12/30/2022

2022 கடைசிநாள்

கடைசி நாளை உணர்வுப்பூர்வமாகவும் அணுகலாம். ஆக்கப்பூர்வமாகவும் அணுகலாம். ஆனால் நமக்குத் தேவையானது, உகந்த அளவில் இரண்டுமேயாகும். உணர்வுகளுக்கு உகந்த இடமளிக்காவிட்டால் அது எந்திரத்தனமான வாழ்வாகிப் போகும். அறிவுப்புலத்துக்கு இடமளிக்காமற்போனால் அது ஆக்கப்பூர்வமான மேம்பாட்டுக்கு இடமில்லாமற்செய்து விடும். ஆகவே இரண்டையுமே அவரவர் தேவைக்கொப்பச் செய்து கொள்ள வேண்டியதுதான்.

ஆக்கப்பூர்வமான நோக்கில் நாம் செய்து கொள்ள வேண்டியதென்ன?

-அடுத்த 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை எனவொன்று இருந்தாக வேண்டும். வரவு, செலவு, சேமிப்பு என்பதெல்லாம் வரையறுத்துக் கொள்ள வேண்டியது. பொருளாதாரச் சுணக்கம் வருமென்கின்ற நிலை மேலோங்குகின்ற போது, வருவாய் இழப்பை எதிர்கொள்ளவும் திட்டமிட வேண்டியதாயிருக்கின்றது.

-கடன் இருந்தால், அது அடைபடும் வேகம், வட்டி, இவற்றையெல்லாம் கூர்நோக்கித் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

-குழந்தைகளின் கல்விக்கட்டணம், பயணம் முதலானவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

-சேமிப்பின் வேகம், இருப்பு, அளவு முதலானவற்றைச் சீராய்வு செய்து கொள்ள வேண்டும்.

-ஓய்வூதியக் கணக்கில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இனம் கண்டு திட்டங்களை வகுத்துக் கொள்ளப்பட வேண்டியது. நமக்குப் பின்னான பயனாளர்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-மருத்துவச் செலவீட்டுச் சிறப்புக் கணக்கில்(healthcare spending account), கடத்துபணத்துக்கும்(ரோல்-ஓவர்) எஞ்சிய பணம் இருப்பின், இரவு 12 மணிக்கு முன்பாக, அப்பணம் கொண்டு அனுமதிக்கப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

-எல்லாக் கணக்குகளின் கடைசிநாள் இருப்பு உள்ளிட்ட விபரங்களைத் தரவிறக்கி ஆவணப்படுத்திக் கொளல். ஒவ்வொன்றிலும் நமக்குப் பிறகான பயனீட்டாளரின் பெயர் பதியப் பெற்றிருத்தல் வேண்டும்.

-கிரடிட் ஸ்கோர் கண்டறிந்து, தேவையற்ற கணக்குகளை முடித்துக் கொளல், ஈட்டுப்புள்ளிகளின் நலத்துக்கேற்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

-காப்பீட்டு(இன்சூரன்ஸ்)த் திட்டங்களை மறுசீராய்வு, திட்டமிடுதல் முதலானவற்றை மேற்கொள்தல்

-மரணம், நலமின்மை என்பது யாருக்கும் எப்போதும் நேரலாம். உயில் என்பது அவசியம். கூடவே வாழ்வியற்தெரிவுகளை வரையறுத்துக் கொள்ளக்கூடிய ஆவணங்களை(லிவ்விங் வில்)ப் புனரமைத்துக் கொள்ள வேண்டும்.

-கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), வாகன ஓட்டுதல், மருத்துவத்துறை உள்ளிட்ட தொழில்சார் உரிமங்கள்(லைசென்ஸ்) புதுப்பிப்பு, வரி செலுத்துநாட்கள், மருத்துவப் பரிசோதனைக்கான நாட்கள் உள்ளிட்ட யாவற்றையும் தத்தம் நிகழ்காட்டியில்(காலெண்டர்) குறித்துக் கொளல்.

-தொடர்பு வளையத்தில்(ஃபோன், சோசியல் மீடியா, மின்னஞ்சல் முதலானவை) இருக்கின்ற தொடர்புகளில் உறுப்பினர்களைச் சேர்த்தலும் நீக்கலுமாகச் சீர்படுத்திக் கொளல்.

-குறிப்பேட்டில்(டைரி) ஆய்வு, திட்டமிடுதல் மேற்கொள்ளலாம்.

-நிழற்படங்கள், காணொலிகள் முதலான ஆவணப்படுத்தலை முறைப்படுத்திக் கொள்ளலாம். சேமிப்பில் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான ஆவணங்களின் மின்நகல்களை ஏதோவொரு இணையக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நேரம் பிடிக்கும். ஒதுக்கிச் செய்து கொள்ளத்தான் வேண்டும். இன்று செய்ய முடியாவிட்டாலும் கூட, அதனதற்கான நேரத்தைக் காலண்டரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். Every task, goal, race and year comes to an end, therefore, make it a habit to FINISH STRONG.

உணர்வுப்பூர்மாக அணுகப்பட வேண்டியதும் அவசியம். எப்படி? நடப்பு ஆண்டில் நாம் செய்த தவறுகள், மேம்பாடுகள், இழந்தவை முதலானவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து குறித்துக் கொள்ள வேண்டும். நம்மால் சமூகத்துக்கு விளைந்த நன்மைகள் என்ன? கூர்நோக்க வேண்டும். 

முன்பெல்லாம் அவர்களாகவே சத்தியமங்கலம், கோபி எல்லாம் நல்லா இருக்கும் என்பார்கள். ‘இல்லை, நான், உடுமலை பொள்ளாச்சிக்கு இடைப்பட்ட அந்தியூரைச் சார்ந்தவன்’ என்பேன். இப்போதெல்லாம் அப்படியில்லை. மேம்பட்ட சாலைவசதிகள் ஏற்பட்டுவிட்டதன் காரணமாக, மதுரை, திண்டுக்கல், பழநி எனச் செல்பவர்கள் எல்லாம் எங்கள் ஊர் வழியாகச் செல்கின்றனர். செல்லும் போது, ’அந்தியூர்’ எனும் ஊர்காட்டிப் பலகையைப் படம் பிடித்து எனக்கு அனுப்பி வைக்கின்றனர். வாரம் ஒருமுறையாவது, முன்பின் தெரியாதோர் அப்படி அனுப்பி வைக்கின்றனர். சமையற்குறிப்புகளையும், மரபுசார் விழுமியங்களையும் ‘பொட்டிதட்டிச் சித்தர்’ எனும் பெயரில் (கம்ப்யூட்டர் பொட்டியைத் தட்டுபவன்) அவ்வப்போது எழுதுவது வழக்கம். இன்று பரமத்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த அன்பர் அங்கிருக்கும் ’பொட்டிதட்டி’ எனும் ஊர்காட்டிப் பலகையின் படத்தை எனக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இப்படித்தானே இருக்கும் என் எழுத்துகளில் அறியக் கொடுக்கின்ற சிந்தனைகளும், தகவல்களும்? ஏதோவொரு தாக்கத்தை, வாசிக்கும் எவருக்கோ ஏற்படுத்தும்தானே? அதனைச் சரியாகவும் நேர்மையாகவும் அறத்தோடும் நான் செய்தாக வேண்டும்தானே? அக்கறையோடு சொல்கின்றேன். தமிழ் அமைப்புகளிலே, பொதுத்தளங்களிலே அப்படியான அறம் என்பது வணிகத்தாக்கத்தினால் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. பொய்யும் புரட்டும் தங்குதடையின்றிப் புரள்கின்றன. எங்கு பார்த்தாலும் மாயக்கணக்கு உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. எதற்காக?? சிந்தனைவயப்படுவோம்! மாற்றம் மனிதத்தை வார்த்தெடுக்கும்!!

The bad news is time flies. The good news is you’re the pilot. 

12/28/2022

மாயக்கணக்குகள்

”தினத்தந்தி"யில் சிந்துபாத் கதையைப் படித்துவிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறையைச் சேர்ந்தவன் யான். தொலைக்காட்சி வந்த புதிதில் தூர்தர்ஷனில் ஷோபனா ரவி வாசிக்கும் செய்திக்காக காத்திருக்க வேண்டிய தலைவிதியும் எமக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறகு, சன் தொலைக்காட்சி அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்பு, பல பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் உருவானதும் உடைந்தது. பிறகு, பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகளின் இடத்தை பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்தன. அண்மையில், அவ்விடத்தை இணையத்தில் வெளியாகும் யூடியூப் செய்தி சானல்கள், வாட்ஸ் அப் குழுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அப்போதிருந்து இப்போதுவரை, செய்திகளை வாசித்து நாட்டு நடப்பையும் உலகையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஒருவருக்கு, உலகம் ஏதோவொரு பதட்டத்தில், அழிவின் விளிம்பில் எப்போதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்ற விவரிப்பே கிடைக்கும்.

ஆனால் பாருங்கள், எங்கள் தெருவில் இருக்கும் மூன்று முஸ்லிம் கடைக்காரர்கள் எவரும் தமிழ்நாட்டு "ஷாஹின் பாக்"கிற்காகக் கடையை அடைத்துவிட்டு போகவில்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் தலித் மக்கள் நேற்று தொடங்கி என்னவென்றே தெரியாத மாரியம்மன் பூசைக்காக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஸ்பீக்கர்களை அலரவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் பல சினிமா/அரசியல் கிசுகிசுக்களும், வாரத்திற்கு ஒரு தமிழ் சினிமாக் குப்பையும், வருடத்திற்கு இரண்டு மூன்று ஹீரோக்களின் கழிவும், வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. முகநூல் பக்கத்தையும், வாட்ஸ் அப்பையும் திறந்தாலோ, எங்கும் போராட்டம், எதிலும் போராட்டம் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகை எப்படிப் புரிந்துகொள்வது? ப்ச்செ!”

வளர்மதி என்பார் பிப்ரவரி 22ஆம் நாளன்று இப்படியாகத் தன் நிலைத்தகவலைத் தம் முகநூல் கணக்கின் வழியாக வெளியிட்டு இருக்கின்றார். நமக்கும் அதே காலகட்டப் பின்னணிதான். புலம்பெயர் மண்ணில் வாழ்கின்றோம். பன்னாட்டுப் பண்பாடுகள், கூடவே நமக்கான அனுபவம் என்பதைக் கொண்டு பார்க்கின்றோம். புலப்படுகின்றது. நம் ஐம்புலன்களின், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என இவற்றின் உள்ளீடுகள் அவை எவையாகினும், அவற்றை இருவகையாகப் பிரித்து விடலாம். ஆமாம். உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, உள்நோக்கமெதுவுமற்றது என்பதாகப் பகுத்து விடலாம்.

பார்க்கின்றோம். வாசித்தல், காட்சிகளைக் காணுதல் என்பனவாக. செவிகளால் ஒலிகளை உள்வாங்குகின்றோம். பேச்சு, பாட்டு, இசை, சமிக்கையொலி இப்படியாக. சுவைக்கின்றோம். இயற்கையின்பாற்பட்ட பொருள், சமைக்கப்பட்ட பொருள், சுவையூட்டப்பட்ட பொருள் எனப் பலதரப்பட்டதையும் சுவைக்கின்றோம். மணக்கின்றது. இயற்கையின்பாற்பட்ட மணம், செயற்கையின்பாற்பட்ட மணம், மறைக்கப்பட்ட மணம், உருவாக்கப்பட்ட மணம் எனப் பலவாக. துடுவுணர்வு, அகவுணர்வு, அது எதுவாகினும் அதிலும் சுயம்புவாக ஏற்படுவது, ஊக்கியால் ஏற்படுவதெனப் பார்க்கலாம். இத்தனையிலும்தான் இருக்கின்றது, உள்நோக்கம் கொண்டதும், உள்நோக்கமில்லாததும்.

வாட்சாப்பில் நண்பர் ஒருவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். தமிழ்ச்சூழலின் மிகப் பெரிய பேச்சாளர். பேசுகின்றார். ”மருத்துவரிடம் வருகின்றவர்களுள் 60+% எந்த நோயுமில்லாமல், சும்மாவேனும் ஏதோ குற்றங்குறைகளைச் சொல்பவர்கள். மருத்துவர் மருந்தும் கொடுக்கின்றார். ஆனாலும் நோயாளிக்குக் குணமாவதில்லை. எப்படி ஆகும்? அவருக்குத்தான் எந்த நோயும் இல்லையே?”, என்றெல்லாம் பேசி, கேட்பவர்களை இலயிக்கச் செய்து கைதட்டல் வாங்கிச் சென்று விடுகின்றார். நமக்குப் பார்த்தவுடன் நகைப்புத்தான் மேலிட்டது. காரணம், அவருக்கு அவருக்கான ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. பேச்சு சிறக்க வேண்டும். வந்திருந்தோரிடம் பாராட்டுப் பெற வேண்டும். பேச்சுக்கலை மேலோங்க வேண்டுமென்பதெல்லாம் அவருக்கான உள்நோக்கம். உள்வாங்குகின்ற நமக்கு அப்படியான உள்நோக்கம் என்ன இருந்து விடப் போகின்றது? அறிதலும், கற்றுணர்தலும் என்பதைத் தவிர.

குழுவில் மறுமொழியிட்டேன். “ஒருவேளை, நோயே இல்லாமல் அறிகுறிகளாகப் பலதைச் சொல்லி, ஒருவர் தொடர்ந்து மருத்துவம் கோருவாரேயாகின், அந்த மருத்துவர், அந்த நபரை உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் ஒரு நோய்தான்”. வாசித்த மற்றொரு நண்பர், பகடியாக, உன்னைத்தான் உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டுமெனச் சொன்னார். அதற்கும் நான் மறுமொழிந்தேன், “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி -பழமொழி”.

சரி, பேச்சாளர் குறிப்பிட்டது உண்மைச் செய்தியா? உண்மை கலந்த வளைக்கப்பட்ட செய்தி என்பதாகக் கொள்ளலாம். நோயே இல்லாமல் தமக்கு நோய் இருப்பதாகக் கருதி சோகையில் ஆழ்ந்து போவோர் உண்டுதாம். ஆனால் அது மூவரில் இருவருக்கு அந்த நிலை என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்டது. உலகின் நடத்தையை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? ஏதோ ஒரு இடத்தில் பத்துப் பேரை ஆய்ந்து விட்டுச் சொன்னால், அது சேம்ப்ளிங் எர்ரர்(கணக்கீட்டுத் தவறு) என்பதாகத்தான் இருக்கும். உண்மையாகவே இருந்தாலும், அது மனநோய் என்றுமாகி விடுகின்றது. 

மேற்கூறப்பட்டது ஓர் எடுத்துக்காட்டுக்கான நிகழ்வுதாம். இப்படி, காலையில் விழிக்கப்பெற்று மீண்டும் கண்ணயரும் வரையிலான எல்லாவற்றிலும் உள்நோக்கமுடையன, இல்லாதன என்பது உண்டு. இவற்றை எதிர்கொள்ளப் பழகிவிட்டால், ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்க்கப்பெற்ற இன்புடை நாளாகவே அமையும். வருத்தமே ஏற்பட்டாலும் கூட, அது, நியாயமான வருத்தமாக, சோகமாக, துயராக இருக்கும். இல்லாதவொன்றுக்கு வீணாய்ப் பறிகொடுக்கும் பொழுதாக இராது.

தானியம் எனும் எமன், வேட்டையாடி புலால் உண்ணுவதே மனிதர்களின் வாடிக்கை என்றெல்லாம் சொல்லி ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் தலைவர் நல்லகண்ணு அவர்களோடு இருநாட்கள் இருக்கும் வாய்ப்புக் கிட்டியது. பேச்சுவாக்கில், அவருடைய உணவுப்பழக்கம் குறித்து வினவலானேன். அவர் சொன்னதிலிருந்து, “புலால் உண்ணுவதில்லை. கூடுமான வரையிலும் வேக வைக்கப்பட்ட பண்டங்கள், இட்லி, சோறு என்பதைக் காய்கறிகளோடு உண்கின்றேன்”. புலால் உண்பதில்லையா என எதிர்வினாவும் விடுத்தேன். ஐம்பதுகளின் மத்தியில் விட்டு விட்டதாகச் சொன்னதாக, என் நினைவு. முதல்வர் கருணாநிதி அவர்களும் இறைச்சியைத் தவிர்த்து, மீன், மஞ்சள்க்கரு தவிர்த்த முட்டை மட்டும் உட்கொள்பவராக இருந்தார் என எங்கோ படித்த நினைவு. இவர்களெல்லாம் உடற்பேணுதலுக்கான நம் வழிகாட்டிகள். நம் உடலுக்கேற்ற உணவு என்பதை, நம் உடலின் தன்மையைக் கவனித்து அமைத்துக் கொள்ள வேண்டியது நம்மால் மட்டுமே முடியும் என்பதுதான் உள்நோக்கமற்ற தகவலாக இருக்க முடியும்.

உள்நோக்கமற்ற செய்திகளுக்காகவும் அறிதலுக்காகவும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டி இருக்கின்றது. நாம்தாம், உள்நோக்கமுடை மாயக்கணக்குகளையும் மெய்க்கணக்குகளையும் புரிந்துகொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். பழகிக் கொண்டால், உலகில் கொள்ள வேண்டிய இன்பங்கள் கோடானுகோடி!



12/23/2022

மாயக்கணக்கும் மெய்க்கணக்கும்

’அடுத்தவர் சாப்பாட்டை நீ எப்படிக் குறை கூறலாம்? அப்படியா, இப்படியா?’யென கொந்தளிப்போடு அணுகினார். புரிந்து விட்டது. ஏதோவொரு மாயக்கணக்கொன்று நம்மைத் துரத்திக் கொண்டு வந்திருக்கின்றதெனப் புரிந்து விட்டது. ஒருவருடைய உடை, உணவு, உருவம் குறித்துக் கருத்துரைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்லயெனும் கருத்துடையவர்களல்லவா நாம்?

சொல்லப்பட்டது இதுதான், “What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!”. இதில் எங்கும் நாம் எந்த உணவு குறித்தும் சொல்லவில்லை. எழுதப்பட்டதற்குத்தான் நாம் பொறுப்பேற்க முடியும்; புரிந்து கொள்ளப்பட்டதற்கெல்லாம் நாம் பொறுப்புடையவர் அல்லர். I am only responsible for What I Say, Not for what you understand.

What you eat, how you are! இன்னமும் இந்தக் கருத்தில் ஊன்றியே இருக்கின்றோம். ஆமாம், நாம் உண்ணும் உணவே நாம் எப்படி இயங்குகின்றோமென்பதைத் தீர்மானிக்கின்றது. எப்படி?

பலதரப்பட்ட சத்துகள் உள்ளடங்கிய உணவை உட்கொள்கின்றோம். உடல் சமநிலை கொண்டு இயங்கத் தலைப்படுகின்றது. ஏதோவொன்று கூடவோ குறையவோ உண்கின்றோம். உடலில் இருக்கின்ற பல்வேறு உறுப்புகளும் பல்வேறு வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. உடல் என்பதே ஒரு வேதிச்சாலைதான். குறிப்பிட்ட வேதிப்பொருள் கூடும் போதோ, குறையும் போதோ ஏதோவொரு உறுப்புக்குப் பணிச்சுமை கூடும் அல்லது அந்த உறுப்பின் செயல் குன்றும். கோளாறு(கள்) தோன்றுகின்றன. அந்தக் கோளாறு மனத்தைக் குலைக்கின்றது. சினம், எரிச்சல், உறுதியின்மை, தொய்வு, சோகை இப்படியான உணர்வுகளில் ஏதோவொன்று தலையெடுக்கின்றது. Now read it again. What you eat, how you are!

இன்று வீட்டில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு.  அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சிறு நெகிழிக்குமிழி இருக்கக் கண்டேன். “என்ன இது?” “அதா, ஒரே அசிடிட்டி. ஏண்ட்டாசிட் போட்டு ஆஃபிசுக்கு எடுத்திட்டுப் போனன்” “ரொம்பத் தப்பாச்சே?” “எனக்குத் தெரியாதா?”. அக்கப்போர். 

