12/31/2021

புத்தாண்டு நாளன்று செய்ய வேண்டியவை

1. பெற்றோர்/மூத்தோருடன் பேசுதல். இயலுமானால் அவர்களுடன் படம் எடுத்துக் கொள்தல்.

2. தன்னுடைய எடை, இரத்த அழுத்தம் முதலானவற்றைக் குறித்துக் கொள்தல்.

3. பல்மராமத்து, உடற்சோதனைக்கான தேதி, கடந்த முறை செய்ததின் விபரம் பார்த்தறிதல்.

4. டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விசா, கிரீன்கார்டு எக்ஸ்பைரி டேட், இன்சூரன்ஸ், கார் ரெஜிஸ்ட்ரேசன் முதலானவற்றை ஆய்வு செய்தல். அதற்கான புதுப்பிப்பு வேலைக்கான நாட்களை குறித்து வைத்துக் கொள்தல்.

5. திடீரென நம் இருப்புக்கு பழுது நேருமேயானால், குடும்பத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களைத் தொகுத்து டாக்குமண்ட் செய்து அவர்களின் கவனத்திற்குரிய இடத்தில் வைத்துக் கொள்தல்.

6. கணக்கு, வரவு செலவு, வரித்தாக்கலுக்கானவை, personal financing info தொகுக்கப்பட்டு, சென்ற ஆண்டு முதல்நாள், இன்றைய நாள் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தல், அடுத்த ஆண்டின் இலக்கினை வகுத்துக் கொள்ளல்.

7. பழைய உடுப்புகள், உடைமைகளைத் துப்புரவாக்கிக் கொண்டு, அடுத்த ஆண்டுக்கானவற்றை ஆயத்தப்படுத்திக் கொள்வது அல்லது திட்டமிட்டுக் கொள்வது.

8. கடந்த ஆண்டில் படித்த புத்தகங்கள்/பயிற்சிப் பணிகள்/பயணங்கள் (investment on self development), மீளாய்வு செய்து கொண்டு அடுத்த ஆண்டுக்கானவற்றைத் திட்டமிட்டுக் கொள்வது.

9. கடந்த ஆண்டின் நினைவுகளைப் போற்றக்கூடிய, படங்கள், காணொலிகள், எழுத்து விவரணைகள் முதலானவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திக் கொள்தல். கணினி/அலைபேசியை ஆர்கனைஸ் செய்து கொள்ளல்.

10. கடந்த ஆண்டுப் பயணத்தில் மனத்தாங்கல் ஏற்பட்டோரிடம் அளவளாவுதல், மன்னிப்புக்கோர வேண்டிய நபர்களிடத்தில் மன்னிப்புக் கோருதல், நன்றிக்குரியவர்களிடம் நன்றி கூறிக் கொள்தல்.

Coming together is a beginning; keeping together is progress; working together is success. வாழ்க்கைப் பயணத்தில் நாமனைவரும் ஒரேகாலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சகபயணிகள். இறங்கும் நேரம், இடம் வந்து விட்டால் அன்போடு பிரியக் கூடியவர்கள். உயர்வு தாழ்வில்லை. தனித்துவமானவர்கள். Winning and losing isn't everything; the journey is just as important as the outcome. ஆண்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகள். புன்முறுவலுடன் கைகுலுக்கிக் கொண்டு மனவூக்கத்துடன் முன்நகர்வோம். Happy new year ahead!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com, 12/31/2021, 7pm, Charlotte, NC, USA.

12/21/2021

When someone corrects you and you feel offended, you have a high ego

வணக்கம். கடைகளுக்குச் செல்கின்றோம், நூல்கள் வாசிக்கின்றோம், இணையத்தில் வாசிக்கின்றோம், அமெசானில் புராடக்ட் ரிவ்யூ எழுதுகின்றோம். என்ன நடக்கும்? சில இடங்களில் நமக்கு கிஃப்ட் கூப்பன் அனுப்புவார்கள். கடைகள் என்றால், வாங்கிய பொருட்களுக்குத் தள்ளுபடி அல்லது ரிவார்ட் பாயிண்ட்கள் கொடுப்பர். சர்வே படிவம் நிரப்பிக் கொடுத்தால் அதற்கான நேரம் செலவிட்டமைக்காகக் குறைந்தபட்சம் நன்றியாவது சொல்வர். சோசியல் மீடியாக்களில் தவறான, சமூகத்துக்கு ஒவ்வாதவனவற்றைச் சுட்டும் போது, நற்சான்று கொடுக்கின்றனர். ஆனால், இதையே நாம் ஒரு வாட்சாப் குரூப், கூகுள் குரூப் போன்ற இணையக் குழுமங்களில் செய்தால், மனத்தாங்கலை எதிர்கொள்ள நேரிடுகின்றது; குறிப்பாக, இந்தியக் குழுமங்களில். என்ன காரணம்?

1. பலபேர் முன்னிலையில் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, தமக்கு ஏதோ இழுக்கு நேர்ந்து விட்டது போன்ற எண்ணம்.

2. சுட்டிக்காட்டுபவர் தனக்கான மேட்டிமையைக் கட்டமைத்துக் கொள்கின்றாரெனும் எண்ணம்.

இவற்றுக்கு அஞ்சி அஞ்சியே, வாளாதிருந்துவிடும் சமூகமாக நாம் ஆகிவிட்டோம். உரையாடலுக்கு இடமில்லை. எங்கு உரையாடலுக்கு இடமில்லையோ அங்கு மனிதனுக்கான தன்னாட்சி இல்லை என்பதே பொருள். நினைத்ததைச் சொல்ல முடியவில்லையெனும் போது, அங்கு தமக்கான விடுதலை இல்லை என்பதுதானே? நினைத்தேன் என்பதற்காக, அவச்சொல், இழிசொல், அநாகரிகம், மலினம் போன்றவற்றைப் பாவிப்பதல்ல விடுதலையென்பது. ஒரு மாற்றுக்கருத்து, பிழையைச் சுட்டுதல் என்பதற்குக் கூட இடமில்லையானால் அது என்ன சுதந்திரம்?

பெரிய பெரிய பிரபலங்கள் டிவியில் தோன்றுகின்றார்கள். பேசுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். அவற்றிலே தென்படும் பிழைகளைச் சுட்டுவதிலே என்ன அநாகரிகம் இருந்து விடப் போகின்றது?பெரியார் ஈ.வெ.ரா பேசியதை ஜெயகாந்தனும், ஜெயகாந்தன் பேசியதை பெரியாரும் ஒரே மேடையில் விமர்சித்துக் கொண்டதைக் கொண்டாடுகின்றோம். விமர்சகப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன் என்பதாக வாசித்துத் தெரிந்து கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது, நான் எழுதியதில் இருக்கும் தவறினை ஒருவர் சுட்டும் போது நான் ஏன் சினம் கொள்ள வேண்டும்?

