11/29/2022

நடை

நீங்களும் கூட இதைப் பார்த்திருக்கலாமாயிருக்கும். வாட்சாப்களில் ஒரு மீம் இப்படியாக வைரல் ஆகிக் கொண்டிருந்தது. “எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டுமானால், பணமாகத்தான் பிறக்க வேண்டும்” எனும் துணுக்குடன் நகைச்சுவைக் கலைஞர் வடிவேலு அவர்களின் ஒரு முகபாவனை. கண்டவர்கள் சிரித்துச் சிலாகித்தனர். நான் இடைமறித்தேன்.

நமக்குப் பணம் வந்து சேர்கின்றபோது, இன்பம் கொள்கின்றோம். அதுவே எதிர்பாராத விதமாகவோ, வஞ்சகத்தின் பொருட்டோ பறிபோகின்றபோது வருத்தம், துக்கம் கொள்கின்றோம். உயிரையே கூட மாய்த்துக் கொள்கின்ற செய்திகளைக் காண்கின்றோம். மேலும், நாம் ஏன் எல்லாருக்கும் பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும்? அப்படியானால் பொய்யாக வாழத்தலைப்படுகின்றோம் என்பதுதானே பொருள்? கல்யாண்ஜி அவர்களின் ஒரு கவிதையைச் சுட்டிக் காண்பித்தேன்.

அடுத்தவரை இடிக்காமல்

கைவீசிக் கைவீசி

காலார ஒரு நடை

நடந்து வரவேண்டும்

அது போதும் எனக்கு!

நேரடியாகப் படித்துப் புரிந்து கொண்டு கடப்பதல்ல எழுத்து. ஒரு கணமாவது அதன்பாற்பட்ட வேள்வியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர் மீதான தனிப்பட்ட பண்புகளைச் சுட்டிக்காட்டி வம்பு வளர்க்காமல், மனம் தங்கு தடையின்றித் தன் பயணத்தை மேற்கொள்கின்ற தன்னுமை(liberty) இருந்தால் போதும் எனக்கு என்பதாகப் படிமம் கொள்கின்றது கவிதை. அதுதான் வாழ்வின் முழுப்பயனையும் நமக்கு ஈட்டித்தரும்.

நீர்ப்பரப்பில் ஒரு மீன்

துள்ளிவிழுகையில் கண்டதோ சுடும்பாறை

மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்

மேலும் ஒரு துள்ளலில் மரணம்

மரித்த கணமே பறவை!

தேவதேவன் அவர்களின் இந்தக் கவிதையைப் பலவாறாகப் புரிந்து கொள்ளலாம். அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. அறிவியல் ரீதியாகப் பார்க்குங்கால், சார்பு, சுழற்சி, பரிணாமம் என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம். நீராக இருக்கின்றது. பாறையின்பாற்பாட்டுக் கிடக்கின்றது. பறவையின் அலகில் மீனாக இருக்கின்றது. பின் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது. 

சமூகவியல் ரீதியாகப் பார்க்குங்கால், மற்றுமொரு கோணத்தை நமக்குள் புலப்படுத்துகின்றது. நீர்ப்பரப்பில் இருக்கும் மீன், மனலயிப்பில் துள்ளி விழுகின்றது. விழுந்தபின்னர்தாம் தெரிகின்றது அது சுடும்பாறை என்று. சூடு தாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்டு வந்த பறவை அலகால் கவ்விச் செல்கின்றது. கொடுங்கோலில் அகப்பட்டுக் கொண்டோமேயெனத் துள்ளுகின்றது. அடுத்த கணம் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது.  பேச்சுகளும் அறிவிப்புகளும் போற்றுதல்களும் விளம்பரங்களும் குளிர்விப்புகளுமாய் நம் மனத்தைக் கொள்ளை கொள்ள எத்தனை எத்தனை? இடைவெட்டுப் புரிதலின்றி நேரடிப் புரிதலின்பாற்பட்டு மனத்தைக் கொடுக்கின்றோம். பிறகுதான் சுடுவது புலப்படுகின்றது. அதிலிருந்து விடுபட வழியைத் தேடுகின்றோம். கடைசியில் அவர்களின் இலக்கில் கரைந்து விடுகின்றோம் என்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றது கவிதை.

அடுத்தவர் என்ன நினைக்கின்றார்? எல்லாரும் செய்கின்றனர், நாமும் செய்தாக வேண்டுமென்கின்ற இலயிப்பு(bandwagon effect) போன்றவையெல்லாம் ஒருபோதும் தன்னுமையை ஈட்டித் தராது. அடுத்தவரை இடிக்காமல் கைவீசிக் கைவீசி தன்பாட்டுக்குக் காலார நடைநடந்தால் போதுமானது.


11/27/2022

நன்றி நவிலல்நாள் 2022

நன்றி நவிலல்நாள் விடுமுறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கல்லூரியில் இருக்கும் மகர் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டிலிருக்கும் இரு உடன்பிறந்தாருடன் நாட்களைப் பங்கு போட்டுக் கொண்டார். இடையில் அன்றாடமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயந்திரவியற்பாசறை (robotics project sessions), உடன் படிக்கும் மற்ற மாணவர்கள் 8 பேருடன் வீட்டில் இடம் பெற்றது. கலகலப்பாய் வீடு குதூகலித்துக் கொண்டிருந்தது.

உலகின் ஏனைய பகுதிகளில் இருக்கும் ஆழ்விகள்(cousins), நண்பர்களுடன் மொக்கை போடுவதாக நான் இருந்தேன். சக கசின் ஒருவரை வாட்சாப் குரூப்பில் வம்புக்கு இழுத்தேன். ’நாம்தான் அன்றாடமும் பேசிக் கொண்டிருக்கின்றோமே? அடுத்த தலைமுறையினருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்னமோ?’ என்றார். உடனே சக மாப்பிள்ளை ஒருவர், ‘நாம் இருக்கின்றோம். பேசிக் கொள்கின்றோம்’ என்றார். சிந்தனைக்குள்ளாக்கியது.

ஒருவிதமான காலகட்டம். பெருந்தொற்று இன்னமும் கூட ஓயவில்லை. நிறைய இழப்புகளைப் பார்த்து வருகின்றோம். பரிச்சியமான, அணுக்கமானவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய பற்றக்கூடிய கொழுகொம்புகள் இல்லாமற்போவதான உணர்வும் தலையெடுக்கத்தானே செய்யும்? மகர்களை எண்ணிப் பார்த்தேன். மூவர் இருக்கின்றனர். காலத்துக்கும் உடன் பயணிப்பர். மனம் தணிந்தது. ஒரே ஒரு பிள்ளையாக இருப்போருக்கு? இந்த இடத்தில்தாம் மாப்பிள்ளையின் கூற்று மேலோங்குகின்றது. ‘இருக்கின்றோம்; பேசிக் கொள்கின்றோம்’.