“போனவாரம் பூரா ஒரே சைனசு, தலைவலின்னு மாத்திரைகளப் போட்டன். அது அசிடிட்டிய இழுத்து வுட்ருச்சி”

“அதுக்கு? ஏண்ட்டாசிட் போட்டா, இருக்கிறது நியூட்ரல் ஆகிடும். செரிமானத்துக்குப் பத்தலையேன்னு ஏசிட் மறுக்கா மறுக்கா சுரக்குமே?”

“ஞே ஞே”

“அதுக்குப் பதிலா எச்2 பிளாக்கர் போட்லாம் தேவையின்னா. ஆனா அதுவும் தேவையில்லன்னுதா நினைக்கிறன். துன்ற சாப்பாடு செரியாத் துன்னணும்”

சினமேறி விட்டது தலைக்கு. ஆனாலும் நம் சொற்பொழிவைக் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. -3 டிகிரிக் குளிரில் வீட்டை விட்டு வெளியேதான் போக முடியுமா??

காரம் மிகுந்த உணவு, செரிமானத்துக்குக் கடினமான உணவு உண்கின்றோம். செரிமான நீர்கள் கூடுதலாகச் சுரக்கத்தான் வேண்டும். அதுவே தொடர்கதையாகி விடும் போது, உணவுக்குழாயின் மேற்புறமாகச் செரிமான நீர் ஏறிவிடும். விளைவாக, நெஞ்சுக்கரிப்பு தோன்றும். மோர், தயிர், மருந்து, மாத்திரை என சமாளித்து விடுகின்றோம். பொதுவாக இது எல்லாருக்கும் தெரிந்த கணக்கு. பொதுப்புத்திக்கு அவ்வளவாகத் தெரியாதவொன்றும் உள்ளது.

சிறுகுடலிலே ஐநூறு வகையான நுண்ணுயிரிகள் 20 இலட்சத்துக்கும் மேலாக உள்ளன. அவையும் செரிமானச் செயற்பாடுகளுக்கு வித்தாக இருக்கின்றன. சில பல நேரங்களிலே அவற்றால் செரிக்கப்படுகின்ற ஏதோவொரு மாவுப்பொருள் செரிக்கப்படுவதில் தொய்வு. காரணம், அவற்றைச் செரிக்கக் கூடிய நுண்ணுயிரிகள் குறைந்து விட்டன. அவை ஏன் குறைந்தன. அவை விரும்பும் உணவு வெகுநாட்களாக உண்ணப்படவில்லை. ஒரு முப்பது கிராம் மாவுப்பொருளைச் செரிக்க முடியாமல் பத்து லிட்டர் அளவுக்குக் கூட வாயு உருவெடுக்கும். அந்த வாயு கீழாகவும் பிரியலாம். மேலாக வந்து இரைப்பையினூடாகப் பயணித்து உணவுக்குழாய் வழியாக ஊடுருவி தொண்டை(silent reflux), மூச்சுக்குழாயையும் தொடலாம்.

தொண்டையைத் தொடும் போது செருமத் தோன்றும் நமக்கு. வறட்டு இருமல் கூட எழக்கூடும். பேசும்போது அக்கம்பக்கம் இருப்பவர்கள் முகம் சுழிக்கக் கூடும். தொண்டைக்கு மேலே இருக்கின்ற நாசிகளில் புகும்போது, அந்நியப் பொருள் ஏதோ தீண்டுகின்றதேயெனக் கருதி மூக்கில் நீர் வடியும் அவற்றை அலசிக் கழுவிவிட. கூடவே நாசித்துவாரங்களின் உட்புறச் சுவர்கள் வீங்கத் தலைப்படும். கண்களைச் சுற்றியுள்ள காற்றறைகளில் இறுக்கம் ஏற்படும். தலைவலி, சைனசு, சளி எனக் கருதி அவற்றுக்கான மருந்து, மாத்திரைகள் உட்கொள்வோம். செரிமானச் சுரப்பு நீர்கள் கூடுதலாகச் சுரக்கும். மீண்டும் மருந்து, மாத்திரைகள். அதற்கான பக்க விளைவுகள். இஃகிஃகி, read it again. What you eat, how you are! 

என்ன செய்யலாம்? பட்டினி கிடக்கலாம். இரைப்பை, செரிமானமண்டலத்தில் இருக்கின்ற உணவெல்லாம் தீர்ந்து வெளியேறும் வரையிலும் பட்டினி கிடக்கலாம். அவ்வப்போது தேவையான நீர் குடிக்கலாம். படிப்படியாகத் தொல்லைகள் நீங்கியதும், பசியெடுக்கத் தோன்றியதும், காய், கனி, சத்து மிகுந்த சமச்சீர் உணவை உட்கொள்ளலாம். தொடர் தொல்லைகளாக இருக்கும் போது நல்ல மருத்துவரைத்தான் நாட வேண்டும்; நாமாக அள்ளி வீசக் கூடாது வேதிப்பொருட்களை நம் உடலெனும் வேதிச்சாலையில்!

என்ன, எப்போது சாப்பிட்டாரோ தெரியாது. இருமல், தலைவலி வந்திருக்கின்றது. அதற்கான மருந்துகள். அது, செரிமான நீரேற்றம் காற்றேற்றத்தைக் கூட்டி இருக்கின்றது. தற்போது அதற்கான மாத்திரை. இது இன்னமும் நீரேற்றத்தைக் கூடுதலாக்க இடம் கொடுக்கும். இப்படியானவை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், வேதிசாலையானது முன்கூட்டியேவும் தன் பணியை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு ஆட்படும். எல்லாம் இந்த மாயக்கணக்குகள் செய்யும் வேலை! மாயக்கணக்குகள் செய்யும் வேலை!!

What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!



12/21/2022

மனத்தடை

எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!

எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வரவில்லை. செல்லக் கூடாதென்பதும் இல்லை. அமையவில்லை, அவ்வளவுதான். உலகில் நடக்கின்ற, இடம் பெறுகின்ற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் காரணங்களைத் தேடுகின்றோம். கிடைக்காத பொழுதில் நாமாக ஒன்றைக் கட்டமைத்துக் கொள்கின்றோம். இதுதான் நம்மில் பலருக்குமான நிம்மதிக் கேட்டுக்கும் வழிவகுக்கின்றது. இவர் என்னிலிருந்து தோட்டத்தைக் காண்பிக்கத் தயங்குகின்றாரென நானே ஒரு காரணத்தைச் சூட்டிக் கொண்டு வெம்பிப் புழுங்கிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு ஒருபொருளுமில்லை. இம்முறை அந்தப் பக்கமாக அன்னையர் தொழுதல் மிகப் போற்றுதலாக அதன் போக்கில் இடம் பெற்றது. அப்படித்தான் எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களின் தோட்டம் சென்று வந்தோம்.

நிறையத் தகப்பன்கள் வளர்ந்து ஆளாகிய மகளைக் குழந்தைகளாகவே எண்ணி சோறூட்டுவது முதற்கொண்டு செய்வதைச் சிலாகித்து வலைதளங்களில் மனமுருகுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதே தகப்பன்கள்தாம் அன்னையர்களையும் குழந்தைகளாகவே பார்க்கின்றனர் என்பதும்.

அம்மாவுக்கு ஏட்டுக்கல்வி என்பது அறவே கிடையாது. ஆனாலும் கூட, நிர்வாகம், நிதிமேலாண்மை(ஃபைனான்சிங்), இடர் மேலாண்மை(crisis management) இப்படிப் பல துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வீட்டில் வசதி இருந்திராது. விருந்திநர்கள் வந்து விடுவர். புறக்கொல்லை, இட்டேரி, ஊர்நத்தம் என எங்கிருந்தாவது ஏதாவது  காய் கனி தாவரம் பண்டங்களைக் கொணர்ந்து ஒரு நிறைவான விருந்தோம்பலை அரங்கேற்றி விடுவர். இதற்கெல்லாம் என்ன அடிப்படை? மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. வந்திருப்போரைக் கவனித்து அனுப்ப வேண்டுமென்கின்ற ஆவல் பிறந்து விடுகின்ற போது அது ஈடேறி விடுகின்றது. அண்ணன் காசி ஆறுமுகம் அவர்களின் தாயார் அவர்களது செய்கைகள் இப்படியானதாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். இப்படி நிறையப் பேர் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தோட்டத்தை விட்டுக் கிளம்பி வருகின்றபோது பேசலானார் மாப்பு. ஆங்கில வரி வடிவங்களின் அடையாளம் கூடத் தெரியாது. ஆனாலும் காணொலிக் கூட்டங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு குறித்த நேரத்தில் அவற்றில் கலந்து கொள்வது, பேசுபொருளின்பாற்பட்டுக் கற்றுக் கொள்வது, யுடியூப்களில் எது சரியான செய்திகள், போலிகள் என்பனவற்றைப் பகுத்துணர்ந்து கொள்வது முதலானவற்றைக் குறிப்பிட்டு, ஒரு குழந்தையின் அசைவுகளைப் பார்த்துப் பார்த்து இலயித்து இன்புறும் தகப்பனைப் போலே பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கும் அடிப்படை இதுதாம், மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. துள்ளுமனம் வாய்த்து விடுகின்றது அவர்களுக்கு. அதுவே நோயெதிர்ப்பு ஆற்றலுக்கும் வழிவகுத்து மூப்பெய்துதலின் வேகத்தையும் குறைத்து விடுகின்றது.

காசி, அயோத்தி இன்னபல இடங்கள் குறித்த வடநாடு என்பதான பயணம், சென்று வர வேண்டுமென அனுமதி கோரினார். எண்பத்து இரண்டு வயது மூதாட்டி முடங்கிக் கிடக்காமல் உலகைச் சுற்ற வேண்டுமென நினைப்பதே மனத்தடை இல்லாமைக்கான வேர்தான். அந்த வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதற்கு நான் யார்? அடுத்தவர்களின் ஊக்குவிப்பு என்பதான புறத்தாக்கமாக அல்லாமல், போய்வர வேண்டுமென்கின்ற திண்ணிய மனம் உங்களிடத்தே இருக்குமானால் சென்று வாருங்களெனச் சொன்னேன்.

வானூர்திப் பயணத்திலே தள்ளுவண்டி(வீல்சேர்)க்குப் பணித்திருக்கின்றார்கள். கண்டு மனம் பதைப்புக்கு ஆட்பட்டிருக்கின்றது. என்னால் மற்றவர்களைப் போல இயல்பாய் நடக்க, ஏற முடியும், மறுத்து விட்டிருக்கின்றார். இவரின் ஊக்கம், தொய்வின்மையைக் கண்டு மற்றவர்கள் சோம்பலுக்கு ஆட்படாமல் ஊக்கம் கொண்டிருந்திருக்கின்றனர். அன்றாடமும் காலையில் வந்து இவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். வீடு திரும்பும் தருவாயில், மனநிறைவுடன், அடுத்தடுத்த பயணங்களுக்கும் தாங்கள் வர வேண்டுமெனக் கோரியிருக்கின்றனர். உவப்புடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பயணத்தில் தம்மை ஈடுபடச் செய்த மருமகள் குறித்தும் பாராட்டுதல்களைப் பணித்துக் கொண்டார். மழலைச் சொல் கேட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது.

குழந்தைகள் எல்லாருமே பிறவிக்கலைஞர்கள்தாம். வளர்ந்து ஆளாகி மூப்பெய்திப் பெரியவரானதும் அந்தக் கலைஞருக்குள் இருக்கும் கலைக்கு உயிரூட்டுவதில்தான் சிக்கல்! நீரை ஊற்றினால், எந்தச் செடியும் உயிர்ப்புடன் இருக்கும்தானே!!



12/11/2022

அமெரிக்கக் கதை

ரொம்ப நாட்களாக, அமெரிக்கக் கதை ஒன்றை எழுதியாக வேண்டுமென்கின்ற ஆசையானது படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. தூக்கம் வந்தபாடில்லை. ’கதை என்பது ஒவ்வொருவர் சொல்லும் போதும் அது அவருடைய கதையாக தனித்துவம் அடைந்து விடுகின்றது. அதிலே அமெரிக்கக் கதையென்றால் எப்படி இருக்க வேண்டும்? அமெரிக்க மண்ணிலே இருந்து கொண்டு எழுதினால் அமெரிக்கக் கதை ஆகிவிடுமா? அமெரிக்க மண்ணின் தனித்துவத்தை, அமெரிக்க மண்ணுக்கேவுரிய ஏதோவொன்றைக் கதைப்பதாக இருந்தால் அது அமெரிக்கக் கதை’, இப்படியெல்லாம் பலவாக்கில் தான்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தது சிந்தை.

கதவுக்கு வெளியில் இருந்து வந்த ஓசை தாக்கியது, “காலையில ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சிரோணும். குளிரடிக்கிதுன்னெல்லாம் என்னியத் திட்டக் கூடாது. வர்றேன்னு சொல்லி பதிஞ்சு வுட்டது உங்க விருப்பத்தின் பேரில்!”

புதிய ஊரான இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததும் தேடியலைந்தது வயலின் பயிற்றுநருக்குத்தான். எங்குமே சரியாக அமையவில்லை. மணி நேரத்துக்கு நூறு வெள்ளி கூடக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். அலுப்பாய் இருந்தது. காற்றுவழிச் சேதிகளுக்கு இல்லாத வலு வேறெதற்கும் இருக்க முடியாது. ’இந்த வட்டாரத்துலேயே இன்னார்தாம் நெம்பர் ஒன்’ என்பதாக யாரோ ஒருவர் சொல்ல, அன்னாரிடம் நமக்கு வாய்க்குமா? மனத்தடை. ஒருநாள் போய்த்தான் பார்ப்போமேயென்று அண்டை மாநிலத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கே சென்றாயிற்று.

“யார் நீங்க?”

“இவங்க என் மகர். வயலின் கற்க ஆசை. வாலண்டீரிங் செய்யப் போன இடத்துல இருந்தவங்க உங்ககிட்டப் போகச் சொன்னாங்க!”

“என்ன வாலண்டீரிங்? எவ்ளோ காலமாச் செய்றீங்க?”, இப்படியாக தன்னார்வப் பணி குறித்த கருத்தரங்கமாக அந்த வீடு உருமாறிக் கொண்டிருந்தது. 

“வாய்ப்பே இல்லை. புது ஆட்களுக்கு என்னிடம் வாய்ப்பே இல்லை. யாராவது கடைசி நேரத்துல வர முடியாமற்போனால், அந்த நேரத்திற்காக அழைப்பேன். நீங்க வரலாம், உங்களுக்கு விருப்பமிருந்தால்”

மனைவியாருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. “மகிழ்ச்சி. எப்ப, எந்த நாள், நேரம்னாலும் சரி. அழையுங்க. வேலைக்கு விடுப்பு எடுத்துகிட்டாவது அழைச்சிட்டு வந்திருவன்”

ஓரிரு ஒரு மணிநேர வகுப்புகள் கிடைத்தன. டிசம்பர் மாதம் வந்து விட்டது. வயலின் டீச்சரின் குழு, ஆங்காங்கே இருக்கும் மூத்தோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சர்ச்சுகள், நகரமன்றங்கள் முதலானவற்றுக்குத் தன்னார்வத் தொண்டுப்பணியாக விழாக்கால வயலின் இசைநிகழ்ச்சிகள் வாசிக்கச் செல்வர். நாங்களும் வருகின்றோமெனச் சொல்லவே, உங்கள் குழந்தைக்கு அந்த அளவு வாசிப்புத்திறம் இல்லையேயென்பதாகச் சொல்ல, உடனிருந்து மற்ற மற்ற உதவிகள் செய்ய வருகின்றோமெனச் சொல்லி ஆயிற்று. அருகிலிருந்த அம்மையாரின் கணவரும், “ஆமாம், நானே எல்லாக் கருவிகள், ஒலிபெருக்கிகள் எல்லாவற்றையும் பொருத்திக் கொண்டிருக்க முடியாது! உடன் வந்தால் உதவியாய் இருக்கும்!!”.

டிசம்பர் மாதம் முழுதும் தன்னார்வப் பணிகள். அதிற்கிடைத்த பழகுதருணங்களின் கொடையாக, ஜனவரியிலிருந்து வாராவாரம் ஒரு ஒருமணிநேர வகுப்பு என்றாகிப் போனது மகருக்கு.

டீச்சரம்மா சீனாவுக்குப் பயணம். வீட்டில் இரு பிள்ளைகள், அவரது கணவர். இரு பிள்ளைகளென்றால் அவரது பிள்ளைகளே அல்லர். பெற்றோரில்லாக் குழந்தைகளுக்கு மாகாண அரசாங்கம்தாம் அம்மா அப்பா. அரசாங்கத்திடம் இருந்து இப்பிள்ளைகளை வளர்த்துப் போற்றும் பொறுப்பை பொறுப்பான தன்னார்வலர்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படியான பிள்ளைகள்தாம் இவர்கள். இவர்களுக்குச் சரியான நேரத்தில் சப்பாடு போக்குவரத்து இல்லாமற்போய் விடுமோயென்கின்ற கவலை அம்மையாருக்கு. நம்மாள் நேரம் பார்த்துப் போட்டுவிட்டார் ஒரு போடு, “திருமிகு லில்லி, மூன்று வாரங்கள்தானே? அன்றாடமும் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு போகும், நீங்கள் சென்று வாருங்கள்!”.

அடுத்த இரு மகர்களுக்கும் கூடச் சேர்த்து வயலின் வகுப்புகள் துவங்கி விட்டன. மூத்தவர், உள்ளூர், வட்டாரம், மேற்குச்சரகம், மாகாண அளவிலான போட்டிகளிலெல்லாம் பங்குகொண்டு பரிசுகள் பெறும் நிலைக்கு வந்துவிட்டார். இளையவர்கள் லில்லியின் போக்கில் கரைந்து விட்டிருந்தனர். அவர்களுடைய அந்தநாள்ப் பொழுதில் நாமும் கலந்து கொள்வதென ஆகிவிட்டது. நம்மைத்தான் துரத்திக் கொண்டிருக்கின்றதே இந்த அமெரிக்கக் கதையாசை?

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆசுதிரேலியா, நியூசிலாந்து எனப் பல நாடுகளுக்கும் பொதுப் பண்பாடுதாம் என்றாலும் அமெரிக்காவுக்கெனத் தனித்துவம் உண்டு. அது ஒரு நிறுவனப்படுத்தப்பட்டதும் அன்றாட வாழ்வியலில் இரண்டறக் கலந்ததுமாகும். அதுதான் உணவுக்கொடைக் கூடங்கள். ‘ஃபூட்பேங்க்’ என்பது எங்கும் இருக்கும். இல்லாத நகரங்களில்லை. ஒன்றிய அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க வேளாண்துறையின் நேரடிக் கண்காணிப்பில் இவையங்கும். அவற்றுக்கென முறைசார் நெறிமுறைகள், சட்டதிட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இவற்றினூடாக யாரும் பணம் பண்ணக்கூடாது. அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது. தரமற்ற உணவுகள் இடம் பிடிக்கக் கூடாது. சார்புத்தன்மை, ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அனைத்தும் உடனுக்குடனே ஆவணப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எவருக்கும் வினாவெழுப்ப உரிமை உண்டு.