இது டிஜிட்டல் யுகம். எல்லாரும் உள்ளீட்டுக்காக ஏங்குகின்றனர். அதற்காக வித்தியாசமாகப் பேசிக் கவர வேண்டுமென்பதற்காக, ஆல்ட்டர்நேட் என்கின்ற பெயரிலே உறுதிப்படுத்தப்படாத, சான்றில்லாத, தன்கருத்துக்கு வளைக்கப்பட்டதெனப் பலதையும் மெய்யும் பொய்யும் கலந்து விட்டடித்துக் கொண்டிருக்கின்றனர். யுடியூப் காணொலிகளிலே பெருமளவு மிஸ்லீடிங், புரட்டும் திரிபும்தான் காணக்கிடைக்கின்றது. அவற்றைக் குழுவிலேயோ, அல்லது அலுவலகத்திலேயே காண்பிக்கப்படும் போது, அவற்றுக்குப் பின்னாலான கேள்வி பதில் நேரம் அமைய வேண்டும்.

சும்மா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிரலாம். பார்ப்போர் பாராட்டலாம் அல்லது பார்த்துவிட்டுச் சும்மா இருக்கலாம் என்பது மாந்தனுக்கு மேன்மையை ஒருபோதும் ஈட்டாது. அது ஒரு பொய்யான சூழலையே நமக்கு ஈட்டுத்தரும்.

முறையான வழியில் பேசுபொருளின்பாற்பட்ட கருத்தாக அது இருக்க வேண்டும்; பகிரும் தனிமனிதர் குறித்தானதாக இருந்திடக் கூடாது. இடப்படும் கருத்தினையும் அந்தத் தனிமனிதர் தனக்கெதிரானதாக நினைத்திடக் கூடாது. இவையிரண்டில் எது மேலிட்டாலும், அது அவருடைய அகந்தையென்பதே பொருள்.

Be open to criticism and keep learning.If someone feels afraid to tell you honest criticism, then you're never going to improve. -Cole Sprouse

https://www.linkedin.com/pulse/when-someone-corrects-you-feel-offended-have-high-ego-kishore-shintre

12/15/2021

போர் கொள்ளுமா 2022?

புவிசார் அரசியல் என்பதுதான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. வேறெதுவுமில்லை? ஏனென்றால் நிலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதது. பொருளாதாரம் மேலோங்க வேண்டுமென்றால் பொருட்கள் உற்பத்தி (manufacturing) செய்யப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட வேண்டுமென்றால், அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் (market) திரட்டப்பட்டாக வேண்டும். திரட்டப்பட்டவர்கள் பொருட்கள் வாங்க வேண்டுமேயானால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அவர்களைச் சென்றடைய போக்குவரத்துத்தடங்கள் (transportation) இருந்தாக வேண்டும். அந்தத் தடங்கள் அமைய வேண்டுமானால் அந்தந்த நாட்டுக்கான நிலப்பரப்பு ஏதுவாக இருந்திடல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் ஒன்று குறைந்தாலும், அந்நாடு வேறேதோ நாட்டுக்கு, உரிய கப்பம் கட்டித்தான் ஆக வேண்டும்.

வணிகப்போக்குவரத்து என்றால், அதிலும் கடற்போக்குவரத்து என்றால் அது அமெரிக்காதான். ஏனென்றால் இன்றளவும் 90% முக்கிய கேந்திரங்களின் ஆட்சி அமெரிக்காவிடம் உள்ளது. இவற்றுள் இன்னமும் ஒரு விழுக்காட்டினைக் கூட்டுவதில் முனைப்புக் காட்டுமேவொழிய குறைத்துக் கொள்வதில் எந்தவொரு நாடும் முனைப்புக் காட்டாதுதான்.

சோவியத் ரஷ்யா என்பது 1991ஆம் ஆண்டு பதினைந்து நாடுகளாகச் சிதறுண்டு போனது; இரஷ்யா, உக்ரைன், ஜியார்ஜியா, பெலாருசியா, உசபெக்கிசுதான், ஆர்மீனியா, அசர்பைசான், கசகஸ்தான், கிர்கிஷ்தான், மால்டோவா, துர்க்மினிஸ்தான், தஜகிஷ்தான், லாட்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா என்பனவாக. 1991 ஆகஸ்டு 24ஆம் நாள் சோவியத் அதிபர் கோர்பச்சேவ் பதவி விலகினார். அதேநாளில் உக்ரைன் தன்னைத் தனிநாடாகவும் அறிவித்துக் கொண்டது.

தன்னாட்சி பெற்றுக் கொண்ட நாடுகளில் பலவற்றிலும் சர்வாதிகாரிகளே ஆண்டு வருகின்றனர். சிலநாடுகள் கிழக்கு ஐரோப்பா என அழைக்கப்பட்டு, அவற்றுள் சில அமெரிக்காவின் தலைமையிலான நேசநாடுகள் அமைப்பிலும் உறுப்புநாடுகளாக இருக்கின்றன. அவற்றுள் உக்ரைனும் ஒன்று.

2014ஆம் ஆண்டு அப்போதைய உக்ரைன் பிரசிடெண்ட் விக்டர் யானுகோவிச் என்பார், ஐயோப்பிய யூனியனிலிருந்து விலகி இரஷ்யாவின் நேசநாடாக இருக்க முடிவெடுத்ததை முன்னிட்டு எழுந்த மக்களின் கிளர்ச்சியினாலே பதவியிழந்தார். உடனடியாக, உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை இரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்து ஆக்கிரமித்துக் கொண்டது இரஷ்யா. இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் நாட்டின் தொழில்வளப்பகுதியான டான்பாஸ் பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். ஏன்?

