Showing posts with label ஆறை நாட்டானின் அலம்பல்கள். Show all posts
Showing posts with label ஆறை நாட்டானின் அலம்பல்கள். Show all posts

10/27/2009

ஒடுவங்கந் தலையக் கண்டா ஓடிப்போ!

ஏங்க, புனைவும் தனையுமாவே இருக்க முடியுமாங்க ஒருத்தன்? பல நூல்களை வாசிக்கத்தான் வேணும். அப்பத்தானே வந்த வழி தெரியும்?? படிக்கிறோம். படிச்சதுல பிடிச்சது எதுவோ அதுல, தனிப்பட்ட அனுபவத்தையும் கலக்குறோம்; அதை மத்தவங்க பார்வைக்கும் வைக்குறோம்! அதுல என்ன தப்பிதம் இருக்க முடியும்? என்ன, ஒன்னும் புரியலையா? அப்ப சரி, வாங்க மேல படிக்கலாம்!

ஒரு நாள், வெங்கடேசன் எங்க நிறுவனத்துக்கு வந்திருந்தார். அவர் பெரிய நிர்வாகி! கோயமுத்தூர் நிறுவனம் ஒன்னுல தொழில்நுட்ப இயக்குனர் அவரு. அதே நிறுவனத்துல, அன்னூர்ப் புளியம்பட்டியச் சேர்ந்த பாலகிருஷ்ணனும் வேலை செய்துட்டு இருந்தாரு. அவர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி. அதே நிறுவனத்துல, இழை உருளிப்(flutted rollers) பிரிவுக்கு முதன்மைப் பொறியாளன்(Foreman) நானு.

அந்த இயக்குனர் வெங்கடேசன் இருக்காரே, பெரிய கெடுபிடியான ஆளும் கூட. அதட்டுவாரு, முறைப்பாரு, அதுன்னுவாரு, இதுன்னுவாரு, எல்லாரும் அவரைக் கண்டா அப்படிப் பம்பு பம்புன்னு பம்புவாங்க. அந்த காலகட்டத்துல, நாந்தான் அந்த நிறுவனத்துலயே வயசு குறைஞ்ச, மீசை கூட முளைக்காத ஆள். என்னைக் குழந்தைன்னுதான் கூப்பிடுவாங்க, இப்பவுங்கூட. அதே ஒரு பேருன்னும் ஆயிப்போச்சு, கூட வேலை செய்த சக அலுவலர்கள் மத்தியில.

இப்படிதாங்க ஒரு நாள் வெங்கடேசன் வேக வேகமா வந்து, எனக்குப் பாத்தியப்பட்ட வேலையிடத்துல நின்னுட்டு, மறுகோடியில இருக்குற என்னை ஆட்காட்டி விரலால் பின்னாடிச் சுண்டிச் சுண்டிக் கூப்ட்டாரு. அதைப் பார்த்த நான், அன்ன நடை போட்டுப் போனதைப் பார்த்ததும் மனுசன் மகாக் கோவப்பட்டு, You, Young Old Man, Can't you come bit faster?ன்னு, எனக்குக் கீழ வேலை செய்யுறவங்க முன்னாடியே கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாரு.

அப்புறம், எதோ அவருங் கேட்க நானுஞ் சொல்ல, மனுசன் கத்திட்டு அந்தப் பக்கமாப் போயிட்டாரு. ஆனாப் பாவம், அந்தப் பக்கமா, கதிர்கள்(Spindles) பிரிவுல நம்ம ஒடுவங்க நாட்டு அண்ணன், அதாங்க அன்னூர்ப் புளியம்பட்டிக்காரரு இருக்குறது தெரியலை அவருக்கு!

அவர் பலே கில்லாடிங்க! இவர் வர்றது தெரிஞ்சதும், எங்கயோ இருந்த அவர் இவரைத் தேடி ஓடி வந்தாரு. வந்ததும் வராததுமா, ’வெங்கடேசன், நானே உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். போனதடவை நீங்க உலா வரும்போது சொன்னேனே, அந்தக் காரியம் இன்னும் ஆகலை, அதான் என்ன ஆச்சுன்னு கேட்கலாமுன்னு இருந்தேன்!’ அப்படீன்னாரு.

நாங்களா, அதைக் கேட்டு சிரிக்கவும் முடியாம, அடக்கி வைக்கவும் முடியாமத் திணறிப் போயிட்டோம். இயக்குனர் பெருமகனாருக்கு வந்தது பாருங்க கோபம், ’என்ன நீ? பேர் சொல்லிக் கூப்புடுறே?? அதுவும் இத்தனை பேர் சுத்தியும் நின்னு வேலை பார்த்துட்டு இருக்காங்க?!’ அப்படீன்னு ஆய் ஊய்ன்னு குரல் கொடுத்தாரு!

நம்ம ஒடுவங்க நாட்டுக்காரரு கொஞ்சங்கூடப் பதற்றப்படாம, ‘உங்க பேரு வெங்கடேசன்தான? மாத்திட்டீங்களா, யாருஞ் சொல்லவே இல்லியே??’ங்கவும், சுத்தி இருக்குறவங்க எல்லாரும், அவங்க அவங்க வேலை செய்யுற இயந்திரங்களுக்குப் பின்னாடி போயிக் குலுங்கக் குலுங்கச் சிரிச்சாங்க.

இந்த நிகழ்வு நடந்த அன்னைக்குதாங்க, வேலுச்சாமிங்ற நண்பர் சொன்னாரு, ஒடுவங்க நாட்டுக்காரன் தலையக் கண்டா ஓடுவாங்கன்னு சும்மாவா சொல்றாங்க அப்படின்னு. பொதுவாவே, ஒடுவங்க நாட்டுக்காரங்க யாரையும் வாகாப் பேசி விழுத்திடுவாங்களாம்; அதனால, தலை தப்பினது தம்பிரான் புண்ணியமுன்னு ஓடுவாங்களாம் மத்தவங்க!


சீருலவி டுந்தடப் பள்ளிகூ டற்கரை திருக்கணாம்
பேட்டையுடனே
திகழ்சத்தி மங்கையவக் கோட்டை கலையனூர்
திறமைமிகு சிறுமுகைநிதங்
காருலவி வருமிரு காலூர்கா ராப்பாடி கருத்துறும
திப்பானூருங்
கனிவுமிகு வானிபுத் தூரெழில்விண் ணப்பள்ளி
கனமா மிரும்பரையுடன்
ஏருலவு மாலத்தூர் கெம்மநாய்க் கன்பட்டி
யிணைமேவு சதுமுகையதும்
இறையவர்க் குபதேச மோதுமலை யாணடவ
னின்பஞ் சிறப்பதான
பாருலகி லுத்தண்ட தவளமலை யான்கிருபை பாலிக்க
நின்றுவளரும்
பரிவுமிகு மொடுவங்க நாட்டிலுள வனைவரும்
பலகால மிக வாழ்கவே!

தடப்பள்ளி, கூடற்கரை, திருக்கணாம்பேட்டை, சத்தியமங்கலம், அரவக்கோட்டை, கலையனூர், சிறுமுகை, இருகாலூர், காராப்பாடி, மதிப்பானூர், வானிபுத்தூர், விண்ணப் பள்ளி, இருப்புரை, ஆலத்தூர், கெம்மாநாய்க்கன்பட்டி, சதுமுகைன்னு பதினாறு ஊர்கள் கொண்டு கொங்குநாட்டில் இடம்பெற்றது ஒடுவங்கம்.

இந்த ஒடுவங்கத்துல தணாக்கன் கோட்டையும், படி நாடுங்குற கொள்ளேகாலமும் இணை. சகபதிவர், அண்ணல் மஞ்சூர் ராசா அவர்களுக்கான சிறப்பு இடுகைங்க இது!

10/24/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 10

எமது இளம்பிராயத்தின் போது, சேலம் என்றாலே நினைவுக்கு வருவது இரு பற்றியங்கள். ஒன்று சேலத்து மாம்பழம், அடுத்தது பருப்புச் சந்தை. முதலாவதுக்கான காரணமும் இரண்டாவதுக்கான காரணமும் ஒன்றை ஒன்று ஒட்டியதே!

ஆம், எனது தகப்பனார் ஒரு பெருவணிகர் என்ற வகையிலே, திருப்பூர்ச் சந்தையில் பருத்தி, பொள்ளாச்சி சந்தையில் சோளம் மற்றும் இராகி, திருவண்ணாமலை மற்றும் சென்னையில் பல்லாரி வெங்காயம், சேலத்தில் பயித்தை, துவரை மற்றும் கொள்ளு, உடுமலையில் கொத்துமல்லி மற்றும் கொண்டக்கடலை முதலானவற்றை கொள்முதல் அல்லது விற்பனை செய்வது வழக்கம்.