வளவுகளிலே வசிக்கின்ற எவரும் உணவுப் பொருட்களைக் கொடையாக வழங்கலாம். கடைகளிலே, பேரங்காடிகளிலே இருந்து வண்டி வண்டியாகப் பொருட்கள் கொடையாக வந்து சேரும். வேளாண்பெருமக்கள் விளைபொருட்களை அனுப்பி வைப்பர். பெருநிறுவனங்களிலே மிஞ்சிய எஞ்சிய பொருட்களை வீணாக்காதபடிக்குச் சென்று மீட்புப் பணிகள் இடம் பெறும். இப்படியெல்லாம் சேகரம் செய்யப்பட்ட பொருட்கள் கொடைக்களஞ்சியம் வந்து சேரும். ஒருவளாகத்துக்குச் சராசரியாக ஐந்து டன் முதற்கொண்டு பத்து டன்களுக்கும் மேலாகக் கூட பொருட்கள் வந்து சேரும். வந்து சேர்ந்த பொருட்கள், பிரித்தெடுக்கப்பட்டு வகைமைப்படுத்தும்(sorting) பணிகளுக்கு உள்ளாகும். அந்தந்தப் பொருட்கள் அந்தந்தத் தட்பவெப்பத்தில் சேமிக்கப்பட்டு இருத்தலும் வேண்டும். வகைமைப்படுத்தப்பட்ட பொருட்கள் அடுத்தநாள் பொட்டிகட்டலுக்கு(packing) உட்படுத்தப்படும்.

ஆளுயரப் பொதிகளில் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் என்ன பொருள் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நயம்பார்த்து, காலாவதிநாள் பார்த்து,  தரச்சான்று பார்த்து, பொட்டணவுறுதி பார்த்து, அந்தப் பொருளுக்கான வகைமைப் பெட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். இதுதான் வகைமைப்படுத்தும் பணி என்பதாகும். இப்படியான வகைமைப் பெட்டிகள் அடுத்தநாள் எடுத்துச்செலுத்திகள் (கன்வேயர் பெல்ட்) பின்பாக நிறுத்தப்படும். ஒவ்வொரு அணியிலும் பத்து பேர், பதினைந்து பேர் வரிசையாக நிறுத்தப்படுவர். முன்னே எடுத்துச்செலுத்தியில், ஒருவர் அட்டைப்பெட்டியை வைப்பார். நகர்ந்து கொண்டிருக்கும் பெட்டியில் ஒருவர் முதற்பொருளை வைப்பார். அடுத்தவர் அடுத்த பொருளை வைப்பார். இப்படியாக அந்த அட்டைப் பெட்டியில் கொடையாகக் கொடுக்கப்பட வேண்டிய பொருட்கள் இடம் பெறும். கடைசியின் தானியமக்காம அந்தப் பெட்டி பூட்டப்பட்டு இறுக்கமாக ஒட்டப்பட்டுவிடும். இப்படியான பெட்டிகள் உடனுக்குடனே வண்டியிலேற்றப்பட்டு, ஊரகப்பகுதிகளிலே இருக்கும் மூத்தகுடிமக்கள், ஏழை எளியோர், பள்ளிகள் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஓரிரு மணி நேரத்துக்குள்ளாக விநியோகிக்கப்பட்டு விடும்.

“அப்பா, do you know all the rules & regulations about sorting? You better learn before We leave!"

"ஞே ஞே”

ஆவணக் கோப்பு ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் மகர். விற்பனைநாள், உகந்த பயனாக்கநாள், பயனாக்கநாள், கெடுநாள் இவற்றுக்கான வேறுபாடுகளை அறிந்து கொண்டேன். விற்பனைநாள்(sell by) என்பது இந்த நாளுக்குள் வணிகர் பொருளை விற்றாக வேண்டும். அதற்குப் பின் அங்காடியில் வைத்திருத்தலாகாது. உகந்த பயனாக்கநாள் (best if used by) என்பது இந்த நாளுக்குள் பயன்படுத்தப்பட்டால் பொருளின் விழுமியம் மேம்பட்டதாக இருக்கும். பயனாக்கநாள் (use by) என்பது உற்பத்தியாளரால் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாள், கெட்டுவிடும் என்பதாகக் கருத முடியாது. கெடுநாள் (expiry date) என்பது, இந்த நாளுக்குப் பின் பொருள் கெட்டுப் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதைக் குறிக்கின்ற நாள்.

”கண்ணூ, இதெல்லாம்தான் ஏற்கனவே நமக்குத் தெரியுமே?”

“பேசாமப் படிங்க அப்பா. தெரிஞ்சதுனால படிக்கக் கூடாதுங்றது எப்பயுமே இல்லை. மறுபடியும் படிக்கும் போது, புதுப்புரிதல் ஏற்படலாம். நினைவடுக்குகளின் மேலடுக்குகளுக்கு எடுத்து வருவதாக அமையலாம். ஏதோவொன்று காலாவதியாகி புதுத்தகவல் நடைமுறைக்கு வந்திருக்கலாம். படிச்சிட்டு வரச் சொல்றாங்க, படிச்சிட்டுத்தான் போகணும். நாமாக எல்லாம் நமக்குத் தெரியும்னு நினைக்கிறதுதான் அறியாமையின் முதல் அறிகுறி. பேசாமப் படிங்க”, பல்பு வாங்கிக் கொண்டு மீண்டும் ஊன்றிப் படிக்கலானேன்.

ஒவ்வொரு பொருளின் தரப்பிரிப்புகள் எப்படியெல்லாம் இடம் பெற வேண்டுமென விவரிப்புகள் இடம் பெற்றிருந்தன. மூடி வளைந்திருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். வெளிப்புறத்தில் ஒடுக்குகள் இருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். ஏன்? ஒடுக்குள் நேர்கின்ற நேரத்திலே உட்புறம் அழுத்தம் கூடியதால் விளிம்புகளில் நுண்ணிய அளவில் இடைவெளிகள் ஏற்பட்டிருக்கலாம். அதன் நிமித்தம் நுண்கிருமிகள் உட்புக வாய்ப்பிருக்கின்றது. எனவே அதைக் குப்பையில் போட்டுவிட வேண்டும். பொட்டலங்கள் கிழிந்திருந்தால் குப்பையில் போட்டுவிட வேண்டும். ஒட்டுநறுக்குகளில் தேதிகள், சத்துவிவரப்பட்டியல் போன்றவை இல்லாவிட்டாலும் குப்பை. புதிதாய்த் தெரியும். வீணாகின்றதேயென அகங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் குப்பையாக்கத்தான் வேண்டும். இப்படியான பொருளைக் கொடுத்து ஒருவர் நலம் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் கொடுக்காமல் இருப்பதே நன்றாம். கடுமையான சட்டதிட்டங்கள்.

களஞ்சிய வளாகம் சென்று சேர்ந்து விட்டோம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர் எல்லாரும். சிலநாட்கள், நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டவர்கள் தன்னார்வப் பணிகளுக்காய் வருவர். சிலநாட்களில் வயதுக்கு வந்தோர் மட்டும் வருவர். ஒரு சில நாட்களில் மட்டும்தான் சின்னஞ்சிறு பிள்ளைகள் முதற்கொண்டு குடும்பத்தினர் வரலாம். அப்படியானநாள்தாம் இன்று.

“அப்பா, வாங்க நாம அந்த ரெண்டாவது டேபிள் எடுத்துக்கலாம். அம்மாமாரி வேகவேகமாச் செய்யாதீங்க. அது தவறு”

“யேய், என்னியப்பத்திப் பேசறியா? நான் மெதுவாப் பார்த்துப் பார்த்துத்தான் செய்யுறன்"

வேலையை விரைவாகச் செய்வதென்றால் எல்லாராலும் எளிதாகச் செய்து விட முடியும். ஆனால், மெதுவாக, நிதானமாகச் செய்வது மிகவும் கடினம். வேலையே செய்யாமல் இருப்பதோ, குறைவான வேகத்திலோ செய்வதல்ல மெதுவாகச் செய்வதென்பது. விரைவைக் கைவிட்டு விட்டு, முழுக்கவனத்துடன் மனம் ஊன்றி ஒன்றியவாக்கில் செய்தாக வேண்டும். பொதிகளுக்குள் எல்லாப் பொருட்களும் இருக்கும். விலை கூடிய உயர்ரகப் பொருட்களாக இருக்கும். அவற்றைக் குப்பையாக்க மனம் ஒப்பாது. ஆனால் நாம் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செய்தாக வேண்டும். தேதி பார்த்து, ஒடுக்கம் பார்த்து, விளிம்புகள் பார்த்து, கிழிசல் பார்த்து, பொருளின் பெயர் பார்த்து, நூற்றுக்கு நூறு எல்லாமும் உகந்தபடிக்கு மேம்பட்ட வகையில் இருந்தால்தான் அந்தப் பொருள் அடுத்த கட்ட வகைமைப் பெட்டிக்குச் சென்று சேரலாம். ஆகவே விரைந்து வேலை செய்யத் தலைப்படக் கூடாது. இது ஒரு வேள்விப்பணி.

ஒரு தன்னார்வலர் மூன்று மணி நேரம்தான் இந்த வகைமைப்படுத்தும் பணியை(sorting)ச் செய்யலாம். அனுபவத்தின் பேரில் அப்படியானதொரு வரையறை. அதற்கும் மேல் ஒருவர் பணிக்கப்பட்டால், மூளை களைத்துப் போய் ஏனோதானோவென வேலை பார்க்கத் தலைப்பட்டு விடுவர். அதனாலே உணவுப் பொருள் பாதுகாப்பு, தரம் என்பவற்றுக்குக் குந்தகம் நேரிடலாம். ஆகவே மூன்று மணி நேர வரையறை. எல்லா உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, கவனம், அக்கறை, பொறுப்பு, கடமை முதலான உணர்வுகள் மட்டுமே கொண்டு குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொண்டு கடக்கும் அந்த மூன்று மணி நேரம் என்பது எத்தகையவரையும் நிர்வாணப்படுத்தியே தீரும். கட்டுக்கடங்காத எந்த மனமும் கட்டுக்குள் வந்தே தீரும்.

“என்னங்க, எவ்ளோ பொருள் வீணாகுது? மலையாக் குமிஞ்சு கிடந்தது பார்த்தீங்கல்ல?”, வணிக அங்காடிகளில் பொருள் வாங்கிக் குவிப்பதென்பது ஒரு போதை. நம்மவர் அப்படி அல்லதான், என்றாலும் கூப்பான்கள் அசைத்து விடுகின்றனவே? அப்படியானவர் சொல்கின்றார். 

”ஆமா ஆமா. இந்த டிசம்பர் விடுப்புக்காலத்துல நம்ம வூட்லயும் எல்லாத்தையும் ஓர்சல் பண்ணுனாக்கூட நல்லாத்தா இருக்கும்”

“ஆமாங்க, நோ மோர் ஷாப்பிங். நிறைய டொனேசன்ல போடக் கிடக்கு. செரி, மூத்தவளை பத்து மணிக்கு எழுப்பி விட்ருங்க. இட்லியும், நிலக்கடலைச் சட்னியும் காஃபி டேபிள்ல வெச்சிருக்கு.  டே, நடங்கடா. கொஞ்ச லேட்டானாலும் லில்லி திட்டும்”

“அம்மா, மிஸ் லில்லிக்கு?”

“எடுத்தாச்சு எடுத்தாச்சு, மிஸ் லில்லிக்கும் இட்லி, பீநட் சட்னி எடுத்தாச்சு”

நினைவுக்கு வந்தது. லைன்மேன் மகன் மணிமாறனை நாடகத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க வைத்தார்கள் பிச்சுமணி வாத்தியாரும் கைத்தொழில் மாஸ்டரும். மெய்நிகர் வாழ்க்கையிலும் அவன் அதுவாகவே ஆகிவிட்டான்.


12/09/2022

புதுமை

புதுமை என்பது எப்போதும் புதியதாகவே இருந்து கொண்டிருக்கும். மனித நாகரிகம், அறிவுத்திறம் வளர வளர நடப்பில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தேய்வழக்குகளாகத்தான் செய்யும். நமக்குச் சரி என்பதாக இருந்தது நம் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகப் புலப்படும். அதுதான் அறிவியல்.

வயது கூடக்கூட இயக்குநீர்களின்(ஹார்மோன்) சுரப்பு அளவுகள் மாறும். விடலைப் பையனிடம் இருக்கும் துள்ளல், நடுத்தர வயதுள்ள ஒருவரிடம் இருக்காது. காரணம் இயக்குநீர்களின் அளவில் மாற்றம். குறைவதும் கூடுவதும் இயல்பு. ஆனால் இயக்குநீர்கள் ஒன்றுக்கொன்று இயைந்து செல்லக் கூடியன. ஒன்று கூடும் போது இன்னொன்று குறையும். அந்தச் சமன்பாட்டில் இடர்கள் ஏற்படும் போது உளவியற்கோளாறுகள் தோன்றுகின்றன.

உளவியற்கோளாறுகளினால் கவலை, வருத்தம், அச்சம், மருட்கை, சாலேச்சுவரம் உள்ளிட்ட பல உணர்வுகள் மேலிடுகின்றன. பத்து வீடுகள் கடந்து வந்தபின்னும் மனம் உறுதிகொள்ள முடியவில்லை. திரும்பவும் போய் கதவைத் தாழிட்டோமாயென்பதைச் சோதிக்கத் தோன்றுகின்றது மனம். இதுகூட ஓர் உளவியற்கோளாறுதான். இது குறித்துக் கேலி, கிண்டல், எள்ளல் செய்யத் தேவையில்லை.

கடந்த காலத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு நமக்கில்லை. தற்காலத்தில் அப்படியான விழிப்புணர்வுக்கு நாம் ஆட்படுகின்றோம். ஒரு சிறு சொல் போதும், நம் அம்மாவோ அப்பாவோ மூலையில் உட்கார்ந்து அழச் செய்வதற்கு. “அம்மாவுக்கு கண்பார்வைல கோளாறு” ”குருடு” என்பதற்கும், “அம்மாவுக்கு அப்பப்ப கண்பார்வை மங்கலாயிடும்” என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. முன்னைய சொல்பாவனை அவரது மனத்தைப் புண்படுத்தி நிலைகுலைய வைக்கக் கூடியது. மனக்குறைபாட்டினைப் பெருக்கக் கூடியது.

ஆண்டுதோறும் உடற்பரிசோதனை என்பது அமெரிக்காவில் நடைமுறைப்பழக்கம். அத்தகைய சோதனையின் போது கேட்கப்படும் வினாக்களில் முதன்மையானது, மனச்சோகை, மனப்பதற்றம், மனச்சலனம் முதலானவைக்கு ஆட்படுகின்றீர்களா?, ஆம் எனில் அதன் வீச்சு எப்படி? நாளைக்கொருமுறையா? வாரத்துக்கொருமுறையா? இப்படியெல்லாம் வினவுவர்.

நடுத்தர, மூப்பெய்தியவர்களிடம் இப்படி இப்படியான வகையில் பேசக்கூடாது, இப்படி இப்படியெல்லாம்தான் அணுக வேண்டுமெனப் பயிற்றுவிக்கும் சிறப்புப் பயிலரங்கங்கள்கூட உண்டு. தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்வதில்லை. தற்கொலையால் இறந்து போனார் எனத்தான் சொல்ல வேண்டுமெனப் பயிற்றுவிக்கப்படுகின்றது. காரணம், செய்து கொண்டார் எனும் போது, உங்களாலும் செய்து கொள்ள முடியுமென்கின்ற தகவல் உட்பொதிந்து இருக்கின்றது. பின்னைய சொல்லாடலில், இறந்து போவதற்கான வாய்ப்பு அதில் இருக்கின்றதெனும் எச்சரிக்கையுணர்வு வெளிப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட பயிற்சிகள் சமூகத்தில் இருக்கும் எல்லாரிடமும் இருக்குமெனச் சொல்லிவிட முடியாது. ஆகவே, அக்கறையுடன், அன்புடன், வீட்டுப் பெரியவர்களை, தேர்ச்சிபெற்ற விருந்தோம்பல் இருக்கும் கூடங்களிலே வாழப் பணிக்கப்படுகின்றோம். அதைப் போய், வீட்டுப் பெரியவர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான், மூத்தவர்களை மதிக்க மாட்டேனென்கின்றானெனச் சொல்வதெல்லாம்கூட ஒருவகையில் சாலேச்சுவரம்தான். words matter!

12/03/2022

பிரியாணி

”ஐசுகிரீம்கோன் கொறஞ்சது எட்டாவது இருக்கணும், போயி வாங்கிட்டு வாங்க! அருணா ஆண்ட்டி சிக்கன்பிரியாணி கொண்டுட்டே வந்தாச்சு. நீங்க என்னப்பா பித்துப் பிடிச்சமாரி உக்காந்துட்டு இருக்கீங்க? அகோ, அப்பா! ”

நான் இன்னமும்கூட 2001ஆம் ஆண்டிலேயே நிலை கொண்டிருந்தேன். கல்யாணமாகிப் பதினான்காவது நாள். சாயங்காலம் கிளம்பிப் போக வேண்டும். ”மாப்ள மட்டும்தான் அமெரிக்கா கிளம்பிப் போறாறாம். பொண்ணுக்கு எப்ப விசா வரும்னு தெரியாதாம்!”, அங்கிருந்த மரங்களுக்குக் கூட பற்றியம் தெரிந்திருக்க வீடு புழுங்கிக் கொண்டிருந்தது. அப்பா மட்டும் தயங்கித் தயங்கிக் கேட்டார், “மூணு மாசத்துக்குள்ள கூப்பிட்டுக்குவதானே?”. எனக்கு மனமெல்லாம் விஜயாபதிப்பகத்தின் மீதுதான் இருந்தது. ஈரோட்டிலிருந்து எப்படியும் மாலைக்குள் புத்தகம் வந்துவிடுமெனச் சொல்லி இருக்கின்றார்கள்.

அப்படியென்ன அப்பாடக்கர் புத்தகம்? கொங்குச் சிறுகதைகள், யாரோ பெருமாள்முருகனாம், அவர் தொகுக்க காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றதாம். மொகானூர் விஷ்வான், மேட்டுக்கடைப் பழநிச்சாமி, ரெண்டு பேருமே சொல்லி இருக்கின்றனர். அவன்களே வாங்கிக் கொடுத்திருக்கலாம். எப்படியெல்லாம் அலைய விட்டான்கள்?

கடைக்குப் போகும் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதே நான்தான் என்பதை அறிந்து கொள்ளும் தன்நிலைக்கு வந்தேன்.

ஐசுகிரீம் பெட்டிகளை எடுத்து அட்டையைத் தேய்த்த நினைப்பு இருக்கின்றது. அதற்குப் பிறகு மீண்டும் பித்துலோகத்துக்குள் நுழைந்து விட்டிருந்தேன்.

காலம், நினைத்துச் சிரித்துக் கொண்டேன். கொங்குச் சிறுகதைகளில் இருந்த, இந்திரா என்பவர் ஜோதிமணியாகி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். திலகவதி பெரும் பொறுப்பும் செல்வமும் கையாளப் பெற்று ஓய்வுகூடப் பெற்று விட்டார். கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் விடுதலை அடைந்து விட்டார். வீட்டுக்கே வந்திருந்து தங்கிய பெருமாள் முருகன். அந்தப் புத்தகம் இன்னமும் நம்மோடுதான் இருக்கின்றதா? தொகுப்பாசிரியர் பெருமாள் முருகனிடம் காண்பித்து, அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பதிப்பிலேயே இல்லாத இந்தப் பழைய நூலைக் கண்டதில், அதுவும் அமெரிக்காவில் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

திலீப்குமார் புத்தகக்கடை வைத்திருந்தார். வியாபாரம் பண்ணிக் காசு பார்க்கக் கடை நடத்துகின்றனர் இன்று. அன்றெல்லாம் அப்படி இல்லை. கொங்குச் சிறுகதைகள் தேடி அலைந்த இந்தக் கிராமத்தானைப் போல யாராவது தேடி வந்தால், அவர்கள் கேட்பதைக் கொடுப்பதற்கென்றே வீம்புக்காக கடை நடத்திய மனுசன். இவரது மூங்கில் குருத்துக் கதையும் கொங்குச் சிறுகதைகளில் ஒன்று.

”ஏங்க, இதுக்குத்தான் சொன்னது? நேத்தே வாங்கிட்டு வரச்சொல்லி. கொண்டாங்க இங்க. கொழந்தைங்கெல்லாம் காத்திருக்காங்க”, பையைப் பிடுங்கிக் கொண்டு போனார் மெய்யாளுநர். புற உடலை மட்டும்தானே அவரால் ஆள முடியும்?

