Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

11/23/2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.

பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.

7/07/2013

மையல்

கதிரவன் மேல்வாக்கில் கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். போனவன் சும்மா போகவில்லை. தலையைப் பின்பக்கமாய்த் திருப்பி வெளியில் வியாபித்திருந்த வெளிச்சத்தைத் தன் வாயால் உறிஞ்சிக் குடித்தபடியே போய்க் கொண்டிருந்தான். வெளிச்சத்தின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போன வேளையது. எனக்கு மிகவும் பிடித்த பொழுதும் அதுதான். அந்த வேளையில்தான் அது தனித்து இருக்கும். லெளகீகம் சொல்லிக் கொடுக்க பிரயாசைப்பட்டுக் கிடக்கும் அது. நான் போனதும் என் கண்களுக்கு மட்டுமே தெரிகிறாற் போல நாணிச் சிரிக்கும். நீளாக் கைகளை விட்டு என்னைத் துழாவும். நான் மருங்கில் ஓடி கடுக்கா கொடுக்கும் போது பொய்யாய்ச் சினந்து விடுவித்துக் கொள்ளும். எங்களுக்கிடையே எவ்விதமான குழூஉக்குறிகளும் இடம் பெற்றிருக்கவில்லை. 

எங்களுக்கே எங்களுக்கான பரிபாடங்கள், எங்களுக்கு மட்டுமே உரித்தானது. அதை நாங்கள் மட்டுமே அறிவோம். இதைக் கண்டு கடந்து போகிற முகில்களுக்கு ஏனிந்தப் பொறாமை எங்கள் மீது?? புதர் வந்தடையும் டிப்பர்களும் கார்டினல்களும் ஒளிந்திருந்து பார்த்திருக்கும். சிக்காடீக்கள் மட்டும் எமைக் கிட்டடியில் வந்து பார்த்து விட்டுப் போகும். இந்த அன்பூடு பொழுதில்தான் முயல் தன் குட்டிகளை வெளியே அனுப்புகிறது. பிறந்த குட்டிகளுக்கு என்ன தெரியும்? எங்களுக்குள்ளான அந்த முயக்கம் அதுகளுக்கு ஒரு வேடிக்கை. இந்நேரம் முக்கிலி போட்டு நீச்சலடித்துக் கொண்டிருந்த கூழைக்கடாக்கள் கரைக்கு வந்து தன் மண்டையை உடலுக்குள் குத்திக் கொண்டன. நேரம் பார்த்துத் தன் நிர்வாணத்தைக் காண்பிக்கத் துவங்கியது அது. பார்க்கப் பார்க்க கொள்ளையழகு. இன்னமும் இங்கேயிருந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும். திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்து விட்டேன். 

எங்கே போய்விடப் போகிறது? அது அங்குதான் இருக்கும் என்மீதான பாயத்துடன் இன்னும் கொஞ்சம் அழகு பெருக்கி அது அங்குதான் இருக்கும். தாவளம் வந்து சேர்ந்துவிட்டதாலேயே தடாகக் காதல் பொல்லுக்காதல் ஆகிவிடுமா என்ன?? அந்த மாரீசனே வந்தாலும் மடையனாக்கி விட்டு எமக்காய் அங்கேதான் என்மீதான மையலுடன் மையங் கொண்டிருக்குமந்தத் தடாகம்!!

6/20/2013

புல்லும் கல்லும்!!

தற்போது தங்கி இருக்குமிடமும் சரி; அலுவலகமும் சரி, சரியான மலையும் மலைப்படுகையும் சார்ந்த இடம். இரவு உண்டி ஆனதன் பிறகு என்ன செய்வாய் எனக் கேட்டான் அன்றாடம் நாளிதழ் போடுவார்கள். வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது இணையத்தில் உசாவிக் கொண்டிருப்பேன் எனக் கூறினேன். என் விடுதியில் இருந்து சரியாக உன் விடுதிக்கு ஏழு மணிக்கு வந்து விடுகிறேன். இருவருமாக அந்த அடிவாரம் வரை நடந்து விட்டு வருவோம் எனச் சொன்னான். இங்கு பாம்புகள் நடமாட்டம் வெகுவாக இருக்குமென்று சொல்கிறார்களே என வினவியதற்கு, நாம் சாலையோர நடைபாதையிலேயே போய்விட்டு வந்து விடுவோம் எனச் சொன்னான். 

அதன்படியே நானும் ஏழுமணிக்கெல்லாம் விடுதி முன்பு போய் நிற்க அவனும் வந்து சேரச் சரியாக இருந்தது. அவன், அவனுடைய அலைபேசியினூடகப் படங்கள் எடுத்து வந்தான். நான் எனது அலைபேசியினூடாகப் படங்கள் எடுத்து வந்தேன். இடையில், ஊருக்கு அழைத்து மனைவி மக்களோடும் ஒரு முறை சுருக்கமாகப் பேசினேன். பேசிவிட்டுப் பார்க்கும் போதுதான் அது நடந்தது. 