அப்படியாக சேலத்தை நினைக்கிற போது, வியாபார நிமித்தம் அங்கு செல்கிற போதெல்லாம் பருப்பு வகை தானியங்களோடும், சுவையான மாம்பழக் கூடைகளோடும் தந்தையார் அவர்கள் வீடு திரும்புகிற காட்சிகள்தான் மனதில் எழும். பின்னாளில் அந்தக் காட்சிகளோடு மேலதிகமாக இன்னொரு காட்சியும் இணைந்து கொண்டது காலத்தின் கோலம்.

எமது குடும்ப நண்பரொருவரது அழைப்பின் பேரில், அவருடைய மைத்துனரை சபரிமலைக்கு அனுப்பி வைக்கும் வைபவத்திற்காக சேலம், கோரிமேடு பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்துச் சாளை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். கொண்டலாம்பட்டி வழியாக ஏற்காடு சாலையில் சென்று, கோரிமேடு பேருந்து நிலையத்தில் இறங்கி இடது பக்கமாக ஒரு மண்சாலையின் ஊடாக இரண்டு அல்லது மூன்று கல் தொலைவு நடந்து செல்ல வேண்டும் அவரது தோட்டத்திற்கு.

அந்த சாலையின் இருமருங்கிலும் ஏழைகளின் குடிசைகள் ஆக்கிரமித்து இருக்கும். அந்த குடிசைகளை ஒட்டி, விளைநிலங்கள் பச்சைப் பசேல் எனக் காண்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்கும்; ஆங்காங்கே வரிசை வரிசையாகத் தென்னை மரங்களும்! எனது நண்பரின் தோட்டமானது, மண்சாலையின் இடது புறத்தில் இருந்தது. வெகு அழகான தோட்டமது.

தோட்டத்தில் ஓலைக் கூரையுடன் ஒரு சாளையும், அதற்குப் பக்கவாட்டில் ஓடு வேயப்பட்ட சாளை ஒன்றும் இருந்தது. ஓடு வேயப்பட்ட சாளையில்தான் நான் தங்கி இருந்தேன். அந்தச் சாளையின் ஒருபக்கச் சாளரத்தைத் திறந்து பார்த்தால், சாளையின் பின்புறம் நீர் ததும்பும் அந்த கிணற்றைக் காணலாம். மறுபக்கத்தில் இருக்கும் சாளரத்தைத் திறந்து பார்க்கின், கோரிமேட்டில் இருந்து அந்த வழியாகச் செல்லும் மண்பாதையின் ஓரத்தில் இருக்கும் குடிசைகளில் ஒன்றினைக் காணலாம்.

வாசலுக்கு வந்து மேற்கே நோக்கினால் ஒரு பெரிய கரடும், அதை ஒட்டிய சேர்வராயன் மலைத்தொடரும் கண் கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கும். அந்தக் கரட்டின் மறுபக்கம்தான் தொப்பூர் மேடு எனச் சொல்லக் கேள்விப் பட்டதாக ஒரு நினைவு.

சபரிமலைக்கு வழி அனுப்ப வந்தவன், அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, நண்பர் தங்கவேலு மலையில் இருந்து திரும்பும் வரையிலும் தங்கி இருந்துவிட்டுப் போகச் செவிமடுத்து, ஒரு வாரகாலம் அந்தத் தோட்டத்திலேயே நாட்களை இனிமையாகக் கழித்தவன் ஆனேன்.

அந்தக் கரட்டுக்குச் சென்று, அங்கு தினந்தோறும் நடக்கும் சமூக விரோத செயல்களை எல்லாம் கண்டதும், தென்னைமரக் கள்ளை மாந்தி மயங்கிச் சொக்கியதும், கிணற்றில் நீச்சல் அடித்து மகிழ்ந்ததும், விருந்தோம்பலில் திளைத்ததுமாய் நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

அப்படியிருக்க, அந்த ஒரு வாரகாலத்தின் ஒரு நாள், மாலை ஒரு ஆறு மணி இருக்கும், மஞ்சள் வெயிலில் கைரேகை தெரிந்தும் தெரியாத வேளை அது, வலதுபக்க சுவர்ச் சாளரத்தைத் திறக்கிறேன்; அந்த குடிசையைச் சேர்ந்த அந்த ஏழைப் பெண்மணி வாசலில் இருந்த முக்கால்ப்பாகம் தண்ணீர் நிறைந்த ஒரு கொள்கலனை அந்தத் தட்டையான கல் இருக்கும் இடத்திற்கு அருகண்மையில் வைத்து விட்டு, அவசர அவசரமாக குடிசையில் இருந்து வெளியேறிச் செல்கிறார்.

வெளியேறிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன்மகனை, கையைப் பிடித்து வாசலுக்குள் இழுத்து வருகிறார். வந்த வேகத்தில் அவனது துகில் உரியப்பட்டு, பிறந்த மேனியாய் அச்சிறுவனானவன் அந்தக் கல்லின் மீது கோவணம் இல்லாத தண்டாயுதபாணியைப் போல் நிற்கிறான்.

சரியாக ஒரே போசித் தண்ணீர் அவனுடைய முகம் தழுவி, கையிரண்டும் தழுவி, மார்புதழுவி, வயிறு தழுவி, பின் இடுப்பினூடாக கால்களைத் தழுவி, பாதங்கள் நனைந்து வழிகிறது. அப்படியொரு நேர்த்தியாக, அந்த ஒரு போசித் தண்ணீர் கையாளப்பட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த வினாடியே, பழுப்பு வண்ண 501 சவக்காரத்துண்டு ஒன்று அவனது மேனியைத் தொட்டுத் தொட்டு வழுக்கிச் செல்கிறது. அந்தத் தோய்தலில் அவனது தேகம் கூசி அவனுள் ஒரு சிருங்காரம் மேலிடுகிறது. தாயானவளோ, இங்கனச் சும்மா கெட எனச் சொல்லி சுறுசுறுப்பாய் தன் காரியத்தில் ஆழ்ந்து போகிறாள்.

சவக்காரத் துண்டின் வேலை முடிந்ததும், மேலுமொரு போசித் தண்ணீர் சவக்காரத்தின் தழுவலை பிரித்தெடுத்துச் செல்கிறது. தேகத்தில் சவக்காரம் படிந்ததை, முற்றிலுமாக இல்லை என்று ஆக்கப்பட்டதை உறுதியுடன் தெரிந்தவளாய், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தத் துணியை எடுத்து அவனை அதில் தோய்த்து விடுகிறாள் வேலையின் சிரத்தையின் நடுவேயும் அன்பான அந்தத் தாய்.

பெற்ற மகனை வடிவாய்க் குளிக்க வைத்துக் குடிசையுனுள் அனுப்பித் தானும் தனது முகம், கை கால்களைக் கழுவிய பின் அந்தச் சிறுபாத்திரத்தில் இருந்த எஞ்சிய நீரை, மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி உள்ளே எடுத்துச் சென்ற அத்தருணம், என்னுள் வியப்புமிகு அதிர்வலைகள் எங்கும் படர்ந்தது. அதன் சுவடுகளே இன்று எம்மை இதை எழுதவும் வைக்கிறது.

சிறுபாத்திரத்துள் இருந்த நீரில் மகனைக் குளிக்க வைத்து, தானும் கைகால் முகம் அலம்பி, அதில் மீதமும் வாய்க்கப் பெற்றாளே அவள்? இது எப்படி சாத்தியமாயிற்று?? எனக்கு அன்றும் புரியவில்லை; இன்றும் புரியவில்லை! சிக்கனம், எளிமை என்பதை, முதன்முதலாய்க் கண்டவன் ஆனேன் அத்தருணத்தில். ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?

நண்பர் தங்கவேல் அவர்கள் மலையில் இருந்து திரும்பியதும், ஒரு குண்டாத் தண்ணியில் மகனையும் குளிக்க வெச்சுத் தானும் கைகால் கழுவிகிட்டாளே அந்தப் பொம்பளை?! என்று சிலாகித்துப் பேசியவுடன், அவர் கூறியதைக் கேள்விப்பட்டு எம் நெஞ்சு பதை பதைத்துப் போனது.


ஆம், அவள் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றுபவளாய், கணவனால் கைவிடப்பட்டவளாய், தன்னை வட்டமிடும் கழுகுகளினின்றும் தற்காத்துக் கொள்பவளாய் அனுதினமும் போராட்டத்துள் வாழ்க்கை நடத்துபவள் என்று அவர் சொன்னதும், அதிர்வின் எல்லைக்கே சென்றது எம்மனம்.

அதன்பின்னர், நான் கோரிமேட்டிலிருந்து திரும்பும் வரையிலும் அந்தச் சாளரத்தை மறந்தும் திறக்கவில்லை. அந்தத் தோட்டத்தில் களிப்பாய் இருந்தவனுக்கு, அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பிள்ளையும் தாயும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சேலம் என்றால் இந்த ஆத்மா அடங்கும் வரையிலும் இனி எமக்கு அவர்கள்தான்!