பயிற்சிப் பட்டறையெனும் சொல்லாடலுக்கே அது நேர் எதிரானது. எப்படி? தொழிற்கூடம் என்பதற்கான பிறமொழிச் சொல், பட்டறை என்பது. அதாவது பலரும் ஈடுபட்டுப் படைத்தல் தொழில்புரியும் கூடம். பயிலுநராக ஈடுபட்டுப் படைத்தற்தொழில் புரியும் இடமாகும் போது, அது பயிற்சிப் பட்டறை ஆகிவிடுகின்றது. ஆனால் அறிவிக்கப்பட்டு இடம் பெற்றிருந்த நிகழ்வோ அறிவரங்கம் போல இருந்தது. அதாவது துறைசார்ந்த ஒருவர் தமது கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றவர் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். மற்றைய எவரும் அந்த வேளையில் படைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

”அப்பா, நீங்க சாப்டலையா? பிரியாணி சூப்பர்”

“நான் ஒரு புத்தகம் தேடிகிட்டு இருக்கன். அப்றம் சாப்ட்டுக்கிறன்”

பயிற்சிப் பட்டறையென்றால் பாடத்திட்டம் இருக்க வேண்டும். சிறுகதைக்கான பாடத்திட்டமென்று ஒன்று உள்ளதா? அமெரிக்காவில் இருக்கும் எந்த நூலகம், துவக்கப்பள்ளியில் கேட்டாலும் கொடுப்பார்கள். இடத்துக்கிடம் சற்று வேறுபடலாம். கதைமாந்தர், கதைநோக்கு, கதையிடம், கதைக்கரு, கதைப்போக்கு என்பவை இன்றியமையாத திட்டக்கூறுகளாக இருந்தே தீரும். இவற்றைப் பற்றியெல்லாம் விரித்துக் கூறி, எடுத்துக்காட்டுகளைச் சுட்டி, மொத்த அணியும் அவரவர் அறிதலுக்கொப்ப உடன்சேர்ந்து கட்டிக் கொண்டே வந்து, பயிற்சியின் நிறைவில் ஆளுக்கொரு கதையை அடுத்தவர் பார்வைக்கு வைத்து கற்றுக் கொள்வது பயிற்சிப் பட்டறையாக, பட்டறிவாக அமையும்.

தேடிய கொங்குக் கதைகள் நூல் கிடைத்து விட்டது. ஆஸ்டின் நகரில் திலீப்குமாருடன் மூங்கில் குருத்துக் கதையில் வரும் கோயமுத்தூர்க் காட்சிகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“ஏங்க, சாப்டுங்க. மிச்சம் இருக்கிற பிரியாணிய அருணா திரும்பக் கொண்டுட்டுப் போனாலும் போவாங்களாயிருக்கும்”

“மூங்கில் குருத்துகளை வீசியெறிஞ்ச அந்த அம்மாவோட கோபம் நியாயமானதுதானே?”

“உங்களுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு. அருணாவோட சிக்கன் பிரியாணிக்கும் உங்க உளறலுக்கும் எதனா சம்மந்தம் இருக்கா?”

“ஓ, சாரி, சாரி. இது வேற. நீ எனக்குக் கொஞ்சம் எடுத்து வெச்சிரு. நான் அப்றம் சாப்ட்டுக்கிறன்”

“என்னமோ மூங்கில் குருத்துன்னீங்ளே?”

“இலக்கியக் கூட்டத்துல கேட்ட கேள்வி அது”

“நீங்க இன்னும் திருந்தவே இல்லியா? இன்னுமா அதைக்கட்டிகிட்டு அழ்றீங்க?”

“இல்ல, நீ போ, நான் வர்றன்”

தேடப்பட்ட, திலீப்குமாரோடு எடுத்துக் கொண்ட படங்களும் கிடைத்தன.

அப்படி என்ன கேள்வி கேட்டாங்க?

“தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.

வெயில் அறைந்து தாக்கியது.”

இந்த வரிகள் கடைசியாக இடம் பெற்றிருக்கு. ஏன்?

முந்தைய பத்தியில் கதைசொலன் அம்மாவின் மீது சினம் கொள்கின்றான். “’நீயே போய்ப் போட்டுக் கொள்’ என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது” என்று சொல்கின்றான். அதற்கு விடை சொல்லும் முகமாகத்தான் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கு முத்தாய்ப்பாக. எப்படி? எதிர்வீட்டுப் பையன் வீட்டிலிருந்து விரைவாக அம்மணமாக ஓடி வந்து அமர்கின்றான். வெயில் அறைகின்றது. அதாவது, அம்மா, குடும்பம் என்பதெல்லாம் ஒருவரின் காத்திரமான உடுப்புகள். உதறித்தள்ளி, உடுப்புகள் இல்லாதவிடத்தே வெயில் அறைய உடம்பு சுடுபட்டுக் கொள்ளத்தான் செய்யும்.

”பாப்புமா, நேரத்துக்கு சாப்டாட்டி வாயில புண் வந்திரும்னு உனுக்குத் தெரியும்தானே? கொஞ்சம் போட்டுட்டு வந்து குடுத்திருக்கக் கூடாதா? செமப்பசி!”

“பேசாதீங்க, மூங்கில் குருத்து, அது இதுன்னு பினாத்திகிட்டு இருந்தது நீங்க. பிளேட்ல போட்டு மூடி வெச்சிருக்கு, போய்ச்சாப்டுங்க போங்க!”

கிட்ட இருப்பது, பிரியாணியாகவே இருந்தாலும் கண்களுக்குத் தெரிவதில்லை!

11/29/2022

நடை

நீங்களும் கூட இதைப் பார்த்திருக்கலாமாயிருக்கும். வாட்சாப்களில் ஒரு மீம் இப்படியாக வைரல் ஆகிக் கொண்டிருந்தது. “எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டுமானால், பணமாகத்தான் பிறக்க வேண்டும்” எனும் துணுக்குடன் நகைச்சுவைக் கலைஞர் வடிவேலு அவர்களின் ஒரு முகபாவனை. கண்டவர்கள் சிரித்துச் சிலாகித்தனர். நான் இடைமறித்தேன்.

நமக்குப் பணம் வந்து சேர்கின்றபோது, இன்பம் கொள்கின்றோம். அதுவே எதிர்பாராத விதமாகவோ, வஞ்சகத்தின் பொருட்டோ பறிபோகின்றபோது வருத்தம், துக்கம் கொள்கின்றோம். உயிரையே கூட மாய்த்துக் கொள்கின்ற செய்திகளைக் காண்கின்றோம். மேலும், நாம் ஏன் எல்லாருக்கும் பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும்? அப்படியானால் பொய்யாக வாழத்தலைப்படுகின்றோம் என்பதுதானே பொருள்? கல்யாண்ஜி அவர்களின் ஒரு கவிதையைச் சுட்டிக் காண்பித்தேன்.

அடுத்தவரை இடிக்காமல்

கைவீசிக் கைவீசி

காலார ஒரு நடை

நடந்து வரவேண்டும்

அது போதும் எனக்கு!

நேரடியாகப் படித்துப் புரிந்து கொண்டு கடப்பதல்ல எழுத்து. ஒரு கணமாவது அதன்பாற்பட்ட வேள்வியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர் மீதான தனிப்பட்ட பண்புகளைச் சுட்டிக்காட்டி வம்பு வளர்க்காமல், மனம் தங்கு தடையின்றித் தன் பயணத்தை மேற்கொள்கின்ற தன்னுமை(liberty) இருந்தால் போதும் எனக்கு என்பதாகப் படிமம் கொள்கின்றது கவிதை. அதுதான் வாழ்வின் முழுப்பயனையும் நமக்கு ஈட்டித்தரும்.

நீர்ப்பரப்பில் ஒரு மீன்

துள்ளிவிழுகையில் கண்டதோ சுடும்பாறை

மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்

மேலும் ஒரு துள்ளலில் மரணம்

மரித்த கணமே பறவை!

தேவதேவன் அவர்களின் இந்தக் கவிதையைப் பலவாறாகப் புரிந்து கொள்ளலாம். அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. அறிவியல் ரீதியாகப் பார்க்குங்கால், சார்பு, சுழற்சி, பரிணாமம் என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம். நீராக இருக்கின்றது. பாறையின்பாற்பாட்டுக் கிடக்கின்றது. பறவையின் அலகில் மீனாக இருக்கின்றது. பின் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது. 

சமூகவியல் ரீதியாகப் பார்க்குங்கால், மற்றுமொரு கோணத்தை நமக்குள் புலப்படுத்துகின்றது. நீர்ப்பரப்பில் இருக்கும் மீன், மனலயிப்பில் துள்ளி விழுகின்றது. விழுந்தபின்னர்தாம் தெரிகின்றது அது சுடும்பாறை என்று. சூடு தாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்டு வந்த பறவை அலகால் கவ்விச் செல்கின்றது. கொடுங்கோலில் அகப்பட்டுக் கொண்டோமேயெனத் துள்ளுகின்றது. அடுத்த கணம் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது.  பேச்சுகளும் அறிவிப்புகளும் போற்றுதல்களும் விளம்பரங்களும் குளிர்விப்புகளுமாய் நம் மனத்தைக் கொள்ளை கொள்ள எத்தனை எத்தனை? இடைவெட்டுப் புரிதலின்றி நேரடிப் புரிதலின்பாற்பட்டு மனத்தைக் கொடுக்கின்றோம். பிறகுதான் சுடுவது புலப்படுகின்றது. அதிலிருந்து விடுபட வழியைத் தேடுகின்றோம். கடைசியில் அவர்களின் இலக்கில் கரைந்து விடுகின்றோம் என்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றது கவிதை.

அடுத்தவர் என்ன நினைக்கின்றார்? எல்லாரும் செய்கின்றனர், நாமும் செய்தாக வேண்டுமென்கின்ற இலயிப்பு(bandwagon effect) போன்றவையெல்லாம் ஒருபோதும் தன்னுமையை ஈட்டித் தராது. அடுத்தவரை இடிக்காமல் கைவீசிக் கைவீசி தன்பாட்டுக்குக் காலார நடைநடந்தால் போதுமானது.


11/27/2022

நன்றி நவிலல்நாள் 2022

நன்றி நவிலல்நாள் விடுமுறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கல்லூரியில் இருக்கும் மகர் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டிலிருக்கும் இரு உடன்பிறந்தாருடன் நாட்களைப் பங்கு போட்டுக் கொண்டார். இடையில் அன்றாடமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயந்திரவியற்பாசறை (robotics project sessions), உடன் படிக்கும் மற்ற மாணவர்கள் 8 பேருடன் வீட்டில் இடம் பெற்றது. கலகலப்பாய் வீடு குதூகலித்துக் கொண்டிருந்தது.

உலகின் ஏனைய பகுதிகளில் இருக்கும் ஆழ்விகள்(cousins), நண்பர்களுடன் மொக்கை போடுவதாக நான் இருந்தேன். சக கசின் ஒருவரை வாட்சாப் குரூப்பில் வம்புக்கு இழுத்தேன். ’நாம்தான் அன்றாடமும் பேசிக் கொண்டிருக்கின்றோமே? அடுத்த தலைமுறையினருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்னமோ?’ என்றார். உடனே சக மாப்பிள்ளை ஒருவர், ‘நாம் இருக்கின்றோம். பேசிக் கொள்கின்றோம்’ என்றார். சிந்தனைக்குள்ளாக்கியது.

ஒருவிதமான காலகட்டம். பெருந்தொற்று இன்னமும் கூட ஓயவில்லை. நிறைய இழப்புகளைப் பார்த்து வருகின்றோம். பரிச்சியமான, அணுக்கமானவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய பற்றக்கூடிய கொழுகொம்புகள் இல்லாமற்போவதான உணர்வும் தலையெடுக்கத்தானே செய்யும்? மகர்களை எண்ணிப் பார்த்தேன். மூவர் இருக்கின்றனர். காலத்துக்கும் உடன் பயணிப்பர். மனம் தணிந்தது. ஒரே ஒரு பிள்ளையாக இருப்போருக்கு? இந்த இடத்தில்தாம் மாப்பிள்ளையின் கூற்று மேலோங்குகின்றது. ‘இருக்கின்றோம்; பேசிக் கொள்கின்றோம்’.

அம்மாவுடன் பிறந்தோர் மொத்தம் எட்டுப் பேர். அப்பாவுடன் பிறந்தோர் ஆறு பேர். அம்மாவின் பெற்றோருடன் பிறந்தோர் பத்துப் பேர். அப்பாவின் பெற்றோருடன் பிறந்தோர் எட்டுப் பேர். இப்படியாகக் கிடைத்திருக்கும் உடன்பிறவாப் பிறப்புகள் கிட்டத்தட்ட 100+ பேர். அஞ்சுக்கு மூன்று பழுதில்லை என்பார்கள். எல்லா 100+ பேருடனும் அணுக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட, இயன்றமட்டிலும் இருக்கின்றோம். இத்தகு நிலை அடுத்த தலைமுறையினருக்கு உண்டா என்றால், நிச்சயமாக இல்லை. வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளை என்பது முதற்காரணம். அடுத்தது வாழ்வியற்சூழல். கூட்டமாக வாழ்ந்திருந்த நிலை போய், தனித்திருப்பதான வாழ்வியற்கூறுகள். என்ன செய்யலாம்? இத்தகு தலைமுறையினர், உடன்பிறவாப் பிறப்புகளோடும் நண்பர்களோடும் அணுக்கம் பேணியே ஆகுதல் நலம்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரு பிள்ளை என்போர், சக உடன்பிறவாப் பிறப்புகளை(cousins)ப் பேணியே ஆக வேண்டும்.

1. உடன்பிறந்தோர் இடத்தை இவர்கள் நிரப்புவர். Not everyone is lucky enough to have siblings. So when that is the case, cousins can be essential to the family dynamic. For those who do already have siblings, cousins can be the extra brother or sister they always wished they had.

2.எல்லா நேரமும் எல்லாவற்றையும் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ சொல்லிக் கொண்டிருக்க இயலாது. ஆனால் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழலில் இவர்கள் கைக்கொள்வர். Cousins will be there to talk with you, laugh with you and shade you when you need it most.

3. என்னதான் பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தாலும், 40/50 வயதென வரும் போது பெற்றோர், சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, மாமா, அத்தை போன்றோர் இழப்பானது பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பது இயல்பு. அத்தகு இழப்புக்கு மாற்றாக இவர்கள் இருப்பர்.  Cousins help to fill in the gap and remind you that you have not lost all of your family because they still got you. Cousins can be that extra love and support you need.

4. வாழ்க்கைப் பயணத்தின் சமகாலப்பயணி என்கின்ற வகையில், சுக துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளவும்  நினைவுகளை, விருப்பு வெறுப்புகளைக் கையாளவும் உற்ற தோழர்களாய் இவர்கள் இருப்பர். Cousins will make you laugh, cry, cry from laughing and so much more. They keep you on your toes.

மேலைநாட்டுப் பண்பாட்டில் சமயக்கூடங்கள் வாழ்வியற்பயணத்துக்கு உதவுவனவாக உள்ளன. அந்தக் கூடத்திலே சென்று சேர்ந்ததும், ஓர் அணியில்(குரூப்/டீம்) கோர்த்து விடுவர். அந்த அணியினர் அணுக்கத்தோடு வாழ்வியலில் சகபயணியாகப் பயணிப்பர். நமக்கோ அத்தகு பண்பாட்டுக் கூறும் இல்லாத நிலையில், Other things may change us, but we start and end with family. And we need such family.

Never underestimate the power of a cousin.

11/25/2022

பெரும்போர் கொள்ளுமா 2023?

சற்றேறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்பு, ’போர் கொள்ளுமா 2022?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினோம். https://maniyinpakkam.blogspot.com/2021/12/2022.html எத்தனை பேர் படித்திருப்பார்களெனத் தெரியவில்லை. அது இப்படியாக முடிந்திருக்கும், “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!”. சரி, இந்த இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் என்னதான் நடந்திருக்கின்றது?

பிப்ரவரி முதல் வாரம். உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சொல்லின, “இரஷ்யா படையெடுப்பை நடத்தாது. அதிகபட்சமாக ஏவுகணைகளைத் தொடுக்கலாம்!”. இரஷ்யாவும் தமக்கு அப்படியான எண்ணமெதுவும் இல்லையெனச் சொல்லியது. ஆனால், அமெரிக்க அதிபர் பைடனே வெளிப்படையாக அறிவித்தார். “எந்த நேரத்திலும் இரஷ்யா தன் படையெடுப்பை நடத்தக்கூடும். ஆகவே அமெரிக்கக் குடிகள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுவது உசிதம்”.

பிப்ரவரி 24, 2022, இரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனெங்கும் சீறிப்பாய்ந்தன. உக்ரைனின் இராணுவக் கேந்திரங்களை அழித்தொழித்தன. ஒரேவாரம், நாடு முழுவதும் தன் கைப்பிடிக்குள் வந்து சேருமெனக் கொக்கரித்தது இரஷ்யா. உக்ரைன் நாட்டு அரசு கேந்திரம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி, போலந்து நாட்டில் இருந்து செயற்பட யோசனை சொல்லியது அமெரிக்கா. மறுத்து, அடைந்தால் நாடு, மடிந்தால் உயிரெனச் சொன்னார் உக்ரைன் நாட்டு அதிபர்.

இரஷ்யப் படைகள், வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பி வேகமாக முன்னேறிய வண்ணம் இருந்தன. தலைநகர் கீய்வ் நகருக்கு வெகு அருகே 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்த படைகள் மேற்கொண்டு முன்னேற முடியாமல், உண்ண உணவின்றித் திகைத்து நின்றன. இரஷ்ய எல்லையிலேயே இருக்கும் உக்ரைநாட்டு இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழைய முடியாதபடிக்கு உக்ரைன் படைகள் ஆக்ரோசமாக எதிர்த்தாக்குதல் நடத்தின. இரஷ்யா வடக்கு, வடகிழக்கிலிருந்து பின்வாங்கி, கிழக்கு, தெற்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துக் கொண்டது. அறிவித்த சில நாட்களிலேயே, இரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் Moskva  அழித்தொழிக்கப்பட்டது.  In the late hours of 13 April 2022 Ukrainian presidential adviser Oleksiy Arestovych reported Moskva was on fire and Odesa governor Maksym Marchenko said their forces hit Moskva with two R-360 Neptune anti-ship missiles. A radar image showed the ship was about 80 nautical miles (150 km) south of Odesa around 7 p.m. local time. Two reports indicated the ship sank before 3 a.m., 14 April.

உக்ரைன் நாட்டுப் படைகளின் வலுவும் நெஞ்சுரமும் அமெரிக்காவுக்கு பெருவியப்பைக் கொடுத்தது. உடனடியாக ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் முடிவு செய்தன. உலக நாட்டின் பல தலைவர்களும் உக்ரைன் நாட்டுத் தலைநகருக்கே சென்றனர். வான்வெளி எதிர்த்தாக்குதல் நடத்தவல்ல ஸ்டிங்கர்கள்தான் முதன்முதலாக உக்ரைனுக்குள் அனுப்பப்பட்டன. அதுவரையிலும் ஊடுருவிக் கொண்டிருந்த இரஷ்ய விமானங்கள் தாழ்வாகப் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொலைதூர ஏவுகணைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இரஷ்யாவுக்கு. 