திருப்பதி லட்டு அளவிலான கல்லொன்று உருண்டோடி வந்து மற்றொரு கல்லின் மீது மோதியதில், உருண்டு வந்த கல் அங்கேயே நின்றுவிட்டது. மோதப்பட்ட கல் உருளத் துவங்கியிருந்தது. நான் அவனைப் பார்க்க, ஏற்கனவே அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். சிக்கினான் சிங்காரம் என்கிற தொனியில் விரிக்கத் துவங்கினான். ஓடி வந்த கல்லின் எடையும், உருண்டு போன கல்லின் எடையும் தெரிந்தால் உருண்டு வந்த வேகத்தையும் உருண்டு போன வேகத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியும். அல்லது, உருண்டு வந்த தூரமும் வேகமும் தெரிந்தால் இரண்டு கற்களின் எடையையும் கணக்கிட முடியும் என விரித்துரை ஆற்றிப் பெருமைப்பாடு அடைந்து கொண்டிருந்தான். அதற்குள் சில பல அடிகள் முன்னேறியும் வந்து விட்டோம். திடீரென என்ன நினைத்தேனோ தெரியவில்லை; வா, போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்கும் காத்திராமால் நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஓடுவதற்கும் சற்று இளம்புள்ளியான வீச்சுநடையுடன் வந்து என்னைப் பிடித்து விட்டான். இருவருமாக அந்தப் பக்கம் பார்வையை வீசி எறிந்தோம். மோதிவிட்டு நின்ற அந்தக் கல்லையும் இப்போது காணவில்லை. அதுவும் கீழே உருண்டு போய்விட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன், முகத்தில் எப்படி ஈஈஈ ஆடும்? ’ஒ’தான் ஒடுங்கி இருந்தது. அதற்கு மேலும் நான் அவனைக் கட்டாயப்படுத்தி அதை அலசி ஆய்ந்தெடுக்க விரும்பவில்லை. நடையை முன்னயபடியே தொடர்ந்தோம். 

கடைசி வரைக்கும் அந்த பழைய கெழுத்தி மீளப் பெறவே இல்லை. நான்தான் எஞ்சிய நடைநேரத்தையும் சொற்கள் பலவற்றால் நிரப்பி வேண்டி இருந்தது. நன்றாகவே விடை பெற்றுக் கொண்டோம். அடுத்து வருகிற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த வரைவு(RFP)க்கான வேலைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதை வைத்தே ஒப்பந்த ஒப்புதலுக்கான கைச்சாத்தும் அவனிடமிருந்து பெற்றுவிடலாம் எனும் நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கல்லைக் கண்டுபிடித்து ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. வல்லவனுக்குப் புல் மட்டுமல்ல, கல்லும் ஆயுதம்தான்!! 

6/07/2013

அடுக்களையும் அமைதியும்!!

தவளைகளின்
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!
வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.
மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.
”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.
நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.
சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.
வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.
அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.
“அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.
சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.
“சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.
இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.
செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.
”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!
நன்றி: வல்லமை

3/31/2013

தமிழ் ஏஸ்வெல்?!


மெம்ஃபிசு விமானம் சற்று காலத்தாழ்ச்சியுடனே வந்தது. மூன்று நாட்களுக்கென முப்பதுநாள் மூட்டை முடிச்சுகளுடன் பயணம் செல்பவன் அல்லன் நான். சிறு பெட்டியில் மூன்றே மூன்று நாட்களுக்கான உடுப்புகளும் சிறுகதை நூலொன்றும் போதுமெனக்கு. எபோதோதாவது ஏதோவொரு  இதரத்துக்கான தேவை வரும். ஒன்று நான் தங்கியிருக்கும் விடுதியானது அதைக் கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அல்லது, எனது ஒப்பந்தக்காரன்  புதிதாய் நான் வாங்கியதற்கான இழப்பைச் சரிக்கட்ட வேண்டும். ஏன் இதையெல்லாம் நான் சொல்கிறேனென்றால், காரணமிருக்கிறது. இவ்வுலகில்  எது  நடப்பதற்கும்  நிமித்தமோ  காரணமோ இல்லாமலில்லை. 

முன்பொரு காலத்தில், அதாவது 2005ஆம் ஆண்டுவாக்கிலெல்லாம் உள்ளூர்ப் பயணங்களுக்குக் கூட பெரிய பெரிய வானூர்திகளைப் பாவித்தன நிறுவனங்கள். பொருளாதாரத்தில் கட்டுப்பாடு கொணரவேண்டிய சூழல் வந்து இரங்கராட்டினம் ஆடவே, சிறிய அளவிலான வானூர்திகளைப் புழக்கத்தில் விட்டார்கள். அவரவர் அடுத்தவர் மூச்சுக்காற்றை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்.  ஒன்றினுள்ளே புகுந்து வெளியே வந்து மற்றொன்றினுள் புகுந்து வெளியே வந்தென மணிகளைக் கோக்கும் நூலிழையைப்போல, இருக்கும் நூற்று சொச்சங்களின் இருநூற்று சொச்ச
நாசித்துவாரங்களிலும் புகுந்து புகுந்து வெளியேவந்து அடங்கிப் போகும் ஆசனத்தின் அடிநழுவி மேலெழும்பிய அந்த மலக்காற்று. அடிச்சிக்கோபுடிச்சிக்கோவென இருக்கும், கூடக் கொண்டு வரும் பைகளை எஞ்சி இருக்கும் இடுக்களில் திணிப்பதற்காய். 