அம்மாவுடன் பிறந்தோர் மொத்தம் எட்டுப் பேர். அப்பாவுடன் பிறந்தோர் ஆறு பேர். அம்மாவின் பெற்றோருடன் பிறந்தோர் பத்துப் பேர். அப்பாவின் பெற்றோருடன் பிறந்தோர் எட்டுப் பேர். இப்படியாகக் கிடைத்திருக்கும் உடன்பிறவாப் பிறப்புகள் கிட்டத்தட்ட 100+ பேர். அஞ்சுக்கு மூன்று பழுதில்லை என்பார்கள். எல்லா 100+ பேருடனும் அணுக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட, இயன்றமட்டிலும் இருக்கின்றோம். இத்தகு நிலை அடுத்த தலைமுறையினருக்கு உண்டா என்றால், நிச்சயமாக இல்லை. வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளை என்பது முதற்காரணம். அடுத்தது வாழ்வியற்சூழல். கூட்டமாக வாழ்ந்திருந்த நிலை போய், தனித்திருப்பதான வாழ்வியற்கூறுகள். என்ன செய்யலாம்? இத்தகு தலைமுறையினர், உடன்பிறவாப் பிறப்புகளோடும் நண்பர்களோடும் அணுக்கம் பேணியே ஆகுதல் நலம்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரு பிள்ளை என்போர், சக உடன்பிறவாப் பிறப்புகளை(cousins)ப் பேணியே ஆக வேண்டும்.

1. உடன்பிறந்தோர் இடத்தை இவர்கள் நிரப்புவர். Not everyone is lucky enough to have siblings. So when that is the case, cousins can be essential to the family dynamic. For those who do already have siblings, cousins can be the extra brother or sister they always wished they had.

2.எல்லா நேரமும் எல்லாவற்றையும் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ சொல்லிக் கொண்டிருக்க இயலாது. ஆனால் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழலில் இவர்கள் கைக்கொள்வர். Cousins will be there to talk with you, laugh with you and shade you when you need it most.

3. என்னதான் பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தாலும், 40/50 வயதென வரும் போது பெற்றோர், சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, மாமா, அத்தை போன்றோர் இழப்பானது பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பது இயல்பு. அத்தகு இழப்புக்கு மாற்றாக இவர்கள் இருப்பர்.  Cousins help to fill in the gap and remind you that you have not lost all of your family because they still got you. Cousins can be that extra love and support you need.

4. வாழ்க்கைப் பயணத்தின் சமகாலப்பயணி என்கின்ற வகையில், சுக துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளவும்  நினைவுகளை, விருப்பு வெறுப்புகளைக் கையாளவும் உற்ற தோழர்களாய் இவர்கள் இருப்பர். Cousins will make you laugh, cry, cry from laughing and so much more. They keep you on your toes.

மேலைநாட்டுப் பண்பாட்டில் சமயக்கூடங்கள் வாழ்வியற்பயணத்துக்கு உதவுவனவாக உள்ளன. அந்தக் கூடத்திலே சென்று சேர்ந்ததும், ஓர் அணியில்(குரூப்/டீம்) கோர்த்து விடுவர். அந்த அணியினர் அணுக்கத்தோடு வாழ்வியலில் சகபயணியாகப் பயணிப்பர். நமக்கோ அத்தகு பண்பாட்டுக் கூறும் இல்லாத நிலையில், Other things may change us, but we start and end with family. And we need such family.

Never underestimate the power of a cousin.

11/25/2022

பெரும்போர் கொள்ளுமா 2023?

சற்றேறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்பு, ’போர் கொள்ளுமா 2022?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினோம். https://maniyinpakkam.blogspot.com/2021/12/2022.html எத்தனை பேர் படித்திருப்பார்களெனத் தெரியவில்லை. அது இப்படியாக முடிந்திருக்கும், “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!”. சரி, இந்த இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் என்னதான் நடந்திருக்கின்றது?

பிப்ரவரி முதல் வாரம். உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சொல்லின, “இரஷ்யா படையெடுப்பை நடத்தாது. அதிகபட்சமாக ஏவுகணைகளைத் தொடுக்கலாம்!”. இரஷ்யாவும் தமக்கு அப்படியான எண்ணமெதுவும் இல்லையெனச் சொல்லியது. ஆனால், அமெரிக்க அதிபர் பைடனே வெளிப்படையாக அறிவித்தார். “எந்த நேரத்திலும் இரஷ்யா தன் படையெடுப்பை நடத்தக்கூடும். ஆகவே அமெரிக்கக் குடிகள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுவது உசிதம்”.

பிப்ரவரி 24, 2022, இரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனெங்கும் சீறிப்பாய்ந்தன. உக்ரைனின் இராணுவக் கேந்திரங்களை அழித்தொழித்தன. ஒரேவாரம், நாடு முழுவதும் தன் கைப்பிடிக்குள் வந்து சேருமெனக் கொக்கரித்தது இரஷ்யா. உக்ரைன் நாட்டு அரசு கேந்திரம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி, போலந்து நாட்டில் இருந்து செயற்பட யோசனை சொல்லியது அமெரிக்கா. மறுத்து, அடைந்தால் நாடு, மடிந்தால் உயிரெனச் சொன்னார் உக்ரைன் நாட்டு அதிபர்.

இரஷ்யப் படைகள், வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பி வேகமாக முன்னேறிய வண்ணம் இருந்தன. தலைநகர் கீய்வ் நகருக்கு வெகு அருகே 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்த படைகள் மேற்கொண்டு முன்னேற முடியாமல், உண்ண உணவின்றித் திகைத்து நின்றன. இரஷ்ய எல்லையிலேயே இருக்கும் உக்ரைநாட்டு இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழைய முடியாதபடிக்கு உக்ரைன் படைகள் ஆக்ரோசமாக எதிர்த்தாக்குதல் நடத்தின. இரஷ்யா வடக்கு, வடகிழக்கிலிருந்து பின்வாங்கி, கிழக்கு, தெற்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துக் கொண்டது. அறிவித்த சில நாட்களிலேயே, இரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் Moskva  அழித்தொழிக்கப்பட்டது.  In the late hours of 13 April 2022 Ukrainian presidential adviser Oleksiy Arestovych reported Moskva was on fire and Odesa governor Maksym Marchenko said their forces hit Moskva with two R-360 Neptune anti-ship missiles. A radar image showed the ship was about 80 nautical miles (150 km) south of Odesa around 7 p.m. local time. Two reports indicated the ship sank before 3 a.m., 14 April.

