1/31/2023

திருவாசகம்

 

நண்பர்கள் எங்கிருந்தும் அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அழைப்பார்கள். தோராயமாகச் சொல்லின், எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக எனச் சொல்லலாம்; அழைப்புக்குச் செவிமடுத்து விடுவேன். வேலைநிமித்தமாக இருந்தாலும் கூட, அழைப்புக்குச் செவிமடுத்து, வேலையாக இருக்கின்றேனெனச் சொல்வதுதான் வாடிக்கை.

பெரும்பாலான நேரங்களில் வேலைபார்த்துக் கொண்டேவும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பேன். இப்படியான பின்னணியில்தாம், அண்மையில் ஓர் அனுபவம்.

நண்பருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான். சில நாட்களில் அழைக்காமல் விட்டுவிட்டாலும், நான் அழைத்து விடுவேன். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்பவர் அவர். சென்றிருக்கின்ற இடத்திலே நலமாக இருக்கின்றாரா என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் மனம் சமநிலை கொள்ளும். அவ்வளவுதான்.

தனிப்பட்ட அழைப்பாக இருந்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கூட்டழைப்பு; பலரும் அழைப்பில் இருந்தனர். இப்படிச் சொல்லிவிட்டார், “பழமைபேசி நம்முடன் பேசித் தம் பொழுதைப் போக்கிக் கொள்கின்றார்”. அப்போதைக்கு நான் சிரித்துக் கொண்டேன். ஆனாலும் கூட, நம் மன அகந்தை நம்மை விட்டபாடில்லை. அவர் வெறுமனே நையாண்டிக்குக்கூடச் சொல்லி இருக்கலாம். அறிவுக்குத் தெரிகின்றது. ஆனால் அகந்தை அடங்க மாட்டேனென்கின்றது.

பெரும்பாலான நேரங்களில், கூட்டு அழைப்புகளில் நாம் பேசுவதில்லை. மற்றவர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருப்பதுதாம் நம் வாடிக்கை. அழைப்பு தொய்வடைகின்ற நேரத்திலே அல்லது சுவாரசியம் இழக்கின்ற நேரத்திலே எதையாவது கிள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் அடங்கிவிடுவது. நாம் நம் வேலையைப் பார்க்கவும் வசதியாக இருக்கும். இப்படியான சூழலிலே, மனம் அடங்க மாட்டேனென்கின்றது.

உண்மையில் சொல்லப் போனால் நமக்கு 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை. பிழைத்திருப்பதற்கான வேலையில், அதாவது வருமானம் கொடுக்கின்ற வேலையில், உடன் பணி செய்வோர் அயல்நாடுகளில் இருந்து பணி செய்வோரும் உண்டு. ஆகவே இன்ன நேரமென்று இல்லை. பணிநிமித்தம் தகவல் கேட்பார்கள். பேச விரும்புவார்கள். உடனுக்குடனே பேசிவிட்டால், வேலையில் தொய்வு ஏற்படாது.

நமக்கான சமையலை நாமே பார்த்துக் கொள்வதென்பது இன்பகரமாக ஆகிவிட்டது. விருப்பமானதை, விரும்பிய அளவில், விருப்பமான முறையில் உண்டு கொள்ளலாம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கவழக்கமது. அதனாலே, கடைகளுக்கும் நாமே சென்று நமக்கானதை வாங்கியாக வேண்டும். அதன்நிமித்தம், புதிது புதிதாக பன்னாட்டுத் தாவரப்பொருட்களை வாங்கி முயல்வதிலே ஒரு நாட்டம். எடுத்துக்காட்டாக, சிக்கரிப்பூ என்பது ஆண்டுமுழுமைக்கும் கிடைக்காது. அந்தப் பருவத்தில்மட்டும்தான் கிடைக்கும். இப்படி அந்தத்தந்தப் பருவத்தில் மட்டுமே கிடைப்பவற்றை வாங்கிச் சமைப்பதில் ஒரு சுவை. அம்மா அவர்கள் ஊரிலிருந்து கொடுத்தனுப்பும் நாட்டுக்காய்களில் வற்றல் முதலானவற்றைக் கொண்டு எதையாவது செய்வது, இப்படியாக அதற்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.

உடற்பயிற்சி என்கின்ற பேரிலே எதையாவது செய்வது. அருகிலே தம்பி ஒருவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து கொண்டு ஊர்நாயம் பேசிக் கொண்டு வீதிகளில் திரிவது. அல்லது நாமகவே ஓடித்திரிவது, சைக்கிள் ஓட்டுவது, பூங்காக்களில் திரிவது, இப்படியாகப் பொழுதுகள் ஒதுக்கியாக வேண்டும்.

அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிலே எப்போதும் ஏதாகிலும் ஓர் அக்கப்போர் இருந்து கொண்டிருக்கும். அதைப்பற்றிப் பேசியாக வேண்டுமே? இஃகிஃகி. சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமாக அதற்கும் சில பொழுதுகள் ஒதுக்கப்பட்டாக வேண்டும். உரையாடல் என்பது இடம் பெற்றால்தான், நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும். அல்லது திருத்த முடியும். குழந்தைகளிடமிருந்தே அமெரிக்க வாழ்வுமுறை, பண்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்தத் தமிழ் அமைப்புகள் அவற்றைக் கிஞ்சிற்றும் தத்தம் செயற்பாடுகளிலே இடம்பெறச் செய்வதில்லை. ஆகவே தொடர்ந்து சக நண்பர்களிடத்திலே பேசுவதன் மூலம் கற்றுக் கொள்ளவும் சுட்டிக்காண்பிக்கவும் முடிகின்றது.

அன்றாடம் குறைந்தது ஒருபக்கமாவது நம் எண்ணவோட்டங்களை எழுதிப் பார்க்க வேண்டியதாய் இருக்கின்றது. சிந்தையைக் கசக்கி எழுதத்தலைப்படும் போது, நம்முள்ளே இருக்கின்ற கசடுகள் புலனாகின்றது. அதற்காகவேனும் எழுத வேண்டி இருக்கின்றது. எழுதுகின்ற நேரத்திலே நீரில்லாக் கொடியைப் போலே மனம் அறியாமையின் பொருட்டுத் தத்தளிக்க நேரிடுகின்றது. நாடலுக்கும் தேடலுக்கும் அது வித்திடுகின்றது. நூல்கள், காணொலிகள், ஆவணங்கள் போன்றவற்றுக்காக நேரம் செலவிட்டாக வேண்டும்.

ஊரில் இருப்பவர்களுடன் பேச வேண்டும். பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் அன்றைய நாள் இனிதாய்க் கழியும். அல்லாவிடில் மூளையின் ஏதோ ஓர் ஓரத்தில் அந்த ஓர் நரம்பியலணு குத்திக் கொண்டே இருக்கும். மற்ற மற்ற வேலைகளின் போக்கினைப் பாழ்படுத்தும்.

முன்பெல்லாம் இப்படி இல்லை. வீடு கட்டிக் குடியேறிவிட்டால் இன்பம். காலாகாலத்துக்கும் வீடு நமக்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கும். அஞ்சாது அரவணைப்புடன் உறங்கிக் கிடக்கலாம். தற்காலத்தில் அப்படியன்று. வீட்டுக்கு நாம் தொண்டு செய்தாக வேண்டும். துப்புரவாக வைத்திருப்பதினின்று, வீட்டிலே பூட்டப்பட்டிருக்கின்ற கருவிகளைப் பழுது பார்ப்பது, மாற்றுவது, பேணுவது எனப் பல பணிகளும் இடையறாது இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைப் பங்கு போட்டுக் கொண்டாக வேண்டும். வீட்டுப்பணிகளென்றால் வீட்டுப்பணிகள் மட்டுமேயல்ல. மாதாமாதம் சில பல கட்டணங்கள் கட்டியாக வேண்டும். அவையெல்லாம் கிரமத்தில் இருக்கின்றனவாயெனப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வீட்டுக்குள்ளேயும் ஏராள பணிகள் உண்டு.

சில பல குழுக்கள். அமைப்புகள். அவற்றுக்கும் தீனி போட்டாக வேண்டும். ஒரு கை நமக்கு வேலை செய்து கொள்கின்றதென்றால், இன்னொரு கை சமூகத்துக்காக எதையாவது செய்துதானே ஆக வேண்டும்?  ஊரைத் திருத்தி விட முடியுமாயென்றால் முடியாதுதான். ஆனால் நம்மால் பயன் அடைபவர் ஏதோவொருநாள், ஏதோவொருவர் இருக்கத்தானே செய்வர்? அந்த ஒருவருக்காக நாம் தொடர்ந்து இயங்கித்தானே ஆக வேண்டியுள்ளது??

இத்தனைக்கும் மேற்பட்டு பொழுது போக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஏதோவொன்றின் காரணம், மனவலி, மனச்சோகை. இருக்கவே இருக்கின்றது மணிவாசகரின் திருவாசகம். 13 ஆண்டுகட்கு முன்பு நண்பர் ஆரூரன் அவர்கள் கொடுத்தது. பிரித்து உரக்கப் படிக்கலாம். பாடலாம். பழந்தமிழ்ப் பாடல்களுக்கு இசைப்பயிற்சி தேவையே இல்லை. உரக்கப் பாடுங்கள். கோர்வையாக வராமல் தடுமாற்றம் ஏற்படும். அதற்கொப்ப சொல்லை நீட்டியும் விரைவாக்கிக் குறுக்கியும் பலுக்க முற்படுவோம். பாடலாக அதுவாகவே உருவெடுத்து விடும். தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கலாம். இஃகிஃகி. மனம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அம்மணமாக நிலைகொண்டிருக்கும்.  தமிழ் கற்கலாம். நம் சிந்தனை என்பதையே ஈசனாக உருவகப்படுத்தி, பாடலுக்குக் கீழே கொடுத்திருக்கும் உரையை வாசிக்கும் போது புதுப்புது தத்துவார்த்த எண்ணங்கள் மேலெழும்.  எடுத்துக்காட்டாக,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர், உண்மை இன்மை என எல்லாமும் தாமேயெனவும் கருதிக் கொள்பவரைக் கண்டு மனம் கோணாமல் தற்காலிகக் கொண்டாட்டத்தில் இருப்பவரெனக் கருதுகின்ற சிந்தையை நான் வாழ்த்துவனே!!