கட்டிப்பறக்கும் மனிதமூட்டைகளில் இவனுக்கு முதலிடம். சிக்குண்டு போவதில் என்ன முதலிடம்? சிலபல பெருவிரற்கடைகள் அகலமான இருக்கை கிட்டும். கலோரியில்லாத உருளைக்கிழங்கு நொறுவல் என்று சொல்லி இல்லாத ஊத்தைஉருளைக் கிழங்குகளின் சீவல்ப் பொட்டணங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். இவனைப் போலவே இருக்கும் அந்த மற்றவர்களும் வாராவாரம் வந்து தொலைப்பார்கள். என்ன இழவுடா சாமி? வாராவாரம் அதே மூஞ்சிகளோடு பயணம். இதிலென்ன சுவாரசியம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அதே ஆட்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதுதானே சிலபல கதைகள் நமக்குக் கிடைக்கிறது. 

நேற்று அந்த மூவரும் பேசிப் பேசி வானூர்தியைச் சொற்களால் நிறைத்தலிருந்து, “ஓ, யு ஸ்பீக் ரஷ்யன் லேங்வேஜ்? யு நோ, மை சன் ஆல்சோ ஸ்பீக்ஸ் ரஷ்யன் வெரி வெல். ஹி லேர்ன்ட் இட் ஃப்ரம் மை பாய் பிரண்ட் ஹு இஸ் எ ரஷ்யன். ஹிஸ் டேட் வாஸ் சோ சர்ப்பரைஸ்டு வென் ஹி வாஸ் ஸ்பீக்கிங் இன் ரஷ்யன் யு நோ?!”. களத்து மேட்டுக்குள்ள புகுந்த கவுதாலியப் போல இது நாம,”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்?!”

3/03/2013

நிறைகுடம்


செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

“பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

2/03/2013

திரைப்படப் பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சி

கடந்த 02/02/2013ஆம் நாள், டென்னசி மாகாணம் மெம்ஃபிசு மாநகரில் நிகழ்ந்த தென்மத்திய தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவில் இடம் பெற்ற ’திரைப்படப் பல்லூடக விநாடி வினா” போட்டியில் கீழ்க்கண்ட நான்கு அணிகள் இடம் பெற்றன.

1. கோவை சிறுவாணி
2. மதுரை வைகை
3. நெல்லை தாமிரபரணி
4. சென்னை பாலாறு

போட்டியில் அனைவரும் குதூகலத்துடன் பங்காற்றி ஒத்துழைப்புக் கொடுத்தனர். போட்டியின் முடிவில், கோவை சிறுவாணி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி குறித்த கீழ்க்கண்ட காணொலியைக் கண்டு தங்களது கருத்துகளையும் தெரிவியுங்கள். அடுத்து வரும் விழாக்களின் போது, போட்டியை மேம்படுத்த தங்களது கருத்துகள் உதவிபுரியும் என நம்புகிறோம்.

12/02/2012

கிண்ண இனிப்பம்

முழுக்க முழுக்க வீட்டிலேயே சமைக்கப்பட்ட “கிண்ண இனிப்பம்”. ஒவ்வொரு இனிப்பத்துக்கும் தனித்தனியான வடிவும் இடப்பட்டது. அடுமனையில் அசத்திய என் மனையாளுக்கு நீங்களும் ஒரு “ஓ” போடுங்களேன்!!


11/27/2012

சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்

கார்த்திகை சோதித் திருநாள் வாழ்த்துகள்!

வீடுகளின் மதில்சுவர்கள் மற்றும் திண்ணை,  காடு கழனிகளின் பொழிக்கல், கிணற்றடியில் இருக்கும் எக்கியறை(motor room), தோட்டத்துச் சாளையில் இருக்கும் திண்ணை மற்றும் விளக்கிடுக்கு என் எங்கும் சிறு அகல் விளக்குகள்(கார்த்திகை விளக்கு) ஏற்றப்படும். பிறகு சற்றொப்ப பின்னேரம் 8 மணிக்கு ஊர்த்தலைவாசலில் இருக்கும் விநாயகர் கோவிலில் இருக்கும் விளக்குத்தூணில் தற்காலிகமாய் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏறி நின்று ஊர்த்தலைவர்/பெரியவர்கள் புடைசூழ அணையாச் சுடர் ஏற்றப்படும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு  பழக்கலவை முழுக்கு, பால்முழுக்கு உள்ளிட்டவற்றின் போது பாவிக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்பட்ட திருவமுதின் எஞ்சியவற்றை அனைவருக்கும் அளிப்பார்கள்.

பூசனைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டும் தருணத்தில் ஊர் விடலைகள் “சூந்து” விளையாடுவார்கள். சோளத்தட்டு, கம்பந்தட்டு, வைக்கோல்கற்றை முதலானவற்றின் ஒரு முனையில் தீயிட்டு அவற்றைக் கையில் வைத்தபடியே பாடல் பாடிக் கொண்டு இலாகவமாய் ஆட்டிக் கொண்டு வலம் வரும் ஒரு துள்ளு விளையாட்டு இதுவாகும். எண்ணையில் ஊற வைக்கப்பட்ட துணி வளையத்தை நாய்ச் சங்கிலியின் ஒரு முனையில் கட்டி, அதற்கு எரியூட்டியபின் சுழற்றிச் சுற்றி இலாகவமாய் ஆடி வருவதும் உண்டு. விடலைகளின் தீரமிகு விளையாட்டில் அத்துமீறி சில பல தீ விபத்து நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது உண்டு. இவற்றானவற்றின் போது சில பல கிராமியப் பாடல்கள் பாடப்படுவதும் உண்டு. கொச்சையான பாடல்களும் இதில் அடக்கம்.