குளிர்காலம் வந்துவிட்டால் தனக்கெனத் துறைமுகம் எதுவும் அற்றுப் போய்விடும் இரஷ்யா. மற்றநாடுகளை நம்பித்தான் இருந்தாக வேண்டும். அதுவரையிலும் தனக்கேதுவான உக்ரைன் நாட்டுத் தலைவர் இருந்தபடியினாலே, கிரீமியாவில் இருக்கும் கருங்கடற்துறைமுகமான செவஸ்டோபோல் எனும் துறைமுகத்தைத் தன்வசம் கொண்டிருந்தது இரஷ்யா. இந்தத் துறைமுகம் உறைதன்மையினால் பாதிக்கக் கூடியது அல்ல. கூடவே கருங்கடலுக்கும் பாரசீகவளைகுடாவுக்குமான வாய்க்காலையும் தன் வசப்படுத்தியிருந்தது. இந்தத் துறைமுகத்துக்காகவேண்டியே கிரீமியாவைத் தன்வசப்படுத்திக் கொண்டது இரஷ்யா. முன்சொன்ன வாய்க்காலுக்கும் ஆப்பு வைக்க, துருக்கிநாடானது அமெரிக்காவின் ஒத்தாசையுடன் தனி வாய்க்காலை வெட்டிக் கொள்ளத் துவங்கி இருக்கின்றது என்பது தனிக்கதை.

கிரீமியாவிலிருந்து தரைவழியாகப் போய்வர வேண்டுமானால், அமெரிக்காவின் நேசநாடான உக்ரைன்நாட்டுக் கிழக்கெல்லையிலும் இரஷ்யாவின் மேற்கெல்லையிலுமாக இருக்கும் அந்த சிறு தரைவழிச்சாலையின் தயவு தேவையாய் இருக்கின்றது இரஷ்யாவுக்கு. ஆகையினாலே, அந்தச் சாலைக்கு ஒட்டியபடி இருக்கும் டான்பாஸ் பகுதி ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் மூலமாக அதனைக் கைப்பற்றத் துடிக்கின்றது இரஷ்யா. இதுவரையிலும் இந்த மோதலின் காரணமாக 14 ஆயிரம் பேர் உக்ரைனில் கொல்லப்பட்டு இருக்கின்றனர். நேசநாட்டின் பகுதி தம் பகுதி, அதற்கான பாதுகாப்புக்கும் நாங்களே பொறுப்புயென எதிராக இருக்கின்றன நேசநாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகள். இரஷ்யா தன் எல்லையை மேற்குநோக்கி விரிவாக்க ஏராளமான படைகளை நாளுக்கு நாள் அந்தப் பகுதியில் குவித்துக் கொண்டே இருக்கின்றது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற முறையிலே அந்தந்த நாடுகள் அணி சேரத் துவங்கியிருக்கின்றன.

இந்தியாவானது, அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்குமிடையே பொதுத்தன்மையுடன் இருக்கின்றது. சீனாவும் இரஷ்யாவும் எத்தகைய அளவுக்கு நெருங்குமென்பதைப் பொறுத்து, அமெரிக்கா இந்தியாயிடையேயான அணிசேரல் அமையும் என எதிர்பார்க்கலாம். இரஷ்யாவும் சீனாவும் நெருங்கிக் கொண்டால், சீனாவுக்கான பல கதவுகள் மூடப்பட்டுவிடுமெனச் சீனாவும் சிக்கலில் ஆழ்ந்திருக்கின்றது. இரஷ்யாவின் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அது இன்னமும் வலுப்பட்டால், இரஷ்யாவுக்குள்ளேயே உள்நாட்டுக் கிளர்ச்சிகள் தோன்றக் காரணமாகவும் அமையலாம். இரஷ்யாவை விட்டுக் கொடுத்து விட்டால், தமக்கான வலுவும் குறைக்கப்பட்டு விடுமோயென அஞ்சுகின்றது சீனா. தேசதேச உறவுகள் என்பது அப்படித்தான். ஒன்றை எட்டிப் பிடித்தால் இன்னொன்று கைவிட்டுப் போகும்.

தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!

https://www.npr.org/2021/12/14/1064018450/tensions-over-ukraine-come-as-relations-between-russia-and-nato-are-at-an-all-ti

12/13/2021

வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல்

If you avoid 
the conflict 
to keep the peace, 
you start a war inside yourself.

நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்து கிடத்தல், வாய்ப்பு கிடைக்கும் போது பொறணி பேசுதல், அல்லது பாசாங்காய் வாழ்ந்திருத்தல் என்பவை நம்முள் குடிகொள்ளும்.

உரசல் குறித்த நம் மனப்பாங்கு எப்படியெல்லாம் இருக்க நேரிடுகின்றது?

1. அதுவொரு சின்ன விசயம், நான்தான் பெருசா நினைக்கிறம் போலிருக்கு. 

2. என்ன செய்றதுன்னு தெரீல, ஆனா அது எனக்கு ஒப்புதலா இல்லை. 

3. நாம அதை சொன்னா, மத்தவங்க கோபப்படுவாங்க அல்லது நம்மளை கீழாக நினைப்பாங்க. 

4. நாம பேச வெளிக்கிட்டா, உறவு முறியக்கூடும்.

இவையெல்லாமுமே நாம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இவற்றுக்காக நாம் அந்த உரசல் குறித்தான பற்றியத்தைக் கைவிட்டு நகரந்தாலும், நம் மனம் அதனைக் கைவிடுவதில்லை; மாறாக உள்மனக்குரங்காக இருந்து கொண்டேவும் ஆட்டம் போடுகின்றது. இது போன்ற உள்மனக்குரங்குகள் ஒவ்வொன்றாகக் கூடிக் கொண்டே போகும் நிலையில், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடுமோயெனும் நிலையை எட்டிவிடுகின்றது மனம் . உணர்வுகள் அடக்கப்படுகின்றன வெளித்தோற்றத்துக்கு; ஆனால் உள்மன அழுத்தம் கூடிக்கொண்டேவும் இருக்கின்றது.

உரசல், மாற்றுக்கருத்து என்பது உள்ளபடியேவும் ஒரு நல்வாய்ப்பாகும். உறவுகளை மேம்படுத்திக் கொள்ள, அடுத்ததொரு நிலைக்கு எடுத்துச் செல்ல வழிகோலக் கூடியதாகும். அதையொரு தடைக்கல்லாகப் பார்க்காமல், அதில் இருக்கும் நன்மையென்ன, மாற்றுவழியென்ன என்பதைப் பேசி ஒருவொருக்கொருவர் இடையேயான நேர்மையை, வெளிப்படைத்தன்மையை மென்மேலும் கட்டமைத்துக் கொண்டே போகலாம் நாம்.

பேசிக் கொட்டிவிட்டால் இனி மறைப்பதற்கேதுமில்லை. ஓடித் திரியலாம் அந்த சின்னஞ்சிறு அணில்கள் போலே, தெருவோரத்து நாய்க்குட்டிகள் போலே!