இப்படியாக, தனியாக ஓர் அறையில் இருந்து படிக்கப் படிக்கப் போதாமை எங்கிருந்து வந்து விடப் போகின்றது?  கருவிகளின் உதவியோடு பலவற்றையும் செய்யத் தலைப்படும் போது போதாமை வரும். நினைத்துப் பாருங்கள். 100 ஆண்டுகட்கு முன்னம், உடற்பயிற்சி செய்தாக வேண்டுமென்கின்ற கட்டாயம் இருந்ததா? இல்லை. ஏதோவொரு வகையில் உழைப்புக்காட்பட்டதாக இருந்தது உடல். பாடுவதைக் கூட ஏனோதானோவெனப் பாடிக்கொள்ளலாம். அந்த ஒலியைக் கருவிக்குள் செலுத்தி எடுத்துவிட்டால் அது தரம்கூட்டப்பட்டதாக ஆகிவிடுகின்றது. பாடும்கலை செத்துப் போகின்றது. கலை செத்துப் போவதுமட்டுமன்று. அந்த இடத்தில் வேறு ஏதோவொரு பிரச்சினை வந்து உட்கார்ந்து கொள்கின்றது. புலன்செய்ப்(conventional methods) பண்புகள் நம்முள் குடிகொண்டிருக்கும் வரையிலும் போதாமைக்கு இடமில்லை.

1/29/2023

கஞ்சாப்பித்து

ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எது கொண்டு மதிப்பிடலாம்? அவருடைய மனநிலையைக் கொண்டு, அவரால் மட்டுமே மதிப்பிட முடியும். எப்படி?

ஒருவரைப் பார்த்து, ’அவருக்குக் கார்கூட இல்லை; அவர் இன்ன வேலைதான் செய்கின்றார்.  அப்படி, இப்படி...’ எனப் பலவாறாக எடைபோடுவது, எடைபோடுபவரின் கண்ணோட்டம்தானேவொழிய, அவரின் வாழ்க்கைத்தரமாக இருந்துவிடாது.

மருத்துவர் அவரைப் பரிசோதித்து, நல அளவீடுகள் எல்லாமும் வரையறைக்குள் இருக்கின்றன. இவரின் வாழ்க்கைத்தரம் நன்று எனச் சான்றிதழ் அளித்துவிட முடியுமா? முடியாது. அவருடைய மனத்துக்குள் என்னமாதிரியான சூழல்நிலவு என்பது மருத்துவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்புடையவரேயாகிலும், அக்குறிப்பிட்ட வேளையில் மற்றவர்கள், சமூகம் எப்படி அவரைக் கருதுகின்றதென்பதை வைத்து மகிழ்வோ, வருத்தமோ கொண்டு, அதற்கொப்ப தம்நிலைப்பாட்டைச் சொல்வாரேயெனில் அது தற்காலிகமானதாகவே இருக்க முடியும். அடுத்த சிலமணி நேரங்களில் அவரின் இயல்பான நிலை அவரைப் பீடித்துக் கொள்ளும்.

சரி, எப்படித்தான் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவது?

அவருக்கு மெய்நலம் நன்றாக இருத்தல் வேண்டும். மெய்நலம் நன்றாக இருந்தால்தான் உளநிலை சமநிலை கொள்ளும். வருத்தங்கள், கவலைகள் இல்லாத நிலை ஏற்படும்.

மெய்நலம் நன்றாக இருக்க, மெய்நலத்தைத் தொடர்ந்து அவர் பேணிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிப் பேணுவதற்கான தொடர் ஊக்கம் அவரிடத்திலே இருந்தாக வேண்டும். அத்தகு தொடர் ஊக்கத்திற்கு மனநலம் நன்றாக இருத்தல் வேண்டும். 

இஃகிஃகி, இது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா என்பதைப் போன்றது. ஆமாம். உளநலம் மெய்ப்பட மெய்நலம் வாய்க்க வேண்டும். மெய்நலம் வாய்க்க உளநலம் வாய்க்க வேண்டும். 

ஒருவர் தன்னிச்சையாக மனம் திறக்கும் போது, அவர் அவரைப் பற்றியே யோசித்து, மனநிறைவில் எப்படி இருப்பதாக உணர்கின்றாரோ அதுதான் அவரின் வாழ்க்கைத் தரமாக இருக்க முடியும்.

சரி, ஒருவர், தம் வாழ்க்கைத்தரம் ஐம்பது விழுக்காடு என்பதாக உணர்ந்து, அதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றார். எந்தப் புள்ளியிலிருந்து துவங்குவது?

இந்த என் எண்ணவோட்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பதில் இருந்து துவங்கலாம். எப்படி? மேற்கொண்டு படிக்கத் தெரியவரும். உடல்நலம், உளநலம், சைக்கிளிக் ரெஃப்ரன்ஸ் (ஒன்றிலிருந்து இன்னொன்று) எனப் பார்த்தோம். ஆனாலும் ஏதோவொரு புள்ளியிலிருந்து மேம்பாட்டைத் துவக்கித்தானே ஆக வேண்டும். ஆக, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, விளையாட்டு, ஏதோவொரு உடற்பயிற்சி, சேர்ந்திசை(பஜனை), கும்மி போன்ற கலைப்பயிற்சியிலிருந்து துவங்கலாம். எடுத்துக்காட்டாக நடைப்பயிற்சி/ஓட்டப்பயிற்சி என வைத்துக் கொள்வோம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதாலேயே மரணத்தை வென்று விடலாமா? முடியாது. அவர் ஃபிட்னஸ், ஆனாலும் செத்து விட்டாரேயென்கின்றனர் பலர். சாவுக்கான காரணங்கள், மரபணு, சூழல், விபத்து எனப் பலவாகவும் இருக்கலாம். அறிந்தது சிட்டிகையளவு; அறியாதது பெரும் கடலளவு. அவற்றுள் நாம் அறிய முற்படுவது, வாழ்ந்திருக்கும் காலத்தில் மனநிறைவாக, தரத்துடன் இருக்க என்ன செய்யலாமென்பதே!

இயல்பான உங்களின் ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்டு அதில் ஈடுபடும் போது, உடலில் ஆங்காங்கே மெல்லிய வலி தோன்றும். அதுகண்டதும் உடலின் சிலபல இயக்குநீர்கள்(ஹார்மோன்கள்) சுரக்கத் துவங்கும். அதாவது உடல்வலியை மனக்களிப்பால் ஈடுகட்டுவதற்காக. அத்தகைய இயக்குநீரில் முக்கியமானது எண்டோர்ஃபின். உடல் எனும் வேதிக்கூடத்தில் இயக்குநீர்கள் எல்லாமே ஒரு தகவற்சமிக்கைதாம். ஆற்றில் செந்நீர் வந்தவுடன் நாம் மேல்நாட்டில் எங்கோ மழை பெய்திருக்கின்றதெனப் புரிந்து கொள்கின்றோமல்லவா அது போலே. இந்த எண்டோர்ஃபின் வேதிப்பொருளை குருதியாற்றில் கண்டதும், கீழுறுப்புகள் வலியறு நிலை, களிப்புறுநிலை முதலானவற்றுக்கான செயலிகளுக்குத் தகவற்சமிக்கைகளை மேற்கொள்ளும். அவற்றுள்,  எண்டோக்கானபினாய்ட் endocannabinoid எனும் தகவற்சமிக்கையானது மூளையில் களிப்பூக்கப் பித்துநிலையைக் கட்டமைக்கும். இரண்டு மைல்கள் ஓடிவந்து, இளைப்பாரும் நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மிக இலேசாக உணர்வீர்கள்; சிரிப்பு வரும். எதிர்காலம் ஒளிமிகுந்ததாகக் கருதுவீர்கள். இப்படிப் பல உணர்வுகள்.  நடுவே கஞ்சாப்பூ வைத்திருக்க, தேன்கலந்த திணையுருண்டையைத் தின்றால் எழும் களிப்புநிலை ஏற்படும். அந்த மெல்லிய நுண்ணர்வே அடுத்தடுத்த செயற்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கநிலையையும் மேற்கொள்ளும்.

கடந்தகாலம், எதிர்காலம் சார்ந்த கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட்டுத் தற்காலத்தில் வாழத் தலைப்படுவீர்கள். அடுத்தநாளும் ஓட்டப்பயிற்சிக்கு அது நம்மை இழுத்துச் செல்லும். சிலருக்கு அது போதையாக மாறிவிடுவதும் உண்டு. மனத்தளவில் பெரும்பாலும் துள்ளலாக இருப்பீர்கள். இப்படியாக, வாழ்க்கைத்தரத்திலும் மேம்பாடு நிலைகொள்ளும்.

1/21/2023

விற்பனைநுட்ப நிறுவனங்களும் சீனாவும்

சீனா தன் பொருளாதாரத்தை 1978ஆம் ஆண்டு, பன்னாட்டுப் பொருளாதாரமயமாக்கலுக்கு உட்படுத்துவதாக அறிவித்துக் கொண்டு அதற்கேற்ப தம் நாட்டு பொருளாதாரக் கொள்கைகளைச் சீரமைத்துக் கொண்டது. இருப்பினும், 1995ஆம் ஆண்டு வரையிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை அதனால் எட்டமுடியவில்லை. 1978ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்களில் துவங்கி, 1995 ஆம் ஆண்டு வெறும் 600 பில்லியன் டாலர்கள் என்பதாக இருந்ததைக் கண்டு ஏமாற்றம் கொண்டது சீனா. அதன்பொருட்டு, கடந்த 15+ ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கங்களை மீளாவு செய்து கொள்ளத்தலைப்பட்டது.

கொள்கை அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, சட்டதிட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டது. அதன்படி டெக் கம்பெனிகளைக் கூடுமானவறை முடக்கிக் கொள்வதென்பதாகி விட்டது. இங்கே டெக் கம்பெனிகள் என்றால், எல்லாத் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது மென்பொருள்/கணினி சார்ந்த நிறுவனங்கள் எனப் பொருள் கொள்ளலாகாது. குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். அவை எத்தகைய நிறுவனங்கள்?

பொருட்களின் விற்பனையை நாட்டுமக்களிடம் சூதனமாகத் திணிக்கும் நிறுவனங்களெல்லாமும் இத்தகு நிறுவனங்களெனக் கருதியது சீனா. எடுத்துக்காட்டாக, அலிபாபா, Google, Facebook, Tencent, DiDi, Meituan போன்றவை. என்ன காரணம்?