உக்ரைன் நாட்டுப் படைகளின் வலுவும் நெஞ்சுரமும் அமெரிக்காவுக்கு பெருவியப்பைக் கொடுத்தது. உடனடியாக ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் முடிவு செய்தன. உலக நாட்டின் பல தலைவர்களும் உக்ரைன் நாட்டுத் தலைநகருக்கே சென்றனர். வான்வெளி எதிர்த்தாக்குதல் நடத்தவல்ல ஸ்டிங்கர்கள்தான் முதன்முதலாக உக்ரைனுக்குள் அனுப்பப்பட்டன. அதுவரையிலும் ஊடுருவிக் கொண்டிருந்த இரஷ்ய விமானங்கள் தாழ்வாகப் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொலைதூர ஏவுகணைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இரஷ்யாவுக்கு. 

ஜூன் 2022 அல்லது அதற்குச் சற்று முன்பாக, ஏவுகணைகளைத் தாக்கியொழிக்கும் படைக்கலங்கள் சேர்க்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் அதியுச்ச நுட்பமான NASAMS கூட உக்ரைன் வசம் சென்று சேர்ந்திருக்கின்றது. அதன்நிமித்தம், 80%க்கும் மேலான இரஷ்ய ஏவுகணைகள் இலக்கைச் சென்று சேருமுன்பாகவே அழித்தொழிக்கப்பட்டன. ஒவ்வொரு ஏவுகணையும் ஒரு மில்லியன் டாலரிலிருந்து 15 மில்லியன் டாலர் வரையிலுமான மதிப்பைக் கொண்டது. இரஷ்யாவின் இருப்பு மளமளவெனக் குறையத் துவங்கியது. புது ஏவுகணைகளை உருவாக்க வேண்டுமானால் செமிகண்டக்ட்டர் சிப்புகள் வேண்டும். அதற்கும் கிடுக்கிப்பிடி போட்டார் பைடன்.

பிடிபட்ட பகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இரஷ்யாவால்? ஏன்? 300 கிமீ தொலைவிலிருந்தேவும் குறிதவறாமல் தாக்கி அழிக்கக் கூடிய HIMARS இரக பீரங்கிப் படைக்கலங்கள் உக்ரைன் வசம் ஜூலை மாதம் வந்து சேர்ந்தன. அவற்றின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் எல்லாத் திசைகளிலிருந்தும் பின்வாங்கத் துவங்கின இரஷ்யப்படைகள். கடைசியாக, பிடிபட்ட ஒரே ஒரு மாகாணத் தலைநகரான கீர்சன் நகரமும் உக்ரைன் வசம் வந்து சேர்ந்திருக்கின்றது. அடுத்து?

குளிர்காலம் துவங்கி இருக்கின்றது. மின்சார, எரிபொருள் உற்பத்தி இடங்களைத் தாக்கி அழிப்பதன் மூலம் உக்ரைன் நாட்டைப் பணிய வைத்துவிட முடியுமென நம்புகின்றது இரஷ்யா. அதில் சற்று வெற்றியும் கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எதிர்கொண்டு மீள்வோமென்கின்றது உக்ரைன். இரஷ்யாவுக்கு இதுதான் கடைசி உத்தி. இதுவும் பயனளிக்காவிட்டால், அணு ஆயுதங்கள் அல்லது அணுமின் உலைகளைத் தாக்குவதன்வழி உக்ரைனுக்குச் சேதத்தை விளைவிப்பது என்பதாக இருக்கலாமென்கின்றனர் நோக்கர்கள்.

செமிகண்டக்ட்டர் சிப்புகளுக்கு வருவோம். எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இத்தகு சிப்புகள் அடிப்படை. அவற்றின் உயரிய தொழில்நுட்பம் அமெரிக்க வசம் மட்டுமே உள்ளது. அப்படியான தொழில்நுட்ப ஏற்றுமதிக்குத் தடை விதித்து விட்டார் பைடன். அந்நிய மண்ணில் அத்துறையில் வேலை செய்யும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பவும் ஆணை இடப்பட்டு விட்டது. அவர்கள் நாடு திரும்ப வேண்டும் அல்லது குடியுரிமையைக் கைவிட்டாக வேண்டும். சீனாவின் பொருளாதாரமே நிலைகுலையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது. சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள், வியட்நாமுக்கும் தைவானுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இத்தகு நகர்வுகள், தொடர்புடைய நாடுகளை மண்டியிட வைக்கும் அல்லது கொந்தளித்துப் போரில் ஈடுபட வைக்கும் என நினைக்கின்றனர் நோக்கர்கள். 

நேட்டோ நாடுகள் பெரும்போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் இடம் பெற்ற அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும் பைடனுக்கு ஏதுவாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே, சென்று ஆண்டு சொல்லப்பட்டதேதாம் இந்த ஆண்டும்: “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2023!!

11/20/2022

நண்டுருண்டாம் பழம்

நண்பர் ஸ்ரீ அவர்களிடம், தாவர வேலிகளில் இருக்கும் நாட்டுப்புறப் பழங்களான காரைப்பழம், சூரிப்பழம், கோவைப்பழம், சங்கம்பழம், பூலாம்பழம், கிளுவம்பழம், கள்ளிப்பழம், உண்ணிப்பழம், சுக்கிட்டிப்பழம், ஆலம்பழம், தணக்கம்பழம், பிரண்டைப் பழம், முழுமுசுக்கப்பழம் முதலான பழங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். 

பாட்டி ஊரான லெட்சுமாபுரமும் அதற்குத் தென்பகுதியும் மலையும் மலைசார்ந்த பகுதியான குறிஞ்சி நிலமாகும். முட்தாவரங்கள் நிறைய இருக்கும். அதாவது என் குழந்தைப் பருவத்தில். தற்போதெல்லாம் தென்னையும் தார் சாலைகளும் கம்பி வேலிகளுமாக அப்பகுதி மாறிவிட்டது. 

இருந்தாலும், மலையோர வனங்களில் இலந்தை, களாக்காய், கொடுக்காப்புளி, காரை, சூரை, வில்வம், சப்பாத்திக்கள்ளி, கிளுவை, சூடாங்கள்ளி, பெருங்கள்ளி, சிறுகள்ளி, பரம்பைமுள், கருவேல், குடைவேல், செவிட்டுவேலன், காக்காமுள், சங்கமுள், யானைக்கற்றாழை எனப் பலதரப்பட்ட குறிஞ்சிநிலத் தாவரங்களைக்(tropical) காணலாம். அவற்றுக்கிடையேதான் மேற்கூறப்பட்ட பழங்களும் தின்னக் கிடைக்கும்.