1. என்ன பிரச்சினை? அதையொட்டிய உன் நிலைப்பாடு, உணர்வுகள்தாம் என்ன? எப்படி இருக்க வேண்டுமென நீ நினைக்கின்றாய்? திறந்த மனத்தோடு வா, பேசலாம். 

2. பொதுவெளியில் பேச விருப்பமில்லையா, தனித்துப் பேசலாமே? வா. 

3. நான் உன்னிடம் பணிகின்றேன். அதே போல நீயும் பணிந்துவிடு. பிரச்சினையைப் பேசுவோம், நீயும் நானும் நமக்குள் ஒருபொருட்டல்ல. 

4. நீ பேசு, நான் கேட்கின்றேன். நீ பேசி முடி, சத்தம் போடாதே. ஆனால் உன் உணர்வுகள் எல்லாவற்றையும் சொல், சொல்லி முடி, பிறகு நான் பேசுகின்றேன். 

5. பேசுபொருளுக்குள் மட்டுமே நேரத்தை செலவிடுவோம். எனக்குள் இருப்பது நீ. ஆகவே நான் பெறுவதெல்லாமும் நீ பெறுவதாகவே ஆகும். 

6. இடம், பொருள், சூழலுக்கும் நாம் பொருந்திப் போக வேண்டும். இருவருமே இணங்கி அதை நோக்கிச் செல்லத்தான் வேண்டும்.

இப்படி, அவரவர் வசதிக்கேற்ப வழிகள் ஆயிரம் உண்டு. அத்தனைக்கும் அச்சாரம் உரையாடல். உரையாடாமல் ஒரு நூலிடை கூட முன்னேறுவதில்லை நாம். அமைதி முக்கியம்தான். அமைதியாகவே இருந்து விட்டால் வாழ்வில் சூன்யமே மிஞ்சும்.

If you avoid the conflict with no conversations to keep the peace, you start a war inside yourself! பாரம்சுமந்துதிரியப் பிறந்தவரல்ல நாம், பேசித்தீர்த்துவிடு!!

-பழமைபேசி.

12/11/2021

மனித உரிமைகள் நாள்

மனித உரிமை என்றால் என்ன? இந்தப் புவியில் நான் பிறந்திருக்கின்றேன். எனக்கான ஆசைகளோடும் விருப்பங்களோடும் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கப்பட வேண்டும். அதுதான் ஒருவருக்கான மனித உரிமை. என் ஆசை என்பது, என் விருப்பம் என்பது பிறிதொருவரின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் உயிருக்கும் இடையூறாக அல்லாமல் இருந்திடல் வேண்டும். இதுதான் மாந்தநாகரிகம், மாந்தநேயம். இதற்கு மேல் எந்தப் புண்ணாக்கும் இல்லை; இல்லவே இல்லை.

ஆனால்? பணத்தாசை, மண்ணாசை, காம இச்சை, புகழாசை போன்றவற்றின் நிமித்தம் ஆதிக்கவாதமென்பது மாந்தன் தோன்றிய காலந்தொட்டேவும் இருந்து வருகின்றது. மனிதனின் அறிவுப்புலம் முதிர்ச்சி கொள்ளக் கொள்ள, மனித உரிமைகள் என்பதற்கான ஆவலும் நாட்டமும் வரையறையும் மிளிர்கின்றது. அது அறிவுப்புலத்தில் கனிந்த கனி. அந்தக் கனிக்கு ஊறு நேர்ந்து மாந்தநேயத்தில் என்றுமில்லாத அளவுக்குப் புழுக்கள் பூத்து நெளிந்து கொண்டிருக்கின்றன. ஆமாம், புழுத்துப் போய்க் கொண்டுதான் இருக்கின்றது மாந்தநேயம்; போலிச்செய்திகள், ஃபேக்நியூஸ் எனும் வடிவில் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன அவை.

ஃபேக்நியூஸ் என்று சாடுவதைக் கண்டதுமே எதிர்வினைகள் பிறக்கின்றன. இது காலகாலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று என்ன புதிதாக? இப்படியெல்லாம் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. என்ன காரணம்? ஏதோவொரு விதத்தில் அப்படியான ஃபேக்நியூஸ்களை நாமும் விரும்புகின்றோம் என்பதுதான் அதன் பொருள்.

காலாகாலமாகவே பொய், புரட்டு, திரிபுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அல்லாவிடில் மொழியில் இச்சொற்கள் இடம் பெற்றிருந்திருக்காதுதான். ஆனாலும் மாந்தவுரிமைகளுக்கான பேரவலமாக ஃபேக்நியூசைச் சொல்ல வேண்டிய தேவை எங்கேயிருந்து, ஏன் வருகின்றது?

என்றுமில்லாத அளவுக்குத் தகவற்தொழில் நுட்பம் தற்போது உச்சத்தில் இருக்கின்றது. அதன்காரணமாக மூன்ற் கோணங்களில் பன்மடிப் பெருக்கமாகப் பெருவேகத்துடன் பாய்ந்து சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ஃபேக்நியூஸ்கள். அடுத்த நொடியில் உலகமெங்கும் சென்று சேரக்கூடிய வேகம், அனுப்பும் செய்தியின் அளவு, செய்தியின் வீரியம், சென்று சேரக்கூடிய மக்கட்தொகையென எல்லாப் பண்புகளிலுமே அளவீடுகள் பெருகியிருக்கின்றன. New technologies and means of communication have meant that false information can now be spread at a faster, more alarming rate than ever before. எனவேதான் ஃபேக்நியூஸ்கள் நமக்குப் புதியதொரு பெருங்கேடாகத் தெரிகின்றது. எதிர்வினையாற்றுவாருக்குத் தெரியாத விசயமல்ல இது. அவற்றுக்கு இரையாகிப் போனதன் விளைவு அவர்களை அப்படிப் பேச வைக்கின்றதென்பதாகவே நாம் அதனைக் கருத வேண்டியிருக்கின்றது.