உற்பத்தித்திறன், தரம், உலகளாவிய விற்பனை போன்றவற்றுக்கான கவனம் என்பது, உள்நாட்டு விற்பனை, பணம், இலாபம் என்பதான அடிப்படையில் சொந்தநாட்டு மக்களையே சுரண்டுவதும் ஒருசாரார் மட்டுமே இலாபம் அடைவதுமாகக் கொண்டு, மற்ற மற்ற துறைகள் எல்லாம் முடங்கிப் போகும் என்பதுதான் காரணம். மென்பொருள், மறைபொருளாக விளங்குகின்ற அல்கோரிதங்கள், விளம்பர யுக்திகள், சோசியல் மீடியா போன்ற கன்சூமரிசத்தைப் பெருக்குகின்ற கருவிகள் போன்றவற்றுக்கு கடுமையான நெறிமுறைகள்(ரெகுலேசன்) வகுக்கப்பட்டு செயற்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவை பொருந்தக் கூடியதாக இருந்தன. ஆகவே, தொழில்முனைவோர் எல்லாம் தளபாட உற்பத்திக்குத் தள்ளப்பட்டார்கள். கணினிக்குத் தேவையான மின்னணுக் கருவிகள், மருத்துவக்கூட நவீனக் கருவிகள், மற்ற மற்ற மின்னணு சாதனங்கள் இப்படியாக.

விளைவு, நாட்டின் உற்பத்தித்திறன் வேகமெடுத்தது. 1995ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்கள் என இருந்த உற்பத்தித்திறன் 2022ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 8250 பில்லியன் டாலர்கள் என்பதாக இருக்கின்றது. இப்படியான டெக்நிறுவனங்களுக்கு எதிரான கிடுக்கிப் பிடிகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கடுமையாக்கிக் கொண்டது சீனா. அதனால் பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டன. அவை தற்காலிகமானவை; தொலைநோக்குப் பார்வையில் கடந்த இருபதாண்டு கால வளர்ச்சியைப் போலவே இதுவும் மேம்பாட்டையே தருமென்பது அரசின் கொள்கையாக இருக்கின்றது. விளம்பர யுக்திகள் எனும் போது, பொய், புரட்டு, மிகைபடக் கூறல், குன்றக்கூறல், மறைத்துக்கூறல், புனவுபடக் கூறல், செயற்கையாக அழகூட்டிக் கூறல் என எல்லாமும் உள்ளடக்கம்தானே? அவற்றுக்குக் கடிவாளம் இட்டுக் கொள்கின்றது. மேலும், தம் குடிமக்களின் தகவலைத் தனியார் நிறுவனங்கள் கொண்டிருப்பது தம் மக்களுக்கு எதிரானதென்றும் கருதுகின்றது சீனா.

சோசியல் மீடியாவில் வெகுமுனைப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலமும் உண்டு. 2017ஆம் ஆண்டு வாக்கில் குறைத்துக் கொண்டேன். காரணம், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக எவரோ வழிநடத்திச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுதான் காரணம். அத்தகு கட்டமைப்புகள் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றன. அதனைப் பயன்படுத்தி வணிகம் வளர்த்துக் கொள்ள தனிமனித விற்பன்னர்கள். இவர்களின் இலக்கு சாமான்யர்களான நுகர்வோர். எது சரி, தவறு என்பதையெல்லாம் சிந்தித்தறியாதபடிக்கு உள்வாங்குதிறன் கூட்டப்பட்டுவிடுகின்றது. ஆள்பிடிக்கும் களமாக உருவெடுத்திருக்கின்றன இவை. விளைவு, விழுமியம், அறம் போன்றவற்றில் தொய்வு.

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட பங்குகளைப் பெருமைப்படுத்திப் பேசி சாமான்யர்கள் பெருத்த பொருள் இழப்புக்கு ஆட்பட்டதாகச் சொல்லி, நடவடிக்கை மேற்கொண்டதாகப் பல செய்திகள். SEC Charges Eight Social Media Influencers in $100 Million Stock Manipulation Scheme Promoted on Discord and Twitter. Cary man pitched real estate deals to defraud people in the Indian community, prosecutors say. இப்படியெல்லாம் செய்திகள் காணக்கிடைக்கின்றன. இந்த நேரத்தில்தாம் நம் கடந்தகால அனுபவங்களைத் திரும்பப் பார்க்கின்றோம்.

சகமனிதர்கள், ஒத்த விருப்பங்கள், ஒத்த கலை இலக்கியம் போன்றவற்றுக்காக மக்கள் தாமாக வந்து அமைப்புகளிலே குழுமினார்கள். தற்போதெல்லாம் இலவச உணவு, விருதுகள், பரிசுகள், அது, இது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகின்றது. எதற்காக? விருந்தோம்பல் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் விளம்பரப்படுத்துவது எதற்காக?  தனிமனிதர்களுக்கும் விளம்பரங்கள் இடம் பெறுகின்றன. விளம்பரம் என்று வந்து விட்டாலே, அங்கு பொய்யும் புரட்டும் நூதனமான திணிப்பும் இடம் பெறத்தானே செய்யும்? சீனாவின் கொள்கையில் இருக்கும் தத்துவார்த்த உண்மை ஏதோவொன்றை நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றதுதானே?

References:

How China Destroying Its Tech Companies is Actually a Smart Move https://youtu.be/-lW1M8lLZbo

Cary man pitched real estate deals to defraud people https://www.bizjournals.com/triangle/news/2023/01/17/ponzi-scheme-cary-town-of-chapel-hill-employee.html

SEC Charges Eight Social Media Influencers https://www.sec.gov/news/press-release/2022-221


1/19/2023

இளம்பிராயம்

அடிக்கடி எதிர்கொள்ளும் வினா இது. எப்படி சிற்சிறு நுண்ணியமான பற்றியங்களையெல்லாம் நினைவில் வைத்திருந்து சொல்ல முடிகின்றது? நேரிடையாக இதுதான் விடையென ஒன்றைச் சொல்லிவிட முடியாது. பரந்த பார்வையில்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. கூடவே அறிவியற்பூர்வமான அணுகுமுறையும்.

In people, for example, researchers have found that having a greater density of dopamine receptors in the hippocampus results in better episodic memory. The Genetics of Why Some People Remember Events Better than Others as They Age: https://www.cogneurosociety.org/memorygenetics_papenberg/

நினைவேக்க அணுக்களின் அடர்த்தி காரணமென்கின்றது அறிவியற்கட்டுரை. சரி, அத்தகைய நினைவேக்க அணுக்களை எப்படிப் பெருக்கிக் கொள்வது?

சமூகமும் பெற்றோர்களும்தான் உயிர்ப்புள்ள சூழலைக் குழந்தைகளுக்கு அமைத்துத்தர வேண்டும். எடுத்துக்காட்டாக, நாங்கலெல்லாம் ஊராரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அம்மா, அப்பா வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தவர்கள் அல்லர். பாட்டி, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, பக்கத்து வீட்டு அக்கா, ஹவுஸ் ஓனர், வேலைக்காக வருபவர்கள் இப்படிப் பல தரப்பின் மேற்பார்வையில். அப்படியான பலரும் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வர். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே பண்பாடு என்பதில்லை. குழந்தைகளுக்கு பன்மைத்துவம் அமைகின்றது. ஒப்பீட்டளவில் உள்வாங்குவதன் அளவு அதிகம்.

பாட்டி ஊரில் ஒரு விநாயகர் கோயில். அதையொட்டியே ஒரு பிறவடை. அந்தப் பிறவடைக்கு அப்பாலே ஒரு சேந்து கிணறு(பொதுக்கிணறு). மாலை வேளையில் எஞ்சோட்டுப் பையன்களெல்லாம் கூடிக் குலாவிக் கொண்டிருப்பர். கோயிலுக்குள்ளேயே ஒரு வேம்புமரம். அந்த மரத்துக்கடியில் ஒரு மடப்பள்ளி. மடப்பள்ளிக்கு ஒரு மரக்கதவு. அதைத் திறந்தவுடனே அந்த இடத்துக்கேவுரிய மணம்; கற்பூரமும் பச்சரிசியும் கலந்ததொரு மணம். கதவடிக்கு வந்ததுமே வேம்புமரத்தின் வாடை. மரநிழலைக் கடந்தவுடன் சுண்ணாம்பு வாடை. ஒரு அடி கோவிலுக்குள் வைத்தவுடன், பிசுபிசுத்துப் போன அந்த எண்ணெய் வாசம். அய்யோ அவன் வந்துருவானேயென ஓடுகையில், பிறவடையெங்கும் முளைத்துக் கிடக்கின்ற தும்பைச்செடியின்(பட்டாம்பூச்சிச் செடி) வாசம். கிணற்றடி வந்து விடும். ஈரத்தில் நனைந்து கிடக்கும் அந்த சேந்து கயிற்றின் வாசம். கைப்பிடிச் சுவருக்கு மேலே எத்தனித்துக் குனிகையில், கைப்பிடிச் சுவரில் ஆங்காங்கே இருக்கும் சிட்டுக்குருவிகளின் பீ மணம். ஆழப்பார்க்கையில் நீரின்வாசம். இவையெல்லாமுமே அந்தச் சிறுவனின் மூளையில் பதிகின்றது. இப்படியாக, ஒரு பிள்ளை வெவ்வேறான புலனனுபவங்களை பெற்றுக் கொண்டே இருக்கும் போது, அந்த மூளைபூமி வளம் பெற்றதாய் ஆகிவிடுகின்றது. களிப்பூட்டு அணுக்களின் அடர்த்தியும் செறிவடைகின்றது.

மாறாக இப்படி எண்ணிப் பாருங்கள். ஆறு மணிக்கு எழுந்த குழந்தை துரித கதியில் புறப்பட்டு, வண்டியேறி பள்ளிக்குப் போய், மீண்டும் வீட்டுக்கு வந்து, வீட்டுப்பாடங்கள் செய்து, மனப்பாடம், மனப்பாடம், மனப்பாடம் செய்து, டிவியிலோ செல்போனிலோ கொஞ்ச நேரம் மூளையைக் கசக்கி விட்டுத் தூங்கி எழுந்து, மீண்டும் துரிதகதியில் புறப்பட்டு. விடுமுறை வருகின்றது; பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஆண்ட்டிக்கும் ஒரு ஹாய் சொல்லியான பின்னர், சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, சிறப்புப்பாடங்களை உள்வாங்கி, பணம் பெண்ணுவது எப்படி?, தலைவன் ஆவது எப்படி? பாசறைகளுக்குச் சென்று, பெரியவனாகி, இஃகிஃகி.

Let's give him/her a life!

1/18/2023

விடைநாள்

தத்துவஞானி அரிஸ்டாட்டில் சொன்னதாகப் படிக்கின்றோம். அதையே திரும்பத் திரும்ப பலரும் பலவிதமாய்ச் சொல்லிக் கொண்டேதானிருக்கின்றனர்; இப்போது நானும் அந்தவரிசையில் ஒருவன். Man is a social animal. He can't survive in isolation. மாந்தன் ஒரு சமூகவிலங்கு. அதாவது கூட்டம் கூட்டமாக இருந்து வாழத்தலைப்பட்டவன். அதன்பின்னாலே பரிணாமவியல், சூழலியற்காரணங்களும் உண்டு. முதலாவது இன்னபிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு. அடுத்தது உட்கிடைப் போர். சகமாந்தனின் ஆதிக்கவெறிக்கு ஆளாகிவிடாமல் இருக்க வேண்டுமேயானால் ஏதோவொரு கூட்டத்தில் இருந்து கொண்டால் வசதி. 