அந்த நினைவுகளினூடே, கொங்குநாட்டின் உள்ளடக்கமான இராசிபுர நட்டினுடைய உபநாடான சேலம் நாட்டைக் காண்போம் வாருங்கள் மக்களே!



வளமிகுந்திடு சேர ராயன்மலை நின்றுவரு
மணிமுத்து நதிசெழிக்கும்
வண்மைசேர் சேலம்வெண் ணந்தூ ரமாப்பேட்டை
வளர்செவ்வா ய்ப்பேட்டை மல்லூர்
தளமிகுங் குமரநக ரலைவாய் நடுப்பெட்டி செளதாரபுர மினக்கல்
தணிவில்மிசி நாம்பட்டி குமரசா மிப்பட்டி
தாங்குசெம் மாண்டபட்டி
உளமகிழ நிமிரிளம் பள்ளிராக் கிப்பட்டி யொயிலான வீரபாண்டி
ஓதறிஞர் சந்ததம் வந்துதமிழ் பாடிடு முத்தமச் சோழபுரமும்
அளவில்பய நுதவியின் புறுகாரி பட்டியு மாண்மை
வீராணமுடனே
யயோத்தியணி நகரமுஞ் சேரவரு மிருபதூ ரழகான
சேலநாடே!

சேலம், வெண்ணந்தூர், அம்மாப் பேட்டை, செவ்வாய்ப் பேட்டை, மல்லூர், குமாரபாளையம், அலைவாய்ப்பேட்டை, நடுப்பட்டி, செளதாபுரம் ஓலைப்பட்டி, மின்னக்கல், மிசினாம்பட்டி, குமாரசாமிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, இனம்பள்ளி, ராக்கிப்பட்டி, வீரபாண்டி, உத்தமசோழபுரம், காரிப்பட்டி, வீராணம் மற்றும் அயோத்திப்பட்டணம் என இருபது நாடுகள் கொண்டதுதான் அழகான சேலம் நாடு.

இந்த இடுகையானது, சிங்கப்பூர்ப் பதிவர் அனபர் யாசவி அவர்களுக்கான சிறப்பு இடுகை!

10/20/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 9

மக்களே, எதோ ஒரு ஆர்வத்துல கொங்கு நாட்டுல இருக்கிற எல்லா நாடுகளைப் பத்தியும் இருக்கிற விருத்தங்களை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன், மக்கள் மின்னஞ்சல் மின்னஞ்சலா அனுப்பிகிட்டே இருக்காங்க; நல்லது; மகிழ்ச்சி! நிச்சயமா, எல்லா நாட்டையும் ஒரு கை பார்த்துட்டுதான் ஓய்வான் இந்த பழமைபேசி! இஃகிஃகி!! டிச-2ம் தேதிக்கு முன்னாடி எல்லாமும் வந்திடும்; ஆமா, அதுவரைக்கும் பொறுமையா நம்ம பக்கத்துக்கு வந்திட்டுப் போங்க மக்களே!

ஆனைமலை அப்படீன்னாலே ஒரு குதூகலம்தானே! இந்தவாட்டி ஊருக்கு வரும் போது கட்டாயம் ஆத்தாகிட்ட வந்துட்டுதான் வாறது. கோடித் தாத்தா இருக்குற வரையிலும் புரவிபாளையம் அரண்மனைக்கு போயிட்டு, அப்படியே ஒரு எட்டு ஆனை மலைக்கும் போறது உண்டு. கடைசியாப் போயிட்டு வந்து நெம்ப நாளாச்சு. சரி, நாம இன்னைக்கு ஆனைமலை நாடு பாக்குலாம் வாங்க!

ஆனைமலை காளியர சூர்மஞ்ச நாயக்கனம்பிச்சி
யின்புதூரும்
அர்த்தநா ரிப்பாளையம் பாரமடை ரெட்டி
யாரூர்கோ டங்கிபட்டி
சோனைபொழி பெரியபோ துப்பிலிய நூர்முத்தூர்
சொல்பூச்ச நாரியுடனே
தொகுதியுறு மிட்டுப்புள் ளாச்சிமா றப்பனூர்
சுகசின்ன யன்பாளையம்
ஞானமுறு தாத்தாரா வுத்தன் புதூரோடு
நற்கம்பா லப்பட்டியும்
நாவலர்கள் புகழ்கின்ற வேட்டைக்கா ரன்புதூர்
நவமாகு முடையகுளமும்
வானைநிமிர் மலையோங்கு காடருட நிறவுளர்கள்
மலைசர்களு மடைவதாக மாதங்க
வேட்டைபுரி யானைமலை
தனில்நின்று வளமாகு மிருபதூரே!

ஆனைமலை, காளியாபுரம், அரசூர், மஞ்சநாய்க்கன்பட்டி, அப்பிச்சிகவுணன் புதூர், அர்த்தநாரி பாளையம், பாரமடை, ரெட்டியாரூர், கோடங்கிபட்டி, பெரியபோது, உப்பிலியனூர், முத்தூர், பூச்சநாரி, ஆட்டுப்புள்ளாச்சி, மாறப்பக் கவுண்டன் புதூர், சின்னய்யன் பாளையம், தாதாராவுத்தன் புதூர், கம்பாலப்பட்டி, வேட்டைக்காரன் புதூர், உடையகுளம் என ஆனைமலைநாடு கொண்டது இருபது ஊர்கள்.

ஆனைமலை நாட்டைச் சொல்லிட்டு, பக்கத்துல காவடிக்கனாடு சொல்லாமப் போனா, பக்கத்து நாட்டுக்காரங்க பொக்குன்னு போயிட மாட்டாங்க? ஆமா, பொக்குன்னு போறது என்னான்னு உங்களுக்குத் தெரியுமாங்க?? அதாவது, பொக்குன்னா, உள்ளீடில்லாத நிலக்கடலை, உள்ளீடில்லாத எந்த காயும்... அதே மாதர, மனசுக்கு உள்ள மகிழ்ச்சியில்லாம வாடிருவாங்கன்னு சொல்லிச் சொல்றதுதான், பொக்குன்னு போயிடுவாங்க அப்படீன்னு.

இந்த இடுகையானது, நம்ம சலத்தூர் அன்பர் பொற்செழியன் அவர்களுக்காக! இஃகிஃகி!!


உண்மைமிகு பொள்ளாச்சி நகமஞ்சந் தராவரம்
ஊற்றுநகர் ராமபட்டணம்
ஓதுநா கூர்வடுக பாளையம் கோமங்கை
யொத்தகோ பாலபுரமும்
வண்மைமிகு மாய்ச்சிநகர் மாவலுப் பன்பட்டி
வருசலத் தூர்சிராமி
வண்ணாரின் மடகறைப் பாடிசிங் காநல்லூர்
மருவு வெள்ளாளரூரும்
பண்மைமிகு ராசக்கா பாளையம் மாய்க்கனாம்
பட்டியுட னேபுதூரும்
பருவமழை யகலாது பொழியவள மொடுவயல்கள்
பலனுதவி வினிதினோங்கு
திண்மையொடு குடிசெழித்துத் தானதருமந்
திருக்கோயிலுந் தொழில்களுஞ்
சேரச் சிறந்தழகி தேவடிக் கன்புவினை
செய்காவ டிக்கனாடே!

பொள்ளாச்சி, நகமம், சந்திராவரம், ஊற்றுக்குழி, ராமபட்டணம், நாகூர், வடுகபாளையம், கோமங்கலம், கோபாலபுரம், ஆய்ச்சிபட்டி, மாவலுப்பன் பட்டி, சலத்தூர், சிராமி, வண்ணார்மடை, கறைப்பாடி, சிங்காநல்லூர், வெள்ளாள பாளையம், இராசக்கா பாளையம், மாய்க்கனாம் பட்டி, புதூர் என காவடிக்கனாட்டில் ஆக மொத்தம் ஊர்கள் இருபது.

ஆச்சு ஆச்சுன்னு பொள்ளாச்சி போயி,
பிட்டு வாணிச்சிகிட்ட இளிச்சானாம் பல்லு!

10/19/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 8

இடவலம் கேட்பது, பூக்கேட்பது, திருநீறு குங்குமம் கேட்பது என்றெல்லாம் கிராமப்புறத்தில் சொல்வார்கள். அதாவது ஒரு முடிவை எடுப்பதில் மனம் சஞ்சலமாக இருக்கிற நேரத்தில், அருகிலுள்ள, அல்லது அவர்களுடைய குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பின் பூசாரியிடம், பூசாரி ஐயா நான் எடவலம் கேக்குலாமின்னு இருக்கேன் என்று சொல்லி இறைவனை இறைஞ்சி பிரார்த்திப்பார்கள்.