தந்தனத்தான் தோப்பிலே
தயிர் விக்கிற பொம்பளே
தயிர் போனா மயிர் போச்சி
இங்க வந்தாத்தான் ஆச்சி
சூந்தாட்ட வெளிச்சத்திலே ஊரு
சேந்தாடுவோம் சதுரு
நான் எடுக்குறேன் ஒன் உசுரு!!

மன்னிக்கவும். எனக்கு நினைவில் இருப்பவற்றை எல்லாம் மின்னேற்ற முடியாதாகையால், எஞ்சிய சில பாடல்களுக்கு பெப்பே!! சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்!!

11/15/2012

கைம்பெண் தாய்

என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.

1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவர் 5 மணிக்கு அலுவல் முடிந்து விட்டாலும் வீட்டிற்குத் தாமதமாகவே வருகிறார். வந்தபின்னரும் மூத்த தாயைக் கையாளும் விதம் சரியில்லை.

2. மகன் இங்கே. வயோதிக விதவைத் தாய் ஊரில். தாயின் தங்கைகளே, “முண்டச்சி  முண்டச்சி” என விளித்தும் இழித்தும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். தாயுக்கு உதவ வரும் ஆடவர்களோடு இணைத்துப் பேசும் கொடுமை. அங்கே தாய் அழ, இங்கே மகன்  விம்முகிறார். 

3. விதவைத் தாயைக் கவனிக்காத ஊரிலிருக்கும் மகன்கள்/மருமகள்கள். அம்மாவை நினைத்து அழும் அமெரிக்க மகள்.

4. ஊரிலிருக்கும் விதவைத் தாயின் சொத்தினைப் பறிக்கும் நோக்கில், தாயை  வேசியென்றும் திருடியென்றும் வசை பாடும் உறவினர்கள். அமெரிக்காவில்  கையறு நிலையிலிருக்கும் மகனும் மகளும். 

5. விதவையான மாமியாரை இழித்தும் பழித்தும் பேசித் துன்புறுவதைக் கண்டு  வெகுண்டெழும் அமெரிக்க மருமகன். 

ஆணாதிக்கச் சமூகம்தான் இவற்றுக் காரணம் என்று பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. ஏனென்றால், தன்னை அண்டி இருக்கும் பெண்களால்தான் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறாள் விதவைத்தாய் என்பவள்.

அமெரிக்காவைப் பொறுத்த மட்டிலும், தானொரு விதவை என்று சொல்லும் வரையிலும் அவரைப்பற்றிய தகவல் மற்றவருக்குத் தெரிவதில்லை. ஆனால், தாயகத்தில்? விதவை என்பதைத் தெரிந்த கொண்ட பின்னரே அவருக்கான பெயர் தெரிய வருகிறது.

அண்டியிருக்கும் பலநூறு கைகளும் அவளை நோக்கியே நீளும். தனக்கான பணியைச் செய்வதற்கும், பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதற்கும், குழந்தை வளர்ப்புக்கும், வீட்டுப் பராமரிப்புக்கும் என எதற்கும் அவள் வேண்டும் இவர்களுக்கு. கைம்பெண்ணின் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்குமே அவள் ஒரு கீழானவள் அல்லது எளிதில் இலக்காக்கப்படக் கூடியவள். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மாபாதகம் இது.

அதிலும் தன்னந்தனியாக அல்லது பெற்ற பிள்ளைகளிடமிருந்து மனத்தாலும், இடத்தாலும் எட்ட இருப்பவர்களின் நிலை மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும். அப்படியானவள், எப்படியும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகள், மின்கட்டணம் கட்டுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது, அலைபேசி பழுதுபார்ப்பது என்றான சிறுசிறு வேலைகளைச் செய்து தர யாதோ ஒருவரை அண்டி அவர்தம் உதவியோடுதான் வாழ்ந்தாக வேண்டும். உடனே கிளம்பி விடுவார்கள் மேட்டிமை பொருந்திய ஆதிக்க மனம் கொண்டோர். எப்படி?

“இந்த முண்டச்சிக்கும் இன்னாருக்கும் கள்ள உறவு!”. கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் மிக எளிமையாகச் சொல்லிக் கடப்பதை நாம் எங்கும் காணலாம். அத்தாயின், பெண்மணியின் வயது ஐம்பத்தி ஐந்தாக இருந்தாலும் சரி, எண்பதாக இருந்தாலும் சரி, இத்தகைய ஒரு வன்கொடுமையிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. மேலும், இப்படிச் சொல்லிச் செல்பவர்களில் பெண்களே மிகுதி என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய பெண்களுக்கு அத்தகைய ஒரு நிலை அடுத்த கணமே நிகழாது என்பதற்கு என்ன நிச்சயம்?

”முண்டை” எனும் சொல்லை உருவாக்கியவன் ஒரு காட்டு மிராண்டி. அதைப் பாவிப்பவன் ஒரு பிணந்தின்னி. இச்சொல்லை அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டும். இனவெறிச் சொற்களுக்கான பட்டியலிலும் இது சேர்க்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் கடுமையான போக்கைக் கடைபிடித்தாலொழிய இது அழியப் போவதில்லை.