இடையூடாக வண்டுருண்டாம் பழம் தெரியுமாவெனக் கேட்டார். தெரியுமெனச் சொன்னேன். சாணத்தை உருட்டிக் கொண்டு போகும் வண்டுகள். ஆனால் அவருக்கு நண்டுருண்டாம் பழம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலவநாயக்கன் பட்டிப் புதூர்ப் பகுதியில் உப்பாற்றங்கரையில்தாம் மாடு மேய்த்துக் கொண்டிருப்போம். கரையில் அவ்வப்போது ஏராளமான மண்ணுருண்டைகள் காணக்கிடைக்கும். என்னவென ஆயத் தலைப்பட்டபோது உடனிருந்த சக ஆடுமேய்ப்பர்கள் சொன்னது, நண்டு தின்று போட்ட விட்டைகளென. வியப்பாக இருந்தது.

ஆமாம். நண்டுக்குப் பசி தாளமுடியாது போது, அடிவயிற்றினூடாக மண்ணைத் தின்னத் துவங்கும். மண்ணென்றால், மண்ணையே தின்னாது, அலையடிப்பில் வந்து சேர்ந்த நீரில் இருக்கும் நுண்சத்துகளை உறிஞ்சிவிட்டு, தின்ற மண்ணை உருண்டைகளாகத் துப்பி விடும். இப்படியான நண்டுருண்டாம் பழங்களைக் கண்டால் பழமைபேசியின் நினைவு உங்களுக்கு வந்து போகும்தானே? இஃகிஃகி!



11/19/2022

ஆண்கள் நாள் Nov 19, 2022

அமைப்புகளில் பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதைக் காணலாம். அதேபோல ஆண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதில்லை. என்ன காரணம்? பெண்களைக் கொண்டாடுவதின் வழி, உணர்வுப்பூர்வமாக நெஞ்சைநக்குவதின் வழி, கூட்டம் சேர்ப்பது மட்டுமே இலைமறையான நோக்கம். உள்ளபடியே பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் கோலோச்ச வேண்டுமானால் மறுதரப்புக்குத்தான் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட வேண்டும். இஃகிஃகி. ஆகவே, ஆண்கள் நாள்தான் அமைப்புகளால் முதலில் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். அப்படியான நாளைக் கடைபிடித்தால் கூட்டம் சேராது. அங்கு இருக்கின்றது பின்னடைவு.

ஆண்கள் நாளை இரு விதமாக நோக்கலாம். தனிமனிதக் கோணத்தில். பண்பாட்டுக் கோணத்தில்.

தனிமனிதர்களாக, ஆண்களிடத்திலே ஆண்மை என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கின்றது. காரணம், மனநலக்கேடும், உடல்நலக் கேடும்.

பண்பாட்டுக் கோணத்திலே, ஆண்மை என்பது என்னவென்பதே அறிந்திராத சூழல். ஆண்மை என்பது யாதெனில், ஆண்பாலினத்துக்குரிய சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் தரம் குன்றாமலிருப்பதும். எப்படி மேம்படுத்திக் கொள்வது? பெண்ணியம் என்பது மேம்பட்டுவருகின்றவொன்று,  fluid and ever-changing, like the sea. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஆண்மை என்பது அப்படியன்று. வரையறுத்துச் சொல்லிவிட முடியும், it’s rigid and enduring, like the mountains. சரி, பண்பாட்டுத் தளத்தில் ஆண்மைக்கான வரையறைகள் என்னென்ன?

1. வாழ்வின் நோக்கம், இலக்கு கொண்டிருத்தல்.

2.மேற்படி இலக்குகளுக்காக திட்டமிட்டிருத்தல்

3.அகவளர்ச்சியோடு இருத்தல்

4.நேர்மையும் வாய்மையுமாய் இருத்தல்

5.காத்திருத்தல், தம்மையும் தம்மோடு இருப்போரையும்

6.மாற்றுப்பாலினத்துக்கு முகமன்னோடு இருத்தல்

தனிமனிதக் கோணத்திலே எப்படி மேம்பாடு கொள்வது?

உலகம் யாவிலும் ஆண்மைக் கோளாறுகள், சிதைவுகள் இருப்பதாய்ச் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அரசுகள் பல முன்னெடுப்புகளையும் கையாண்டு கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணமாய் இருப்பவை, மனநலப் பயிற்சியின்மையும் உடல்நலப் பயிற்சியின்மையும்தான். இதன்நிமித்தம், மனநலக்கேடுகளும் உடல்நலக் கேடுகளும். சீர்கேடான உணவுகள், கூடுதலான ஊடகப்புழக்கம், பொருள்வயமான வாழ்க்கை, விளம்பர ஆதிக்கம் உள்ளிட்ட பலவற்றையும் உணர்ந்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

https://time.com/6096701/china-masculinity-gender/  After Britain and America, It’s China’s Turn to Worry about Masculinity


11/18/2022

ஆவணப்படுத்தலே அழகு

நவ 18, 2022, மிக முக்கியமானதொரு நாள். இருவேறு பற்றியங்கள் என் மனத்தைப் பிசைந்தன. தமிழ் எழுத்தாளர் ஒருவர், ஒரு சொல்லைத் தாம்தான் உருவாக்கியதாகச் சொல்லவே அது சர்ச்சையாகின்றது. ஏனென்றால் அந்த சொல், 1960+களிலேயே தமிழ்நாட்டரசின் கையேட்டில் இடம் பெற்றிருக்கின்றது. அந்த ஆவணத்தைச் சான்றாகக் கொண்டு இவர்தம் வாக்கு சரியன்று என வாதிடப்படுகின்றது. சர்ச்சையை அடுத்து, எழுத்தாளர் தரப்பு கொடுக்கும் விளக்கங்கள், அவர் அச்சொல்லைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் படைப்பில் அச்சொல் இடம் பெறவேயில்லை என்பதாகச் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் கடும் வருத்தம், ஏமாற்றத்தையே கொடுக்கின்றது. மனம் வலிக்கின்றது.

’உலகின் இளைய பில்லியனர் இவர்தாம்; இன்னின்ன விருதுகள்’ என்றெல்லாம் சொல்லி ஊடகங்கள் கொண்டாடின. அதே ஊடகங்கள்தாம், அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதாக பிரேக்கிங் நிவீசுகள் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு பார்வைகள், கண்ணோட்டங்கள். பொதுப்புத்திக்கு வைக்கப்படும் தகவலைக் கடந்து பார்ப்பதுதான் நம் பார்வை. கொண்டாடப்பட்ட ஒருவரின் வீழ்ச்சியின் துவக்கப்புள்ளி எது? ஆவணப்படுத்துதலின் அருமை கருதிய ஒரு சாமான்யர்.

அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் சேருகின்றார். பணியிடத்திலே, பதிவுகள் அழிக்கப்படுகின்றதைக் கவனிக்க நேர்கின்றது. இது, ஆவணப்படுத்தல் என்பதன் வேருக்கே அமிலம் ஊற்றும் செயலாயிற்றேயெனச் சிந்திக்கின்றார். ஏதோ தவறு நடப்பதாக உணர்கின்றார். தம் பணியிழப்பு, இதரத் தொல்லைகள் என்பது பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாமல் உகந்த அலுவலர்களுக்கு மடல் எழுதுகின்றார். இதுதான் துவக்கப்புள்ளி.