நடப்புக்காலத்தில், பொருள்முதல்வாத உலகின் வணிகத்துக்காக புத்தாக்கப் பொருட்கள் தேவைக்கும் மிகுதியாக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பாவிக்கவே அவனுக்கு நேரமில்லை. அதையுங்கடந்து, சக மனிதர்களுடன் கூட்டுறவாகக் கொண்டாட்டத்தைக் கடைபிடிக்க அவனுக்குத் தேவையில்லாமற்போய் விட்டது. ஒருகட்டத்தில், சலிப்பும் அலுப்பும் தோன்றுகின்றது. உடனிருந்த கொண்டாட ஆட்களில்லை. பொங்கல்விழா என்பது அப்படியானது அன்று.

சில பல வாரங்களுக்கு முன்பே மட்பாண்டங்கள் வனையப்படுகின்றன. கூடைகள் பின்னப்படுகின்றன. கயிறுகள் திரிக்கப்படுகின்றன. பொங்கலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் என எல்லாமும் பார்த்துப் பார்த்து கொள்வனவு செய்யப்படுகின்றன. உற்றார் உறவினரெல்லாம் ஊருக்குள்ளே ஒன்று சேர்கின்றனர். பட்டிகளெல்லாம் ஆர்ப்பரிக்கின்றன. படல்களெல்லாம் பிரித்து வேயப்படுகின்றன. கட்டுத்தாரைகள் புனரமைக்கப்படுகின்றன. சகமனிதர்கள் ஒருவருக்கொருவர் இல்லாததைக் கேட்பதும் இருப்பதைக் கொடுப்பதுமாய் இருக்கின்றனர்.

காப்புக்கட்டி, அவரவர் வீடு, அவரவர் குடும்பம், அவரவர் பட்டி, அவரவர் பொங்கல் என முதல் மூன்று நாட்களும் ஆனபின்னர், கூட்டுவிழாக்கள் கோலோச்சத் துவங்குகின்றன. பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து வழிபட்ட கட்டாந்தரையிலே கூட்டமாகக் கூடி அமர்ந்திருக்க துவரைமார் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். அந்த வெளிச்சத்தின் கதகதப்பிலே திட்டமிடல்களும் ஆலோசனைகளும் பரபரக்கும்.

கரட்டுமடத்துக் கரடுகளுக்குப் பின்னாலே கோச்சைகள் நடக்கும். வெட்டாப்புச்சேவல், கட்டுச்சேவலென இரண்டு இரகம். வெட்டாப்புச்சேவலென்றால் எப்போது தண்ணிகாட்ட வேண்டும், முகைச்சலுக்கு என்ன செய்ய வேண்டும், யார் நடவுபோடுவது, நடவுபோடுகையில் எதிராளியிடம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும், கட்டுச்சேவலென்றால் கத்தியைக் கட்டும்பகுமானமென்ன, கத்தியிலே மொளகாய் பூசியுடலாமா? இப்படியெல்லாம் பேச்சுகளில் அனலடிக்கும்.

தகர் சண்டையென்றால் சும்மாயில்லை. தகர் என்றால் ஆடு. ஆட்டுக்குக் கொம்புமுளைத்ததுமே பட்டும்படாமல் மேலாக உடைத்து விட வேண்டும். உடைத்துவிட்டதும் அது ஊதிப் பெருக்கும். மீண்டும் மேலாக உடைத்து விட வேண்டும். அது மீண்டும் பருத்துப் பெருக்கும். பொங்கல் வருவதற்குள்ளே இப்படியாக நான்கைந்து முறையாவது செய்து விட்டால்தான் அது கெட்டிப்படும். ஆடு பெருத்தும் போய்விடக் கூடாது; இளைத்தும் போய்விடக் கூடாது. மந்திராலோசனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

ரேக்ளாரேஸ் என்றால் வெறுமனே காளைகளைக் கட்டிப் பரிபாலனம் செய்வது மட்டுமேயன்று. வண்டியையும் பராமரிக்க வேண்டும். ஓட்டுகின்ற மனுசனும் வாகாய் உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும். வாலை எப்போது பிடிக்க வேண்டும், கயிற்றை எப்போது விட வேண்டும், சுண்ட வேண்டுமென்பதில் இருக்கின்றது ஓட்டுதாரியின் நுட்பம்.  இதெல்லாமுமே கூட்டுப்பணிதாம், கூட்டுறவுதாம். தனியாட்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இப்படித்தான் சமூகத்திலே பிடிப்பும் கூட்டுறவும் நட்பும், தகைசால் மாண்பும் நிலைபெற்றது.

பாரி வேட்டை (முயல், காடை, கவுதாரி, முள்ளெலி, வெள்ளெலி) நடக்கும். எந்த மண்ணிலே, எந்த வங்கில் முயல் இருக்குமென்பது வேட்டையாளிக்குத்தான் தெரியும். அவனோடு இருந்துதான் மற்றவர் நுட்பம் பழகியாக வேண்டும். எந்தப் புதரில் எது இருக்குமென்பதும் அப்படியே. இவையெல்லாமுமே வழிவழியாய் அமையப்பெற்ற அறிவுக்கொடை, அனுபவக்கொடை. கூட்டியக்கமாய் செயற்பட்டால்தான் சாத்தியம்.

கூட்டியக்கத்துக்கு அவ்வப்போது புத்துணர்வும் ஊக்கமும் ஊட்டியாக வேண்டும். ஆங்காங்கே அதற்கேயான தந்தனத்தான்கள் உண்டு. அவர்களின் வாய் வருசம் முன்னூத்தி அறுவத்தி ஐந்து நாட்களும் தந்தனத்தன, தந்தனத்தனவென்று முணுமுணுத்துக் கொண்டே ஏதோவொரு பாடலைப் பாடிக்கொண்டேதான் இருப்பர். அவர்களுக்கு வேறுவேலை வெட்டி இருக்காது. அதனாலே அவர்கள் எள்ளிநகையாடப்பட்டனர். ஆனாலும் தைமாதம் வந்துவிட்டாலோ அவர்களின் இராஜ்ஜியத்தில் உய்யலாலா. அவர்களுக்கு வெகுகிராக்கியாய் இருக்கும். அவனைப் பார்க்கப் பார்க்க மற்றவர்காதுகளில் புகை. இப்படியாகப் பாடி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வர்:


எல்லாரும் கட்டும் வேட்டி
ஏழைக்கேத்த சாய வேட்டி! ஆனா,
தந்தனத்தான் கட்டும் வேட்டி
சரியான சரிகை வேட்டி!!

எல்லாரும் போடும் சட்டை
ஏழைக்கேத்த நாட்டுச்சட்டை! ஆனா,
தந்தனத்தான் போடும் சட்டை
சரியான பட்டுச் சட்டை!!

எல்லோரும் கட்டும் பொண்ணு
ஏழைக்கேத்த கருத்த பொண்ணு! ஆனா
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
சரியான செவத்த பொண்ணு!!

தந்தனத்தானுக்கு எல்லாமும் எளிதில் கிட்டும். இப்படியும் ஒரு பாட்டு உண்டு.

தந்தனத்தான் தோப்புல
தயிர் விக்கிற பொம்பள
தயிர்போனா மயிர்போச்சு
தங்கமடி நீயுங்கிட்ட வாடி!

இப்படியெல்லாம் தை நான்காவது, ஐந்தாவது நாட்கள் கூட்டுறவிலும் பல்விதமான செயற்பாட்டுப் பணிகளிலும் கரைபுரண்டு கிடக்கும் சமூகம். ஆவுடையப்பனுக்கு விளக்கேற்ற மாவிளக்குகள். அந்த மாவிளக்குகளுக்காகச் செய்யப்படுவதுதான் பச்சமாவும் தினைமாவும். அதையே விளக்குமாவு என்றுஞ்சொல்வர். நெல்லரிசி அல்லது தினையரிசியை நன்றாக இடித்து வெல்லஞ்சேர்த்து, தேன்சேர்த்துச் செய்யப்படும் மாவு. கூடவே அரிசி முறுக்கு, இராகி வடை. இதெல்லாம் தின்று ஆனதும், கரிநாள். கிடாவெட்டுகளும் வேட்டையாடிக் கொண்டு வந்ததுமாய் உண்டாட்டுகளில் ஊரும் ஊர்சார்ந்தகாடும் பரபரத்துக் கிடக்கும்.

எதற்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? உற்றார் உறவினரெல்லாம் மிஞ்சியதைக் கட்டத் துவங்குவர். மனம் கனத்துப் போகும். விடைநாள்! அதாவது விடை பெற்றுக் கொள்ளும் நாள்!!

காரிமயிலக்காளை பொன்னுப்பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப்பூங்குயிலே
பாதை கிடுங்ககிடுங்க பொன்னுப்பூங்குயிலே
போயிவாரேன் புங்கமுத்தூரு பொன்னுப்பூங்குயிலே

பண்ணையம் பார்க்க விடைபெற்றுப் புறப்படுகின்றான் கந்தசாமி! நாமும் பொங்கற்திருவிழாவினின்று விடைபெற்றுக் கொள்கின்றோம்!! 💓🌷🌷🌹


1/17/2023

பூ நோம்பி

பொங்கலோ பொங்கல்! தை பிறந்த முதல் நாள் பெரும்பொங்கல். அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல். தை பிறந்தால் இப்படிக் கிராமங்களிலே ஒரே பொங்கல் மயமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்!  மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள், ஆண்களெல்லோரும் மாலை கோவிலுக்குப் போய்விடுவார்கள்.  ஆண்களெல்லாம் மாலை கோவில் சென்ற பிறகு ஊரிலே சிறுமிகளும் பருவமடைந்த மங்கையரும் பூப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள். 

ஊனான் கொடி என்று ஒருவகையான கொடி மைதானத்திலே நீண்டு வளைந்து வளைந்து கரும்பச்சைப் பூப் பொங்கல் புதராகப் படர்ந்திருக்கும்; வெண்சிவப்பான பூக்கள் கொத்துக் கொத்தாக அதிலே பூத்துக் குலுங்கும். அவற்றை மாட்டுப் பொங்கலன்றே பறித்து வந்து சிறுமிகள் தங்கள் பூக்கூடைகளில் நிரப்பிக் கொள்ளுவார்கள். பூப் பொங்கலன்று அவர்கள் அனைவரும் பூக்கூடைகளுடனும் பலகாரக் கூடைகளுடனும் விநாயகர் கோயிலில் கூடிக் கும்மியடிப் பார்கள். எத்தனை வகையான வண்ணப் பாட்டுகள் அவர்கள் வாயிலே!  பாட்டைத் தொடங்குவாள் ஒருத்தி. அவளைத் தொடர்ந்து அனைவரும் பின்னால் பாடிக்கொண்டு கும்மியடிப்பார்கள். எங்கள் ஊரான லெட்சுமாபுரத்தைப் பொறுத்த மட்டிலும் சம்பங்கியக்காதான் டீம்லீட். இதோ அந்த அக்காவின் ஒரு பாட்டைப் பாருங்கள். 