ஆனாலும் அதைக் களைவதற்கும், அத்தகைய வன்கொடுமையைக் கண்டித்துக் களைவதற்கும் உகந்த சட்டங்கள் ஊரிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இருக்கத்தான் செய்கின்றன. மக்கள், குறிப்பாகப் பெண்கள் வெகுவாக வெளிக்கிளர்ந்து வர வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க மனோபாவத்திற்கும், ஆதிக்க மனோபாவமுள்ள பெண்களுக்கும் தக்க பாடம் கற்பிக்க முடியும். ஆனால், தனக்கு எத்தனை இழிவுகள் நேர்ந்தாலும், அவள் காட்டும் தாய்மைப் போக்கே இத்தகைய வன்கொடுமைக்கான காரணமாகவும் இருந்து விடுகிறது.

ஒரு விதவைத்தாய் அச்சுறுத்தப்படுகிறாள். இழிவுபடுத்தப்படுகிறாள். அவதூறுக்கு ஆளாகி சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறாள். இத்தகைய கொடிய செயலுக்குக் காரணமானவர்களின் பேச்சு, செயல்கள் முதலானவற்றிற்கும் அழிக்கப்பட முடியாத ஆதாரங்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அந்த விதவைத்தாய் சட்டம் – ஒழுங்கு அதிகாரிகளை நாட மறுக்கிறாள். அவள் சொல்லும் காரணம்தான் என்ன?

“பாவம். போலீசு கீலீசுன்னு போனா இளையவளுக்கும் சிக்கலு. மூத்தவளுக்கும் சிக்கலு. அவங்க வீட்டுல இன்னும் கண்ணாலங்காச்சி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு!”. இங்குதான் கயவர்களின் ஏகபோக மனப்பான்மை ஊக்குவிக்கப்படுகிறது. தயவு தாட்சண்யமின்றிப் பெண்கள் வெளியே வர வேண்டும். இது நீங்கள் மட்டுமே அனுபவிக்கும் கொடுமை அல்ல. நாளை இது உங்கள் மகளுக்கும் நேரக் கூடும். உங்கள் பெயர்த்திகளுக்கும் நேரக்கூடும்.

மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் வெகுவாக உருப்பெற வேண்டும். நீங்களும் நானும் செய்யத் துணியாவிட்டால், நம் அம்மாவுக்கும் அத்தைக்கும் மனைவிக்கும் அக்காவுக்கும் தங்கைக்கும் மகளுக்கும் செய்ய வேறு யார் வருவார்?

வன்கொடுமைச் சட்டம் என்பது அடித்துத் துன்புறுத்துவதற்கு மட்டுமே ஆனது அல்ல. சொல்லாலும் வேறு பல செயலாலும் மனத்தைத் துன்புறுத்துவதற்கும் பொருந்தும். அதிலும், விதவைத்தாயிக்கு நேர்ந்த இன்னல்களுக்கான தண்டனை கடுமையானதாகக் கூட இருக்கும். 

Verbal harassment These involve the use of abusive or derogatory comments or remarks (epithets), usage of comments or words based on race. Four types of cruelty are dealt with by the law 498-A:
  • conduct that is likely to drive a woman to suicide; தற்கொலைக்குத் தூண்டக்கூடிய செயல்கள்
  • conduct which is likely to cause grave injury to the life, limb or health of the woman,
  • harassment with the purpose of forcing the woman or her relatives to give some property, அவதூறு பரப்பி அச்சுறுத்துதல்
  • Harassment because the woman or her relatives is unable to yield to demands for more money or does not give some property. பணப்பறிப்பு, நிலப்பறிப்பு முதலானவற்றை மனத்துள் வைத்துச் செய்தல்

ஆக, சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மனித உரிமைப் பேராளர்கள் எனப் பலரும் முன் வர வேண்டும். நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது இடம் பெற வேண்டும். கொடுமை செய்பவர்கள் உற்றார், உறவினர் என்கிற தயவுதாட்சண்யமின்றி விதவைப் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில், இத்தகைய வழக்குகளுக்கான கட்டணத்தை பாதிக்கப்பட்ட பெண்களிடம் பெறுவதில்லை. மாறாக, வழக்கு வென்ற பின் தண்டிப்பட்டவர் கொடுக்கும் இழப்பீட்டில் இவ்வளவு என ஒப்பந்தம் போடப்படுகிறது. இது வழக்குகள் பதிவதை வெகுவாக ஊக்குவிக்க உதவுகிறது. இதே போன்ற பழக்கத்தைத் தாயகத்திலும் கொண்டு வருதல் வேண்டும். இந்திய, தமிழ்நாட்டு அரசுகள், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாமும் செயல்பட வேண்டும். தாய்மையைப் போற்றுவோம்! கயமையை வேரறுப்போம்!!

4/14/2012

அமெரிக்கத் தமிழர் திருவிழா அழைப்பு



அமெரிக்கத் தமிழர் திருவிழா

2012 July 6, 7, & 8

The Joseph Meyerhoff Symphony Hall
1212 Cathedral Street Baltimore 21201

Welcome to FeTNA Silver Jubilee Celebrations!