வீடானாலும் சரி, காடானாலும் சரி, சங்கமானாலும் சரி, பேரவையானாலும் சரி, ஆவணங்களே அடிப்படை. விழாக்களும் விருதுகளும் அந்தந்த நேரத்தை இனிமையாக்கக் கூடியவை. ஆவணங்கள் காலத்தின் சான்றாய் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியன. ஆவணங்களை ஆக்குவதும் பேணுவதுமே மாந்தனுக்கு அழகு!

https://youtu.be/vMQlj9TZQfE

11/15/2022

Press Here

வணக்கம். இது சின்னஞ்சிறு குழந்தைகள் முதற்கொண்டு மூத்தோர் வரைக்குமான கதை. https://youtu.be/McKHNjjwfts

வாசித்து அல்லது கண்டுணர்ந்து விட்டுத் தொடரலாம். வாசிக்காமலோ கண்டுணராமலோ வாசிப்பதால் முழுப்பயனையும் எட்டிவிட முடியாது. ஆகவே?!

எந்த ஒரு கதையையும் உள்வாங்கி, சிரிப்பு, அழுகை, உவப்பு, மருட்கை, ஏமாற்றம் இப்படி ஏதாகிலும் ஓர் உணர்வுக்கு ஆட்பட்டு, தகவலை மட்டுமே உள்வாங்கி இருப்பதென்பது களித்திருத்தல்(recreation), கேளிக்கை(entertainment) என்பது மட்டுமே ஆகும். அப்படியான கதைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் யாதொரு இலக்கிய விழுமியமும் இல்லை. துவக்கநிலை வாசிப்புக்கான, உணர்வு மதிப்பீட்டுக்கானவை மட்டுமே அவை.

மேலைநாடுகளில் படிப்படியாக மூன்றாம் வகுப்பு, அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்நிலைக்குப்(inference) பயிற்றுவிக்கப்படுவர். வாழ்வியலின் ஏதோவொரு கூற்றினை ஒவ்வொரு கதையும் கருவாகக் கொண்டிருக்கும், இப்படியானதொரு போக்குத்தான் அமெரிக்காவை முதிர்ந்தநிலையில் நிலைநிறுத்தி இருக்கின்றது. ஒவ்வொரு நூறு பேருக்கும் 120 துப்பாக்கிகள் உள்ளன. தெரு/ஊருக்கு ஒரு துப்பாக்கியென இருந்து விட்டால்கூடப் போதும், சில பல நாடுகள் இருக்கின்ற இடமில்லாமற்போய் விடும். கதைகளின், இலக்கியத்தின் தரம்தான் சமூகத்தின் முதிர்ச்சியைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.

எளிய கதை. ஒரு சிறு அசைவில் துவங்குகின்றது. வளர்ந்த நாம் கூட ஒன்றிப் போகின்றோம். கற்பனை, சும்மானாச்சிக்கும் என்பதாகத்தான் துவங்குகின்றோம். அடுத்தபக்கம், அடுத்தபக்கம் என நகர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், முற்றிலுமாகக் கற்பனை எனும் எண்ணத்திலிருந்து விடுபட்டு மாயத்தில் கரைந்து போகின்றோம். கற்பனாமுரண் (paradox of fiction) நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகின்றது. சிறார்களின் மனம் எப்படியாக இருந்திருக்கும்? களிப்பில் கேளிப்பில் ஆழ்ந்து மீண்டும் வாசிக்கத் தூண்டியிருந்திருக்கும். சரி, வாழ்வியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

தத்துவார்த்த ரீதியில் நோக்குங்கால், மனம் உவப்புக் கொள்கின்ற ஒவ்வொரு செய்கையாகச் செய்து செய்து, படிப்படியாக மனங்களைக் கொள்ளைகொண்டு தமக்கான திட்டங்களை நைச்சியமாக நிறைவேற்றிக் கொள்வர் நிகழ்த்துவோர். அந்தப் பயணத்தில் இருப்போருக்கு அதன் முழுப்பார்வையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை(எ:கா: சனவரி ஆறாம் நாள், 2021). இதில் அகப்படாமல் இருந்து கொள்ள வேண்டுமேயானால், அந்த முதற்செய்கை, இரண்டாம் செய்கை, மூன்றாம் செய்கை என்பனவற்றிலேயே இது கற்பனை, உண்மைக்குப் புறம்பானது என்பதாக உணர்ந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு விளைவு(cause & effect) உண்டு. அதைத்தான் அழுத்தும் செய்கையில் மஞ்சள் வட்டம் இரண்டாதல், ஊதும் போது காணாமற்போதல் எனக் காணமுடிகின்றது.

விழாவில் வழங்கப்படுமென ஏராளமான விருதுகள், பரிசுகள் அறிவிக்கப்படுகின்றனயென வைத்துக் கொள்வோம்; . அறிவிப்புகளைக் கண்டு மகிழ்வோர் ஏராளம்(paradox of fiction). 150 பேருக்கு, பெயர் அறிவிப்பு, படமெடுத்துக் கொள்தலென ஒரு நிமிடமென வைத்துக் கொண்டாலும் கூட, இரண்டரை மணிநேர மேடை நேரம் தேவைப்படும். இது சாத்தியம்தானா, ஈடேறுமா? இப்படியெல்லாம் சிந்தைவயப்பட்டு, what would be the causality? என எண்ணத் தலைப்படுவதுதான் inference, வாசிப்பின் ஆழ்நிலை.

வாட்சாப் பகிர்வென்பதாலே சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. கூடுதல் தகவலுக்குக் கதைகுறித்த நிறையத் திறனாய்வுக் கட்டுரைகளை இணையத்திலேயேவும் காணலாம்.  இதோ அவற்றுள் ஒன்று: https://www.prindleinstitute.org/books/press-here/

11/04/2022

No, David!