பூசாரியும் தெய்வத்திற்கு பூக்கள் சாத்தி பூசையைத் தொடர்ந்து நடத்துவார். அப்போது, இட்ட பூக்களில் எந்தப் பக்கத்து பூ முதலில் துலங்குகிறதோ, அதாவது எந்தப் பக்கத்துப் பூ முதலில் கீழே இடறி விழுகிறதோ அதைச் சொல்வார், ’ம்ம், ஆத்தா நிறைஞ்ச மனசோட வலங்குடுத்து இருக்குறா இன்னைக்கு!’ என்று.

வழிபடுபவரும் அது என்ன முடிவாக இருந்தாலும், அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இதே போன்றதுதான் பூக்கேட்பதும். வெண்பூ, சிவப்புப்பூ என இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கேட்பது. நான் சிறுவனாக இருக்கும் போது, சுஞ்சுவாடி கிராமம் தேவனல்லூர் புதூரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு எமது பாட்டனாருடன் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற கோவில் அது.

வருடா வருடம் நோன்பு சாட்டி, தீமிதி விழா எல்லாம் நடக்கும். ஆண்கள் குண்டம் இறங்குவார்கள். பெண்கள் பூச்சாற்றுவார்கள், அதாவது குண்டத்துலே இருக்கும் தழல்ப்படிகங்களைக் கையால் எடுத்து அம்மனை நோக்கிச் சாத்துவார்கள். கோவிலில் பயபக்தியோடு அம்மனை வழிபட்டு, பின் ஊர்க்கிணற்றுக்குச் சென்று நீராடிவிட்டு, அம்மன் கோவில் வாசலில் இருக்கும் குண்டத்திற்கு வந்து பூச்சாற்றுவார்கள்.


அம்மா, ஆத்தா என்று, உடுக்கம்பாளையம், லெட்சுமாபுரம், குண்டலப்பட்டி, கூளநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, சிஞ்சுவாடி என சுற்றுபற்றுக் கிராமத்தாரும் இறைஞ்சி வழிபடுவதைப் பார்க்கும் போது மிக மிக உருக்கமாக இருக்கும். நினைவு தெரிந்த பருவத்தில், எனக்கு முதல் மொட்டையும் காதுகுத்து விழாவும் நடந்தது அந்தக் கோவிலில்தான்.

சின்ன சின்னப் பூக்களுடன் இளஞ்சிவப்பு வண்ண சட்டையும், கறுப்பு வண்ண அரைக்கால் சல்லடமும், மொட்டையும், புதிதாய்க் குத்தப்பட்டு கம்மல்கள் அணியப்பட்ட காதுகளுமாய், அந்தக் கோயிலடி வளாகத்தில் கதாநாயகனாக, மகள் வயிற்றுப் பேரனாக அவ்வூரையே வலம் வந்த இனிமைப் பொழுது இன்றும் மனதில் நிழலாடுகிறது. ஆனால், காதில் குத்தப்பட்ட துவாரங்கள் மறைந்து விட்டன; கம்மல்கள் போன இடம் தெரியவில்லை; அப்பிச்சி அமுச்சியும் மரித்து விட்டார்கள். அதைவிடப் பெரிய இழப்பு, எமது பண்ணையத்தில் காலாகாலத்திற்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்த முத்தனும் முத்தியும் மறைந்து விட்டார்கள் என்பதே!

ஆனால், அந்த நினைவுகள் எம்முள் என்றென்றும் வாழும்.அந்த நல்ல பசுமையான நினைவுகளோடு, மேற்சொன்ன ஊர்களைத் தன்னகத்தே கொண்ட கொங்கு நாட்டின் ஒரு வேளரசான, நல்லுருக்கனாடு காண்போம் வாருங்கள் மக்காள்!


சமத்தூர்மா னுப்பட்டி அந்தியூர் புக்குளம்
தளிவாழை வாடிசித்தூர்
தாழ்வில்பூ லாங்கிணறு சுஞ்சிவா டியினோடு
சாற்றுடுக் கம்பாளையம்
நிமித்தமுறும் அங்கலக் குறிச்சி யேர்ப்பட்டியும்
நீள்குறிச் சிக்கோட்டையும்
நேமமுறு முடுமலைப் பேட்டைவே லூர்வளம்
நீள்குறுஞ் சேரியூரும்
அமைந்தகோட் டூர்புதூர் மலையாண்டி பட்டண
மழகிளைய பாளயத்தோ
டமர்சடைய பாளையமு மேலமில வங்கமுல
கரியமிள காதிவிளைவும்
திமிர்த்தன மிலங்குவெண் கோட்டிபமு மோங்கிச்
செழித்துவளர் பூனாச்சியுந்
திகழவல் லார்க் குதவி புரியுநல் லார்க்கணியுரை
செறியுந லுருக்கனாடே!

சமத்தூர், மானுப்பட்டி, அந்தியூர், புக்குளம், தளி, வாழைவாடி, சித்தூர், பூலாங்கிணறு, சுஞ்சுவாடி, உடுக்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, ஏர்ப்பட்டி, குறிச்சிக்கோட்டை, உடுமலைப் பேட்டை, வேலூர், குறுஞ்சேரி, கோட்டூர், புதூர், மலையாண்டி பட்டணம், இளையபாளையம், சடையபாளையம் என, ஆக மொத்தம் 21 ஊர்கள் கொண்டதுதாங்க நல்லுருக்கனாடு.

ஒரு சில ஊர்கள் ஆறை நாட்டுலயும், நல்லுருக்கனாட்டிலும் பொதுவா இருக்கிறதைக் காணலாம். ஆம், இன்றைய ஊர்கள் அந்நாளில் பிரிந்து இரு வேறு நாடுகளின் நிர்வாகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. ஆக மொத்தத்தில், உங்கள் பழமைபேசி ஆறை நாட்டுக்கு மகனாகவும், நல்லுருக்க நாட்டின் மகள் வயிற்றுப் பேரனாகவும் இருப்பதையும் இது காட்டுகிறது! என்னா அலம்பல்டா சாமி இவனுது?! இஃகிஃகி!!

10/18/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 7!

கிள்ளாக்குச்சீட்டு, கடவுச்சீட்டு(passport)ங்றது எல்லாம் வாங்குறதே ஒரு பெரிய காரியமா இருந்ததொரு காலம். நான் முதன்முதல் கடவுச்சீட்டு வாங்க, உக்கடம் - சோமனூர் வண்டி புடிச்சுப் போயி, அவினாசி சாலையிலிருந்த Tiruppur Travelsல விண்ணப்பிச்சதும் ஏற்பட்ட குதூகலம் இருக்கே? சொல்லி மாளாது போங்க! வெளிநாட்டு வேலை கிடைச்சா, பழனி மலைக்கு பாதயாத்திரையா வாறன்னும், பத்து ரூபா காணிக்கை செலுத்துறேன்னும் ஆனைமலை மாசாணி அம்மன் கையில சிட்டு வெச்சு நேர்ந்துகிட்டதும் இன்னும் பசுமையா நினைவுல இருக்குங்க.

அந்த நல்ல நினைவினூடகவே, பழனிமலைய உள்ளடக்கின, கொங்குநாட்டின் ஒரு சிற்றரசான வையாபுரி நாட்டையும், கடவுச்சீட்டு பற்றின ஒரு விபரத்தையும் பார்க்கலாம் வாங்க. கூடுமான வரைக்கும் நண்பர்கள்கிட்டவும் விபரத்தைப் பகிர்ந்துக்குங்க, சரியா?


திருமிகும் பழனியூர் கோதைமங் கலமுடன்
செப்புகலையம் புதூரும்
சேரமா நூரிறைய மங்கல மடத்தூரு திகழ்கடத்
தூரினூடனே
அருமைமிகு கணியூர்கண் ணாடிப்புதூருடன்
அழகுமிகு கோட்டைத்துறை
ஆகுங்கொழுங் குண்டை மேல்கரைப் பட்டிலூ
ரமர்தேவாதா குடியுமே
மெருமைமிகு மாய்க்குடியி நோடமரர் பூண்டியும்
பிசகாமணிச்சிலம்பு
பீடுறுங் கொழுமம்வாழ் கரையோடீ ரொன்பதூர்
பிறங்குபுக ழோங்குநாடு
முரிமையுட னிரவலர்கள் மனநிலைமை யாய்ந்துள்
ளுவந்துதவு கின்றசெங்கை
உத்தமர்கள் மேவுதிரு வாவினன் குடியென்ன
வுயர்மிகு வளநாடரே வைகாவி நாடர்!