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org

வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
வைகைப் புயல் வடிவேல்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
அயன்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org

2/10/2012

டென்னசி மெம்ஃபிசு நகரத் தமிழ்விழா அழைப்பு

ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழரெலாம் எழுக!
திருவான செந்தமிழின்
தேனருந்த எழுக! நீவிர்
பெருமானம் பெறுவதற்கு வாரீரேல்
உங்கள்நுதற் பிறையே நாணும்!
பொற்பரிதி எழுஞ்சுடர் முகமும்
நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்!

மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப்பாடு!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை?
செந்தமிழ்த் தோப்பில் நிழலா இல்லை?
நந்தமிழின் நலம் காக்க வாரீர் தமிழர்களே!
நட்பெய்தக் கூடுங்கள் அன்பர்களே!!
கோர்டோவா சமூகக் கூடமதில் கூடுங்கள்!
கூடிப் பொங்கலிடுவோம் வாருங்கள்!!

கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்!! : 

2/04/2012

சிலம்பாட்டம்

பழந்தமிழ்க் கலைகளுள் சிலவற்றைப் பெருமையாகப் பேசவும், அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுமிருக்கிறது நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் எனச் சொன்னால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த போதிதர்மர் என்பார் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தமிழ்க்கலைகளைக் கற்றுக் கொடுத்துக் காப்பாற்றினார். அதன் காரணமாகச் சீனர்கள் இன்றைக்கும் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் எனும் இன்றைய நடப்பைச் சுட்டிக்காட்டி, அவர் கற்றுக் கொடுத்த கலைகள் சிலவற்றையும் திரையில் காணச்செய்கிறது ஏழாம் அறிவு.

பழந்தமிழ்க் கலைகளுள் சிலம்பம், குத்துவரிசை, நோக்குவர்மம் முதலானவை ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அவையெல்லாம் சிலம்பக்கலையின் ஒரு சில உட்கூறுகளேயாகும்.

’சிலம்பு’ எனும் சொல்லுக்கு ‘ஒலி’ என்பது பொருள். அத்தகைய ஒலியுடன் கூடிய கலையானது சிலம்பக்கலை என வழங்கலாயிற்று. ஒருவர் அத்தகைய சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம். மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, புடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளகாகும்.

முதலாவதாக, உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் மெய்ப்பாடம் எனும் நிலையை வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து அடைவதாகும். குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்திய பின் இடம் பெறுவது, உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்துகிற உடற்கட்டுப் பாடம்.

கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு அடுத்து இடம் பெறுவது மூச்சுப்பாடம் என்பதாகும். ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.

சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக ’குத்துவரிசை’ அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.

ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.

எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளை சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும்.அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.

சிலம்பு என்றால் ஒலி என முன்னரே பார்த்தோம். அதே வேளையில், கைச்சிலம்பு, காற்சிலம்பு எனும் அணிகள் இருப்பதையும் நாம் கருத்திற் கொண்டாக வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கையாண்டது காற்சிலம்பு; பஞ்சாபியர் இன்றும் கையிலணிந்து இருப்பது கைச்சிலம்பாகும். அப்படியாகப் பெண்டிர் கைச்சிலம்பும் காற்சிலம்பும் கொண்டு பயிற்றுவிக்கப் பட்டார்கள். ஆடவருக்கு, சிறு கழி அல்லது வேல்கம்பு கொண்டு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இதுவே சில்ம்பாட்டம் என அழைக்கப்படுகிறது. சிலம்பக்கலையின் ஒரு உட்கூறான சிலம்பாட்டத்தில், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், குறவஞ்சிச் சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு எனப் பலவகைகள் உள்ளன.

கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பும் தசைகளும் இயக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட உடற்பயிற்சியை குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஒருவரால் மேற்கொள்ள முடியும். ஆனால் நூறு வயதானாலும் தொடர்ந்து சிலம்பாட்டத்தை மேற்கொள்வதால் இறுதிவரை அவர் உடற்பயிற்சி செய்பவராகிறார். கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றியிருக்குமிருக்கிற பதினாறு திக்கும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு வேலி அமைப்பது என்றால் அது சிலம்பத்தினால் மட்டுமே முடியும். இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். இதுவரையிலும் நாம் கண்டு வந்த நிலைகள், மாந்தனது உடலின் வலிமை(strength), ஆற்றல்(power), விரைவுத்திறன்(speed) மற்றும் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை செம்மைப்படுத்தி நுணுக்கங்களைப் புகுத்தி மேற்கொள்ளும் பயிற்சிகளாகும்.

அடுத்து வரும் சிலம்பக்கலையின் மற்றொரு கூறான வர்மக்கலையானது, மேற்கண்ட பயிற்சிகளோடு, கூடுதலாக அறிவுத் திறனையும் வளர்த்துக் கொண்டு செயற்படும் ஒரு முறையாகும்.