ஜூன் 2022 அல்லது அதற்குச் சற்று முன்பாக, ஏவுகணைகளைத் தாக்கியொழிக்கும் படைக்கலங்கள் சேர்க்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் அதியுச்ச நுட்பமான NASAMS கூட உக்ரைன் வசம் சென்று சேர்ந்திருக்கின்றது. அதன்நிமித்தம், 80%க்கும் மேலான இரஷ்ய ஏவுகணைகள் இலக்கைச் சென்று சேருமுன்பாகவே அழித்தொழிக்கப்பட்டன. ஒவ்வொரு ஏவுகணையும் ஒரு மில்லியன் டாலரிலிருந்து 15 மில்லியன் டாலர் வரையிலுமான மதிப்பைக் கொண்டது. இரஷ்யாவின் இருப்பு மளமளவெனக் குறையத் துவங்கியது. புது ஏவுகணைகளை உருவாக்க வேண்டுமானால் செமிகண்டக்ட்டர் சிப்புகள் வேண்டும். அதற்கும் கிடுக்கிப்பிடி போட்டார் பைடன்.

பிடிபட்ட பகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இரஷ்யாவால்? ஏன்? 300 கிமீ தொலைவிலிருந்தேவும் குறிதவறாமல் தாக்கி அழிக்கக் கூடிய HIMARS இரக பீரங்கிப் படைக்கலங்கள் உக்ரைன் வசம் ஜூலை மாதம் வந்து சேர்ந்தன. அவற்றின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் எல்லாத் திசைகளிலிருந்தும் பின்வாங்கத் துவங்கின இரஷ்யப்படைகள். கடைசியாக, பிடிபட்ட ஒரே ஒரு மாகாணத் தலைநகரான கீர்சன் நகரமும் உக்ரைன் வசம் வந்து சேர்ந்திருக்கின்றது. அடுத்து?

குளிர்காலம் துவங்கி இருக்கின்றது. மின்சார, எரிபொருள் உற்பத்தி இடங்களைத் தாக்கி அழிப்பதன் மூலம் உக்ரைன் நாட்டைப் பணிய வைத்துவிட முடியுமென நம்புகின்றது இரஷ்யா. அதில் சற்று வெற்றியும் கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எதிர்கொண்டு மீள்வோமென்கின்றது உக்ரைன். இரஷ்யாவுக்கு இதுதான் கடைசி உத்தி. இதுவும் பயனளிக்காவிட்டால், அணு ஆயுதங்கள் அல்லது அணுமின் உலைகளைத் தாக்குவதன்வழி உக்ரைனுக்குச் சேதத்தை விளைவிப்பது என்பதாக இருக்கலாமென்கின்றனர் நோக்கர்கள்.

செமிகண்டக்ட்டர் சிப்புகளுக்கு வருவோம். எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இத்தகு சிப்புகள் அடிப்படை. அவற்றின் உயரிய தொழில்நுட்பம் அமெரிக்க வசம் மட்டுமே உள்ளது. அப்படியான தொழில்நுட்ப ஏற்றுமதிக்குத் தடை விதித்து விட்டார் பைடன். அந்நிய மண்ணில் அத்துறையில் வேலை செய்யும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பவும் ஆணை இடப்பட்டு விட்டது. அவர்கள் நாடு திரும்ப வேண்டும் அல்லது குடியுரிமையைக் கைவிட்டாக வேண்டும். சீனாவின் பொருளாதாரமே நிலைகுலையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது. சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள், வியட்நாமுக்கும் தைவானுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இத்தகு நகர்வுகள், தொடர்புடைய நாடுகளை மண்டியிட வைக்கும் அல்லது கொந்தளித்துப் போரில் ஈடுபட வைக்கும் என நினைக்கின்றனர் நோக்கர்கள். 

நேட்டோ நாடுகள் பெரும்போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் இடம் பெற்ற அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும் பைடனுக்கு ஏதுவாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே, சென்று ஆண்டு சொல்லப்பட்டதேதாம் இந்த ஆண்டும்: “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2023!!

11/20/2022

நண்டுருண்டாம் பழம்

நண்பர் ஸ்ரீ அவர்களிடம், தாவர வேலிகளில் இருக்கும் நாட்டுப்புறப் பழங்களான காரைப்பழம், சூரிப்பழம், கோவைப்பழம், சங்கம்பழம், பூலாம்பழம், கிளுவம்பழம், கள்ளிப்பழம், உண்ணிப்பழம், சுக்கிட்டிப்பழம், ஆலம்பழம், தணக்கம்பழம், பிரண்டைப் பழம், முழுமுசுக்கப்பழம் முதலான பழங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். 

பாட்டி ஊரான லெட்சுமாபுரமும் அதற்குத் தென்பகுதியும் மலையும் மலைசார்ந்த பகுதியான குறிஞ்சி நிலமாகும். முட்தாவரங்கள் நிறைய இருக்கும். அதாவது என் குழந்தைப் பருவத்தில். தற்போதெல்லாம் தென்னையும் தார் சாலைகளும் கம்பி வேலிகளுமாக அப்பகுதி மாறிவிட்டது. 

இருந்தாலும், மலையோர வனங்களில் இலந்தை, களாக்காய், கொடுக்காப்புளி, காரை, சூரை, வில்வம், சப்பாத்திக்கள்ளி, கிளுவை, சூடாங்கள்ளி, பெருங்கள்ளி, சிறுகள்ளி, பரம்பைமுள், கருவேல், குடைவேல், செவிட்டுவேலன், காக்காமுள், சங்கமுள், யானைக்கற்றாழை எனப் பலதரப்பட்ட குறிஞ்சிநிலத் தாவரங்களைக்(tropical) காணலாம். அவற்றுக்கிடையேதான் மேற்கூறப்பட்ட பழங்களும் தின்னக் கிடைக்கும்.

இடையூடாக வண்டுருண்டாம் பழம் தெரியுமாவெனக் கேட்டார். தெரியுமெனச் சொன்னேன். சாணத்தை உருட்டிக் கொண்டு போகும் வண்டுகள். ஆனால் அவருக்கு நண்டுருண்டாம் பழம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலவநாயக்கன் பட்டிப் புதூர்ப் பகுதியில் உப்பாற்றங்கரையில்தாம் மாடு மேய்த்துக் கொண்டிருப்போம். கரையில் அவ்வப்போது ஏராளமான மண்ணுருண்டைகள் காணக்கிடைக்கும். என்னவென ஆயத் தலைப்பட்டபோது உடனிருந்த சக ஆடுமேய்ப்பர்கள் சொன்னது, நண்டு தின்று போட்ட விட்டைகளென. வியப்பாக இருந்தது.

ஆமாம். நண்டுக்குப் பசி தாளமுடியாது போது, அடிவயிற்றினூடாக மண்ணைத் தின்னத் துவங்கும். மண்ணென்றால், மண்ணையே தின்னாது, அலையடிப்பில் வந்து சேர்ந்த நீரில் இருக்கும் நுண்சத்துகளை உறிஞ்சிவிட்டு, தின்ற மண்ணை உருண்டைகளாகத் துப்பி விடும். இப்படியான நண்டுருண்டாம் பழங்களைக் கண்டால் பழமைபேசியின் நினைவு உங்களுக்கு வந்து போகும்தானே? இஃகிஃகி!



11/19/2022

ஆண்கள் நாள் Nov 19, 2022

அமைப்புகளில் பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதைக் காணலாம். அதேபோல ஆண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதில்லை. என்ன காரணம்? பெண்களைக் கொண்டாடுவதின் வழி, உணர்வுப்பூர்வமாக நெஞ்சைநக்குவதின் வழி, கூட்டம் சேர்ப்பது மட்டுமே இலைமறையான நோக்கம். உள்ளபடியே பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் கோலோச்ச வேண்டுமானால் மறுதரப்புக்குத்தான் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட வேண்டும். இஃகிஃகி. ஆகவே, ஆண்கள் நாள்தான் அமைப்புகளால் முதலில் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். அப்படியான நாளைக் கடைபிடித்தால் கூட்டம் சேராது. அங்கு இருக்கின்றது பின்னடைவு.

ஆண்கள் நாளை இரு விதமாக நோக்கலாம். தனிமனிதக் கோணத்தில். பண்பாட்டுக் கோணத்தில்.

தனிமனிதர்களாக, ஆண்களிடத்திலே ஆண்மை என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கின்றது. காரணம், மனநலக்கேடும், உடல்நலக் கேடும்.

பண்பாட்டுக் கோணத்திலே, ஆண்மை என்பது என்னவென்பதே அறிந்திராத சூழல். ஆண்மை என்பது யாதெனில், ஆண்பாலினத்துக்குரிய சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் தரம் குன்றாமலிருப்பதும். எப்படி மேம்படுத்திக் கொள்வது? பெண்ணியம் என்பது மேம்பட்டுவருகின்றவொன்று,  fluid and ever-changing, like the sea. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஆண்மை என்பது அப்படியன்று. வரையறுத்துச் சொல்லிவிட முடியும், it’s rigid and enduring, like the mountains. சரி, பண்பாட்டுத் தளத்தில் ஆண்மைக்கான வரையறைகள் என்னென்ன?

1. வாழ்வின் நோக்கம், இலக்கு கொண்டிருத்தல்.

2.மேற்படி இலக்குகளுக்காக திட்டமிட்டிருத்தல்

3.அகவளர்ச்சியோடு இருத்தல்

4.நேர்மையும் வாய்மையுமாய் இருத்தல்

5.காத்திருத்தல், தம்மையும் தம்மோடு இருப்போரையும்

6.மாற்றுப்பாலினத்துக்கு முகமன்னோடு இருத்தல்

தனிமனிதக் கோணத்திலே எப்படி மேம்பாடு கொள்வது?

உலகம் யாவிலும் ஆண்மைக் கோளாறுகள், சிதைவுகள் இருப்பதாய்ச் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அரசுகள் பல முன்னெடுப்புகளையும் கையாண்டு கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணமாய் இருப்பவை, மனநலப் பயிற்சியின்மையும் உடல்நலப் பயிற்சியின்மையும்தான். இதன்நிமித்தம், மனநலக்கேடுகளும் உடல்நலக் கேடுகளும். சீர்கேடான உணவுகள், கூடுதலான ஊடகப்புழக்கம், பொருள்வயமான வாழ்க்கை, விளம்பர ஆதிக்கம் உள்ளிட்ட பலவற்றையும் உணர்ந்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

https://time.com/6096701/china-masculinity-gender/  After Britain and America, It’s China’s Turn to Worry about Masculinity


11/18/2022

ஆவணப்படுத்தலே அழகு

நவ 18, 2022, மிக முக்கியமானதொரு நாள். இருவேறு பற்றியங்கள் என் மனத்தைப் பிசைந்தன. தமிழ் எழுத்தாளர் ஒருவர், ஒரு சொல்லைத் தாம்தான் உருவாக்கியதாகச் சொல்லவே அது சர்ச்சையாகின்றது. ஏனென்றால் அந்த சொல், 1960+களிலேயே தமிழ்நாட்டரசின் கையேட்டில் இடம் பெற்றிருக்கின்றது. அந்த ஆவணத்தைச் சான்றாகக் கொண்டு இவர்தம் வாக்கு சரியன்று என வாதிடப்படுகின்றது. சர்ச்சையை அடுத்து, எழுத்தாளர் தரப்பு கொடுக்கும் விளக்கங்கள், அவர் அச்சொல்லைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் படைப்பில் அச்சொல் இடம் பெறவேயில்லை என்பதாகச் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் கடும் வருத்தம், ஏமாற்றத்தையே கொடுக்கின்றது. மனம் வலிக்கின்றது.

’உலகின் இளைய பில்லியனர் இவர்தாம்; இன்னின்ன விருதுகள்’ என்றெல்லாம் சொல்லி ஊடகங்கள் கொண்டாடின. அதே ஊடகங்கள்தாம், அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதாக பிரேக்கிங் நிவீசுகள் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு பார்வைகள், கண்ணோட்டங்கள். பொதுப்புத்திக்கு வைக்கப்படும் தகவலைக் கடந்து பார்ப்பதுதான் நம் பார்வை. கொண்டாடப்பட்ட ஒருவரின் வீழ்ச்சியின் துவக்கப்புள்ளி எது? ஆவணப்படுத்துதலின் அருமை கருதிய ஒரு சாமான்யர்.

அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் சேருகின்றார். பணியிடத்திலே, பதிவுகள் அழிக்கப்படுகின்றதைக் கவனிக்க நேர்கின்றது. இது, ஆவணப்படுத்தல் என்பதன் வேருக்கே அமிலம் ஊற்றும் செயலாயிற்றேயெனச் சிந்திக்கின்றார். ஏதோ தவறு நடப்பதாக உணர்கின்றார். தம் பணியிழப்பு, இதரத் தொல்லைகள் என்பது பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாமல் உகந்த அலுவலர்களுக்கு மடல் எழுதுகின்றார். இதுதான் துவக்கப்புள்ளி.

வீடானாலும் சரி, காடானாலும் சரி, சங்கமானாலும் சரி, பேரவையானாலும் சரி, ஆவணங்களே அடிப்படை. விழாக்களும் விருதுகளும் அந்தந்த நேரத்தை இனிமையாக்கக் கூடியவை. ஆவணங்கள் காலத்தின் சான்றாய் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியன. ஆவணங்களை ஆக்குவதும் பேணுவதுமே மாந்தனுக்கு அழகு!

https://youtu.be/vMQlj9TZQfE

11/15/2022

Press Here

வணக்கம். இது சின்னஞ்சிறு குழந்தைகள் முதற்கொண்டு மூத்தோர் வரைக்குமான கதை. https://youtu.be/McKHNjjwfts

வாசித்து அல்லது கண்டுணர்ந்து விட்டுத் தொடரலாம். வாசிக்காமலோ கண்டுணராமலோ வாசிப்பதால் முழுப்பயனையும் எட்டிவிட முடியாது. ஆகவே?!

எந்த ஒரு கதையையும் உள்வாங்கி, சிரிப்பு, அழுகை, உவப்பு, மருட்கை, ஏமாற்றம் இப்படி ஏதாகிலும் ஓர் உணர்வுக்கு ஆட்பட்டு, தகவலை மட்டுமே உள்வாங்கி இருப்பதென்பது களித்திருத்தல்(recreation), கேளிக்கை(entertainment) என்பது மட்டுமே ஆகும். அப்படியான கதைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் யாதொரு இலக்கிய விழுமியமும் இல்லை. துவக்கநிலை வாசிப்புக்கான, உணர்வு மதிப்பீட்டுக்கானவை மட்டுமே அவை.

மேலைநாடுகளில் படிப்படியாக மூன்றாம் வகுப்பு, அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்நிலைக்குப்(inference) பயிற்றுவிக்கப்படுவர். வாழ்வியலின் ஏதோவொரு கூற்றினை ஒவ்வொரு கதையும் கருவாகக் கொண்டிருக்கும், இப்படியானதொரு போக்குத்தான் அமெரிக்காவை முதிர்ந்தநிலையில் நிலைநிறுத்தி இருக்கின்றது. ஒவ்வொரு நூறு பேருக்கும் 120 துப்பாக்கிகள் உள்ளன. தெரு/ஊருக்கு ஒரு துப்பாக்கியென இருந்து விட்டால்கூடப் போதும், சில பல நாடுகள் இருக்கின்ற இடமில்லாமற்போய் விடும். கதைகளின், இலக்கியத்தின் தரம்தான் சமூகத்தின் முதிர்ச்சியைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.

எளிய கதை. ஒரு சிறு அசைவில் துவங்குகின்றது. வளர்ந்த நாம் கூட ஒன்றிப் போகின்றோம். கற்பனை, சும்மானாச்சிக்கும் என்பதாகத்தான் துவங்குகின்றோம். அடுத்தபக்கம், அடுத்தபக்கம் என நகர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், முற்றிலுமாகக் கற்பனை எனும் எண்ணத்திலிருந்து விடுபட்டு மாயத்தில் கரைந்து போகின்றோம். கற்பனாமுரண் (paradox of fiction) நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகின்றது. சிறார்களின் மனம் எப்படியாக இருந்திருக்கும்? களிப்பில் கேளிப்பில் ஆழ்ந்து மீண்டும் வாசிக்கத் தூண்டியிருந்திருக்கும். சரி, வாழ்வியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

தத்துவார்த்த ரீதியில் நோக்குங்கால், மனம் உவப்புக் கொள்கின்ற ஒவ்வொரு செய்கையாகச் செய்து செய்து, படிப்படியாக மனங்களைக் கொள்ளைகொண்டு தமக்கான திட்டங்களை நைச்சியமாக நிறைவேற்றிக் கொள்வர் நிகழ்த்துவோர். அந்தப் பயணத்தில் இருப்போருக்கு அதன் முழுப்பார்வையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை(எ:கா: சனவரி ஆறாம் நாள், 2021). இதில் அகப்படாமல் இருந்து கொள்ள வேண்டுமேயானால், அந்த முதற்செய்கை, இரண்டாம் செய்கை, மூன்றாம் செய்கை என்பனவற்றிலேயே இது கற்பனை, உண்மைக்குப் புறம்பானது என்பதாக உணர்ந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு விளைவு(cause & effect) உண்டு. அதைத்தான் அழுத்தும் செய்கையில் மஞ்சள் வட்டம் இரண்டாதல், ஊதும் போது காணாமற்போதல் எனக் காணமுடிகின்றது.

விழாவில் வழங்கப்படுமென ஏராளமான விருதுகள், பரிசுகள் அறிவிக்கப்படுகின்றனயென வைத்துக் கொள்வோம்; . அறிவிப்புகளைக் கண்டு மகிழ்வோர் ஏராளம்(paradox of fiction). 150 பேருக்கு, பெயர் அறிவிப்பு, படமெடுத்துக் கொள்தலென ஒரு நிமிடமென வைத்துக் கொண்டாலும் கூட, இரண்டரை மணிநேர மேடை நேரம் தேவைப்படும். இது சாத்தியம்தானா, ஈடேறுமா? இப்படியெல்லாம் சிந்தைவயப்பட்டு, what would be the causality? என எண்ணத் தலைப்படுவதுதான் inference, வாசிப்பின் ஆழ்நிலை.

வாட்சாப் பகிர்வென்பதாலே சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. கூடுதல் தகவலுக்குக் கதைகுறித்த நிறையத் திறனாய்வுக் கட்டுரைகளை இணையத்திலேயேவும் காணலாம்.  இதோ அவற்றுள் ஒன்று: https://www.prindleinstitute.org/books/press-here/

11/04/2022

No, David!

மிகவும் எளிய கதை.  நான்கு வயதுக் குழந்தைகளுக்கான கதை என்றாலும் கூட, இரண்டு வயதுக் குழந்தைகளிலிருந்தேவும் சொல்லப்படுகின்ற கதை. ஆகாதன ஒவ்வொன்றுக்கும், ‘நோ, டேவிட்’ சொல்லிக் கொண்டே போய், கடைசியில் ‘yes David, I love you' என்பதாக முடிகின்றது. https://fliphtml5.com/kdivq/wokb/basic

இதற்கும் ஏராளமான திறனாய்வுகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. கதை சிறந்த கதை என்றால், கதை பிறந்த கதை இதனினும் சிறப்பு. கதாசிரியர், தமது ஐந்தாவது வயதில்(1964), அவருடைய அம்மா பேசியதைச் சிறு நூலாக எழுதி வைத்திருப்பார். அதில், “No David, I love you" எனும் சொற்கள் மட்டுமே இருக்கும். 1998ஆம் ஆண்டில் அது எப்படியோ அவரது கைக்குக் கிடைக்கின்றது. அதையே நூலாக்கி விட்டார். இன்று அது மிகவும் புகழ்பெற்ற கதைநூல். இதே நூல், அமெரிக்கக் குடிமை, சட்டத்தின் ஆட்சி என்பதற்கான பாடத்திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. https://www.csusm.edu/slce/civicengagement/literacyandthelaw/unit1/index.html

சொல்லப்படுகின்ற தகவல் உண்மையா? மனத்துக்கு இதமாக இல்லாத நேரத்திலே, இது ஏன் சொல்லப்படுகின்றது? நோக்கம் என்ன? சமூக விழுமியம் சார்ந்த கருத்தா, தன்னலம் சார்ந்த கருத்தா? இவையெல்லாம்தான் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது. The purpose of nonprofit organizations is generally to improve quality of life for others at a community, local, state, national, or even global level.