பழனியூர், கோதைமங்கலம், கலையம்புத்தூர், மானூர், இறையன்மங்கலம், மடத்தூர், கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கோட்டத்துறை, மேல்கரைப்பட்டிலூர், கொழுங்கொண்டான், தேவதாகுடி, ஆய்க்குடி, அமரர்பூண்டி, மணிச்சிலம்பு, கொழுமம், வாழ்கரை என ஆக மொத்தம் பதினெட்டு ஊர்கள் கொண்டதுதாங்க வைகாவி அல்லது வையாபுரி நாடு. மலைமேலுள்ள ஆலயம் பழம்நீ, இறக்கத்தில் உள்ளது திரு ஆவினன் குடி. மேலும் இந்த வையாபுரி நாடு பற்றிய இடுகையானது, அன்பர், கலையம்பத்தூர் மருத்துவர் சுரேஷ் அவர்களுக்காக இடப்படுகிறது!

இனி கடவுச்சீட்டு பற்றின விபரத்தைப் பார்க்கலாம் வாங்க. இது எனக்கு மின்னஞ்சல்ல வந்த விபரம். ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள், மின்னஞ்சலில் வந்த விபரத்தை ஆமோதித்ததின் பொருட்டு, விபரம் உங்கள் பார்வைக்காகவும்!


BE ALERT..!!!! Passport Tearing at Indian Airports....Read it Carefully.!!!

Be Careful at the Indian Airports, This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports.. Be careful when ever you give your passport to Immigration/ Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:

At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport. When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above.

On arrival next time, he is interrogated.

Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India ....

Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.

Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was travelling with his family. They had six passports. They got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad . Stayed abouta month and left for the States.

When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts. On going in to details with him, he found out the following: One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers.

All the passengers travelling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages.

On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport. One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogation. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE LEAVING THE AIRPORT!

10/17/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 6!

எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர், சொல்லிக் கொடுக்கிற சொல்லும், கட்டிக் குடுத்த கட்டுச் சோறும் எத்தினி நாளைக்கிடா வரும்? என்று! அதைப்போல, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே, அது நல்லது, அது நல்லதல்ல எனப் போதித்து போதித்து ஒரு சமூகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

முடியாது! அவை அந்த நேரத்திற்கு மட்டும் பயனளிக்குமே அல்லாது நிரந்தரத் தீர்வாக அமையாது. முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு! அப்படியாக, நல்ல, பெரிய மாற்றம் என்பது ஒருவனுக்கு உள்ளாக உள்ளத்திலே இருந்து பிறக்கக் கூடியது. அதுதான், கொங்குநாட்டிலே அதிகப்படியாக பாவிக்கப்படும் சொலவடையான, சொல்லிக் கொடுக்கிற சொல்லும் கட்டிக் கொடுத்த கட்டுச் சோறும் எத்தனை நாளைக்கு? தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இது நமக்கு!

அந்த நல்ல சிந்தனையோடு, இந்த ஆறைநாட்டானின் அலம்பல்கள் வரிசையில், எனது அன்புக்கும் அபிமானத்திற்கும் உரிய மாப்புவிற்கு இடும் இடுகை, அவரது இருப்பிடத்தைக் கொண்ட வடகரை நாடு பற்றிய விருத்தம்!


அந்தியூ ரும்பட்டி லூருங்கு றிச்சிபீ
லாம்பட்டி சம்பைவானி
ஆப்புக் டலினோடு கீழ்வானி மூங்கினக
ரானமூ கப்பனூரும்
பைந்தரு விளங்குகரு வல்லாடி தன்னோடு
பகரமாப் பேட்டை பொன்னிப்
பழநதிக் கரைநெருஞ் சிப்பேட்டை வளவயற்
பரவெண்ண மங்கலமுடன்
செந்திரு விளங்கவளர் கோட்டை பூதப்பாடி
சேருநக லூருலகடம்
செழிய கன்னப்பிலி பருவாசி பிரமயஞ் சீர்கட்டி
யின்சமுத்திரம்
வந்தனை செயும்பெரியர் தங்குபூ னர்ச்சியுடன்
வளர்செனம் பட்டியென்ன
மாகவிஞர் சாற்றுமிகு பத்துநான் கூர்களும்
வடகரைந நாடுதானே!

அந்தியூர், பட்டிலூர், குறிச்சி, பீலாம்பட்டி, சம்பை, பவானி, ஆப்புக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டி, மூகயனூர், கருவல்லாடி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, எண்ணமங்கலம், கோட்டை, பூதப்பாடி, நகலூர், உலகடம், கன்னப்பிலி, பருவாசி, பிரமியம், கட்டிசமுத்திரம், பூனாச்சி, சென்னம்பட்டி என இருபத்து நான்கு ஊர்கள் கொண்டதுதான் கொங்குநாட்டில் அடங்கிய வடகரை நாடு என்பது!

பண்டைய காலத்திலே, பெயரை ஒட்டி வரும் பட்டங்களை வைத்தே இவர் இன்ன நாட்டைச் சேர்ந்தவர் எனக் கணிக்கும் படியாக பெயர் சூட்டினர். அந்த வகையிலே, கொங்கு நாட்டை உள்ளடக்கிய சேர நாட்டின் பட்டப் பெயர்கள் யாவை? சேரன், வானவன், மலையன், பொறையன் மற்றும் உழியன். சோழ நாட்டவர்க்கு, கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன் மற்றும் கண்டர். பாண்டிய நாட்டவர்க்கு, வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின் மற்றும் செழியன் முதலானவை.

சேர நாட்டுப் பெயர்களிலே, புகழ் வந்து சேரக்கூடியவன் சேரன்; வானுயர உயரக்கூடியவன் வானவன், மலையளவு பெறக்கூடியவன் மலையன், பொறுமையே உருவானவன் பொறையன், உழைத்து வாழ்பவன் உழியன். எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்! இஃகிஃகி!! (எல்லாம் ஒரு காரணமாத்தான்!)

10/09/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 5!

என்னுடைய நெருங்கிய பொட்டிதட்டி ஒருத்தர் நாமக்கல்; அவர் கடுமையாச் சொல்லிட்டாரு. டேய், நீ கீழ்க்கரைப் பூந்துறை, வடகரை நாடு, கிழங்கு நாடு, கருவா நாடுன்னு போடுறதை எல்லாந் தினமும் உன்னோட பக்கத்துக்கு வந்து பார்த்திட்டு இருக்க முடியாது. இன்னைக்கு எந்நேரம் ஆனாலும், எங்க வாழவந்தி நாட்டைப் பத்திப் போடுற; இல்லே? மவனே திங்கக்கிழமை தட்டுறதுக்கு பொட்டி இருக்காதுன்னு கூப்ட்டு மிரட்டிட்டாருங்க! பொட்டி போனாப் போகுது, மூக்கு பத்திரமா இருக்கணுமே? அதான், வாழவந்தி நாடு இன்னைக்கு!

வாழவந்திங்ற ஊரை மையமா வெச்சி இந்த நாடுங்க. ஆனா, வாழவந்திக்கு ரெண்டு உபநாடுகள். முதலாவது, தூசூர் நாடு! ரெண்டாவது விமலை நாடு. நாமக்கல், அரூர்க்காரங்க நம்ம திண்ணைக்கு அடிக்கடி வந்து போறவிங்களும் இருக்காங்க. ஆகவே, மொதல்ல தூசூர் நாடு!


மருவுநிலவு தூசியூர் குவளமா பட்டியுடன்
வளம்பெரிய தோகைநத்தம்
வளர்சிதம் பரபட்டி முத்தக்கா பட்டியும்
வருபழய பாளயமுடன்
தருநிலவு வேப்பையும் வசந்தரா யன்கோயில்
தருலத்தி வாடிபரளி
தாதுநிலவு பொன்னேரி புதுபட்டி புதுக்கோட்டை
தங்குமாலப் பட்டியும்
விரிவுமிகு நாமக்கல் கோடங்கிபட்டியும் வெற்றி
சீரங்க நல்லூர்
வீறானதிபிரமா தேவி யெருமைப் பட்டி
வீரசோழரசை நத்தம்
திருவுலவு ரட்டையும் பட்டிமேட் டுப்பட்டி
சீர்கொள்ளு மருவூருடன்
செய்ய புத்துர்ரலங் காநத்த முஞ்சேர்ந்து
செய்தூசூர் நாடுதானே!

தூசியூர், குவளம்பட்டி, தோகைநத்தம், சிதம்பரப்பட்டி, முத்தக்காபட்டி, பழயபாளயம், வேப்பநத்தம், வசந்தராயன் கோயில், லத்திவாடி, பரளி, பொன்னேரி, புதுப்பட்டி, புதுக்கோட்டை, பாலப்பட்டி, நாமக்கல், கோடங்கிபட்டி, நல்லூர், திப்பிரமாதேவி, எருமைப்பட்டி, அரசநத்தம், ரட்டயம்பட்டி, மேட்டுப்பட்டி, அரூர், புத்தூர், அலங்காநத்தம்னு ஆக மொத்தம் இருபத்தி அஞ்சு ஊருக தூசியூர் நாட்டுல!