ஒரு மிளகு கணபதியே
ஒண்ணா லாயிரம் சரவிளக்கு
சரவிளக்கு நிறுத்தி வச்சு
சாமியென்று கையெடுத்து
பொழுது போர கங்கையிலே
பொண்டுக ளெல்லாம்
நீராடி நீராடி நீர் தெளிச்சு
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டுடுத்திப் பணிபூண்டு
பாலேரம்மன் தேரோட
தேருக்கிட்டே போகலாமா
தெய்வமுகங் காண்கலாமா?

பாட்டுக்களெல்லாம் பள்ளிக்கூடத்திலே படித்தவை அல்ல; நாடோடிப் பாடல்கள். எந்தக் காலத்திலிருந்தோ தெரியாது. அவை கிராமங்களிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தக் கும்மி, அன்று ஊரெல்லாம் நடைபெறும். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துவிட்டுச் சிறுமிகள் ஆற்றங் கரைக்கும் குளக்கரைக்கும் புறப்படுவார்கள்.  கூடையிலே பட்சணங்கள் இருக்கும். மார்கழி மாதத்திலே நாள்தோறும் வாசலிலே வைத்த பிள்ளையார்கள் இருக்கும். பலவகையான பூக்களும் நிறைந்திருக்கும்.  பிள்ளையார்களை ஆற்றிலோ குளத்திலோ போட்டுத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான் சிறுமிகள் புறப்படுகிறார்கள்.  அவர்கள் 'ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே....." என்று கூறுவார்கள். 

ஓலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு
(ஓலே)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலை குறைச்சலென்று
மயங்குறாளாம் ஓலையக்கா
(ஓலே)

சேலை அரைப்பணமாம்
சித்தாடை கால் பணமாம்
சேலைக்குறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

பூப் பொங்கல்
தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா
(ஓ...லே)


மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனாட்டு ஓலையக்கா
மேற்கே குடிபோறா
(ஓ..லே)


நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போறாள் ஓலையக்கா
(ஓலே)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
(ஓ...லே)

போறாளாம் ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையிலே
ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாட
தலைநிறைய முக்காடு
(ஓ...லே)

ஊர்நத்தம், மந்தைவெளி, காடுகரைகளுக்குச் சென்ற பிறகு மறுபடியும் ஆவாரம்பூ, துளசி, பொன்னரளி போன்ற பூப் பறிப்பார்கள். பெண்களுக்குப் பூவென்றால் ஒரே ஆசை. எத்தனை பூக் கிடைத்தாலும் ஆசை அடங்காது. இறைவனுக்குப் பூப் பறிப்பதிலே ஒரு தனி ஆர்வம் அவர்களுக்கு உண்டு. 

ஆத்துக்குள்ளே அந்திமல்லி
அற்புதமாய்ப் பூ மலரும்
அழகறிந்து பூ வெடுப்பாய்
ஆறுமுக வேலவர்க்கு 
சேத்துக்குள்ளே செண்பகப்பூ
திங்களொரு பூ மலரும்
திட்டங்கண்டு பூ வெடுப்பாய்
தென்பழநி வேலவர்க்கு

இப்படிப் பாடிக்கொண்டு பூப்பறிக்கும்போது ஆடவர்களும் அந்த இன்பப் பணியிலே உதவி செய்ய வருவார்கள். அவர்களும் விளையாட்டாகப் பாடுவதாகப் பல பாடல்கள் வரும். 

பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக் கொடுத்தால் ஆகாதா?
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூச்சொரிந்தால் ஆகாதா?
பறித்த பூவையும் பெட்டியிலிட்டுத்
தொடுத்த மாலையும் தோளிலிட்டும்
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக்கொடுத்தால் ஆகாதா?

இந்தக் கேள்விக்குப் பெண்கள் பதில் சொல்லுவார்கள்.

பூப் பறிப்பதும் இன்னிக்குத்தான்
பெட்டியிலிடுவதும் இன்னிக்குத்தான்
அதிசயமான இந்த ஊரிலே
அள்ளி இறைப்பதும் இன்னிக்குத்தான்
நெல்லுவிளையுது நீலகிரி
(பூவோ... பூவு)

நெய்க்கும்பம் சாயுது அத்திக்கோடு
பாக்கு விளையுதாம் பாலக்காடு
பஞ்சம் தெளியுதாம் இந்தஊரில்
(பூவோ... பூவு)

பிறகு பலவகையான பழங்களைப் பறிக்கத் தொடங்கு வார்கள். அங்கேயும் பாட்டுத்தான்.  கடைசியாக ஊரெல்லாம் சென்று அங்கங்கே பூக்கூடைகளை நடுவிலே வைத்துக் கும்மியடிப்பார்கள். அதிகாலை மணி நான்கு ஆகிவிடும். சின்னப்பாப்பக்கா குரல் கொடுப்பார். ‘வெடிஞ்சிருமாட்ட இருக்கு. ம்ம், வாங்க போலாம்’. எல்லாரும் மந்தைத்தோட்டத்து பொதுக்கிணற்றுக்குச் சென்று, மார்கழி முப்பதும், வாசலில் நாளொரு புள்ளையாராக, வைத்து அழகு பார்த்த புள்ளையார்களையெல்லாம் வழி அனுப்புவார்கள்.

போறாயோ போறாயோ
போறாயோ புள்ளாரே?
வாராயோ வாராயோ
வருவாயோ புள்ளாரே?
போறாயோ புள்ளாரே
போறாயோ புள்ளாரே?
வாராயோ புள்ளாரே
வருவாயோ புள்ளாரே?
சிந்தாமல் சிதராமல்
வளர்த்தினேன் புள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே
சிந்துகிறேன் புள்ளாரே(போ)

வாடாமல் வதங்காமல்
வளர்த்தினேன் புள்ளாரே
வாய்க்காலுத் தண்ணியிலே
விட்டேனே புள்ளாரே(போ)

பூவோடு போறாயோ
போயிட்டு வாராயோ
பூவோடு வாராயோ
பெண்களைப் பாராயோ (போ)

பிள்ளையாரை வழியனுப்பிவிட்டு அவரவர் வீதிகளுக்குள்ளே பலவாகப் பிரிந்து செல்லும் போது, களிப்பெல்லாம் தீர்ந்துவிட்டதேயெனும் அங்கலாய்ப்பு மனமெல்லாம் பாரமாகிப் போக, துளிர்க்கும் கண்ணீர்த்துளிகளுடன் ஆடிப்பாடிய களைப்பில் உறங்கிப் போவர். நவீனத் திரைப்படப் பாடல் ஒன்று இப்படியாக,

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
அட ஏங்க?….?
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அப்படி போடுங்க…

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

காரமடை கன்னிப்பொன்னுதாங்க
ஐயா காரமடை கன்னிப்பொன்னுதாங்க
எங்க கண்ணீர் பட்டா காரம் தூரம்தாங்க
அரேரேரேஏஏஏஏ

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
சேத்து வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா……ஆமா..
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா…

பூப்பறிக்க்கோனும் தினம் தினம் பூப்பற்க்கோனும்
பூத்திருக்கிற மனசுக்குள்ள நானிருக்கோனும்
அப்படியொரு எண்ணம் இல்ல போஙக
நாங்க ஆக்க வந்தா சொல்லியனுப்புறேன் வாங்க

ஹொய்… ஹொய்ய்ய்ய்ய்ய்

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. வாங்க
ஐயா வாங்க…..வாங்க
அண்ணே வாங்க.. வாஆஆங்க…
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அட போங்க…

https://youtu.be/KNpVVikRZb4

பூநோம்பி வாழ்த்துகள்!


1/16/2023

சலகெருது நாள்

 

பொங்கற்திருவிழா என்பது, காப்புக்கட்டு, கதிரவன் பொங்கல், ஊர்ப்பொங்கல், பெரிய நோன்பு, மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும்பொங்கல், பாரிவேட்டை, வேடிக்கைநாள், மூக்கரசு, சலகெருதுநாள், பூப்பொங்கல், விடைநாள் என்பதாக அமைந்த ஒருவாரகாலத் திருவிழா. 

காணும்பொங்கலன்று பொது இடங்களுக்குச் சென்று களித்திருந்து வருதல், உற்றார் உறவினரைக் கண்டுவருதல், சல்லிக்கட்டு காண்பதென்பதுதான் பொதுவாகப் பார்க்கப்படுகின்றவொன்று. ஆனால் அன்றைய நாளிலே, சேவற்கோச்சை, புறாப்பந்தயம், தகர் சமர் எனப்படுகின்ற கிடாமுட்டு, ரேக்ளாபந்தயம், முயல்வேட்டை, தேனெடுப்பு, வழுக்காம்பாறை, ஆற்றங்கரை, மலைமுகடு, காட்டுமுகடு போன்ற இடங்களிலே தின்பண்டங்களுடன் கூடிக் கதை பேசிக்களிக்கும் மூக்கரச்சும் இடம் பெறும். இதேநாளில்தான் சலகெருது ஆட்டங்களும் இடம் பெறும். இது பழைய சிஞ்சுவாடி ஜமீன், மைவாடி ஜமீனுக்குட்பட்ட வட்டாரத்துக்கேவுரிய தனிப்பட்ட வாடிக்கையாக இன்றளவும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காப்புக்கட்டிய தருணத்திலிருந்து பூப்பொங்கல் முடியும் தருணத்துக்குள் (நான்கு நாட்கள்) சினைமாடு ஈன்றுமேயானால் அது ஆலாமரத்தூர்/சோமவாரப்பட்டியில் இருக்கின்ற ‘ஆல் கொண்ட மால்’ திருக்கோயிலுக்குச் சொந்தமானது என்பது மரபு.