இன்னாநாற்பதுக்குப் பிறகுதான் இனியவைநாற்பது. இஃகிஃகி, விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுவோம். In the author’s note, the author states, "Of course, 'yes' is a wonderful word. But 'yes' doesn't keep the crayon off the wall." கதைகள் ஆய்ந்து கலந்துரையாடவே! செம்மாந்து போய் மகிழ்ந்திருப்பதற்கானவை அல்ல!

Cheers! Happy Weekend!!

11/03/2022

The Good Egg

தீயவிதை (The Bad Seed) எனும் தலைப்பில், தவறான பழக்கங்களை உடைய ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பட்டியலிட்டு, அந்தக் குழந்தை எப்படியானதை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் சொல்லி, உணர்ந்து கொண்ட பின்னும் சமூகம் எப்படி அந்தக் குழந்தையை முன்முடிவோடு பார்க்கின்றது? அதிலிருந்து எப்படி மீண்டு கொள்வது என்பதை எல்லாம் சொல்லி இருப்பார் ஆசிரியர். தொடர்ந்து அதற்கு நேர்மாறாகவும் ஒரு கதையைப் படைத்திருக்கின்றார். அதுதான் The Good Egg.

முட்டை என்பதுவும் ஒரு குறியீடு. ஒரு பெட்டியில் இன்னபிற 11 முட்டைகளோடு 12ஆவது முட்டையாக இது இருக்கும். நல்லபழக்கங்களையே கொண்டிருக்கும். எஞ்சிய முட்டைகள் என்னவெல்லாம் கூடாதன செய்கின்றது என்பதைச் சொல்லி, அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் இந்த முட்டையானது சரி செய்து கொண்டே இருக்கும். நாளடைவில் மன அழுத்தம் கண்டு, அதன்காரணமாக ஓட்டில் சிறு விரிசல் கண்டுவிடும். உணர்ந்து கொண்ட முட்டையானது வெளியேறிப் போய் வெளியுலக வாழ்வை வாழத்தலைப்படும். அதனால், ஏற்பட்ட விரிசல் மறைந்து விடவே மகிழ்வுடன் மீண்டும் வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளும். நான்கு வயதுக் குழந்தைக்கான கதை. https://anyflip.com/iege/ruok/basic

பகுப்பாய்வு (inference) செய்யத் தலைப்பட்டால் பல்வேறு பற்றியங்களாக எண்ணங்கள் விரிந்து கொண்டே போகும். எல்லையே இல்லை. அன்றாட வாழ்வில் இடம் பெறக்கூடிய நிகழ்வுகள், எது நல்லது, கெட்டது, மன அழுத்தம் எப்படி ஏற்படுகின்றது? குழுவாதம், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது தொடர்பாகவும் இணையத்தில் நிறையக் கட்டுரைகளைக் காணலாம். https://childrenslibrarylady.com/the-good-egg-by-jory-john/

உயர்வு, தாழ்வு எனும் பார்வையில் இருவேறு கதைகளை ஆசிரியர் படைத்திருந்தாலும் கூட, இரண்டிலுமே தகாதன துல்லியமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அவற்றைச் சொல்லிச் சரி செய்வதை விட்டுவிட்டுத் தாமே சரி செய்து கொண்டிருப்பதால் ஏற்படும் பின்னடைவையும் சுட்டிக் காண்பிக்கின்றார். எதிர்மறையென முகஞ்சுழிக்கலாகாது.

சமூகத்தில் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காகவே பெருமை பேசுதல், உயர்வுநவிற்சி, மகிழ்வூட்டி மீன்பிடித்தல் போன்ற வேலைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. Persuasion is emotional first and rational second. Indeed, we are more likely to yield to persuasion in order to maintain or attain certain mood states than in order to gain knowledge or advance our thinking. https://hbr.org/2015/06/persuasion-depends-mostly-on-the-audience. இதனால்தான் பொய்யுரை பேசி விபூதியடித்தலென்பதும் நம்மிடையே இரண்டறக் கலந்திருக்கின்றது. Choice is yours. Yes, Persuasion Depends Mostly on the Audience!!

இந்தக் கதை உணர்த்தும் மற்றுமொரு கருத்து, work life balance. தன்னார்வத் தொண்டு போற்றத்தக்கதுதான். விளம்பரபோதை, புகழ்வெளிச்சம், குழுக்களுக்கிடையேயான அக்கப்போர் போன்றவற்றால் அதுவேயென இருந்து விடுவதுமுண்டு. உள்மன அழுத்தம், ஓடு விரிசல் கண்டுவிடும். உஷாரய்யா உஷாரு!!

11/02/2022

The Bad Seed

தமிழ் அமைப்புகள் சார்ந்த நண்பர்களிடம் அடிக்கடி சொல்வது, நாம் அமெரிக்க வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென. முறைப்படி எப்படிக் கற்றுக் கொள்வது? இருக்கின்ற எல்லா பால்வாடிக் கதைகளையும் படித்துவிட்டால் போதும் கற்றுக் கொண்டு விடலாம். இஃகிஃகி. பென்சில்வேனியா இலக்கிய வட்டத்தில் நிறையக் கதைகளையும் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் கூட எழுதி இருந்தோம்.

நெகடிவ், விமர்சனம், எதிர்மறை என எதிர்மறையாக அணுகும் போக்கு நம்மிடத்தில் தூக்கலாக இருப்பதால், தற்போதைக்கு இரு நெகடிவ் கதைகளைப் பார்க்கலாம். அவை இரண்டுமே 3 அல்லது 4 வயதுக் குழந்தைகளுக்கானது.

o0o0o0o0o0o0

ஒரு டைனோசர்க் குழந்தை, ரெக்ஸ், பள்ளிக்கூடம் செல்லும் நாள் வந்துவிடும். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கண்டதும் தின்ன வேண்டும் போல இருக்கும். எல்லாரையும் விழுங்கி விடும். ஆசிரியர் வெளியே துப்பிவிடும்படிக் கட்டளை இடுவார். பிள்ளைகள் ரெக்ஸிடம் ஒதுங்கிப் போவர். மாலையில் சோகமாக வீடு திரும்புவாள் ரெக்ஸ். அப்பா டைனோசர் கண்டுபிடித்து அறிவுரை கூறுவார். அடுத்த நாளும் ஒரு பிள்ளையை விழுங்கி விடும். அதற்குப் பின் திருப்பம் நிகழும்.

https://www.camplanoche.com/wp-content/uploads/2020/09/We-Dont-Eat-Our-Classmates.pdf

https://static1.squarespace.com/static/56663dee841abafca76d6f46/t/61676c630f190f177202bc28/1634167907616/We+Don%27t+Eat+Our+Classmates_final+reading+guide.pdf

இரண்டு நிமிடக் கதைதான். ஆனால் பகுப்பாய்வு செய்யத் தலைப்பட்டால் நாள் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம். பல குறியீடுகள், பல படிமங்கள், சொல்லாமற்சொல்லும் பல தகவல்கள்.

o0o0o0o0o0o0

தீய விதை என்பது கதையின் தலைப்பு. தலைப்பே ஒரு குறியீட்டில், படிமத்தில்தான் அமைந்திருக்கின்றது. விதை என்பது ஓர் இனத்தைப் பெருக்க வல்லது. அதில் எப்படி தீயது என்பதாக இருக்க முடியும்? மேலும் விதை என்பது குழந்தைகளைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. அப்படியான விதை எப்படியோ தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும். ஒருவர் மெல்லுவார். தீய விதை என்பதாலே உடனே துப்பி விடுவார். பிறகு அது கழித்துக் கட்டிய கூல்டிரிங்க்கேனில் தங்கிக் கொள்ளும்.  அந்த கூல்டிரிங்க்கேன் என்பது கூட ஒரு குறியீடு. அதற்குள் இருக்கும் போது சிந்தனைக்கு ஆட்பட்டதாலே மாறுபட்ட விதையாக உருவெடுக்கும். ஆனாலும் பார்ப்போரிடத்தில் அதன்மீதான முன்முடிவு(stereotype) தொடர்ந்து கொண்டே இருக்கும். கடைசிப் பக்கத்தில் ஆசிரியர் அதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வாசகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

https://pubhtml5.com/prye/ixmw

https://theresponsivecounselor.com/2018/06/the-bad-seed-review-and-activities.html

https://childrenslibrarylady.com/the-bad-seed/

o0o0o0o0o0o0

இரண்டு நிமிடங்களில் படித்துவிடக் கூடிய இவ்விரண்டு கதைகளுக்குமே ஏராளமான திறனாய்வுகள், பயிற்சிக் கட்டுரைகள் எனப் பலவற்றை இணையத்தில் நாம் காணலாம். ஒவ்வொன்றும் புதுப்புது புரிதற்தோற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும். 

இப்படியான எதிர்மறைக் காட்சிகள், எண்ணங்கள் என்பவை நல்லதொரு விளைவை ஏற்படுத்தவே நம் முன்வைக்கப்படுகின்றன.

பேச்சு

ஒரு மனிதன் உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் உரையாடுவதற்கும் உறைவிடம் கொள்வதற்கும் எவ்விதமான தடையும் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவையில்லாமல் அவன் வாழ்வின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. இந்த மெய்ப்பாட்டை கிரேக்கர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் உணர்ந்தனர். அதன் நிமித்தம் மனித உரிமைகளில் இவற்றைக் கட்டமைத்தனர்.

அமெரிக்காவில் 1791, டிசம்பர் 15ஆம் நாள் நடைமுறைப்படுத்த முதற்சட்டத் திருத்தத்தில் பேச்சுரிமைக்கான வரையறை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்படிக்கு ஒருவர் தங்குதடையின்றிப் பேசலாம்; எழுதலாம். அதுவே நாட்டை, பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியது. ஆனால் அப்படியான ஏகபோக உரிமை வழங்கலால் ஏற்படும் தீங்குகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? யோசித்தவர் சில விதிவிலக்குகளைக் கட்டமைத்தனர்.

1.பாலுணர்வு உள்ளீடுகள்

2.அறிவுத்திருட்டு

3.மிரட்டல்

4.நற்பெயருக்குக் களங்கம்

இப்படியான விதிவிலக்குகள் பேசுவதற்குத் தயக்கத்தைக் கொண்டு வராதாயென யோசித்தனர். அதற்கும் ஒரு தீர்வாக ஒன்றைக் கொண்டு வந்தனர். குற்றம் சாட்டுபவர் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை ஐயம் திரிபற முற்றுமுழுதாக நிறுவ வேண்டும்.

கூட்டத்திற்கு நடுவே இருந்து கொண்டு, ‘தீ, தீ’ என ஒருவர் கத்துகின்றார். அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி பலர் காயமடைகின்றனர். அவர் உண்மைக்குப் புறம்பாக சொல்லி இருப்பதை நிறுவும் போது அது குற்றம். பேச்சுரிமை காத்தல் பயனளிக்காது.

ஒருவர் இன்னொருவரைத் திருடன், ஃப்ராடு எனக் குற்றஞ்சாட்டுகின்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றம் செல்கின்றார். அவர் அப்படிச் சொன்னதற்கான சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. பயனில்லை. ஏன்? குற்றஞ்சாட்டப்பட்டவர் தாம் பிறந்ததிலிருந்து அந்த நொடி வரையிலும் திருட்டு, புரட்டு செய்யவே இல்லையென நிறுவியாக வேண்டும். இதுதான் அமெரிக்கா. செக் & பேலன்ஸ்.

அறம், நமக்கான அடிப்படை. உரிமைகள் எந்தெந்த வழியில் ஈட்டிக் கொடுக்க முடியுமோ அந்தந்த வழியில் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது அமெரிக்கநாடு. எல்லாச் சட்டத்திருத்தங்களும் உரிமைகளைக் கொடுப்பதற்காகவே. ஒருவர் என்னை நோக்கி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதை உள்வாங்குகின்ற உங்களைச் சார்ந்தது, சொல்லப்படுவது மெய்யா பொய்யா எனப் புரிந்து கொள்வது. மெய்யைப் பொய்யென்றோ, உண்மையை இன்மையென்றோ, அல்லது நேர்மாறாகவோ புரிந்து கொண்டால், ஏமாற்றப்படுவது நீங்களே.

எங்கெல்லாம் பேச்சு மட்டுப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்பில்லை. நம் வீட்டில் பேசுவதைக் காட்டிலும் நம் குழந்தைகள் அமெரிக்க வகுப்பறையில் தங்குதடையின்றிப் பேசுகின்றன. ஏன்? bios, stereotypes, prenotion, prejudice என்பன ஒப்பீட்டளவில் அதிகம். இவற்றை உடைத்தெறிவதுதான் தமிழ்ப் பண்பாட்டு அமைப்புகளின் வேலையாக இருக்க வேண்டுமேவொழிய, பூடகங்களும் மடைபோடுதலுமாக இருத்தலல்ல!


11/01/2022

வாசிப்பு

அண்மையில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை ஒட்டித்தான் வாசிப்பற்றநிலை என்னவென்பதைப் பார்க்கப் போகின்றோம். எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிடுவார், “உலகம் தோன்றியதிலிருந்து என்னென்ன வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றதோ அத்தனையையும் விட, கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி அதிகமானது”. அதே நேரத்திலதான் ஒரு காணொலித் துண்டு பரவல் ஆனதையும் பார்த்தோம். செய்தி காதில் விழுந்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாதபடிக்குப் போய் வந்து கொண்டிருப்பர் மக்கள். முன்பொருகாலம், மாலை நேரம் எஞ்சோட்டுப் பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, காட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி, “செமதாங்கிச் சாயமரத்துக்குக் கீழ எதொ பொணம் இருக்குது”. அவ்வளவுதான், காட்டுத்தீ போலப் பரவியது செய்தி. வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி என எல்லா ஊர்மக்களுக்கும் சாரைசாரையாகப் படையெடுத்தனர் பார்த்து வர. ஏனிந்த மாற்றம்? வாசிப்பற்றநிலைதான் காரணம்.

மேல்நிலை வாசிப்பு (skimming): மேலோட்டமாக ஆங்காங்கே இருக்கும் ஓரிரு வரிகளைப் பார்ப்பது. இது நெகடிவ் வைப், புறந்தள்ளுவோமென முடிவெடுப்பது அல்லது வெகுண்டெழுவது. நிறைய தகவல், செய்திகளை, இடையறாது உள்வாங்கிக் கொண்டிருப்பதால் மனம் நுண்மையை இழந்து போவதால்(insensitive) ஏற்படுவது. வாசிப்பு என்பது எழுத்துகளை வாசிப்பது மட்டுமேயல்ல, எந்த உருவிலிருக்கும் தகவலையும் உள்வாங்குவது என்பதேயாகும்.

முனைப்பு வாசிப்பு (active reading): மேலோட்டமாக வாசிப்பதற்கும் அடுத்தநிலையாக கவனத்தைச் செலுத்தி ஊன்றி வாசிப்பது. ஊன்றி வாசித்தாலும் கூட, வரிகளுக்கிடையே இருப்பதைக் கவனிக்கும் திறன் இல்லாமை, சொல்லாமற்சொல்லும் தகவலை உள்வாங்காமை போன்றவற்றால் முழுப்பயனையும் பெறாத வாசிப்பு.

ஆழ்நிலை வாசிப்பு ( critical reading): சொற்களையும் சொற்றொடர்களையும் நேரடியாக அப்படியப்படியே உள்வாங்கிப் புரிந்து கொள்வதற்கும் மாறாக, பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் புரிந்து கொள்தல். பகுப்பாய்வுத் திறன் திடமாக அமைய போதுமான பயிற்சிகள் இருந்தாக வேண்டும்.

பென்சில்வேனியா படிப்பு வட்டம் எனும் குழுவில் நண்பர் இணைத்து விட்டிருந்தார். பால்வாடிக் கதைகளைச் சொல்லி, அதை அமெரிக்கக் குழந்தைகள் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றன என்பதை நாள்தோறும் சொல்லி வந்தோம். நான்கு வரிக்கதைக்கு நான்கு பக்க வினாக்கள் இருக்கும். அவரவர் வாசிப்புத் திறனுக்கொப்ப புரிதல்களில் மாறுபாடுகள் இருப்பதை உணரும் விதமாக.

”Tired of seeing lot of writings with hurting, strong, painful and disrespectful words which is being going on many years from few life members. Unfortunately, nothing seems to stop them.” 

மேல்நிலை வாசிப்பில் ஏற்படும் புரிதல் என்ன? இது எதொ அக்கப்போர் போல இருக்கின்றது. நெகடிவ். நமக்குத் தேவையற்றது.

முனைப்பு வாசிப்பில் தோன்றும் புரிதல்? யாரோ சில உறுப்பினர்கள், காட்டமாக எழுதுவதே பொழப்பாக இருக்கின்றனர். எங்கும் சிலர் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பொறாமை பிடித்தவர்கள். இப்படி சொற்களினின்று நேரடியாகப் பொருள் கொள்தல். அல்லது பக்கச்சார்பு(bios), முன்முடிவு (prejudice) முதலானவை கொண்டு ஒரு முடிவுக்கு ஆட்படுதல்.

ஆழ்நிலைப் பகுப்பு வாசிப்பில் என்னவாக இருக்கும்? யாரவர்கள்? எழுதுபவர் யார்? எந்த பேசுபொருளை வைத்து இப்படிச் சொல்லப்படுகின்றது? குற்றம் சாட்டுபவர், சாட்டப்படுபவர்களென இருதரப்பின் உள்நோக்கங்கள் என்னவோ? பல ஆண்டுகளாக எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பதால், அமைப்பில் ஏதோ பின்னடைவுகள் இருக்கலாம் போலுள்ளது. ஏக்டிவிசம் என்பதே இடையறாது போராடிக் கொண்டிருப்பதுதானே? இவர்கள் இத்தகையவர்களா? இப்படி, தத்தம் அனுபவம், படிப்பு, சிந்தனைத் திறன் முதலானவற்றால் அவரவர் தன்மைக்கொப்ப பல வினாக்கள் அவர்களுக்குள் எழும். அவற்றுக்கான விடைகளைக் கொண்டு ஒரு புரிதலுக்கு ஆட்படுவது.

தமிழ் அமைப்புகளிலே இலக்கியக் கூட்டங்கள் என்கின்றனர். புகழாளர்களை அழைத்து வந்து பேச வைக்கின்றனர்.  பேசுகின்றார்கள். பல்வேறு தகவல்கள் உள்வாங்கப் பெறலாம். அல்லது நிகழ்த்துகலை போன்று அந்த நேரத்தைக் களிப்பாக்கிக் கொள்ளலாம். நாடலுக்கும் தேடலுக்கும் இட்டுச் செல்லலாம். கூடவே பகுப்பாய்வு வாசிப்புப் பயிற்சி ஏற்படுகின்றதா? சிந்தனைக்கு வாய்ப்பு அமைகின்றதா? உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

10/31/2022

வாழ்க்கைத் தரம்

பிறந்த அந்த நொடிலிருந்தே துவங்குகின்றது சாவுக்கான பயணம் என்றார் கண்ணதாசன். ஆக, அப்படியான பயணம் எந்த அளவுக்குத் தரமாக இருக்கின்றதென்பதை அளவிடும் அளவுகோல்தான் இந்த வாழ்க்கைத்தரம் எனும் பதம். சரி, வாழ்க்கைத்தரத்தை எது கொண்டு, எப்படியாக அளவிடுவது? பலமுறைகள் இருக்கின்றன. அதில் தலையாயது ஈடுபாட்டுமுறை(engaged theory). அமெரிக்கா 15ஆவது இடத்திலும் இந்தியா அறுபதாவது இடத்திலும் உள்ளன.

ஈடுபாட்டுமுறையின் கூறுகளாக இருப்பது Beliefs and ideas, Creativity and recreation, Enquiry and learning, Gender and generations, Identity and engagement, Memory and projection, Well-being and health ஆகியனவாகும்.