பூவோட சேர்ந்தா நாரும் மணக்கும்னு சொல்வாங்க அல்ல? அது போல, வாசிங்டன் மாநகர் தமிழ்ப் பெரியவர்களோட ஒரே ஒரு நாள், கூட இருந்ததுக்கே என்னா பெரிய சிறப்பு நமக்கு வந்து சேர்ந்து இருக்குன்னு பாருங்க மக்களே!

உலகில் வலிமையும் ஓங்கிய செல்வமும்
இலகும் அமெரிக்க எழில்சேர் நாட்டில்
வாசிங்டன் டீசி வளமார் நகரில்
நேசமும் அன்பும் நிலவிடத் தமிழர்
தம்மொழிப் பற்றும் தாயகப் பாசமும்
செம்மை யாகச் செழித்திடும் வகையில்;
பற்பல ஊரினர்; பற்பல துறையினர்;
பற்பலப் பணியினர்; பரிந்தொரு மித்துத்
தமிழுக்கு ஆங்கோர் சங்கம் வைத்தே
அமிழ்தாம் மொழிக்கு ஆக்கம் சேர்க்க,
திரைகடல் ஓடியும் செந்தமிழ் வளர்க்கும்
முறையினில் அன்பர்கள் முழுமூச் சுடனே
எண்ணினர்; கூடினர்; இனிதாய் மழலைகள்
பண்ணரும் தமிழைப் பயின்றிட வகுப்புகள்,
நடத்து கின்றனர்; நற்றமிழ் இலக்கியம்
படித்தே ஆய்வுகள் பல்லோர் குழுமி
கருத்துரை யாடியும்; கசடறக் கற்றும்;
ஒருமித்துப் பொருளை உணர்ந்தே மகிழ்வர்;
பெறற்கரும் நல்லார் பிரபா கரனெனும்
திறனுடை யாரின் தேர்ந்தநல் தலைமையில்
எல்லையில் ஆர்வலர் இராம சாமியும்;
செல்லை யாவும்; செந்தில் முருகனும்;
மணிவா சகமும் மாண்புடை செயந்தியும்
அணிசேர் பாஸ்கர் அன்பர் சாமியும்
பீற்றர் மற்றும் பீடுடைப் பெற்றியர்;
வாட்டமில் இளைஞர் வலம்பெறு துணையுடன்
செயற்கரும் செயலைச் செய்து முடிக்கும்
முயற்சி தளரா மொய்ம்புடை உறுப்பினர்
அத்துணை பேரும் ஆழிசூழ்
இத்தரை மீதினில் இனிதாய் வாழ்கவே! "

02 அக்டோபர் 2009

அன்புடன்,
புலவர் வெ.இரா.துரைசாமி,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

சொந்தக்கதை ஒன்னு சொல்லாமப் போனா, நீங்க கோவிச்சுகுவீங்க அல்ல? அதான், அம்மணிய மடிக்கிறதுக்கு எடுத்து விட்டதுல உங்க பார்வைக்கு ஒன்னு!

மாண்டு மடிஞ்சாலும்
மடிஞ்சழிஞ்சு போனாலும்
மாண்ட எடத்துலதான்
மல்லியப் பூவாவேன்
உனக்கு!
செத்து மடிஞ்சாலும்
சீரழிஞ்சு போனாலும்
செத்த எடத்துலதான்
செவ்வந்திப்பூ நானாவேன்
உனக்கு!

10/08/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 4!

அவனாசி சாலை ஓரத்துல, குரும்ப பாளையத்துக்கும் அரசூருக்கும் நடுவில் இருக்கும் அழகான சிற்றூர்தாங்க, செங்கோட கவுண்டன் புதூர். அந்த ஊரில் வாழ்ந்த காலம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாட்கள். பல கோவில்களுக்கும் மத்தியில் அமைஞ்ச ஊர்தான் அது.

வருசா வருசம், எதோ ஒரு ஊர்ல ஒரு நோம்பி வந்திடும். குறிப்பா, கோடைகாலத்துல குதூகலந்தான். அரசூர் மாரியம்மன் கோயில், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளி அம்மன் கோயில், அருகம்பாளையம் காளியம்மன் கோயில், உள்ளூர்ல தங்கநாயகி அம்மன் கோயில் இப்படி....

ஒரு மண்டலத்து நோம்பி, மூனு கிழமை(21 நாட்கள்) நோம்பின்னு வகை வகையாக் குறிப்பிட்டுச் சொல்வாங்க. முதல்ல நோம்பி சாட்டுவாங்க. அப்பறம் ஊர்த்தலைவர் கம்பம் போடுவாரு. கம்பம் போட்டவின்னாடி, அந்த மூனு கிழமையும், சாயங்காலம் சாயங்காலம் கம்பஞ் சுத்தி ஆடுவாங்க.

கொடுமுடி, செஞ்சேரின்னு போயித் தீர்த்தம் கொண்ட்டு வந்து சாமிக்கு படைப்பாங்க. நோம்பி அன்னைக்கு காலையில தீ மிதிக்கிறது, தேர் இழுக்குறது, விளக்கு மாவு, முளைப்பாரி, பூவோடு எடுக்குறதுன்னு கோலாகலமா இருக்கும். கடைசியா சாமி சப்பரம் எடுத்து, மஞ்சத்தண்ணி ஊத்துற வைபவமும்.

இதுல நாம கம்பஞ் சுத்துற பேர்வழிங்க. எங்க நோம்பின்னாலும் வங்கணனுக கூடச் சேந்துட்டு ஏழெட்டுப் பேராக் கிளம்பீருவோம். அங்க போயி வாத்தியத்துக்கு ஏத்த மாதர ஆடி, வேடிக்கை பாக்க வந்த அம்மணிககிட்ட பேர் வாங்குறதுல ஒரு குதூகலம்! மேழியாட்டம், தயிர் சிலிப்பி, தொக்குமிதின்னு அதுக ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு இருக்கு.

முதல்ல ஒருத்தர், வாசல்ல இருக்குற அந்த தீபம் எரியுற கம்பத்துக்கு கீழ நின்னுட்டு சாமியப் பாத்து, பாட்டு அடிகளை ஒவ்வொன்னாக் கூவ, கூடி இருக்குறவங்க ‘சபாசு’ சொல்வோம். கடைசியில, போடுறா மத்தளத்தைன்னு முடிக்கவும், பறை அடிக்கிறவங்க எதோ ஒரு தாளத்துக்கு அடிப்பாங்க. அதைச் சரியாப் புரிஞ்சுட்டு, கூடி இருக்குறவங்க எல்லாம் கணக்குத் தப்பாம ஆடணும். இப்ப நினைச்சாலும், ஆடணும் போலவே இருக்கு; சரி ஒரு பாட்டைப் பாக்கலாம் வாங்க!


சின்ன முத்தாம் சிச்சிலுப்பை
சபாசு

சீரான கொப்பளிப்பான்
சபாசு

வண்ண முத்தாம் வரகுருவி
சபாசு

வாரிவிட்டா தோணியிலே
சபாசு

மாரியம்மா தாயே நீயி
சபாசு

மனமிரங்கித் தந்த பிச்சை
சபாசு

தற்காத்து நீகுடும்மா
சபாசு

உஞ்சன்னதிக்கு நாங்கதான வந்திடுவோம்
சபாசு

எங்கூரு மக்களைத்தான்
சபாசு

காப்பாத்த வேணுமின்னு
சபாசு

தனிச்சு அடிச்சா கூடாரம் எங்கமாரி
சபாசு

மாரிக்கு நல்லா நாங்க சீர்வரிசை
சபாசு

சிறப்பாச் செய்திடுவோம்
சபாசு

மாரியுந்தான் மனமிறங்கி மனசுவெப்பா
சபாசு

இப்பப் போடுகணக்கா மத்தளத்தை!
இப்பப் போடுங்கையா மத்தளத்தை!!

சொல்லி முடிச்சதுதான் தாமதம், பறை அடி காதைப் பொளக்குமில்ல! நாங்களும் சாமந்தாண்டி வெடியற வரைக்கும் ஆடுவம்ல?! என்னா சொகமான வாழ்க்கைடா சாமி!

நாம போடுற ஆட்டத்துக்கு அம்மணி கெரங்குச்சா இல்லையாங்குறது, ஆடி முடிச்சவுட்டு குடிக்கிறதுக்கு நீட்டுற சொம்புல தெரிஞ்சிடும்ல?! சொம்பு எதுவும் நீட்டுப்படாம, நாமளாப் போயித் தண்ணி கேக்குற சூழ்நிலைன்னா, நம்ம ஆட்டம் அன்னைக்கு எடுபடலைன்னு அர்த்தம்! இஃகிஃகி!!

சரி சரி, ஈரோட்டு மாப்பு கோவிச்சுக்குவாரு, வாங்க மேல்க்கரை பூந்துறை நாட்டுல எந்தெந்த ஊருக வருதுன்னு பாக்கலாம் இன்னைக்கு!