இப்படியான ஃபேக்நிவீஸ்கள், மக்களை முட்டாள் ஆக்குகின்றன. பொய் பேச வைக்கின்றன. மூடிமறைப்புக்கு ஆளாக்குகின்றன. முறையற்ற புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிக்கின்றன. மக்களைப் பிளவு படுத்துகின்றன. பகைவர்களாக ஆக்குகின்றன. ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் நைச்சியமாகக் கட்டமைக்கின்றன. உயிர்களைக் காவு வாங்குகின்றன. But why aren’t people angrier about the segregation, lies, cover-ups, misleading figures, division, hypocrisy and coerced medical procedures which ignore basic human rights? அணு ஆயுதம் பேரழிவு என்கின்றோம். ஆனால் அதனினும் கூரியப் பயங்கரவாதம்தான் இந்த ஃபேக்நியூஸ்கள். அடுத்த வேளை நீங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அது தீர்மானிக்கும். கணவன் மனைவியைப் பகைகொள்ள வைக்கும். மனைவிக்கு கணவனை எமனாக்க வைக்கும். நீங்கள் காண்கின்ற காட்சியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். செவிமடுக்கின்ற ஒலியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். எதையும் எதிர்க்கேள்வி கேட்டுப் புலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் தேவை பலவாகப் பெருகியிருக்கின்றது.

அறிந்தோ, அறியாமலோ அவற்றை நமக்கு அனுப்பி வைப்பர். நாமும் அவ்விதமே அறிந்தோ அறியாமலோ பிறருக்கு அனுப்பி வைப்போம். காசு, பணம் கட்டிப் பரப்புரைகள் வாயிலாக இடையறாது புகட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இவை. மனிதனுக்கு பொருளாதார, சமூக உரிமைகளை நிலைநாட்டவல்ல தேர்தல்களிலே ஃபேக்நியூஸ்கள். மருத்துவ உரிமைகளைப் பெறுவதிலே வளைக்கப்பட்ட செய்திகள், தகவல்கள். சமூக இணக்கத்தைச் சீர்குலைப்பதற்கென்றே சாதி, சமயம், மொழியின்பாற்பட்ட அவதூறுகள், ஃபேக்நியூஸ்கள். இப்படியானவை மக்களைத் தொடர்ந்து கொதிநிலையிலே, கொந்தளிப்பிலே, ஆர்ப்பரிப்பிலே உணர்வுக்கடலில் மூழ்கிக் கிடக்க வைக்கின்றன.

சமத்துவம், தன்னுமை, அமைதி, மனவுறுதி, சட்டத்தின் ஆட்சி, அறம்போற்றுதல், உழைப்பு ஆகியனமட்டுமே மனிதனை மனிதனாக்கும்; அழகாக்கும். இவற்றுக்குக் கேடு விளைவிக்கின்ற வேறெதுவும், மாந்த உரிமைகளுக்கு வழிவகுக்காது. மாந்தனாயிருக்க, ஃபேக்நியூஸ்களை வெறுத்தொதுக்கச் சூளுரைப்போம்! The idea of cultural policing is nothing but an excuse to violate human rights! Dare to counter fake news!!

-பழமைபேசி, டிச 10, 2021.

10/06/2021

வாதம் பிரதிவாதம் விவாதம்

அமெரிக்காவில், கதைகள் ஆய்வு, கருத்தாடு மன்றம் போன்றவையெல்லாம் இரண்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. என்னடா இவன் எப்போது பார்த்தாலும் அமெரிக்கா, அமெரிக்காயென்று சொல்லியே பேசுகின்றான் என்றேல்லாம் ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை. மாறாக, உரிய தரவுகள், சான்றுகள் கேட்டால் அளிக்க முற்படுவேன்.

https://schools.cms.k12.nc.us/communityhouseMS/Pages/CHMS-Clubs.aspx தற்போதைக்கு, மகளார் படிக்கும் இந்தப் பள்ளியின் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பொருட்டுத்தான், குழந்தைகளுக்கும் முதன்தலைமுறைக் குடிவரவுப் பெற்றோருக்குமான இடைவெளி நேர்கின்றது. அவர்கள் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு கொண்டிருப்பார்கள். அந்த மதிப்பீடு மேம்பட வேண்டுமானால் இவற்றையெல்லாம் நாமும் அறிந்து கொள்வது அவசியம்.

வீட்டில் பேசுகின்றோம். ஆன்லைனில் உரையாடுகின்றோம். உணர்வின் அடிப்படையில் செயற்படுவது ஒருவிதம். நுட்பங்கள் அறிந்த நிலையில் செயற்படுவது ஒருவிதம். நம் கருத்தாடலைப் பார்த்து, நம் குழந்தை நம்மைக் கேலி செய்யக் கூடும். ஆனால் குழந்தை கேலி செய்வதைக் கூட அறிந்திராத நிலையில் நாம் இருப்போம். ஏனென்றால் அவர்கள் குறிப்பிடும் ஆங்கிலப்பதத்தின் விபரம் நமக்குத் தெரிந்திருக்காது. ஆகவே வாத விவாதங்களில் முன்வைக்கப்படும் முறை சரியானதாக இருந்திடல் வேண்டும். ஏரணமற்ற வாதங்கள் எத்தகையது?

1.திரிபுவாதம் (Straw Man Fallacy): வாதத்தை திரித்துக் கொண்டு போவது அல்லது மேலெழுந்தவாரியாக எடுத்துக் கொண்டு பேசி, பேசுபொருளை வலுவிழக்கச் செய்வது.

”அடுத்தவாட்டி யுடியூப்ல இருக்கிறமாரி செய்து பார்க்கணும்!” “அப்ப நான் வெச்சிருக்கிற குழம்பு உங்களுக்குப் பிடிக்கலை; நல்லா இல்லை; அப்படித்தானே? இந்த 8 வருசமா எதையும் சொல்லலை. இப்ப என்ன திடீர்னு? எதா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க!”

2.மந்தைமனோபாவவாதம் (Bandwagon Fallacy): சொல்லப்படும் கருத்துக்கு ஏதுவாக ஆட்களைக் கொண்டமைத்துப் பேசுவது அல்லது பெரும்பான்மை ஆதரவு என்கின்ற ரீதியில் பேசுவது. எங்கே ஆதரவு கூடுமானதாக இருக்கின்றதோ அதுதான் சரியானதாக இருக்கும் என நினைத்து மற்றவரும் சேர்ந்து கொள்ளும் இயல்புடையது இத்தகைய வாதம். எல்லாரும், அல்லது பெரும்பான்மை என்பதாலேயே எடுத்தியம்பும் கருத்து சரியென்றாகி விடாது.

”இங்க இருக்கிற எல்லாருமே சொல்றாங்க. அப்புறமென்ன நீ மட்டும்? கர்நாடகாவில்தான் பெட்ரோல் விலை குறைவு”

3.பிரபலத்தன்மைவாதம் (Appeal to Authority Fallacy): சமூகத்தில் வசதி படைத்தவர், விஐபி, பிரபலம், செலிபிரட்டி, பிரின்சிபல், ஆசிரியர், இப்படி யாராவது ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசிய மாத்திரத்தில் அது சரியானது என்றாகிவிடாது.