இவற்றுள் படைப்பாற்றலும் கேளிக்கையும், தேடலும் கற்றலும், அடையாளமும் ஈடுபாடும், நடத்தையும் உயிர்நலமும் முதலான கூறுகள் பண்பாட்டு அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எப்படி? எப்படியான கலைகள், படைப்புகளில் நாம் ஈடுபடுகின்றோம்? புதுப்புது சிந்தனைகள், அனுபவங்களுக்கான வாய்ப்புகள் கற்கப் பெறுகின்றனவா? தமிழ் என்பது நம் அடையாளம். அந்த அடையாளத்தின் பொருட்டு நமக்குப் பாதுகாப்புணர்வு மேலிடுகின்றதா? மனநலமும் மெய்நலமும் பொருந்தியதுதான் உயிர்நலம். அப்படியான மனநலம் மேம்படுகின்றதா? இத்தகு வினாக்களுக்கு அமையும் விடைகளைப் பொறுத்து அமைப்புகளின் செயற்பாடுகளை அளவிடலாம், விமர்சிக்கலாம், மேம்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு என்பதால்தான் அமெரிக்க அரசு வரிவிலக்குப் பெறும் நிறுவனமாக ஒப்புதல் அளித்திருக்கின்றது. மனநலம் குன்றக்கூடிய, சிந்தனை மட்டுப்படுத்தக் கூடிய, இருக்கும் தரத்தையும் சிதையச் செய்யக் கூடியதாக இருக்கும் போது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் அறிவுப்புலத்தின் கடமை.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். முழுப்பொறுப்புக்காலமான இரண்டு ஆண்டுகளும் இன்னார் தொடர்ந்து பொறுப்பில் இருந்திருக்கவில்லை எனும் பொய்யான தகவல் விதைக்கப்படுகின்றது. பொய்யான தகவல் என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது? அமைப்பின் செயற்குழுக் கூட்ட ஆவணங்களைப் பார்த்தால் தெரிந்து விடப் போகின்றது. இப்படிப் பொய்யான தகவல் விதைப்பவர் மனநலம் குன்றியவர், அல்லது அடுத்தவரின் மனநலக் கேட்டுக்கு வழிவகுக்கின்றார் என்றாகின்றது. ‘நாங்க அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம்’ போன்ற சொல்லாடல்கள் நம் அடையாளத்துக்கும் பாதுகாப்புணர்வுக்கும் மிகப் பெரும் கேட்டினை விளைவிக்கக் கூடியவை. தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, பாழ்படுத்தக் கூடியன.

இந்திய மொழிவழி மக்களுக்கான நாடளாவிய அமைப்புகள் அமெரிக்காவில் 1960 துவக்கம் நிறையப் பிறந்தன. பிறந்த வேகத்திலேயே அவை செங்குத்துப் பிளவாக உடைந்தும் போயின. மலையாள அமைப்பில் பிளவு. தெலுகு அமைப்பில் பிளவுகள். கன்னட அமைப்பில் பிளவு. வங்காள அமைப்பில் பல பிளவுகள். இப்படி நிறைய. தமிழ் தனிப்பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கின்றது. காரணம், வழிவந்த தன்னலமற்ற தலைவர்களும் தன்முனைப்பற்ற தன்னார்வத் தொண்டர்களும்! அத்தகு தனிச்சிறப்பைப் பேண வேண்டியது நம் பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதாம். பொய்யுரைகளையும் அவதூறுகளையும் இனம் கண்டு களைவதேயாகும்!

10/29/2022

விமர்சனம்

விமர்சனம் என்பது வடமொழிச் சொல். அதற்கு நிகராகத் தமிழில் திறனாய்வு. Criticism is the construction of a judgement about the negative qualities of someone or something. திறனாய்வு அற்ற சமூகத்தின் மேம்பாட்டு வேகம் மட்டுப்படும். திறனாய்வே வெட்டிவேலை / அவதூறு என்பதாகக் கருதும் சமூகம் பிற்போக்குச் சமூகமாக உருவெடுக்கும். அப்படியெனில் திறனாய்வுக்கும் அவதூறுக்கும் என்ன வேறுபாடு?

நேரிடையாக பிழை, வழு, விடுபட்டுப் போனது, மரபுச்சிதைவு, பண்பாட்டுச் சிதைவு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சாடுவது திறனாய்வு. அவற்றைக் காரணம் காட்டி இடம் பெறும் பகடிகள்,  கேலி/எள்ளல் என்பதாகக் கொள்ளலாம். உண்மைக்குப் புறம்பாகக் காரணமே இல்லாமல் இடம் பெறும் பகடிகள், சாடல்கள் அவதூறு.

அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறவேண்டுமானால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுவில் முன்வைக்கின்ற குற்றம் குறைகளை எதிர்கொண்டு ஆய்வினை நிலைநாட்டியாக வேண்டும் (Public Defense).

”பக்கம் பக்மாக வெளியில் நின்று விமர்சித்து எழுதுவது சுலபம் . அதனால் பேரவைக்கு என்ன பயன்?”

இப்படியான வினா எங்கிருந்து பிறக்கின்றது? அறியாமை, காழ்ப்பு, சகிப்பின்மை, ஒவ்வாமை, பொறாமை முதலானவற்றில் இருந்து தோன்றுகின்றது. அதிலும் விமர்சித்து எழுதுவது சுலபம் என்கின்ற கருத்தோடு. கல்வி கற்றும், வாசிப்பின்மை காரணமாக இப்படியான கருத்துகள் இடம் பெறுகின்றன. இப்படியானவர்கள் தலைவர்களாகவும் இருக்கின்ற போது அந்த அமைப்பின் விழுமியம் பாழ்பட்டுத்தான் போகும். நல்ல தலைவர்கள், திறனாய்விலிருந்து கற்றுக் கொள்ளவே முனைவர். எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம். 

1. “ரோல்கால் எடுக்கப்பட வேண்டும். ஒரேதளத்தில் உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்”

இது விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது. ஏன்? வருகையாளர்கள் யார் யார் என்பது அமைப்பில் இருக்கின்ற ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பங்கு கொண்ட அனைவருக்கும் தெரியத்தானே வேண்டும்? வெளிப்படைத்தன்மை என்பது அதுதானே? ஒரேதளத்தில் இருக்கும் போது, மற்றவர்களின் சமிக்கை, உடல்மொழி என்பன எல்லாமும் ஏதோவொரு தகவலைச் சொல்லும்தானே? மேலும், ’சமத்துவம்’, ’பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள்’ என்பதெல்லாமும் அதிலிருந்துதானே நிலைநாட்டப்பட வேண்டும். இதுதானே அமெரிக்க நடைமுறை? ஆக, அமெரிக்க நடைமுறை குறித்தான அறிவுப்புலம், உகந்த சிந்தனை இருந்தால்தான் இதைச் சுட்டவே முடியும். அறியாதோர் டெம்ப்ளேட் கருத்துகளைத்தான் கொடுப்பர்.

2. “நாங்கெல்லாம் அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம். பாத்து நடந்துக்குங்க”

இப்படியான கருத்து வெளிப்படுமேயானால், அது சட்டப்படிக் குற்றம். வெளிப்படுத்துபவர் மேலாதிக்கத்துடன் இருக்கின்றார் என்பது பொருள். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய இடத்திலே இடம் பெறும் பெரும் கேடு என்பது பொருள். ஏனென்றால், மனிதர் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள். தவறே செய்திருந்தாலும், திருத்தப்பட்டு அரவணைக்கப்பட வேண்டியது சக மனிதனின் கடமை.

இவற்றையெல்லாம் பொது வெளியில் எழுதும் போது என்ன நடக்கும்? வாசிப்புத்தன்மை கொண்டோர் சிந்தைவயப்படுவர். எழுதப்பட்டிருப்பதில் குற்றம் குறை இருப்பின் சுட்டிக்காட்டுவர். தேவைப்படுகின்ற இடத்திலே பயன்படுத்திக் கொள்வர். திருத்திக் கொள்வர். வாசிப்பற்றோர் காழ்ப்புக் கொண்டு போலிகளாக வலம் வருவர்.

10/28/2022

பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-3

21. 85 பேர் ஈடுபட்டுக் கொடுத்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டக் கோரிக்கை விண்ணப்பம் ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை? பெண் துணைத்தலைவர் ஒருவர் இருந்தாரே அவரை நியமித்திருக்கலாம்தானே? ஏன் பொதுக்குழுக் கூட்டம் தனிக்குழுக் கூட்டம் போல நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது? செயற்குழுவினரைக் கூட காண முடியவில்லையே? இந்த வினாக்கள் விடுக்கப்பட்டன.

22. விண்ணப்பத்தில் இருந்தவர்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கடப்பாடுகள் எட்டப்படும்படி இல்லை என்பதாகச் செயலாளர் விடையளித்தார். பின்னர் தலைவரும் இதுகுறித்துக் கூடுதல் பணிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

23. தாம் முன்னாள்தலைவரைத் தொடர்பு கொண்டு, பெண் துணைத்தலைவரை அந்த இடத்துக்கு நியமிக்கலாம்தானேயெனக் கேட்டதாகவும், அதற்கு அவர் தொடர்பு கொள்ள முயன்று, 10, 15 நாட்கள் ஆகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பின் துணைத்தலைவரைக் கண்ட போது, மலையேற்றம் தொடர்பாகச் சென்றிருப்பதாகச் சொல்ல, முன்னாள் தலைவர் சொன்னது சரிதான் என்பதாக நினைத்துக் கொண்டதாகத் தலைவர் தெரிவித்தார். [இங்குதான் உண்மை அம்பலம் ஏறும் சம்பவம், இஃகிஃகி]

24. மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக, துணைத்தலைவர் அவர்கள் பேச விழைந்தார். ‘ஆமாம், அழைத்தார். என்னுடைய இடத்தில் இருந்து பணியாற்ற விருப்பமா என்று கேட்டார். நான் அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னேன். ஆனால் திடீரென விழாவில் புதிய செயற்குழுவை அறிவிக்கும் போது மாற்றுப் பெயரை அறிவித்தார். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.’. [மொத்தக் கூட்டமும் ஞே... ]

25. விழாக்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள் இடம் பெற அனுமதிக்கலாமா என்பது கேள்வி. அது அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதாகத் தலைவர் பதில் அளித்தார்.

கடைசியாகக் கூர்நோக்கர்கள் என்பதாக இருவர் தத்தம் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அவை வழக்கம் போல, பொறுப்புச் சக்திக்கு ஏதுவான டெம்ப்ளேட் கருத்துகள். இஃகிஃகி. நாம் நம் கருத்துகளைச் சொல்லிக் கொள்வோமாக!

1. வினா விடை நேரத்தில் செயற்குழுவில் இருக்கும் மற்றவர்கள் பேசவே இல்லை. தலைவர், செயலர் மட்டும்தான் செயற்குழுவா? அல்லது, மற்றவர்கள் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனரா?

2. சகலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும், ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது அளவளாவ வேண்டும், அல்லது அனைவரும் பொதுத்தளத்தில் இருக்க வேண்டும். ரோல் கால் இடம் பெற வேண்டும். ராபர்ட் விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

3.கொடுக்கப்படும் வினாக்களை அப்படியப்படியே வாசிப்பதால் காலவிரயம். மேலாகப் பார்த்து புரிந்து கொண்டு, வினாவைத் தம் மொழியில் விடுக்க வேண்டும். இளையோர் நிகழ்வின் நெறியாளர் செய்தமையைப் போலே!

4.வினா விடை நேரத்தை செயற்குழுவுக்கு வெளியே இருக்கும்  பக்கச்சார்பற்றவர் நெறிப்படுத்த வேண்டும். ஆர்வலர்கள் எவராயினும் தங்கு தடையின்றிப் பார்வையாளராக இருக்கும்படி இருத்தல் வேண்டும்.

5. எவ்வளவு நேரமானாலும் உறுப்பினர்களின் வினாக்களை முடித்துத்தான் ஆக வேண்டும். கவுண்ட்டியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களையே அப்படித்தான் எதிர்கொள்கின்றனர்.

6. கடைசி வரைக்கும் அந்த மீட்டிங் மினிட்ஸ், பணம் திரும்பக் கணக்குக்கு வந்த தேதி உள்ளிட்ட சில முக்கியமான வினாக்களுக்கு சரியான விடை கொடுக்கப்படவே இல்லை. திசைதிருப்பு முகமாகத் தனிமனிதத் தாக்குதல் என்கின்ற அறதப்பழைய டெக்னிக்கையே கையாண்டார் முன்னாள் தலைவர். அல்லது, இந்நாள் தலைவரின் பொத்தாம் பொதுவான சமாளிப்புகளே இடம் பெற்றன.

(முற்றும்)







பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-2


11. 'கேள்வி கேட்கலாமா? ஒரு மில்லியன் டாலர் குடுத்திட்டுத்தான் கேக்கணுமா??’ எனும் முன்னொட்டுக் கேள்வியோடு ஒரு பொதுக்குழு உறுப்பினர் தமக்கான நேரத்துக்குள் நுழைந்தார்.  இன்றைய பொதுக்குழுவின் ஆகச்சிறந்த வினாவாக நான் இதைக் கருதுகின்றேன்.  அமெரிக்க நாட்டின் விடுதலைப் பிரகடன வாசகம் என்ன தெரியுமா?  ”all men are created equal”. முன்னாள் தலைவரின் அடிமுட்டாள்த்தனமான, பேரவையின் மாண்புக்கே வேட்டு வைக்கக் கூடிய ஈனச்செயல்தான் இந்த வினாவுக்கான தேவையை விதைத்திருக்கின்றது. 

12. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமானால் இன்னமும் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. எலக்ட்ரானிக் ஃபார்ம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

13. முன்னாள் தலைவர், என் இடத்துக்கு இவர்தாம் என்பதை செயற்குழு உறுப்பினர்களிடத்தில் உறுதி வாங்கிக் கொண்டபிறகுதாம் விலகிக் கொண்டார் என்பது சரியாகப்படவில்லை எனத் தன் கருத்தாகப் பதிவு செய்து கொண்டார் உறுப்பினர்.

14. முன்னாள் தலைவர் எனும் இடத்தில் துணைத்தலைவராக இருந்தவர்களிலும் ஒரு பெண்மணி இருந்தாரே, அவரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம்தானே என வினவப்பட்டது.

15. இளையோரைச் செயற்குழுவில் சேர்க்கப்பட்டது சிறப்பு. இன்னும் பத்தாண்டுகளில், வட அமெரிக்காவில் பிறந்தவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது. [அது ஈடேற வேண்டுமானால், சுயவிளம்பரத்தன்மை இல்லாமல் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்].

16. சங்கங்களின் உழைப்பு, பணத்தைக் கொண்டு விபரீத முதலீட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் தனிமனிதர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனும் கருத்து பதிவு செய்யப்பட்டது. முன்னாள் தலைவரின் ஏகபோகப் பேச்சு, தனிமனிதத் தாக்குதல் போன்றவை முறையிடப்பட்டது.  தமக்கு அப்படியான எண்ணம் எதுவுமில்லையென முன்னாள் தலைவர் தன் கருத்தாகப் பதிவு செய்தார்.

17. பணத்தை முன்னிறுத்தாமல், தன்னார்வலர்களின் உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தண்மை போற்றப்பட வேண்டும். ஏகபோகப் பேச்சுக்கு கண்டனம் என்பதாகப் பதிவு செய்து, செயற்குழுவில் இருக்கும் இளையோர் நடத்தைக்குப் பங்கம் நேராத வகையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டது.

18. தமிழ்ச்சங்கங்களைப் புறந்தள்ளி விட்டு, பேரவையே பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போக்கு கைவிடப்பட வேண்டும். தமிழ்ச்சங்கங்களுக்கு பைலா அமைத்துக் கொடுப்பது முறைப்படுத்த வேண்டும். ஃபெட்னா மேடையில் தலைவரே ஏகபோகமாக நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பன பதிவு செய்யப்பட்டது.

19. நியூயார்க் விழாவில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் தலைவர், தாமதமாக வந்ததாகவும் பேரவை முன்னோடிகளை அவமதித்ததாகவும் தகாத உடல்மொழியுடன் செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது 1 மில்லியன் டாலர் கொடுத்த கொடையாளரைப் பற்றிச் சொல்ல முடியாத நிலை இருந்ததாகவும் அதற்கான காரணத்தையும் தலைவர் பதிவு செய்தார்.

20.வாழ்நாள் உறுப்பினர்தாம் சட்டப்பணிகளுக்கு அமைப்பை இட்டுச் சென்றிருக்கின்றார் என்பது தவறு. முதன்முதலில், செயற்குழுதாம் சட்ட வல்லுநரின் கருத்துரைப்படி என்பதாக எல்லாப் பேராளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியது என்பது பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)


பேரவைப் பொதுக்குழுக் கூட்டம் 10/27/2022 பகுதி-1

1.திருவாசகத்தின் மீது கைவைத்துப் பேசுவதாக நினைத்துக் கொள்ளவும். பொய், புரட்டு பேசுவதால் எனக்குக் கிடைக்கப் போவது எதுவுமில்லை.

2. கூட்டத்தில் அறநெறிக் கோப்பு காண்பிக்கப்பட்டு, நாகரிகமாக, பண்பாட்டுடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டது.

3. செயற்குழுவால் பணிக்கப்பட்ட முன்னாள் தலைவர் பேசியது, சுயவிளம்பரம், பொய், புரட்டு, தனிமனிதத்தாக்குதல், வன்மம் மிக்கது. அனுமதித்த செயற்குழுவின் செயல், ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள்கோவில்’ என்பதாக இருந்தது. 

4. காப்பீட்டுடன் பணம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அமைப்புவிதி. சுட்டிக்காட்டியவுடன், தலைவர் சொன்னது, “fdic insured எனப் பார்த்தமாரி எனக்குத் தெரியலை.”. by-law: The bank or the trust company in which the Federation’s account is opened and maintained must be an insured one. வினா எழுப்பிய முன்னாள் தலைவர் FDIC Insured எனக்குறிப்பிட்டார். சொல்ல வந்தது காப்பீடு குறித்து, சிறுகுழப்பம்.

5. ”பைலால எங்க இருக்குங்ணா” ”பணம் கொண்டு வந்தவங்களுக்கும் கொண்டு வராவதுங்களுக்கும்... பணம் கொண்டு வந்ததைப் பாராட்ட ஆட்கள் இல்லை. ஆனா கேள்வி கேட்க வந்துட்டாங்க. கேள்வி கேட்கும் நீங்கள், எவ்வளவு பணம் திரட்டினீங்கன்னு யோசிச்சுப் பாருங்க. நீங்கதா நிதிதிரட்டும் குழுவில் இருந்தீங்க”, முன்னாள் தலைவரின் பேச்சு. இவர் என்ன சொல்ல வருகின்றார்? கொண்டு வந்த பணத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேள்வி கேட்கக் கூடாது என்கின்றாரா? தொடர்ந்து தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட முனைவதின் நோக்கம் என்னவோ?  ’மணி லாண்டரிங்’ என்பதன் அடிப்படை அறிந்தோர் எவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அமைப்புக்குத் தொடர்பே இல்லாத வரிசெலுத்துநருக்கும் கூட.

6. ”ஒப்புதல் வாங்கிட்டு செய்யுங்க என்பதுதான் எங்கள் கருத்து. பைலா எங்க இருக்குன்னு நீங்க போயிப் பாருங்க. பார்க்காமலே செய்துட்டு, அதை நீங்க எங்ககிட்டக் கேட்காதீங்க”, வினா விடுத்த முன்னாள் தலைவர்.