பூந்துறைசை வெள்ளோடை நசியனூ ரெழுமாதை
புகழ்சேர்ப் பாரிநகரம்
பூங்கமழு மீங்குயூர்பெ ருந்துறை சாத்தனூர்
பொன்காள மங்கலமதும்
ஆய்ந்ததமிழ் கூறுங் குழாநிலை கிழாம்பாடி யாண்மை
கொண்மு டக்குறிச்சி
யநுமரகர் பழமங்கை குளவிளக் குக்காக மறச்சலூர்
விளக்கேத்தியும்
வேந்தர்மகி ழீஞ்சநகர் சத்திமங்கலமதும் மிக்கசே
மூர்மங்கலம்
வீரநகரீரோடு பேரோடு சித்தோடு மிக்கான
திண்டற் புதூர்
சேர்ந்துமழை பேய்ந்தருளி மிலவமலை திருவாச்சி
திகழ்பனசை யோடாநிலை
தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்சி
றந்தபூந் துறைசை நாடே!

பூந்துறை, வெள்ளோடை, நசியனூர், எழுமாத்தூர், பிடாரியூர், ஈங்கூர், பெருந்துறை, சாத்தம்பூர், சாளமங்கலம், குழாநிலை, கிழாம்பாடி, முடக்குறிச்சி, அநுமன்பள்ளி, பழமங்கலம், குளவிலக்கு, காகம், அறச்சலூர், விளக்கேத்தி, ஈஞ்சம்பள்ளி, சத்தி, சேமூர், மங்கலம், வீரகநல்லூர், ஈரோடை, பேரோடை, சித்தோடை, திண்டல்புதூர், இலவமலை, திருவாச்சி, பனயம்பள்ளி, ஓடாநிலை, முருங்கைத் தொழுன்னு ஆக மொத்தம் முப்பத்தி ரெண்டு ஊருக!

நாளைக்கு கீழ்க்கரைப் பூந்துறை நாடு பார்க்கலாஞ் செரியா? இன்னைக்கு ஈரோட்டு மாப்புக்கு வெச்ச ஆப்பு என்ன? நீங்க தெரிஞ்சிக்க ஆர்வமா இருப்பீங்க இல்லையா?! அப்ப, மேல படீங்க!!

“மாப்பு, நான் கேட்டது இன்னும் வந்து சேரலையே?”

“நாளை அனுப்புகிறேன்!”

“நாளை, நீங்க என்ன அனுப்புறது? அதுபாட்டுக்கு வெடியுது; சாயங்காலம் ஆவுது. இப்படித் தானா, கிரமமா அது வந்து போய்ட்டுதான இருக்கு? நீங்க என்ன வெங்காயம், அதை அனுப்புறது??”

“அய்யோ, அய்யோ, தினமும் உங்ககூட என்ன இழவாப் போச்சு எனக்கு! நாளைக்கு அனுப்புறேன் செரியா?”

”இப்பச் சொன்னது செரி!”


இறங்கு பொழுதில் மருந்து குடி! இங்க பொழுது எறங்கி வெகு நேரமாச்சு, நான் வாறேன்! எங்கப்பா இங்க வெச்ச அந்த பாட்டுலைக் காணம்?!

10/07/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 3!

மூஞ்சியப் பாரு, மொகரக் கட்டையப் பாரு; மொகானூர் முச்சந்தியில செருப்படி வாங்குனவனாட்டவே இருக்குறாம் பாரு!! இப்படியெல்லாம் நாளொரும் பேச்சும், பொழுதொரு திட்டுமா வாங்கிட்டு குதூகலமா இருந்த பூமிதாங்க, வாரக்க நாடு!

ஆமாங்க, நாம என்னதான் பெருமைமிகு ஆறை நாட்டு மண்ணுல பொறந்து இருந்தாலும், வளர்ந்தது, படிச்சது எல்லாமும் வாரக்க நாட்டுல இருக்குற வாகத்தொழுவு வேலூர், சலவநாயக்கன் பட்டிப் புதூர்லதாங்க! தினமும் நாலு மைல் தொலைவு தோட்டங்களுக்குள்ள பூந்து பூந்து, இட்டேரி வழியாத்தான் பள்ளிக்கூடம் போறது. அப்ப, சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும், மேல சொன்ன மாதர அர்ச்சனைக எல்லாம் வாங்க வேண்டி இருக்கும்.

ஒரு சொல்லு, பதிலுக்கு சொன்னாப் போச்சு! மடமடன்னு, அம்மணிகெல்லாம் ஒன்னு கூடித் தூத்துவாங்க பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். நாங்க அதுகளைக் கேட்டு இரசிப்போம். ரெண்டு நாள் அப்படி இப்படிப் பேசுவாங்க, மூனா நேத்து நெல்லிக் காய் இருக்கு வேணுமான்னு வாஞ்சையாக் கேட்பாங்க. இஃகிஃகி!!

செஞ்சேரி மலைத் தேருக்கு போனாக்க, வாங்கி வந்த கரும்புல மறக்காம ஒரு சல்லை கொண்டு வந்து குடுப்பாங்க. மாலை கோயிலுக்குப் போனவங்க, தேர் முட்டாய் கொண்டு வந்து குடுப்பாங்க. நாம, நம்ம பங்குக்கு, எப்பவாச்சும் எடுக்குற அடுக்குத் தேன்ல ஒரு ரட்டு அவங்களுக்குத் தாறதுதான்! சரி..சரி.. வாங்க, வாரக்க நாட்டுல எந்தெந்த ஊருகெல்லாம் வருதுன்னு பார்க்கலாம்!


பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நஅகரமும்
புகல்குயிலை
சூரவூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
செய்புதுவை வெள்ளலூரும்
திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
பகரவரி தாயபுத்தூர்
பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
மாந்திவயங்கு மேலாம்
மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
வாரக்க நாடுதானே!

தென்சேரி, களந்தை, சூரவூர், நி(நெ)கமம், பேறை, குயிரை, பூமலூர், பல்லடம், சாமளாபுரம், புதுவை, வெள்ளலூர், கோடிநகர், மங்கலம், ஆவலப்பூம்பட்டி, புத்தூர், கீழ்ச் சிங்காநல்லூர்னு, ஆக மொத்தம் பதினாறு பேரூர்கள் கொண்டதுதாங்க வாரக்க நாடு!

ஆமாங்க, நெகமமும் செஞ்சேரியும் முக்கோணத்துல ரெண்டு மொனையின்னா, மூனாவது மொனைதாங்க வீதம்பட்டி வேலூர். கூடவே, துவால்த் துணியும், துப்பட்டி கதையும் எழுதலாமுன்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு வேலையிலயே ஒருபாடு நேரம் ஆயிப் போச்சு மக்கா! நாளா மக்காநாள் பார்க்கலாஞ் செரியா?!

10/06/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 2!

வணக்கம் மக்கா! நேற்றைக்கு ஆறை நாட்டைப் பார்த்தாலும் பார்த்தோம், ஆளாளுக்கு எங்க ஊர் எந்த நாட்டுல வருதுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க. எந்தஊர் எந்த நாட்டுலன்னு பாக்குறதுல கூட ஒரு சுவாரசியந்தேன். கூடவே, திலுப்பூர் அக்காவிங்க நான் போட்ட் புதிரையும் விடுவிச்சுப் போட்டாங்க என்ன?

இதுக்கு நடுப்புல, தாராவரத்துகாரர் வந்து வம்புதும்பைக் கோடி காமிச்சுட்டு போறாரு. வம்பு நம்ம அல்லாருத்துக்கும் தெரியும். அதென்ன தும்பு? அய்ய, பண்டங்கன்னுக கழுத்துல கட்டுற தும்பு இதில்லீங்கோ! தும்புன்னா, குசுகுசூ.. குசுகுசூ... ன்னு பேசறதுதான், Gossip, அடுத்தவங்களுக்கு செரமம் தாற மாதிரியான வீண் பேச்சுக! அதான், வம்புதும்புக்கு போக மாட்டாங்கங்றது!!

அப்பறம் இன்னொரு பொன்னான் வந்து, எங்க ஊரான பொட்டையம் பாளையம், அதான் பொட்டிக்காம் பாளையம் எந்த நாட்டுல வருதுன்னு கேட்டுச்சு. அதான், அந்த ஊர் அடங்குன பொன்கலூர் நாட்டைப் பத்தின விருத்தம்:



பொங்கலூர் கொடுவாயி செம்பை குன்றாபுரம்
புற்றிரைசை யுகாயனகரம்
புகல்பொருந்தா புரி திருப்பையூருடனேற்
புகழ்பெரும் பிள்ளை நகரம்
தங்குமிச்சிக் காணி வானவன் சேரியொடு தளிகைநிறை
யங்கிநகரம்
சாரரவண் நல்லூர்பல் லாபுரி குடிமங்கை
தகைமையுட னோதுதென்னா
மங்கலந் தென்பள்ளி லக்கர் பெற்றம்பள்ளி வாய்த்தநம
நாரியெழில்சேர்
மண்ணறை முகுந்தநல் லூரமுக் கயங்கற்றை
மாலூற்றலூர் சிறந்த
புங்கமிகு காஞ்சிநதி லவணநதி யாண்கொல்லி
புராரிநதி மாமாங்குசூழ்
பூர்வீக வலகுமலை யாண்டவன் அரசுபுரி
பொன்கலூர் நாடுதானே!