“போன மாசம் அப்படி ஆயிருச்சேங்றதுக்காக நாம திருத்தம் செய்யணும்ங்றது இல்லை. சரவணன் சொல்றாரே? அவர் சொன்னா சரியா இருக்கும்!”

4. அச்சுறுத்துவாதம் (False Dilemma Fallacy): அச்சுறுத்தி, பொய்மையைக் கட்டமைத்து பேசுபொருளுக்குக் கடிவாளம் இடுதல்.

“அப்பா சொல்றபடி செய்யலாம்; இல்லன்னா தெருவுல பிச்சை எடுக்க வேண்டியதுதான் எல்லாருமா!”

5.பொதுமைவாதம் (Hasty Generalization Fallacy): எதையும் ஓரிரு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு எல்லாமுமே அப்படித்தான் எனப் பொதுமைப்படுத்தி பேசுபொருளை மட்டையாக்கிவிடுவது.

“துளசி தின்னு தொண்டைவலி அவனுக்கும் நல்லாயிருச்சி. இவனுக்கும் நல்லாயிருச்சி. ஆகவே துளசி தின்றால், தொண்டை வலி பூரணமாகக் குணமாகிவிடும்”.

6. தவிர்ப்புவாதம் (Slothful Induction Fallacy): உரிய சான்றுகள், ஏரணம் இருந்தாலும் கூட, அவற்றையே நீர்த்துப் போகச் செய்து பேச்சைக் கடத்திக் கொண்டு போவது.

“போனவாட்டி முதல் பத்துல வரலைதான். இப்ப இன்னமும் 2 கிலோ எடை கூடியிருக்குதான். அதுக்காக டீம்ல இருந்து வெளியேத்திட முடியுமா? அதனாலேயே இந்தவாட்டி வெல்லுறதுக்கு இடமில்லைன்னு முடிவு கட்டிறமுடியுமா??”

7.உடன்நிகழ்வுவாதம் (Correlation Fallacy): அதே இடம், சூழல், தருணத்தில் நிகழ்ந்தவொன்றைக் காரணம் காட்டி நிறுவ முற்படுவது.

“அன்னிக்கி நான் நீலக்கலர் சேலைதான் கட்டி இருந்தன். இதுக்கு முன்னாடியும் நோட் செய்திருக்கன். எப்பல்லா நீலக்கலர் ட்ரஸ்ல இருக்கணோ, அந்த எக்சாம் மார்க் கொறவுதான். நீலக்கலர் டிரஸ் எக்சாமுக்கு நல்லதில்லை”

8. நிறுவுசிக்கல்வாதம் (Burden of Proof Fallacy): ஏதாகிலும் ஒன்றை மெய்யெனச் சொன்னால், சொல்பவர்தாம் அதை மெய்ப்பிக்க வேண்டும். உன்னால் பொய்யென நிறுவ முடியவில்லையல்லவா, அப்படியானால் அது மெய்யென வாதிடுவது.

“அமாவாசையன்று பொறந்தவன் திருடனாக அல்லாமல் இருக்கவே முடியாது”

9. சேர்ந்திழுப்புவாதம் (Tu quoque Fallacy): ஒன்றைச் சொல்ல முற்படும்போது, பிறிதொன்றைக் காரணம் காட்டி சொல்ல வந்த கருத்தை மட்டையாக்கிவிடுவது.

“எந்த சூழலிலும் மறுகரைக்குச் செல்வது அவசியம். முகேசுக்கு நீச்சல் தெரியாது; எனவே....” “உனக்கு மட்டும் நீந்தத் தெரியுமாயென்ன?”

10.குழப்புவாதம் (Red Herring Fallacy): தொடர்பில்லாத கருத்துகளை வேகமாக அடுக்கி பேசவந்த கருத்தை மட்டையாக்கிவிடுவது.

“அந்தக் கதவு இப்ப சரி செய்றதுக்கு இல்ல; இப்படித்தான் மரக்கடைக எல்லாம் கொள்ளையடிக்கிறாங்கன்னு அவங்க சொல்லப் போயி, அது உண்மையில்லையாம். மரக்கடக்காரங்கெல்லாம் சேர்ந்து சொன்னாலும் அது மரக்கட இரும்புக்கடைங்ற பிரச்சினையாகி, கலெக்டர் வந்து, அந்த கலெக்டர் அப்பாயிண்ட்மென் செய்ததே செரியில்ல, அவன் எப்படி செரியாப் பேசுவான், ஆனாலும் அவன் வந்து...”

11.கழிவிரக்கவாதம் (Appeal to Pity Fallacy): அனுதாபம் ஏற்படும் வகையில் ஏதோவொன்றைச் சொல்லி பேசுபொருளைக் கடத்திச் செல்வது.

”நீங்க என்னோட நிலைமையவும் யோசிச்சுப் பார்க்கணும். கை அடிபட்டு இருக்கு. கூடவே தலைவலியும். அதிலயும் எழுதி 87 மார்க் வாங்கி இருக்கன். ஒருவேளை அப்படியான நெலம எனக்கு இருந்திராவிட்டால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே, A+ கிடைக்கக் கூட 3 மார்க் கொடுக்கிறதுல என்ன பிரச்சினை? ”

12. பொருள்மயக்கவாதம் (Equivocation Fallacy): ஏதோவொரு சொல், பழமொழி, சொலவடை, பாட்டு, ஏதாகிலும் ஒன்றைச் சொல்லி பேசுபொருளின் திசையை, பொருளை மாற்றிவிட்டு மட்டையாக்குவது.

“உங்க கட்சி பணத்தை மான்யங்களுக்குச் செலவிடும் சொல்லி இருக்கு. நம்ம பணம் வீணாகும். ஆனா எங்க கட்சி, ஃப்ரீஸ்கீம் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தப்போகுது, அதுபோக சொச்சோபுச் திட்டங்களும் வரப் போகுது”

13.நட்டயீட்டுவாதம் (Sunk Cost Fallacy): ஏற்கனவே ஏற்பட்ட இழப்பைக் காண்பித்தே பேசுபொருளை அழித்தொழிப்பது.

“எதிர்பார்த்த அவுட்புட் இல்ல, அதுக்காக இப்ப அதையெதுக்குக் கைவிடணும்? ஏற்கனவே 80%, 7 கோடி ரூபாய் செலவு செய்தாச்சி. இன்னும் 2 கோடிதானே?? செய்து முடிச்சிடலாம்!”