பிறந்த கன்று கிடாரிக்கன்றாக இருக்குமேயானால் அது குடிக்குமளவுக்கும் விட்டு விட்டுப் பிறகுதான் பசுமாட்டின் உரிமையாளர் அதனின்று பால்கறக்கலாம். பால்குடி மறந்தபின், அந்தக் கன்றினைக் கொண்டு போய் திருக்கோயில் வசம் ஒப்படைத்து விட வேண்டும். காளைக்கன்றாக இருக்குமிடத்து, அது சாமிக்கன்றென அழைக்கப்படுகின்றது. கீழ்த்தாடையில் பால்பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கும் போது, அதாவது அதன் மூன்றாவது வயதில், ஊர்ப்பெரியவருடன் அந்த சாமிக்கன்று ஆல்கொண்ட மால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. அங்கே அதற்கு சிறப்புவழிபாடு நிகழ்த்தி,  வழிபாடு செய்யப்பட்ட திருநீர் அதன்மீது தெளிக்கப்பட்டுச் சலகையடிக்கப்படுகின்றது.

சலகைச்சடங்கின் ஒருபகுதியாகக் காதுகளின் ஓரங்களை நறுக்கிப் பின்னர் ஆண்மைநீக்கத்திற்காக விதைப்பைகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இப்படியாகப்பட்ட சடங்கின் நிமித்தமே அவை சலகெருது என அழைக்கப்படுகின்றது.

கொம்பு, நெற்றி, முதுகின்மேற்பகுதி முதலான இடங்களில் மஞ்சள்பூசப்பட்டு, திருநீறு குங்குமம் வைக்கப்பட்டு, கழுத்தில் காணிக்கைப் பை கட்டவிடப்பட்டு, கிழக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தேங்காய் பழம் வைத்து வழிபடுவர் கோயிலில் கூடியுள்ள ஊர்மக்கள். இதன்பின்னர் அனைவராலும் தொழத்தக்க சலகெருதுவாக உருவெடுக்கின்றது அந்தக் காளைக்கன்று.

கயிறு கொண்டு கட்டப்படமாட்டாது. எவர் நிலத்திலும் மேய்ந்து கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், உருமிமேளத்துடன் கூடிய ஆட்டத்துக்கு அது பயிற்றுவிக்கப்படும். சலங்கைகள் பூட்டப்பட்டு, உருமிமேளத்துடன் கூடிய நளினமான ஆட்டத்துக்கும் வேகத்துக்கும் ஏற்றபடி வளைந்து வளைந்து தலையைச் சிலுப்பியபடியே அது ஆடும் கலைஞனுக்குச் சவால் விடுக்கும்வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தும். உருமிமேளத்தின் வீச்சா, கலைஞனின் ஆட்டமா, சலகெருதுவின் ஆட்டமாயென்பதில் பெரும்போட்டி நிகழும். சுற்றிலும் நின்று ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக் களிப்பெய்துவர்.

’ஜாகோ’ எனச் சொல்லியபடித் தன்கைகளில் இருக்கும் சிலம்புகளையும் அந்தக் கலைஞன் வெவ்வேறு விதமாகச் சமிக்கைகள் செய்து கொண்டே உயர்த்தியும் தணித்தும் ஆடிவர சலகெருதுக்கும் கலைஞனுக்கும் ஆட்டத்தில் பெரும்போட்டி நிகழும். இப்படியான ஆட்டங்களினூடே அந்தந்த ஊர்மக்கள், அந்தந்த ஊர் சலகெருதுகளுடனும் மேளதாளத்துடனும் ஆட்டபாட்டங்களுடனும் ஆல்கொண்ட மால் திருக்கோயில் நோக்கி அணியணியாகச் செல்வர். இந்த இரு ஜமீன்களுக்குரிய பகுதிகளிலே எங்கும் ஆரவாரம் கோலோச்சும். இதுதான் சலகெருதுநாள். சலகெருதுநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஊரான அந்தியூரில், இன்று, வீடு வீடாக சலகெருது வந்த காட்சிகள்.






1/14/2023

வாழ்த்து

ஆடுகளை மேய வைக்க வேண்டும். துணைக்கு ஒரு நாயை வைத்துக் கொண்டான் மனிதன். அந்த நாய் ஆடுகளைக் கட்டுப்படுத்தி வழிநடத்தியது. பார்த்த மனிதன், மனிதர்களையும் கட்டுப்படுத்த விழைந்தான். அதற்காக தகவற்பெருக்கிகளைப் பயன்படுத்தத் துவங்கினான்.

காரண விளைவு (cause and effect) எனும் கருதுகோளின்படி, இடம் பெறும் ஒவ்வொர் அசைவுக்கும் ஒரு விளைவு உண்டு.

போகிப்பண்டிகை வாழ்த்துகள் என்பதாக, கூந்தப்பனை எரிப்பு போன்ற ஒரு எரிப்புப் படத்தைப் பின்னணியாகக் கொண்ட வாழ்த்து மின்னட்டைகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. பார்த்த நான், இது நம்ம ஊர் வாடிக்கை இல்லையே என வருத்தமுற்று, இணையத்தில், வேம்பு, பீளை, ஆவரை கலந்த காப்புக்கட்டுப் படத்தைத் துழாவி, அப்படியான படத்தைக் கொண்டு ‘காப்புக்கட்டு நாள் வாழ்த்துகள்’ என்பதைப் பகிர்ந்தேன். கண்டவர்களுள் சிலரும் அதையே செய்தனர். நிற்க!

எரியூட்டும் படம் தமிழர் மரபென உலகம் யாவிலும் பயணிக்கின்றது. அப்படி எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு நேர்கின்றது. யாரோ சில இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இப்படியான செயலைச் செய்யக்கூடும். இதுதான் தமிழர் மரபென உண்மைக்குப் புறம்பானது வரலாற்றில் நிலைகொள்ளும். இப்படித்தான் தகவற்பெருக்கிகளை மனிதன், மற்ற மனிதர்களைக் கட்டுப்படுத்துவதில் கையாள்கின்றான்.

தம்பியானவர் ஒரு பன்மடிக்காணொலியை(viral video)ப் பகிர்ந்திருந்தார். நெஞ்சை நக்குவதான ஒரு பேச்சு. அதில் மடிந்த ஒருவர் மற்றவர்களுக்குப் பகிர, அந்த மற்றவர்கள் அவரவர் மற்றவர்களுக்குப் பகிர, பன்மடங்குப் பெருக்கமாக அது உலகில் உள்ள தமிழர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவருக்கு அது பணம்பண்ணும் தொழில். நமக்கு அப்படியல்லவே. உரத்துப் பேசுகின்றார். கேட்கும் நம்மை அது பதற்றத்துக்குள் அதிர்வூட்டி நெருக்கடிக்குள் இட்டுச் செல்லும். இதற்கும் அவர் அண்மையில்தாம் மூளைநரம்போ, நெஞ்சுநரம்போ பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டாரெனச் செய்திகள் வந்திருந்தன. உறவா நட்பா என்பதில், நட்பேயென கத்திக் கத்திப் பேசுகின்றார். உண்மையென்ன? மகனாக, மகளாக, பேரனாக, பெயர்த்தியாக, மருமகராக, அக்காள் பிள்ளையாக, தம்பி பிள்ளையாக ஏதோவொரு குடும்பத்தில்தான் பிறக்கின்றோம். பிழைத்துக் கிடக்கின்றோம். சாகின்றோம். எப்படி? பிறந்த போது என்னென்ன உறவுகள் இருந்தனவோ, அவற்றுடன் கூடுதலாக அப்பாவாக, அம்மாவாக,  பெரியம்மாவாக, பாட்டியாக, சித்தப்பாவாக, மாமனாக, மாப்பிள்ளையாக இப்படிப்பலவாக ஒரு குடும்பத்தில் ஒருவராகச் சாகின்றோம்.

“Family is not an important thing. It's everything.” – Michael J. Fox  பணம், புகழ், பாதுகாப்பு, அது எதுவானாலும் சரி, அதற்கும் முன்பாக அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டியது குடும்பமும் உறவுகளுமே. அதுதான் சமூகத்தின் அச்சாணி. இண்ட்டர்னெட், மீடியா, சினிமா, லொட்டு, லொசக்குகளினின்று விடுபட்டு உறவுகளோடு தங்கள் பொங்கற் திருநாள்ப் பொழுதுகள் திளைத்திருக்க வாழ்த்துகளும் வணக்கமும்!



1/10/2023

மனச்சோகை

ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஒரு குறிப்பிட்ட நண்பரின் வீட்டில் கூடுவது வழக்கம். எட்டு அல்லது ஒன்பது குடும்பங்கள் கூடுவது வாடிக்கை. இம்முறை ஓரிரு குடும்பத்தினரால் கலந்து கொள்ள இயலவில்லை. வழமையான ஆர்ப்பாட்டமின்றி எளிமையான சந்திப்பாக அமைந்தது. நண்பர் வினவினார், “பழமை, எப்படி இருக்கீங்க?”. “ரொம்ப நல்லா இருக்கன்”. “அதெப்படி? விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளாதார மந்தத்தின் அறிகுறி இப்படின்னு எல்லாரும் பதற்றத்துல இருக்கும் போது நீங்க மட்டும்?”. “எதையுமே தெரிஞ்சிக்கிறது இல்லைங்க. ஆட்களைச் சந்திப்பதும் மிகக் குறைவு, அதுதான் காரணம்”. மிகவும் பாராட்டினார். “நானும் முயன்று பார்க்கிறன். முடியலை” என்றார். 

தகவல். அதை இருவிதமாகப் பகுக்கலாம். நாமாகத் தேடிச் சென்று ஒன்றைக் கொண்டாலோ, தெரிவு செய்து அறிந்து கொண்டாலோ அது கல்வி. அடுத்ததாக, எதிர்கொள்வதையெல்லாமும் உள்வாங்கிக் கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவு. உங்கள் கண்களில் படுகின்றது. வணிகம், அரசியல், சமயம் இப்படி ஏதோவொன்றின் அடிப்படையிலான உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமென நினைப்பீர்களேயானால், தவிர்த்து விட்டுத்தான் சென்றாக வேண்டும். எனக்கும் உங்கள் நேரத்தை வீணடிக்க யாதொரு தேவையுமில்லை. பிறகு எதற்காக எழுதுகின்றேன்? என் சிந்தனையைப் பகிர்கின்றேன். எழுத்தாற்றலைப் பயில்கின்றேன். தற்காலத்தில் வாழ முனைகின்றேன். தேவையின்றி கடந்த காலத்தில் மனம் ஒன்றியிருந்தாலோ, அல்லது அளவுக்கும் மிஞ்சிய வகையிலே எதிர்காலத்தை எண்ணிக் கொண்டிருந்தாலோ மனம் கவலை கொள்ளவே நேரிடும். விளையாட்டு, இசை, சமையல், உடற்பயிற்சி, ஓவியம், வேலை முதலானவற்றைப் போலவே சிந்தித்து எழுவதும் தற்காலத்துக்குள் நம்மைப் பணிக்கும். வருத்தங்கள், கவலைகள், துன்பவுணர்வுகள் மேலிடாது. மனம் சமநிலை கொள்ளும். ஆகவே எழுதுகின்றேன்.