மிகவும் எளிய கதை.  நான்கு வயதுக் குழந்தைகளுக்கான கதை என்றாலும் கூட, இரண்டு வயதுக் குழந்தைகளிலிருந்தேவும் சொல்லப்படுகின்ற கதை. ஆகாதன ஒவ்வொன்றுக்கும், ‘நோ, டேவிட்’ சொல்லிக் கொண்டே போய், கடைசியில் ‘yes David, I love you' என்பதாக முடிகின்றது. https://fliphtml5.com/kdivq/wokb/basic

இதற்கும் ஏராளமான திறனாய்வுகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. கதை சிறந்த கதை என்றால், கதை பிறந்த கதை இதனினும் சிறப்பு. கதாசிரியர், தமது ஐந்தாவது வயதில்(1964), அவருடைய அம்மா பேசியதைச் சிறு நூலாக எழுதி வைத்திருப்பார். அதில், “No David, I love you" எனும் சொற்கள் மட்டுமே இருக்கும். 1998ஆம் ஆண்டில் அது எப்படியோ அவரது கைக்குக் கிடைக்கின்றது. அதையே நூலாக்கி விட்டார். இன்று அது மிகவும் புகழ்பெற்ற கதைநூல். இதே நூல், அமெரிக்கக் குடிமை, சட்டத்தின் ஆட்சி என்பதற்கான பாடத்திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. https://www.csusm.edu/slce/civicengagement/literacyandthelaw/unit1/index.html

சொல்லப்படுகின்ற தகவல் உண்மையா? மனத்துக்கு இதமாக இல்லாத நேரத்திலே, இது ஏன் சொல்லப்படுகின்றது? நோக்கம் என்ன? சமூக விழுமியம் சார்ந்த கருத்தா, தன்னலம் சார்ந்த கருத்தா? இவையெல்லாம்தான் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது. The purpose of nonprofit organizations is generally to improve quality of life for others at a community, local, state, national, or even global level.

இன்னாநாற்பதுக்குப் பிறகுதான் இனியவைநாற்பது. இஃகிஃகி, விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுவோம். In the author’s note, the author states, "Of course, 'yes' is a wonderful word. But 'yes' doesn't keep the crayon off the wall." கதைகள் ஆய்ந்து கலந்துரையாடவே! செம்மாந்து போய் மகிழ்ந்திருப்பதற்கானவை அல்ல!

Cheers! Happy Weekend!!

11/03/2022

The Good Egg

தீயவிதை (The Bad Seed) எனும் தலைப்பில், தவறான பழக்கங்களை உடைய ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பட்டியலிட்டு, அந்தக் குழந்தை எப்படியானதை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் சொல்லி, உணர்ந்து கொண்ட பின்னும் சமூகம் எப்படி அந்தக் குழந்தையை முன்முடிவோடு பார்க்கின்றது? அதிலிருந்து எப்படி மீண்டு கொள்வது என்பதை எல்லாம் சொல்லி இருப்பார் ஆசிரியர். தொடர்ந்து அதற்கு நேர்மாறாகவும் ஒரு கதையைப் படைத்திருக்கின்றார். அதுதான் The Good Egg.

முட்டை என்பதுவும் ஒரு குறியீடு. ஒரு பெட்டியில் இன்னபிற 11 முட்டைகளோடு 12ஆவது முட்டையாக இது இருக்கும். நல்லபழக்கங்களையே கொண்டிருக்கும். எஞ்சிய முட்டைகள் என்னவெல்லாம் கூடாதன செய்கின்றது என்பதைச் சொல்லி, அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் இந்த முட்டையானது சரி செய்து கொண்டே இருக்கும். நாளடைவில் மன அழுத்தம் கண்டு, அதன்காரணமாக ஓட்டில் சிறு விரிசல் கண்டுவிடும். உணர்ந்து கொண்ட முட்டையானது வெளியேறிப் போய் வெளியுலக வாழ்வை வாழத்தலைப்படும். அதனால், ஏற்பட்ட விரிசல் மறைந்து விடவே மகிழ்வுடன் மீண்டும் வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளும். நான்கு வயதுக் குழந்தைக்கான கதை. https://anyflip.com/iege/ruok/basic

பகுப்பாய்வு (inference) செய்யத் தலைப்பட்டால் பல்வேறு பற்றியங்களாக எண்ணங்கள் விரிந்து கொண்டே போகும். எல்லையே இல்லை. அன்றாட வாழ்வில் இடம் பெறக்கூடிய நிகழ்வுகள், எது நல்லது, கெட்டது, மன அழுத்தம் எப்படி ஏற்படுகின்றது? குழுவாதம், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது தொடர்பாகவும் இணையத்தில் நிறையக் கட்டுரைகளைக் காணலாம். https://childrenslibrarylady.com/the-good-egg-by-jory-john/

உயர்வு, தாழ்வு எனும் பார்வையில் இருவேறு கதைகளை ஆசிரியர் படைத்திருந்தாலும் கூட, இரண்டிலுமே தகாதன துல்லியமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அவற்றைச் சொல்லிச் சரி செய்வதை விட்டுவிட்டுத் தாமே சரி செய்து கொண்டிருப்பதால் ஏற்படும் பின்னடைவையும் சுட்டிக் காண்பிக்கின்றார். எதிர்மறையென முகஞ்சுழிக்கலாகாது.

சமூகத்தில் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காகவே பெருமை பேசுதல், உயர்வுநவிற்சி, மகிழ்வூட்டி மீன்பிடித்தல் போன்ற வேலைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. Persuasion is emotional first and rational second. Indeed, we are more likely to yield to persuasion in order to maintain or attain certain mood states than in order to gain knowledge or advance our thinking. https://hbr.org/2015/06/persuasion-depends-mostly-on-the-audience. இதனால்தான் பொய்யுரை பேசி விபூதியடித்தலென்பதும் நம்மிடையே இரண்டறக் கலந்திருக்கின்றது. Choice is yours. Yes, Persuasion Depends Mostly on the Audience!!

இந்தக் கதை உணர்த்தும் மற்றுமொரு கருத்து, work life balance. தன்னார்வத் தொண்டு போற்றத்தக்கதுதான். விளம்பரபோதை, புகழ்வெளிச்சம், குழுக்களுக்கிடையேயான அக்கப்போர் போன்றவற்றால் அதுவேயென இருந்து விடுவதுமுண்டு. உள்மன அழுத்தம், ஓடு விரிசல் கண்டுவிடும். உஷாரய்யா உஷாரு!!

11/02/2022

The Bad Seed

தமிழ் அமைப்புகள் சார்ந்த நண்பர்களிடம் அடிக்கடி சொல்வது, நாம் அமெரிக்க வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென. முறைப்படி எப்படிக் கற்றுக் கொள்வது? இருக்கின்ற எல்லா பால்வாடிக் கதைகளையும் படித்துவிட்டால் போதும் கற்றுக் கொண்டு விடலாம். இஃகிஃகி. பென்சில்வேனியா இலக்கிய வட்டத்தில் நிறையக் கதைகளையும் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் கூட எழுதி இருந்தோம்.