14.இயல்புநிலைவாதம்( Causal Fallacy): எதார்த்தங்களைக் கொண்டே பேசுபொருளை மட்டையாக்குவது.

“எப்ப சூரியன் வருது? கோழிகூவுனதும் சூரியன் வருது. அப்ப இந்த உலகத்தின் போக்குகளைக் கணிக்கவல்லது சேவற்கோழிகள். அதனாலதான் உலகம் முழுக்கவுமே சேவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால சேவல் ஆராய்ச்சிக்கே கூட செலவு செய்யாத பணத்தை, அந்தத் திட்டத்துக்கு செலவு செய்றது வீண்”.

15. சொன்னதுகூறல்வாதம் (Circular Argument Fallacy): சொல்லப்படும் கருத்தையே சொல்லப்படும் கருத்துக்குச் சான்றாகக் காட்டுதல்.

“நான் திறமையானவன். ஏன் அப்படிச் சொல்றன்னா, திறமையான மூளையக் கொண்டு செயற்படும் ஆற்றல் எனக்கிருக்கு. அதனாலதான் நான் சொல்றன், நான் ஒரு திறமையானவன்னு!”

நம் குழந்தைகள் நாம் பேசுவது, முறையிடுவது, அறைகூவல் விடுப்பது, கொந்தளிப்பது கண்டு, இவற்றுள் ஏதொவொரு பதத்தைக் குறிப்பிடலாம். ‘it doesn't make any sense, playing with red herring, trying to put words on my mouth' போன்ற சொல்லாடல்களைப் பாவிக்கலாம். அப்படியான சொல்லாடல்கள் இடம் பெறும் போதெல்லாம், நம் மதிப்பீட்டில் ஒரு புள்ளி குறைகின்றதென்பதே பொருள். உஷாரய்யா உஷாரு!!

4/04/2021

வெற்றி இரகசியம்

தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன இவ்விரு கட்சிகளும். சராசரியாக வாக்குச்சாவடி ஒன்றுக்கு ஆயிரம் வாக்காளர்கள். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குமான வாக்குச்சாவடிகள் தோராயமாக 250. தற்போதை நிலவரப்படி, எல்லா சாவடிகளிலும் இவ்விரு கட்சிகளுக்கும் சாவடிக்குழுக்கள் உண்டு. வேறெந்தக் கட்சிக்கும் இத்தகைய அமைப்பு இல்லை.

வெற்றி தோல்வி என்பது இக்குழுக்களுக்கு இல்லை. இயன்றமட்டிலும் தத்தம் தரப்புக்கான வாக்குகளைக் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்பதுதான் இலக்கு. அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாவடிக்குழுவிலும் 70 பேர் வரையிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் 30 பேர் வரையிலும் பெண்கள். இவர்கள், தலா பத்து வாக்காளரைச் சென்று சந்தித்தல், தொடர்ந்து தொடர்பில் இருத்தல் போன்றவற்றைச் செய்வர். திமுகவைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குழுவிலும் 15 பேர் வரையிலும் இருக்கின்றனர். ஒவ்வொரு குழு உறுப்பினரும் 100 பேர் வரையிலும் சென்று சந்திக்க வேண்டும்; தொடர்பில் இருக்க வேண்டும். தத்தம் பங்கில் இருக்கின்ற வாக்காளரின் நல்லன கெட்டன எல்லாவற்றுக்கும் இவ்விரு கட்சியிலும் இந்தக் குழுவே பொறுப்பு.

திமுக வாக்குச்சாவடிக் குழுவில் ஒரு ஒருங்கிணைப்பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருவர் பெண்), எஞ்சிய 12 பேருள் 5 அல்லது 6 பேர் பெண்களாக இருக்கின்றனர். தேவையின் பொருட்டு அவ்வப்போது தற்காலிகப் பணிகளுக்கென கூடுதல் உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களின் தலையாய பணி, வாக்காளர் பட்டியல் பராமரிப்பு, வாக்காளர் சேர்ப்பு, சரிபார்த்தல், சாவடி முகவர் பணிகள், வாக்காளர் அட்டை பெறுதல், கட்சித் தகவற்தொடர்பு என்பதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருவர் அந்தந்த பகுதி தகவற்தொழில் நுட்பக்குழு(IT) உறுப்பினராகவும் இருப்பர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், கட்சிசார்பு கண்டறிய முடியாதவர்களாக ஒரு சில நூறு வாக்காளர்களே இருப்பர். அந்த அளவுக்கு இவ்விரு கட்சிக் குழுக்களிடம் தரவுகள் இருக்கும். வாக்குச்சாவடிக் குழுக்களுக்கென பிரத்தியேக வாட்சாப் குரூப்களும் உண்டு. அவர்கள் இயன்றமட்டிலும் வாக்காளரின் எண்களையும் சேகரம் செய்து வைத்திருப்பர். தொடர்ந்து, பிறப்பு, இறப்பு, கோவில் விழாக்கள், பொது விழாக்களென தத்தம் பங்கு வாக்காளர்களிடம் தொடர்பில் இருக்கும் போது தகவல்களைச் சேகரம் செய்து கொண்டே இருப்பர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அலுவல், சுகதுக்கங்களென எதற்கும் இவர்களைச் சென்று பார்க்கும் வகையில் இவர்கள் அந்தந்தப் பகுதியில் விளங்குவர்.

குழுவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் குறைந்தது நான்கு அல்லது ஐந்து தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பர். அந்தந்தப் பகுதியின் சாதி அமைப்புக்கொப்பவும் குழுவின் அமைப்பு இருக்கும். தனிப்பட்ட வேலைகளுக்காக இவர்களை அணுகுபவர்கள் அந்தந்தப் பணிகளுக்கேற்ப உகந்த தொகை வழங்குவது உண்டு. அதை எவரும் இலஞ்சமாகக் கருதுவதில்லை. தன்னுடன் பயணித்து வந்து, உடனிருந்து, தேவையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்கான ஊதியமென்பதாகவே கருதப்படுகின்றது. ஊரக மக்களின், பாட்டாளிகளின் யதார்த்தம் அப்படித்தான். அவர்களுக்கும் குடும்பம், தேவைகள் இருக்கின்றன என்பதான புரிதல். சமூக அறம்!