தகவல் என்பதை நாம் ஏன் பகுத்துட்கொள்ள வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உகந்த அளவுக்கும் மிகுதியாகும் போது உள்வாங்கப்படும் தகவலைச் செரிக்க முடியாதநிலை ஏற்படும். மாறாக, செரிபடாமல் உணர்வுகளை மேலும் கீழுமாகச் செலுத்திக் கொண்டே இருக்கும். உணர்வுகள் உயர்ந்து தணியும் போது மெய்யுறுப்புகளின் வேதிவினைகளும் பெருத்துச் சிறுக்கின்றன. அதனாலே உடல்நலத்தில் கோளாறுகள் தோன்றுகின்றன. கற்கை என்பதைக் கடந்து, உள்வாங்கப்படுகின்ற தகவல் எல்லாமுமே ஏதோவொரு உள்நோக்கத்தைக் கொண்ட நிலைப்பாடுகள்(ஒப்பீனியன்)தாம். தற்போது நான் எழுதிக் கொண்டிருப்பதுகூட நான் முன்வைக்கின்ற என் மனம்சார்ந்த நிலைப்பாடுகளின் தொகுப்புதான். உங்களை நாடி வரும் தருணத்தில், விலக்கிச் செல்வதற்கு எல்லா உரிமையும் உண்டுதானே?

விடுப்புக்காலத்தில் குழுமியிருந்த மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது. 'in my opinion, doesn't make sense to me, to me it appears' போன்ற சொல்லாடல்களெல்லாம் தங்கு தடையின்றிப் புழங்கப்படுகின்றன. தமிழில் இவற்றுக்கு நிகரான சொல்லாடல்களே இல்லை. எப்படி இல்லாமற்போகும்? பண்பாட்டிலே அத்தகைய தன்மை தூக்கலாக இல்லாததினாலே அவற்றுக்கான தேவையும் இல்லாமற்போய் விட்டதென்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இஃகிஃகி.

எண்ணிப்பாருங்கள். ஒருவர் ஒரு நிலைப்பதிவினை இடுகின்றார். அல்லது, ஏதோவொன்றைச் சொல்கின்றார். ‘இது எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை, சரியாகப்படவில்லை’ என்றோ, அல்லது அதற்கு நிகராகவோ மறுமொழிகின்றோம். என்ன நடக்கும்? சொன்னவர் நல்லவிதமாய் எடுத்துக் கொண்டு, கூடுதல் விபரம் கொடுக்க முன்வரலாமாயிருக்கும். ஆனாலும் கூட, பார்க்கும் வாசகர்கள், பார்வையாளர்கள், இவன் எழவைக் கூட்டுகின்றானென்றே நினைப்பர். அவர்கள் நினைக்கின்றார்களோ இல்லையோ, நமக்குள் அப்படி ஒரு முன்முடிவு(prejudice) நிலைகொண்டிருக்கின்றது. இதனால்தாம் நம் பிள்ளைகள் தமிழிலே பேச முன்வருவதில்லை. மனத்தில் தோன்றியதைச் சொல்வது மேலைநாட்டிலே இயல்பாக்கப்பட்டவொன்று(normalized). நம்மிடத்திலே இல்லை. காரணம் என்ன? நிலைப்பாடுகள்(opinion) என்பது வேறு, உள்ளமை என்பது வேறு, தனக்கான அறம் என்பது வேறு, பொது அறம் என்பது வேறு என்பதெல்லாம் பண்பாட்டிலே நிலைகொள்ளாமலிருப்பதுதான் காரணம்.

தங்குதடையின்றிப் பேசக்கூடிய நிலை இல்லாதவிடத்திலே உரையாடல் நிகழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை. வெறுமனே தகவலை, உள்நோக்கமுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டே இருக்க நேரிடுகின்றது. அது அகச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றது. மனச்சோகை மேலிடுகின்றது. வாழ்க்கைநலம் சீர்கெடுகின்றது.

1/07/2023

அமெரிக்க மக்களவைத் தலைவர் தேர்தலும் இழுபறியும்

கடந்த நவம்பர் மாதம் இடம் பெற்ற ஒன்றிய மன்றத் தேர்தல்களில், டெமாக்ரட் கட்சி படுதோல்வி அடையுமென எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பதற்றம், குடியரசுத்தலைவர் சார்ந்த கட்சிக்கு எதிராக ஒன்றிய மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மரபு போன்றவை. ஆனால் கணிப்புகளுக்கு எதிராக முடிவுகள் அமைந்தன. மாகாண அவை(செனட்)யில் டெமாக்ரட் கட்சிக்குப் பெரும்பான்மை இடங்கள் அமைந்தன. மக்களவை(காங்கிரசு)யில் குடியரசுக்கட்சிக்கு 222 இடங்களும் டெமாக்ரட் கட்சிக்கு 213 இடங்களும் கிடைத்தன. அதாவது பெரும்பான்மைக்குத் தேவையானதையும் விட நான்கு இடங்களே குடியரசுக் கட்சியால் பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுவது, கருக்கலைப்பு குறித்தான குடியரசுக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பெண்களும் இளைஞர்களும் திரண்டு வாக்களித்தமையும். டிரம்ப்பின் தூக்கலான ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எதிராக குடியரசுக் கட்சியினரே கிளர்ந்ததும் என்பதுதான்.

ஒன்றிய மக்களவையின் ஆயுட்காலம் டிசம்பர் 31ஆம் நாளுடன் முடிவுக்கு வரும். அடுத்து வரும் அலுவலக நாளில் அவைகூடி, அவைத்தலைவரைத் தெரிவு செய்யும்; அதற்குப் பின்னர் மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். இதுதான் நடைமுறை. ஆனால், கடந்த 150+ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை இழுபறிகள் இடம் பிடித்தன. ஏன்? எப்படி??

குடியரசுக்கட்சி வசம் 222 இடங்கள் இருக்கின்றன. அவைத்தலைவர் தெரிவுக்குத் தேவையான வாக்குகள் 218. கூடுதலான இடங்கள் இருந்தும், குடியரசுக் கட்சியினரால் தலைவரைத் தெரிவு செய்ய இயலவில்லை. ஏனென்றால், கட்சி உறுப்பினர்களுக்கிடையேவும் சில பல குழுக்கள்(caucus) இருக்கும். அப்படியானதில், தீவிர வலதுசாரிக் குழுவைச் சார்ந்த 20 பேர், தலைவராக முன்மொழியப்பட்ட கெவின் மெக்கார்த்தி என்பாருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

முதற்சுற்றில் எவரும் வாக்களித்தோரில் பெரும்பான்மையை எட்டமுடியவில்லையெனில், மறுசுற்றுக்கு போய் மறுதேர்தலை எதிர்கொள்ள வேண்டியதுதான். இப்படியாக கடந்த வாரம் முழுதும், அடுத்தடுத்து 15 சுற்றுத் தேர்தல்கள் இடம் பெற்றன. 125 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி இடம் பெறுவது இதுதான் முதன்முறை.

அமெரிக்கா பெரிய நாடு என்கின்றனர். வல்லரசு என்கின்றனர். ஒரு சபாநாயகரைத் தெரிவு செய்வதில் எப்படி அடித்துக் கொள்கின்றனர் பாருங்கள் என்றெல்லாம் மேலெழுந்தவாரியான பேச்சுகள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். மக்களாட்சியின் அருமை கருதித்தான் இப்படி நடக்கின்றது என்பது பலருக்கும் புலப்படுவதில்லை. ஏன், எப்படி?

அமெரிக்க மக்கள் சாசனம் என்பது ஒப்பீட்டளவில், உலகில் எங்குமில்லாதபடிக்கு உயரியதும் தனித்துவமானதுமாகும். அமெரிக்காவின் உயிர்நாடி என்பதே ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவமானவன். அவனைப் பொதுமைச் சட்டகத்தில் இட்டு அடைக்கக் கூடாது என்பதும், அதிகாரம் எக்காரணம் கொண்டும் ஒரு புள்ளியில் குவிந்துவிடக் கூடாது என்பதும்தான்.

அவை இருக்கும். அதிலே சிலபல கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சிக் குழுவுக்கும் ஒரு கொறடா(whip) இருப்பார். அந்த கொறடா சொல்லும் ஆணைக்கொப்ப அந்த உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். அந்தக் கொறடா கட்சித் தலைவரின் ஆணைக்கொப்ப செயற்படுவார். கொறடாவின் ஆணையை மீறிச் செயற்பட்டால், நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டுமென்பது சட்டம். இப்படி இருக்கும் போது, அந்த மனிதனின், உறுப்பினரின் தனித்துவம் காற்றில் பறக்க விடப்படுகின்றது. மேலும், மொத்த அதிகாரமும் கட்சியின் தலைவரின் பிடிக்குள் சிக்குண்டு போகின்றது. அடிமைத்தனம் கோலோச்ச வழிவகுக்கின்றது. அப்படியானதல்ல அமெரிக்கா. எப்படி?

ஒவ்வொரு மக்களவைத் தொகுதி உறுப்பினரும் அந்தத் தொகுதி மக்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர். அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் அவர் செய்ய வேண்டும். கொறடா அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. குடியரசுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், தன்னிச்சையாக எப்படியும் ஓட்டுப் போடலாம். கட்சியிலிருந்தோ, மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தோ நீக்க முடியாது. பேச்சுவார்த்தை நடத்தி நடத்தி பரந்துபட்ட அளவில் சுமூகமான நிலை நிலவும் வரையிலும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இப்படித்தான் அதிகாரக் குவிப்பு முறியடிக்கப்படுகின்றது.

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் நிர்வாகத்தலைவர் மட்டுமே. நிர்வாகத்தை நடத்தும் பொறுப்புமட்டும்தான் அவருடையது. அவர் மக்களவையிலோ மாகாண அவையிலோ உறுப்பினர் அல்லர். ஆகவே சட்டங்களை இயற்றும் வல்லமை மாகாண அவையிடமும் மக்களவையிடமும் மட்டுமே. நிர்வாகத்தில் குற்றச்செயல்கள் இடம் பெறுமேயானால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கும் வல்லமை மாகாண, மக்களவைக்கு உண்டு. இப்படியாக பிரசிடெண்ட்டின் அதிகாரக்குவிப்பும் முறியடிக்கப்படுகின்றது.

மக்களவை சட்ட வரைவுகளை முன்மொழியலாம். அவ்வளவுதான். அதை மாகாண அவை வழிமொழிந்தால்தான் சட்டநகர்வுகள் அடுத்த இடத்துக்கு நகரும். எனவே மக்களவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மக்களவை குடியரசுக்கட்சியின் வசம்.