பொன்கலூர், இச்சிக்காணி, தென்னமங்கலம், கொடுவாயி, அலகுமலை, தென்பள்ளி, செம்புத்தொழு, தளிகை, இலக்கம்பாடி, சொக்கம்பாளையம், அவினாசிபாளையம், பெற்றம்பள்ளி, குன்றிடம், நிறையூர், நமனாரி, புற்றிரைச்சல், அங்கித்தொழு, மண்ணறை, உகாயனூர், அரவணநல்லூர், நல்லூர், பெருந்தொழு, பல்லாக்கோயில், அமுக்கயம், திருப்பூர், பொட்டிக்காம்பாளையம், கற்றாங்காணி, பெரும்பிள்ளையூர், குடிமங்கலம், ஊற்றுக்குழின்னு ஆக மொத்தம் இருபத்து ஏழு ஊருக!

அப்படித்தான் பாருங்க கண்ணூ, திண்டுக்கல் நாகல்நகர்ல நமக்கு ஒரு வங்கணன் (நண்பன்) இருந்தான். சூலூர்ல, அவுங்க சித்தப்பன் ஊட்ல இருந்து வேலைக்கு எங்கூட வருவான். ஒருநா, எங்கூட்டுக்கு வந்திருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க, உங்க அண்ணன் மத்தியான சோத்துக்கு வந்தவன் தலைக்கு எண்ணெய் வெச்சும் வெக்காமப் போயிட்டானடா அப்படீன்னு. நானுஞ் செரின்னு கேட்டுகிட்டேன்.

கூட வந்தானே, நம்ம வங்கணக்காரன் சிவப்பிரகாசம், ஒன்னுந்தெரியாம திருட்டாட்டு முழி முழிக்கிறான். என்னடா சங்கதின்னு கேட்டதுக்கு திலுப்பிக் கேக்குறான், மத்தியான சோத்துக்கும் தலைக்கு எண்ணெய் வெக்கிறதுக்கும் என்ன சம்பந்தமுன்னு? அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, ஏன் அவன் அந்த முழி முழிக்கிறானுன்னு!

ஆமாங்க, அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு! இஃகிஃகி, நீங்க எங்க தலைக்கு எண்ணெய் கூட வெக்காமக் கிளம்புறீங்க இப்ப? இருந்து எதனாப் பின்னூட்டம் போட்டுட்டு போவிங்களாமா, சித்த!


அங்கண என்னன்னு கேட்டாக்க, வங்கணச் சிறுக்கி வாடுதேன்னானான் இவன்!

10/05/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 1!

இது வேறயா? தமிழ்நாட்டுல இருக்குற பிரிவினை பத்தாதாடா? பழசையெல்லாம் தோண்டித் துழாவி, மெம்மேல கூறு போடணுமா? இப்படியெல்லாம் உங்களுக்கு மனசுல நெனப்பு வரலாம்; வராமலும் போகலாம்! ஆனா, நாங்க அலசுறதை, அலசித்தான ஆகணும்?

கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்! கொங்கு மலிந்தால், எங்கும் மலியும்!! இது நானா சொல்வது அல்லங்க; சங்ககாலப் பழமொழி! கொங்குநாட்டான் அப்படீன்னா ஒரு தனியிடம் எந்த சபையிலும் உண்டு!

நெருக்கடி காலத்துல காரோட்டி உசுரைக் காப்பாத்தினது ஆகட்டும், எங்கும் கோலோச்சி எவரும் அசைக்க முடியாத இராமாவரம் தோட்டத்துக்குள்ளவே புகுந்து மிரட்டினதா இருக்கட்டும், அறிவியல் கண்டுபிடிப்புகளா இருக்கட்டும், அதுல கொங்கு நாட்டுக்கு ஒரு தனியிடம் இருக்கத்தான செய்யுது?!

காரணம் என்ன? வம்புதும்புக்கு போக மாட்டாங்க; தானதர்மம் நெறயவே செய்வாங்க; விருந்தோம்பலுக்கு இலக்கணமா இருப்பாங்க; சமத்துவம் பேணுவாங்க; குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...

அதான், கூடியிருக்குற பொட்டி தட்டிகள்ல இருக்குற ஒரு பொட்டி தட்டியப் பார்த்துக் கேட்டானாம் வெள்ளைக்காரன், are you from Coimbatore by any chance?னு. எல்லாம், அவனைப் பாத்து அந்த பொட்டிதட்டி கத்தினதுதான் காரணம். ஆமாங்க, அந்த பொட்டிதட்டி, “Will you please set-up'nga, please?"னு கோவத்துல கூட குழைஞ்சுதாம்!

கொங்குநாட்டுல 30க்கும் மேற்பட்ட வேளிர்கள் இருந்ததாக கொங்கு சதகம் சொல்லுது. அதுல, எந்த சிற்றரசுக்கு கீழ நான் பிறந்த மண் வருதுன்னு ஒரு அலசல்... அதுல கிடைச்சதுதான், இந்த ஆறை நாடு பற்றின விருத்தம்.


சேவைநக ரன்னியூர் வெள்ளாதி கோமங்கை திசை
புகழவாழ் முடுதுறை
தென் கவசை துடியலூர் நீலநகர் பேரையொடு
தெக்கலூர் கரை மாதையும்
மேவுபுக ழவிநாசி கஞ்சை கானூர்கரவை வெண்பதியு
மிருகா லூரும்
விரைசேரு முழலையொடு வடதிசையி லுறுகின்ற
வெள்ளையம்பாடி நகரும்
நாவலர்க் கினிதான திருமுருகு பூண்டியொடு
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் துருக்கிரம் புலவர் நகரமுட
னினிமையான
கோவினகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே கூடலூர்
சிங்கநகருங்
குடக்கோட்டூர் குள்ளந்து றைப்பதியு வாள்வந்தி
கோட்டைகரை யாறைநாடே!

இதுல மொத்தம் 35 ஊர்கள் அடங்கி இருக்குங்க. நான் பிறந்த மண், மொதல் வரியிலயே இருக்கு. ஆமாங்க, கோமங்கலம் புதூர்ல இருந்து ரெண்டு மைல் தள்ளி இருக்குறதுதான் எங்க ஊரான அந்தியூர். இஃகி!

ஆறை நாட்டுக்காரன்னா நீ பெரிய வெண்ணையா? அப்படீன்னு ஒடனே எகுறுவீங்களே? நாங்க அப்படியெல்லாம் நடந்துக்கவே இல்லை. அமைதி! அமைதி!! ஆனா ஏன் அப்படி சொல்லுதோம்?

அதுக்கு முன்னாடி, கொங்குநாட்டுக்கும் வெண்ணெய்க்கும் ஒரு தொடர்பு இருக்கு?? ஆமாங்க, வெண்ணெய்ன்னா அது ஊத்துக்குளிதாங்க. இரயிலெல்லாம் கூட அங்க பிரத்தியேகமா நின்னு வரும் தெரியுமா?

சுலுவுல சிக்காத, கடைஞ்செடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய வெண்ணெய் மாதிரியான, அரிதான ஆள் அவன் அப்படீன்னு உவமைப்படுத்திச் சொல்றதுதாங்க அது. வெண்மையான நெய்; வெண்ணெய்! அதுவே, வெண்ணைன்னும் புழக்கத்துல வந்திடுச்சி! ஆனா, வெண்ணைன்னா, வெண்மையான நெல்.

வெண்ணையப் பத்தி பேசிட்டு, வெங்காயத்தைப் பத்திப் பேசாட்டா குத்தமாயிடாது? அதுவும், கொங்குநாட்டுல இருக்குற ஈரோடைல இருந்து வந்ததுதான்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! உயிரில்லாத, விதையில்லாத, வெறும் சதைப் பிண்டமானதுன்னு நையாண்டி செய்யுறதுக்கு அதை ஈரோட்டுக்காரர் புழங்கவே, அது பிரசித்தம் ஆயிடுச்சி. என்னா பெரிய வெங்காயம்? வெங்காய தேசியம்... இப்படியெல்லாம் போகும் அது!

வெங்காயமோ, வெண்ணெயோ.... நாம போயி பொழப்பு தழைப்பைப் பார்த்தாதான் நம்ம வண்டி ஓடும்... வாங்க போலாம்!