குடிமைப்பணிகள் என்பன இப்படித்தான். தேர்தல் காலத்தின் போது மட்டும் உரக்கப் பேசி உலா வருவது மட்டுமேயல்ல. இப்படியான பொதுப்பணியாளரைக் கண்டால் ஒரு சிரிப்பைக் கொடையாகத் தாருங்கள். இயன்றால் நாமும் சேர்ந்து பங்களிக்கலாம். சமூகத்தைச் செம்மைப்படுத்தலாம். சோசியல் மீடியாவில் வெற்றுக்கூச்சல் போடுவதிலோ, ஃபேக்நிவூசுகளைக் கண்மூடித்தனமாகப் பகிர்ந்து சுய இன்பம் கொள்வதிலோ இல்லை நம் கடமை. வாழ்க ஜனநாயகம்!!

#தேர்தல்ஜூரம்

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

3/01/2021

உர்வாக்வா

உடல் உழைப்பை ஈந்து வாழ்பவன் கடைக்கோடி மனிதன். ஏச்சுப்பிழைப்பதோ, பேசிப்பிழைப்பதோ அவனுக்குத் தெரியாது. விடிந்ததும் புறப்பட்டு விடுவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழைத்துப் பிழைப்பதே வாழ்க்கை, பிழைத்துப் பிழைத்து உழைத்திருப்பதே நோக்கமென்பது மட்டுமே.

பிழைத்திருக்கும் பொழுதில் குழந்தை குடும்பமென வாழத்தலைப்பட்டான். அப்படியான வாழ்வின் ஒரு கணத்தில் குழந்தைகளுக்கும் குடும்பத்து ஆட்களுக்கும் இயற்கை உபாதைகள் ஏற்படுவதைக் கண்டான். ஒவ்வொரு கோளாறுக்கும் ஒரு மாற்றுவழி, நிவாரணமும் பிடிபட்டது. அப்படித்தான் மலச்சிக்கல் ஏற்படுவதையும் கண்டான். நிவாரணமாக, சூடான தண்ணீர் குடித்த மாத்திரத்தில் இளக்கம் கண்டதையும் உணர்ந்தான். ஆக, சூடான தண்ணீர் மலமிளக்கி என இனம் கண்டுகொண்டான். இதைப் போலத்தான், உழைப்பின் அயர்ச்சி, எதிர்பாராத இழைப்புகள், சோர்வு முதலானவற்றின் நிமித்தம் மனம் சோர்வு கண்டு, சோகை கொண்டு சிக்கலுக்குள் ஆழ்ந்து போவதை உணர்ந்தான். மலமிளக்கியைப் போல, மனமிளக்கியையும் கண்டு கொண்டான்.

மேற்கத்திய நாகரிகத்தில் சோசியல் டிரிங்க்கிங் என்றார்கள். கீழைநாடுகளில் உண்டாட்டு, கூத்து, கும்மாளக்கூடல் எனச் சொல்லிக் கொண்டார்கள். இதன் அடிப்படை யாதெனில், மனமிளக்கம் கண்டு ஒருவருக்கொருவர் மனத்தால் அன்பு பூண்டு இறுக்கம் களைந்து வருத்தம் ஒழிப்பது மட்டும்தான். ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் காடு கழனி வேட்டை எனத் தத்தம் பாடுகளுக்குச் செல்ல முற்பட்டனர். ஒருபோதும் சோம்பிக்கிடக்க நினைப்பதில்லை அவர்கள்.

வீட்டுப் பிறவடையில் கழிநீர் ஈரத்துக்கு வாழைமரங்களை நட்டு வைத்தான். கன்று வளர்ந்து ஈன்று ஒரு தூர் பலதூர்களாக ஆகின. ஒவ்வொரு மரமும் குலை தள்ளின. குலைகளைப் பார்த்து மகிழ்ந்தான். இத்தனையைம் நமக்கே நமக்கா யோசித்தான். கூட்டம் கூட்டமாக வாழப்பிறந்தவன் மாந்தன். கூட்டம் கூட்டமாய் ஊர்ந்து ஊர்ந்து சென்று, நீராதாரம் இருக்கின்ற இடங்களிலெல்லாம் தாவளங்களைப் போட்டான். ஊர்ந்து சென்றடைந்த அந்த இடங்களெல்லாம் ஊர்களாயின. ஊர்களுக்குள்ளே வாழைகள் குலைகள் தள்ளின. குலைகளின் காய்கள் முதிர்ந்த நாளொன்றில் ஊரையே அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு ஊர்மக்கள், சின்னஞ்சிறுசுகள், பொட்டுபொடுசுகள் எல்லாரும் வந்தார்கள். ஆளும் ஆளும் சேர்ந்தால் பாட்டும் இசையும் ஆட்டமும்தானே? ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

இதற்கனவே நீட்டு தாளியொன்றும் இருந்தது. குலை வெட்டப்பட்டது. தோல்நீக்கிய காய்களையெல்லாம் தாளியில் இட்டனர் மக்கள். கொஞ்சமாய் நீர் ஊற்றினர். அதற்குள்ளாக இருவர் சென்று, காடுகரையில் இருந்து, பன்றிப்புல் ஒரு கற்றை பிடுங்கிக் கழுவி வந்தனர். அந்தக் கத்தையில் இருந்து சிலபிடி பன்றிப்புல்களை எடுத்து வாழைக்காய்களின் மீதிட்டுக் கைகளால் பிசைந்து மசித்தனர். சிலபல குலைக்காய்களாக இருந்தால் மிதித்து மிதித்து மசித்தனர். பாடல்களும் இசையும் ஊக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

மூங்கிற்படல், நாணற்படல் கொண்டு மசித்த குழம்பை வடிகட்டிச் சுரை புருடைகளில் ஊற்றிக் கொண்டனர். ஊற்றிக் கொண்டிருக்கும் போதே மூதாட்டி ஒருவர், இராய்க்கல்லில் அரைத்த சோளமாவு ஒரு கைப்பிடி கொண்டு வந்து கொடுத்தார். அந்த சோளமாவினைச் சுரைபுருடைக்குள் இட்டு வைத்தனர். சோளமாவுக்குள் இருந்து ஈசங்கள் பிறந்து வாழைப்பழக் குழம்பினை உண்டு செரித்தது. ஆனந்தம் ஒவ்வொரு மனத்தையும் உடைத்துக் கொண்டு கொப்புளித்தது. சுரைபுருடையில் இருந்த கள்ளினை மொந்தையில் ஊற்றி மாந்தி மகிழ்ந்தனர் மக்கள். காங்கோ, ருவாண்டா முதலான நாட்டு மக்கள் அதற்கு உர்வாக்வா எனப் பெயரும் இட்டுக் கொண்டனர். மது என்பது மனமிளக்கி, முறைகேடாய்ப் பாவிப்பதற்கன்று. உர்வாக்வா!!