மாகாண அவையினால் சட்டமுன்மொழிவுகளை வழிமொழியத்தான் முடியும். தாமாக ஒன்றைச் சட்டமாக்க முடியாது. இப்படியாக மாகாண அவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மாகாண அவை டெமாக்ரட் கட்சியின் வசம்.

இரு அவைகளும் முன்மொழிந்து வழிமொழிந்து அனுப்பும் சட்ட வரைவினை அதிபர் ஒப்புக்கொண்டால்தான் அது சட்டமாகும். செயற்படுத்துவதில் இன்னின்ன சிக்கல்களெனக் குறிப்புடன் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் ஒன்றினை இருமுறை மட்டுமே அவரால் நிராகரிக்க முடியும். 

இப்படியாக, அவைக்குள் பொறுப்பென்பது ஒருவரிடத்தில் குவிந்திருக்க முடியாது.  அதிபர், மாகாண அவை, மக்களவை இவற்றுக்கு இடையேயும் அதிகாரம் குவிந்திருக்க முடியாது. பேசிப் பேசி, பேசிப் பேசி, மக்களிடையே பரந்துபட்ட அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டால் மட்டுமே அது செயலாக்கம் பெறும். 

15 சுற்றுகளென்ன, 150 சுற்றுகளே ஆயினும் அது மக்களின் அதிகாரக் கொண்டாட்டம்! அதுவே மக்களாட்சியின் மகத்துவம்!!


1/02/2023

உக்ரைன் போர் - 314

உக்ரைன் போரின் இன்றைய வயது 314 நாட்கள். யார் வெற்றி பெறுகின்றார்கள்? அறுதியிட்டுச் சொல்ல முடியாத இழுபறி நிலைதான் நீடிக்கின்றது. எப்படி?

உக்ரைன் நாட்டில் இருக்கும் ஆட்சியாளரகளை மாற்றவும்(டிநாஜிபிகேசன்), இராணுவமில்லா நாடாக்கவும் (டிமிலிட்டிரைசேசன்) முன்னெடுக்கப்படுகின்ற சிறப்பு இராணுவ நடவடிக்கையெனச் சொல்லி, இரண்டு இலட்சம் படை வீரர்களுடன் 2022 பிப் 20ஆம் நாளன்று களமிறங்கியது இரஷ்யா. ஒருவாரத்துக்குள்ளாக ஒட்டுமொத்த நாடும் இரஷ்யாவின் பிடிக்குள் வந்துவிடும்; ஆகவே ஆட்சியாளர்களைப் போலந்து நாட்டில் இருந்து கொண்டு கொரில்லாப் படைகளை வைத்துப் போர் புரியுமாறு ஆலோசனை கூறின மேற்கத்திய நாடுகள். தலைநகரை விட்டு வெளியேற மாட்டோமெனச் சொன்னார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைநாட்டின் கிரைமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டே எவ்வித எதிர்ப்புக்குமிடமின்றித் தன் வசமாக்கி இருந்தது இரஷ்யா. அதே காலகட்டத்தில், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருக்கின்ற டான்யெஸ்க், லுகான்ஸ்க் வட்டாரத்தின் கணிசமான பகுதிகள் இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படையினரின் வசம் இருந்து வருகின்றன. இதையொட்டி இருக்கின்ற தெற்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் இருந்து மளமளவென முன்னேறி, டிநிப்ரோ ஆற்றுக்கு வலப்புறமாகப் பெரும்பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள்ளாகவே கைப்பற்றிக் கொண்டது இரஷ்யா. ஆனால் தலைநகர் கீய்வ் நகரை நெருங்க முடியவில்லை. உக்ரைனின் எதிர்ப்பு என்பது அல்ல. இரஷ்யப் படைகளின் நகர்வுப் பணிகளில் உணவின்மை, தளபாடங்கள் பழையனவாக இருந்து அடிக்கடி பழுதானமை, பல பகுதிகளிலும் இருக்கும் படைகளுக்கிடையே தகவற்தொடர்பில் ஒருங்கிணைப்பின்மை போன்றவற்றால் செய்வதறியாது திணறியது இரஷ்யா. 

வான்வெளிப் படையை மட்டுமே முழுதாக நம்பி இருந்தது இரஷ்யா. சோவியத் ரஷ்யாவின் அதே தளபாடங்கள் உக்ரைன் வசமும் இருந்தன. அவற்றைக் கொண்டு இரஷ்யவசம் வான்வெளி சென்று விடாதபடிக்குப் பார்த்துக் கொண்டது உக்ரைன். மேலும், உக்ரைன் மக்களும் சிதறுண்டு போகாதபடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கியின் பின்னால் ஒன்றுபட்டு நின்றனர். இதைக் கண்ட நேட்டோ நாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை அனுப்பத் துவங்கின. ஏப்ரல் மாதக் கடைசிவரை கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, தற்காப்பில் இருந்து எதிர்த்தாக்குதல் எனும் முறைக்கு மாறின உக்ரைன் படைகள். அதன்நிமித்தம், தலைநகர் கீய்வ், இரண்டாவது பெரிய நகரமும் இரஷ்ய எல்லைக்கு அருகில் இருப்பதுமான கார்கிய்வ் எனும் பகுதியிலிருந்து பின்வாங்கிக் கிழக்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தது இரஷ்யா. இதற்கிடையில், கடல் மார்க்கத்திலும் தன் சொந்தத் தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகளை வீசியது உக்ரைன். அதன் நிமித்தம் இரஷ்யாவின் அடையாளமான மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கிப் போனது.

இரஷ்யாவின் பீரங்கிகளைத் தாக்கவல்ல அமெரிக்காவின் ஸ்டிங்கர், ஜாவலின் ஏவுகணைகளைக் கொண்டு, மேலும் முனைப்புடன் துரத்தியடிக்கும் தாக்குதலுக்கு முன்னேறியது உக்ரைன். அதன்விளைவாக இன்ஸ்யூம், லீமான் போன்ற பகுதிகளையும் களத்தில் இருந்த படைவீரர்களில் மூன்றில் ஒருவரையும் இழந்தது இரஷ்யா. மேலும் மூன்று இலட்சம் தற்காலிகப் படைவீரர்களைக் களத்தில் இறக்கப்போவதாக அறிவித்தார் புடின். மேலும் மூன்று இலட்சமென்றால், உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாது; எனவே துல்லியமாகத் தாக்கவல்ல நவீன பீரங்கிகள் வேண்டுமெனக் கேட்டார் ஜெலன்ஸ்கி. அதன்காரணம், ஹைமார்ஸ் எனும் நவீனரக பீரங்கிகளை அனுப்பியது அமெரிக்கா. இவற்றைக் கொண்டு உக்ரைன் மேலும் முனைப்பாகத் தாக்கத் துவங்கியது. கிரைமியாவையும் இரஷ்யாவையும் இணைக்கின்ற பாலம், கீர்சான் நகருக்கும் அக்கரைக்கும் இடையேயான பாலம் முதலானவற்றை ஹைமார்சுகள் தாக்கிச் சேதாரத்தை உண்டு செய்தன. இதன்விளைவாக, இரஷ்யா பிடித்து வைத்திருந்த ஒரே மாகாணத்தலைநகரான கீர்சான் நகரில் இருந்தும் பின்வாங்க நேரிட்டது.

இரஷ்யாவின் இருப்பில் இருக்கும் ஏவுகணைகள் பெருமளவு தீர்ந்து போயிருந்தன. சுதாரித்துக் கொண்ட இரஷ்யா, ஈரானின் உதவியை நாடியது. ஈரானின் ஷஹெத் டிரோன்களைக் கொள்வனவு செய்து, உக்ரைன் நாடெங்கும் தாக்குதலைத் தொடுத்தது. உக்ரைன் திணறிக் கொண்டிருக்கின்றது. என்ன காரணம்? ஒரு ஷஹெத்தின் விலை இருபதினாயிரம் டாலர். இதனை எதிர்த்தொழிக்கும் தடுப்பு ஏவுகணையின் விலை நான்கு இலட்சம் டாலர் முதற்கொண்டு ஒரு இலட்சம் டாலர் வரையிலும். பெருமளவு டிரோன்களை உக்ரைன் தடுத்தழித்து வந்தாலும், இலக்கின் மதிப்பு தடுப்புக்கான செலவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் போது விட்டுவிடுவதான முறையைக் கையாண்டு வருகின்றது. இதன்காரணம், நாடெங்கும் இருக்கிற மின்விநியோகங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. டிரோன்களுக்கு இடையே ஏவுகணைகளையும் கலந்தடித்து வருகின்றது இரஷ்யா. பதிலுக்கு, உக்ரைனும் துருக்கியிடம் கொள்வனவு செய்த TB2 டிரோன்களை இரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றது. இதனால், தாம் அனுப்பும் டிரோன்களைத் தமது நாட்டு தானியங்கி எதிர்ப்புக்கலங்களே தாக்குவதைப் பார்ப்பதற்கும் ஆளாகின்றது இரஷ்யா.

இருநாடுகளும் கிட்டத்தட்ட தலா ஒரு இலட்சம் படைவீரர்களை இழந்திருக்கலாமென்கின்றது அமெரிக்கா. எண்ணிக்கையில் சமமாக இருந்தாலும், நாட்டின் அளவோடு ஒப்பிடுகையில் உக்ரைனுக்குப் பெரும் சேதம். ஆகவே இழுபறியாகவே இருக்கட்டும். உக்ரைன் அடுத்த நாட்டின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும்? எத்தனை வீரர்களைத்தான் இழக்குமென்பது இரஷ்யாவின் கணக்காக இருக்கின்றது.

2023. இரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு உள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை, போருக்கு முந்தைய நிலை என்னவோ அந்தநிலைக்கு வந்திருக்கின்றது. இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முட்டல்கள் அதிகரித்து உள்ளன. இதன்விளைவாக இஸ்ரேலின் ஏவுகணை வீச்சுக்காளான சிரியாவின் டமாஸ்கஸ் விமானநிலையம் தன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஈரான் இரஷ்யாவை நெருங்கி இருப்பதால், ஈரானின் பரமவைரியான சவூதி இரஷ்யாவினின்று எட்டத்தான் நின்றாக வேண்டும். ஆகவே பெட்ரோலிய நாடுகளான ஓபெக்நாடுகளும் இரஷ்யாவுக்கு ஏதுவாக இருக்கப் போவதில்லை என்பது கணிப்பாக இருக்கின்றது. ஆனாலும் ஈரான், இரஷ்யா, சீனா கூட்டாக இயங்கினால், இந்தப் போர் மேலும் முனைப்பாக நடைபெறுவதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகின்றது.