நெகடிவ், விமர்சனம், எதிர்மறை என எதிர்மறையாக அணுகும் போக்கு நம்மிடத்தில் தூக்கலாக இருப்பதால், தற்போதைக்கு இரு நெகடிவ் கதைகளைப் பார்க்கலாம். அவை இரண்டுமே 3 அல்லது 4 வயதுக் குழந்தைகளுக்கானது.

o0o0o0o0o0o0

ஒரு டைனோசர்க் குழந்தை, ரெக்ஸ், பள்ளிக்கூடம் செல்லும் நாள் வந்துவிடும். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கண்டதும் தின்ன வேண்டும் போல இருக்கும். எல்லாரையும் விழுங்கி விடும். ஆசிரியர் வெளியே துப்பிவிடும்படிக் கட்டளை இடுவார். பிள்ளைகள் ரெக்ஸிடம் ஒதுங்கிப் போவர். மாலையில் சோகமாக வீடு திரும்புவாள் ரெக்ஸ். அப்பா டைனோசர் கண்டுபிடித்து அறிவுரை கூறுவார். அடுத்த நாளும் ஒரு பிள்ளையை விழுங்கி விடும். அதற்குப் பின் திருப்பம் நிகழும்.

https://www.camplanoche.com/wp-content/uploads/2020/09/We-Dont-Eat-Our-Classmates.pdf

https://static1.squarespace.com/static/56663dee841abafca76d6f46/t/61676c630f190f177202bc28/1634167907616/We+Don%27t+Eat+Our+Classmates_final+reading+guide.pdf

இரண்டு நிமிடக் கதைதான். ஆனால் பகுப்பாய்வு செய்யத் தலைப்பட்டால் நாள் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம். பல குறியீடுகள், பல படிமங்கள், சொல்லாமற்சொல்லும் பல தகவல்கள்.

o0o0o0o0o0o0

தீய விதை என்பது கதையின் தலைப்பு. தலைப்பே ஒரு குறியீட்டில், படிமத்தில்தான் அமைந்திருக்கின்றது. விதை என்பது ஓர் இனத்தைப் பெருக்க வல்லது. அதில் எப்படி தீயது என்பதாக இருக்க முடியும்? மேலும் விதை என்பது குழந்தைகளைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. அப்படியான விதை எப்படியோ தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும். ஒருவர் மெல்லுவார். தீய விதை என்பதாலே உடனே துப்பி விடுவார். பிறகு அது கழித்துக் கட்டிய கூல்டிரிங்க்கேனில் தங்கிக் கொள்ளும்.  அந்த கூல்டிரிங்க்கேன் என்பது கூட ஒரு குறியீடு. அதற்குள் இருக்கும் போது சிந்தனைக்கு ஆட்பட்டதாலே மாறுபட்ட விதையாக உருவெடுக்கும். ஆனாலும் பார்ப்போரிடத்தில் அதன்மீதான முன்முடிவு(stereotype) தொடர்ந்து கொண்டே இருக்கும். கடைசிப் பக்கத்தில் ஆசிரியர் அதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வாசகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

https://pubhtml5.com/prye/ixmw

https://theresponsivecounselor.com/2018/06/the-bad-seed-review-and-activities.html

https://childrenslibrarylady.com/the-bad-seed/

o0o0o0o0o0o0

இரண்டு நிமிடங்களில் படித்துவிடக் கூடிய இவ்விரண்டு கதைகளுக்குமே ஏராளமான திறனாய்வுகள், பயிற்சிக் கட்டுரைகள் எனப் பலவற்றை இணையத்தில் நாம் காணலாம். ஒவ்வொன்றும் புதுப்புது புரிதற்தோற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும். 

இப்படியான எதிர்மறைக் காட்சிகள், எண்ணங்கள் என்பவை நல்லதொரு விளைவை ஏற்படுத்தவே நம் முன்வைக்கப்படுகின்றன.

பேச்சு

ஒரு மனிதன் உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் உரையாடுவதற்கும் உறைவிடம் கொள்வதற்கும் எவ்விதமான தடையும் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவையில்லாமல் அவன் வாழ்வின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. இந்த மெய்ப்பாட்டை கிரேக்கர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் உணர்ந்தனர். அதன் நிமித்தம் மனித உரிமைகளில் இவற்றைக் கட்டமைத்தனர்.

அமெரிக்காவில் 1791, டிசம்பர் 15ஆம் நாள் நடைமுறைப்படுத்த முதற்சட்டத் திருத்தத்தில் பேச்சுரிமைக்கான வரையறை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்படிக்கு ஒருவர் தங்குதடையின்றிப் பேசலாம்; எழுதலாம். அதுவே நாட்டை, பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியது. ஆனால் அப்படியான ஏகபோக உரிமை வழங்கலால் ஏற்படும் தீங்குகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? யோசித்தவர் சில விதிவிலக்குகளைக் கட்டமைத்தனர்.

1.பாலுணர்வு உள்ளீடுகள்

2.அறிவுத்திருட்டு

3.மிரட்டல்

4.நற்பெயருக்குக் களங்கம்

இப்படியான விதிவிலக்குகள் பேசுவதற்குத் தயக்கத்தைக் கொண்டு வராதாயென யோசித்தனர். அதற்கும் ஒரு தீர்வாக ஒன்றைக் கொண்டு வந்தனர். குற்றம் சாட்டுபவர் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை ஐயம் திரிபற முற்றுமுழுதாக நிறுவ வேண்டும்.

கூட்டத்திற்கு நடுவே இருந்து கொண்டு, ‘தீ, தீ’ என ஒருவர் கத்துகின்றார். அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி பலர் காயமடைகின்றனர். அவர் உண்மைக்குப் புறம்பாக சொல்லி இருப்பதை நிறுவும் போது அது குற்றம். பேச்சுரிமை காத்தல் பயனளிக்காது.

ஒருவர் இன்னொருவரைத் திருடன், ஃப்ராடு எனக் குற்றஞ்சாட்டுகின்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றம் செல்கின்றார். அவர் அப்படிச் சொன்னதற்கான சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. பயனில்லை. ஏன்? குற்றஞ்சாட்டப்பட்டவர் தாம் பிறந்ததிலிருந்து அந்த நொடி வரையிலும் திருட்டு, புரட்டு செய்யவே இல்லையென நிறுவியாக வேண்டும். இதுதான் அமெரிக்கா. செக் & பேலன்ஸ்.

அறம், நமக்கான அடிப்படை. உரிமைகள் எந்தெந்த வழியில் ஈட்டிக் கொடுக்க முடியுமோ அந்தந்த வழியில் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது அமெரிக்கநாடு. எல்லாச் சட்டத்திருத்தங்களும் உரிமைகளைக் கொடுப்பதற்காகவே. ஒருவர் என்னை நோக்கி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதை உள்வாங்குகின்ற உங்களைச் சார்ந்தது, சொல்லப்படுவது மெய்யா பொய்யா எனப் புரிந்து கொள்வது. மெய்யைப் பொய்யென்றோ, உண்மையை இன்மையென்றோ, அல்லது நேர்மாறாகவோ புரிந்து கொண்டால், ஏமாற்றப்படுவது நீங்களே.