மாந்தனது உடலானது இரண்டாயிரம் நாடிகளால் பின்னப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழ்ச் சித்தர்கள். இவற்றுள் வெகு முக்கியமானவை பத்து நாடிகளாகும். இவற்றின் வழியாகத்தான் மூச்சுக் காற்றானது பல்வேறு வடிவங்களாக ஓடுகிறது என்கிறார்கள் சித்தர்கள். அவை முறையே, உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று, இமைக்காற்று, தும்மற்காற்று, கொட்டாவிக்காற்று, வீங்கற்காற்று என்பனவாகும். இப்படியானவை நாடிகளின் ஊடோடி ஒன்றோடொன்று எதிர்கொண்டு கலக்கும் இடங்கள் வர்மப்புள்ளிகள் எனப்படுகின்றன. அத்தகைய புள்ளியில் பல காற்றுகள் கலப்பதாக இருப்பின் அது வர்ம நுட்பப்புள்ளி எனப்படுகிறது. அப்புள்ளியில் நுணுக்கமாகத் தாக்கி பாதிப்புக்கு உள்ளாக்குவதே வர்மக்கலை என்பதாகும்.

வர்மக்கலையை, படுவர்மம், தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம் என நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் அகத்தியர்.

படுவர்மம் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். நாட்டுப்புறத்தில், ‘படாத எடத்துல பட்டுப் பொசுக்குனு போயிட்டான்’ எனப்படுகிற சொல்லாடலின் அடிப்படையும் இதுவேயாகும்.

குறிப்பிட்ட நுட்பவர்மத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போது உயிருக்கே ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது படுவர்மம்.

படுவர்மத்தைப் போன்று குறிப்பிட்ட வர்மங்களைத் தாக்குவதே தொடுவர்மம். ஆனால், உயிருக்கு ஊறெதுவும் இல்லாமல் செயலிழக்கச் செய்யும் முறையாகத் தொடுவர்மம் திகழ்கிறது. இதில் தாக்குதலுக்குண்டான ஒருவரை முறையான பயிற்சியினால் இயல்பாக்க முடியும்.

விரல்களைக் கொண்டு வர்மப்புள்ளிகளைத் தட்டி நிலைகுலையச் செய்யும் முறையே தட்டுவர்மம் எனப்படுகிறது.

மெய்தீண்டாக்கலை என்றும் விளிக்கப்படுகிற நோக்குவர்மம் என்பது, ஒருவரைத் தன் பார்வையாலேயே ஆட்கொண்டு நிலைகுலையச் செய்யும் முறையாகும். பழங்காலத்தில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்கிறார்கள் சித்தரியல் ஆய்வாளர்கள்.

எடுத்துக்காட்டாக, தட்டுவர்மத்தின் உட்பிரிவான முடக்குவர்மத்தை கால்முட்டிக்குப் பின்னால் இருக்கும் வர்மப்புள்ளியைத் தாக்குவதன் மூலம் ஒருவரது நடக்கும் ஆற்றலை இழக்கச் செய்யமுடியும் என்பதை அகத்தியர் கீழே வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே

வலிமை வாய்ந்த வர்மக்கலையைக் கற்றுத் தேர்ச்சியடைய, சீரிய ஆய்வும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு ஒரு நெறிமுறையை வகு்த்து மீட்டெடுக்க வேண்டிய கடமை மாந்தர் குலத்திற்கு உண்டு.

சிதைந்து போன வர்மக்கலையை மீட்டெடுக்கும் முன்னர், நாம் சிலம்பாட்டத்தினைப் பயில்வதால் உடலைப் பேணுவதோடு தமிழர் கலையையும் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதுவே நாம் நம் எதிர்காலச் சந்ததியினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளுள் முக்கியமானதாகும்..

அமெரிக்கத் தமிழர்க்கு சிலம்பாட்டக் கலையைப் பயிற்றுவிப்பதன் வழியாக அக்கலையை முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும் என்கிற உயரிய நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதுதான் அமெரிக்க தமிழ்ச்சிலம்புக் கழகம். இவ்வமைப்புத் துவங்கப்பட்டு பல இடங்களிலும் சிலம்பாட்டப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் கலைகள் அமெரிக்க மண்ணில் மீளெழுந்து பெருமைகள் கொள்ளப் போகும் நாள் வெகு தொலைவில் இல!!

உசாத்துணையும் உதவியும்:
அகத்தியரின் ஒடிவு முறிவு சாரி
விற்பன்னர் ஜோதிக்கண்ணன் செவ்வி
முனைவர் சுந்தரவடிவேலு
திரு. எழிலன்
திரு.பிருத்திவிராஜ்

குறிப்பு: இப்படைப்பானது வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரையாகும்.

1/29/2012

பகுப்பு

இவ்வையகத்தில் ஆயிரமாயிரம் பகுப்புகள் உண்டு. அதுகுறித்துத் தொடர்வதற்கு முன் சற்றுத் தமிழையும் பார்த்து விடலாமே? பகுதி எனும் இடத்திலெல்லாம் பிரிவு எனும் சொல்லைப் பாவிப்பது மொழியின் நுண்மையைப் பாழாக்கும் செயலாகும். யாரும் வேண்டுமென்றே செய்வதாக நினைக்கவில்லை. ஆனால், கல்வியாளர்களுக்கும் ஊடகத்தினருக்கும் மொழியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு உண்டு. வேலியே பயிரை மேயும் செயல் இனியும் எவ்வளவு காலத்திற்குத் தொடருமெனத் தெரியவில்லை.