7. மின்னஞ்சல்கள் அத்துமீறிப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுடன் கூடிய கேள்வி. சைபர் செக்யூரிட்டிக்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. இரண்டையும் ஏன் முடிச்சுப் போடுகின்றனர் எனத் தெரியவில்லை. பொது அமைப்பு என வந்து விட்டால், விபரங்களும் பொதுதான். நான் வாக்காளன் என்கின்றபடியாலே, என் வீட்டு முகவரி உட்படப் பலதும் அரசாங்கமே பொது வெளியில்தான் போட்டு வைத்திருக்கின்றது. அமைப்பின் பல்வேறு குழுக்களில் பணியாற்றியதன் நிமித்தம் 3000+ மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளன. இஃகிஃகி, அவற்றிலிருந்து எப்படியும் ஒரு 500+ தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நான் சேகரம் செய்யலாம். சின்னப்புள்ளத்தனமான கேள்வி. why don't you open up the same groupid to all delegates? Dare to be democratic and transparent.

8. பொது அமைப்புகள், பணி என வந்து விட்டால் காட்டமான, கேலிக்குரிய மின்னஞ்சல்கள் வரத்தான் செய்யும். குடியரசுத் தலைவருக்கு நடுவிரல் காட்டிய நாடு அமெரிக்கா. அதற்காக, பொதுப்பணியில் இருப்போரும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதுமில்லை. அது கண்டு வெகுண்டெழவும் தேவையில்லை.

9. ’புதுசா வர்றவங்களை அச்சுறுத்தும் விதமா கேசு போட்டு ஏன் பிரச்சினை செய்யுறீங்க?’ என்பது கேள்வி. சின்னப்புள்ளத்தனமான கேள்வி. கேசு போடுவது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அவருக்கு அமைப்பின் மேல் அக்கறை இல்லைன்னு நீங்க எப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? Just go, learn what fiduciary duty and whistleblower is. ஏன் கேசு போட்ற அளவுக்கு செயற்குழு நடந்துக்குதுன்னு கேட்கலாமே?!

10. ’பொதுக்குழுக் கூட்டமா அல்லது அரசியற்கூட்டமா இது? ஒரே சுயவிளம்பரமா இருக்குது? இன்சூரன்சுன்னாலே FDICங்றதுதானே? நாங்களும் எங்க நேரத்தை, பணத்தைச் செலவுதான் கடந்த 35 ஆண்டுகளாக அமைப்பை நடத்திட்டு வர்றம்.’, நிறுவனத்தலைவரின் கருத்து.

தொடரும்...


மரபுகள்

தமிழ்க்கணிமைத் துறையில் ஓர் ஆசிரியர் வேண்டுமானால், நான் உயர்திரு மணி மணிவண்ணன் அவர்களையே கோருவேன். அவருடனான நட்பு, மதிப்பு என்பது 2008ஆம் ஆண்டு துவக்கம் உருவானது. இணைய வெளியில் என் எழுத்துகளைப் படித்து விட்டு, தவறுகள் இருப்பின் மிக உரிமையோடு வந்து திருத்துபவர். மிக அணுக்கமானவர். ஒருமுறை கூட நேரில் பார்த்ததுமில்லை; பேசிக் கொண்டதுமில்லை. நேற்று ஒரு மின்னஞ்சல். வழமையான தொனியில் இருந்து, சற்று மாறுபட்டதாக இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது. அவருடைய மாறுபட்ட பாங்கிற்கு என்ன காரணமெனப் புரிந்து விட்டது. ’மன்னிக்க வேண்டும்; பொறுத்தாற்றவும்’ எனப் பதில் எழுதினேன். பின்னர் அலைபேசியில் அழைத்துப் பேசவும் செய்தேன்(முதன்முதலாக).

அண்ணனும் தம்பியும் பேசிக் கொள்வது போன்ற உணர்வு. ’புரிகின்றது. ஆனால் அடுத்தவர் வேறுவிதமாக எடுத்துக் கொள்வர்’ எனச் சொல்லி, நுணுக்கமான பல தகவல்களையும் அக்கறையோடு பகிர்ந்து கொண்டார். பேரவைப் பொதுக்குழு துவங்கி விட்டதென்கின்ற காரணத்தினாலே, ‘அண்ணன், எனக்குக் கூட்டம் இருக்கின்றது’ எனச் சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டேன். அவர் பகிர்ந்ததிலிருந்து:

”இந்தியாவில் சட்டக் கோப்புகள் ஏராளமான முறை திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்ட சாசனத்தின் தோற்றுவாய் என்பதான பிரிட்டிசு சட்டக் கோப்புகளாகட்டும், அமெரிக்கச் சட்டங்களாகட்டும் குறைவான முறையே திருத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. என்ன காரணம் தெரியுமா?”

”சொல்லுங்க அண்ணன்”.

”அவர்களெல்லாம் மரபு/அறம் எனும் பண்பாட்டுக் கட்டமைப்பின் மீது, சட்டங்களை வைத்துச் செயற்படுபவர்கள். மரபு அறம் பிறழும்போது, அதையும் தவறாகவே கருதும் பழக்கம் அவர்களுக்கு இருக்கின்றது. நம்மிடையே அது இல்லை. ஆகவே ஒவ்வொரு சிக்கலைக் களையும் பொருட்டும், கோப்பினைத் திருத்தி, திருத்தி, திருத்தி, திருத்திக் கொண்டே இருக்கின்றோம்”

எனக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது.  நுண்ணுணர்வுகள் இருந்தால்தான் இதன் வீச்சு, ஆழம், ஒருவருக்குப் புரியும். பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் மார்தட்டி, மார்தட்டி, மார்தட்டிப் பேசினார். மேட்டிமையும், சுயவிளம்பரமும் பொய்பித்தலாட்டமும், தனிமனிதத்தாக்குதலும் கலந்துதான். இவர் போன்ற பேர்வழிகள் அமைப்புகளிலே தலைவர்களாகும் போது, மேலே அண்ணன் சொன்ன மரபுகள், நுண்ணுணர்வுகள் பாழ்பட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை சமூகத்திற்கு.


10/24/2022

பொதுக்குழுத் தொடர்ச்சி

அண்மையில் நடந்த தமிழ்ச்சங்கத் தேர்தல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். பெரும்பாலான இடங்களில் 55 : 45 என்பதாக வாக்குகள் பிரிந்திருக்கும். என்ன காரணம்? ஒருவேளை ஒரு தரப்புக்கு 60+%க்கும் மேல் ஆதரவு இருக்குமேயானால் தேர்தலே வந்திருக்காது. இரு அணிகளும் கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டுக்கு அருகில் இருப்பதால்தான் தேர்தலே வருகின்றது.

வென்று பொறுப்புக்கு வரும் அணி இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எல்லாத் துணைக்குழுக்களிலும் மாற்று அணிக்கும் வாய்ப்பளித்து ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டும். தலைவர்களுக்கு பரந்த மனம் இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால் நம்மவர்களுக்கு அது கொஞ்சம் பற்றாக்குறை. இஃகிஃகி.

பொறுப்பாளர்களின் தீண்டாமை, புறக்கணிப்பு, மேட்டிமைத்தனம் என்பது மாற்று அணியினரைக் கிளர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுகின்றது. என்ன கிடைக்கும் போட்டுச் சாத்தலாமென்பதும் நிலைபெற்று விடுகின்றது. ஒரு நல்ல தலைவர் என்ன செய்யலாம்?

கிளர்ச்சியாளர்களின் கொந்தளிப்பைத் தணிக்கும் முகமாக, அவர்கள் எழுப்பக் கூடிய பிரச்சினைகளை ஆய்ந்து, பேசி, பொதுத்தீர்வினைக் கண்டடைவதற்காக சாய்மனம் இல்லாதவர்களைக் கொண்ட குழுவை நியமித்து, அவர்களின் பொறுப்பில் விட்டு விடலாம். அவர்கள் முன்வைக்கின்ற தீர்வினை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டியதுதான். அதுதான் நல்ல தலைமைக்கு அழகு. ஆனால் இவர்கள், எவராயினும், they love only yes-manship. 

நாம் பெரும்பாலும் anti-establishmentதாம். ஏனென்றால் ஆதரவாக, நேர்மறை எண்ணங்களை மட்டுமே பேசுவதற்கு எத்தனை எத்தனையோ பேர். எதிர்க்குரல் எழுப்பச் சமூகத்தில் ஆட்கள் இராது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதுதான் நம் பணி என்பதாகக் கருதுகின்றோம். எடுத்துக்காட்டாக, 2016, 2018, 2020இலும் தமிழ் அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடந்தன. அதிகார வர்க்கத்தை விமர்சித்தே பங்காற்றினோம். எதிரணியாகக் களம் கண்டவர்கள் பாராட்டினர். சில பலர் வெற்றியும் கண்டனர். இன்று அவர்கள் அதிகார வர்க்கம். நம் இன்றைய பங்களிப்பானது அவர்களுக்குக் கசப்பானதாகத்தான் இருக்கும். இஃகிஃகி.

அமெரிக்காவில் இருக்கின்றோம். அமெரிக்க ஆட்சியமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கவனித்தாலே போதும். நம் அமைப்புகளும் வாழ்வும் செழிக்கத் துவங்கி விடும்.

10/23/2022

செயலாளர்

அமெரிக்காவில் ஏராளமான தமிழ் அமைப்புகள் உள்ளன. அவற்றின் வயது 50, 60 என்பதாகக் கூட இருக்கின்றது. நேற்று கூட, கலிஃபோர்னியா தமிழ்மன்றத்தின் செயலாளர் குறிப்பிட்டதாவது, “நாம 41 ஆண்டுகள் ஆனாலும், நாற்பத்து ஒரு, ஒரு ஆண்டு அனுபவத்தைத்தான் கொண்டிருக்கின்றோம்”. இதே போலத்தான் பெரும்பாலான அமைப்புகளும்.

நான் கரொலைனா தமிழ்ச்சங்கம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், சார்லட் பெருநகரத் தமிழ் அமைப்பு, சார்லட் தமிழ்ச்சங்கம், தென்மத்தியத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ் மையம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முதலானவற்றில் ஈடுபட்டுப் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். 2015ஆம் ஆண்டுகள் வரையிலும் தற்போது இருக்கும் பிணக்குகள் பரவலாக இல்லை, isolated incidents were there ofcourse. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்தாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பரவலான ஒரு போக்கினைக் காண முடிகின்றது; வணிகம் ஊடுருவியதும் ஒரு காரணம். நாடளாவிய அமைப்பின் செயற்பாட்டு வீழ்ச்சியும் முக்கியமானதொரு காரணம். எல்லாரும் எல்லா ஊர்த் தமிழ்ச்சங்கங்களின் போக்கினையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாடளாவிய அமைப்பின் போக்கு எல்லாருக்கும் கவனிக்கப்படுவதாக இருக்கும்.

பல அமைப்புகளில், பல செயற்குழுக்களைக் காலங்காலமாகப் பார்த்து வருகின்றோம். வருவார்கள். தமக்குத் தெரிந்த மட்டிலும் வேலை செய்வார்கள். களைப்பாக உணரும் போது, போதுமென்கின்ற மனநிலையில் ஓய்வுக்கு ஆட்பட்டு விடுவார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அப்படி இல்லை. பொறுப்புகளுக்கு வருபவர்கள் அதிகார தோரணை, மமதை, தம் தரப்பு சொல்வது மட்டுமே சரி என்கின்ற தொனியில் செயற்படுகின்றனர். இவர்களுக்கு இப்படியான உணர்வு ஊட்டப்படுகின்றது.

பேரவையில் பொறுப்பில் இல்லாதிருந்த வேளையிலேயே, தன்னார்வலர்களைக் கையாள்வது எப்படியெனக் கையேடு எழுதுவதில் முனைப்புக் கொண்டு, எழுதி, அதைப் பயன்படுத்தியும் வந்தோம். இப்படியான operating manual for each role என்பதைக் கட்டமைத்து, தன் அமைப்பு எப்படியெல்லாம் அமெரிக்க விழுமியத்தைப் பரவலாக்குகின்றது என்பதுதான் நாடளாவிய அமைப்பின் வேலையாக இருக்க முடியும். ஆனால் அப்படியான அமைப்பே கேலிக்குரியதாக இருக்கின்றது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

மன்றச் செயலாளர் சொல்வது போல, ஒரு மின்னஞ்சல் வருகின்றது. இணை பெறுநர்களாக 50 பேர் இருக்கின்றனர். பார்த்ததும் சினம் கொள்ளக் கூடாது. அது அவர்களின் உரிமை. என்ன செய்யலாம்?

1. உடனே அதே உணர்வுடன் பதில் அளிப்பதும், அல்லது பதில் அளிக்காமல் நிராகரிப்பதும் மிக மிகத் தவறு. அறப்பணிக்குக் களங்கம் அது. மாறாக, ’கிடைக்கப் பெற்றேன்’, ‘செயற்குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்கின்றேன்’ எனும் பெறுகைமடலோடு நிறுத்திக் கொண்டு, கால அவகாசம் எடுத்துக் கொண்டபின் பதில் அளிக்க வேண்டும். தேவைப்படின், செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு பதில் கொடுக்கப்பட வேண்டும்.

2. மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு தணிந்த குரலில் பதில் அமைய வேண்டும்.  Focus again on coming out of the situation as the better communicator, and as a professional who refuses to engage in unnecessarily negative correspondence.

3.பேசுபொருள் குறித்து மட்டுமே பதில் அமைய வேண்டும்.

4. பதில் சுருக்கமாக அமைய வேண்டும்.

5. தவறுகளை ஒப்புக் கொள்வதில் தயக்கம் கூடாது. ’தங்கள் ஆலோசனைகளை, சுட்டிக்காட்டுதலைச் செயற்குழு கருத்தில் கொள்கின்றது, இனிவரும் காலங்களில் செயற்படுத்த முனைவோம்’ என்பதாக அமைத்துக் கொள்ளலாம்.

பேரவையைப் பொறுத்த மட்டிலும் இப்படியான மரபுதான் இருந்து கொண்டிருந்தது. தற்போதெல்லாம் மடல்களைக் கையாள்வதில் பெரும் வீழ்ச்சி.  இந்த அண்ணன்களின் மரபே தம்பிகளின் மரபாகவும், ஆங்காங்கே இருக்கும் தமிழ் அமைப்புகளின் மரபாகவும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! அவமானம்!!

reference: https://youtu.be/TVcFaLlcvdk


10/21/2022

வாசிப்பின் பயன்

தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது.

புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக.

நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

இடைவெட்டுப்புரிதல்:  சொற்கள் நமக்குக் கடத்தும் உணர்வு, சொற்தேர்வு முதலானவை, சொல்லப்படாத ஒரு தகவலையும் உட்கொண்டிருக்கும். ஏன், எப்படி போன்ற வினாக்களுக்கான விடைகளைக் கொண்டு புரிந்து கொள்வது. இடைநிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

அறுதிப்புரிதல்: ஏற்பட்ட மேல்நிலைப் புரிதலையும் இடைநிலைப் புரிதலையும் கொண்டு, தமக்குள் இருக்கும் அனுபவம், கூடுதல் தகவற்தேடல் முதலானவற்றைக் கொண்டு தெளிவான ஒரு முடிவுக்கு வருதல். இது தேடலுக்கும் நாடலுக்கும் வழி வகுக்கும்.

துவக்கப்பள்ளியில் நீங்கள் பார்க்கலாம். ரீடிங் லெவல் எனக் குறிப்பிடுவர். புரிதலின் கூறுகளைக் கொண்டு இவை தரம் பிரிக்கப்பட்டு இருக்கும். தற்போது ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். நண்பர் ஒருவர் தகவற்துணுக்கு ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பெட்ரோல் விலை என்பது இன்னின்ன விழுக்காடு உயர்வு என்பதாகச் சொல்லி, கடைசி பத்தாண்டு காலத்தில் முன்னை விடக் குறைவாக 30% உயர்வுதாம் என்பதாக இருக்கும் அது. இதைக்கொண்டு புரிதலின் தன்மைகளை அறிந்து கொள்வோமாக.

கொடுக்கப்பட்ட சொற்களில் பொய், தவறு உள்ளதா? இல்லை. உள்ளதை உள்ளபடியே வாங்கிக் கொண்டால், அதுதான் தகவல். குறிப்பிட்டதன்படி கடைசி காலகட்டத்தில் 30% உயர்வுதாம். முன்னைவிடக் குறைவுதான். மேல்நிலைப்புரிதல்.

இந்தத் தகவற்துணுக்கு ஏன் பகிரப்படுகின்றது? எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, இந்தத் தகவலில் உள்நோக்கம் இருக்கலாம். ஆகவே இதை விட்டுத்தள்ளுவோமென்கின்ற புரிதல் ஏற்படுமாயின், அது இடைவெட்டுப் புரிதல்.

பெட்ரோல் என்பது எதிலிருந்து கிடைக்கின்றது? கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை என்னவாக இருந்தது?  2013ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலர் என்பதாக இருந்து, படிப்படியாக 2020ஆம் ஆண்டு 40 டாலருக்கு வந்து, தற்போது மீண்டும் அதே 98 டாலருக்கு வந்திருக்கின்றது. ஆக, தோராயமாக 50% விலை குறைக்கப்பட்டு, மீண்டும் 2013ஆம் ஆண்டு விலைக்கே வந்திருக்க வேண்டும். எனவே 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறைப்புக்கான 50%, உயர்வுக்கான 30%, என ஏறக்குறைய 80% விழுக்காடு உயர்வுக்கு ஆளாகி இருக்கின்றது பெட்ரோல் என்பது அறுதிப்புரிதலாக ஒருவர் கொள்ளலாம். இது ஆழ்நிலைப் புரிதல்.

Books were written to change the reader on some level.  Thinking about texts at various levels deepens the understanding of the text and aids in the reader understanding and growing from what they have read. வாசிப்பின் பயனை நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டோம். நம் லெளகீக வாழ்வில், எந்த அளவுக்கு பாப்கார்ன் செய்திகளுக்கு ஆட்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

10/20/2022

நேர்மை

தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும்.

வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்பிடுதல். இன்மை, நடப்பில் இல்லாததைக் குறிப்பிடுதல். வழக்கில், பொருட்களை இடம் மாற்றிப் புழங்குகின்றோம். அது, மொழிச்சிதைவுக்கே வித்திடும்.

தன் மனத்துக்கு அறிந்ததை ஒளிவு மறைவின்றி உகந்த மொழியில் சுற்றி வளைக்காமல் நேரிடையாகச் சொல்லுதலால் ஒருவர் பலரின் மனத்தாங்கலுக்கு உட்பட நேரிடலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். தொலைநோக்குப் பார்வையில் நேர்மையே ஒருவருக்குச் சிறப்பைத் தர வல்லது.

1.It shows a lot about your character

2.It makes your life easier

3.It makes you more reliable

4.It shows respect

5.It strengthens relationships

6.Your opinion earns value

7.It provides authenticity

8.It's an admirable trait

9.It may hurt other's feelings; but you end up doing more good than harm

10.It shows courage

11.It provides consistency

அறம்சார் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை என்பது மிக அவசியம். அந்த வெளிப்படைத்தன்மைக்கு வித்தாக இருக்க வேண்டியது நேர்மை. இவை இல்லாதவிடத்து, தீங்கு நடந்தே தீரும். Murphy law states, "Anything that can go wrong will go wrong". நமக்கான பொறுப்புக்காலம் முடிந்து விட்டாலும், நாம் விட்டுச் சென்ற பழக்கங்களால் அமைப்புக்கோ அமைப்பின் பொறுப்பாளர்களுக்கோ தீங்கு நேரிடலாம். 

எடுத்துக்காட்டாக, செயற்குழு. செயற்குழு உறுப்பினர்களே நேரிடையாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்க முடியாது. அடுத்தடுத்த அணிகள், குழுக்களை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனாலும், ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், அதற்குச் செயற்குழுவே முழுப்பொறுப்பு. ஆக, ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரும் அமைப்பின் செயல்களில் நாட்டம் கொண்டு, மேலாண்மைப் பாங்குடன் தன்னிச்சையாகச் செயற்பட்டாக வேண்டும். குரூப்பிசம் கொண்டு செயற்படும் போது, கண்கள் மறைக்கப்பட்டு விடும். இது அமெரிக்கா. கோர்ட்டில் வந்து தூக்கிவிட அண்ணன்களால் இயலவே இயலாது!