வரலாம். ஏதோவொரு பாதையில் சாலைப்பராமரிப்பு இடம் பெற்றிருக்கலாம். விபத்து நேர்ந்திருக்கலாம். நிகழ்வு காரணம் முற்றிலுமாக அடைபட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. செயலிகள் அவ்வப்போதைய தகவலின் அடிப்படையில் தடத்தைச் சொல்லக் கூடியவை. ஏனவே பாவித்துத்தான் ஆக வேண்டி இருக்கின்றதென்றேன். “that makes sense" என்பது மறுமொழியாக அமைந்தது.

அம்மாவின் உடன்பிறந்தோர் மொத்தம் 20 பேர் (மூன்று குடும்பத்துப் பிள்ளைகள்). அவர்களுள் மாமா ஒருவரை மட்டும் பார்த்திருக்கவில்லை. எப்படியாவது பார்த்தாக வேண்டுமென முயன்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் அப்படியே குலதெய்வக் கோயிலுக்கும் செல்ல வேண்டுமெனச் சொன்னார். அவரது விருப்பத்தைத் தட்டிக்கழிப்பானேன்? காலையில் வண்டி கிளம்பியானதும், சரிம்மா, கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டுமெனக் கேட்டேன். ஏன், உனக்கு நம் குலதெய்வக் கோயில் எங்கிருக்கின்றதெனத் தெரியாதா என விட்டேற்றியாகக் கேட்டார்.

அதற்கல்லம்மா, போகின்ற வழியில் அண்ணியாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமா? வேறு எவரையாவது பார்க்க வேண்டுமா? அதற்கேற்ப செல்கின்ற வழியும் மாறும்தானே, அதற்காகக் கேட்டேனெனச் சொன்னேன். இல்லை, அண்ணியார் கலக்டர் அலுவலகம் செல்கின்றார், தோட்டம் சென்று துணிமணிகளை எடுத்துக் கொண்டு நேராகக் கோயிலுக்குத்தான் என்றார். சரி, தோட்டத்திற்கு வருகின்றோமெனச் சொல்லுங்கள் என்றேன். தோட்டத்தில் இருக்கும் அண்ணனை அழைத்தால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அலைபேசியில் அண்ணியாரை அழைத்தார். ”கலக்டர் அலுவலகம் செல்லத் தேவையில்லை, தோட்டத்திலும் யாருமில்லை, ஆகவே நான் இருக்குமிடத்துக்கு வாருங்கள், நானும் வருகின்றேன்”. ”இதற்குத்தானம்மா நான் கேட்டது, இப்போது பார்த்தாய்தானே?”. அம்மா சிரித்துக் கொண்டார்.

தகவல் என்பது நொடிக்கு நொடி இயங்குநிலையின்பாற்பட்டு இருக்கின்றது. அலைபேசி, இணையம் உள்ளிட்ட தகவற்தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தம் அதன் இயங்குவேகம் பன்மடங்கு பெருகி இருக்கின்றது. ஆகவே பேச்சுகளில் அக்கப்போர் இடம்பெறுவதென்பதும் பலமடங்கு பெருகியிருக்கின்றது.

வயது மூப்பு, அடுத்தடுத்த மரணங்கள் காரணம், மனம் பணிந்து போய்க் கிடக்கின்றது. தற்போதெல்லாம் எவர் என்ன சொன்னாலும் எதிர்வினைவேகம் கொள்வதில்லை. மாறாக, முன்வைக்கப்படும் தகவலின் தன்மையைத் தெரிந்து கொள்ளவே இயன்றவரை முற்படுகின்றேன். நமக்கு நன்கு அறிந்த தகவல், தற்போது அதன் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். ஆகவே காலாவதியான தகவலை அடிப்படையாகக் கொண்டு முட்டி மோதிக் கொள்வதில் பயனில்லை.