யாதோவொரு விழுமியத்தின் அடிப்படையில் பகுத்தடைவது பகுதி. ஒன்றிலிருந்து பிரித்தடைவது பிரிவு ஆகும். ஒரு பள்ளியில் இருக்கும் மாணவர்களை நிலை வாரியாக வகுப்பதால் வருவது வகுப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, ஆறாம் வகுப்பு. இருக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களை, எண்ணிக்கை அடிப்படையில் பகுத்து வருவது, ஆறாம் வகுப்பு, பகுதி ‘அ’. பகுதி ‘ஆ’ என்றிருத்தல் வேண்டும்.

தமிழர்களுள் சாதி வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்திருப்பது பிரிவுகள் ஆகும். பிரிந்து இருக்கிறார்கள்; யாரும் அவர்களைப் பகுக்கவில்லை. நாமே நம்மில் இருக்கும் இன்னொருவனிடம் இருந்து பிரிந்து நிற்கிறோம்; ஆகவே அவை பிரிவுகள் ஆகும். பிரிவுகள் கூடினால் தோன்றுவது ஒன்றியம். பகுதிகள் கூடினால் கிடைப்பது பருமை ஆகும். அதை ’பெருமை’ என்றும் விளிக்கலாம்.

மீண்டும் பகுப்புகளுக்கு வருவோம். நம்மில் பல பகுப்புகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு கூடத்தில் தேநீர் அருந்துபவர்களில், அரைக்கோப்பைக்குக் கீழே தேநீர் கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதியினர். அரைக்கோப்பைக்கு மேலாகத் தேநீர் கொண்டிருப்பவர்கள் அடுத்த பகுப்பினர் ஆவர்.

மீண்டும் அவர்களையே எடுத்துக் கொள்வோம். அரைக் கோப்பை வெற்றாக இருக்கிறது என்பார் ஒரு பகுப்பினர். அரைக்கோப்பை நிறைந்து இருக்கிறது என்பார் அடுத்த பகுப்பினர். இப்படியாக, அவர்களை வைத்து இன்னும் கூடுதலாகப் பகுப்புகளை நாம் பெற்றிட முடியும். ஆக, அவரவர் சிந்தனைக்கொப்ப பகுப்புகள் தோன்றுகிறது. ஒவ்வொருவர் சிந்தனையிலும் யாதோவொரு முறைமை(நியாயம்) இருப்பதையும் நாம் எளிதில் உணரலாம். அதேவேளையில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்நிலையில், அந்த அறையை வழிநடத்தும் தலைவர் என்பவர் இவற்றையெல்லாம் நன்கு புரிந்தவராக இருத்தல் வேண்டும். மாறாக, அவர்களுக்குள் இருக்கும் முறைமையைத் தட்டிக் கழிப்பதும், கொச்சைப்படுத்துவதும் அறையில் இருக்கும் இணக்கப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும். அல்லது அவர்களுக்குள் இருக்கும் பகுப்பினைப் பிரிவுகளாக்குவதற்கு வழி வகுக்கும். முறைமை இழந்தவனின் செயல் மனித நேயத்திற்கே கூடப் பங்கம் நேரிடச் செய்யும். அவ்வேளையில், பங்கம் விளைவிக்கும் முறைமை இழந்தவனைத் தண்டித்து ஒழிப்பதே நல்லறம் எனப் பறைசாற்றுவது ஒட்டுமொத்த மனிதத்திற்கே கேடு விளைவிக்கும்.

I look to a time when brotherhood needs no publicity; I look to a time when a brotherhood award would be as ridiculous as an award for getting up each morning.~Daniel D. Mich

1/28/2012

எழுமணி

காற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடை திறந்து
மாற்றினார் வாய்க்கால்! மறித்தார் நன்றே வடிகால்!
தென்னாடு செழிக்கக் கூத்தாடினோம் வைகைவளம் கண்டு!
பிரிட்டிசு கோமானே நீர் கொண்ட செல்வமெலாம்
ஈந்து கட்டினாயே முல்லைப் பெரியாறு!
தமிழரெலாம் தழைத்தோங்க ஆனாய் நீயே வரலாறு!!
image.png 
தென்னகக் குலசாமி பென்னிகுக்
************************************************************

கண்டறிவாய்எழுந்திரு நீஇளந்தமிழாகண்விழிப்பாய்!
அமெரிக்க செல்வச் சிறப்புமிகு வாழ்வுதனை உதறினேனே நானும்
கூடங்குளம் அணு உலை கூற்றம் எம்மண்ணைச் சுற்றி வளைத்திடவே
நானும் பூண்டேன் அறப்போர்தனை!
இதோ அணிவகுத்தார் எம்மக்கள் என்னோடு எனக் களம் புகுந்த
உதயகுமாரா! சோதரா!! நன்றே செய்யும் நீ அயராதே!!!
அகலும் தமிழ்நாட்டின் அல்லெல்லாம்!
 நாம் கொள்வோம் அறம்! அறம்!! அறம்!!!
Kumar
முனைவர் சு.பா.உதயகுமார்
************************************************************

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்
தமிழ் கொண்டோம்! அரசியல் கற்றோம்!!
புகுந்த நாட்டு மக்கள் மனம் புகுந்தோம் நற்செயலாலே!!
அமரவைத்தார் கனடிய நாடாளும் சபைதனிலே!
பகர்ந்திட்டோம் நம்நிலையை செந்தமிழ்ச் சொல்லாலே!
இன்னலது எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
அறச்செயலது எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்!!
இராதிகா சித்சபை ஈசன்

குறிப்பு: மிசெளரி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்காகப் படைத்தது!