எங்கெல்லாம் பேச்சு மட்டுப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்பில்லை. நம் வீட்டில் பேசுவதைக் காட்டிலும் நம் குழந்தைகள் அமெரிக்க வகுப்பறையில் தங்குதடையின்றிப் பேசுகின்றன. ஏன்? bios, stereotypes, prenotion, prejudice என்பன ஒப்பீட்டளவில் அதிகம். இவற்றை உடைத்தெறிவதுதான் தமிழ்ப் பண்பாட்டு அமைப்புகளின் வேலையாக இருக்க வேண்டுமேவொழிய, பூடகங்களும் மடைபோடுதலுமாக இருத்தலல்ல!


11/01/2022

வாசிப்பு

அண்மையில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை ஒட்டித்தான் வாசிப்பற்றநிலை என்னவென்பதைப் பார்க்கப் போகின்றோம். எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிடுவார், “உலகம் தோன்றியதிலிருந்து என்னென்ன வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றதோ அத்தனையையும் விட, கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி அதிகமானது”. அதே நேரத்திலதான் ஒரு காணொலித் துண்டு பரவல் ஆனதையும் பார்த்தோம். செய்தி காதில் விழுந்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாதபடிக்குப் போய் வந்து கொண்டிருப்பர் மக்கள். முன்பொருகாலம், மாலை நேரம் எஞ்சோட்டுப் பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, காட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி, “செமதாங்கிச் சாயமரத்துக்குக் கீழ எதொ பொணம் இருக்குது”. அவ்வளவுதான், காட்டுத்தீ போலப் பரவியது செய்தி. வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி என எல்லா ஊர்மக்களுக்கும் சாரைசாரையாகப் படையெடுத்தனர் பார்த்து வர. ஏனிந்த மாற்றம்? வாசிப்பற்றநிலைதான் காரணம்.

மேல்நிலை வாசிப்பு (skimming): மேலோட்டமாக ஆங்காங்கே இருக்கும் ஓரிரு வரிகளைப் பார்ப்பது. இது நெகடிவ் வைப், புறந்தள்ளுவோமென முடிவெடுப்பது அல்லது வெகுண்டெழுவது. நிறைய தகவல், செய்திகளை, இடையறாது உள்வாங்கிக் கொண்டிருப்பதால் மனம் நுண்மையை இழந்து போவதால்(insensitive) ஏற்படுவது. வாசிப்பு என்பது எழுத்துகளை வாசிப்பது மட்டுமேயல்ல, எந்த உருவிலிருக்கும் தகவலையும் உள்வாங்குவது என்பதேயாகும்.

முனைப்பு வாசிப்பு (active reading): மேலோட்டமாக வாசிப்பதற்கும் அடுத்தநிலையாக கவனத்தைச் செலுத்தி ஊன்றி வாசிப்பது. ஊன்றி வாசித்தாலும் கூட, வரிகளுக்கிடையே இருப்பதைக் கவனிக்கும் திறன் இல்லாமை, சொல்லாமற்சொல்லும் தகவலை உள்வாங்காமை போன்றவற்றால் முழுப்பயனையும் பெறாத வாசிப்பு.

ஆழ்நிலை வாசிப்பு ( critical reading): சொற்களையும் சொற்றொடர்களையும் நேரடியாக அப்படியப்படியே உள்வாங்கிப் புரிந்து கொள்வதற்கும் மாறாக, பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் புரிந்து கொள்தல். பகுப்பாய்வுத் திறன் திடமாக அமைய போதுமான பயிற்சிகள் இருந்தாக வேண்டும்.

பென்சில்வேனியா படிப்பு வட்டம் எனும் குழுவில் நண்பர் இணைத்து விட்டிருந்தார். பால்வாடிக் கதைகளைச் சொல்லி, அதை அமெரிக்கக் குழந்தைகள் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றன என்பதை நாள்தோறும் சொல்லி வந்தோம். நான்கு வரிக்கதைக்கு நான்கு பக்க வினாக்கள் இருக்கும். அவரவர் வாசிப்புத் திறனுக்கொப்ப புரிதல்களில் மாறுபாடுகள் இருப்பதை உணரும் விதமாக.

”Tired of seeing lot of writings with hurting, strong, painful and disrespectful words which is being going on many years from few life members. Unfortunately, nothing seems to stop them.” 

மேல்நிலை வாசிப்பில் ஏற்படும் புரிதல் என்ன? இது எதொ அக்கப்போர் போல இருக்கின்றது. நெகடிவ். நமக்குத் தேவையற்றது.

முனைப்பு வாசிப்பில் தோன்றும் புரிதல்? யாரோ சில உறுப்பினர்கள், காட்டமாக எழுதுவதே பொழப்பாக இருக்கின்றனர். எங்கும் சிலர் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பொறாமை பிடித்தவர்கள். இப்படி சொற்களினின்று நேரடியாகப் பொருள் கொள்தல். அல்லது பக்கச்சார்பு(bios), முன்முடிவு (prejudice) முதலானவை கொண்டு ஒரு முடிவுக்கு ஆட்படுதல்.

ஆழ்நிலைப் பகுப்பு வாசிப்பில் என்னவாக இருக்கும்? யாரவர்கள்? எழுதுபவர் யார்? எந்த பேசுபொருளை வைத்து இப்படிச் சொல்லப்படுகின்றது? குற்றம் சாட்டுபவர், சாட்டப்படுபவர்களென இருதரப்பின் உள்நோக்கங்கள் என்னவோ? பல ஆண்டுகளாக எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பதால், அமைப்பில் ஏதோ பின்னடைவுகள் இருக்கலாம் போலுள்ளது. ஏக்டிவிசம் என்பதே இடையறாது போராடிக் கொண்டிருப்பதுதானே? இவர்கள் இத்தகையவர்களா? இப்படி, தத்தம் அனுபவம், படிப்பு, சிந்தனைத் திறன் முதலானவற்றால் அவரவர் தன்மைக்கொப்ப பல வினாக்கள் அவர்களுக்குள் எழும். அவற்றுக்கான விடைகளைக் கொண்டு ஒரு புரிதலுக்கு ஆட்படுவது.

தமிழ் அமைப்புகளிலே இலக்கியக் கூட்டங்கள் என்கின்றனர். புகழாளர்களை அழைத்து வந்து பேச வைக்கின்றனர்.  பேசுகின்றார்கள். பல்வேறு தகவல்கள் உள்வாங்கப் பெறலாம். அல்லது நிகழ்த்துகலை போன்று அந்த நேரத்தைக் களிப்பாக்கிக் கொள்ளலாம். நாடலுக்கும் தேடலுக்கும் இட்டுச் செல்லலாம். கூடவே பகுப்பாய்வு வாசிப்புப் பயிற்சி ஏற்படுகின்றதா? சிந்தனைக்கு வாய்ப்பு அமைகின்றதா? உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.